புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

 

 

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் ! புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான். உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group  ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட்  சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர். அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர். அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம். இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது ! அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது. இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருப்பது கண்கூடு. ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல்  பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ! இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பெயரிங்” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை. இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும். இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது. அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

புளூடூத் மைக்ரோவேவ் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதால் புளூடூத் போன்ற கருவிகளை காதில் மாட்டித் திரிவது ஆரோக்கியத்துக்குக் கொஞ்சம் கெடுதல் விளைவிக்கும் என்பது பொதுவான ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. ரொம்பக் கம்மியான அளவு தான் என ஆதரவாளர்கள் கூறினாலும், உஷாராய் தேவையான நேரம் மட்டுமே அதைப் பயன்படுத்துவது நல்லது !

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

 

நன்றி : (மவுஸ் பையன் ) தினத்தந்தி…

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

தொலைந்த மொபைல் கிடைக்குமா ?

 

“இங்கே தானே வெச்சேன் எங்கே போய் தொலஞ்சுச்சோ தெரியலையே” ங்கற களேபரம் காலம் காலமா நடந்திட்டு இருக்கிற ஒரு விஷயம் தான். தாத்தாக்கள் தலையில கண்ணாடியை வெச்சுட்டு கண்ணாடி எங்கேன்னு தேடுவாங்க. பாட்டிங்களுக்கு சீப்புப் பிரச்சினை. இப்போ ஹைடெக் காலத்துல இளசுகளோட பிரச்சினை மொபைல். என் மொபைலைப் பாத்தீங்களா என தேடுவது வீடுகளில் வாடிக்கையாகிவிட்டது.

மொபைலை வைத்துப் பேசலாம் என்பது முந்தைய நிலை. “பேசவும் செய்யலாம்” என்பது தான் இன்றைய நிலை. இன்றைய மனிதர்களின் ஆறாம் விரல் இந்த மொபைல் தான். அது இல்லாவிட்டால் ஏதோ ஆளில்லாத தீவில் தத்தளிக்கும் ஆமையைப் போல தடுமாறி விடுகிறது மனசு. பெயர் இல்லாத மனுஷன் கூட இருக்கலாம், ஆனா போன் இல்லாத மனுஷன் இருக்கவே முடியாதுங்கற ரேஞ்சுக்கு இப்போதைய மொபைல் ஆதிக்கம் கலிபோர்னியா காட்டுத் தீயாய் பற்றிப் படர்கிறது.

இந்த இடத்துல தான் நியூட்டனோட மூணாம் விளையாடுது. எந்த வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு ! மொபைல் போன் அதிகரிக்க அதிகரிக்க, மொபைல் போன் தொலைந்து போவதும் அதிகரிக்கிறது. மொபைல் போன் தொலைந்து போவது இரண்டு வகையாக நடக்கலாம். ஒன்று கவனக் குறைவாய் நீங்களே உங்க மொபைலை எங்கேயாவது விட்டு விட்டு வந்திருக்கலாம். அல்லது யாரோ கில்லாடி கிட்டு உங்களிடமிருந்து அதைச் சுட்டுவிட்டிருக்கலாம்.

முன்பெல்லாம் மொபைலை யாரேனும் திருடிவிட்டால் அது உடனே அவருடைய சொந்தப் பொருளாக ஆகிவிடும். சிம்மைக் கழற்றி எறிந்து விட்டால் போன் கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகிவிடும். போனைக் கண்டுபிடிப்பதை விட நாலு கொம்புள்ள குதிரையைக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல. டெக்னாலஜி வளர்கிறது. மொபைலைத் திருடிச் சென்றாலும் அதை விரைவிலேயே கண்டுபிடித்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். 

