எதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன.
உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக பட்ச மன அழுத்தத்திலும் தங்கள் வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்.
இதன் காரணம் என்ன ? இதற்கு ஏதேனும் தீர்வு இருக்க முடியுமா ? என ஒரு அறிவியல் குழு ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்த ஆய்வின் முடிவாக மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது, ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.
இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
நீண்டகால உறவுகள் துண்டாகும்போது நிகழும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், துயரத்தை எதிர்கொள்வோருக்கு விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அந்த ஆராய்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே !
You must be logged in to post a comment.