நிஜம் நிழலாகிறது

 

 

Wrapper - Sigaram K Balachander

என்னது !!

நிஜமாவா ?

வாட்….!!!

ஓ..மை..காட்….

2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்த‌ன‌. அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்க‌ள். நிஜ‌ம் தான். இனிமேல் அவ‌ர் ந‌ம்முட‌ன் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு நிஜ‌த்தை ஏற்றுக்கொள்ள‌வே நிறைய‌ நேர‌ம் பிடித்த‌து.

இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வாழ்ந்து நட்சத்திரமாய் ஜொலித்த ஒரு பளீர் நட்சத்திரம் உதிர்ந்து விட்டிருக்கிறது. இயேசு பிற‌ந்த‌போது வானில் வால் ந‌ட்ச‌த்திர‌ம் தோன்றிய‌து வ‌ர‌லாறு. இவ‌ருடைய‌ ப‌டைப்புக‌ள் தோன்றிய‌ போதெல்லாம் புதுப் புது திரை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் தோன்றிய‌து விய‌ப்பின் குறியீடு.

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ தொலைக்காட்சி ரிமோட்க‌ள் அழுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. மின் ப‌த்திரிகைக‌ள், இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌ர‌ப‌ர‌ப்பாயின‌, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் ப‌ல‌ருடைய‌ புர‌ஃபைல் பிக்ச‌ராக‌ மாறிப் போனார். இர‌ங்க‌ல் செய்திக‌ளால் இணைய‌மே அழுது புர‌ண்ட‌து.

ம‌ல‌ர்க‌ள் உதிர்வ‌து க‌வ‌லைய‌ளிக்கும் விஷ‌ய‌ம்

செடியே உதிர்வ‌து கலங்க வைக்கும்விஷ‌ய‌ம்.

தோட்ட‌மே வீழ்வ‌து க‌திக‌ல‌ங்க‌ வைக்கும் விஷ‌ய‌ம்

வாழ்க்கை எவ்வ‌ள‌வு நிஜ‌மோ அதை விட‌ அதிக‌ நிஜ‌த் த‌ன்மை வாய்ந்த‌து ம‌ர‌ண‌ம். ம‌ர‌ண‌த்தின் க‌த‌வுக‌ளைத் திற‌க்காம‌ல் யாருடைய‌ வாழ்க்கையும் முடிவ‌டைவ‌தில்லை. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் ச‌ல‌ச‌ல‌ப்புக‌ளை உருவாக்குகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் அதிர்ச்சிப் பேர‌லைக‌ளை எழுப்புகின்ற‌ன‌. சில‌ ம‌ர‌ண‌ங்க‌ள் எந்த‌ வித‌மான‌ ச‌ல‌ன‌ங்க‌ளையும் ஏற்ப‌டுத்தாம‌ல் க‌ட‌ந்து போகின்ற‌ன‌.

பால‌ச‌ந்த‌ர் ஒரு தோட்ட‌மாய் வாழ்ந்தார். அந்த‌த் தோட்ட‌த்தில் தான் எத்த‌னை வித‌மான‌ ம‌ல‌ர்க‌ள் உருவாகின‌ ! பால‌ச‌ந்த‌ர் ஒரு வான‌மாக‌ இருந்தார் அதில் தான் எத்த‌னை எத்த‌னை ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் மின்னின‌!

ஒட்டுமொத்த‌ திரையுல‌க‌மே ப‌த‌றித் த‌வித்த‌து. புக‌ழின் உச்சியில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளெல்லாம் த‌ங்க‌ளுடைய‌ இமேஜை ம‌ற‌ந்து க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றினார்க‌ள். மைலாப்பூரில் இருந்த‌ அவ‌ருடைய‌ வீட்டை நோக்கி ர‌சிக‌ர்க‌ளும், திரையுல‌க‌ பிர‌முக‌ர்க‌ளும் விழுந்த‌டித்துக் கொண்டு ஓடினார்க‌ள்.

திரையுல‌க‌ம் ஸ்த‌ம்பித்த‌து. ப‌ட‌ப்பிடிப்புக‌ளெல்லாம் அப்ப‌டியே நிறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. கிளிச‌ரின் தேவைப்ப‌டாம‌லேயே க‌ண்க‌ளெல்லாம் த‌ண்ணீரில் மித‌ந்த‌ன‌.

“திரையுலகம் உள்ளவரை இவருடைய‌ புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் இவ‌ர்” என‌ தி.மு.க‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர்.க‌லைஞ‌ர் க‌ருணாநிதி க‌சிந்துருகினார்.

“அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் இவர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என‌ துய‌ர‌த்தை வெளிப்ப‌டுத்தினார் அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் செல்வி.ஜெய‌ல‌லிதா.

“இவர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டாரே” என கண்ணீர் விட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

“இவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என‌ க‌ல‌ங்கினார் தேமுதிக‌ த‌லைவ‌ர் விஜ‌ய‌காந்த்.

“இவருடைய‌ புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்” என‌ நெகிழ்ந்தார் த‌மாகா த‌லைவ‌ர் வாச‌ன்.

“இவருடைய‌ மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் இவர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்” என‌ நினைவுக‌ளில் க‌ல‌ங்கினார் ஸ்டாலின்.

”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளி மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.

இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என புலம்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ

இப்ப‌டி எதிர் எதிர் துருவ‌ங்க‌ளாக‌ இருக்கும் அத்த‌னை த‌லைவ‌ர்க‌ள் அந்த‌ ம‌ர‌ண‌த்தினால் க‌திக‌ல‌ங்கிப் போனார்க‌ள். கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் எல்லோருக்கும் அவ‌ரிட‌ம் இருந்த‌ ம‌ரியாதை. எந்த‌ வித‌மான‌ அர‌சிய‌ல் சிக்க‌ல்க‌ளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாம‌ல் இருந்த‌ அவ‌ருடைய‌ தூய்மையான‌ க‌லைப்ப‌ய‌ண‌ம்.

இய‌க்குன‌ர் சிக‌ர‌ம் என்று சொன்னால் போதும் த‌மிழ‌க‌ம் ந‌ன்க‌றியும். அவ‌ருடைய‌ பெய‌ரைச் சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்லை. அந்த‌ அள‌வுக்கு த‌ன‌து ப‌டைப்புக‌ளைப் பேச‌ வைத்து அமைதி காத்த‌வ‌ர் பால‌ச‌ந்த‌ர்.

பாலசந்தரின் மகன் பால கைலாசம் 54வது வயதில் நிமோனியா காய்ச்சலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். சின்னத்திரை தயாரிப்புகளில் பலரை அறிமுகம் செய்தும், பல வெற்றிகளைக் கொடுத்தும் பிரபலமாக இருந்தவர் பால கைலாசம். அவருடைய மறைவு பாலசந்தரை வெகுவாகப் பாதித்தது. மகன் இறந்த அதே ஆண்டு, சில மாதங்களிலேயே அவரும் பிரிந்து சென்றது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரட்டைத் துயரமாய் மாறிப் போனது..

“இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என‌ சூப்ப‌ர் ஸ்டார் க‌ண்ணீர் விட்டுப் பேசிய‌தில் துளிய‌ள‌வும் க‌ல‌ப்ப‌ட‌ம் இல்லை. கேபி எனும் பெய‌ரைக் கேட்டாலே கையைக் க‌ட்டிக்கொண்டு எழும்பி நிற்கும் ப‌ணிவு சூப்ப‌ர் ஸ்டார் ர‌ஜினிகாந்திட‌ம் எப்போதும் இருந்த‌து.

“ஐயா.. ந‌ன்றி. நீங்க‌ள் கொடை வ‌ள்ள‌ல் ஐயா. உங்க‌ளுக்கு ந‌ன்றி சொல்லி தீருமா ?” என‌ அழுதார் உல‌க‌நாய‌க‌ன் க‌ம‌ல‌ஹாச‌ன். உல‌க‌மே கொண்டாடும் ந‌டிக‌னாக‌ இருந்தாலும் பால‌ச‌ந்த‌ரின் முன்னால் ஒரு குழ‌ந்தையாய் க‌ல‌ந்தும், கரைந்தும் விடும் த‌ன்மை க‌ம‌லிட‌ம் இருந்த‌து.

இப்ப‌டி ஒட்டு மொத்த‌ திரையுல‌கையும் க‌ல‌ங்க‌டித்த‌ கே.பால‌ச‌ந்த‌ர் க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதை எப்ப‌டி இருந்த‌து ?

(தோழமை வெளியீடு )

அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

IT-industry-bcbay

அழைக்கும் ஐடி துறை

1

நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும்.

“நல்லா இருக்கியாடே… ?”

“இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?”

வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்ணு தான். சம்பளத்திலோ, சமூக அங்கீகாரத்திலோ அதிக வேறு பாடு இருப்பதில்லை. இந்தியாவில் நிலமை தலை கீழ். அதனால் தான் ‘ஏதோ ஒரு வேலை’ என்பதைத் தாண்டி நல்ல வேலை, நல்ல சம்பளம் தரக்கூடிய வேலை, நல்ல அங்கீகாரம் கிடைக்கக் கூடிய வேலை என்றெல்லாம் மக்கள் பார்க்கிறார்கள்.

அத்தகைய கனவுத் தேடல்களின் இடமாக கடந்த பத்து இருபது ஆண்டுகளாக ஐடி துறை இளைஞர்களை வசீகரிக்கும் இடமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஐடி துறையின் மீதான அபரிமிதமான கவர்ச்சி சற்றே குறைந்தாலும், ஐடி துறை ஊழியர்களின் வாழ்க்கை வானவில் போல அழகானதல்ல என்பது புரிந்தாலும் அது தரும் பொருளாதாரம், மற்றும் அடையாளம் இரண்டும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ஐ.டி யா… அட போப்பா.. அதெல்லாம் அறிவாளிகளுக்கானது என்று ஒரு சாராரும், அதெல்லாம் பொறியியல் படித்தவர்களுக்கு, அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்தவர்களுக்கு மட்டுமானது எனும் பரவலான சிந்தனையும் நம்மிடையே உண்டு.

உண்மையில், கணினி துறையில் பல்வேறு விதமான வேலைகள் உள்ளன. எல்லா வேலைக்கும் எஞ்சினியரிங் படித்திருக்கத் தேவையில்லை. கணினியில் முதுகலை படித்திருந்தால் மட்டுமே ஐ.டியில் நுழைய முடியும் எனும் சிந்தனையும் சரியானதல்ல.

அதே போல, கணினி துறை அவ்வளவு தான் இனிமேல் அது அழிந்து விடும் எனும் வாதங்களும் அபத்தமானவை. கணினி துறை அழியப்போவதில்லை. அது தனது முகத்தையும், உத்திகளையும், தளங்களையும் மாற்றிக்கொண்டிருக்குமே தவிர அழிந்து போவதில்லை. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா இடங்களிலும் சகஜம் தான். ஆனால் அந்த மாற்றங்கள் ஐடி துறையில் வேகமாக வரும் என்பது ஒன்றே வித்தியாசம். அந்த மாற்றத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்பவர்கள் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கலாம்.

உலக அளவில் செயலாற்றும் மென்பொருள் பொறியாளர்களில் 52 சதவீதம் பேர் இந்தியர்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விவரம். அமெரிக்காவில் ஒரு பொறியாளருக்கு ஆகும் செலவில் ‘கால்வாசி’ கொடுத்தால் இந்தியாவில் ஒரு சிறந்த பொறியாளர் கிடைப்பார். அவர் அந்த அமெரிக்கரை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பையும் கொடுப்பார் என்பது தான் இந்தியாவில் ஐடி துறை அபரிதமான வளர்ச்சியை அடைந்திருக்கக் காரணம்.

இன்றைக்கு ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் கோடானு கோடி பணத்தை இந்தியாவின் ஐடி துறையில் முதலீடு செய்கின்றன ? காரணம் இந்தியர்களின் திறமையும், அவர்களின் மூலம் நிறுவனங்கள் சம்பாதிக்கப்போகும் பில்லியன்களும் தான். ஐடி துறை வளரும். எனவே அது அழியும் என்றெல்லாம் நம்பி கவலைப்படவேண்டாம்.

ஒரு வேளை நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் கல்லூரியில் ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடைபெறும் என்றால், அதில் முழு கவனம் செலுத்தி ஒரு வேலையை வாங்கிவிட முயற்சி செய்யுங்கள். ஐ.டி துறையில் சேர்வதற்கு இன்றைய தேதியில் கிடைக்கும் மிக எளிய வழி அது தான்.

கேம்பஸ் இன்டர்வியூ காலை வாரி விட்டதா ? கவலையில்லை. வாழ்க்கை என்பது கேம்பஸ் இன்டர்வியூவில் இல்லை என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விஷயம் தான்.

எந்தத் துறையில் வேலைக்குச் சேரவேண்டுமானாலும் ஒரு சில அடிப்படைத் தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு கல்லூரிப் பட்டத்துடன், நல்ல உரையாடல் திறன், நல்ல மனதிடன், கூர்மையான சிந்தனை, நேர்முகத் தேர்வு பயிற்சிகள் போன்றவையெல்லாம் கூட உங்கள் கவனத்தில் இருக்கட்டும்.

ஐடி துறையில் இருக்கின்ற வேலைகள் என்னென்ன என்பதைக் குறித்து ஒரு சின்ன அறிமுகம் தரலாம் என நினைக்கிறேன். நம் எல்லோருக்கும் தெரிந்த வேலைகளிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

மென்பொருள் உருவாக்குபவர் (Software Developer)

 

மென்பொருள் பொறியாளர் என்றாலே சட்டென நினைவுக்கு வருகின்ற வேலைகளில் ஒன்று மென்பொருளை உருவாக்கும் பணி செய்பவர்கள். டெவலப்பர்கள். கணினி துறையில் உள்ள சிக்கலும், அதிலுள்ள வசந்தமும் ஒரே விஷயம் தான். பரந்து விரிந்த தொழில் நுட்பங்கள். எந்தத் தொழில் நுட்பத்தைப் படித்தால் நல்லது ? எது இன்றைக்கு ஹாட் சர்டிபிகேட் என்றெல்லாம் குழப்பங்கள் வருவது வெகு சகஜம்.

மென்பொருள் உருவாக்குபவர் வேலையில் நுழைய கணினி மென்பொருள் துறையில் பட்டம் இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான நிறுவனங்கள் நியதியாக வைத்திருக்கின்றன. தேவைக்கு அதிகமாகவே அத்தகைய பொறியாளர்கள் இன்றைக்கு கிடைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். எனவே ஒரு கம்ப்யூட்டர் டிகிரி என்பதை அடிப்படையாக வைத்திருங்கள்.

ஓட்டப்பந்தயங்களில் பார்த்திருப்பீர்கள். முதலில் ஓடி வெற்றிக் கோப்பையைக் கையில் அள்ளுபவனுக்கும், நான்காவதாக வந்து தோல்வியில் தலையசைப்பவருக்கும் இடையே வெறும் ஒன்றோ இரண்டோ வினாடிகள் தான் அதிகபட்ச இடைவெளியாய் இருக்கும். அந்த வினாடிகள் தான் கோப்பையை நிர்ணயிக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்களை விட ஒரு சில ஸ்பெஷல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு எளிய வழி, சான்றிதழ் படிப்புகள் அதாவது சர்டிபிகேஷன் கோர்ஸ்கள். கல்லூரி முடிந்து வரும் எல்லோருக்கும் பட்டப்படிப்பு இருக்கும். அந்த கூட்டத்தில் நீங்கள் தனியே தெரிய வேண்டுமெனில் அதற்கு ஒரு சர்டிபிகேஷன் படிப்பு நிச்சயம் உதவும். உங்களுடைய நோக்கம் டெவலப்மென்ட் வேலை எனில் அதற்குரிய படிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக, ஜாவா, டாட் நெட், சி++, எஸ்.ஏ.பி, மெயின்ஃப்ரேம் என இந்தப் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் உங்களுக்கு எது சுவாரஸ்யமாய் இருக்கிறதோ, பிடித்தமாய் இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு சர்டிபிகேஷன் செய்வது மிகவும் பயனளிக்கும்.

இந்த சான்றிதழ் விஷயத்திலும் நல்ல நிறுவனங்களில் பெறப்படும் சான்றிதழுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ஐபிஎம், மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சிஸ்கோ, சன் போன்ற நிறுவனங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருவேளை அத்தகைய நிறுவனங்களில் வாங்குவது இயலாது என்று தோன்றினால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல நிறுவனம் ஒன்றில் ஒரு சான்றிதழ் பயிற்சியை முடித்துக் கொள்வது பயன் தரும். அதுவும் வசதிப்படாத சூழல் எனில் ஆன்லைனில் நிறைய சர்டிபிகேஷன் கோர்ஸ் கள் இருக்கின்றன அவற்றைப் படித்து ஒரு சில‌ சான்றிதழ் பெறுவதும் நல்லதே.

‘எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்” என்பது பழைய கதை. “நான் இதுல தான் எக்ஸ்பர்ட், இந்த ஏரியால வேலை இருக்கா ?” என்பது ஐடி கதை. ஒரு ஏரியாவில் நீங்கள் வலுவாக இருப்பதே பல இடங்களில் நுனிப் புல் மேய்வதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

சுருக்கமாக, கணினி மென்பொருள் டெவலப்பர் வேலைக்கு கணினி பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, உரையாடல் திறன், தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை, விடா முயற்சி இவற்றை முதன்மையாகக் கொண்டிருங்கள்.