ஒரு மொபைலை வாங்கினவுடனே என்ன பண்ணுவீங்க ? பேனா வாங்கினா காதலி பெயரை எழுதிப் பாக்கற மாதிரி யாருக்காச்சும் போன் பண்ணி ரொமான்சுவீங்களா ? இல்லேன்னா ஒரு சாமி படத்தை போட்டோ எடுத்து வெச்சுப்பீங்களா ? இல்லை ஓரத்துல மஞ்சள் தடவி பூஜை பண்ணுவீங்களா ? இது எதுவானாலும் அது இரண்டாம் பட்சம் தான். முதல்ல போனோட IMEI நம்பரை நோட் பண்ணி வையுங்க. அதான் ரொம்ப முக்கியம். இண்டர்நேஷனல் மொபைல் எக்யுப்மெண்ட் ஐடெண்டிடி என்பது தான் இதன் விரிவாக்கம். அதாவது சர்வதேச மொபைல் எண். ஒவ்வொரு மொபைலுக்கும் தனித் தன்மையான ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இது பதினைந்து இலக்க எண்.

உங்க மொபைல்ல பொதுவா பேட்டரிக்குக் கீழே இந்த எண் குறிக்கப் பட்டிருக்கும். முதலில் இந்த எண்ணை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். . நம்பர் எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்க முடியலேன்னா போன்ல இருந்து *#06# ன்னு டைப் பண்ணுங்க, போனே அந்த எண்ணை திரையில் காட்டும் !

மேட் இன் சீனா, கொரியன் போன்களை வாங்கினால் இந்த எண் இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அத்தகைய போன்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏன்னா, இப்படிப்பட்ட போன்களை கண்டு பிடிக்க முடியாது, இத்தனைய போன்கள் தீவிரவாதம் போன்ற தப்பான விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் ரொம்ப அதிகம்.

மொபைல் தொலைந்து போனால் என்ன செய்வீர்கள். புலம்புவதையும், புது மொபைல் வாங்குவதையும் தவிர ! பெரும்பாலானவர்கள் இந்த இரண்டு விஷயங்களோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். மொபைல் தொலைந்து போனால் இரண்டு இடங்களுக்கு அந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ! இரண்டாவது உங்களுடைய செல்போன் சேவையாளர். இந்த இரண்டு இடங்களிலும் போக உங்கள் ஐ.எம்.இ.ஐ எண் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

அது இல்லாமல் போனைக் கண்டுபிடிப்பது வெகு சிரமம். இந்த எண் இருந்தால் போனைத் திருடியவர் எந்த சிம்மைப் போட்டாலும் கண்டுபிடிக்க வாய்ப்பு அதிகம். காரணம் அந்த போனிலிருந்து செல்லும் எல்லா அழைப்புகளிலும் இந்த எண் ஒரு சங்கேதக் குறியீடாய் இணைந்திருக்கும் என்பது தான் !  ஒருவேளை அப்படி கண்டுபிடிக்கவே முடியாவிட்டால் கூட அந்த போனை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய முடியும் ! அதனால் தான் இந்த எண் மிகவும் முக்கியமான இடத்தில் கம்பீரமாய் இருக்கிறது. யூ.கே உட்பட சில நாடுகளில் இந்த ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்ற முயல்வது கூட சட்டப்படி குற்றமாகும். சில நாடுகளில் அது கிரிமினல் குற்றம் !

இதையும் தாண்டி பல ஹைடெக் விஷயங்கள் இப்போதைய போன்களில் உண்டு. முக்கியமானது சில மென்பொருட்கள். சில மென்பொருட்களை உங்கள் மொபைலில் நிறுவினால் உங்கள் மொபைல் போன் இருக்கும் இடத்தை கம்ப்யூட்டர் மூலமாகவே கண்டு பிடித்து விட முடியும் என்பது லேட்டஸ்ட் டெக்னாலஜி.

