எனது புதிய நூல் : குழந்தையால் பெருமையடைய….

நூலின் முன்னுரை

அவசர அவசரமாக அலுவலகத்துக்கு ஓட வேண்டும். படியில் அமர்ந்து ஷூ லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது பின்னால் வந்து கழுத்தில் கட்டிக்  கொண்டாள் ஐந்து வயது மகள்.

“ஏன் டாடி ஆபீஸ் போறீங்க ?” 

“ஆபீஸ் போனா தானேடா செல்லம் பணம் சம்பாதிக்க முடியும் ! நீ கேக்கற விளையாட்டெல்லாம் வாங்கித் தர முடியும்” இப்படிச் சொன்னதும் அவளுடைய குரலில் ஒரு சின்ன ஏளனமும், நகைப்பும்…

“ஹேய் டாடி… பொய் சொல்லாதீங்க…. ஏடிஎம் ல போய் கார்ட் போட்டு, ஒரு பட்டனை அமுக்கினா பணம் கிடைக்கும்ல ? அன்னிக்கு பாத்தேனே. ஆபீஸ் போகாம அங்கே போய் பணம் எடுத்துக்கலாமே…  “

எனது மகளின் மழலைத் தனம் மனசுக்குள் புன்னகையை விரித்தது. குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே எனும் குற்றம்,  குழந்தைகளுக்கு சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டி இருக்கிறதே எனும் பொறுப்புணர்வும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது. 

நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் பல விஷயங்களை  நான் பெற்றோரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். திருடுவது தப்பு என்பது முதல் பிறரை மதிக்கும் பண்பு வரை எல்லாமே எனது பெற்றோர் சின்ன வயதிலேயே ஊட்டி வளர்த்தவை தான்.

இன்றும் பசுமையாய் மெல்லிய மயில்பீலிச் சாமரமாய் நினைவுகளின் தென்றல் மனசுக்குள் வீசுகிறது. ஆரம்பக் கல்வி கற்றது அம்மா ஆசிரியையாய் பணிபுரிந்த மலையடி பள்ளிக்கூடத்தில். பள்ளிக்கூடத்துக்குப் போக சுமார் 45 நிமிடங்கள் மரங்களடர்ந்த கிராமச் சாலையில் நடக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் அம்மா கதை சொல்லிக் கொண்டே கூட்டிப் போவார்கள். கதை சொல்லாவிட்டால் இடுப்பில் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும் என பிடிவாதம் பிடிப்பேனாம் !

அம்மாவின் நினைவுப் பெட்டகத்தில் கதைகளுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை  இல்லை. கரிகால் சோழன், மணிமேகலை, நல்ல தங்காள், நீதிக்கதைகள் என எல்லா கதைகளுமே அம்மாவிடமிருந்து பெற்றவை தான். பிரபல இயக்குனர்களையெல்லாம் வெட்கப்பட வைக்கும் கதை சொல்லும் பாணி அம்மாவின் சிறப்பம்சம். ஒரு பிரம்மாண்ட திரைப்படம் பார்ப்பது போல காட்சிப்படுத்தலும், வசன உச்சரிப்புகளும் என்னைக் கட்டிப் போட்டு விடும். “சே.. அதுக்குள்ள வீடு வந்துடுச்சா ? சரி மீதி கதை நாளைக்கு…” என வீடு வந்ததும் சொல்வேன். அப்படிக் கேட்ட கதைகள் தான் என்னை வார்த்திருக்கின்றன.

வார இறுதிகளிலும், மாலை வேளைகளிலும் அப்பாவின் கரம்பிடித்து வயல்வெளிகளில் நடக்கும் போது பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவர் கற்றுத் தந்தார். அவருடைய நடவடிக்கைகள் தான் எனக்குப் பாடமாய் அமைந்தன. குழந்தைகள் தங்கள் பெற்றோரின் செயல்களை இமிடேட் செய்யும் எனும் பாலபாடம் அன்று புரியவில்லை. இன்று பளிச் என புரிகிறது.

