எனது ஜூ.வி கட்டுரை

Michael-Jacksonமைக்கேல் ஜாக்ஸனின் இசை தான் ஓயாது என்று நினைத்தால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகளும் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. என் தம்பி மைக்கேலை பணத்துக்காக கூட இருந்தவர்களே கொலை செய்து விட்டார்கள் என கண்ணீரும் கம்பலையுமாய் அவருடைய சகோதரி லே டோயா சில நாட்களுக்கு முன் கொளுத்திப் போட்ட திரி, சரவெடியாய் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு மைக்கேல் ஜாக்ஸனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நீண்ட மௌனம் காப்பது பலருடைய மனதில் தீவிர சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஏதோ பிரம்ம ரகசியம் போல போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் அதிலுள்ள மிக முக்கியமான தகவலை மைக்கேலின் நீண்டகால நண்பரான டெரி ஹார்வி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மைக்கேலின் மரணத்துக்குக் காரணம் அவரது உடலில் அளவுக்கு அதிகமாய் செலுத்தப்பட்டிருந்த புரோபோஃபோல் என்னும் மருந்து தான் என்கிறது குடும்பத்தினர் செய்த இரண்டாவது “போஸ்ட்மார்ட்ட” ரிப்போர்ட். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான். இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இன்னும் சில தினங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என பகீர் தகவலை வெளியிடுகிறார் அவர்.

டிப்ரிவேன் தயாரிப்பாக வரும் இந்த மருந்து அறுவை சிகிச்சை நேரத்தில் நோயாளிகளை மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஆபரேஷன் தியேட்டருக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இந்த மருந்தைப் பயன்படுத்துவது சட்ட விரோதம். ஆனால் மைக்கேல் மரணமடைவதற்குச் சற்று நேரத்துக்கு முன் அவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டிருந்தது என்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் !

அப்படிப் பார்த்தால் மைக்கேலின் வீட்டில் வைத்து மைக்கேலுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது என்பது தானே பொருள் ? ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே அனுமதிக்கப்படாத மருந்து மைக்கேலின் வீட்டில் எப்படி வந்தது ? அதை அவருக்குப் பரிந்துரைத்தது யார் ? கொண்டு வந்து கொடுத்தது யார் ? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு தீவிரமாய் களத்தில் குதித்திருப்பது நீங்கள் நினைப்பது போல அமெரிக்கப் போலீஸ் அல்ல ! டி.இ.எ எனப்படும் டிரக் என்ஃபோர்ஸ்மெண்ட் அட்மினிஷ்ட்டிரேஷன் ( Drug Enforcement Administration) அமைப்பு.

அவர்களுக்கு இதில் என்ன அக்கறை என கேட்கிறீர்களா ? அமெரிக்காவில் எங்கெங்கே சட்ட விரோதமாக மருந்துகள் உலவுகிறதோ அங்கெல்லாம் குதித்து விசாரிப்பது தான் டி.இ.எ வின் தலையாய கடமை. அந்த விஷயத்தில் இவர்கள் எஃப்.பி.ஐ க்குப் பக்க பலமாய் இருக்கிறார்கள். “அமெரிக்காவில் போலி மருந்துகள் தடைசெய்யப்பட்டன, திருப்பி அனுப்பப்பட்டன, அழிக்கப்பட்டன” என்றெல்லாம் அடிக்கடி வரும் செய்திகளுக்குப் பின்னால் கடுமையாய் உழைப்பவர்கள் இந்த டி.இ.எ அமைப்பினர் தான். 1973ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் காலத்தில் துவங்கப்பட்டு இன்றைக்கு வெகுவாய் வளர்ந்திருக்கிறது இந்த அமைப்பு.

இவர்கள் மைக்கேல் மரணத்தின் பின்னணியை அலசக் களமிறங்கியிருப்பது மைக்கேலின் குடும்பத்தினருக்குப் புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. மைக்கேலின் மரணம் ஒரு கொலை எனும் கண்ணோட்டத்தில் தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என குரல் எழுப்புபவர்களில் மைக்கேல் குடும்பத்தினரை விட இப்போது இவர்கள் தான் தீவிரமாய் இருக்கிறார்கள்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், குற்றவாளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் போட்டியின்றிப் பெறுபவர்கள் இரண்டு டாக்டர்கள். ஒருவர் மைக்கேலின் பர்சனல் டாக்டர். கான்ராட் முர்ரே. இன்னொருவர் மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். இவர்களைத் தவிர மூன்றாவதாக இன்னும் ஒருவர் இந்த குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார் அவர் பெயர் விரைவில் தெரியவரும் என்கிறார் டெரி ஹார்வி.