சில சாப்ஃட்வேர்கள் சுவாரஸ்யமானவை. திருட்டுப் பேர்வழி நம்ம சிம்மை கழற்றி விட்டு ஒரு புது சிம் போட்டதும் ஒரு மெசேஜ் வரும். “ஐயா, இது உங்க போன் இல்லை. இது இந்த நபரோடது. மரியாதையா குடுத்துடுங்க” ன்னு. அதே நேரம் உங்கள் புது எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும் உங்க போன் எங்கே இருக்குங்கற விவரங்களோடு. அதோட முடியுமான்னா அதுவும் இல்லை. போன் சத்தம் போட ஆரம்பிச்சுடும். திருடினவனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடும். வேற வழியில்லாம சுவிட்ச் ஆஃப்லயே வெச்சிருக்க வேண்டியது தான்.

ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் சில குறிப்பிட்ட மென்பொருட்களை பரிந்துரை செய்வதால், நீங்கள் எந்த மொபைல் வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து அதை முடிவு செய்யுங்கள். மொபைல் வாங்கும்போதே கடைகளில் அதற்குரிய விவரங்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் போனில் “பாஸ்வேட்” வசதி உண்டென்றால் அதை முதலில் செயல்படுத்துங்கள். ஒவ்வொரு வாட்டியும் பாஸ்வேர்ட் போடணுமா என சலிச்சுக்காதீங்க. உங்கள் மொபைல் தொலைந்தாலும் உங்கள் தகவல்கள் பெரும்பாலும் பாதுகாப்பாய் இருக்க அது உதவும். உங்கள் சேவை தரும் நிறுவனத்திடம் சொல்லி உங்கள் எண்ணை “தடை” செய்ய வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம்.

மொபைல் போன்களை கண்டு பிடிக்க டிராக்கர் இணைய தளங்களும் உள்ளன.  இதில் உங்கள் தொலைந்து போன மொபைல் எங்கே இருக்கிறது என்பதை வரைபடம் மூலமாக கண்டு பிடித்து விடும் வசதி உண்டு. குறிப்பாக ஜி.பி.எஸ் எனப்படும் வசதியுள்ள மொபைல் போன்களைத் திருடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இப்படி ஏகப்பட்ட டெக்னாலஜி வசீகரங்கள் இருப்பதால் மொபைலைக் காணோமென்றால் உடனே பதட்டப்பட்டு, குழம்பி, பயந்து, எரிச்சலடையாதீர்கள். வருமுன் காக்கும் வழிகளை மனதில் கொள்ளுங்கள். 

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

மிஸ்ட் கால் பயங்கரம் ! உஷார் !!!

கல்பனாவின் எண்ணுக்கு அந்த மிஸ்ட் கால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தாள். ஊஹூம் யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. சரி யாராய் இருக்கும் என கூப்பிட்டுப் பார்ப்போமே என்று அந்த எண்ணை அழைத்தாள்.

“உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்துது” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. ஹாய்… நீங்க கல்பனா தானே ?” மறுமுனையில் ஒரு வசீகரிக்கும் ஆண் குரல். அந்தக் குரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி சொன்னாள்.

“இல்லீங்க… இது ராங் நம்பர்…..”

“ஓ… ஐ யாம் சாரி இந்த நம்பர் தான் குடுத்தாங்க… ” மறுமுனையில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“சாரிங்க.. இது ராங் நம்பர்…” சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி. அந்த நிகழ்ச்சியை அத்தோடு மறந்தும் போய்விட்டாள்.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு. அழைத்தது அவனே தான்.

“கல்பனா இருக்காங்களா ? “ அதே குரல் !

“இல்லீங்க, மறுபடியும் நீங்க தப்பான நம்பருக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன நம்பர் வேணும் ?” சுகந்தி கேட்டாள்.

அவன் சொன்னான் !

“ஐயோ.. இது எங்க வீட்டு நம்பர். நீங்க தப்பா நோட் பண்ணியிருப்பீங்க… முதல்ல போய் சரியான நம்பரை வாங்கிக்கோங்க ” சுகந்தி சொன்னாள்.