அப்போதெல்லாம் அம்மாக்களின் முந்தானையும், அப்பாவின் வேட்டி நுனியும் தான் குழந்தைகளின் வழிகாட்டிகளாய் இருந்தன. நேசத்தின் வாசம் முற்றங்களில் நிரம்பி வழியும் மாலை வேளைகள் தான் குழந்தைகளைச் செதுக்கியிருக்கின்றன. கிராமத்து மண்ணின் சாயம் போகாத மழலைத்தனம் தான் மதிப்பீடுகளைக் கட்டி எழுப்பியிருக்கிறது.

இன்றைக்கு அவசரம் அவசரமாய் அலுவலகம் ஓடும் ஜீன்ஸ் அம்மாக்களுக்கும், ஷார்ட்ஸ் அப்பாக்களுக்கும் குழந்தைகளோடு போதிய நேரம் செலவிட முடிவதில்லை. வீடுகளில் தாத்தா பாட்டி இருக்கும் குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் கடந்த தலைமுறையின் நேசப் பகிர்தல்களை இந்தத் தலைமுறையிலும் சுவாசிக்கும் வரம் பெற்றவர்கள். மற்றபடி குழந்தைகளுக்கு இப்போது நண்பர்களெல்லாம் டோராவும், புஜ்ஜியும், மிக்கியும், டோனால்டும் தான்.

காலையில் அரை மணி நேரம் கார்ட்டூன் நெட்வர்க்கில் வரும் நண்பர்களைப் பார்த்துக் கொண்டே பிரட் சாப்பிட்டு, வீடு திரும்பிய மாலை நேரத்தில் ஏதோ அனிமேஷன் படங்களோடு முடிந்து போய்விடும் அவர்களுடைய பொழுதுகள். நள்ளிரவில் ஆந்தையைப் போல வந்து தூங்கும் அப்பாக்கள் அவர்களைப் பொறுத்தவரை நாளிதழ்களில் வரும் ஞாயிறு இணைப்புகள் போல !

“இன்றைய அவசர உலகில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக் கொடுக்க வேண்டும் ? எப்படியெல்லாம் அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்குவப்படுத்தவேண்டும். இதுதான் கான்சப்ட். ஒரு புத்தகத்தைத் தயாராக்குங்கள். பெற்றோருக்கான பெஸ்ட் கைடாக இருக்க வேண்டும். “ – என பிளாக் ஹோல் மீடியா பதிப்பக இயக்குனர் பிலால் அவர்கள் சொன்னபோது இந்த நினைவுகள் தான் மனதுக்குள் நிழலாடின.

கடந்த சில மாதங்களாக குழந்தைகளின் உலகத்தில் பயணித்துப் பயணித்து  எனக்கே வயது குறைந்து விட்டது போல ஒரு உணர்வு. உலக அளவில் உளவியலார்களும், குழந்தைகள் நல ஸ்பெஷலிஸ்ட்களும், மருத்துவர்களும் சொன்ன தகவல்கள், இது குறித்து வெளியான ஆய்வுகள், பல்வேறு நூல்கள் என முழுக்க முழுக்க மூழ்கியபின்பே இந்த நூல் சாத்தியமாகி இருக்கிறது.

இந்த நூல் பெற்றோருக்கு பயனுள்ள நூலாய் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

நிறம் மாறா நேசங்களுடன்

சேவியர்.

 

வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடட்.

செல் : 9600123146

admin@blackholemedia.in

www.blackholemedia.in

=========================
வாக்களிக்க விரும்பினால்….

=========================

2009 : படித்தவை, பார்த்தவை, கிழித்தவை…

திரும்பிப் பார்த்தல் ஒரு சுவையான அனுபவம். அதுவும் வருஷக் கடைசியில் உட்கார்ந்து என்னத்தை கிளிச்சோம் இந்த ஆண்டு என தலையைச் சொறிவது ரொம்பவே சுவாரஸ்யமானது.

