நினைவில் நிற்கும் கலாம் : A Christian Article

2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.

அறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.

“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.

ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.

ஒன்று. அவ‌ருடைய எளிமை,

இரண்டு அவருடைய நேர்மை,

மூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.

சாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.

ஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.

அவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.

அன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.

விழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா ?

உல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.

அவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.

“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.

“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.

க‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி  ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ ?

தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.

எந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.

அவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் ?

சுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.

ந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌ட்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

க‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.

அதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்

 

அன்புட‌ன்

சேவிய‌ர்

வயிறை வணங்காதீர் : Christian Article

“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான‌ உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.

தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.

உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !

இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வ‌ச‌ன‌த்தின் வ‌ழியாக‌ விரும்புவ‌தைச் சாப்பிட‌லாம் எனும் அங்கீகார‌த்தை அவ‌ர் ந‌ம‌க்குக் கொடுத்திருக்கிறார்.

நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.

எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.

இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உண‌வு ஒருவ‌னை ஏழையாக்கும் என்ப‌தை பைபிள் தான் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

உண‌வின் மீது அதீத‌ நாட்ட‌ம் ஏற்ப‌டும் போது அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கிற‌து. அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கும் போது சிந்த‌னை முழுதும் அதுவே நிர‌ம்புகிற‌து. சிந்த‌னை முழுதும் அது நிர‌ம்பும் போது அவ‌னுக்கு அது க‌ட‌வுளாகிப் போகிற‌து.

“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என ப‌வுல் அவ‌ர்க‌ளைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !

க‌ட‌வுளைத் த‌விர‌ எதை முத‌ன்மைப் ப‌டுத்தினாலும் அது ‘சிலை வ‌ழிபாடாகிற‌து’. சில‌ருக்கு ப‌ண‌ம். சில‌ருக்கு புக‌ழ். சில‌ருக்கு உண‌வு ! என‌ சிலை வ‌ழிபாடு வேறுப‌டுகிற‌து. க‌ற்சிலையை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ள் நாம். ஆனால் வேறு எந்தெந்த‌ சிலைக‌ளை வ‌ழிப‌டுகிறோம் என்ப‌தை உண‌ர வேண்டும்.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்ப‌தே உண‌வைக் குறித்த‌ ந‌ம‌து பார்வையாய் இருக்க‌ வேண்டும் என‌ ப‌வுல் அறிவுறுத்துகிறார்.

ம‌னித‌ன் அப்ப‌த்தினால் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌வுளின் வாயினின்று வ‌ரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு உண‌வாக‌ வேண்டும். அதுவே மிக‌வும் முக்கிய‌மான‌து ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.

உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.

அர‌ச‌ன் உண்கின்ற‌ அட்ட‌காச‌மான‌ உண‌வை வேண்டாம் என‌ ம‌றுத்து எளிமையான‌ உண‌வை தேர்ந்தெடுத்த‌ தானியேலை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்தார். க‌டைசிவ‌ரை அவ‌ரோடு இருந்தார்.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை  மட்டுமே உண்ணவும் வேண்டும்.

சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !

இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (ச‌ங் 34 : 8) என்கிறது சங்கீதம். ந‌ம‌து சுவை ந‌ர‌ம்புக‌ள் நாவில் அல்ல‌, வாழ்க்கையில் இருக்க‌ வேண்டும். அத‌ற்கு நாம் இறைம‌க‌னைச் சுவைக்க‌ வேண்டும்.”

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு பாலைப் போல‌ இருக்க‌ வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வ‌ச‌ன‌த்துக்கு ஏற்ப‌ நாம் இறைவார்த்தையைப் ப‌ருகுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆன்மீக‌ உண‌வையும், பான‌த்தையும் ப‌ருகும் போது உட‌லின் தேவைக‌ள் இர‌ண்டாம் ப‌ட்சாமாகிவிடும் என்ப‌தையே இயேசு வ‌லியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் க‌வ‌லை வேண்டாம்” என‌ இயேசு சொன்ன‌த‌ன் பொருள் இது தான்.

உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?

எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.

  1. சுவையான‌ உண‌வுக்காக‌த் தேடி ஓடும் ம‌ன‌நிலையை விட்டு வெளியே வ‌ருவோம். அது நோயையும், சோர்வையும் தான் த‌ரும். வார்த்தையாகிய‌ இறைவ‌னைத் தேடி ஓடும் ம‌ன‌நிலையை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.
  1. “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுள‌த்தை நிறைவேற்றுவ‌தே நம‌து உண‌வு எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொள்வோம்.
  1. உண‌வு என்ப‌து க‌ள‌ஞ்சிய‌த்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்ப‌த‌ற்கான‌த‌ல்ல‌. வ‌றிய‌வ‌ர்க‌ளோடும், ஏழைக‌ளோடும் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌து. ஏழை இலாச‌ரை உதாசீன‌ம் செய்யாம‌ல் ச‌மூக‌த்தின் ப‌சிக்கு உண‌வ‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளாக வாழவேண்டும் எனும் ம‌னித‌ நேய‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

ப‌டைத்த‌வ‌ர் கொடுத்த‌தே உண‌வு, அதை ப‌டைத்த‌வ‌ருக்கு மேலாக‌ உய‌ர்த்தாதிருப்போம் !

 

 

சேவிய‌ர்

நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள். –

ஹக் சிட்னி

முக்கியமற்றது எனும் நினைப்பில் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கூடிய விஷயம் இந்த நகைச்சுவை உணர்வு. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கக் கூட நாம் தயங்குவதில்லை. “எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லை” என சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுபவர்களும் ஏராளம்.

ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒரு விஷயம் கவனிச்சுக்கோங்க. நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல ! ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும் !

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய பார்முலா ! அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை !

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது ! இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

அதனால் தான் மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார், “ எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்”. ரொம்பவே உண்மையான வார்த்தை !! இன்றைக்கு தற்கொலைப் பட்டியல்களை புரட்டிப் பார்த்தால் வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகாமையும் ஒரு முக்கியமான காரணமாய் நம் கண்ணுக்கு முன்னால் விரிகிறதா இல்லையா ?

மனித மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் சிரிப்பு ரொம்பவே முக்கியம். லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “நல்ல சிரித்து வாழும் மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாகவும், கற்றுக் கொள்ளும் தன்மையிலும் இருக்கும்.” என்று தெரியவந்தது ! அது நகைச்சுவை கேட்பதோ, படிப்பதோ, பார்ப்பதோ என எந்த ஒரு வகையிலும் இருக்கலாம். அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள் “நல்ல ஜோக் படமா போட்டு அரை மணி நேரம் சிரிங்க” என்றெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுகிறார்கள்.

உங்களுடைய கோபத்தையோ, உங்கள் மீது வேறொரு நபருக்கு இருக்கும் கோபத்தையோ அழிக்க நகைச்சுவை உணர்வைப் போல சிறந்த ஒரு ஆயுதம் இருக்கவே முடியாது ! அது உங்களுடைய நட்பு வட்டாரத்தை இதன் மூலம் ரொம்ப உற்சாகமாய் இயங்கவும் வைக்கும் இல்லையா ?

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவதில்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவதில்லை. வாழ்க்கை கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்.

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். வாழ்க்கை அழுவதற்கானதல்ல. அழுதாலும், சிரித்தாலும் கடிகாரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நாட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் அழுவதும் சிரிப்பதும் உங்களுடைய தீர்மானத்தில் !

எனது மழை அனுபவம்

sasasas

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.

நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். “உடனே காய்ச்சிடுங்க… இல்லேன்னா கெட்டுடும்” என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.

‘… நீங்க ?…’  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

‘நன்றி.. என்ன பண்றீங்க.. ‘ என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.

சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, “அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்…”.

நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

“கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு…”.

பிள்ளைகள் சொன்னார்கள், “என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா… போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க…”

அது மழையல்ல,

பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !

இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.

‍*

சேவியர்

ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது

 

தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் !

இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ரைட் திரும்பு என கையைப் பிடித்து கூட்டிப் போகின்றன இந்த கருவிகள்.

செயற்கைக் கோளைப் பயன்படுத்தி பூமியிலுள்ள எந்த ஒரு இடத்தையும் வெகு துல்லியமாய்க் காட்டும் வல்லமை படைத்தது தான் இந்த ஜி.பி.எஸ். ஆங்கிலத்தில் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என அழைக்கப்படும் இதற்கு தமிழில் பல பெயர்கள் உண்டு. புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்கள் உண்டு. உங்களுக்கு வசதியான ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது முதலில் அமெரிக்க ராணுவப் பயன்பாட்டுக்காய் ஆரம்பிக்கப் பட்ட விஷயம் தான். ராணுவத்துக்கு ரகசிய இடங்களை கண்டு சொல்லவும், இரவு பகல் பாராமல் சில இடங்களைக் கண்காணிக்கவும், துல்லியமாய் வேவு பார்க்கவும் இந்த ஜி.பி.எஸ் பயன்பட்டது. பிறகு அது காலத்துக்கேற்ற மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.

இன்றைக்கு நீங்கள் மொட்டை மாடியில் காயப் போடும் துணியில் அழுக்கு இருக்கிறதா என்பதைச் சொல்லுமளவுக்கு ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும். இது அச்சமும், வியப்பும் கலந்த ஒரு மனநிலையில் உங்களை இட்டுச் சென்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

இப்போதைக்கு இதன் மிகப்பெரிய பயன்பாடு கார்களில் வழிகாட்டுவது தான். ஒரு இடத்துக்குப் போகவேண்டும் என நீங்கள் சொன்னால். அந்த இடத்துக்குப் போக எந்தெந்த வழிகள் உண்டு. எப்படிப் போனால் சீக்கிரம் போகலாம். எந்த ரூட் ரொம்ப கடியான ரூட். எந்த ரூட்டில் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது என சர்வ சங்கதிகளையும் புட்டுப் புட்டு வைக்கும் ! ஊரோடு ஒத்து வாழ் என்பதைக் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு ஜி.பி.எஸ் சோடு ஒத்துவாழ் என காரோட்டும் போது நினைத்துக் கொண்டாலே போதும்

அமெரிக்காவுக்குச் சொந்தமானாலும் இதை உலகெங்கும் பயன்படுத்த அது அனுமதித்திருக்கிறது ! 1973ம் ஆண்டு தான் இது தனது பயணத்தைத் துவங்கியது ! 24 செயற்கைக் கோள்கள் இந்த ஜி.பி.எஸ் சிறப்பாகச் செயல்பட இரவு பகல் பாராமல் உழைக்கின்றன. இவை பூமியின் வட்டப்பாதையில் தினமும் இரண்டு முறை சுற்றி, தகவல்களை பூமிக்கு இறக்குமதி செய்து கொண்டே இருக்கின்றன.