( பேசுவோம் )

Sony And Google Unveil Internet TV Set

2

அழைக்கும் ஐடி துறை

கடந்த வாரம் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை குறித்து பார்த்தோம். டெவலப்பர் எனும் வார்த்தையைக் கேட்டால் உடனே மனதில் “டெஸ்டர்” எனும் வார்த்தை ஒலித்தால் நீங்கள் மென்பொருள் துறையோடு நல்ல பரிச்சயம் உடையவர் என்று பொருள். டெஸ்டர் என்றால் சோதிப்பவர். டெவலப்பர்கள் எழுதும் மென்பொருள் சரியாக இயங்குகிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பவர் தான் டெஸ்டர்.

டெஸ்டர் ( Software Tester )

மென்பொருள் துறையின் ஆரம்ப காலத்தில் இந்த டெஸ்டர்களுக்கு டெவலப்பர்களுக்கு இணையான மரியாதை இல்லை. அது இரண்டாம் தர வேலையாகவே பார்க்கப்பட்டது. ‘நான் வண்டியைச் செய்றவன். நீ ஓட்டிப் பாக்கறவன் தானே’ என்பது போல ஒரு இளக்காரம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறியது. மென்பொருள் துறையின் முதுகெலும்பாகவே அந்த பணி மாறிப்போனது.

மென்பொருளில் தவறு இல்லை என்பதை இந்த குழு உறுதி செய்த பின்பே மென்பொருள் இறுதி கட்டத்தை அடையும். முதலில் மென்பொருள் உருவாக்குபவர்களே சோதிப்பவர்களாகவும் இருந்தார்கள், பின்னர் சில டெஸ்டர்கள் டெவலப்பர்களுடன் இணைந்திருந்து மென்பொருளை சோதனை செய்தார்கள், இப்போது டெஸ்டிங் என்பது நிறுவனத்தின் தனி பாகமாக மாறிவிட்டது. வெறும் டெஸ்டிங்கை மட்டுமே செய்யும் நிறுவனங்களும் இன்று ஏராளமாக இயங்குகின்றன.

டெஸ்டிங் பிரிவில் முக்கியமாக மூன்று வேலைகளைச் செய்கிறார்கள்.

அ, மென்பொருள் பிழையில்லாமல் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைச் சோதிக்கிறார்கள்.

ஆ. அது செய்ய வேண்டிய வேலையைச் சரியாக செய்கிறதா ? செய்யக் கூடாத வேலைகளைச் செய்யாமல் இருக்கிறதா என்பதை சோதிக்கிறார்கள்.

இ. தேவையான அளவு வேகத்தில் மென்பொருள் இயங்குகிறதா என்பதைப் பரிசோதிக்கிறார்கள்.

குவாலிடி ரொம்ப முக்கியம் என்பவர்கள் டெஸ்டிங் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். “எப்பவும் உன் கண்ணுக்கு குறை மட்டும் தான்யா தெரியுது” என திட்டு வாங்குபவர்கள் அதை ஒரு பாசிடிவ் ஆக மாற்ற இந்தத் துறையில் சேரலாம்.

டெவலர்ப்பர்களைப் போலவே டெஸ்டிங் பொறியாளர்களுக்கும் ஒரு கணினி சார்ந்த பட்டம் இருப்பது சிறப்பு. ஆனால் சில நிறுவனங்கள் கணினி சார்ந்த பட்டம் இல்லாதவர்களையும் டெஸ்டிங் பணியின் ஜூனியர்களாகச் சேர்ப்பதுண்டு.

டெஸ்டிங் துறைக்கு ஒரு மிகப்பெரிய சாதகம் உண்டு. என்னத்த படிக்கிறது ? என டெவலப்பர்களைப் போல அதிக அளவு குழப்ப வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை. பெரிய அளவில் பார்த்தால் இரண்டு பெரிய பிரிவுகளில் இவர்களை அடக்கி விடலாம்.

அ. மேனுவல் டெஸ்டர்ஸ்.

ஆ. ஆட்டோமேஷன் டெஸ்டர்ஸ்.

மேனுவல் டெஸ்டர்கள் என்பவர்கள் எந்தவிதமான சிறப்பு மென்பொருளும் இல்லாமல் தாங்களாகவே மென்பொருளின் ஒவ்வொரு பணியையும் சோதிப்பார்கள். ஆட்டோமேஷன் டெஸ்டர்கள் அந்தப் பணியை ஏதேனும் ஒரு ஆட்டோமேஷன் டூல் மூலமாகச் செய்வார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

டெஸ்டிங்கில் சான்றிதழ் வாங்குவதும் ஒருவகையில் குழப்பமற்றதே. “சாப்ஃட்வேர் டெஸ்டிங்” எனும் சர்டிபிகேஷனை பெரும்பாலும் எல்லா முக்கிய பயிற்சி நிலையங்களும் வைத்திருக்கின்றன. சில வாரங்களோ, சில மாதங்களோ பயிற்சி பெறுவது ரொம்ப பயனளிக்கும். எந்த நிறுவன அல்லது பயிற்சி நிலைய சான்றிதழ் அதிக மதிப்பு வாய்ந்தது என்பதைப் பார்த்தபின்பே அதைப் பெற முயலுங்கள்.

டெஸ்டிங்கில் அடிப்படை கற்றபின்பே ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன் பெறவேண்டும். அதுவே சரியான முறை. ஆட்டோமேஷன் சர்டிபிகேஷன்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆட்டோமேஷன் என்றால் என்ன ? அது என்னவெல்லாம் செய்யும் ? எங்கேயெல்லாம் பயன்படுத்தலாம் என அதன் அடிப்படைகளை அலசும் சர்டிபிகேஷன்.

க்யூ.டி.பி, செலினியம், ஆர்.எஃப்.டி என ஆட்டோமேஷனுக்கான ஏதோ ஒரு மென்பொருளில் எக்ஸ்பர்ட் ஆவது இன்னொரு வகை. ஹைச்.பி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் அதற்குரிய பிரத்யேக சான்றிதழ் பயிற்சிகளைத் தருகின்றன.

இந்த இரண்டு டெஸ்டிங் போலவே “பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங்” ஒன்றும் உண்டு. உருவாக்கப்பட்ட மென்பொருள் தேவையான வேகத்தில் இயங்குகிறதா என்பதை சோதித்து உறுதி செய்வதே இது. இதற்கென ஸ்பெஷல் டூல்ஸ் இருக்கின்றன. அந்த மென்பொருள்கள் பற்றிய சான்றிதழ்களுக்கு சிறப்பு மரியாதை உண்டு. ‘லோட் ரன்னர் சான்றிதழ்’ என்பது ஒரு சின்ன உதாரணம்.

டெஸ்டிங் துறையில் நுழைய நல்ல நுண்ணறிவு, ஆராயும் தன்மை, எதையும் வேறுபட்ட ஒரு கோணத்தில் பார்க்கும் பார்வை, இவையெல்லாம் தேவை. அப்போது தான் யார் கண்ணிலும் படாமல் தப்பிக்கும் பிழைகளெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியும்.

ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். காரின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொருவர் தயாரிப்பார். அதை ஒட்டு மொத்தமாக ஒட்டிப்பார்ப்பவர்கள் ‘சோதனை’ பிரிவில் இருப்பவர்கள். ஓட்டிப் பார்ப்பவர்கள் ஒட்டு மொத்தமாக கார் எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் போன்ற அத்தனை விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். அது போல தான் மென்பொருள் துறையிலும். டெவலப்பர்கள் ஒவ்வொரு பகுதியாய் உருவாக்குவார்கள். ஒட்டு மொத்தமாக சோதிப்பவர்கள் டெஸ்டர்கள். அவர்களுக்குத் தான் அந்த மென்பொருளின் ஒட்டு மொத்தப் பார்வையும், புரிதலும் இருக்க வேண்டும்.

டொமைன் ஸ்பெஷலிஸ்ட்( Domain Specialist )

‘டொமைன் ஸ்கில்ஸ்” என்பது எந்தத் துறைக்காக மென்பொருளை உருவாக்குகிறார்களோ, அந்தத் துறையைப் பற்றிய அறிவாகும். அது கணினியோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாக வங்கித் துறையை எடுத்துக் கொண்டால், வங்கியில் பணப் பரிமாற்றம் எப்படி நடைபெறும், அதில் என்னென்ன சட்ட திட்டங்கள், வரையறைகள் உண்டு. டெபிட் கார்ட் போன்றவை பயன்படுத்துவதன் வழிமுறைகள் போன்ற ‘தொழில் அறிவு’ இருந்தால் போதுமானது.

காப்பீட்டுத் துறையை எடுத்துக் கொண்டால், அதில் எப்படியெல்லாம் பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் மாற்றத்துக்கு உட்படுகிறது. ஒரு சூழலில் பணத்தை கிளெய்ம் செய்ய வேண்டிவந்தால் அது எப்படி நடைபெறும் போன்ற அறிவு இருந்தால் போதும். இந்த அறிவு தான் உங்கள் மூலதனம்.

மென்பொருள் துறையில் அதிகம் செயல்படும் தளங்கள் பல உண்டு.

வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, நலத்துறை, தகவல் தொடர்பு துறை, வணிகம் போன்றவை சில முக்கியமான தளங்கள்.

ஏற்கனவே ஐடியில் இருப்பவர்கள், கூடுதலாக இந்தத் தளங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றிருப்பது ஐ.டி துறையில் டெவலப்மென்ட், டெஸ்டிங் போன்ற வேலைகளில் உயர உதவி செய்யும். வேலையில் சேர விரும்புபவர்களுக்கு “அனலிஸ்ட்”, “டொமைன் எக்ஸ்பர்ட்”, “சப்ஜக்ட் மேட்டர் எக்ஸ்பர்ட்” போன்ற டொமைன் ஸ்பெஷல் வேலைகள் கிடைக்கவும் உதவி செய்யும். அந்தந்த துறையிலுள்ள நுணுக்கங்களைக் கற்றறிந்து இவர்கள் ஐடி துறையோடு பொருத்திக் கொள்ள வேண்டும் அது தான் விஷயம்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு சர்டிபிகேஷன் கோர்ஸ் உண்டு. ஏதேனும் உங்களுக்குப் பிடித்தமான ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதிலுள்ள சிறப்பு சான்றிதழ் ஒன்றைப் பெறுவது மிகவும் அவசியம்.

உதாரணமாக, அசோசியேட் இன் ஜெனரல் இன்சூரன்ஸ் என்பது காப்பீடு துறை சார்ந்த ஒரு சான்றிதழ்.இந்த சிறப்புப் பிரிவில் வேலையில் சேர்பவர்களுக்கு கணினி பட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களுக்கு ஏதோ ஒரு கல்லூரிப் பட்டம், மற்றும் அந்தந்த துறைகளிலுள்ள சிறப்பான அறிவு அதுவே முக்கியம்.

எனவே உங்களுக்கு ஒருவேளை இந்தத் துறைகளில் நல்ல முன் அனுபவம் இருந்தால், உதாரணமாக, எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தில் ஒரு பிரிவில் உங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டெனில் அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே நீங்கள் ஐ.டி துறையில் நுழைய முடியும் !

 

Sony And Google Unveil Internet TV Set

அழைக்கும் ஐடி துறை

3.

 

டேட்டாபேஸ் தொடர்பான வேலைகள் ( Database Related Jobs)

எந்த மென்பொருள் இயங்கவும் முக்கியமான தேவை டேட்டா எனப்படும் தகவல்கள். அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் இடம் டேட்டாபேஸ் எனப்படும். இந்த தகவல்களை சேமிக்கும் முறை, அதை தேவையான இடத்தில், தேவையான நேரத்தில், தேவையான வேகத்தில் பயன்படுத்தும் முறை, அதைப் பாதுகாப்பாய் வைத்திருக்கும் வகை என தகவல்கள் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்பவர் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் ( டிபிஏ) என அழைக்கப்படுவார். இந்த ஏரியாவின் இள நிலை ஊழியர் டேட்டாபேஸ் அனலிஸ்ட் என்பார்கள்.

இந்த வேலைக்கு கணினி மென்பொருள் துறையில் படித்திருக்கும் பட்டம் பயனளிக்கும் என்றாலும் அறிவியல் துறையில் பெற்றிருக்கும் ஏதோ ஒரு பட்டம் கூட பல நிறுவனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது ஆனந்தமான செய்தி. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்திருப்பவர்களைக் கூட அங்கீகரிக்கிறது.

இந்த வேலைக்கு சர்டிபிகேஷன் பயிற்சி மிக முக்கியம். எஸ்.க்யூ எல் எனப்படும் தொழில்நுட்பத்தில் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டியது இதன் முக்கியமான தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் சான்றிதழ் அல்லது ஆரக்கிள் அளிக்கும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் சான்றிதழ் போன்றவை மிகவும் சிறப்பான சான்றிதழ் பயிற்சிகளாகும்.

ஹார்ட்வேர் எஞ்சினியர் ( Hardware Engineer )

கணினி பணிகளைப் பொறுத்தவரை கணினி எனும் கருவி, அந்தக் கருவியில் இயங்கும் மென்பொருட்கள் எனும் இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணினியில் இயங்கும் மென்பொருட்கள், மற்றும் கணினியை இயக்கும் மென்பொருட்கள், கணினிகளை இணைக்கும் மென்பொருட்கள் என்பவற்றையெல்லாம் ‘சாஃப்ட்வேர்’ எனும் ஒரு மிகப்பெரிய தலைப்பின் கீழ் அடைத்து விடலாம்.

அந்தக் கணினியில் இருக்கும் வன்பொருட்களை அதாவது ஹார்ட்வேர் பகுதிகள் சார்ந்த பணிகளைச் செய்பவர்கள் ஹார்ட்வேர் எஞ்சினியர்கள் எனப்படுவார்கள். இவர்களுடைய பணி மிகவும் முக்கியமானது. புதியவகையான கீபோர்ட்கள், மைக்ரோசிப்கள், பிரிண்டர்கள், ஹார்ட்டிஸ்கள் போன்றவற்றை வடிவமைக்கும் ஆய்வக பணிகள் இவற்றில் முக்கியமானது.

எந்த வகையானாலும் ஹார்ட்வேர் பொறியாளர்களின் தேவை எல்லா நிறுவனங்களுக்கும் உண்டு. கணினி மென்பொருள் அல்லது வன்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது, இல்லையேல் எலக்ட்ரானிக் துறையில் பொறியாளர் பட்டம் பெற்றிருப்பது தேவை. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்த பணி, எனவே இதன் மீது ஆழமான விருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமானது இது.

மற்ற பணிகளைப் போலவே ஒரு சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது வன்பொருள் பணியிலும் அதிக நன்மை பயக்கும். மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களெல்லாம் சிறப்பு சான்றிதழ் பயிற்சிகளை அளிக்கின்றன. அவை தவிரவும் ஏராளமான நிறுவனங்கள் ஸ்பெஷல் சான்றிதழ் பயிற்சிகள் நடத்துகின்றன. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அதிக பலனளிக்கும்.

ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன் ( HelpDesk Technician )

கணினி நிறுவனங்களில் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இந்த ஹெல்ப் டெஸ்ட் பணியாளர்களின் பணியையும் குறிப்பிடலாம். அதே போல கணினி துறையில் பட்டம் பெறாமலேயே ஐடி துறைக்குள் நுழைவதற்கான ஒரு கதவாகவும் இந்த பணி இருக்கிறது.

கணினி நிறுவனங்கள் பல விதமான கணினிகளால் நிரம்பியிருக்கும் என்பது அறிந்த விஷயம் தான். அந்த கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்வதும், அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதும் இந்த ஹெல்ப் டெஸ்க் பணியாளர்களின் முக்கிய வேலை. கணினிகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நிறுவனம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியத்தை கட்டிக் காப்பதில் இவர்களுடைய பங்கும் முக்கியமானது.

நிறுவனங்கள் ஒரே கட்டிடத்தில் இருந்தால் நேரடியாகச் சென்று பழுதுகளை நீக்குவதும், அவை வேறு வேறு இடங்களிலோ, வேறு வேறு மாநிலங்களிலோ இருந்தால் அவற்றை ஆன்லைன் மூலமாக சரிசெய்வதும் இவர்களுடைய பணிகளில் அடக்கம். கணினி சார்ந்த சிக்கல்களைப் பலருடன் பேசவும், சரிசெய்யவும் வேண்டியிருப்பதால் நல்ல உரையாடல் திறன் இவர்களுக்கு அவசியம்.

ஒரு பட்டம், அல்லது ஒரு நல்ல டிப்ளமோ படிப்பு கூடவே ஹார்ட்வேர் சர்ப்போர்ட் சார்பான ஒரு பயிற்சி இவை போதும் இந்த பணிக்குள் நுழைய. நுழைந்தபின் தங்களுடைய பணியை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவு படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

நெட்வர்க் சார்ந்த பணிகள். ( Networking Related Jobs)

 

கணினி நிறுவனத்தில் கணினிகள் நிரம்பியிருக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த கணினிகளெல்லாம் தனித் தனியே இருந்தால் தகவல் பரிமாற்றம் உட்பட எந்த வேலையும் ஒழுங்காக நடைபெறாது. எல்லா கணினிகளும் ஒரு சரியான தொழில்நுட்ப முறையில் இணைந்திருந்தால் மட்டுமே அது முழுமையான பணியை ஆற்ற முடியும்.

