கிளிமஞ்சாரோ : பின்னணி தெரிஞ்சுக்கலாம் வாங்க !

கிளிமஞ்சாரோ பாடலின் மூலமாகப் பிரபலமாகியிருக்கும் சிலப் பல விஷயங்களில் இந்த மச்சு பிச்சுவும் ஒன்று. இது குறித்து எனது கவிதைச்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது கவனிக்கப்படாமல் இருந்த அந்த பதிவுக்கு இப்போது ஏக மவுசு… எனவே இங்கே மீள் பதிவு செய்கிறேன்…

800px-machu_pichu_from_guard_house.jpg

பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.

உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காடு.

இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.

intihuatana_solar_clock.jpg

இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், சுமார் ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கானகத்தைப் போலவே அடர்த்தியாய் கிடக்கிறது.

பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள் கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.

காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.

நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தன்னுடைய நாட்டை மீட்க நினைத்த இன்கா மக்களின் தாகமே அது.

machu_picchu_locn.png

ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.

இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.

மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.

இன்கா மக்களின் வியர்வையில் உருவான வில்காபாம்பா நகர் பாழடைந்து கானகத்தின் மௌனத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தது, ஓர் இனம் அழிந்த வரலாற்றின் கருப்புக் கண்ணீர் துளியாய்.

ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.

hiram-bingham.jpg

இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.

இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.

தொடர்ந்து ஒருவாரம் நடந்த அவர்கள் மண்டோர்பம்பா எனுமிடத்தில் தங்கினர். அங்கே சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர் ! அங்கிருந்து தங்கள் பயணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எதேச்சையாக அங்கிருந்த ஒரு நபரிடம் உரையாடினார்கள் அவர் பெயர் மெல்கோர் அர்டீகா.

அவர் சாதாரணமாய் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு விருட்டென எழுந்தார் பிங்காம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்கோனாட்டா அருவிக்கு மறுபக்கம் மலையின் மேல் சில கல் வீடுகள் உள்ளன என்பதே அந்த செய்தி.

ஹிராம் பிங்காம் அந்த மனிதரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அப்போது மழைக்காலமாக இருந்ததால் கூட வந்தவர்களில் ஒருவரைத் தவிர எவரும் அத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் பயணத்துக்கு விரும்பவில்லை.

பிங்காம் துணிந்தார். தனியே அந்த நபரையும் அழைத்துக் கொண்டு பயணமானார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே அடைந்தனர்.

மேலே சென்று பார்த்த பிங்காம் வியப்பின் உச்சிக்குச் சென்றார். இது தான், இது தான் நான் தேடிய இடம் என குதித்தார். அங்கே அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.

காலம் அந்த நகரின் மீது முளைப்பித்திருந்த மரங்களுக்கு வயதாகியிருந்தது. மரங்களும், பாசிகளும் இடிபாடுகளுக்குமிடையே சத்தமில்லாமல் கிடந்தது அந்த சரித்திரம்.

800px-machupicchu_intihuatana.jpg

இன்னோர் வியப்பு அங்கும் ஒரு சில மனிதர்கள் உலகை விட்டு தனியே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது !

பிங்காம் தனது யேல் பல்கலைக்கழகத்தை உதவிக்காக அணுகினார். பல்கலைக்கழகம் தேசிய சுற்றுச் சூழல் அமைப்புடன் கைகோத்து பிங்காமுக்கு உதவியது.

அடுத்த ஆண்டே பிங்காம் தேவையான உதவிகளுடன் இந்த இடத்திற்கு மீண்டும் வந்து அந்த நகரை அதன் தன்மை கெடாமல் சுத்தம் செய்யத் துவங்கினார். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவருடைய குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் ஆனது !

அங்கிருந்து 173 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 150 பேர் பெண்கள்!. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது மேலும் பல கற்பனைகளுக்கு வழி வகுக்கிறது.

மற்றவர்கள் இந்த கோட்டை பணியாளர்களாக இருக்கலாம், அவர்கள் பள்ளத்தாக்குகளில் எறியப்பட்டிருக்கலாம், அல்லது வேறு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்கலாம், அல்லது வெளியேறியிருக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.

இந்த கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கென பல பொருட்களை பிங்காம் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்.

அங்கிருந்து தங்கம் வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் தெரிவிக்கிறார்.

பிங்காம் மறுத்தாலும், இந்த இடத்திலிருந்து ஏராளம் பொன் வெள்ளி போன்றவை கிடைத்திருக்க வேண்டும் என்றே பலர் கருதுகின்றனர்.