சரி, இந்த செயற்கைக் கோள்களில் ஒன்று பழுதாகிப் போனால் என்ன செய்வது ? ஒட்டு மொத்த வழிகாட்டலும் தடைபடுமே ?? பயம் வேண்டாம். அப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து தான் மூன்று “எக்ஸ்ட்ரா” செயற்கைக் கோள்களை வான்வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு செயற்கைக் கோள் வலுவிழந்தால் இது “பை ரன்னராக” ஓடத் துவங்கும் !

அப்படியானால் 1973க்கு முன்னாடி “புவியிடங்காட்டிகள்” ஏதும் இல்லையா எனும் சந்தேகம் உங்களுக்கு வருகிறதா ? 1940களிலேயே புவியிடங்காட்டிகள் உண்டு. அவை ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள். லோரான் (LORAN) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (Decca Navigator) இரண்டும் மிக முக்கியமானவை. லாங் ரேஞ்ச் நாவிகேட்டர் (Long Range Navigator ) என்பதன் சுருக்கமே லோரான் ! இரண்டாம் உலகப் போரில் எதிரிகள் பதுங்கியிருக்கும் இடங்களை உளவு பார்த்து வில்லன் வேலை செய்ததில் இந்த் இரண்டுக்கும் கணிசமான பங்கு உண்டு !

இன்றைய ஜி.பி.எஸ் கள் உருவான கதை ரொம்ப சுவாரஸ்யமானது ! இந்த சிந்தனைக்கான முதல் விதையைப் போட்டவர் பெரிலின் நாட்டு இயற்பியலார் பிரைட் வார்ட் வின்டர்பெர்க் என்பவர். அவர் முன்வைத்த அணு கடிகாரத்தை (Atomic Clock ) செயற்கைக் கோள்களில் பொருத்தி  ஜெனரல் ரெலேடிவிடி யை சோதிக்கும் சிந்தனை இந்த ஜி.பி.எஸ்களின் அடிப்படை. இதை அவர் 1956ம் ஆண்டு வெளியிட்டார்.

இரண்டாவது ஐடியாவைத் தந்தது ரஷ்யா ! 1957ம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் (sputnik) எனும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. ரிச்சர்ட் கிரெஷ்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ரேடியோ அலைகளைக் கவனித்து வந்தார்கள். செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த வேறுபாடு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதையே அந்த வேறுபாடு மிகத் துல்லியமாகச் சொன்னது ! முதல் சிந்தனையையும், இரண்டாவது சிந்தனையையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டதில் இன்றைய ஜி.பி.எஸ் உருவானது !

அமெரிக்க கடற்படை உருவாக்கிய டிரான்சிட் எனும் ஜி.பி.எஸ் கருவிக்கு செயற்கைக் கோளால் இயங்கிய முதல் ஜி,பி.எஸ் எனும் பெயரைக் கொடுக்கலாம். தப்பில்லை ! 1960 ம் ஆண்டு இது வெள்ளோட்டம் விடப்பட்டது.

கடற்படை இப்படி  டிரான்சிட் டை அறிமுகம் செய்ததால் வான்படையும் தன் பங்குக்கு ஒரு புவியிடங்காட்டியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பெயர் மொஸைக் (MOSAIC). ஒரே விஷயத்தை தனித்தனியே முயல்வதை விட கூட்டாக முயற்சி செய்யலாமே எனும் யோசனையில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

1973ம் ஆண்டு 12 இராணுவ அதிகாரிகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்த ஒரு புவியிடங்காட்டிக்கான வழி  வகைகளைக் குறித்து விவாதித்தார்கள். டி.என்.எஸ்.எஸ் (DNSS ) எனப்படும் டிஃபன்ஸ் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Defence Navigation Satelitte System ) அங்கே உருவானது. அது பின்னர் நேவ்ஸ்டார் (Navstar) என்றழைக்கப்பட்டு, அதன் பின் நேவ்ஸ்டார் ஜி.பி.எஸ் (Navstar – GPS ) என்றாகி கடைசியில் வெறும் ஜி.பி.எஸ் என்று நிலை பெற்றுவிட்டது !

ஜிபிஎஸ் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா என்றாலே அலர்ஜி தானே ! அவை இதைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. ஜி.பி.எஸ் போல தனியே ஒரு சமாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காய் இருக்கிறது.

குறிப்பாக, ரஷ்யா தனது ராணுவப் பயன்பாட்டுக்காய் வைத்திருக்கும் குளோனாஸ் (GLONASS) தன்னிச்சையாய் இயங்கக் கூடியது. த ரஷ்யன் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் ( The Russioan GLObal Navigation Sattelite System) என்பதன் சுருக்கமே குளோனாஸ். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த சிஸ்டம் 1991ம் ஆண்டு உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. பின்னர் அரசியல் மாற்றங்களால் களையிழந்து போன அது கடந்த 2010ம் ஆண்டில் குளோனாஸ் கே (GLONASS-K) எனும் பெயரில் நவீனமானது !

ரஷ்யா வெற்றிபெற்றால் சீனா சும்மா இருக்குமா ? அவர்களுக்கு  காம்பஸ் இருக்கிறது. அவர்களுடைய  காம்பஸ் (COMPASS) கருவி பீடோ 2 (Beidou – 2 ) என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு சீனாவையும், அதன் சுற்றியுள்ள இடங்களையும் கவனிக்கும் வகையில் தான் இதன் பயன்பாடு இருக்கிறது. சீனாவின் திட்டம் அப்படியே அதை விரிவாக்கி உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் மாற்றுவதில் தான் என்பதில் சந்தேகம் இல்லை !

ரஷ்யா, சீனா போல ஐரோப்பியன் யூனியன் தனது பங்குக்கு உருவாக்கி வரும் புவியிடங்காட்டி கலிலியோ இடங்காட்டி. ஜி.என்.எஸ்.எஸ் (G.N.S.S) அல்லது கலிலியோ நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Galileo Navigation satellite System ) எனும் இந்த புவியிடங்காட்டி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரலாம் !

துவக்க காலத்தில் ஒரு ஜி.பி.எஸ் சிஸ்டத்தை உங்கள் காரில் வாங்கி வைக்கும் பணத்தில் ஒரு குட்டிக் கார் வாங்கிவிடலாம் எனுமளவுக்கு காஸ்ட்லி. இப்போதோ அது ரொம்ப மலிவு விலைக்கு வந்து விட்டது ! சில ஆயிரம் ரூபாய்களுக்கே இதை வாங்கி விடலாம். இன்னும் சொல்லப் போனால் எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த ஜி.பி.எஸ் அழகான வடிவமைப்பிலேயே வந்து விட்டது. ஒரு மொபைலை கையில் வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போய் விடலாம் எனும் சூழல் உருவாகிவிட்டது !

கூகிள் எர்த் (Google Earth) கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் தெருவைத் துல்லியமாய் நோட்டமிடும் இந்த மென்பொருளுக்கும் ஜி.பி.எஸ் தான் அடிப்படை. ஜி.பி.எஸ் இன் பயன்கள் நீண்டாலும் அது தனி மனித சுதந்திரத்தில் மூக்கு நுழைக்கிறது எனும் குற்றச்சாட்டு வலிமையாகவே எழுகிறது ! நோட்டம் விடுதல், வேவு பார்த்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கலாம் எனும் அச்சமும் உண்டு.

பொதுவாக, புவியிடங்காட்டி ஒரு இடத்தைக் கணிக்கவும் அதன் தூரத்தையும், நேரத்தையும் சொல்லவும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து அலைகளைப் பெறும். குறைந்தபட்சம் மூன்று செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் இதற்குத் தேவைப்படும்.

செயற்கைக் கோள் இடைவிடாமல் தொடர்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  எப்போது அந்தத் தகவல் அனுப்பப் படுகிறது? எந்த செயற்கைக் கோளில் இருந்து அது அனுப்பப் படுகிறது? அப்போது அந்த செயற்கைக் கோளின் இருப்பிடம் என்ன ? எனும் மூன்று கேள்விகள் மிக முக்கியமானவை. இந்த தகவல்களை பூமியிலுள்ள ரிசீவர்கள் பெற்றுக் கொண்டு செயற்கைக் கோளுக்கான தூரத்தைக் கண்டுபிடிக்கின்றன.

ஒர்ய் இருப்பிடைத்தைக் கண்டுபிடிக்க மூன்று செயற்கைக் கோள்கள் தேவை என்றோமில்லையா ? மூன்று கோளங்கள் போல இருக்கும் இந்த சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம் ! இதை விஞ்ஞானம் டிரைலேட்டிரேஷன் (trilateration) முறை என்கிறது. அடிப்படையில் செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் தகவலையும், அது வந்து சேர எடுத்துக் கொள்கின்ற நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த புவியிடங்காட்டி செயல்படுகிறது.

இதில் சின்ன ஒரு பிழை ஏற்பட்டால் கூட தகவலில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து விடும். ஒளியின் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் தகவல்களில் பிழை வரக் கூடாது என்பதற்காகத் தான் மூன்று செயற்கைக் கோள்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. தகவல்கள் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த ரிசீவர் கடிகாரத்தில் ஒரு குட்டித் தவறு நேர்ந்தால் கூட எல்லாம் குழப்பமாகிவிடும். அதாவது ஒரு வினாடியை இலட்சமாக உடைத்து, அதில் ஒரு பாகம் அளவுக்கு நேரப் பிழை ஏற்பட்டால், பூமியில் இடம் சுமார் 300 மீட்டர் தூரம் தூரமாய் போய்விடும் ! தகவலின் நேர்த்தி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இதற்கு மேல் ஆழமாகச் சொன்னால் நீங்கள் கணக்கு பாடம் நடத்துவது போல இருக்கும் என்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் !

0

ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது

எப்படா பேங்க் திறக்கும் பணம் எடுக்கலாம் என காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. பணம் எடுப்பதற்காக அரை நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டு வங்கியில் கியூ கட்டி நின்றதெல்லாம் நம் அப்பாக்களின் காலம். இப்போதைய ஏ.டி.எம் வசதி அதையெல்லாம் நிறுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி ஏ.டி.எம் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பரிமாற்றம், அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்காக மட்டுமே வங்கிப் படி ஏறினால் போதும் என்பதே இன்றைய நிலமை.

பெரும்பாலான வங்கிப் பரிவர்த்தனைகள் இணையத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது. இப்போது அது அப்படியே மொபைலுக்கும் தாவியிருக்கிறது. இதனால் “விர்ச்சுவல் பேங்க்” எனும் கான்சப்ட் பரவலாகத் துவங்கியிருக்கிறது.