கணினிகளை சரியான வலைப்பின்னலின் இணைப்பது, அந்த இணைப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது, தகவல் பரிமாற்றங்கள் தேவையான விதத்தில் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பது, தகவல் பாதுகாப்பு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்துவது, ஒவ்வொருவருக்கும் அந்த நெட்வர்க்கில் என்னென்ன அனுமதிகள் கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என நெட்வர்க்கிங் சார்ந்த சர்வ சங்கதிகளையும் நெட்வர்க்கிங் குழு செய்யும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருப்பது, அல்லது நெட்வர்க்கிங், எலக்ட்ரானிக், எலக்டிரிக்கல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது அடிப்படைத் தேவையாகக் கொள்ளப்படும். சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்த நபர்களையும் வேலையில் சேர்த்துக் கொள்கின்றன, ஆனால் அவர்கள் நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நெட்வர்க்கிங் பயிற்சி சான்றிதழ்களை பல முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை.

இந்த நெட்வர்க்கிங் ஏரியாவில் படிப்பு, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் பல வேலைகள் உண்டு. நெட்வர்க் எஞ்ஜினியர், நெட்வர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், நெட்வர்க் செக்யூரிடி அனலிஸ்ட், இன்டர்நெட்வர்க் எஞ்ஜினியர் போன்றவை சில உதாரணங்கள்.

டெக்னிகல் ரைட்டர். ( Technical Writer )

தொழில்நுட்பம் சார்ந்தவற்றை எழுதி வைப்பவர் என இந்தப் பணியைச் சொல்லலாம். ஐடி நிறுவனங்களில் பல்வேறு கோப்புகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை ‘தொழில்நுட்பம்’ சார்ந்தவை. இந்த தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அறிந்து, தெரிந்து வகைப்படுத்தி பிழையின்றி எழுதி வைக்கும் துறை தான் இது. இன்றைய தினத்தில் வளர்ந்து வரும் துறைகளில் இதுவும் ஒன்று.

தகவல்கள் சரியாக இருக்க வேண்டும், தகவல்கள் எளிமையாக இருக்கவேண்டும், தகவல்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும், தகவல்கள் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும், தகவல்கள் வாசிக்க தூண்டுவதாக இருக்க வேண்டும் என பல ‘வேண்டும்’கள் இந்த வேலையில் உண்டு.

அட்டகாசமான கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இந்த வேலைக்குத் தேவை என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் புரிந்திருப்பீர்கள். சிறப்பாக எழுதும் திறமையும் வேண்டும். கூடவே கணினி துறைபற்றிய அறிவும் அவசியம்.

ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டியது அடிப்படைத் தேவை. ஆங்கில இலக்கியம், ஜர்னலிசம் போன்ற பட்டங்கள் வசீகரிக்கும். வலைத்தளங்கள், நூல்கள், பயிற்சி நிலையங்கள் என உங்களை பட்டை தீட்டும் இடங்கள் பல உண்டு.

பட்டப்படிப்போடு கூட எழுதுவதற்குப் பயன்படக் கூடிய மென்பொருட்களின் மீது நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். எம்.எஸ் வேர்ட், ஃப்ரேம் மேக்கர், பேஜ் மேக்கர் அல்லது க்வார்க் போன்ற மென்பொருட்களில் ஏதேனும் சிலவற்றில் பரிச்சயமும், நல்ல அனுபவமும் இருப்பது அவசியம்.

Sony And Google Unveil Internet TV Set

4

கேம்ஸ் ரைட்டர் ( Games Writer )

 

எந்நேரமும் குழந்தைகள் போனும் கையுமாக இருந்து விளையாடிக்கொண்டிருப்பது இன்றைக்கு சர்வ சாதாரணக் காட்சியாகிவிட்டது. அதனால் தான் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

கணினி, மொபைல், சமூக வலைத்தளங்கள் என இந்த விளையாட்டின் தளம் இப்போது பரந்துபட்டிருக்கிறது. ஒரு விளையாட்டின் கருவை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, அதன் விளையாட்டு முறைகளை நிர்ணயிப்பது, அதற்கான ஒலியை உருவாக்குவது, அதை சோதிப்பது என கணினி விளையாட்டுத் துறையில் பல்வேறு பணிகள் உள்ளன.

நல்ல கற்பனை வளம் இருக்க வேண்டியது இந்தப் பணியின் ஒரு முக்கிய தேவை. சிறுவர்கள், பதின்வயதினர் போன்றோரின் ரசனையைப் புரிந்து வைத்திருப்பதும் மிக முக்கியமான தேவை. ஒரு கருவை உருவாக்கி, அதை முழுமைப் படுத்தி சந்தைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பது இந்தப் பணியின் சிரமத்தை விளக்குகிறது.

இந்தத் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய எளிய வழி இது. ஒரு சின்ன கான்செப்ட் விளையாட்டை உருவாக்க வேண்டியது. அதன் சில பாகங்களை மாடலாக உருவாக்கி அதைப் பயன்படுத்தி வேலையில் நுழைய வேண்டியது. இதற்கென்று பல ஆன்லைன் குழுக்கள், ஃபாரம்கள், இணைய தளங்கள் உள்ளன.

பிடித்ததைச் செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த தளம் மிகவும் அருமையானது. விளையாட்டு தானே என்று விளையாட்டாய் நினைக்காதீர்கள், இதில் கிடைக்கும் சம்பளம் மற்ற துறைகளை விட மிக அதிகம்.

 

அனிமேஷன் துறை ( Animation Technology)

 

இன்றைக்கு மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் கணினி சார்ந்த துறைகளில் ஒன்று அனிமேஷன் துறை. இன்றைக்கு வெளியாகும் திரைப்படங்கள் எதுவுமே இந்த அனிமேஷனின் கண்ணுக்குத் தப்ப முடியாது. எகிறிக் குதிக்கும் ஹீரோவைக் கட்டியிருக்கும் கயிறை அவிழ்ப்பதானாலும் சரி, பாடலில் பின்னால் வானத்தில் சூரியனை உதிக்கச் செய்வதானாலும் சரி, அணை உடைந்து வெள்ளம் பாய்வதானாலும் சரி, அல்லது ஹைடெக் ரோபோட்டிக் டெக்னிக்கல் ஆனாலும் சரி அனிமேஷன் இல்லாமல் திரைப்படம் இல்லை.

திரைப்படத்தைப் போலவே, விளம்பரங்கள், விளையாட்டுகள், பாடல்கள், இணையப் பக்கங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் அனிமேஷனின் துணையுடன் தான் நடக்கின்றன. இந்த அனிமேஷன் இன்றைக்கு ஒரு படி முன்னேறி முப்பரிமாண அனிமேஷன் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. 3டி தான் இப்போதைய ஹாட் டிரென்ட் என்று சொல்லலாம்.

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் எனும் தேவை இங்கே இல்லை. ஆனால் கிராபிக்ஸ் டிசைனிங் சார்ந்த ஏதாவது ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது ரொம்ப பயனளிக்கும். கூடவே அடோப் போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், வீடியோ/போட்டோ எடிட்டிங் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்வது கை கொடுக்கும்.

சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது, அது நம்முடைய ரசனையாய் இருக்க வேண்டும். ஒருவகையில் கிராபிக்ஸ் கலையும் அப்படித் தான். ஒரு காட்சியைப் பார்த்ததும் அதை எப்படியெல்லாம் வடிவமைக்கலாம், அழகுபடுத்தலாம், மெருகூட்டலாம், மாற்றியமைக்கலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரை உங்களுக்குள் ஓடத் துவங்கினால் நீங்கள் இதில் நுழையலாம்.

அனிமேஷன் துறை மிகக் கடுமையான வேலை வாங்கும் துறை. ஆனால் மிக மிக இனிமையான, சுவாரஸ்யமான பணி. தீவிர ஆர்வம் இருக்கிறவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.

 

அட்மின் & ஃபெஸிலிடிஸ் ( Admin and Facilities)

 

இவை நேரடியாக கணினி சார்ந்த பணிகள் அல்ல, ஆனால் ஐடி நிறுவனங்களில் தவறாமல் இருக்கக் கூடிய பணிகள். அலுவலகத்தில் பணியாளர்களின் வேலை சரியாக நடக்க துணை செய்யக் கூடிய ‘சப்போர்டிங்’ வேலையாட்கள் இவர்கள்.

திடீரென ஒரு புது புராஜக்ட் வருகிறது, ஒரு 25 பேர் அமரக் கூடிய இடம் வேண்டும் என்றால் இவர்கள் தான் களத்தில் குதித்து அதற்கான திட்டமிடுதலைச் செய்வார்கள். இருக்கைகள், மேஜைகள், அறைகள், கான்ஃபரன்ஸ் ஹால்கள் என எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள்.

அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் இவர்கள் மூலமாகத் தான் வரும். அது ஒரு பென்சில் ஆனாலும் சரி, பல இலட்சம் மதிப்புள்ள வீடியோ கான்ஃபரன்சிங் கருவியானாலும் சரி. சில அலுவலகங்களில் அதன் உட் பிரிவாக ‘பொருட்களை வாங்குதல்,பராமரித்தல்’ (Procurement)எனும் ஒரு பிரிவையும் கொண்டிருப்பார்கள்.

அலுவலகப் பணியாளகர்களுக்குத் தேவையான கைபேசிகள், அதன் சேவை சார்ந்த பராமரிப்புகள், அதன் வரவு செலவு மேலாண்மை போன்ற பணிகளும் அட்மின் எனும் பெரிய வகைக்குள் வரும். நிறுவனங்கள் அதற்கென ‘டெலி கம்யூனிகேஷன்’ (Telecommunication Department) அதாவது தகவல் தொடர்பு எனும் ஒரு உட்பிரிவை வைத்துக் கொள்வதும் உண்டு. அது அந்தந்த நிறுவனங்களின் அளவைப் பொறுத்த விஷயம்.

இந்த வேலைகளுக்கு நல்ல கம்யூனிகேஷன், உடலுழைப்பைச் செலுத்தத் தயங்காத மனம், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை ‘ஃபாலோ’ செய்து முடிக்கும் திறமை போன்றவை முக்கியம். மற்றபடி பட்டப்படிப்புகள் ஏதும் தேவையில்லை.

 

மனிதவளப் பணிகள் ( Human Resources )

 

ஹைச்.ஆர் ஊழியர்கள் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. பணியாளர்கள் ஒரு நல்ல சூழலில் பணியாற்றுவதை ஊர்ஜிதப்படுத்துபவர்கள் இவர்கள். பெரும்பாலும் எம்.பி.ஏ படித்தவர்களே இந்த பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.

நிறுவனங்களில் வரைமுறைகளை வகுப்பதிலும், அதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதிலும், அவர்களுடைய குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதிலும், அவர்கள் பாதுகாப்பான சூழலில் பணிசெய்வதை உறுதி செய்வதிலும் இவர்களுடைய பங்கீடு இருக்கும்.

பணியாளர்களுக்கு இடையே நடக்கும் நிழல் யுத்தம், கிண்டல், வம்பு போன்றவையெல்லாம் வரைமுறை தாண்டும் போது இவர்கள் தான் வந்து சமரம் செய்வார்கள். ஒருவரை எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்திலிருந்து கழற்றி விட இவர்களுக்கு அதிகாரம் உண்டு.

சில நிறுவனங்களில், ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் இவர்களே செய்வார்கள். பெரிய நிறுவனங்களெனில் ‘ரிக்ரூட்மென்ட்’ (Recruitment) எனும் ஒரு தனி துறையையும் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான ஆட்களை நிறுவனத்துக்கு தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதிலும் துணை செய்வார்கள்.

நல்ல உரையாடல் திறன் இந்த வேலைக்கு இன்றியமையானது. கூடவே பொறுமையும், நிதானமும், பாகுபாடு காட்டாத தன்மையும் இருக்க வேண்டியது அவசியம்.

 

விற்ப‌னை/விற்ப‌னை உத‌வி ( Sales and Sales Support)

 

சேல்ஸ் & சேல்ஸ் ச‌ப்போர்ட் என‌ப்ப‌டும் ப‌ணி ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளின் முதுகெலும்பான‌ ஒரு ப‌ணி. இத‌ற்கு அனுப‌வ‌ம் உடைய‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே தேர்வு செய்ய‌ப்ப‌டுவார்க‌ள். பெரும்பாலும் எம்.பி.ஏ ப‌டித்த‌வ‌ர்க‌ளே இதில் நுழைவார்க‌ள், ஆனாலும் எந்த‌ ப‌ட்ட‌ம் என்ப‌து இங்கே முக்கிய‌ம் இல்லை.

இந்த‌ வேலை மூன்றுக‌ட்ட‌மாக‌ ந‌டைபெறும். ஒவ்வொரு க‌ட்ட‌த்திலும் அத‌ற்குரிய‌ ஸ்பெஷ‌லிஸ்ட் ப‌ணியாற்றுவார்க‌ள். நிறுவ‌ன‌த்துக்கு புதிதாக‌ வேலை வாங்குவ‌து தான் இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி. ஒரு பிரிவின‌ர் எப்ப‌டியெல்லாம் ஒரு க‌ஸ்ட‌ம‌ரை க‌வ‌ர‌லாம் என்ப‌தைக் குறித்த‌ திட்ட‌மிடுத‌லைச் செய்வார்க‌ள். இவ‌ர்க‌ள் ‘பிரீ சேல்ஸ்” குழுவின‌ர் என‌ அழைக்க‌ப்ப‌டுவார்க‌ள். கஸ்டமரை வசீகரிக்கும் விதமான த‌க‌வ‌ல் சேக‌ரிப்புகள், ந‌ம‌து ப‌ல‌ம் என்ன‌, நிறுவ‌ன‌த்தின் த‌னித்துவ‌ம் என்ன‌ என்ப‌தையெல்லாம் அழ‌கான‌ பிர‌ச‌ன்டேஷ‌ன்க‌ள் மூல‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

இர‌ண்டாவ‌து பிரிவின‌ர் அந்த‌ பிர‌ச‌ன்டேஷ‌னை எடுத்துக் கொண்டு போய் நேர‌டியாக‌ க‌ஸ்ட‌ம‌ர் நிறுவ‌ன‌த்தின் மேல‌திகாரிக‌ளைப் பார்த்து அவ‌ர்க‌ளிடம் தமது அருமை பெருமைக‌ளை விள‌க்குப‌வ‌ர்க‌ள். வ‌சீக‌ர‌மாய்ப் பேசி, ந‌ம்பிக்கைக்குரிய‌ வித‌மாய்ப் பேசி, தேவைக்கு ஏற்றப‌டி பேசி நிறுவ‌ன‌த்தின் வ‌ருமான‌த்தைப் பெருக்குப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். விற்பனை ஒப்பந்தம் முடிந்தபின் மூன்றாவது பிரிவினர் களத்தில் குதித்து மற்ற வேலைகளையெல்லாம் கவனித்துக் கொள்வார்கள்.

இவ‌ர்க‌ளுக்கு நிறைய‌ மென்திற‌மைக‌ள் தேவை. உரையாட‌ல் திற‌மை, விவாத‌த் திற‌மை, பேர‌ம் பேசும் திற‌மை, க‌ஸ்ட‌ம‌ரின் ப‌ல‌ம் ப‌ல‌வீன‌ம் அறிந்து பேசும் திற‌மை, சுருக்க‌மாய்ப் பேசி விள‌ங்க‌ வைக்கும் திற‌மை என‌ ஏராள‌மான‌ மென் திற‌மைக‌ள் தேவை.

‘இவ‌ன் பேசிப் பேசியே ஊரை வித்துடுவான்’ என‌ உங்க‌ளை யாராவ‌து திட்டினால், உங்க‌ளுக்கு இந்த‌ வேலை ஒருவேளை செட் ஆக‌லாம் என‌ நினைத்துக் கொள்ளுங்க‌ள்.

 

Sony And Google Unveil Internet TV Set

5

வெப் டிசைனர்கள். ( Web Designers)

இணைய தளங்களை வடிவமைக்கும் பணி செய்பவர்கள் தான் வெப் டிசைனர்கள். நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவர்களுடைய பணி இருக்கும்.சில நிறுவனங்கள் வெப் டிசைனிங் பணியை முதன்மையாக வைத்துச் செயலாற்றுவதும் உண்டு.

கஸ்டமர்களுடைய தேவைக்கேற்ப அவர்களுடைய வலைத்தளங்களைப் புதிதாக வடிவமைப்பதோ, அல்லது இருக்கும் வலைப்பக்கங்களில் மாற்றங்களைச் செய்வதோ தான் இவர்களுடைய பணி. வலைத்தளங்களில் உள்ள கிராபிக்ஸ் வேலைகள் முதல், இணைய தளத்தின் செயல்பாடுகள் வரை இவர்களுடைய பணியில் அடங்கும்.

வெப் டிசைனர்களின் பணி பெரும்பாலும் வெப் டெவலப்பர்களுடன் இணைந்தே இருக்கும். இணைய தளத்தை வடிவமைப்பது டிசைனர்களின் பணி என்றால், அதன் பின்னணியில் இருக்கும் தகவல் பரிமாற்றம் செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவது இணைய தள டெவலப்பர்களின் பணியாக இருக்கும்.

வெப் டிசைனர்களின் தேவையும், முக்கியத்துவமும் இன்றைய ஸ்மார்ட் போன் உலகில் அதிகரித்திருக்கிறது. தொடுதிரைக்கேற்ற வலைத்தளங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எனவே டிசைனிங் வேலையில் விருப்பம் இருப்பவர்கள் தைரியமாக அந்தத் துறையில் கால் வைக்கலாம்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருப்பது சிறப்பானது என்றாலும் மற்ற பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கும் இங்கே வாய்ப்புகள் உண்டு. வெப் டிசைனிங் மீது ஆர்வமும், ரசனையும், விருப்பமும் இருக்க வேண்டியது அவசியம்.