இந்த வருடம் ஒரு வகையில் விஷுவல் வருஷமாகக் கழிந்திருக்கிறது. குறைந்த பட்சம் நூறு படங்கள் பார்த்திருப்பேன். பெரும்பாலும் ஆங்கிலப் ஹாலிவுட் படங்கள். மனதில் நின்ற படங்கள் ரொம்பக் குறைவு. சட்டென யோசித்தால் Breach ஞாபகத்துக்கு வருகிறது. தமிழில் ??? பொக்கிஷம் என்றால் பலர் கோபப்படலாம். பல குறும்படங்கள் பார்த்தேன். மனதில் நின்ற குறும்படம் என்றால் “அன்புடன் ஆசிரியருக்கு” எனும் குறும்படத்தைச் சொல்லலாம். நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கும் 79 வயதான ஒரு ஆசிரியைக்கு பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து உதவும் ஒரு நெகிழ்வான பதிவு அது. கண்கலங்காமல் படத்தைப் பார்த்து முடிப்பது சாத்தியமில்லை. இதைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுத நினைத்தேன். ம்… நினைப்பதையெல்லாம் எழுதிவிட முடிகிறதா என்ன ?

எப்பவுமே வாசிப்பில் கொஞ்சம் சோம்பேறி தான். இந்த ஆண்டும் ஒரு பத்தோ இருபதோ புத்தகங்கள் தான் வாசித்திருப்பேன். முதலாவது வாசித்த புத்தகம் எது என்பது ஞாபகத்தில் இல்லை. கடைசியாய் வாசித்தது தோழமை பதிப்பகம் வெளியிட்ட “மாவீரர்” நூல். பிரபாகரனின் பேட்டிகள், உரைகள் என அவருடைய கால் நூற்றாண்டு மனநிலையைப் பிரதிபலித்திருந்தது நூல். ஆங்கில நூல்களில் “Love can be spelled as T..I..M..E”. நேரமில்லை, நேரமில்லை எனும் ஓட்டத்தில் இழப்பது எது என்பதை மீண்டும் ஒருமுறை இந்த மரமண்டைக்குப் புரிய வைக்கிறது.

இந்த வருஷம் வெளியாவது ஒரே ஒரு புத்தகம். “அன்னை – வாழ்க்கை அழகானது” அருவி பதிப்பக வெளியீடு. அன்னை தெரசாவின் வாழ்க்கையை சில நுட்பமான காரண, காரிய, பின்புலங்களோடு சொல்லியிருப்பதில் வித்தியாசப்படுத்தியிருக்கிறேன். வாசிப்பவர்களை ஏமாற்றாது எனும் நம்பிக்கை எனக்குண்டு. (காக்கைக்கும் தன் குஞ்சு …)

பத்திரிகைகளில் எழுதியதைப் பொறுத்தவரையில் ரொம்பவே திருப்தியான வருடம் இது. ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், பசுமை விகடன், சக்தி விகடன் என விகடன் குழு பத்திரிகைகளில் மட்டுமே சின்னதும் பெரிதுமாக சுமார் நூறு படைப்புகள் எழுதியதில் பரம திருப்தி. சில கவர் ஸ்டோரிகளும் இதில் அடக்கம் என்பது ஸ்பெஷல் சந்தோசம். மற்றபடி வழக்கமாய் எழுதும் பெண்ணே நீ போன்ற பத்திரிகைகளில் பயணம் தொடர்கிறது.

பிளாக் வாழ்க்கையிலும் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்திருக்கிறது. அலசல் வலைத்தளம் 5 இலட்சம் வருகைகள், கவிதைச் சாலை 3 இலட்சம் வருகைகள் என சில மைல் கல்களை எட்டிப் பிடித்தது இந்த வருடம் தான். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எழுதினால் ஆரோக்கியமான நட்புகளும், வாசகர்களும் கிடைப்பார்கள் என மீண்டும் ஒரு முறை மனதுக்குள் எழுதிக் கொள்கிறேன். பதிவருக்கு காராசார மறுப்புக் கடிதம், ஆதிக்க சாதியின் அட்டகாசம், அவன் தானா நீ, அவருடைய லீலைகள், அவளுடே ராவுகள், ஹாட் கேலரி என்றெல்லாம் எழுதாமலேயே நிறைய நண்பர்கள், வாசகர்களைச் சம்பாதிக்கலாம் என்பதும் மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. பின்னூட்டமிடும் நண்பர்களின் வலைத்தளங்களும் பெரும்பாலும் நல்ல தளங்களாகவே இருப்பதில் இரட்டைத் திருப்தி.