விர்ச்சுவல் வங்கியை “இருக்கும், ஆனால் இருக்காது” என்று சொல்லலாம். அதாவது ஒரு வங்கி இருக்கும் ஆனால் அதற்கென தனியே கட்டிடங்கள் ஏதும் இருக்காது. எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் இணையம் மூலமாகவோ, ஏ.டி.எம் மூலமாகவோ தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சரி, நாம் ஏ.டி.எம் க்கு வருவோம். உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. நல்ல  குளு குளு ஏடிஎம் அறைகளுக்குள் நுழைந்து கார்ட் போடுகிறீர்கள். கடவுச் சொல் டைப் செய்கிறீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமென தட்டுகிறீர்கள். பணம் கொட்டுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு சைலன்டாகப் போய் விடுகிறீர்கள் !

“எப்படித் தான் இந்த சாதனம் இயங்குகிறது? “ என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா ? கொஞ்சம் சிம்பிளான வகையில் அதை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா ?

ஏ.டி.எம் என்பதன் விரிவாக்கம் “ஆட்டோமேட்டர் டெல்லர் மெஷின்” என்பது தான். அதை கனடாவில் ஏ.பி.எம் “ஆட்டோமேட்டட்  பேங்கிங் மெஷின்” என்கிறார்கள் கனடாவில். “எனி டைம் மணி” என்பதெல்லாம் ‘எப்பவும் பணம் கிடைக்கும்’ எனும் பொருளில் சும்மா சொல்வது ! மற்றபடி அதல்ல ஏடிஎம்மின் விரிவாக்கம்.

ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !

1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.

பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !  1967ம் ஆண்டு இங்கிலாந்தில் இன்னொரு வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். அப்போதைய ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒத்த ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்.

உங்களுக்கு முன்னால் இருக்கும் ஏ.டி.எம் மெஷின் கணினியோ, ஒரு மாயாஜாலம் செய்யும் கருவியோ கிடையாது. வருகின்ற தகவல்கள் அடிப்படையில் பணிபுரிகின்ற ஒரு கருவி அவ்வளவு தான். அதற்கான தகவல்கள் தருகின்ற மென்பொருள் கட்டமைப்பை “சுவிட்ச்” என்பார்கள். இந்த சுவிட்ச் மென்பொருள் ஏதோ தொலை தூரத்தில் இருக்கும்.

இதை இரண்டு விதமாக கணினியுடன் இணைக்கலாம். ஒன்று லீஸ்ட் லைன் எனப்படுவது நேரடியாக ஏ.டி.எம்மையும் கணினியையும் இணைப்பது. நான்கு வயர்கள், அதற்கான தனியான போன்லைன், பாயின்ட் டு பாயின்ட் என இது இருக்கும். இன்னொரு வகை “டயல் அப்” கனெக்‌ஷன். இதில் உண்மையான நேரடிக் கம்பித் தொடர்பு இருக்காது. மோடம் வழியாக, பொதுவான போன் தொடர்பு மூலம் இணைப்பு உருவாக்கப்படும்.

தேவைக்கு ஏற்ப எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்து கொள்ளலாம்., முதலாவது வகை ரொம்பக் காஸ்ட்லி. ஆனால் வேகம் அதிகம், தொடர்ந்து அதிக திறனுடன் செயல்படும். இரண்டாவது ரொம்ப சீப். அதற்கேற்பவே பணிகளின் வேகமும் இருக்கும்.

உங்கள் ஏடிஎம் கார்டை கொஞ்சம் பாருங்கள். ஏதோ ஒரு பதினாறு இலக்க எண் இருக்கிறது என்று நினைப்பீர்கள். சில கார்ட்களில் அதிகமாகவே உண்டு இப்போது. ஆனால் அந்த எண்ணுக்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. உங்கள் கையிலிருக்கும் கார்ட் எந்த கார்ட் என்பதை முதல் எண் சொல்லிவிடும். 4ல் ஆரம்பித்தால் விசா கார்ட், 5ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்ட், 6ல் ஆரம்பித்தால் டிஸ்கவர் என ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு சேவை வழங்குபவரைக் குறிக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சேவை வழங்குபவர், வங்கி அடையாளம், அக்கவுண்ட் நம்பர், என எல்லாவற்றின் கலவையுமாகவே அந்த கார்ட் எண் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கார்டின் பின்னால் ஒரு கருப்பு பட்டை போல ஒரு பகுதி உண்டு. அந்தப் பகுதியைத் தான் ஏ.டி.எம்மில் உள்ள “கார்ட் ரீடர்” வாசிக்கும். அது தான் முதல் படி. வாசித்த தகவலை அது முதல் கட்ட பரிசோதனைக்கு அனுப்பும். அந்த முதல் கட்ட பரிசோதனைத் தகவல்கள் ரொம்பச் சின்னவை. ஆனால் அதை ஏ.டி.எம் ஃபைலே சரிபார்க்கும்.

கார்டைப் போட்டபிறகு நீங்கள் கடவுச் சொல் கொடுப்பீர்கள். “வெல்கம்” என அது அழைக்கும். பிறகு ஏதேனும் பரிமாற்றம் நடத்த நீங்கள் முயலும் போது தான் கார்ட் ரீடர் வாசித்த தகவல் உங்கள் வங்கிக்குப் போகும்.

ஏடிஎம் பின்னால் ரொம்பவே பாதுகாப்பாக பணத்தை அடுக்கி வைக்கும் அறைகள் இருக்கும். பணத்தை அதன் எடையை வைத்து தான் ஏடிஎம் எண்ணும். அப்போது நோட்டுகள் ஒட்டிவந்தால் கண்டுபிடித்துவிடும். அப்படியே தனியே வைக்கும். கூடவே ஒரு “எலக்ட்ரானிக் ஐ” எனும் சென்சாரும் உண்டு. அது பணப்பெட்டியிலிருந்து ஒரு நோட்டு வெளியே வந்தாலும் கணக்கப் பிள்ளை போல குறித்து வைத்துக் கொள்ளும். அந்தத் தகவல் பல ஆண்டுகள் சேமிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டால் உங்களுக்குப் பணம் கிடைக்கிறது அல்லவா ? அதற்கு ஏ.டி.எம் நிறைய வேலைகளைச் செய்யும். முதலில் உங்களுடைய தகவலை சுவிட்ச்க்கு அனுப்பும். சுவிட்ச் அதைக் கொண்டு உங்களுடைய வங்கியைத் தேடும். பிறகு உங்கள் பைலைத் தேடும். வந்திருப்பது சரியான ஆள் தானா என்பதைப் பார்க்கும்.

கார்ட் சரியானது என்பதைச் சோதித்தபின். உங்கள் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கும். அதைப் பார்த்தபின் உங்களுடைய “ஒரு நாள் லிமிட்” தொகையைத் தாண்டி விட்டீர்களா என்று பார்க்கும். எல்லாம் பார்த்து பணம் கொடுக்கலாம் என முடிவு செய்த பின் ஏ.டி.எம் க்கு ஒரு தகவலை அனுப்பும். “ஆள் சரியான பார்ட்டி தான், பணம் கொடுத்துவிடு” ! அப்போது தான் ஏ.டி.எம் தனது சுருக்குப் பையைத் திறந்து பணத்தைத் தரும்.

இந்த எல்லா வேலைகளையும் ஏடிஎம் சில வினாடிகளுக்குள் செய்து முடிக்கும். ஒரு நாலு வினாடி தாமதம் ஆனால் உள்ளே நிற்கும் நமக்கு எவ்வளவு டென்ஷனாகும் இல்லையா ?

சொல்ல மறந்துட்டேன். தகவல்களை ஏ.டி.எம் கணினிக்கு அனுப்பும் போது அப்படியே அனுப்பாது. அதை குறியீடுகளாக மாற்றித் தான் அனுப்பும். அப்போது தான் வழியில் யாராவது வந்து தகவலைத் திருடினால் கூட பயன்படுத்த முடியாது. உதாரணமாக நீங்கள் “123456” எனும் கடவுச் சொல்லை பயன்படுத்தினால் அது “முனுசாமி” எனவும் போகலாம். அல்லது 7877786 என போகலாம். அது பயன்படுத்தப்படும் “என்கிரிப்ஷன்” மென்பொருளைப் பொறுத்தது.

ஸ்டேட்பேங்க், இந்தியன் வங்கி என ஏகப்பட்ட வங்கிகள் உண்டு இல்லையா ? இவை விசா, மாஸ்டர்கார்ட் என யாருடைய சேவையை நாடுகிறார்களோ அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதை “செட்டில்மென்ட்” என்பார்கள். ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ல் நீங்கள் சிட்டி பேங்க் கார்ட் போட்டு பணம் எடுக்கும் போது வங்கிகளுக்கு இடையேயான செட்டில்மென்டும் நடைபெறும் ! இவையெல்லாம் உடனுக்குடன் நடப்பதில்லை. பெரும்பாலும் தினசரி இரவில் நடக்கும்.

இப்படி மின் தகவல் மூலம் பண பரிமாற்றம் செய்வதி எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர் என்பார்கள். இங்கே மென்பொருளைத் தயாரிப்பவர்கள் சாஃப்ட்வேர் எஞ்ஞினீர்கள். இவர்கள் தயாராக்கும் சுவிட்ச் வழியாகத் தான் எல்லா தகவலும் வரும், போகும். இந்த சுவிட்சுக்குள் வந்து போகும் ஒவ்வோர் தகவலுக்கும் இவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். நாள் தோறும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து போகின்றன. சிறு துளிப் பெருவெள்ளம் போல மென்பொருள் நிறுவனங்கள் அள்ளிக் கொட்டுவது இப்படித் தான் !

இனிமேல் ஏடிஎம் மெஷின் முன்னால் நிற்கும்போது இந்த விஷயங்களெல்லாம் மனசுக்குள் வரும் தானே ?

வை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.

திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார்.

வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப்  பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம் !

IEEE802.11 என்பது இதன் தரக் கட்டுப்பாட்டு அடையாளம். ஆனால் வை-ஃபைக்கு மட்டுமேயான ஸ்பெஷல் அடையாளமல்ல. இந்த வை-ஃபை காப்பீட்டைக் கைவசம் வைத்திருக்கும் கர்வத்துக்குரியவர்கள் வை-ஃபை அலையன்ஸ் நிறுவனத்தினர் என்பதை எதற்கும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். வை-ஃபையை வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வர்க் WLAN ( Wireless Local Area Network) எனவும் அழைக்கிறார்கள். துவக்க காலத்தில் இந்த வை-ஃபை வேவ்லேன் (WaveLan) என்று தான் அழைக்கப்பட்டது.

கணினிகள், மொபைல்கள், இன்னபிற எலக்ட்ரானிக் கருவிகள் இன்டர்நெட்டில் இணைந்து கொள்வதற்கு தான் இன்றைக்கு வை-ஃபை பெருமளவில் பயன்படுகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் எல்லை பெரிய அளவில் இருப்பதில்லை. சாதாரணமாக இவை 20 மீட்டர் எல்லைக்குள்ளே தான் இயங்கும். வயர்லெஸ் வசதியை உருவாக்கும் ஒவ்வொரு அனுமதிப் புள்ளியின் (அக்ஸஸ் பாயின்ட்) எல்லையும் இவ்வளவு தான்.

