வயது 17 ! குழந்தைகள் 7 !!

 pamela

பதின் வயதுகளில் தாய்மை நிலையை அடைவது பல்வேறு நாடுகளை வருத்தும் ஒரு சிக்கலாய் எழுந்திருக்கிறது. பெரும்பாலான மேலை நாடுகளிலும் இந்த பதின் வயதுத் தாய்மை எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பிரிட்டன் தான் அதிக பதின் வயதுத் தாய்மார்களால் நிறைந்த நாடு என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

ரஷ்யாவின் மாஸ்கோவில் ஆண்டு தோறும் 10000 பதின் வயதுப் பெண்கள் தாய்மை நிலையை அடைகிறார்களாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். மிச்சமிருப்போர், பதின் வயதுகளிலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களைக் கவனிக்கும் பொறுப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாய்மை நிலைக்காக பள்ளிக்கூட படிப்பை விட்டு விட்டு, வேலைக்குச் செல்லும் பெண்கள் இத்தகைய நாடுகளின் அநேகம்.

அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பமீலா என்பவருடைய கதை அதிர்ச்சியூட்டுகிறது. பதினேழே வயதான இந்தப் பெண் இப்போது ஏழு குழந்தைகளுக்குத் தாய் !

வறுமையின் உச்சகட்டத்தில் இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அரசு தரும் மானியத்தை வைத்து மட்டுமே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய சூழல்.

pamela21

குழந்தைக்குத் தந்தையும் பமீலாவை விட்டுவிட்டு ஓடி விட தனியாளாய் அத்தனை குழந்தைகளையும் பராமரித்து வருகிறார் இவர்.

பதினான்காவது வயதில் ஒரு பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்ற உடனே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பிய பமீலாவை, இந்த வயதில் அப்படிச் செய்வது சட்ட விரோதம் எனக் கூறி அனுப்பி விட்டனர் மருத்துவர். விளைவு இப்போது அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ! இதில் இரண்டு முறை மூன்று மூன்று குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிக்கூட படிப்பையெல்லாம் மூட்டை கட்டி விட்டு, கிடைத்த வேலை செய்து பிழைப்பை ஓட்டும் பமீலாவை பதின் வயதுத் தாய் படும் அவஸ்தைகளுக்கான ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

கல்வியறிவற்ற நாடுகள், படிப்பறிவுள்ள நாடுகள், வறுமை நாடுகள், வளமான நாடுகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த தவறான குடும்ப உறவுகள் குறித்த கவலை சமூக நலம் விரும்பிகளுக்கு எப்போதுமே இருக்கத் தான் செய்கிறது !

என்னதான் இருந்தாலும்…

poor.jpg

இன்று காலையில் சென்னையின் நகரும் முதுகெலும்பான மின் ரயிலில் ஏறி அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். ரயிலை விட்டிறங்கி கிராசிங் அருகே வந்தபோது கண்ட காட்சி சற்று வித்தியாசமானது.

குடிபோதையில் தள்ளாடித் தள்ளாடி கையில் ஏதோ பொட்டலத்துடன் ஆடிக் கொண்டிருந்த ஒருவருக்கு அவருடைய அன்பான மனைவி பளார் பளார் என்று கன்னத்தில் அறை விட்டுக் கொண்டிருந்தார்.

ஆஹா… முறத்தால் புலியை விரட்டிய பெண்களின் கதையை அடுப்படியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டிகளின் காலம் மாறிவிட்டதே என சற்று மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது, எனக்கு அருகே வந்து கொண்டிருந்த ஒருவர் சத்தமாகவே பேசிக்கொண்டு போனார் “என்னதான் இருந்தாலும் பொது இடத்துல இப்படியா… ?’ (புருஷன் என்பவன் பொது இடமா?)

“என்னதான் இருந்தாலும்…” என்னும் வார்த்தையில் இருக்கும் விஷமம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணாதிக்கத்தின் மிச்சமாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் வாக்கியம் தான் இந்த என்னதான் இருந்தாலும்.

“என்னதான் இருந்தாலும் ஆம்பள…” என்பது தான் அந்த வாக்கியத்தின் ஆழ் அர்த்தம். பொது இடம் என்றில்லாமல் வீட்டில் வைத்து சாத்தியிருந்தாலும் இந்த “என்ன தான் இருந்தாலும்..” வந்திருக்கும்.

என்ன தான் இருந்தாலும்…, கல்லானாலும்… என்றெல்லாம் காலம் காலமாய் நீண்ட வாக்கியங்கள் இந்த கணினி யுகத்திலும் முழுமையாக மாறவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டியது.

என் வீட்டில் உதவிக்கு வரும் சமையல்கார அம்மா தன்னுடைய புருஷனின் கதையை சோகத்தை வெளிக்காட்டாமல் அவ்வப்போது சொல்வார். தினமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் கணவனின் பொறுப்புணர்ச்சியைப் பற்றியும். பத்துப் பாத்திரம் தேய்த்து கணவனின் சாராய தேவைக்கு அர்ப்பணிக்கும் அவளுடைய இயலாமையைப் பற்றியும்.

வருஷம் முழுக்க விரதம் இருக்கிற மாதிரி ஏதாச்சும் சபரிமலை இருந்தா நல்லா இருக்கும் என்று அவர் சொல்லும்போது பனிக்கும் கண்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது வாழ வேண்டும் எனும் அவளுடைய நியாயமான ஆசை.

புத்தாண்டு இவர்களுக்கும் சேர்ந்தே விடியட்டும்.

.