விஷயம் கேள்விப்பட்டதும் டாக்டர் முர்ரே பதட்டமடைந்து “ஐயோ… நான் மைக்கேலின் உடலில் புரோபோஃபோல் மருந்தைச் செலுத்தவே இல்லை. எனக்கும் மைக்கேலின் மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்னை நம்புங்கள்” என புலம்பித் தள்ளியிருக்கிறார். “இன்னொரு முறை உங்களை விசாரிக்க வேண்டும் வாருங்கள்” என காவல் துறை அணுகியபோது, இப்போதைக்கு முடியாது என தனது வக்கீல் மூலமாக மறுத்து போலீஸ் கண்களுக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் வார்த்திருக்கிறார்.

மைக்கேலின் கழுத்திலும், உடல் முழுவதும் சரமாரியாய் இருந்த ஊசி குத்திய தடங்கள் ஏதோ ஒரு மாபெரும் மர்மத்தை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பதாகவே கருதுகின்றனர் மைக்கேலின் குடும்பத்தினர்.

டாக்டர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்படும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என தகவல்கள் காட்டுத் தீயாய்ப் பரவினாலும், லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். அப்படியெல்லாம் சட்டென ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இப்போதைக்கு டாக்டர்களிடம் கேட்கப்பட்டிருப்பது விரிவான மருத்துவ அறிக்கைகள் மட்டுமே. யாரையும் இதுவரை சந்தேகப்பட்டு விசாரிக்கவில்லை. ஒன்றிரண்டு டாக்டர்கள் என்றல்ல, மைக்கேலுக்கு வைத்தியம் பார்த்த எல்லா டாக்டர்களிடமும் விரிவான அறிக்கைகள் கேட்கப்பட்டுள்ளன. எல்லா அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்த பின்பு தான் அடுத்த கட்ட விசாரணைக்கான முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை டாக்டர்கள் மீது விசாரணை வந்தாலும் கூட அது கொலைக் குற்றம் எனும் கண்ணோட்டத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. மருந்தை மருத்துவமனைக்கு வெளியே பயன்படுத்தியது, வேறு பெயர்களில் வாங்கியது, அளவுக்கு அதிகமாய் பயன்படுத்தியது போன்ற வழக்குகளின் கீழ் தான் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்கின்றனர் அவர்கள்.

இந்த லா என்ஃபோர்ஸ்மெண்ட் அதிகாரிகளின் பேச்சை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் வெஸ்னா மாராஸ் எனும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஒருவர். இது போன்ற பல வழக்குகளுக்காக வாதாடிய அனுபவமுடையவர் அவர். டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரைப்பதும், அதன் மூலம் சில சிக்கல்கள் எழுவதும் சகஜமே. அதை பெரிய கிரிமினல் வழக்குகளாய் பார்க்க முடியாது என்பதும் உண்மை தான்.

ஆனால் மைக்கேலின் வழக்கில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. மைக்கேலுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது புரோபோஃபோல் எனும் மருந்து. அதைப் பயன்படுத்த “அனெஸ்டீஷியன்ஸ்” க்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒருவேளை டாக்டர் முர்ரே அந்த மருந்தை மைக்கேலின் வீட்டில் பயன்படுத்தியிருந்தால், அவர் அனெஸ்டீஷியனாய் இல்லாத பட்சத்தில் இது ஒரு கொலை வழக்காக மாறும் சாத்தியம் உண்டு என்கிறார் அவர்.

எது நடந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் ஹாலிவுட் அதிரடித் திரைப்படம் போல காட்சிகள் பட் பட்டென மாறி விடாது. விசாரணைகள் முடியவும், சில முடிவுகள் வெளியே தெரிய வரவும் சில பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார் அவர்.

மைக்கேலின் மரண விவகாரம் இப்படி இருக்க, மைக்கேல் ஜாக்சனைக் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் அடங்கிய பயோகிராபி ஒன்று அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.