வை-ஃபை பயன்படுத்தும் கருவிகளையெல்லாம் இணைத்துக் கட்டும் புள்ளியை வயர்லெஸ் அக்ஸஸ் பாயின்ட் என்பார்கள். (WAP – Wireless Access Point). வயர்லெஸ் இணைப்பு வசதி கருவியில் இல்லாத பட்சத்தில் அது யூஎஸ்பி, கார்ட் போன்றவற்றால் இணைப்பை உருவாக்குவதுண்டு. இவற்றை வயர்லெஸ் அடாப்டர்கள் (Wireless Adaptor)  என்கிறோம். வயர்லெஸ் இணைப்பை பிரித்து கருவிகளுக்கு அனுப்பும் முக்கியமான பணியைச் செய்பவற்றை வயர்லெஸ் ரவுட்டர்கள் என்கிறோம். ஒரு வயர்லெஸ் இனைப்புடன், இன்னொரு வயர் இணைப்பும் தொடர்பு கொள்ள முடியும். இதை “நெட்வர்க் பிரிட்ஸ் கணெக்‌ஷன்” என்பார்கள்.

பொதுவாக ஒரு அக்ஸஸ் பாயின்ட் எல்லையில் முப்பது கருவிகளை வயர்லெஸ் மூலம் இணைக்கலாம் என்பது கணக்கு. அப்புறம் எப்படி பெரிய பெரிய விமான நிலையங்களிலெல்லாம் முழுக்க முழுக்க வயர்லெஸ் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் சிம்பிள் ! அதற்கு அவர்கள் நிறைய அக்ஸஸ் புள்ளிகளைப் பயன்படுத்துவார்கள்.

ஒவ்வொரு 20 மீட்டர் சுற்றளவுக்கும் ஒவ்வொரு பாயின்ட் வைத்து பல மைல்கள் தூரத்துக்கு இந்த எல்லையை விரிவாக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். அக்ஸஸ் பாயின்ட் என்பதை ஹாட் ஸ்பாட் என்றும் அழைப்பதுண்டு. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குத் தாவும் போது இந்த இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை. அப்படி துண்டிக்கப்படாமல் இருக்க கொஞ்சம் ஒன்றன் மேல் ஒன்றாக இதை நிறுவுவார்கள்.

ஒட்டுமொத்தமான வயர்லெஸ் அமைப்பை மூன்று விதமாக அமைக்கிறார்கள். ஒன்று அக்ஸஸ் பாயின்ட் மூலம் கருவிகளை இணைப்பது. இதை ஏ.பி (AP – Based ) வகை என்கிறார்கள். ஒரு ரவுட்டரில் இருந்து சுவிட்ச் மூலமாக பல்வேறு அக்ஸஸ் பாயின்ட்கள், அதற்கேற்ப கருவிகள் என இதன் அமைப்பு இருக்கும்.

இரண்டாவது வகை பீர் – டு- பீர் (Peer – to – Peer ) எனப்படும். இந்த வகையைச் செயல்படுத்த அக்ஸஸ் பாயின்ட்கள் தேவையில்லை. ஒரு எல்லைக்குள் இருக்கும் கருவிகள் எல்லாம் அந்த எல்லையில் இருக்கும் வயர்லெஸ் அமைப்பில் தானாகவே இணைந்து கொள்ள முடியும் என்பது இதன் வசதி. கொஞ்சம் எளிதானது, செலவும் கம்மி.

பாயின்ட் – டு – மல்டி பாயின்ட் (point to multi point) என்பது மூன்றாவது முறை. ஒரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க் (LAN) இன்னொரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க்குடன் கம்பி இல்லாமலேயே இணையும் நுட்பம் இது. இரண்டு கட்டிடங்களிலும் வயர் இணைக்கப்பட்ட வலையமைப்பு இருக்கும். ஆனால் இரண்டுக்கும் இடையேயான இணைப்பு வயர்லெஸ் ஆக இருக்கும் என்பது தான் இந்த அமைப்பு.

வயர்லெஸ் நெட்வர்க் களின் தலைவலி அதன் பாதுகாப்புப் பிரச்சினையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்நுழைய விரும்பும் ஏகப்பட்ட டெக்னாலகி வில்லன்கள் உண்டு. அவர்கள் எதை எப்படி உடைக்கலாம் என கண்ணில் தொழிழ்நுட்பம் ஊற்றிக் காத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்ப பல்வேறு தொழில் நுட்ப மாற்றங்களை வை-ஃபை சந்தித்து வந்திருக்கிறது !. முதலில் WEP (Wired Equivalent privacy) எனும் தொழில் நுட்பத்தை வை-ஃபை பயன்படுத்தியது. அது ரொம்ப சிம்பிளாக உடைக்கக் கூடிய பாதுகாப்பாய் மாறிப் போனது.

இப்போது WPA மற்றும் அதன் அட்வான்ஸ் வடிவங்கள் வந்து விட்டன. WiFi Protected access என்பதன் சுருக்கம் தான் இந்த WPA. பல அடுக்குப் பாதுகாப்புகள் இப்போது வந்து விட்டன. தகவலை சங்கேத மொழியில் மாற்றுவது, கடவுச் சொல் பயன்படுத்துவது இப்படி. தொழில்நுட்பங்கள் வளர வளர அது தொடர்பான நவீனங்களும் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொள்வது ஆச்சரியமில்லை தானே !

சரி, இந்த வை-ஃபை இணைப்பு, அதற்கான வசதிகளை உருவாக்குவதெல்லாம் நிறுவனங்களுக்குச் சரிப்பட்ட விஷயம். ஒருவேளை உங்கள் வீட்டில் ஒரு பிரத்யேக வை-ஃபை இணைப்பு வைக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் ? என்ன செய்வது ? இப்படி ஒரு கேள்வியை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பியிருக்கிறார்கள் நொவாடெல் வயர்லெஸ் நிறுவனத்தினர். அவர்களுடைய அட்டகாசமான தயாரிப்பு தான் மை-ஃபை (MiFi). 2009ம் ஆண்டு இது அறிமுகமானது ! மை வை-ஃபை( My WiFi) அதாவது என்னுடைய சொந்த வயர்லெஸ் இணைப்பு என்பதன் சுருக் மொழி தான் மை-ஃபை என்பது !

இது இயங்கும் விதம் ரொம்ப சிம்பிள். இதை ஒரு மொபைல் போனுடன் இணைக்க வேண்டியது தான் ஒரே வேலை. மொபைலில் டேட்டா பிளான் உட்பட்ட அத்தியாவசிய சங்கதிகள் இருக்க வேண்டியது அவசியம். மொபைலை இந்த சின்னக் கருவியுடன் இணைத்து விட்டால் உங்களுடைய வீட்டில் உங்களுக்கே உங்களுக்கான வயர்லெஸ் தயார் ! ஒரு ஐந்து கருவிகளை அந்த வயர்லெஸ் இணைப்பு மூலம் நீங்கள் இணைக்க முடியும். வீட்டிலுள்ளவர்களுக்கான பிரத்யேக வயர்லெஸ் இணைப்பு உருவாக்கத்துக்கு இந்த வழி ரொம்ப எளிதானது.

அமெரிக்காவில் 2009ம் ஆண்டு மே மாதம் அறிமுகமான மை-ஃபை இன்று நெதர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், எகிப்து ஸ்பெயின், கனடா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் மிகப்பிரசித்தம். இதிலும் ஒவ்வோர் நவீனப் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்திய வரவு 4ஜி வசதியுள்ள மை- ஃபை இணைப்பு.

பிராட்பேண்ட் வசதியைப் பொறுத்தவரை வயர்லெஸ் வசதி ஏற்கனவே நமது நாட்டிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பது நாம் அறிந்ததே. இதன் காரணகர்த்தா, தென்கொரியாவிலுள்ள டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கிய மைப்ரோ எனும் கருவி என்பதையும் அறிந்து வைத்திருப்பது சுவாரஸ்யமானது !

துவக்க காலத்தில் இந்த வை-ஃபையினால் உலகமே முழுமையாய் வயர்லெஸ் இணைப்பு பெற்று விடும் என நினைத்தார்கள். அந்த மாற்றம் அத்தனை விரைவாக நடக்கவில்லை. கலிபோர்னியாவிலுள்ள சன்னிவேல், மினிசோடாவிலுள்ள மினியாபோலிஸ் போன்ற அமெரிக்க நகரங்கள் முதல் பெருமையைப் பெற்றுக் கொண்டன. அமெரிக்காவுக்கு வெளியே ஜெருசலேம் போன்ற இடங்கள் போட்டியில் வெல்ல, நமது இந்தியாவில் மைசூர் 2004ம் ஆண்டில் இந்தியாவின் முதல் வயர்லெஸ் இணைப்பு நகரம் எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது ! லண்டன் உட்பட பல நகரங்கள் முழுக்க வயர்லெஸ் இணைப்பு கொடுக்கும் திட்டங்களை இன்னும் செயல்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சிக்கல் என்னவென்றால் ரொம்ப அதிகம் பேர் பயன்படுத்தும் இடமாக இருந்தாலோ, ரொம்ப அதிக ரேடியோ அலைகள் அலையும் இடமாக இருந்தாலோ இந்த வயர்லெஸ் அமைப்பு அதிக வேகமுடையதாக இருப்பதில்லை. எனவே பெரிய அப்பார்ட்மென்ட், நெரிசலான நகரங்கள் போன்ற இடங்களில் இதன் செயல்திறன் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. 2.4 GHz மற்றும் 5 GHz எனும் இரண்டு ரேடியோ அலை பிரீக்வன்ஸியில் இது வேலை செய்தாலும் முந்தையதற்குத் தான் கவரேஜ் அதிகம் !

எந்த விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் விதி. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் போகவில்லை. வை-ஃபையினால் ஊரு முழுக்க எலக்ட்ரோ மேக்னட்டிக் அதாவது மின்காந்த அலைகளின் ஆதிக்கம் தான். அதனால் உடல்நலனில் ஏகப்பட்ட பாதிப்புகள் நேர்கின்றன என பலரும் கூக்குரல் போட்டார்கள். சுமார் 725 பேர் தங்களுக்கு “எலக்ட்ரோமேக்னட்டிக் ஹைப்பர்சென்சிடிவிடி” இருப்பதாகப் புகார் கூறியிருந்தார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக இவர்களுக்கு வை-ஃபை தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த சில ஆய்வுகள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை உருவாக்கியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ரொம்ப நேரம் வை-ஃபை கனெக்‌ஷனுடன் மடியிலேயே வைத்து வேலை பார்த்தால் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து என ஒரு ஆராய்ச்சி ஏதேன்ஸ் பல்கலைக்கழகத்தில் வெளியாகி வெலவெலக்க வைத்தது. இன்னொரு ஆராய்ச்சி ஆண்களுக்கு ஞாபக சக்தியை இது குறைக்கும் என மிரட்டியது. ஆனால் உலக நலவாழ்வு விஷயத்தில் கருத்துகளை அறுதியிட்டும் கூறும் இரண்டு முக்கியமான அமைப்புகள் இதை மறுத்திருப்பது ஆறுதல் செய்தி.