வருஷத்துக்கு இரண்டு பேரையாவது பிளாக் ஆரம்பிக்கை வைத்து ‘யான் பென்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது என் கெட்ட பழக்கங்களில் ஒன்று. அது இந்த ஆண்டும் ஜெக ஜோதியாகவே நடந்து முடிந்ததில் சந்தோசம். டுவிட்டரில் போய் மாட்டிக் கொள்ளாமல் ஒரு வருடம் ஓடவேண்டும் என நினைத்ததும் நிறைவேறியிருக்கிறது.

பழைய நண்பர்கள் இன்னும் அதிகம் நெருங்கியதும், புதிய சிலர் நண்பர்களாக சேர்ந்து கொண்டதும் இந்த ஆண்டின் ஆனந்த சங்கதிகள். வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு நல்ல நண்பனை இன்னும் ஆழமாய் நேசிக்க முடிந்தது வாழ்க்கையை அர்த்தப்படுத்தியிருக்கிறது. ஒரு வாழ்க்கை வரலாறு எழுதினால் (ஆசையைப் பாரு… ) அதில் கால்வாசிப் பக்கத்தை அவர் ஆக்கிரமிப்பார் என நினைக்கிறேன் !

நெருங்கிய தோழி ஒருத்தி தனது குழந்தையை எதிர்பாரா விபத்தில் பறிகொடுத்த வலி மட்டும் இந்த ஆண்டின் தீராத சோகம். அவருக்கு எதிர்காலம் பல மடங்கு வளங்களையும், மகிழ்வையும் கொடுக்கவேண்டும் எனும் பிரார்த்தனை, பிரார்த்தனைப் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது.

ஒரு நல்ல பத்திரிகையில் ஒரு தொடராவது எழுதி விட வேண்டும், சில நல்ல நூல்களை எழுதவேண்டும், நண்பர்களுடைய நட்பைத் தொடரவேண்டும், யாரையும் காயப்படுத்தாமல் கடந்து போகவேண்டும், எனும் எதிர்பார்ப்புகளுடன் எட்டிப் பார்க்கிறேன் T10 ஐ.. அதாவது டுவெண்டி டென் ஐ !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்ள்

0

சேவியர்

புத்தகப் பிரியர்களுக்கு மட்டும் !!!

 

வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் வாசிப்பதற்கென்று நான்கைந்து புத்தகங்கள் எடுத்துச் செல்ல விரும்புவோம். ஆனால் எடை பயமுறுத்தும். கடைசியில் வீட்டில் இருக்கும் புத்தகங்களில் எடை குறைவான நூல்களின் ஓரிரு நூல்களை எடுத்துக் கொண்டு  திருப்தியடைந்து விடுவோம்.

சில புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென ஆர்வம் கொப்பளிக்கும், ஆனால் தெளிவற்ற எழுத்துக்களும், பழைய சிதைந்த எழுத்துக்களும் வாசிக்க விடாமல் தொல்லை படுத்தும்.

கொஞ்சம் வயதானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், பொடிப் பொடியாய் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை உற்று உற்றுப் பார்த்து வாசிப்பதிலேயே மிச்சமிருக்கும் வயதும் ஓடிப் போய்விடும்.

இத்தனை பிரச்சனைகளும் ஒரே நொடியில் தீர்ந்து விட்டது என்றால் நம்புவீர்களா ?
இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் சொருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா ?

நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். சோனி ரீடர் என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது உங்களை நம்பவைக்க. ஒரு சிறு புத்தகத்தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம்.

இப்போது சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப்போது வேண்டுமெனிலும் வாசிக்கலாம்.  நூற்றுக் கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை. ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனைப் பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாய் அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணினியில் இந்த வசதிகள் எல்லாம் உண்டு. ஆனால் என்ன, கணினியை நீங்கள் குளியலறையில் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல.

புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை. எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்தபின், அல்லது வேண்டாமென தோன்றும் கணத்தில் அழித்துவிடவும் செய்யலாம்.

இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும், இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் என்ன, வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது இது தான் என்னோட புத்தக அலமாரி என நீண்ட அலமாரியையும் அதில் நிரம்பி வழியும் நூல்களையும் காட்டிப் பெருமையடிக்க முடியாது. எங்கேப்பா உன் நூலகம் என யாராச்சும் கேட்டால் சட்டைப் பையிலிருந்து இதை எடுத்து நீட்ட வேண்டியது தான்.