“அதான் என்னோட பிரச்சினையே ! தப்பா நினைச்சுக்காதீங்க. நான் அண்ணா யூனிவர்சிடி ல பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கேங்க. சில தகவல்களைத் தேடி அலையறேன். கிடைக்கவே இல்லை. கல்பனா கிட்டே அந்த தகவல்கள் இருக்குன்னு சொன்னாங்க. யூனிவர்சிடில அவங்க நம்பர்ன்னு இதைத் தான் குடுத்தாங்க… எப்படின்னு தெரியல…” மறுமுனையில் அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது.

அண்ணா யூனிவர்சிடி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு. இவளும் எம்.பில் முடித்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ண வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவள் தான்.

“ஓ.. என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார் ?” சுகந்தி கேட்டாள்.

“என்னை நீங்க விஜய்ன்னே கூப்பிடலாம். சார் ன்னு கூப்பிடற அளவுக்கு இன்னும் வயசாகலை எனக்கு “ மறு முனையில் விஜய் சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.

“நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க”

“ஓ..ரியலி.. நான் கூட அதே ஏரியால தான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. நீங்க கூட ஸ்டுடண்டா ? வாவ்… இஃப் யூ டோண்ட் மைண்ட்…. எனக்கு கொஞ்சம் தகவல்கள் கொடுக்க முடியுமா ?” விஜய் கேட்டான்.

“தகவல்ன்னு சொன்னா….” சுகந்தி இழுத்தாள்.

“உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வெச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க… ஏதோ இந்த போனா போவுதுன்னு ரெண்டு மூணு தகவல் குடுத்தீங்கன்னா கூட போதும்” அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள்.

“நீங்க எங்கே தங்கியிருக்கீங்க ?” சுகந்தி கேட்டாள்.

“நான் சிஸ் மெரிடியன், வேளச்சேரி “ விஜய் சொல்ல சுகந்தி ஆச்சரியமானாள். அவளும் அதே தெருவில் இருக்கும் காஸா பிளாங்கா அப்பார்ட்மெண்டில் தான் இருந்தாள்.

இருவரும் சில நாட்களுக்குப் பின் ரத்னா கஃபேவில் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் பழக்கம் முதலில் ஆரோக்கியமான கல்வியில் ஆரம்பித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தளம் மாறியது !

“என்ன மேடம், ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டு அப்பா அம்மாவை அறிமுகப் படுத்த மாட்டேங்கறீங்க, ஒரு கப் காபி தரமாட்டேங்கறீங்க ?” விஜய் சீண்டினான்.

“காபி வேணும்ன்னா இன்னிக்கே வாங்க…” சுகந்தி விஜயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குப் பிடித்தவருடனான மாலைப் பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது. நெருக்கமும், இணக்கமும் அவர்களை எல்லை தாண்ட வைத்தது. முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம் பின்னர் அடிக்கடி நடந்தது !

திடீரென ஒருநாள் விஜய் காணாமல் போய்விட்டான் ! அவனுடைய செல்போன் நம்பரை அழைத்தால், அது உபயோகத்தில் இல்லை என்றது. சுகந்திக்குப் பதட்டம் அதிகரித்தது. அவனுடைய அப்பார்ட்மெண்டில் சென்று விசாரித்தால் அப்படி யாரும் அங்கே இருந்திருக்கவில்லை. யூனிவர்சிட்டியில் தெரிந்த நபர்கள் மூலமாக விசாரித்தால் அங்கும் அவனைப் பற்றிய தடயங்கள் ஏதும் இருக்கவில்லை.

உட்கார்ந்து யோசித்தவளுக்குத் தான் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஒரு ராங் நம்பரில் ஆரம்பித்தவர் ராங் நபர் என்பது அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான். இவளுடைய குடும்பம் பற்றியும், படிப்பு பற்றியும், ரசனை பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டே அவளை வலையில் வீழ்த்தியிருக்கிறான். சுகந்திக்கு அவமானமாய் இருந்தது.  கடுமையான ஏமாற்றம் மன உளைச்சல் என உழன்ற சுகந்தி வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது ரொம்ப தாமதமாகியிருந்தது.