அமெரிக்காவிலுள்ள உலக நலவாழ்வு நிறுவனம் (WHO – World health organization) குறைந்த அளவிலான மின்காந்த அலைகளையே வை-ஃபை வெளியிடும் எனவே பயப்படத் தேவையில்லை என்றது. யூ.கேவிலுள்ள ஹெல்த் புரட்டக்‌ஷன் ஏஜென்சியும் அதை ஆதரித்தது. ஒரு வருடம் முழுவதும் வை-ஃபை பயன்படுத்துவதும், 20 நிமிடம் மொபைலில் பேசுவதும் ஒரே அளவிலான மின்காந்த அலைகளின் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த அமைப்பு சொன்னது.

இணையம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது எனும் சூழலை நோக்கி உலகம் நடை போடுகிறது. நவீனங்கள் எல்லாமே இன்று வை-ஃபை அல்லது, 3ஜி போன்ற வசதிகளுடன் தான் வருகின்றன. எனவே வயர்லெஸ் நுட்பமும் அசைக்க முடியாத வலுவான இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் வை-ஃபை குறித்து இவ்வளவேனும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது தான் இல்லையா ?

Thanks : Daily Thanthi, Computer Jaalam

ஐ.பி ( IP Address ) ! கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும் ? விஷயம் தெரிந்த சில மணி நேரங்களுக்குள் சைபர் கிரைம் காவலர்கள் வந்து உங்களை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.

யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய இடத்திலிருந்து நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியது எப்படி போலீசுக்குத் தெரிந்தது ? என நீங்கள் வியந்து கொண்டே கம்பி எண்ண வேண்டியது தான். உங்களுக்கு இங்கே வில்லனாக மாறியது ஐ.பி அட்ரஸ் (IP address) எனப்படும் இன்டர்நெட் புரோட்டோகால் அட்ரஸ் (Internet Protocol Address ) தான். இன்டர்நெட் புரோட்டோகாலைத் தமிழில் இணைய நெறிமுறை என்கிறார்கள்.

ஊரில் எந்த மூலையில் உங்கள் வீடு இருந்தாலும் தபால்காரர் சைக்கிளை மிதித்துக் கொண்டு உங்கள் வாசலுக்கு வருவதுண்டு இல்லையா ? அவருக்குக் குழப்பமே இருக்காது. காரணம் உங்கள் வீட்டுக்கென தனியே ஒரு விலாசம் இருப்பது தான். அதே போல ஒவ்வொரு கணினிக்கும் இருக்கும் விலாசம் என்று இந்த ஐபி அட்ரஸைச் சொல்லலாம். நமக்கெல்லாம் வார்த்தைகள் புரியும். கணினிகளைப் பொறுத்தவரை எல்லாமே பூச்சியம், மற்றும் ஒன்று எனும் எண்கள் தான். எனவே தான் இந்த ஐபி அட்ரஸ் வெறும் எண்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கணினியில் டாஸ் பிராம்ட்டில் போய் ipconfig என டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள். உடனே உங்கள் கணினியின் ஐ.பி எண் திரையில் தெரியும். இந்த முகவரி உங்கள் கணினிக்கானது ! இதை வைத்துத் தான் உங்கள் கணினியில் இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.

ஒவ்வொரு ஐ.பி எண்ணும் நான்கு பாகங்களைக் கொண்டது. உதாரணமாக 123.123.32.321 என்பதைப் போல ஒரு ஐ.பி எண் இருக்கும். உங்கள் கணினி எந்த நெட்வர்க்கில் இருக்கிறது, அந்த நெட்வர்க்கில் எந்த கணினி உங்கள் கணினி எனும் இரண்டு அடுக்கு அடையாளங்கள் இதில் உண்டு. இந்த ஐ.பி எண் முதலில் வடிவமைக்கப்பட்ட போது 32 பிட் அளவு கொண்ட எண்ணாகத் தான் வடிவமைத்தார்கள். இன்றும் இது பயன்பாட்டில் இருக்கிறது. நான்கு பாகமாக இருக்கும் இந்த எண்களில் ஒவ்வொரு எண்ணும் 0 முதல் 255 வரை இருக்கும். அதாவது 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை மட்டுமே ஐ.பி எண்கள் இருக்கும் ! இது இன்டர்நெட் புரோட்டோகால் வெர்ஷன் 4 (internet protocol version 4 : IpV4 ). சில ஐபி எண்களை நெட்வர்க்கில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென வைத்திருப்பார்கள். உதாரணமாக 255.255.255.255 எனும் எண்ணை நெட்வர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லாக் கணினிகளுக்கும் ‘மெசேஜ்’ அனுப்புவது போன்ற பணிகளுக்காய் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

ஆனால் புற்றீசல் போல சடசடவென அதிகரித்துக் கொண்டிருக்கும் கணினிகளின் எண்ணிக்கை ஐ.பி எண்களின் தட்டுப்பாட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 430 கோடி தனித்துவமான எண்களை மட்டுமே 32 பிட் வகையில் உருவாக்க முடியும். இதனால் தான் 1995ம் ஆண்டு IPv6 எனப்படும் ஒரு புதிய ஐ.பி அட்ரஸ் முறையை உருவாக்கினார்கள். இது 128 பிட்களால் அமைந்த எண் ! 2000லிருந்து இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐ,பி எண்கள் உள்ளுக்குள் பைனரி எண்களாக அதாவது வெறும் 0 மற்றும் 1 எனும் எண்களால் அமையும். நமக்கு அது வாசிக்கும் வசதியாக 112.18.78.120 என்பது போல சாதாரண எண்களாக அமையும். இப்படி வரும் எண்கள் ஐ.பி 4 வகையைச் சேர்ந்தவை. ஐபி 6 வகைகள் 2008:db8:0:1111:0:656:9:1 என்பது போல அமையும் !

ஐபி எண்கள் தனித்துவமானவை என்பதை எப்படி உறுதி செய்வது ? ஒரே எண் இரன்டு இடங்களில் வரும் வாய்ப்பு உண்டா ? எனும் பல கேள்விகளுக்கான விடையாக நிற்கிறது ஐ.ஏ.என்.ஏ (IANA) அமைப்பு. இன்டர்நெட் அசைன்ட் நம்பர்ஸ் அதாரிடி ( Internet Assigned Numbers Authority) என்பதன் சுருக்கம் இது. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட இது அமெரிக்க அரசின் கீழ் இயங்குகிறது. உலகிலுள்ள கணினிகளுக்கெல்லாம் தனித்தெனி பெயர் விலாசம் எல்லாம் இருப்பதை உறுதி செய்வது இந்த அமைப்பு தான் !

TCP/IP எனும் நெட்வர்க் முறைதான் இன்றைக்கு பெரும்பாலும் கணினிகளை வலையுடன் இணைக்கின்றன. எல்லா கணினிகளும் இணையத்தோடு இணைந்தே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நாம் அறிந்ததே. சில நிறுவனங்கள் தங்களுக்குள்ளே ஒரு சின்ன வலையமைப்பை உருவாக்கி தனியே இயங்கி வருகின்றன.

ஐபி அட்ரஸ் இரண்டு வகை உண்டு. ஒன்று நிரந்தர ஐபி விலாசம். இதில் உங்கள் கணினிக்கென ஒரு நிரந்தரமான எண் இருக்கும். இன்னொன்று டைனமிக் விலாசம். உங்கள் கணினியின் விலாசம் மாறிக் கொண்டே இருக்கும். நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளை டைனமிக் விலாசம் மூலம் தான் இணைக்கின்றன. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் இது தான். டி.ஹைச்.சி.பி Dynamic Host Configuration Protocol (DHCP) தான் இந்த டைனமிக் ஐ.பி அட்ரஸ் உருவாக்கி கணினிகளை இணைக்கும் வேலையைச் செய்கின்றன. எந்த முறையிலான விலாசம் ஆனாலும் அது தனித்துவமான எண்ணாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த ஐபி விலாசத்தில் உள்ள “பப்ளிக் ஐபி” பகுதியை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மையத்தில் அம்மைந்துள்ள  என்.ஐ.சி ( Network Information Center) அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பப்ளிக் ஐபி தான் தான் சர்வதேச அளவில் இணையங்களை இணைக்கும் பணியைச் செய்கிறது.

மொத்தம் ஐந்து பெரிய நெட்வர்க் பிரிவுகள் ஐபி பயன்பாட்டில் உள்ளன. A,B,C,D மற்றும் E என்பவை தான் அந்த ஐந்து பிரிவுகள். இதில் A  மிகப்பெரிய நெட்வர்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. சுமார் 17 மில்லியன் இணைப்புகளை இந்த நெட்வர்க்கில் இணைக்கலாம். B அதற்கு அடுத்த பிரிவு. இதில் 16 ஆயிரம் நெட்வர்க்கள் இணைக்கலாம், ஒவ்வொரு நெட்வர்க் இணைப்பிலும் 64 ஆயிரம் கணினிகள் இணைக்கலாம். C தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அலுவல் நெட்வர்க்களில் பயன்படுத்தப்படும். 21 மில்லியன் நெட்வர்களை இதில் இணைக்கலாம். ஒவ்வொரு நெட்வர்க்கிலும் 254 கணினிகளை இணைக்கலாம். D பிரிவு ஆடியோ, வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. E பிரிவு ஆராய்ச்சிகளுக்கானது.

பெரிய நிறுவனங்களில் ஒரு நெட்வர்க்கை சின்னச் சின்ன உள் வலையமைப்பாய்ப் பிரிப்பார்கள். ஒவ்வொரு சின்னச் சின்னக் குழுவையும் “சப்நெட்” (குட்டி வலை) என்று அழைப்பார்கள். இதனால் அந்த சின்னச் சின்னக் குழுக்கள் நெருக்கமாகவும், வேகமாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஏதேனும் நெட்வர்க் பிரச்சினை வந்தால் கூட அந்த ஒரு ஏரியாவை மட்டும் சரி பண்ணினால் போதும் என்பது போன்ற பல வசதிகள் இதில் உண்டு.