மைக்கேல் ஒரு ஹோமோ ! அவருக்கு தோழிகள் கிடையாது ஆனால் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. அவர்களைக் “குஷி”ப்படுத்துவது மைக்கேலுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களைப் போல உடையணிந்து வெளியே செல்வார். இவருக்காகவே சாதாரண மேன்ஷன்களில் காத்திருக்கும் ஆண்களுடன் உல்லாசமாய் இருப்பார் என மைக்கேலின் அந்தரங்கத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறது இந்த நூல்.

“Unmasked: The Final Years of Michael Jackson “ எனும் இந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயான் ஹால்பர் தான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என அடித்துச் சொல்கிறார். மைக்கேல் தொடர்பு வைத்திருந்த பல ஆண்களை எனக்குத் தெரியும். ஆண்களுடன் உறவு வைக்கும் போது “இதோ… பாப் உலக மன்னன் உங்கள் லாலிபாப்பை….” என்று தான் ஆரம்பிப்பார் என மஞ்சள் பத்திரிகை ரேஞ்சுக்கு விவரிக்கிறார் மனுஷன்.

மைக்கேலின் ஆண் நண்பர்கள் பலரை நான் தனியே சந்தித்தேன். அதில் முக்கியமான ஒருவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் லாரன்ஸ். இவர் மைக்கேலுடன் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஹாலிவுட் ஹில்ஸ் வீட்டில் வைத்து உறவு கொண்டதாய் வரி வரியாய் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

இப்படியெல்லாம் மைக்கேலின் அந்தரங்கத்தை நூலாக்கி காசு பார்த்தவர், இப்போது மைக்கேலின் மரணம் ஒரு கொலை தான் எனக் கூறியிருக்கிறார். தனக்குக் காவல் துறையில் ஏராளம் நண்பர்கள் உண்டு என்றும், மைக்கேலின் மரணம் கொலை எனும் கோணத்தில் தான் அணுகப்படுகிறது என்றும், மூன்று டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு விரைவில் நடக்கும் எனவும் தன் பங்குக்குப் பேசி பரபரப்பைக் கூட்டுகிறார் அவர்.

இதே இயான் ஹால்பர் தான் “மைக்கேலின் வாழ்க்கை” மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது கிட்டத்தட்ட நிஜமாகியிருக்கும் இன்றைய சூழலில் அவருடைய கருத்துக்களும் சிறப்புக் கவனத்தில் பார்க்கப்படுகின்றன.

இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று புதிய திடுக் தகவலை வெளியிட்டிருக்கிறார். மைக்கேலின் தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ‘டெர்மட்டோலஜிஸ்ட்’ டாக்டர். அர்னால்ட் கெவின். மைக்கேலின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இவர் தான் ‘பயலாஜிகல்’ அப்பாவாம். அதாவது இவருடைய உயிர் அணுக்களிலிருந்து தான் மைக்கேலுக்குக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனவம். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மைக்கேலின் மனைவியிடம் கேட்கட்டும், அதிலும் நம்பிக்கையில்லையேல் டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளட்டும் என அதிரடியில் இறங்கியிருக்கிறார் டாக்டர்.

ஆளாளுக்கு குற்றச்சாட்டுகளையும், பரபரப்புகளையும் கிளப்பிக் கொண்டிருப்பதால், நிம்மதியான அடக்கம் கூட கிடைக்காமல் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது மைக்கேல் ஜாக்ஸன் என்னும் பாப் இசை மன்னனின் உடல்!

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே

எனது ஜூனியர் விகடன் கட்டுரை : மைக்கேல் ஜாக்சன்

ஜாக்ஸன் மரணம் : புயல் கிளப்பும் சகோதரி

0

ML

கோடானு கோடி இசை ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பாப் இசை உலக மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணம் இப்போது பரபரப்பான இன்னொரு திசையில் சீறிப்பாய ஆரம்பித்திருக்கிறது. அதற்கான திரியை கொஞ்சம் தீவிரமாகவே கொளுத்திப் போட்டிருக்கிறார் மைக்கேலின் சகோதரி லா டோயா.