யாரும் அணுகாத, ஒரு பெரும் சாம்ராஜ்யம் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புடைய இந்த இடத்தில் மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும் எனவும் அவை பிங்காம் மூலம் பெரு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பதே பலரின் நம்பிக்கை.

தற்போது யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கின்ற மச்சு பிச்சுவின் மிச்சங்களையும், கலைப் பொருட்களையும் திரும்பவும் மச்சு பிச்சுவுக்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

perfectwall.jpg

அது இருக்கட்டும். நாம் வரலாற்றுக்கு வருவோம்.

மச்சு பிச்சு தான் வில்காபாம்பா என்று நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் பிங்காம். ஆனால் உண்மையில் அது வில்காபாம்பா இல்லை! வில்காபாம்பா 1964ம் ஆண்டு ஜீன் சாவோய் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இடத்தை பிங்காம் 1909ம் ஆண்டே கண்டார். ஆனால் இது ஏதோ முக்கியமற்ற ஒரு இடம் என நினைத்து அசட்டையாய் விட்டு விட்டார் !

1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.

1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.

வில்காபாம்பாவைத் தேடிப்போன பிங்காம் மச்சு பிச்சுவைக் கண்டுபிடித்தார். மச்சு பிச்சு என்ன ? அது ஏன் கட்டப்பட்டது ? போன்ற விவரங்கள் ஏதும் இல்லாமல் ஓர் மர்மத்தின் குழந்தையாய் கிடக்கிறது நகர்.

1450 களில் இந்த மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிறைவேறும் முன்பாகவே இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர் இன்கா மக்கள்.

ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு முன்பே இந்த மச்சு பிச்சுவை விட்டு அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். வறட்சியோ, நோயோ, அமானுஷ்ய பயமோ ஏதோ ஓர் பாதிப்பு இந்த நகரைக் காலி செய்ய மக்களை நிர்ப்பந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

சில ஆய்வாளர்கள் ஒருவேளை மன்னன் மரணமடைந்ததால் அடுத்த மன்னன் அந்த இடத்தை விரும்பாமல் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

thumb600x.jpg

எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்படவேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.

இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது. புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மச்சு பிச்சு உண்மையிலேயே உறையும் உண்மைகளும், நிறையும் எழிலுமாக அதிசய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

எந்திரன் : எனது பார்வையில்

 

எந்திரன் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஒருவழியாக நிறைவேறிவிட்டது ! பொதுவாகவே படம் வருவதற்கு முன் ஏகப்பட்ட பில்டப் களைக் கொடுத்தால் படம் கால் நீட்டிப் படுத்துவிடும் என்பது ஐதீகம் ! கந்தசாமி, இராவணன் என சமீபத்திய உதாரணங்கள் எக்கச் சக்கம். ஆனால் எந்த உதாரணத்திலும் சிக்காதவர் தான் ரஜினி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது எந்திரன்.

கிராபிக்ஸ், அது இது என ஏகப்பட்ட கதைகள் உலவியபோது படம் நல்லா இருக்குமா என ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.  உண்மையிலேயே படத்தில் ஷங்கர் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களிலேயே லாஜிக் பாக்காத நமக்கு இதுல ஆங்காங்கே லாஜிக் பாக்காம இருக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லை.

ரஜினி விரும்பிக் கேட்டுக் கொண்டதாலயா என்று தெரியாது, வழக்கத்துக்கு மாறாக படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள். அழகாக இருந்த ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். ஆனால் அந்த உலக அழகையே சில இடங்களில் மிஞ்சுமளவுக்கு ரஜினியின் மேக்கப் அசத்தலாய் வசீகரிக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்பு கவித்துவமாய் சாரலடிக்கிறது.

வில்லனாய் வரும் ரஜினி மனதில் அமர்க்களமாய் வந்து அமர்ந்து கொள்கிறார். அடேங்கப்பா என வியக்கவைக்கும் அளவுக்கு ரஜினியின் வில்லத்தனமான விஷயங்கள் பிரமிப்பூட்டுகின்றன. “கருப்பு ஆடு” காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகிறது. “என்னை யாராலும் அழிக்க முடியாது” எனும் சாதாரண வாசகத்தையே பஞ்ச் டயலாக் ரேஞ்சுக்கு சொல்ல ரஜினியால் மட்டும் தான் முடியும். சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லன் நடிப்பில் பொளந்து கட்டுவேன் என இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்.