உங்களுடைய வீட்டில் இருக்கும் கணினியை நீங்கள் இணையத்தில் சேர்ந்தால், உங்களுடைய இன்டர்நெட் சேவை வழங்குநர் (ISP – Internet Service Provider) தான் உங்களுக்கு ஐபி விலாசம் தருவார். ஒருவேளை நீங்கள் ஒரு ரவுட்டர் வைத்து வயர்லெஸ் மூலம் நான்கைந்து கணினிகளை இணைத்தால் ரவுட்டர் ஒரு ஐபியைப் பெறும். உங்கள் வீட்டிலுள்ள கணினிகள் எல்லாம் சப்நெட் எனும் குட்டி வலையாக மாறி ஐபிகளைப் பெறும். அது சப்நெட் ஆக மாறி சப்நெட்மாஸ்க் எனும் இன்னொரு அடுக்கு அடையாள எண்களையும் பெறும் என்பது தான் இதிலுள்ள விஷயம். இந்த ஐபி விலாசங்களில் இரண்டு பாகம் உண்டு. ஒன்று எந்த வலையமைப்பில் அதாவது நெட்வர்க்கில் இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது. இன்னொன்று அந்த வலையமைப்பில் எந்த கணினி அந்த குறிப்பிட்ட கணினி என இனம் காண்பது.  நிறைய குட்டிக் குட்டி வீடுகள் இருக்கும் அப்பார்ட்மென்டில் கதவு எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? முதலில் வீட்டு விலாசத்தை வந்தடைவார்கள், பிறகு கதவு எண்ணை நோக்கிப் போவார்கள். அந்தமாதிரியான விஷயம் தான் இது.

சப்நெட் மாஸ்க் எண்கள் 255.0.0.0 , 255.255.0.0, 255.255.255.0 என மூன்று வகைகளாக அமைப்பார்கள். 255 என்பது 1111111 எனவும் 0 என்பது 00000000 எனவும் (எட்டு ஒன்று, எட்டு பூச்சியம்) உள்ளே பதிவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம் முதலிலேயே சொன்னது போல, நாம் புத்திசாலி என நினைக்கும் கணினிக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு என்கள் தான் 0 மற்றும் 1 ! இத்தகைய ஒவ்வொரு குட்டி சப்நெட்களிலும் முதல் ஐபி எண் அந்த குட்டி நெட்வர்க்கை அடையாளம் காட்டவே எப்போதும் பயன்படும் என்பது சுவாரஸ்யத் தகவல்.

இந்த ஐபி அட்ரஸ் இல்லாமல் போனால் இணையம் எனும் ஒரு விஷயமே சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல், தகவல் தேடல், சேட்டிங், விளையாட்டு என எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த ஐபி அட்ரஸ் தான் !

ரகசியமாய் நீங்கள் இணையத்தில் எங்கேயெல்லாம் உலவுகிறீர்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் இந்த ஐபி அட்ரஸைக் கொண்டு மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உங்களை வெலவெலக்க வைக்கலாம் என்பது உங்களுக்கு நான் தரும் கிளைமேக்ஸ் ஷாக் !

USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

‘ஃபிளாப்பி டிஸ்ட்’ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்டது. ஆனால் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலமை இப்படி அல்ல. ஃப்ளாப்பி டிஸ்க் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை ஒரு கௌரவமாகவே பார்த்த தலைமுறை அது ! அதன் சேமிப்பு அளவே 1.44 மெகா பைட் தான் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.

இப்போது ஃப்ளாப்பி டிஸ்க் முற்றிலுமாக வழக்கொழிந்து போய்விட்டது. கணினி நிறுவனங்களும் தங்கள் கணினிகளை ஃப்ளாப்பியைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு ஒரு காரணம் அதி விரைவாகவும், திறமாகவும், சக்தியுடனும் இருக்கும் யு.எஸ்.பி டிரைவ்கள் தான்.

எம்.சிஸ்டம்ஸ் எனும் இஸ்ரேல் நிறுவனத்தைச் சேர்ந்த அமிர் பார், டோவ் மோரான் மற்றும் ஓரோன் ஓக்டான் ஆகியோர் இணைந்து தான் இந்த யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவுக்கான முதல் முயற்சியின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏப்ரல் 1999ம் ஆண்டு அவர்கள் இதற்கான காப்புரிமையை வாங்கினார்கள். உலகம் 2000 எனும் மைல் கல்லை எட்டிய ஆண்டின் செப்டம்பர் மாதம் டிஸ்க்-ஆன் – கீ (Disk On Key ) எனும் பெயரில் முதல் தயாரிப்பையும் வெளியிட்டார்கள். சிங்கப்பூரிலுள்ள டிரெக் டெக்னாலஜி, நெட்டாக் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களெல்லாம் தாங்கள் தான் இதன் உண்மைச் சொந்தக்காரர்கள் என கேஸ் போட்டதும், மல்லுக்கு நின்றதும் இங்கே விவரிக்காத தனிக்கதை.

டிரக் டெக்னாலஜி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் 2000 ஆண்டில் தங்களது தயாரிப்பையும் சந்தையில் கொண்டு வந்தார்கள். இதில் டிரக் டெக்னாலஜி தனது தயாரிப்பை “தம்ப் டிரைவ்” (Thumb Drive) என்று பெயரிட்டு அழைத்தது. ஐபிஎம் தனது தயாரிப்பை டிஸ்க் ஆன் கீ என பெயரிட்டழைத்தது. முதலில் அது வெளியிட்ட தயாரிப்பில் சேமிப்பு அளவு 8 எம்பி தான். ஃப்ளாப்பி டிஸ்களை விட ஐந்து மடங்கு அதிக சேமிப்புத் திறன் என அப்போது கொட்டமடித்து அதை விற்றார்கள்.

இந்த சேமிப்பு கருவியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதிலுள்ள மெமரி பகுதிகளை மின் முறைப்படி அழிக்கலாம், மீண்டும் எழுதலாம் என்பது தான். EEPROM (Electrically Erasable Programmable read-only memory )  எனும் பழைய முறை தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம். இந்த பழைய நுட்பம் பெரிய பெரிய மெமரி பகுதிகளை அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. புது யூ.எஸ்.பி டிஸ்க் களில் குட்டிக் குட்டி நினைவிடங்களைக் கூட துல்லியமாக அழிக்க முடியும். கூடவே பெரிய பிளாக் களை அழிப்பதும் மிக சுலபம். இதன் வேகம் அதிகமாய் இருக்க இவை தான் காரணம்.

நாம் இப்போதெல்லாம் கையில் வைத்திருக்கும் யு.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ்களில் பழைய காலத்தோடு ஒப்பிடும்போது பல ஆயிரம் மடங்கு அதிக தகவலைச் சேமிக்க முடியும். ஒரு சுண்டுவிரல் அளவுள்ள டிரைவ்கள் 256 ஜிபி கொள்ளளவு என்றெல்லாம் வியக்க வைக்கின்றன. நாளை இது பல டெராஃபைட், ஸீட்டா பைட் என எகிறிக் குதித்து ஓடும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் 2 டெர்ரா பைட் அளவுள்ள பென் டிரைவ்களை உருவாக்கும் முயற்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது

இந்த யூ.எஸ்.பி டிரைவ்களில் பெயரில் தான் ‘டிரைவ்’ இருக்கும். ஆனால் எதுவுமே நகராது என்பது இதன் பிளஸ் பாயின்ட் ! பழங்கால ப்ளாப்பி டிரைவ்கள், டிஸ்க்கள், சிடி ரோம்கள் போன்ற ஒட்டு மொத்த சங்கதிகளையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் போட்டுவிட்டது இந்த யூ.எஸ்.பி டிரைவ்.

இந்த யூ.எஸ்.பி டிரைவ்கள் சர்வதேச “யூ.எஸ்.பி மாஸ் ஸ்டோரேஜ்” தரத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இன்றைய பெரும்பாலான செயலிகளில் இயங்கக் கூடிய வகையில் அந்த தரநிர்ணயம் இருப்பது சிறப்பம்சம். வின்டோஸ் தவிர, லினெக்ஸ், மேக்,யுனிக்ஸ் போன்ற பல செயலிகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இது இயங்கும்.

ஒரு பிரிண்டட் சர்க்கியூட் போர்ட் இதனுள் இருக்கும் கூடவே ஒரு கனெக்டர். இந்த யூ.எஸ்.பி டிரைவ் வேலை செய்ய வேண்டுமென்றால் சக்தி தேவைப்படும். அந்த சக்தியை டிரைவ் ஆனது இணைக்கப்பட்டுள்ள கணினியிலிருந்தோ அல்லது வேறு மின் கருவிகளிலிருந்தோ தான் பெற்றுக் கொள்கிறது.

USB2.0 தான் மிகவும் பிரபலமான இரண்டாவது தலைமுறை யூ.எஸ்..பி இணைப்பு தொழில் நுட்பம். அதிகபட்சமாய் வினாடிக்கு 60 மெகா பைட் அளவுக்கு தகவல்களை இது எழுதவும், வாசிக்கவும் செய்யும். இதற்கு முந்தைய முதலைமுறை யூ.எஸ்.பி இணைப்பான USB 1.1 ன் சக்தி என்பது வினாடிக்கு 1.5 மெகா பைட் எனுமளவில் தகவல் பரிமாற்றத்தைச் செய்தது என்பது சுவாரஸ்யமான ஒப்பீட்டுச் செய்தி !

2008ம் ஆண்டு இதன் அடுத்த படியான USB 3.0 தயாரானது. வினாடிக்கு 625 மெகா பைட் என்பது இதன் அளவு. 2008ல் அறிமுகமானாலும் அது உடனே பயன்பாட்டில் வரவில்லை. 2010 ம் ஆண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் பழைய முறை முழுமையாக நிறுத்தப்படாமல் இன்னும் தொடர்கிறது.  இன்றைய கணினிகளை கவனித்தால் உங்களுக்கே தெரியும், அவையெல்லாம் USB 2.0 மற்றும் USB 3.0 எனும் இரண்டு வகை போர்ட் களுடனும் தான் தயாராகின்றன.

யூ.எஸ்.பி களில் முக்கியமாக நான்கு பாகங்கள் உண்டு. முதலாவது கணினிக்கும், ஃப்ளாஷ் டிரைவ்க்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் பிளக். இதை ஸ்டான்டர்ட் A யூ.எஸ்.பி பிளக் ( Standard A USB Plug) என்கிறார்கள். இரண்டாவது NAND ஃப்ளாஷ் மெமரி சிப். சாதாரண டிஜிடல் கேமராக்களில் பயன்படுத்தப்படுவது இந்தப் பகுதி மட்டும் தான். யூ.எஸ்பி மாஸ் ஸ்டோரேஜ் கன்ட்ரோலர். இதில் ஒரு சின்ன மைக்ரோ கன்ட்ரோலரும் இருக்கும். இது தான் யூ.எஸ்.பியின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் பகுதி. இவற்றையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் அல்லது மெல்லிய உலோக ஆடைக்குள் அடைத்து விட்டால் நம் கையில் இருக்கும் ஃப்ளாஷ் டிரைவ் ரெடி !