மைக்கேல் படு பயங்கரமாகத் திட்டமிடப்பட்டு, கொல்லப்பட்டார். அதுவும் ஒருவரல்ல, பலர் ஒன்று கூடி சதி செய்து என் தம்பியைப் படு கொலை செய்திருக்கின்றனர் என்பதே அவர் கூறியிருக்கும் அந்தக் குற்றச்சாட்டு. மைக்கேல் ஜாக்சனின் முதல் போஸ்ட்மார்ட்டம் முடிந்த கையோடு இரண்டாவதாக குடும்பத்தினர் சார்பாக “ஸ்பெஷலாக” இன்னொரு போஸ்ட்மார்ட்டமும் செய்யப்பட்டது.

முதல் போஸ்ட்மார்ட்டத்தின் முடிவு இன்னும் வெளிவராத நிலையில் இரண்டாவது போஸ்ட்மார்ட்டத்தின் முடிவுகளைக் கையில் வைத்துக் கொண்டு உலகையே உலுக்கி எடுக்கும் பரபரப்புத் தகவல்களை விவரிக்கிறால் லா டோயா.

மைக்கேல் ஒரு “டாலர் கறக்கும் மாடு” என்பதைப் புரிந்து கொண்டவர்கள் பணத்துக்காக அவனைக் கொலை செய்து விட்டனர். அவருடன் கூட இருந்தவர்கள் யாருமே அவருடைய உண்மையான நலனில் அக்கறை கொண்டவர்கள் கிடையாது. அவனுடைய ஒரு பில்லியன் டாலர் சொத்தில் மட்டுமே அவர்களுடைய கண் இருந்திருக்கிறது. பணத்துக்காக அவனிடம் அட்டையைப் போல ஒட்டிக் கொண்டு கடைசியில் அவனுடைய உயிரையே உறிஞ்சி விட்டார்கள் என கண்ணீர் சிந்தச் சிந்த பயங்கரத் தகவல்களைப் பட்டியலிடுகிறார் அவர்.

சதிகாரர்களின் முதல் திட்டம் மைக்கேலைத் தனிமைப்படுத்துவது தான். அதற்காக அவனை எந்த அளவுக்கு குடும்பத்தினரின் காற்று படாதபடி ஒளிக்க முடியுமே அந்த அளவுக்கு ஒளித்து விட்டார்கள். குடும்பத்தினரின் போன் கால்கள் எதுவுமே மைக்கேலிடன் சென்று சேராது, மைக்கேலைப் பார்க்க வேண்டுமென சென்றாலும் ஏதேனும் சாக்குப் போக்குகளே பதிலாகக் கிடைத்தன. அப்போதே மைக்கேலுக்கு ஏதோ நடக்கப் போகிறது என யூகித்தேன். வீட்டில் கூட சொன்னேன் என விசும்புகிறார் அவர்.

போலீஸ் விசாரணை தீவிரமாக நடப்பதால், இப்போதைக்கு போஸ்ட்மார்ட்டம் விவரங்களை நாங்கள் வெளியிடப் போவதில்லை. அதற்காக எதிரிகள் தப்பி விட்டதாய் நினைக்க வேண்டாம். என்னிடமிருக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்டில் இருப்பவை உங்களை தூங்க விடாது துரத்தும் உண்மைகள். காவல் துறையினரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வரட்டும். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த பின்னர் உண்மைகள் வெளியிடப்படும் என மிரட்டுகிறார் அவர்.

மைக்கேல் ஜாக்சனின் கழுத்தில் புதிய ஊசித் தழும்புகள் நான்கு இருந்தன. ஏன் அவை அங்கே வந்தன ? புதிதாய் கழுத்தில் நான்கு ஊசிகள் போடப்படவேண்டிய காரணம் என்ன ? அதற்கும் மரணத்துக்குமான தொடர்பு என்ன ? என லா டோயா அடுக்கடுக்காய் எழுப்பும் வினாக்களைப் பார்த்தால் விஷயம் படு சீரியஸாகிக் கொண்டிருப்பது தெளிவாகவே புரிகிறது.

மைக்கேலின் மருத்துவர் கான்ராட் முர்ரேயை நோக்கி தனது சந்தேக விரலை கொஞ்சம் அழுத்தமாகவே நீட்டுகிறார் லா டோயா. துவக்கத்தில் மழுப்பல் பதில்கள், அப்புறம் தலைமறைவு என எனது சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் இந்த டாக்டர். பாவம் எனது தம்பி, மாதம் ஒரு இலட்சம் பவுண்ட்களை இவருக்கு சம்பளமாய் வாரி இறைத்தும் இவரால் மைக்கேலைக் காப்பாற்ற முடியவில்லை.