இது ஏதோ ஒரு சுகந்திக்கு நடந்த கதையல்ல. நகரின் பல இடங்களிலும் பல வகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே. சைபர் கிரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன.

மிஸ்ட் கால், ராங் நம்பர்  போன்றவையெல்லாம் ஒரு தூண்டில் என்பதை பலரும் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. யாரோ அழைத்திருக்கிறார்களே ஏதாவது முக்கியமான சமாச்சாரமோ ? என திரும்ப அழைத்தால் போச்சு ! பேசிப் பேசி வசீகரித்து ஏமாற்றி விட மறு முனை காத்துக் கொண்டிருக்கிறது !

தெரியாத எண்ணிலிருந்து மிஸ்ட் கால் வந்தால் அந்த எண்ணுக்குத் திரும்ப அழைக்காமல் இருப்பது தான் உசிதம். ஒருவேளை அழைத்தவர் ஏதேனும் முக்கியமான தகவல் சொல்லவேண்டுமென்றால் மீண்டும் அழைப்பார் என காத்திருப்பது தான் நல்லது. பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் உங்கள் கணவரிடமோ, அப்பாவிடமோ கொடுத்து பேசச் சொல்லுங்கள்,

“ஓ… அப்படியா ? என் நம்பர்ல இருந்து மிஸ்ட் கால் வந்திருந்ததா ? இருக்காதே …” என பார்ட்டி எஸ்கேப் ஆகி விடுவார்.

வீட்டு எண்ணுக்குக் அழைப்புகள் வருவதிலும் பல கொக்கிகள் உண்டு. வீட்டில் ஆள் இருக்கிறார்களா ? வெளியே எங்கேயாவது போயிருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவும் போன் செய்வார்கள். உங்கள் கவனத்தைத் திசை திருப்பி வீட்டுக்குள் நுழைய முயலவும் போன் செய்வார்கள். உஷாராய் இருங்கள். 

ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இணைய தளங்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு. அந்தப் படங்களைப் பார்த்து, எண்ணைப் பார்த்து உங்களுக்கு மிஸ்ட் கால் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அந்த புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் போட்டு உங்கள் பெயருக்குக் களங்கள் விளைவிக்கவும் முயல்வார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இத்தகைய செய்திகளை விளக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் மொபைல் எண்களை கடைகளில் சர்வீஸுக்குக் கொடுக்கும் போது தெரியாத இடங்களில் கொடுக்காதீர்கள்.  உங்கள் செல்போனிலுள்ள தகவல்கள் பிரதி எடுக்கப்படலாம். உங்களுடைய மொலைலில் இருந்து நீங்கள் அழித்து விட்ட தகவல்களைக் கூட மீண்டெடுக்க மென்பொருட்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள். அதே போல புளூடூத் எப்போதும் இயக்க நிலையில் இருப்பதும் சிக்கலானதே. 

இன்னொரு விஷயம், உங்களுக்கு மின்னஞ்சலிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, இணைய தளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள். இது சிக்கலை நீங்களே போய் காசு கொடுத்து வாங்கி வருவதற்குச் சமம்.

மிஸ்ட் கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ்.எம்.எஸ். முதலில் “குட் நைட்” என்று ஒரு எஸ் எம் எஸ் வரும். “ யாரது ? “ என்று நீங்கள் திரும்பி எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்ட்டில் சேர்ந்து விடுவீர்கள். பின் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். சைலண்டாக விட்டு விட்டால் தப்பிக்கலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், தெரியாத எண்களிலிருந்து வரும் மிஸ்ட் கால், ராங் கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள். தேவையற்ற பல சிக்கல்கள் தவிர்க்கப் பட்டு விடும். 

விரல் நுனியில் விரசம்…

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

0

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க