ஃப்ளாஷ் டிரைவ்களில் இரண்டு விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை மல்டி லெவல் செல் (Multi Level Cell) மற்றும் சிங்கில் லெவல் செல் (Single Level Cell) என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான மெமரி கார்ட்கள் மல்டி லெவல் செல் அதாவது பல அடுக்கு சேமிப்பு எனும் நுட்பத்தின் அடிப்படையிலானவையே. மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நினைவிட துணுக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைச் சேமிக்க முடிந்தால் அது மல்டி லெவல் சேமிப்பு. ஒரு தகவல் மட்டும் சேமிக்க முடிந்தால் அது சிங்கிள் லெவல் செல். மல்டி லெவல் செல்லில் நீங்கள் சுமார் 10 ஆயிரம் முறை தகவல்களை அழித்து அழித்து எழுதலாம். அதுவரை தாக்குப் பிடிக்கும். அதுவே சிங்கிள் எனில் ஒரு இலட்சம் தடவை நீங்கள் அழித்து எழுதினாலும் பாழாகாது என்பது வியப்பூட்டும் அம்சம்.

இன்றைக்கு இவை ரொம்பவே குட்டி வடிவத்துக்கு வந்து விட்டதால் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. பேனா, வாட்ச்கள், கத்தி, விளையாட்டுப் பொருட்கள், கீ செயின் என பலவற்றிலும் இந்த ஃப்ளாஷ் டிரைவ்கள் வந்து விட்டன.  இதில் ஏகப்பட்ட மேட் இன் டுபாக்கூர்கள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எட்டு ஜிபி என கூவி விற்பார்கள். வாங்கி கணினியில் போட்டால் அது எட்டு ஜிபி என காட்டும். ஆனால் நீங்கள் சேமிக்கத் துவங்கும் போது கொஞ்சம் சேமித்த உடனே, “நான் ஃபுல் ஆயிட்டேம்”பா என கை விரிக்கும் ! எனவே இந்த டிரைவ் விஷயத்தில் நம்பிக்கையான தயாரிப்புகளை வாங்குவதே ரொம்ப நல்லது !

சரி இதை எதற்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் தகவல் சேமிப்பு தான். கொஞ்சம் எம்பி3 பாடல்கள், கொஞ்சம் திருட்டு வீடியோக்கள், அல்லது கொஞ்சம் டேட்டா ஃபைல்கள். இதைத் தாண்டிய பயன்பாடு ரொம்பவே குறைவு. ஆனால் தொழில்நுட்பம் இதை பல வேறு பயன்பாடுகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது. சில மென்பொருட்கள் ஃப்ளாஷ் டிரைவகளில் வருகின்றன. அவை அங்கிருந்தே இயங்கவும் செய்கின்றன. கணினியில் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் தேவை இதன் மூலம் இல்லாமல் போய்விடுகிறது. இதை சாஃப்ட்வேர் விர்சுவலைசேஷன் (Software Virtualization) என்கிறார்கள்.

ஆப்பிள் இங்க். போன்ற சில நிறுவனங்கள் தங்கள் கணினியின் முழு ரீஸ்டோர் ஃபைல்களையும் இத்தகைய ஃப்ளாஷ் டிரைவ்களில் தந்து விடுகிறார்கள். ஒருவேளை கணினி பழுதாகிப் போனால் இந்த டிரைவைப் போட்டு இயக்க வேண்டியது தான் பாக்கி ! பழைய முறைகளான சிடி, டிவிடி போன்ற சமாச்சாரங்களெல்லாம் இதன் மூலம் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

இன்னொரு சுவாரஸ்யமான அம்சமாக இதில் காஃபியை ஊற்றி கணினியை உளவு பாக்கும் வேலையையும் செய்யலாம். நான் காஃபி (COFFEE) என்று சொன்னது Computer Online Forensic Evidence Extractor எனும் மென்பொருளை என முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதற்கு மேலும் நீங்கள் மெமரி கார்டில் காஃபி கொட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த மென்பொருள் டிரைவில் அமர்ந்து கொண்டு கணினியை முழுக்க வேவு பார்த்து சொல்லி விடும். கணினியிலுள்ள எந்த ஒரு அமைப்பையும் மாற்றாது !

அதே போல வின்டோஸ் தனது செயலியை ஒரு சின்ன டிரைவில் போட்டு “வின்டோஸ் டு கோ” என விற்பனை செய்வது இன்னொரு விஷயம். இவையெல்லாம் ஒரு சில சாம்பிள்களே, இத்தகைய பயன்கள் இன்னும் பல உண்டு.

இப்போது இத்தகைய பிளாஷ் டிரைவ் களிலும் பல அடுக்குப் பாதுகாப்புகள் வந்து விட்டன.. உங்கள் கைரேகை கொடுத்தால் தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன் என அடம்பிடிக்கும் பயோ மெட்ரிக் (Biometric) தொழில் நுட்பம் முதல், சொன்னதை குண்டக்க மண்டக்க என எழுதி மற்றவர்களைக் குழப்பும் என்கிரிப்ஷன்(Encryption) வரை எல்லாம் இதில் உண்டு. பயன்பாடு அதிகரிக்கும் போது பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையல்லவா !

இன்றைக்கு யூ.எஸ்.பி டிரைவ் இல்லாத கணினிகளே கிடையாது. இதற்காக தனியே டிரைவர் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் காலமும் மலையேறிப் போய்விட்டது. எங்கும் எளிதில் தூக்கிச் செல்லலாம், கனம் குறைவு, பயன்பாடு அதிகம், சேதமாகும் வாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு நன்மைகள் இந்த டிரைவ்களின் பயன்பாட்டை வானளாவ உயர்த்தியிருக்கின்றன.

நீங்கள் அலட்சியமாய் பாக்கெட்டில் தூக்கிப் போட்டுத் திரியும் யூ.எஸ்.பி டிரைவ்க்குப் பின்னால் இத்தனை விஷயம் இருப்பதே வியப்பு தான் இல்லையா ? அடுத்த முறை கடைக்குப் போகும் போது  ‘யூனிவர்சல் சீரியல் பஸ் டிரைவ்” ஒண்ணு குடுங்க என கேட்டுப் பாருங்கள். புரியலையா ? யூ.எஸ்.பி யின் விரிவாக்கம் தான் “யூனிவர்சல் சீரியல் பஸ்” (Universal Serial Bus) என்பது ! உங்கள் மெமரியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Thanks : Daily Thanthi, Computer Jaalam

சென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.

சென்சார் என்றதும் ஏதோ புதுப் படத்துக்கான அனுமதி வாங்கும் சமாச்சாரம் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பார்க்கப் போவது தொழில்நுட்பத்தில் இன்று நீக்கமற நிறைந்திருக்கும் சென்சார் கருவிகள். இதை தமிழில் உணரிகள் என்று அழைக்கலாம்.

பெரிய அலுவலகங்களில் நீங்கள் ஒரு அறைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டென மின் விளக்குகள் எரியும். கொஞ்ச நேரம் ஆட்கள் அறையில் இல்லாவிட்டால் விளக்குகள் அணையும், இவை சென்சார்களின் கைங்கர்யமே. நீங்கள் ஒரு கதவின் முன்னால் செல்லும் போது தானாகவே கதவுகள் திறப்பதும், தொட்டால் கார் ஓடுவதும் எல்லாம் சென்சார் ஜாலங்கள் தான்.

ஒரு பொருளையோ செயலையோ ஒரு கருவி உணர்ந்து அதை சிக்னல்களாக மாற்றி அதற்கு ஏற்ப ஒரு செயலைச் செய்ய வைப்பது தான் இந்த சென்சார்களின் அடிப்படை பார்முலா.

மனிதன் தொடங்கி சர்வ உயிரினங்களிலும் சென்சார்கள் உண்டு ! படைப்பின் மகத்துவம் அது. வெளிச்சம், மின் காந்த அலை, ஈரப்பதம், சத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும், உடலில் உள்ள குளுகோஸ், ஆக்சிஜன் போன்ற உட்புறக் காரணிகளாலும் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இவற்றை அறிவியல் “பயாலஜிகல் சென்சார்கள்” என்கிறது.

தொழில்நுட்பம் சொல்கின்ற சென்சார்கள் பல்வேறு காரணிகளை வைத்து இயங்குகின்றன. வெப்பத்தைத் தகவலாக மாற்றும் வெப்ப (Temperature) சென்சார்கள் உண்டு. காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க நாக்குக்கு அடியில் வைக்கும் ‘தெர்மோமீட்டர்கள்” வெப்ப சென்சார்களின் மிக எளிய உதாரணம்.

கதிர்களை வைத்துச் செயல்படும் சென்சார்களில் அகச் சிவப்புக் கதிர் சென்சார்கள், புற ஊதாக்கதிர் சென்சார்கள் இரண்டும் அதிகப் பயன்பாட்டில் இருப்பவை. அதிலும் புற ஊதாக்கதிர்கள் மருத்துவத் துறை, ரோபோட்டிக்ஸ், வாகன சென்சார்கள், வேதியல் துறை என பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கின்றன. வானிலை, தகவல் தொடர்பு, வெப்பமானி முதலான துறைகளில் அகச்சிவப்புக் கதிர்களின் பயன்பாடு கணிசமானது !

டச் ஸ்கிரீன் சென்சார்களை தொட்ட இடத்திலெல்லாம் காண முடிகிறது. அது உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப்பற்றி அதிகம் பேசவில்லை ! ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், ரோபோக்கள் என பரந்து விரிந்திருக்கும் இன்றைய தொழில் நுட்பத்துக்கு சென்சார்கள் முதுகெலும்பு !

நமது கையிலிருக்கும் ஸ்மார்ட் போன்கள் இப்போதெல்லாம் பல விதமான சென்சார்களின் உதவியோடு தான் வருகின்றன. ஸ்மார்ட்போன்கள், மற்றும் டேப்லெட்கள் ஆண்டுக்கு 2பில்லியன் எனும் அளவுக்கு சென்சார்களைப் பயன்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சென்சார்களைப் பயன்படுத்துவது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. சென்சார்கள் நல்ல சென்சார்களாக இருக்க வேண்டும். அது சரியான தகவலை அனுப்ப வேண்டும். அந்தத் தகவலை வாசிக்கும் ரிசீவர்கள் சரியாக இருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்தும் அல்காரிதங்கள், சூத்திரங்கள் சரியாக இருக்க வேண்டும். அதைக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய செயல் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக ஜிபிஎஸ் பற்றி ஏற்கனவே பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா ? புவியிடங்காட்டி ! கையில் ஒரு போன் இருந்தால் போதும் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை போன் சொல்லும். அங்கிருந்து பயணிக்க விரும்பினால் அதற்கான தகவல்கள் வழிகாட்டல்கள் எல்லவற்றையும் இது புட்டுப் புட்டு வைக்கும். தகவல்களையெல்லாம் செயற்கைக் கோளிலிருந்து பெறும்.