காப்பாற்றுவது இருக்கட்டும். கூட்டுச் சதிக்கு உடந்தையாகாமல் இருந்திருக்கலாமே! கடைசியில் எனது தம்பி மரணமடைந்தது கூட நீங்கள் நினைப்பது போல அவனது படுக்கையறையில் அல்ல, இந்த டாக்டரின் அறையில் தான். அந்த நாளில், டாக்டரின் அறையில் நடந்த மர்மம் என்ன என்பதை அவர் விளக்கியேயாக வேண்டும் என படபடக்கும் அவரது குரலில் கோபம் மிகவும் கூர்மையாகக் கொப்பளிக்கிறது.

யாரை நம்பவேண்டும், யாரை நம்பக் கூடாது என்பதே புரியாமல் குழப்பமாகவே அமைந்து விட்டது மைக்கேல் ஜாக்சனின் கடைசி கட்ட வாழ்க்கை. கூட இருந்தவர்களை மலை போல நம்பினார். அவர்களோ கிடைக்கும் ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அவரைச் சுரண்டினார்கள். கடைசி காலத்தில் மைக்கேல் வாடகைக்கு இருந்த பிவர்லி ஹில்ஸ் மேன்ஷனின் சாதாரன வாடகை 15000 பவுண்ட்கள்.. மைக்கேலிடம் கறக்கப்பட்டதோ மாதம் 60,000 பவுண்ட்கள் !

1984ல் நடந்த அசத்தலான மேடை நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராதவிதமாக முதுகில் காயம் பட்டதில் ஆரம்பித்தது மைக்கேலின் மயக்க வாழ்க்கை. அது கொஞ்சம் கொஞ்சமாய் தீவிரமடைந்து ஒரு கட்டத்தில் வாழ்க்கையே மயக்க மருந்துகளின் மேல் என்றாகிப் போனது தான் துயரம்.

சேனாக்ஸ், பிரோபோஃபோல், நார்கோடிக் டிலாடிட், ஃபெண்டானில், விக்கோர்டின், வாலியம், ஆம்பியன், டெமிரோல், இவையெல்லாம் ஏதோ மெடிக்கல் ஸ்டோர் ஷெல்ப் களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துகளின் பெயர்களல்ல. மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்த போது உடலில் இருந்த மருந்துகளின் பட்டியல் தான் இது. இன்னும் சொல்ல வேண்டுமெனில் மைக்கேல் சாகும் போது ஒரு நடமாடும் மெடிக்கஸ் ஸ்டோர் போல இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்த மருந்துகளால் நிரம்பி வழிந்தன மைக்கேல் ஜாக்சனின் அறைகள். பெரும்பாலானவை ஆப்பரேஷன் தியேட்டர்களில் நோயாளிகளை மயக்கமடையச் செய்ய பயன்படுத்தப்படுபவை ! சில போதைப் பொருளுக்கு மாற்றாய் பயன்படுத்தக் கூடியவை.

லண்டனில் மைக்கேல் ஜாக்சன் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி இந்த ஆண்டின் மாபெரும் நிகழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது. ஆனால் அவரது இறுதிச் சடங்கே வரலாற்றின் மாபெரும் நிகழ்ச்சியாகிப் போய்விட்டது தான் சோகம். மொத்தம் ஐம்பது நடன நிகழ்ச்சிகளை நடத்த இருந்தார் மைக்கேல்.

உண்மையில் மைக்கேல் நடத்த விரும்பியது வெறும் பத்து நிகழ்ச்சிகளைத் தான். இந்த பணம் கறக்க நினைக்கும் கும்பலினால் தான் இந்த 10 என்பது கூடிக் கூடி ஐம்பதாகிப் போய்விட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையிலிருக்கும் பலவீனமான ஒரு மனிதனிடமிருந்து கொஞ்சம் கூட மனித நேயமில்லாமல் நடந்து கொள்ள இந்த கும்பலினால் எப்படித் தான் முடிந்ததோ என விசும்புகிறார் லா டோயா.