 

மொபைல் டெவலப்பர்கள் (Mobile Developers)

இன்றைக்கு கணினிகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டு ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே இன்றைக்கு மொபைல் டெவலப்பர்கள், மொபைல் டெஸ்டர்கள் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

டேப்லெட்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கான மென்பொருள் கட்டுமானத்துக்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. எந்த கருவியில் வேண்டுமானாலும் இயங்கக் கூடிய கருவி சாரா மென்பொருட்கள் தயாரிப்பது ஒரு வகை. ஒவ்வொரு கருவிக்கும் தக்கபடியான மென்பொருட்களைத் தயாரிப்பது இன்னொரு வகை. இரண்டு வகையான பணிகளுக்கும் வரவேற்பு உண்டு.

அதே போல மொபைல் சார்ந்த சோதனைகளுக்கும் பல மென்பொருட்கள் உள்ளன, அவற்றைக் கற்று சான்றிதழ் பெறுவது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

மொபைல்களுக்கான ஆப்ஸ்களைத் தயாரிப்பது இன்றைக்கு மிகவும் பரபரப்பான ஒரு பணி. திறமை இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம். சம்பளமும் அதிகம், புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மன நிறைவும் கிடைக்கும்.

கணினி மென்பொருள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது மொபைல் டெவலப்பர்களுக்கான அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. மொபைல் டெவலப்மென்ட் அல்லது டெஸ்டிங் மென்பொருளில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாகும்.

நவீன தொழில்நுட்பங்கள் (Emerging Technologies )

எமர்ஜிங் டெக்னாலஜீஸ் எனும் பிரிவில் அதி நவீன தொழில் நுட்பங்கள் வருகின்றன. கணினி பட்டப்படிப்புடன் இத்தகைய ஒரு அதி நவீன ஏரியாவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருப்பது ஐடி துறையில் நுழைவதற்கான வாய்ப்பை வெகுவாக அதிகரிக்கும்.

கிளவுட் கம்யூட்டிங், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ட், ரோபோட்டிக்ஸ், மொபிலிடி போன்றவையெல்லாம் இந்த நவீன தொழில்நுட்பக் குடையின் கீழ் வருகின்றன. இவற்றைக் குறித்து தேடித் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வதும், அது சார்ந்த ஒரு சான்றிதழைப் பெறுவதும், செமினார்களில் பங்கு பெறுவதும் உங்களை அத்தகைய துறையில் பணிசெய்ய தகுதியுடையவர்களாக மாற்றும்.

கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது இதன் அடிப்படைத் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கற்றுக் கொள்ளும் ஆர்வமும், புதியவற்றில் பணி செய்யும் தேடலும் இருப்பவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு.

 

மெயின்ட‌னென்ஸ் அன்ட் ச‌ப்போர்ட் (Maintenance and Production Support )

மென்பொருளை உருவாக்குபவர்கள், அவற்றை தரப் பரிசோதனை செய்பவர்களைப் போல அந்த மென்பொருள் கஸ்டமரிடம் சென்றபிறகு அதைப் பராமரிப்பதும், அதில் வருகின்ற சிக்கல்களைக் கவனிப்பதும், சரி செய்வதும் இந்த குழுவினரின் பணியாக இருக்கும்.

டெவலப்பர், டெஸ்டர்களை விட சற்றே எளிமையான பணி. ஆனால் மிகவும் கவனமாக கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டிய பணி இது. பெரும்பாலும் இந்த துறையில் பகல் இரவு என மாறி மாறி உழைக்க வேன்டிய கட்டாயம் இருக்கும். காரணம், மென்பொருளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டி இருப்பது தான்.

கணினி பட்டம் இல்லாதவர்கள் கூட இந்த துறையில் நுழைய முடியும். ஏதோ ஒரு பட்டப்படிப்பு. கூடவே கணினி சார்ந்த ஒரு பயிற்சி இருந்தாலே இந்தத் துறையில் முயற்சி செய்யலாம்.

 

 

கணினி துறையில் இருக்கும் இந்த வேலைகளைப் பெறுவது எப்படி ? பெரும்பாலான நிறுவனங்கள் கீழ்க்கண்ட வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

 

  1. ரெஸ்யூம் அல‌ச‌ல்.

 

ஐடி நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ந‌ப‌ரைத் தேர்வு செய்ய‌ முத‌லில் வாசிப்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ ப‌யோடேட்டாவைத் தான். அந்த‌ ப‌யோடேட்டா ஒரு அழ‌கான‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ சுருக்க‌மாக‌, நேர்த்தியாக‌, சொல்ல‌ வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை ப‌ளிச் என‌ சொல்வ‌தாக‌ இருக்க‌ வேண்டும். முக்கியமாக முத‌ல் ப‌க்க‌த்தில் உங்க‌ள் ப‌ல‌ம், சான்றித‌ழ்க‌ள், ம‌திப்பெண் விப‌ர‌ம், விருதுக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிக‌ நேர்த்தியாக‌ எழுதி வையுங்க‌ள். வாசிப்ப‌வ‌ர்க‌ளை ப‌த்து முத‌ல், ப‌தினைந்து வினாடிக‌ளுக்குள் உங்க‌ள் ப‌யோடேட்டா க‌வ‌ர‌ வேண்டும் என்ப‌து அடிப்ப‌டை சிந்த‌னையாக‌ இருக்க‌ட்டும்.

 

  1. டெலிபோனிக் இன்ட‌ர்வியூ

 

ப‌யோடேட்டாவில் பிடித்த‌மான‌தைத் தேர்வு செய்த‌பின் நிறுவ‌ன‌ங்க‌ள் அந்த‌ ந‌ப‌ர்க‌ளை தொலைபேசியில் அழைத்து பேசுவ‌து வ‌ழ‌க்க‌ம். சில‌ துவ‌க்க‌ நிலை வேலைக‌ளுக்கு இது ந‌டைபெறாம‌லும் இருக்க‌லாம். ஒருவேளை போனில் பேச‌வேண்டிய‌ சூழ‌ல் உருவானால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள். டெலிபோனில் பேசியே ஆட்க‌ளை வேலைக்குத் தேர்வு செய்வ‌து ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். என‌வே டெலிபோனிக் இன்ட‌ர்வியூவில் அல‌ட்சிய‌மாய் இருக்க‌ வேண்டாம். உங்க‌ள் உட‌ல்மொழி அவ‌ர்களால் பார்க்க‌ முடியாது என்ப‌தால் குர‌ல் மிக‌த் தெளிவாக‌, நிதான‌மாக‌ இருக்க‌ட்டும். ச‌த்த‌ம் இல்லாத‌ சூழ‌லில் நின்று பேசுங்க‌ள். கேள்விக‌ளில் ச‌ந்தேக‌ம் இருந்தால் கேட்டு நிவ‌ர்த்தி செய்து கொள்ளுங்க‌ள். ப‌திலை சுருக்க‌மாக‌ச் சொல்லுங்க‌ள்.

 

  1. எழுத்துத் தேர்வு

 

இந்த‌ எழுத்துத் தேர்வு பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் உண்டு. அதுவும் ஆர‌ம்ப‌ நிலை ஊழிய‌ர்க‌ளுக்கு இது நிச்ச‌ய‌ம் உண்டு. இந்த‌ எழுத்துத் தேர்வு இர‌ண்டு க‌ட்ட‌மாக‌ இருக்கும். ஒன்று ஆப்டிடியூட் டெஸ்ட் என‌ப்ப‌டும் உங்க‌ளுடைய‌ சிந்த‌னைக் கூர்மையைச் சோதிக்கும் தேர்வு. இன்னொன்று தொழில்நுட்ப‌ அறிவைச் சோதிக்கும் தேர்வு. இர‌ண்டுக்குமான‌ மாதிரிக‌ள் இணைய‌த்தில் எக்க‌ச்ச‌க்க‌மாக‌ இருக்கின்ற‌ன‌. நிதான‌மாய்ப் ப‌யிற்சி எடுங்க‌ள்.

 

  1. குழு உரையாட‌ல்.

 

ஆங்கில‌த்தில் குரூப் டிஸ்க‌ஷ‌ன் என‌ அழைக்கப்படும் இந்த‌ உத்தி, இருக்கின்ற‌ பெரிய‌ குழுவிலிருந்து திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ளைப் பொறுக்கி எடுக்கும் எளிய‌ வ‌ழிமுறை. இந்த‌ குழு உரையாட‌லில் தைரிய‌மாக‌, தெளிவாக‌ பேச‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். அத‌ற்கு ந‌ல்ல‌ க‌ம்யூனிகேஷ‌ன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். கொடுத்திருக்கும் த‌லைப்பில் பேசுவ‌து, குழுவின‌ரோடு க‌ல‌ந்து பேசுவ‌து, உட‌ல் மொழியை பாசிடிவாக‌ வைத்துப் பேசுவ‌து போன்ற‌வையெல்லாம் உங்க‌ளுக்கு ஸ்பெஷ‌ல் ம‌திப்பெண்க‌ளைப் பெற்றுத் த‌ரும். உங்க‌ள் தைரிய‌ம், மொழி ஆளுமை, த‌லைமைப் ப‌ண்பு, குழுவோடு இணைந்து செய‌ல்ப‌டும் வித‌ம் இவையே பெரிதும் க‌வ‌னிக்க‌ப்ப‌டும். என‌வே தெரியாத‌ த‌லைப்பென்றால் கூட‌ இந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு பேசுங்க‌ள்.

 

  1. நேர்முக‌த் தேர்வு

 

மிக‌ மிக‌ முக்கிய‌மான‌ க‌ட்ட‌ம் இந்த‌ நேர்முக‌த் தேர்வு. இங்கே நீங்க‌ள் த‌ன்ன‌ம்பிக்கையாய்க் காட்சிய‌ளிக்க‌ வேண்டிய‌து மிக‌ அவ‌சிய‌ம். நேர்த்தியான‌ ஆடை. நேர‌ம் த‌வ‌றாமை. ப‌த‌ட்ட‌மில்லாத‌ ப‌தில்க‌ள் இவையெல்லாம் அவ‌சிய‌ம். நேர்முக‌த் தேர்வு என்ப‌து போலீஸ் குற்ற‌வாளியை விசாரிக்கும் இட‌ம‌ல்ல‌. உங்க‌ள் திற‌மை நிர்வாக‌த்துக்குப் ப‌ய‌ன்ப‌டுமா என்ப‌தை நிர்வாக‌ம் பார்ப்பதற்கும், இந்த‌ நிறுவ‌ன‌ம் ந‌ம‌க்கு ச‌ரிப்ப‌ட்டு வ‌ருமா என‌ நாம் அறிந்து கொள்வ‌த‌ற்குமான‌ ஒரு உரையாட‌ல் என்றே வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌ ம‌ன‌நிலையில் இய‌ல்பாக‌ப் பேசுங்க‌ள்.

  1. ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூ.

மிக‌ எளிதாக‌வும், அதே நேர‌ம் க‌ணிக்க‌ முடியாத‌தாக‌வும் ஹைச்.ஆர் இன்ட‌ர்வியூக்க‌ள் இருக்கும். இங்கே தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ கேள்விக‌ள் ஏதும் இருக்காது. இங்கே உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ள் தான் சோதிக்க‌ப்ப‌டும். நீங்க‌ள் நேர்மையான‌ ந‌ப‌ரா ?, நிறுவ‌ன‌த்தின் வ‌ள‌ர்ச்சியில் உத‌வுவீர்க‌ளா ? தெளிவான‌ கொள்கை வைத்திருக்கிறீர்க‌ளா ? வாழ்க்கையில் எதையெல்லாம் முத‌ன்மைப்ப‌டுத்துகிறீர்க‌ள் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை நேர‌டியாக‌க் கேட்டும் கேட்காம‌லும் இங்கே க‌ண்ட‌றிவார்க‌ள். குணாதிச‌ய‌ம் உங்க‌ளோடு பின்னிப் பிணைந்த‌து. அதைப் பாதுகாத்துக் கொள்ளுங்க‌ள்.

இந்த‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொள்ளுங்க‌ள்.

வெற்றி வ‌ச‌மாகும். வாழ்த்துக‌ள்.

 

 

 

செல்ஃபி ! : Selfie ( Daily Thanthi Article )

kid
இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள்  செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌.

பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்ஃபி த‌னிய‌றைக‌ள் வ‌ரை நீள்கிற‌து. போனைக் கையில் எடுத்து வித‌வித‌மான‌ முக‌பாவ‌ங்க‌ளுட‌ன் த‌ங்க‌ளைக் கிளிக்கிக் கொள்ளும் க‌லாச்சார‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் காண‌ப்ப‌டுகிற‌து.

“கேம‌ரால‌ த‌ன்னைத் தானே போட்டோ எடுக்கிற‌துல‌ என்ன‌ பிர‌ச்சினை” என்ப‌து தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ளின் ம‌ன‌தில் எழும் கேள்வியாக‌ இருக்கும். ஆனால் அது அத்த‌னை எளிதில் க‌ட‌ந்து போக‌க் கூடிய‌ விஷ‌ய‌ம் அல்ல‌ என்கிறார் உள‌விய‌லார் டேவிட் வேல். அத‌ற்கு அவ‌ர் “பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்ட‌ர் (Body dysmorphic disordeர்) நோயை சுட்டிக் காட்டுகிறார்.

பி.டி.டி என்ப‌து “தான் அழ‌காய் இல்லை, த‌ன‌க்கு ஏதோ ஒரு குறை இருக்கிற‌து என‌ ஒருவ‌ர் ந‌ம்புவ‌து. த‌ன்னுடைய‌ முக‌ம் ச‌ரியாக‌ இல்லை, த‌லை முடி ச‌ரியாக‌ இல்லை, மூக்கு கொஞ்ச‌ம் ச‌ப்பை, காது கொஞ்ச‌ம் பெரிசு என்றெல்லாம் த‌ன்னைப் ப‌ற்றி தாழ்வாய்க் க‌ருதிக் கொள்வ‌து. இந்த‌ பாதிப்பு செல்போனின் செல்ஃபி எடுத்துக் குவிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் தான் அதிக‌மாய் இருக்கிற‌து என்கிறார் அவ‌ர்.

இந்த‌ குறைபாடு இருப்ப‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து த‌ங்க‌ளை செல்ஃபி எடுத்துக் கொண்டே இருப்பார்க‌ள். அப்புற‌ம் அதை எடிட்ட‌ரில் போட்டு ச‌ரி செய்து பார்ப்பார்க‌ள், மீண்டும் எடுப்பார்க‌ள், மீண்டும் ட‌ச் அப் செய்வார்க‌ள். இப்ப‌டியே அவ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை ஓடும். இது நாளொன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலையிலிருந்து தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்ப‌வ‌ர்க‌ள் எனும் நிலை வ‌ரைக்கும் நீள்கிற‌து.

“டானி பௌமேன்” எனும் பதின் வயது மாணவர் இந்த‌ பாதிப்பின் உச்ச‌த்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தின‌மும் ப‌த்து ம‌ணி நேர‌ம் செல்ஃபி எடுக்க‌வே செல‌வ‌ழிப்பாராம். ஒரு ப‌க்கா போட்டோ எடுத்தே தீருவேன் என‌ தொட‌ர்ந்து ப‌ட‌ம் பிடித்துப் பிடித்து ப‌ள்ளிக்கூட‌த்துக்கே போவ‌தை நிறுத்தி விட்டார்.ஒரு நாள் இருநாள் அல்ல‌, ஆறு மாத‌ கால‌ங்க‌ள் இப்ப‌டியே போயிருக்கிற‌து. இப்ப‌டியே 12 கிலோ எடையும் குறைந்திருக்கிற‌து. ஆனாலும் அவ‌ருக்கு “க‌ட்சித‌மான‌ செல்ஃபி” சிக்க‌வில்லை !

க‌டைசியில் ஒருநாள் “ஒரு மிக‌ச் ச‌ரியான‌ செல்ஃபி கிடைக்க‌வே கிடைக்காது” எனும் முடிவுக்கு வ‌ந்திருக்கிறார். அந்த‌ முடிவு அவ‌ரை த‌ற்கொலை முய‌ற்சிக்கு இட்டுச் செல்ல‌, ப‌த‌றிப்போன‌ பெற்றோர் அவ‌ரை உள‌விய‌லார் டேவிட் வேலிட‌ம் கொண்டு வ‌ந்திருக்கிறார்க‌ள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் “பி.டி.டி” நோயாளிகளில்,  66% பேர் செல்ஃபி பாதிப்புட‌ன் இருக்கிறார்க‌ள் என்கிறார் அவ‌ர். செல்ஃபி எடுக்க‌ வேண்டும் என‌ உள்ளுக்குள் ப‌ர‌ப‌ர‌வென‌ ம‌ன‌ம் அடித்துக் கொள்வ‌து உள‌விய‌ல் பாதிப்பு என‌ அடித்துச் சொல்கிறார் அவ‌ர்.

செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களிடம் உற‌வுச் சிக்க‌ல்க‌ளும் எழுகின்ற‌ன‌ என ஆய்வுக‌ள் சொல்கின்ற‌ன‌. “டேக‌ர்ஸ் டிலைட்” எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிற‌து. அதிக‌மாய் செல்ஃபி எடுத்து ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் போடுவோர்க‌ள் ச‌க‌ ம‌னித‌ உற‌வுக‌ளில் ப‌ல‌வீன‌மாய் இருப்பார்க‌ள் என‌ அந்த‌ ஆய்வு கூறுகிற‌து.

அதிக‌மாக‌ செல்ஃபி எடுக்கும் ம‌ன‌நிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ.(APA). இதை அவ‌ர்க‌ள் செல்ஃபிட்டீஸ் என‌ பெய‌ரிட்டு அழைக்கின்ற‌ன‌ர். இந்த செல்ஃபிட்டிஸ் கள் மூன்று வகைப்படுகின்றனர்.

சில‌ஒரு நாள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, அவர்கள் ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் பார்ட‌ர்லைன் செல்ஃபிட்டிஸ் !

சில‌ர் குறைந்த‌ ப‌ட்ச‌ம் மூன்று செல்ஃபிக்க‌ளை எடுத்து, மூன்றையுமே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்து எத்த‌னை லைக் வ‌ருகிற‌து, யார் என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதைக் க‌வ‌னித்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு அக்யூட் செல்ஃபிட்ஸ் என‌ பெய‌ர்.

சீரிய‌ஸ் வ‌கை செஃபிட்டிஸ் க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் ! இவ‌ர்க‌ள் எப்போதும் செல்ஃபி எடுத்து அதை அப்ப‌டியே ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள், குழுக்க‌ளில் ப‌திவு செய்து கொண்டே இருப்பார்க‌ள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்ஃபி எடுப்ப‌தே நோய் என்று பதட்டப்படத் தேவையில்லை. அள‌வுக்கு மிஞ்சினால் செல்ஃபியும் ந‌ஞ்சு என்ப‌து ம‌ட்டுமே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

இந்த‌ செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் ஏதோ க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளில் தோன்றிய‌து என்று தான் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் நினைக்கிறார்க‌ள். ஆனால் இந்த‌ செல்பி ஆர‌ம்பித்து 175 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேல் ஆகிவிட்ட‌து என்ப‌து தான் விய‌ப்பூட்டும் விஷ‌ய‌ம். !

ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌தா !! அது தான் உண்மை. முத‌ன் முத‌லாக‌ செல்ஃபி எடுக்க‌ப்ப‌ட்ட‌ ஆண்டு 1839. எடுத்த‌வ‌ர் பெய‌ர் ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸ்

Week 2

kid

உல‌கின் முத‌ல் செல்ஃபி எடுத்த‌வ‌ர் எனும் பெருமை இப்போதைக்கு ராப‌ர்ட் க‌ர்னேலிய‌ஸிட‌ம் தான் இருக்கிற‌து. 1839ம் ஆண்டு அவர் முதல் செல்ஃபியை எடுத்தார். கேம‌ராவை ஸ்டான்டில் நிற்க‌ வைத்துவிட்டு அத‌ன் முன்ப‌க்க லென்ஸ் மூடியைத் திற‌ந்தார். பிற‌கு ஓடிப் போய் கேம‌ராவின் முன்னால் அசையாம‌ல் ஒரு நிமிட‌ம் நின்றார். பிற‌கு மீண்டும் போய் கேம‌ராவின் கதவை மூடினார். பின்ன‌ர் அந்த‌ பிலிமை டெவ‌ல‌ப் செய்து பார்த்த‌போது கிடைத்த‌து தான் உல‌கின் முத‌ல் செல்ஃபி !

ஆனால் முத‌ன் முத‌லில் செல்ஃபி எனும் வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌வ‌ர் எனும் பெருமை அவ‌ருக்குக் கிடைக்க‌வில்லை. அது நாத‌ன் ஹோப் என்ப‌வ‌ருக்குக் கிடைத்த‌து. 2002ம் ஆண்டு அவ‌ருக்கு ஒரு சின்ன‌ விப‌த்து. விப‌த்தில் அடிப‌ட்ட‌ உத‌டுக‌ளோடு க‌ட்டிலில் ப‌டுத்திருந்த‌ அவ‌ர் த‌ன‌து அடிப‌ட்ட‌ உத‌டைப் ப‌ட‌ம்பிடித்தார். அதை இணைய‌த்தில் போட்டார். “ஃபோக‌ஸ் ச‌ரியா இல்லாத‌துக்கு ம‌ன்னிச்சுக்கோங்க‌, இது ஒரு செல்ஃபி, அதான் கார‌ண‌ம்” என்று ஒரு வாச‌க‌மும் எழுதினார். ஆனால் ச‌த்திய‌மாக‌ அந்த‌ வார்த்தை இவ்வ‌ள‌வு தூர‌ம் பிர‌ப‌ல‌மாகும் என‌ அவ‌ரே நினைத்திருக்க‌ வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த‌ வார்த்தை பிர‌ப‌ல‌மாக‌ ஆர‌ம்பித்த‌தும் அதை ஆங்கில‌ அக‌ராதியிலும் சேர்த்தார்க‌ள். “ஒருவ‌ர் டிஜிட‌ல் கேம‌ரா மூல‌மாக‌வோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்ப‌க்க‌ கேம‌ரா போன்ற‌ எத‌ன் மூல‌மாக‌வோ, த‌ன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்ப‌ட‌ம்” என‌ இத‌ற்கு ஒரு விள‌க்க‌த்தையும் அக‌ராதி கொண்டிருக்கிற‌து.

2012ம் ஆண்டு உல‌க‌ப் புக‌ழ்பெற்ற‌ டைம் ப‌த்திரிகை, “2012ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று செல்ஃபி என்றது”.  2013ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் அக‌ராதி “செல்ஃபியே இந்த‌ ஆண்டின் புக‌ழ்பெற்ற‌ வார்த்தை” என‌ அறிவித்த‌து.

ஆஸ்திரேலிய‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் முத‌ன் முத‌லில் இந்த‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் இந்த‌ வார்த்தையின் மூல‌ம் ஆஸ்திரேலியா என்று ப‌திவான‌து. 10 வ‌ய‌துக்கும் 24 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ளில் 30 ச‌த‌வீத‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் சேர்கின்ற‌ன‌ என்கிற‌து ஒரு புள்ளி விவ‌ர‌ம்.

செல்ஃபியின் புக‌ழ் ப‌ர‌வுவ‌தைக் கேள்விப்ப‌ட்ட‌தும் செல்ஃபி என்றொரு ஆப்‍ ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ந்த‌து. முன்ப‌க்க‌ கேம‌ரா மூல‌மாக‌ எடுக்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே ப‌கிர‌ முடியும் என்ப‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம். ஒரு செல்ஃபிக்கு க‌மென்ட் கொடுக்க‌ விரும்புப‌வ‌ர்க‌ள், இன்னொரு செல்ஃபியைத் தான் கொடுக்க‌ முடியும். வேறு எதையும் எழுத‌ முடியாது. இந்த‌ ஆப்ளிகேஷ‌ன் ப‌தின் வ‌ய‌தின‌ரிடையே தீயாய்ப் ப‌ர‌விய‌து !

செல்ஃபி இப்ப‌டி இள‌சுக‌ளின் இத‌ய‌ங்க‌ளில் ப‌ற்றி எரிந்து கொண்டிருந்த‌ போது குர‌ங்கு எடுத்த‌ செல்ஃபி ஒன்று க‌ட‌ந்த‌ ஆண்டு மிக‌ப்பெரிய‌ பேசுபொருளாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க்கார‌ர் டேவிட் ஸ்லேட்ட‌ருக்குச் சொந்த‌மான‌ கேம‌ராவில் ப‌திவான‌ அந்த‌ ப‌ட‌த்தை, இணைய‌ த‌ள‌ங்க‌ள் ப‌திவு செய்திருந்த‌ன. இது எனது காப்புரிமை, இதை இணையங்கள் பயன்படுத்தியது தவறு. இத‌னால் த‌ன‌க்கு பத்தாயிர‌ம் ப‌வுண்ட் ந‌ஷ்ட‌ம் என‌ வ‌ழ‌க்குப் ப‌திவு செய்தார் ஸ்லேட்ட‌ர்.

நீதிம‌ன்ற‌மோ இந்த‌ வ‌ழ‌க்கை விசித்திர‌மாய்ப் பார்த்த‌து. க‌டைசியில் அல‌சி ஆராய்ந்து ஒரு தீர்ப்பைச் சொன்னார்க‌ள். “வில‌ங்குக‌ள் எடுக்கும் புகைப்ப‌ட‌த்துக்கு ம‌னித‌ர்க‌ள் சொந்த‌ம் கொண்டாட‌ முடியாது”. அப்ப‌டி வில‌ங்கு செல்ஃபியும் உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌து சுவார‌ஸ்ய‌மான‌ க‌தை.

எது எப்ப‌டியோ ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளுக்குச் ச‌ரியான‌ தீனி போட்டுக்கொண்டிருப்ப‌வை இந்த‌ செல்ஃபிக்க‌ள் தான். இன்ஸ்டாக்ராம் எனும் ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளை மைய‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌து. அதில் 5.3 கோடி புகைப்ப‌ட‌ங்க‌ள் செல்ஃபி வ‌கைய‌றாவில் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌. ஃபேஸ்புக், டுவிட்ட‌ர் போன்ற‌ த‌ள‌ங்க‌ளிலும் செல்ஃபி ப‌ட‌ங்க‌ளும், குறிப்புக‌ளும் எக்க‌ச்ச‌க்க‌ம்.

86 வ‌து ஆஸ்க‌ர் விருது விழாவில் க‌லைஞ‌ர்க‌ளுட‌ன் எல‌ன் டிஜென‌ர்ஸ் எடுத்த‌ செல்ஃபி ஒன்று உல‌கிலேயே அதிக‌ முறை ரீ‍டுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ புகைப்ப‌ட‌ம் எனும் பெய‌ரைப் பெற்ற‌து. 3.3 மில்லிய‌ன் முறை அது ரீடுவிட் செய்ய‌ப்ப‌ட்ட‌து !

இள‌சுக‌ளின் பிரிய‌த்துக்குரிய‌ விஷ‌ய‌ம் எனும் நிலையிலிருந்து செல்ஃபி ம‌ற்ற‌ நிலைக‌ளுக்கும் வெகு விரைவில் ப‌ர‌வியிருப்ப‌தையே இது காட்டுகிற‌து. நெல்ச‌ன் ம‌ண்டேலாவின் நினைவிட‌த்தில் உல‌க‌த் த‌லைவ‌ர்க‌ளுட‌ன் ஒபாமா எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், த‌ன‌து அலுவ‌ல‌க‌ அதிகாரிக‌ளுட‌ன் சுவிஸ் அர‌சு எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் என‌ செல்ஃபியின் த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளுக்கும் ப‌ர‌விவிட்ட‌ன‌. எல்லாவ‌ற்றுக்கும் முத்தாய்ப்பாய் ச‌மீப‌த்தில் போப் ஆண்ட‌வ‌ரும் செல்ஃபிக்குள் சிக்கிக் கொண்ட‌து விய‌ப்புச் செய்தியாய்ப் பேச‌ப்ப‌ட்ட‌து !

ப‌க்க‌த்து வீட்டுப் பைய‌ன் முத‌ல், போப் ஆண்ட‌வ‌ர் வ‌ரை பாரபட்சமில்லாமல் செல்ஃபி முகங்களை கேம‌ராக்க‌ள் ப‌திவு செய்திருக்கின்ற‌ன‌. 47 ச‌த‌வீத‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் தங்களை செல்ஃபி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளசுகள் வாரம் தோறும் தவறாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்கிறது புள்ளி விவரம் ஒன்று ! அதிலும் ஆண்க‌ளை விட‌ செல்ஃபி மோக‌ம் பெண்க‌ளைத் தான் அதிக‌ம் பிடித்திருக்கிற‌தாம்.

பிலிப்பைன்ஸ் ந‌க‌ர‌ம் தான் செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ளால் நிர‌ம்பி வ‌ழிகிற‌தாம். உல‌கிலேயே ந‌ம்ப‌ர் 1 செல்ஃபி சிட்டி எனும் பெய‌ர் அத‌ற்குக் கிடைத்திருக்கிற‌து.

செல்ஃபியின் ப‌ய‌ன்பாடும், சுவார‌ஸ்ய‌ங்க‌ளும் உல‌கெங்கும் ப‌ர‌வியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ப‌து ப‌த‌ற‌டிக்கும் செய்தியாகும்.

Week 3

kid

செல்ஃபி என்றாலே சுவார‌ஸ்ய‌ம் என‌ நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அதில் உயிரைப் ப‌றிக்கும் ஆப‌த்தும் நிர‌ம்பியிருக்கிற‌து என்பது தான்  ப‌த‌ற‌டிக்கும் செய்தி.

செல்ஃபிக்கு ர‌சிக‌ர்க‌ளாக‌ மாறியிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் இள‌ வ‌ய‌தின‌ர் தான். அவ‌ர்க‌ளுடைய‌ இள‌ இர‌த்த‌ம் துடிப்பான‌து. அத‌னால் த‌ங்க‌ள் செல்ஃபியில் அதிர‌டியான‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவு செய்ய‌ வேண்டும் என‌ அவ‌ர்க‌ள் துடிக்கிறார்க‌ள். ப‌ல‌ வேளைக‌ளில் அது ஆப‌த்தான‌தாக‌ முடிந்து விடுகிற‌து.

ஸெனியா ப‌தினேழு வ‌ய‌தான‌ ப‌தின்ப‌ருவ‌ப் பெண். செல்ஃபி மோக‌ம் பிடித்து இழுக்க‌ 30 அடி உய‌ர‌ ரெயில்வே பால‌த்தில் ஏறினாள். ஒரு அழ‌கான‌ செல்ஃபி எடுத்தாள். துர‌திர்ஷ்ட‌ம் அவ‌ளுடைய‌ காலை வ‌ழுக்கி விட‌ கீழே விழுந்த‌வ‌ளுக்கு 1500 வாட்ஸ் மின்சார‌ வ‌ய‌ர் எம‌னாய் மாறிய‌து. ஆப‌த்தான‌ செல்ஃபி அவ‌ளுடைய‌ ஆயுளை முடித்து வைத்த‌து ! செல்ஃபிக்குப் பலியான பலரில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே.

காட்டுக்குள்ளே ஆப‌த்தான வில‌ங்குக‌ளைப் பார்க்கும்போது அதைப் பின்ன‌ணியில் விட்டு செல்ஃபி எடுப்ப‌து, டொர்னாடோ சுழ‌ற்காற்று சுழ‌ற்றிய‌டிக்கும் போது அத‌ன் முன்னால் நின்று செல்ஃபி எடுப்ப‌து, வேகமாக ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று படம் எடுப்பது, உய‌ர‌மான‌ இட‌ங்க‌ளில் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம‌ர‌ண‌ம் எனும் சூழ‌லில் ப‌ட‌ம் புடிப்பது, எரிமலைக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டே கிளிக்குவது என‌ செல்ஃபியை வைத்து ஆப‌த்தை அழைப்ப‌து இன்றைக்குப் ப‌ர‌வி வ‌ருகிற‌து.

கார‌ண‌ம் அத‌ற்குக் கிடைக்கும் ஆத‌ர‌வு. ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் பகிரும்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ லைக் வாங்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே உயிரைப் ப‌ண‌ய‌ம் வைத்து இத்த‌கைய‌ விளையாட்டுக‌ளில் ஈடுப‌டுகின்ற‌னர்.

இப்ப‌டி எடுக்க‌ப்ப‌டும் செல்ஃபிக்க‌ள் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு என்ப‌து இன்னும் ஊக்க‌ம் ஊட்டுகிற‌து. ரியோடி ஜெனீரே இயேசு சிலையின் த‌லையின் நின்று லீ தாம்ச‌ன் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம், போர்விமான‌த்திலிருந்து விமானி ஒருவ‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌ர்வ‌தேச‌ வான்வெளி நிலைய‌த்திலிருந்து விண்வெளி வீர‌ர் எடுத்த‌ செல்ஃபி, ச‌வுத் வ‌ங்கி உச்சியில் தொங்கியப‌டி கிங்ஸ்ட‌ன் எடுத்த‌ செல்பி என‌ ப‌த‌ற‌டிக்கும் செல்ஃபிக்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ப் பெரிது.

மொபைல்க‌ளில் எடுக்க‌ப்ப‌டும் புகைப்ப‌ட‌ங்க‌ளால் பாதுகாப்புக்கு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் என‌ எச்ச‌ரிக்கின்ற‌து அமெரிக்க‌ காவ‌ல்துறை. உங்க‌ளுடைய‌ ஒரு செல்ஃபியை வைத்துக் கொண்டு நீங்க‌ள் எங்கே இருக்கிறீர்க‌ள் என்பதை ஒருவர் துல்லிய‌மாய்க் க‌ண்டுபிடித்துவிடும் ஆப‌த்து உண்டு.

உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் உங்க‌ள் நான்கு தோழிய‌ருட‌ன் க‌ண்காணாத‌ காட்டுப் ப‌குதியில் இருக்கிறீர்க‌ள் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள். ஐந்து தோழிய‌ரும் சேர்ந்து ஒரு செல்ஃபி கிளிக்குகிறீர்க‌ள். பின்ன‌ணியில் எதுவுமே இல்லை. அதை முகநூலில் போடுகிறீர்கள். அந்த‌ புகைப்ப‌ட‌த்தை வைத்துக் கொண்டு ஒருவ‌ர் உங்க‌ள் இருப்பிட‌த்தை க‌ண்டுபிடித்து விட‌ முடியுமாம். அதெப்ப‌டி ?