ஸ்மார்ட்போன்களிலும், டேப்லெட்களிலும் ஏகப்பட்ட சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பரவலாக இருக்கக் கூடிய சென்சார்களில் ஒன்று “ஆம்பியன்ட் லைட்” (Ambient Light ) சென்சார்கள். இது வெளிச்சம் சார்ந்த சென்சார். உங்களுடைய ஸ்மார்ட்போனிலோ, டேப்லெட் ஸ்கிரீனிலோ எந்த அளவுக்கு “பிரைட்னஸ்” அதாவது வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இந்த சென்சார்கள் தான்.

சுற்றியிருக்கும் வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு இந்த முடிவை சென்சார்கள் எடுக்கின்றன. நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் மிக மெல்லியதாகவும், அடர் இருட்டில் ரொம்ப பிரைட்டாகவும் திரையின் வெளிச்சத்தை இவை தரும். இது பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதுடன், ரொம்பவே கொஞ்சம் பவர் போதும் என்பதும் இதன் ஸ்பெஷல் வசதி ! இதனால் பேட்டரி நீடித்து உழைக்கவும் செய்யும்.

இப்போது எல்லாமே டச் ஸ்கீர்ன் போன்கள் தான் இல்லையா ? நீங்கள் ஒரு நபருக்கு போன் செய்து விட்டு உங்கள் காதருகே போனைக் கொண்டு போகிறீர்கள். உங்கள் காது அந்த போனின் ஸ்கிரீனைத் தொடும். ஆனால் எந்த செயலும் நடக்காது. அதெப்படி சாத்தியம் ? விரலால் தொட்டால் செயல்படும் ஸ்கீரீன் காதால் தொட்டால் ஏன் செயல்படவில்லை ? இந்த செயலைச் செய்கின்ற சென்சார்கள் “பிராக்ஸிமிடி சென்சார்கள்” (Proximity Sensors) என்று அழைக்கப்படுகின்றன.

நமது காதுக்குப் பக்கத்தில் போன் செல்லும் போது இந்த சென்சார்கள் உஷாராகி “திரையை மூடுங்கப்பா.. காது தொட்டுடப் போவுது” எனும் தகவலை அனுப்புகின்றன. உடனே ஸ்கிரீன் அணைந்து விடுகிறது. அல்லது செயல்பட முடியாதபடி ஒரு கட்டளையை அனுப்புகிறது. இந்த விஷயம் எதுவும் தெரியாமல் நாமும் நல்லபடியாகப் பேசிவிட்டு போனைக் கையில் எடுப்போம். அப்போது இந்த சென்சார்கள் மீண்டும் ஒரு தகவலை அனுப்பும் “இப்போ போன் காதை விட்டு தூரமா போயாச்சு, எல்லாரும் வேலை செய்யத் தயாரா இருங்க” என்பது அந்தத் தகவல். உடனே தொடுதிரை உயிர்பெற்று எழும் ! ஒருவேளை உங்கள் போன் இப்படிச் செயல்படவில்லையேல் ஒன்றுகில் பிராக்ஸிமிடி சென்சார்கள் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். இல்லையேல் அந்த சென்சார்களே போனில் இல்லை என்று அர்த்தம்.

இந்த் பிராக்ஸிமிடி சென்சார்கள் தான் லிஃட்டில் “தொடு திரை” ஸ்கிரீனில் பயன்படுகிறது. விமானத் துறை, மருத்துவம் , அணு கருவிகள், அதிர்வு கண்டறியும் கருவிகள் போன்ற இடங்களிலும் இந்த சென்சார்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

இப்போதைய ஸ்மார்ட்போன்களின் வசீகரம் நீங்கள் போனை எந்தப் பக்கமாகத் திருப்பினாலும் படமும் அந்தப் பக்கமாகத் திரும்பும் என்பது. பக்கவாட்டிலோ, நீளவாட்டிலோ எப்படி வேண்டுமானாலும் நீங்கள் இந்த போனையோ, ஐபேட் போன்ற டேப்லெட்களையோ பயன்படுத்தலாம். இது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். இந்த சாய்வு சங்கதிகளை செயல்முறைப்படுத்துவது “ஆஸிலரோமீட்டர்” (Accelerometer) எனும் சென்சார். எக்ஸ். ஒய் மற்றும் இசட் எனும் மூன்று அச்சுகளின் அடிப்படையில் கருவியின் அசைவையும், சாய்வு கோணத்தையும் இந்த சென்சார் கணக்கிடுகிறது !

மருத்துவத் துறையில் இந்த சென்சார்களின் பயன்பாடு ரொம்ப அதிகம். மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிகல் சென்சார் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. இதய நோய் உடயவர்களுக்கு பேஸ்மேக்கர் பொருத்துவது தெரியும் தானே ? அதில் இயங்குவது இந்த ஆஸிலரோமீட்டர் சென்சார் தான் !

மின் வேதியல் அடிப்படையில் இயங்கும் இன்னொரு சென்சார் உண்டு. இது உணவு சோதனை, தண்ணீர் சோதனை, மருத்துவ சாதனங்கள் என பல இடங்களிலும் பயன்படுகின்றன. ஸ்மார்ட் போன்கள் இத்தகைய ஒரு சென்சாரைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவைப் பற்றிய ஜாதகத்தைச் சொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை முயன்று கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமானால், “இதை சாப்டாதே இது போன வாரம்  சுட்ட வடை இதுலே கிருமிகள் இருக்கு” என்று உங்களை எச்சரிக்கும். “ஆஹா.. ரொம்ப நல்ல வாசனை, இதில் வேதியல் அளவு கம்மி தான், இந்த வாசனைப் பொருளை நீ தாராளமா வாங்கலாம்” என உங்களுக்கு அறிவுரையும் கூறும் ! கேட்கவே சுவாரஸ்யமாய் இருக்கிறது இல்லையா ?

திசைகாட்டும் சென்சார்கள் (Campus) உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரு வட்ட வடிவமான கருவி, அதன் முனைகள் வடக்கு தெற்காகவே இருக்கும் இல்லையா ? அது காந்த சக்தியில் இயங்கக் கூடியது. ஸ்மார்ட்போன்களில் அவற்றை பயன்படுத்த முடியாது. காரணம் காந்த சக்தி மற்ற செயல்பாடுகளையெல்லாம் பாதித்து விடும். எனவே ஸ்மார்ட் போன்களில் குட்டி சென்சார் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். அது மிகக் குறைந்த அலைவரிசையிலான புறக் கதிர்களை வாசித்து திசையை அறிகிறது. பழைய கால திசைகாட்டும் கருவி சின்ன சென்சார்களின் வடிவெடுத்து ஸ்மார்ட் போனுக்குள் அடக்கமாய் அமர்ந்து விடுகிறது !

இமேஜ் சென்சார்கள் அல்லது பட உணர்விகள் பரவலான பயன்பாட்டில் உள்ள சென்சார்கள். ஒரு படத்தைப் பார்த்து அது செயல்படும். ஆட்டோமெடிக் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது “நில்” எனும் டிராபிஃக் போர்டைப் பார்த்தால் நிற்பது இதன் அடிப்படையில் தான். இது சி.எம்.ஓ.எஸ்CMOS (Complementary Metal-Oxide Semiconductor)  காம்பிளிமென்டரி மெட்டல் ஆக்ஸைட் செமி கன்டக்டர் எனும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக் கூடியது எனுமளவுக்கு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

கைரோஸ்கோப்பிக் சென்சார்கள் ( Gyroscope) அசைவை வைத்து செயல்படக்கூடிய சென்சார்கள். வலது, இடது, மேல், கீழ், முன்னால் பின்னால் என ஆறு விதமான அசைவுகளை இது கண்காணிக்கும். இது ரொம்ப பவர்புல் சென்சார். பல மெடிகல் சாதனங்களிலும் இந்த சென்சார் உண்டு. ஐபோன் வைத்திருப்பவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள். போனை ஆட்டினாலே பாட்டு மாறும் இல்லையா ? புதிய வகை கைரோஸ்கோப்பிக் சென்சார்களை ஒரு குண்டூசி முனையில் வைத்துவிட முடியுமாம் !

மேலை நாடுகளில் அப்பார்ட்மென்ட்களின் வெளிப்பக்க லைட்களை “மோஷன் டிக்டெக்டார்” சென்சார்களைக் கொண்டு தான் அமைத்திருப்பார்கள். அதாவது அசைவை வைத்து இயங்கக் கூடிய வகையில் இவை இருக்கும். நடு ராத்திரி அந்த வீட்டுக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கும்மிருட்டில் வீடு இருக்கும். ஆனால் நீங்கள் வீட்டின் அருகே போன உடன் சட்டென லைட் எல்லாம் எரியும் ! செக்யூடிரி கேமரா உங்களைப் படம் பிடிக்கத் துவங்கும் ! இவையெல்லாம் இந்த சென்சார்களின் கைங்கர்யம் தான்.

பொருட்களை வாங்கும்போது பார்கோட் ஸ்கேன் செய்வது சாதாரணமாகிவிட்டது இன்று. யூனிவர்சல் புராடக்ட் கோட் ( Universal Product Code – UPC ) எனப்படும் அந்த கருப்புகலர் வரிகளை வாசிக்கும் வேலையைச் செய்வது சென்சார்கள் தான். கார்களில் இப்போது பாதுகாப்புக்காக டிரான்ஸ்பான்டர்ஸ் சென்சார்களைப் பயன்படுத்துகிறார்கள். சாவிக்குள் அது ஒளிந்திருக்கும். திருட்டுத்தனமான சாவிகளைக் கொண்டு காரை இயக்க முடியாது !

சென்சார்களை இரண்டு பெரிய பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று ஆக்டிவ் சென்சார்கள், இன்னொன்று பேசிவ் சென்சார்கள். ஆக்டிவ் சென்சார்கள் இயங்க சக்தி தேவை. பவர் இல்லாமல் இது இயங்குவதில்லை. இன்னொரு வகை பாசிவ் சென்சார்கள், இவை இயங்க சக்தி தேவையில்லை. தானாகவே இயங்குவதற்குத் தேவையான சக்தியை இவை உருவாக்கிக் கொள்ளும்.

சென்சார்களின் வகைகள் எக்கச்சக்கம். ரொம்ப அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் சென்சார்களே ஐநூறுக்கும் மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்பமும், எதிர்கால தொழில்நுட்பக் கனவுகளும் சென்சார்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்தே இருக்கின்றன !

எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் சென்சார்கள் நமது சுற்றுச் சூழலை வாசித்து அதற்கு ஏற்ப நமக்கு உதவும் என்கின்றனர் வல்லுநர்கள். உதாரணமாக வானிலையை வாசித்து, “குடையை எடுத்துக்கோ..மழை பெய்யும்” என்று சொல்லலாம். “கேஸ் ஸ்மெல் வருது, கிச்சனைக் கவனி” என எச்சரிக்கலாம்”. ஏன் “யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ளே வை” என்று கூட சொல்லலாம் ! ஆச்சரியப்பட முடியாது !

Thanks : Daily Thanthi, Computer Jaalam