மைக்கேலின் தினசரி அப்பாயிண்ட்மெண்ட் ஷெட்யூல் லா டோயாவை இன்னும் அதிகமாய் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கொஞ்சமும் ஓய்வு இல்லாமல் மைக்கேலை முழுக்க முழுக்க அலைக்கழித்திருக்கிறார்கள். அப்படி சோர்வடைய வைத்து மயக்க மருந்து கொடுத்து கடைசியில் அவரை தீர்த்துக் கட்டி விட்டார்கள். அவர்களுக்கு மைக்கேல் இருப்பதை விட இறந்தால் தான் அதிக லாபம்.

லா டோயா வின் அடுத்த சந்தேகம் திடீர் விருந்தாளி நானி கிரேஸ் மீது. நானி கிரேஸ் மைக்கேலின் காதலி என்பது பத்திரிகைகள் ஊதித் தள்ளும் பலூண். உண்மையில் மைக்கேலுக்கு கிரேஸைப் பிடிக்கவே பிடிக்காது. ஒரு வருடத்துக்கு முன்பே அவளுடன் பேசுவதையே நிறுத்தி விட்டான். மைக்கேலின் மரணத்தில் சட்டென மீண்டும் முளைத்த கிரேஸ், ஏதோ தானும் மைக்கேல் குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர் போல நடந்து கொள்வது சந்தேகத்தையே கிளறுகிறது என்கிறார் அவர்.

மைக்கேல் சாகப் போகிறார் என்பது யாருக்குத் தெரிந்ததோ இல்லையே கூட இருந்தவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. மைக்கேல் எப்போதும் ஒரு மில்லியன் டாலர்கள் பணத்தை வீட்டில் வைத்திருப்பது வழக்கம். ஆனால் மைக்கேல் மரணமடைந்தபின் அந்த வீட்டில் பணம் ஏதும் இருக்கவில்லை ! அது மட்டுமல்ல, பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் வீட்டில் இருந்தன. அவையெல்லாம் ஏதோ மாஜிக் நிகழ்ச்சி போல மாயமாய் மறைந்து விட்டன. கூட இருந்தவர்களின் நம்பிக்கைத் துரோகத்தை விளக்க இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் ? எனும் லா டோயாவின் கேள்வியில் எக்கச் சக்க நியாயம் இருக்கிறது.

என் தம்பி மைக்கேல் பாவம். கள்ளம் கபடமில்லாதவன். குழந்தைகளிடம் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவன். அவனைக் கொன்றவர்களை நான் சும்மா விட மாட்டேன். உண்மையின் ஆணி வேரை உருவிப் பார்க்காமல் ஓயமாட்டேன் என சூளுரைக்கிறார் லா டோயா.

இவர் இப்படி பரபரப்புத் தகவல்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருக்கையில், “மைக்கேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எங்களுக்கும் உண்டு” எனக் கூறி எரியும் பரபரப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் ஏஞ்சல்ஸ் நகர காவல் ஆணையர் வில்லியம் பிராட்டன்.

இதற்கிடையில் மைக்கேலின் மூன்று குழந்தைகளான பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட் ஐப் பராமரிப்பது யார் எனும் சர்ச்சையும் மேலோங்கியிருக்கிறது. தனது தாயான காத்தரினிடம் குழந்தைகள் வளர வேண்டும் என்பதே மைக்கேலின் உயில் சொல்லும் சேதி. அதை எதிர்த்து குழந்தைகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கோட்டுக்குப் போகப் போவதாகச் சொல்லியிருந்தார் மைக்கேலின் முதல் மனைவி டெபி ரோ. கடைசி கட்டத்தில் இரு பெண்மணிகளுக்குமிடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகளை மைக்கேலின் தாய் வளர்த்தட்டும். நான் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறேன் என போட்டியிலிருந்து “பெட்டி”யுடன் விலகியிருக்கிறார் டெபி ரோ.

மைக்கேலின் தந்தை ஜோ-வின் காற்று படாமல் குழந்தைகளைத் தனியே வளர்க்க வேண்டும் எனும் டெபியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, சிலிர்ப்புகளின் நாயகனாகவும், சர்ச்சைகளின் உருவமாகவும் விளங்கிய மைக்கேல் மரணத்தின் மூலம் மர்மங்களின் நாயகனாகவும் உருவெடுத்திருக்கிறார் என்பது மட்டு மறுக்க முடியாத உண்மை. அவருடைய மரணம் தரும் மர்மங்கள் இனியும் தொடரும் என்றே தோன்றுகிறது !