இசை அமர்க்களம். பின்னணி இசையிலும் ரஹ்மானின் இசை புகுந்து விளையாடியிருக்கிறது. ஹாலிவுட் ஐகான் ஆகிவிட்டதான் இனிமேல் ஹாலிவுட் காரர்களும் இந்த படத்தைப் பார்க்கக் கூடும் எனும் அதீத சிரத்தையாய் இருக்கலாம். அல்லது ஷங்கர் ரஹ்மானை துரத்தித் துரத்தி வேலை வாங்கியிருக்கலாம். எப்படியோ இசை ரொம்பவே மிரட்டுகிறது.

பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார் மனுஷன். கிளிமஞ்சாரோ கடைசிப் பாடலாய் இருக்கும் என நினைத்தேன்… அரிமா..அரிமா அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அமர்க்களமாய்… ! இரும்பிலே ஒரு இதயம் பாடலை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம்.

ஒளிப்பதிவு, லொக்கேஷன், காஸ்ட்யூம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. முதல் பாதி செதுக்கி வைத்தது போல கன கட்சிதம். இரண்டாம் பாதி இடையில் கொஞ்சம் நீஈஈண்டு அப்புறம் மறுபடியும் பரபரப்பில் முடிந்திருக்கிறது.

வாத்தியாரின் வசனங்கள் அசத்தல். எளிமையாய், கூர்மையாய் வசீகரிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்… ரோபோ – மனித காதல் பற்றிப் பேசுகையில்… “இது இயற்கைக்கு முரணானது என்கிறார்களே….”, “இல்லை.. இது இயற்கைக்குப் புதுசு ” !  வாவ் !

இனிமேல் இத்தகைய வசனங்களைத் தர அவர் இல்லையே எனும் ஏக்கம் கனமாய் வந்து அமர்கிறது.

ஷங்கருக்கு இது ஒரு மைல் கல் ! அடுத்து தைரியமாய் ஹாலிவுட் படம் இயக்கலாம். சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் இது ஒரு சிகரக் கல் !

ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக…

எந்திரனை மிஸ் பண்ணிடாதீங்க ! டையமாச்சு எந்தி…RUN

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

எந்திரன் 2D ! No 3D !! லேட்டஸ்ட் தகவல்கள்.

ரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது எந்திரன் பட ஷூட்டிங் ! இனி அடுத்த சில மாதங்களுக்கு பரபரப்புகளுக்குப் பஞ்சமிருக்காது.

ஏஸ்.பி.பி யோட துவக்க பாடல், ஏ.ஆர் ரஹ்மானின் அசத்தல் பாடல் என ஆடியோ குறித்தும் ஏகப்பட்ட பில்டப்கள் எகிறிக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் கடைசி நாளை ஏதோ காலேஜ் பிரிவு விழா போல நடத்தியதில் “பட்ஜெட்” தெரிகிறது.

முதலில் 3டி யாக வரலாம் என கருதப்பட்ட எந்திரன் 2டி யில் தான் வருகிறது. இப்போதைக்கு 3டி சாத்தியமில்லையாம் ! 

உலகெங்கும் வெளியாகப் போகும் இந்தப் படம் ஆங்கில சப் டைட்டிலோடு வெளிநாடுகளில் வெளியாகுமாம் !

இப்போதைக்கு இமெயிலின் ஹாட் கேக் இந்தப் படங்கள் தான்.

தமிழிஷில் வாக்களிக்க

 

3D யில் எந்திரன் : ஸ்பெஷல் தகவல்கள் !

3D அவதாரின் விஸ்வரூப அவதாரத்தைப் பார்த்து டைரக்டர் ஷங்கர் தனது எந்திரன் படத்தையும் 3D வடிவில் வெளியிட தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார். சில சாம்பிள் காட்சிகளை 3D வடிவமைத்துப் பார்த்ததில் டீமே மிரண்டு போய்விட்டதாம். ஏற்கனவே படத்தை 2Dயில் எடுத்திருந்தாலும் அதையே 3D வடிவில் மாற்றியமைக்கும் வகையில் இப்போதைய டெக்னாலஜி முன்னேற்றம் உள்ளதாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் 3D படத்தை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார் ஷங்கர். எனினும் கடைசி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை . படம் எந்திரன் 3D ஆக வரவும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன !

திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளெல்லாம் எடுத்து முடிக்கப்பட்டிருப்பதால் யூனிட் உற்சாகமாய் இருக்கிறது. எந்திரனின் மொத்தம் ஆறு பாடல்கள். அப்பா வைரமுத்து மூன்று பாடல்களில் முத்தெடுக்க, மகன் கார்க்கி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பாடல் எழுதியதுடன் நிற்காமல் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் கார்க்கி தான் ஷங்கருக்குச் சொல்லி வருகிறார். கூடவே கதை வசனம் எழுதுவதிலும் அவருடைய பங்களிப்பு கணிசமாய் இருக்கிறது. இன்னொரு பாடல் பாவியிடம் சென்று விட்டது. அதாங்க ஞாபகங்கள்ல நடிச்சாரே அந்த பா.விஜய் தான் J அப்போ ஆறாவது பாட்டு எழுதறது யாரு நாமுவா ?

கொச்சின் ஹனீபாவின் மறைவு ஷங்கரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எந்திரனில் அவர் நடித்திருந்த நகைச்சுவைக் காட்சியை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்ணீருடன் சிரித்தாராம். இந்தக் காட்சிகள் அவருக்கு அஞ்சலியாய் அமையும் என்கிறார் அவர். அதே போல மலையாளக் கரை கலாபவன் மணிக்கு இதில் வித்தியாசமான கிராமத்தான் வேடமாம் ! உலகம் முழுதும் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். அதனால் படம் கொஞ்சம் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஷங்கர் வட்டாரம் !

இந்தப் படத்துக்காக பிரபுதேவா ஸ்பெஷலாக ஒரு பாடல்காட்சியை அமைத்திருக்கிறாராம். அது பிரம்மாண்டமாக வந்திருப்பதாக பட்சிகள் படபடக்கின்றன. அதன் பின் பிரபு தேவா 9தாராவுடன் டேரா போட்டு விட்டதால் அவருடைய தம்பி ராஜு சுந்தரம் இரண்டு பாடல்களுக்கு நடனக் காட்சிகள் அமைத்திருக்கிறாராம்.  

எந்திரனுக்குப் பின் ஷங்கர் சித்தார்த்துடன் சிலிர்ப்பூட்டும் காதல் கதை ஒன்றை படமாக்க இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லையாம். ஒரு பக்கா ஸ்கிரிப்ட் இருக்கிறது, அதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ஷங்கரின் விருப்பம். அதுக்கு எக்கச் சக்க மேக்கப் போடவேண்டியிருக்குமே என ஷங்கர் சொல்ல, “அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என் ஒரிஜினல் முகமே எனக்கு மறந்து போயிடும்போல இருக்கு. கொஞ்சம் கேப் விட்டு பண்ணிக்கலாம்” என்றாராம் கமல்.

எந்திரனில் இதுவரைக்கும் எந்தக் காட்சியிலும் நடிக்கவில்லையாம் ஷங்கர். எப்படியாவது ஒரு காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டுமென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பேசாம ஒரு ரோபோவா வர வேண்டியது தானே.

வாக்களிக்க விரும்பினால்…

எந்திரன் சீசன் துவங்கிடுச்சு !!

(கிளிக் பண்ணினா படம் பெருசா தெரியும்னு நான் சொல்ல வேண்டியதில்லை…)

இன்னா ஷங்கர், இரண்டு பக்கமும் பன்றிக் காய்ச்சல் வந்தவனை நிக்க வெச்சுட்டு என்னை நடிக்க சொல்றீங்க ? 

ஐஸ் : ஷங்கர், இது பப்ளிக் பிளேஸ்….

நான் எந்த பொண்ணு பின்னாடியும் போக மாட்டேன், பட், என் முன்னாடி எந்தப் பொண்ணு போனாலும் தடுக்கவும் மாட்டேன். 

வாசிக்கிறது வாத்தியம், எல்லாமே எந்திரனால சாத்தியம்…  இதான்பா பஞ்சு..

ஷங்கர், இந்த ஏரியா முழுக்க கலர் கலரா சாரி கட்டி வுட்டுட்டு நான் வேணும்னா தூம் ஸ்டைல்ல வரட்டுமா ?

ஐஸ் : என்னால சிரிக்காம இருக்க முடியல

ரஜினி : என்னால இருக்காம சிரிக்க முடியல ..வயசாகுதுல்ல.. ஹா..ஹா..ஹா…

ஹைடெக் ஆளு எந்திரனா
மனசை மயக்கும் மந்திரனா
ஐஸுப் பக்கம் ஐஸை வைத்து
நைஸாப் பேசும் தந்திரனா ? சுந்தரனா…..

(ஹி..ஹி… ஓப்பனிங் சாங் )