ஸ்மார்ட் போன்க‌ளில் ஜி.பி.எஸ் பின்ன‌ணியில் இய‌ங்கிக் கொண்டே இருக்கும். அது உங்க‌ளுடைய‌ இருப்பிட‌த்தை உங்கள் புகைப்ப‌ட‌ங்க‌ளில் ரகசியக் குறியீடுகளாகப் ப‌திவு செய்து வைத்துக் கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளும். இதை ஜியோ டேக் என்பார்கள்.  அந்த‌ப் புகைப்ப‌ட‌த்தை ஒருவ‌ர் ட‌வுன்லோட் செய்து அத‌ற்கென்றே இருக்கும் சில‌ மென்பொருட்க‌ளில் இய‌க்கும் போது அந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌ விலாச‌ம் கிடைத்து விடுகிற‌து. சில‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள் கூட‌ இந்த‌ டீகோடிங் வேலையைச் செய்து த‌ருகின்ற‌ன‌.

“வீட்ல‌ த‌னியா போர‌டிக்குது” என‌ நீங்க‌ள் ஒரு செல்ஃபி போட்டால் உங்க‌ள் விலாச‌த்தைக் க‌ண்டுபிடித்து ஒருவ‌ர் உங்க‌ளை தொந்த‌ர‌வு செய்யும் சாத்திய‌ம் உண்டு என்ப‌து புரிகிற‌த‌ல்ல‌வா? ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌சீக‌ர‌ அழைப்புக‌ள‌ல்ல‌வா. இனிமேல் அவர்கள் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களை ஃபாலோ செய்யத் தேவையில்லை, உங்கள் சமூக வலைத்தள புகைப்படங்களை கவனித்து வந்தாலே போதும், உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கிடைத்து விடும். என‌வே ஜி.பி.எஸ் “ஆஃப்” செய்து வைத்து விட்டு மட்டுமே புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுங்க‌ள் என‌ அவ‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்ற‌ன‌ர்.

இத்த‌கைய‌ ஆப‌த்துக‌ளைப் ப‌ட்டிய‌லிட்டாலும், ம‌ருத்துவ‌த்துறையில் இதை ஒரு பாசிடிவ் விஷ‌ய‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ளும் உண்டு. குறிப்பாக‌ “செல்ஃபி வீடியோ” வை ம‌ருத்துவ‌த்துக்காக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கின்ற‌ன‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ருடைய‌ பேச்சு, அசைவு போன்ற‌வ‌ற்றைப் ப‌திவு செய்து அதை ம‌ருத்துவ‌ ஆய்வுக்கு உட்ப‌டுத்தி அத‌ன்மூல‌ம் ஒருவ‌ருடைய‌ குறைபாடுக‌ளைக் க‌ண்டுபிடித்துச் ச‌ரிசெய்யும் முறை இப்போது வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.

இதையே பேச்சுக்க‌லையை வ‌ள‌ர்க்க‌ விரும்புப‌வ‌ர்க‌ளும் பயன்படுத்தலாம். குறிப்பாக‌ ஒருவ‌ருடைய‌ மொழி உச்ச‌ரிப்பு, ச‌த்த‌ம், தொனி, தெளிவு போன்ற‌ அனைத்தையும் செல்ஃபி வீடியோவில் ப‌திவு செய்து அத‌ன் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து பேச்சை எந்த‌ வித‌த்தில் மாற்ற‌ வேண்டும் என்ப‌தைக் க‌ண்டு பிடித்து ச‌ரி செய்ய‌ முடியும்.

இப்போதெல்லாம் வ‌ச‌தியாக‌ செல்ஃபி எடுக்க‌ “செல்ஃபி ஸ்டிக்” கிடைக்கிற‌து. நீள‌மான‌ குச்சி போன்ற‌ க‌ருவியில் போனை மாட்டி விட்டு செல்ஃபி எடுக்க‌லாம். அந்த‌ குச்சியின் முனையில் இருக்கும் ரிமோட் ப‌ட்ட‌னை அமுக்கினால் செல்ஃபி ரெடி. இத‌ன் மூல‌ம் குழுவின‌ராக‌ செல்ஃபி எடுப்ப‌து எளிதாகிவிடுகிற‌து. 2000 ர‌ஃபிக்க‌ள் நியூயார்க் ந‌க‌ரில் குழுமியிருந்த‌போது எடுக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் செல்ஃபி மிக‌ப்பிர‌ப‌ல‌ம். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ செல்ஃபி குச்சியின் நீள‌ம் முப்ப‌து அடி !!!

செல்ஃபியின் மூல‌ம் பெரிய‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு கூட‌ க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து ! த‌ன‌து ந‌ண்ப‌னையே கொலை செய்து, அந்த‌ உட‌லுட‌னே நின்று செல்ஃபி எடுத்துக் கொண்ட‌ ஒரு சைக்கோ கொலையாளி சிக்கினான். அவ‌ன் அந்த‌ செல்ஃபி எடுக்காம‌ல் இருந்திருந்தால் ஒருவேளை சிக்காம‌லேயே போயிருப்பான்.

இப்ப‌டி குற்ற‌ம் செய்து விட்டு செல்ஃபி எடுத்துச் சிக்கிய‌ ப‌ல‌ரின் சுவார‌ஸ்ய‌க் க‌தைக‌ள் காவ‌ல்துறை அறிக்கைக‌ளில் இருக்கின்ற‌ன‌.

Week :4

 

kid

செல்ஃபி எடுப்ப‌து முன் கால‌த்தில் மிக‌ப்பெரிய‌ ச‌வாலான‌ விஷ‌ய‌மாய் இருந்த‌து. புகைப்ப‌ட‌க் க‌லைக்கு முன்பு த‌ன்னைத் தானே ப‌ட‌ம் வ‌ரைந்து கொள்வதை வான்கோ உட்ப‌ட‌ ப‌ல‌ ஓவிய‌ர்க‌ள் செய்திருந்த‌ன‌ர். இவ‌ற்றை ஒருவ‌கையில் செல்ஃபி ஓவிய‌ம் என‌ வ‌கைப்ப‌டுத்த‌லாம்.

கால‌ங்க‌ள் க‌ட‌ந்து, கேம‌ராக்க‌ளின் அறிமுக‌ம் வ‌ந்த‌பின் அவை அவ்வ‌ப்போது ஆங்காங்கே நிக‌ழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. உட‌ன‌டி பிரிண்ட் போட்டுத் த‌ரும் போல‌ராய்ட் கேம‌ராக்க‌ள் வ‌ந்த‌பின் செல்ஃபிக‌ள் எடுப்ப‌து கொஞ்ச‌ம் எளிதாக‌ மாறிப் போன‌து.

இன்றைய‌ மொபைல் போன் கேம‌ராக்க‌ள் இந்த‌ செல்ஃபி எடுப்ப‌தை மிக‌வும் எளிதாக்கிய‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ச‌க‌ட்டு மேனிக்கு செல்ஃபி எடுத்துத் த‌ள்ளுவ‌தையும் சாத்திய‌மாக்கியிருக்கிற‌து. அதுவும் செல்போனில் முன்ப‌க்க‌க் கேம‌ரா வ‌ந்த‌பின் செல்ஃபிக்க‌ள் சிற‌குக‌ட்டிப் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்திருக்கின்ற‌ன‌.

செல்ஃபிக்க‌ளின் அதிக‌ரிப்பு அதை அதிக‌மாய்ப் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளிடையே அதீத‌ த‌ற்பெருமை, த‌ன்னைப் ப‌ற்றி மிக‌ உயர்வாய் நினைத்த‌ல், அடுத்த‌வ‌ர்க‌ளை விட‌ தான் உய‌ர்ந்த‌வ‌ன் எனும் நினைப்பு போன்ற‌வை அதிக‌ரிக்கும் என‌ ஆராய்ச்சியாள‌ர் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் தெரிவிக்கிறார். இதை ஆங்கில‌த்தில் ந‌ர்ஸிசிச‌ம் (Narcissism) என்கின்ற‌ன‌ர்.

இதன் நேர் எதிராக, செல்ஃபிகளை எடுத்து எடுத்து தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கிக் கொள்ளும் ‘செல்ஃப் அப்ஜக்டிஃபிகேஷன்’ பற்றியும் அவர் பேசத் தவறவில்லை. தான் அழகாக இல்லை எனும் எண்ணம் பெண்களுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்பது தான் பொதுப்படையான சிந்தனை. ஆனால் அந்த எண்ணம் ஆண்களுக்குள்ளும் குறைவின்றி இருக்கிறது என்பதை இவருடைய ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது. இது பால் வேறுபாடின்றி அனைவரையும் மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடும் என்பது தான் கவலைக்குரிய செய்தி.

செல்ஃபி ப‌ழ‌க்க‌ம் பெண்களிடம் அதிக‌மாய் இருந்தாலும் ஆண்கள் இதில் ச‌ற்றும் விதிவில‌க்க‌ல்ல‌ என‌ நிரூபிப்ப‌த‌ற்காக‌ அவ‌ர் ஆண்க‌ளை ம‌ட்டுமே வைத்து இந்த ஆய்வை ந‌ட‌த்தினார் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

கையில் கேமரா வைத்திருக்கும் பதின் வயதுப் இளம் பெண்களில் 91% பேர் ஏற்கனவே ஒரு செல்ஃபியாவது எடுத்திருப்பார்கள் என்கிறது பி.இ.டபிள்யூ ஆய்வு ஒன்று. தாங்க‌ள் எடுக்கும் தங்களுடைய செல்ஃபியை ரசிக்கும் பெண்களில் 53% பேர் பிறர் தங்களை எடுக்கும் செல்ஃபிகளை அவ்வளவாய் ரசிப்பதில்லையாம்.

தாங்கள் அழகாய் இல்லை என செல்ஃபியின் மூலம் முடிவுகட்டிவிடும் வெளிநாட்டுப் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரிகளைச் சரணடைகிறார்கள். தங்களிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், அவர்கள் செல்ஃபியைக் காரணம் காட்டுவதாகவும் 30% அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜன்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜரி பதிவு செய்திருக்கிறது.

இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ, இணைய தளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும் போது அகப்படும் உங்களுடைய புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முடிவாக ஒரு சில விஷயங்களை மனதில் கொண்டால் செல்ஃபி அனுபவம் இனிமையாய் அமையும்.

சமூக வலைத்தளங்களில் செல்ஃபி போடுவதொன்றும் சாவான பாவமில்லை, ஆனால் அந்தப் புகைப்படங்களோ, அதற்கு வருகின்ற விமர்சனங்களோ தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யக் கூடாது. அந்த மன உறுதி இல்லை என தோன்றும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களை விட்டு விலகியே இருப்பது பாதுகாப்பானது !

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பானவை, நம் நண்பர்கள் மிகவும் ரகசியம் காப்பவர்கள் எனும் தவறான எண்ணம் வேண்டவே வேண்டாம். ரகசியம் காத்தல் நம் கடமை. எனவே தேவையற்ற செல்ஃபிகளைத் தவிர்ப்பது வெகு அவசியம்.

ஜிபிஎஸ்/லொக்கேஷன் ஆப்ஷனை புகைப்படங்கள் எடுக்கும் போது ஆஃப் பண்ணியே வைத்திருங்கள்.

ஃபேஸ் புக் லைக்குகளோ, டுவிட்டர் ரீடுவிட்களோ நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. அதற்கு ஆசைப்பட்டு விபரீதமான செல்ஃபிகளுக்குள் நுழையாதீர்கள்.

எதுவும் அளவோடு இருந்தால் தான் அழகானது. செல்ஃபியும் விதிவிலக்கல்ல. எனவே அதிக நேரத்தை செல்ஃபிக்காய் செலவழிக்க வேண்டாம்.

ந‌ம்முடைய‌ குணாதிச‌ய‌ங்க‌ளையும், ந‌ம்முடைய‌ வெற்றிக‌ளையும் நிர்ண‌யிக்கும் கார‌ணிக‌ளில் ‘செல்ஃபியும் இருக்கிற‌து’ என்ப‌து ம‌ட்டுமே நாம் க‌வ‌ன‌முட‌ன் எடுத்துக் கொள்ள‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம். அத‌ற்காக‌ செல்ஃபி எடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ தீர்ப்பிடுவதோ, குறைத்து ம‌திப்பிடுவ‌தோ த‌வ‌றான‌து ! ந‌ம் கையில் இருக்கும் தொழில்நுட்ப‌த்தின் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சாவிக‌ளில் செல்ஃபியும் ஒன்று, அதை வைத்துக் கொண்டு ச‌ரியான‌ பூட்டைத் திறந்தால் வாழ்க்கை இனிமையாக‌ இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை !

( Thanks Daily thanthi, Computer Jaalam )

தனிமையை இனிமையாக்க

alone

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர்.

இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டும் என பரபரப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடைய அருகாமை தான் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இன்னும் சிலர் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பார்கள். தனிமையாய் இருந்தால் தனிமையை ரசித்துக் கொள்வார்கள். கூட்டத்தில் இருந்தால் அந்த கணத்தை நேசிப்பார்கள்.

வாழ்க்கை எந்திரமாகி விட்டது. அலுவலகப் பணிகளுக்கான ஓடல்களில் பெரும்பாலான நேரம் முடிந்து விடும். குடும்பத்தினருக்கான ஓட்டம் மீதி நேரத்தை அபகரித்துவிடும். எஞ்சியிருக்கும் நேரத்தை அரைகுறையாய் கிடைக்கும் தூக்கம் எடுத்துக் கொள்ளும். இதில் நம்மோடு நாமே இருக்கும் தனிமை நிமிடங்கள் கிடைப்பதே அபூர்வம்.

எது எப்படியோ, விரும்புகிறோமோ இல்லையோ, தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வப்போது சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த தனிமையான கணங்களை இனிமையான கணங்களாய் மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

தனிமையில் இருக்கையில் நீ உன்னோடு இருக்கிறாய். உன்னை உனக்குப் பிடிக்காவிட்டால் தான் தனிமை பிடிக்காமல் போகும். உன்னை உனக்குப் பிடிக்குமெனில் தனிமை என்பது வரவேற்புக்குரியது.

நாள் முழுக்க ஏதேதோ விஷயங்களுக்காக ஓடிய நம்மை நமக்கென இயங்க வைப்பது தனிமை தான். அத்தகைய தனிமை நிமிடங்களில் என்னென்ன செய்யலாம்.

1. எழுதலாம். நமக்குத் தோன்றும் விஷயங்கள், நமது அனுபவங்கள், அல்லது நமது கற்பனைகள் நமது ரகசிய மனக் கிடங்கு என ஏதோ ஒரு விஷயத்தை எழுதலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதோ, ஒரு டைரி வாங்குவதோ என எழுத்தின் தளம் எதுவாகவும் இருக்கலாம். எழுதுவது நமது மனதை மகிழ்வாக்கும், இலகுவாக்கும் கூடவே தனிமையை இனிமையாக்கும்.

2. ‘யாருமே இல்லேன்னா இதைச் செய்வேன்’ என எல்லாருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த விஷயத்தைச் செய்யுங்கள். அது கன்னா பின்னாவென நடனமாடுவதானாலும் சரி, சத்தமாய்ப் பாடுவதானாலும் சரி, ஒரு படம் பார்ப்பதானாலும் சரி, உங்கள் வீட்டுச் செல்லப் பிராணியுடன் உருண்டு புரள்வதானாலும் சரி எது உங்கள் ஏக்கமோ அதை நிறைவேற்றுங்கள்.

3. தனிமை தந்திருக்கும் சுதந்திரத்தை உணருங்கள். இது உங்களுக்கான நேரம், உங்களுக்கான தருணம். இங்கே நீங்கள் தான் பாஸ், நீங்கள் தான் வேலையா பவுலர், நீங்கள் தான் பேட்ஸ்மேன், நீங்கள் தான் அம்பயர் ஏன் நீங்கள் தான் பார்வையாளர்கள். எனவே உங்கள் ரசனையை செயல்படுத்துங்கள்.

4. தனிமையில் இருக்கும் போது நீங்கள் யாருடனெல்லாம் பகையாய் இருக்கிறீர்கள், வெறுப்பாய் இருக்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். நீண்ட நாட்களாகப் பேசாமலிருக்கும் நண்பர்களை நினையுங்கள் அந்த பெயர்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவராய் அழையுங்கள். “சும்மா தான் பேசி ரொம்ப நாளாச்சு” என இரண்டு நிமிடம் பேசுங்கள். சொல்ல முடியாத மகிழ்ச்சியை உணர்வீர்கள்.

5. உங்களுடைய நண்பர்கள் பட்டியலில், அல்லது உறவினர் பட்டியலில் ஒரு சில பெயர்கள் உங்களிடம் எப்போதும் இருக்கும். ‘இவனை மன்னிக்கவே கூடாது’ எனும் செய்தியுடன். அதில் ஒரு நபருக்கு போன் பண்ணுங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லாவிட்டாலும் கூட ஒரு மன்னிப்பைக் கேளுங்கள். மனித நேயத்தின் அற்புத தருணத்தை உணர்வீர்கள்.

6. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு காதல் கடிதம் எழுதுங்கள். திருமணம் ஆகவில்லையேல் உங்கள் பெற்றோருக்கு ஒரு அன்பின் மடல் எழுதுங்கள். எழுதும்போது அவர்கள் உங்களுக்காய் செய்த நல்ல விஷயங்கள் மட்டுமே மனதில் வரிசையாய் வரட்டும். உங்கள் இதயத்தின் அன்பைப் பிழிந்து வடிக்கும் அந்தக் கடிதம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

7. தனிமை நேரத்தை உங்களுடைய திட்டமிடலுக்குப் பயன்படுத்துங்கள். அல்லது உங்களுடைய பழைய பொருட்களையெல்லாம் புரட்டிப் பார்த்து அடுக்கி வைப்பதில் செலவிடுங்கள். பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்து அந்தக் காலத்துக்குச் சென்று வாருங்கள். அந்த நினைவுகள் நம்மை ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

8. ஒரு புதிய கலையைக் கற்றுக் கொள்ள அந்த நேரத்தைச் செலவிடலாம். அது ஒரு புதிர் விளையாட்டைக் கற்றுக் கொள்வதானாலும் சரி, ஒரு இசைக்கருவியை கற்றுக் கொள்வதானாலும் சரி, அல்லது கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்வதானாலும் சரி. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவது உங்களுக்கு உற்சாகமூட்டும்.

9. தியானம் செய்யலாம். தனிமை கிடைப்பது தியானத்துக்கு ஜாக்பாட் போல. செல்போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடலாம். அல்லது வெறுமனே பகல் கனவுக்குள் நுழைந்து மனதை இலகுவாக்கலாம்.

10. வாசிக்கலாம். ஒரு நல்ல நூலை வாசிப்பது உங்களுடைய தனிமைக்குத் துணை. கூடவே உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எந்த புத்தகம் என்றில்லை, எது உங்களுக்குப் பயனளிக்குமோ அதைப் படியுங்கள்.

தனிமையை இனிமையாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அதை அர்த்தமுள்ளதாகவும், இனிமையுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றவும் ஏராளம் வழிகள் உண்டு. அவற்றில் ஒரு பத்து சிந்தனைகளே இவை. முயற்சி செய்து பாருங்கள்.

 

Thanks Vettimani, London.

செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

என்ன நடக்கிறது கிரீஸில் ?

greek

 

தாங்கள் சேமித்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும், தேவையான நேரத்தில் தமக்கு உதவ வேண்டும் என்பது தான் சாமானியர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற எதிர்பார்ப்பு. அதனால் தான் பைனான்ஸ் நிறுவனங்களை நம்பாமல், தேசிய வங்கிகளில் பணத்தைச் சேமியுங்கள் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

அப்படி வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் கூட எந்த ஒரு பயனும் இல்லாமல் போகலாம் எனும் நிலமை ஒரு தேசமே திவாலானால் நடக்கும் ! அப்போது வங்கிகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வெறும் எண்களாக மாறிவிடும். இலட்சக்கணக்கான பணம் வங்கியில் இருந்தால் கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் எடுக்க முடியாத கொடுமை நேரிடும்.

அந்த நிலமையில் தான் கிரீஸ் இப்போது சிக்கித் தவிக்கிறது. தத்துவஞானி சாக்ரடீஸ் பிறந்த மண் இன்று கடனில் சிக்கித் தவிக்கிறது. அதி பலசாலி ஹெர்குலிஸின் தேசம் இன்று வலுவிழந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 60 யூரோவுக்கு மேல் ஏடிஎம்மில் எடுக்க முடியாது, வேறு நாடுகளுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் கிரீஸ் நாட்டு மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர்.

2008களில் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் உடைந்து பதறியபோதும் கிரீஸ் சமாளித்து நின்றது. ஆனால் அதன் பின் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி வேகமாக வலுவிழக்க ஆரம்பித்தது. நெகடிவ் 1.2 சதவீதம் எனுமளவுக்கு அடுத்த ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி இருந்தது.

2010ல் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), ஐரோப்பிய வங்கி (ஈ.சி.பி) மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து நூற்று பத்து பில்லியன் யூரோவை கடனாக வழங்கின. மூன்று வருடங்களுக்குள் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் எனும் கந்து வட்டிக் கண்டிப்புடன்.

கிரீஸ் தன்னால் இயன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. தொழிலாளர்களின் போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை நிறுத்தியும், சேவை வரியை உயர்த்தியும், சில திட்டங்களை தாமதப்படுத்தியும் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. யானைப் பசிக்குப் போட்ட சோளப்பொரி போல அது காணாமல் போய்விட்டது.

2012ல் மீண்டும் ஒரு 130 பில்லியன் யூரோவை கடனாய் வாங்கியது கிரீஸ். அதை வைத்துக் கொண்டும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கே அது தேவைப்பட்டது. கடன் வாங்கிக் கடன் வாங்கி வாழும் குடும்பம் நடுத்தெருவிற்கு விரைவிலேயே வந்து விடுவது போல கிரீஸ் நான்கு பேர் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஜெர்மனிக்கு 68.2 பில்லியன், பிரான்ஸ் க்கு 43.8 பில்லியன், இத்தாலிக்கு 38.4 பில்லியன், ஸ்பெயினுக்கு 25 பில்லியன்,அமெரிக்காவுக்கு 11.3 பில்லியன், இங்கிலாந்துக்கு 10.8 பில்லியன் உட்பட சுமார் 270 பில்லியன் யூரோ கடன் இப்போது கிரேக்கத்தின் தலையில்.

சரி, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம், காட்சி மாறுகிறதா பார்க்கலாம் என இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தேர்தலில் மாற்று ஆட்சி யான இடதுசாரியின் அலெக்சிஸ் சிப்ரஸ் பதவிக்கு வந்தார். அவரிடமும் வறுமையையும் கடனையும் சட்டென அடைக்கும் மந்திரக் கோல் இல்லை.

ஒரு நாலு மாசம் கழிச்சு பணத்தைக் கொடுத்துடறேன் என கேட்டு வாங்கிய தவணையும் ஜூன் 30ம் தியதியோடு நின்று போக, கடன் கொடுத்தவர்கள் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தார்கள். கடன் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளைக் கேள் என நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

அவர்களுடைய நிபந்தனை ரொம்ப சிம்பிள். “மக்களுடைய வயிற்றில் அடித்து எங்கள் கடனை அடை !” என்பது தான் அவர்களுடைய நிர்ப்பந்தம்.

முதலாளித்துவம் வரியைக் கூட்டு, பென்ஷனை குறை, ரிட்டயர்ட்மென்ட் வயதை அதிகரி என ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிற்க, எளியவர்களோ வங்கியில் கிடக்கும் கொஞ்சம் பணத்தைக் கூட பயன்படுத்த முடியாமல் திகைத்தனர்.

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா வேண்டாமா என்பதை அறிய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நேரிடும். இப்போதைய கரன்சியை மாற்ற வேண்டியிருக்கும். பணவீக்கம் சுனாமியாய் தாக்கும். வெளிநாட்டு உதவிகளெல்லாம் நின்று போகும் என ஏகப்பட்ட சிக்கல்கள்.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் 25 சதவீதம் எனவும், குழந்தை வறுமை நிலமை 40 சதவீதம் எனவும் திணறிக் கொண்டிருக்கையில் உலகத்தின் கோபத்தையும் சம்பாதிக்க வேண்டுமா எனும் குழப்பம் ஒரு பக்கம். மக்களோ அரசின் பக்கம் நின்றார்கள். 61 சதவீதத்துக்கும் ஆதிகமானோர் அரசின் சார்பாய் வாக்களித்தார்கள்.

மக்களின் வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் பறித்து வட்டியாக கட்டிய பணம் பல்லாயிரம் கோடி. ஏற்கனவே கிரீஸ் நாடு சுகாதாரத்துக்காக செலவிடும் பணத்தையும், மருத்துவத்துக்காகச் செலவிடும் பணத்தையும் பாதிக்கு மேல் குறைத்திருந்தது. இதனால் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தும், குழந்தைகள் இறந்தே பிறக்கும் விகிதம் அதிகரித்தும் இருக்கிறது.

இருந்தாலும் உலக நாடுகள் கிரீஸிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், கிரீஸ் மக்களின் உறுதியான நிலைப்பாடு உலக நாடுகள் எதிர்பாராத ஒன்று. ஐரோப்பிய யூனியன் பெருந்தலைகள் இந்த முடிவினால் சற்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. யூரோவின் மதிப்பு சட்டென ஒரு சிறு சறுக்கலையும் சந்தித்திருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரீஸுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன. இந்த நாடுகளும் தங்கள் தலையில் கடனை வைத்திருக்கின்றன. இங்கும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லை. ஒரு வேளை நாமும் நாளை நடுத்தெருவில் நிற்கலாம் எனும் அச்ச உணர்வே இதன் காரணம். இப்படி ஐயோப்பிய யூனியன் இரண்டாக உடைந்தால் அதனால் பயனடையப் போவது அமெரிக்காவின் டாலர் என்பதும், வலுவிழக்கப் போவது யூரோ என்பதும் தான் ஐரோப்பிய யூனியனை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடுகள் கைவிட்டால் கிரீஸின் நிலமை இன்னும் மோசமாகி விடும் அபாயம் உண்டு. கிரீஸுக்கென தனி கரன்சி இல்லை. யூரோவே அங்கு பணமாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸை ஆதரிப்பதில்லை என நாடுகள் முடிவெடுத்தால் அதன் வங்கிகளில் பணம் இருக்காது. மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் முடங்கும். அரசு அவசர அவசரமாக புதுப் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதானதல்ல. இப்படி அடுக்கடுக்காய் இமாலயப் பிரச்சினைகள் அவர்கள் தலையில்.

இத்தகைய சூழலில் கிரீஸ் நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சி உலக வரலாற்றில் முக்கியமானது. உள்நாட்டு வளங்களைச் சார்ந்த வாழ்க்கை முறையை நாடுகள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கிரீஸ் நாட்டின் இன்றைய நிலமை நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்தியிருக்கிறது.

மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கிரீஸுக்கு மனரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் பண உதவி கிடைக்காவிட்டால் அவர்களால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாது. எனவே கிரீஸ் நாடாளுமன்றம் மீண்டும் கூடி கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைகளை ஏறக்குறைய ஏற்றுக் கொண்டும், சிலவற்றை மாற்றியும் புதிய ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தப் பட்டியலை அளித்திருக்கிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் நாடுகள் மீண்டும் ஒரு முறை தங்களுக்கு 53.3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை கிரீஸ் வைத்திருக்கிறது. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் கடனுதவி கிடைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சியிலிருந்து கிரீஸ் ஓரளவு மீண்டு வரும் என்பது வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கிடையே வங்கியில் கிடக்கும் பணம் தங்களுக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் பதட்டம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் தங்களுடைய கிரடிட், டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தி தங்கமாகவோ, வைரமாகவோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகவோ வாங்கிக் குவித்து வருகின்றனர். அதே நேரம் பணமாகக் கொடுக்க வேண்டிய இடங்களில் செலவுகளைக் குறைத்து வருகின்றனர். குறிப்பாக பார்கள், திரையரங்கங்கள், நாடக இடங்களெல்லாம் ஈயோட்டுகின்றன.

கிரீஸின் வீழ்ச்சி உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கிரீஸைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீன பொருளாதாரத்தில் நிலவி வரும் சறுக்கல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. டாலருக்கு நிகரான யென் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கமும் விலை வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்காமல், விவசாயத்தை வளப்படுத்தாமல், சிறு தொழில்களை மேம்படுத்தாமல் முதலாளித்துவத்தின் கைவிசிறிகளாகச் செயல்படும் எந்த நாடும் இத்தகைய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம் என்பதன் எச்சரிக்கை மணி இது.

*

 

சேவியர்

( Thanks : Namma Adayalam )

 

 

 

 

 

 

விடுமுறைகளும், விதிமுறைகளும் ( Vettimani, London)

Group Of Children Running In Park

‘அவசர உலகம்’ என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்கிறார்கள். அவசரமாய் எழும்பி, அவசரமாய் ஓடி, அவசரமாய் வீடு வந்து, அவசரமாய் தூங்கி, அவசரமாய் எழும்பி என வாழ்க்கை ஓடுகிறது. நின்று நிதானித்தால் ஏதோ உலகமே இடிந்து விழுவது போல எல்லாரும் பாவிக்கிறார்கள்.

ஒரு நண்பரைப் பார்த்தால் உற்சாகமாய்க் கட்டியணைத்து அரை மணி நேரம் பேச யாருக்கும் நேரம் இருப்பதில்லை. “ஹாய்… வாட் எ சர்ப்ப்ரைஸ்..” என ஒரு வார்த்தை பேசிவிட்டு. அதிகபட்சம் அவருடைய எண்ணை வாங்கி வாட்ஸப்புவோம். அல்லது “பேஸ்புக்ல என்ன நேம் ல இருக்கே ?” என கேட்டு வாங்கி விடைபெறுவோம்.

நமது உறவுகள் டிஜிடல் மயமாகிவிட்டன. இதயங்களின் இறுக்கத்தை இணையத்தின் இருப்பு பறித்துக் கொண்டு விட்டது. எல்லோருமே நெருக்கமாய் இருப்பது போன்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கொள்ளப் பழகிவிட்டோம்.

நமது பிள்ளைகள் காலையில் எழும்பி போகோ சேனல் பார்த்து விட்டு, ஸ்கூல் சென்று திரும்பி டோரேமான் பார்த்து சாப்பிட்டுவிட்டு, ஹோம் வர்க் முடித்து ஐபேட்களில் ஐக்கியமாகி விடுகின்றனர். அவர்கள் தூங்கிய பின் தான் பாதி பெற்றோர் வீடுகளுக்கே திரும்புகிறார்கள்.

கணவன் மனைவி யிடையேயான உரையாடல்களையும் வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகள் பறித்து விட்டன.குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உரையாடல்களை மொபைல் ஆப்ஸ் பறித்து விட்டன. இத்தகைய சூழலில் எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம் விடுமுறையில் ஒரு பயணம்.

ரயில் பயணங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு குடும்பம் ரயிலில் பயணம் செய்யும். அப்பா ஒரு ஓரமாய் அமர்ந்து வாட்ஸப்பிக் கொண்டிருப்பார், அம்மா ஃபேஸ் புக்கிக் கொன்டிருப்பார், பிள்ளைகள் க்ளேஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய சிரிப்பும், உற்சாகமும், அடித்துப் பேசி மகிழும் கணங்களும் எல்லாமே டெக்னாலஜி கருவிகளில் சமாதியாகி விடுகின்றன.

பயணங்கள் விடுமுறையின் ஒரு முக்கியமான அம்சம். அதில் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் எல்லா கேட்ஜெட்களையும் தூக்கி மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டு விட்டுக் கிளம்புவது தான். அவசரத்துக்குப் பேச ஒரு போன் கையில் இருந்தால் போதுமானது.

பயணங்கள் முதலாவது நமது குடும்பத்தினரிடையே ஒரு ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும். என் பையன் எவ்வளவு அழகா பேசறான் என்பதையே பல பெற்றோர்கள் இத்தகைய பயணங்களில் தான் புரிந்து கொள்கிறார்கள். மனைவியோடு மனம் விட்டுப் பேசும் தருணங்களும், குழந்தைகளோடு குழந்தையாய் புரளும் தருணங்களும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த பிணைப்பைத் தான் விடுமுறைப் பயணங்கள் தரவேண்டும்.

பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும் என்றும், மன அழுத்தத்தை விலக்கும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல பறந்து திரியும் ஒரு ஆனந்த அனுபவத்தை அனுபவித்துப் பாருங்கள். வாழ்க்கை என்பது வரப்போகும் நாட்களிலல்ல, கடந்து செல்லும் கணங்களில் இருக்கிறது என்பதே வாழ்க்கையின் தத்துவம்.

விடுமுறை பயணங்கள் செல்லும் பல பெற்றோர் செய்யும் தவறு கூடவே தாங்கள் யார் எனும் அடையாளத்தையும் கூடவே தூக்கிச் சுமப்பது தான். நான் ஒரு மேனேஜர், நான் ஒரு முதலாளி, நான் ஒரு அப்பாடக்கர் போன்ற சிந்தனைகளைத் தூக்கிக் கொண்டு பயணம் செல்லாதீர்கள். உங்களுக்கு உள்ளே ஒளிந்து கிடக்கும் உங்களுடைய மழலைக்கால முகமோ, அல்லது யாருக்கும் தெரியாத உங்களுடைய ரசனை முகமோ வெளியே வரட்டும்.

“அங்கே ஓடாதே”, “இங்கே போகாதே”, ” அது அழுக்கு அதெல்லாம் தொடாதே” எனும் தொடர் கட்டுப்பாடுகளை இட்டு விடுமுறையை விதிகளின் முறையாக்கி விடாதீர்கள். மணல் வீடு கட்டுங்கள், அலையில் புரளுங்கள். ஆடை அழுக்காவது தான் மனது சுத்தமாவதன் அடையாளம். மனதின் கவசங்களைக் கழற்றாமல் தும்பி பிடிக்க முடியாது. விடுமுறை என்பது நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென நீங்கள் முடிவெடுப்பது. அடுத்தவர்களுக்காக எதையும் போலித்தனமாகச் செய்யாதீர்கள்.

சரி, விடுமுறைக்கு பயணம் எதுவும் போக முடியவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை. ஒரு நாளை முழுமையாய் “நோ எலக்ட்ரானிக் டே” என அழைத்து குடும்பமாய் விளையாடுங்கள். லேப்டாப், போன், டேப்லெட் எல்லாமே அறைகளில் அடங்கிக் கிடக்கட்டும். அவை விரல்களால் பேசும் ஊடகங்கள். விரல்களால் பேசுவதை விட விழிகளால் பேசுவது அழகானது என்பதை உணருங்கள்.