0

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களியுங்கள்

மைக்கேல் ஜாக்சன் மரணம்

m5

தனது சிலிர்ப்பூட்டும் இசையால் கோடிக்கணக்கான இதயங்களைக் கட்டி இழுத்த இசை வேந்தன் மைக்கேல் ஜாக்சன் தனது ஐம்பதாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவர் மரணமடைந்த ரொனால்ட் ரீகன் மெடிக்கல் செண்டரின் தலையை பல நியூஸ் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன, மருத்துவமனை வீதி ரசிகர்களின் விழும்பல்களால் நிரம்பி வழிகிறது.

வெற்றிகள், சர்ச்சைகள், மகிழ்ச்சி, சோகம், இயலாமை, நிராகரிப்பு என எல்லாவிதமான உணர்வுகளின் பாதைகளுக்குள்ளும் நடைபயின்று வந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் பயணம்.

ஐந்தாவது வயதில் வறுமையின் கருப்புப் பிடியில் தனது நான்கு சகோதரர்களுடன் இணைந்து பாடல்கள் பாட ஆரம்பித்த மைக்கேல் பின்னாளில் உலகையே தனது மந்திர அசைவுகளாலும், இசையினாலும் ஆட்டிப் படைப்பார் என அவரே நினைத்துப் பார்த்திருக்க சாத்தியமில்லை.

m4சகோதரர்களுடன் இணைந்து ஆரம்ப காலங்களில் நடத்திய ஜான்சன் 5 – இசைப்பயணத்திலேயே முத்திரை பதித்த ஜாக்சன், 1972ம் ஆண்டு தனியே ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டார். 1982ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வெளியிட்ட திரில்லர் ஆல்பம் தான் அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது. இது அவர் தனியே வெளியிட்ட ஆறாவது ஆல்பம்.

750 மில்லியன் இசை ஆல்பங்களை விற்றுத் தீர்த்த சாதனை படைத்தவை தான் இவரது இசை.

இசையில் எவ்வளவு புகழோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் புகழ்பெற்றவராகவே இருந்தார் மைக்கேல் ஜாக்சன். சிறுவர்களுடன் தகாத உறவு வைத்திருந்தார் என அவர் மீது பல குற்றச் சாட்டுகள். இரண்டு முறை பிரச்சினை பூதாகரமாகி நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.

எனினும், கலைஞர்களுக்கே உரித்தான இளகிய மனசு மைக்கேல் ஜாக்சனுக்குள்ளும் இருந்தது. தனது வாழ்நாளில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் மனிதநேயப் பணிகளுக்காகச் செலவிட்டு, உலகிலேயே அதிக பணம் செலவிட்ட பாப் பாடகர் எனும் கின்னஸ் பதிவையும் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

புகழின் வெளிச்சம் செல்லுமிடமெல்லாம் படர்ந்தாலும் தனது குழந்தைகளை வெளிச்சத்தில் விழாமலேயே வளர்த்த சாதுர்யமும் மைக்கேல் ஜாக்சனுக்கு இருந்தது.

புனைக்கதைகளுக்கே உரிய சுவாரஸ்யத் தகவல்களால் நிரம்பி வழிந்தது தான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை.

ஒரு ஆக்சிஜன் சேம்பருக்குள் படுத்து புத்துணர்வு பெற்றுக் கொள்வார் என பரபரப்புச் செய்தி ஒரு காலகட்டத்தில் வேகமாய் பரவியது, யானை மனிதனுடைய எலும்புகளை வாங்கினான் என இன்னொரு முறை கதைகள் பரவியது. எவை உண்மையோ பொய்யோ மைக்கேல் ஜான்சனும் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதில்லை “ முழு உடலையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இந்த நிறம் வந்ததா ? “ எனும் கேள்விக்கு “தோல் வியாதி” என சீரியசாய் சொன்னர் ஒருமுறை.

மைக்கேல் ஜாக்சனின் இசை இழைகளை ஏகத்துக்கும் காப்பியடித்திருக்கிறார்கள் நமது இசையமைப்பாளர்கள். கூடவே அவரது நடன அசைவுகளும் பலருக்கு இன்ஸ்பரேஷனாய் இருந்திருக்கிறது.

m2

இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கலைஞனுடைய நின்று போன இதயத்தின் மௌனமும் ஒரு சோக இசையாகவே வழிகிறது மனசின் மையத்தில்.

தமிழிஷில் வாக்களிக்க…