வீட்டிலேயே ஒரு குட்டி மீட்டிங் போடுங்கள். பாடல், ஆடல், உரையாடல், பகிர்தல், விளையாடுதல் என ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டே இருங்கள். நேரத்தைப் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ சிந்தனையற்று இருங்கள். நீங்கள் அப்படிச் செலவு செய்யும் நேரத்தில், உறவையும் அன்பையும் மகிழ்வையும் சம்பாதிப்பீர்கள்.

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரைச் சென்று பார்த்தீர்கள், அல்லது சற்றுத் தொலைவில் இருக்கும் உங்கள் சகோதரனையோ, சகோதரியையோ சென்று பார்த்தீர்கள் ? இந்த விடுமுறை அத்தகைய ஒரு வாய்ப்பை நல்கலாமே. குடும்பத்தோடு கிளம்பி உறவினர்களைச் சந்தித்து ஒரு இனிமையான அன்புப் பரிமாற்றத்தை நடத்துங்கள். அல்லது நீண்டகால நண்பன், ஒரு உறவினர் என உறவின் எல்லையை அதிகப்படுத்துங்கள்.

இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக இந்த விடுமுறையைக் கழிக்க வேண்டுமா ? குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு அனாதை இல்லம் செல்லுங்கள். அங்கே உள்ள குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். அங்கே உள்ள பெரியவர்களின் அருகே அமர்ந்து கதைகளைக் கேளுங்கள். வாழ்வின் முழுமை இத்தகைய நிகழ்வுகளில் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் வாழ்வின் உன்னதத்தை உணர்வார்கள். பிறரோடு நேசமாய் இருக்க வேண்டியதன் தேவையை அறிவார்கள்.

வெளியே செல்லும் வாய்ப்பும் இல்லாத சூழல் என வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு மழை நாள் என நினைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே செய்யக் கூடிய ஒரு ஹாபியை எடுங்கள். அது ஓவியம் வரைவதாக இருந்தால் எல்லாரும் சேர்ந்து ஓவியம் வரைந்து மகிழுங்கள். அல்லது ஒரு கொலாஜ் செய்து ரசியுங்கள். என்ன செய்கிறீர்கள் என்பதல்ல முக்கியம் எப்படி இணைந்து செய்கிறீர்கள் என்பதே முக்கியம். ஓவியம் அழகாக இருப்பதல்ல முக்கியம், குடும்பம் அன்பாக இருப்பதே முக்கியம்.

இப்போதெல்லாம் வீடியோ கேமராக்கள் கையடக்க போனிலேயே ஹைடெக் முறையில் வந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நாடகம், நடனம், பாட்டு என எதையாவது ரெக்கார்ட் செய்து மகிழலாம். அது உங்களுடைய அந்த விடுமுறையின் இனிமையை டிஜிடல் கனவாக தனக்குள் பதுக்கியும் வைத்துக் கொள்ளும்.

வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் நல்ல கதைகளை வாசிக்கலாம். கதைகள் சொல்ல குழந்தைகளை உற்சாகப் படுத்தலாம். ஒருவர் கதையை ஆரம்பித்து, அடுத்தவர் அதைத் தொடரும் படி பிள்ளைகளின் கற்பனை வளத்தை ஊக்குவிக்கலாம். அதெல்லாம் இல்லையேல் குறைந்தபட்சம் கேரம், சீட்டு போல எல்லாரும் உட்கார்ந்து விளையாடும் ஏதோ ஒரு விளையாட்டையேனும் விளையாடலாம்.

விட்டுக் கொடுத்தலும், பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தலும், பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதும் விடுமுறை காலத்தில் மிக அவசியம். அதுவும் நீங்கள் வேறு குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுகிறீர்களெனில் இது நிச்சயம் தேவை.

விடுமுறையின் முடிவில் இனிய நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கட்டும். ஏதேனும் கசப்பு அனுபவங்கள் இருந்தால் அதை அப்படியே கைகழுவி விட்டு விடுங்கள். தூக்கிச் சுமக்காதவரை எந்த சுமையும் நமக்கொரு பொருட்டல்ல.

சுருக்கமாக, விடுமுறை என்பது நம்மை புதுப்பித்துக் கொள்வதாகவும், நமது ரசனைகளின் விளை நிலத்தில் விளையாடும் காலமாகவும், உறவுகளின் இனிமையை உணரும் காலமாகவும், மனித நேயத்தின் கிளைகள் செழிக்கும் காலமாகவும் இருக்கட்டும். விடுமுறையில் டிஜிடலுக்கு விடைகொடுங்கள், உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்.

வாழ்த்துகள்

 

 

 

 

 

கோச்சடையான் – விமர்சனம்

கோச்சடையான்
———————-

 

kochadaiyaan-3v

கோச்சடையான்
———-

நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் என அழகு தமிழில் அழைக்கப்படும் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் வெளியாகும் முதல் இந்தியப் படம் எனும் ஒரு மைல் கல்லுடன் இந்தத் திரைப்படம் அறிமுகமாகிறது !

அதென்ன நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் ? ஹாலிவுட்டில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பம் தான். திரைப்படம் முழுவதுமோ, அல்லது தேவைப்படும் காட்சிகளிலோ அதை இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர். ஃபேன்டஸி வகை திரைப்படங்கள், அறிவியல் புனைவுகள், கற்பனை உலகங்கள் இவற்றையெல்லாம் திரையில் கொண்டு வர ஹாலிவுட் நம்பியிருப்பது இந்த பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அல்லது மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தைத் தான். போலார் எக்ஸ்பிரஸ், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், டின் டின், பியோல்ஃப், அவதார், ஹாபிட் போன்றவையெல்லாம் நமக்குப் பரிச்சயமான உதாரணங்கள்.

அந்த நுட்பத்தை நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகிற்கு இழுத்து வந்திருப்பதற்காகவே சவுந்தர்யா குழுவினருக்கு பாராட்டுகளை வழங்கலாம். காலம் காலமாக திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன, அந்த வகையில் இப்போதைய இந்த தொழில் நுட்பமும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் யாரும் நிராகரித்து விட முடியாது எனும் இடத்தை இப்போது எட்டிப் பிடித்திருக்கிறது.

சரி, கோச்சடையான் எப்படி ?

இல்லாத ஒன்றைப் பிரமாண்டமாகக் காட்டுவதில் தான் இந்த தொழிநுட்பம் தனது கைவரிசையைக் காட்டும். ஒரு அவதார் போல பண்டோராவை உருவாக்க வேறு என்ன வழி ? அந்த சிந்தனையை மனதில் கொண்டு தான் இப்படி ஒரு வரலாற்றுக் கதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மாபெரும் கோட்டை கொத்தளங்கள், மிகப்பெரிய படைக்களங்கள், சாகசங்கள், மின்னல் வேக செயல்பாடுகள் என புகுந்து விளையாடத் தோதான ஒரு கட்சிதமான கதைக் களம்.

கதையொன்றும் புதிதில்லை. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் ஒரு மகனின் கதை தான். அதை கே.எஸ். ரவிக்குமார் தனக்கே உரிய மசாலாக்களுடன், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனது குரலினால் தாங்கியிருக்கிறார் ரஜினிகாந்த். தனது டிஜிடல் உருவத்துக்கு துடிக்கும் குரலினால் உயிர் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார். முடிந்த வரை ரஜினியின் மேனரிசங்கள், ஸ்டைல், அசையும் தலைமுடி என ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாய உலகம் என்பதை மறந்து அதனுள் நுழைந்து பயணிக்க இவையெல்லாம் ரொம்பவே உதவுகிறது.

ரஜினி, நாசர், ஷோபனா, நாசர் தவிர மற்ற கதாபாத்திரங்களின் உருவங்கள் முழுமையடையாமல் இருப்பது படத்தின் முக்கியமான குறைகளில் ஒன்றாகச் சொல்லலாம். சரத்குமார், ரஜினியின் தங்கையாக வரும் ருக்மணி இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளவே மாமாங்கம் ஆகிவிடுகிறது. நினைவில் வாழும் நாகேஷை திரையில் உலவ விட்டிருப்பதும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் அருமை ! தீபிகா படுகோன் பார்பி டால் மாதிரி அங்கும் இங்கும் அசைந்து திரிகிறார். அதிரடியாய் ஒரு சண்டையும் இடுகிறார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக, படத்தைத் தூக்கி நிறுத்தும் மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. போர்களிலும், பாடல்களிலும், கடல்பயணங்களிலும், மழையிலும், பஞ்ச் வசனங்களிலும் ரஹ்மானின் இசை நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

பளிச் பளிச்சென வருகின்ற வசனங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன. கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை- திரைகதை – வசனம் பொறுப்பை ஒப்படைத்தது இந்தப் படத்துக்கு ஒரு நல்ல தேர்வு என்பதை நிரூபித்து விடுகிறார். வேகமான முதல் பாதியும், படு வேகமான முதல் பாதியும் என அவருடைய டிரேட்மார்க் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்.

தொழில்நுட்பம் ? ம்ம்…. 100 ஆண்டு கால இந்தியத் திரைப்படத்திற்கு புது வரவு என்பதால் வரவேற்கலாம். ஆனால் பதினைந்து ரூபாய்க்கு லேட்டஸ்ட் ஹாலிவுட் திரைப்படங்கள் கிடைக்கும் இன்றைய சூழலில் சர்வதேச ஒப்பீடுகளையே சாமானிய ரசிகனும் செய்கிறான். அந்த வகையில் கோச்சடையான் இன்னும் பல ஆண்டுகள் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பது போல ஒரு உணர்வு. முப்பரிமாண தெளிவு பல இடங்களில் குறைவுபடுகிறது.

ஆனாலும் தைரியமாக எடுத்து வைக்கப்பட்ட முதல் சுவடு இது என்பதையும், பலருடைய கேலி கிண்டலையும் தாண்டி இது வசீகரிக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.

கோச்சடையான், வீச்சுடையான் !

பெயர்க் காரணம்

xavier33.jpg
பெயர்க் காரணம்
—————–

கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. சாகித்ய அகாடமி வாங்கிய எழுத்தாளர்களை விட பிரமிக்க நடை பாட்டிகளின் கதைகளில் சர்வ சாதாரணமாய் வாழ்வதுண்டு. பாட்டி சொன்ன நல்ல தங்காள் கதையோ, மணிமேகலைக் கதையோ இன்றும் என் மனதில் ஒரு திரைப்படமாகவே விரியும். பாட்டிக் கதைகளில் இசையும், நாடகமும், நாட்டியமும், இலக்கியமும் எல்லாமே ஒரு குதிரைச் சவாரி செய்வது போல ஒரு காட்சிப் படுத்துதல் இருக்கும்.

எனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அம்மாவும் அப்படித் தான். அம்மா சொல்லும் கதைகள் மனதை விட்டு ஒருபோதும் நீங்கிப் போவதில்லை. அம்மா சொன்ன வரலாற்றுக் கதைகளை விட வாழ்க்கைக் கதைகளே மனதில் நங்கூரமிறக்கியிருக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தைக் கூட சுவாரஸ்யமாய் ஆரம்பித்து, பரபரப்பாய் நகர்த்திச் சென்று பளிச் என்று முடித்து வைப்பார்.

என்னுடைய பெயர்க் காரணத்துக்கும் அம்மாவிடம் ஒரு கதை உண்டு. எனக்கு மூன்று அக்காக்கள். வாழ்க்கையில் நான் மிகவும் ஆனந்தமாய் நினைக்கும் விஷயங்களில் ஒன்று அது தான். திகட்டத் திகட்ட அன்பை வாரி வழங்க சகோதரிகளால் மட்டுமே முடியும். அக்காக்கள் இல்லாத தம்பிகளைப் பார்த்து எனக்கு கொஞ்சம் அனுதாபமும் எழுவதுண்டு.

அம்மாவின் நிலமை அன்றைக்கு அப்படி இருக்கவில்லை. ஊர்ப் பேச்சு “மறுபடியும் பெண்ணா ?” எனும் குத்தல் பேச்சுகள் அம்மாவை அடுத்ததாச்சும் ஒரு பையனா பொறக்கணும் என எண்ண வைத்திருக்கிறது. “நாலாதும் பொண்ணுன்னா நடைக்கல்லப் பேக்கும்லே” என பக்கத்து வீட்டுக்காரர்களின் முன்னுரை முற்றங்களில் வேண்டுமென்றே விளம்பப் பட்டுக் கொண்டிருந்த சமயம். அம்மாவுக்கு பாசம் அதிகம், அதை விட அதிகமாய் பக்தி ரொம்ப ரொம்ப அதிகம்.

1972 டிசம்பர் மாதக் குளிரில் கோட்டாறு சவேரியார் ஆலயத் திருவிழா (டிசம்பர் 3 ) வுக்குச் சென்றார். ஒரு தாய் தன் குழந்தை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் ஒரு சமூகம் ஒரு அன்னையை அவள் விருப்பத்துக்குள் வாழ அனுமதிப்பதில்லை. நிர்ப்பந்தங்கள் அம்மாவுக்குள்ளும் சிந்தனைகளை புதிதாய் எழுதியது. ” அடுத்தது ஒரு பையனா பிறந்தா நன்றாக இருக்கும்” எனும் வேண்டுதல் தான் அன்றைக்கு அம்மாவுக்கு பிரதான விண்ணப்பம்.

சவேரியார் ஆலயத்தில் சென்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். தேர்ப்பவனி நடக்கிறது. ஆழமாய் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அம்மாவின் மனதுக்குள் திடீரென தெளிவாய் ஒலிக்கிறது ஒரு குரல். “உனது விருப்பம் நிறைவேறும், கலங்காதே”. அம்மா சிலிர்த்துப் போய் சுற்று முற்றும் பார்க்கிறார். எதுவும் இல்லை. ஒரு வேளை பிரம்மையோ என அவநம்பிக்கை வந்து ஒட்டிக் கொள்கிறது. ‘ ஆண்டவரே எனக்கு ஏதேனும் ஒரு அடையாளம் வேண்டும்’ அம்மாவின் மனம் மீண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறது. அடுத்த வினாடியே சவேரியார் சிலையிலிருந்த ஒரு மலர் வந்து அம்மாவின் கைகளில் விழுந்து அப்படியே ஒட்டிக் கொள்கிறது.

கேட்பதற்கு புனைக் கதை போல இருக்கும் இந்த நிகழ்வு அம்மாவுக்குள் அசாத்திய நம்பிக்கையை விதைத்து விட்டது. முகத்தில் மலர்ச்சி. அடுத்தது நமக்கு பையன் தான் சந்தேகமேயில்லை என ஜெபித்துக் கொண்டிருந்த அப்பாவிடம் சொல்கிறார்.

அடுத்த வருடம் நான் பிறக்கிறேன். எல்லோரும் பதட்டத்துடன் காத்திருக்க அம்மாவுக்கு மட்டும் சந்தேகமே இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு முன்பே அப்பாவிடம் சொல்லியிருக்கிறார், பையனுக்கு சவேரியாருடைய பெயரைத் தான் வைக்கணும். “சேவியர்” ன்னு வைப்போம் ! அப்பா, அம்மாவின் மனம் நோகும்படி எதையும் செய்ததில்லை, அப்போதும் “கண்டிப்பா” எனும் ஒற்றை வார்த்தை மட்டுமே !

அம்மா இந்தக் கதையை என்னிடம் பல நூறு தடவை சொல்லியிருக்கிறார். சொல்லும்போதெல்லாம் அம்மாவின் முகத்திலும் குரலிலும் சர்வ உணர்வுகளும் வந்து மறையும். ஒவ்வொரு தடவை சொல்லும் போதும் அதுவே முதல் முறை போல அம்மா சொல்வதும், அதுவே முதல் முறை போல நான் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது !

நான் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே பலர் என்னிடம் “ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள். சேவியர் எனும் பெயரெல்லாம் அங்கீகரிக்கப் படாது. அதில் மத அடையாளம் இருக்கு, தேவையான சில அடையாளம் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனசோடு தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு பதிலை நான் தயாராய் வைத்திருப்பேன்.

“எனக்கு கிடைக்கப் போகும் எல்லா அங்கீகாரங்களையும் விட என் பெற்றோர் எனக்கு வைத்த இந்தப் பெயர் ரொம்ப சிறப்பானது. அங்கீகாரத்துக்காக இந்தப் பெயரை இழப்பதை விட, பெயருக்காக பிற அங்கீகாரங்களை இழப்பதே எனக்கு மகிழ்ச்சியானது. ஆத்மார்த்த அன்பை விடப் பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை !”

நேற்று சவேரியார் தினம். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, இருந்தாலும் போன் செய்த போது ‘மக்களே இந்நு சவேரியார் தினம். மின்னே ஒரு காலத்தில…” என பேச ஆரம்பித்தார். “இருக்கட்டும்மா.. ரெஸ்ட் எடுங்க பின்னீடு பேசலாம்” என்றேன், கதை கேட்கும் ஆர்வம் மனதுக்குள் நிரம்பியே இருந்தாலும் !

பெயரில் என்ன இருக்கிறது என்று பலரும் கேட்பதுண்டு
பெயரிலும் இருக்கலாம் இதே போல ஜீவன் ஊற்றிய நினைவலைகள்.