ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special

ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.

வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.

உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.

நோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.

தொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.

இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ! ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.

இயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.

இயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.

ஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.

இரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.

ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.

ஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.

“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.

மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு  வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம்? என்ன வழி ? ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா ?

கோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.

“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.

அலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.

“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.

நமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.

ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எபே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.

இந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.

” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.

ஒளி மீட்பின் அடையாளம்.

ஒளி தீர்ப்பின் அடையாளம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

*

ஆன்மீகம் : கிறிஸ்மஸ் – வார்த்தை மனிதனானார்.

christmas

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன் ?” என ஏளனமாய் விரட்டி விட்டனர்.

பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந் தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள்.

அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே “இந்தக் குளிரையெல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயாம்மா” என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே !

கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “அன்பு” எனலாம். மனுக்குலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு !

“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ( மத் 4.4  ) என்கிறது விவிலியம். அத்தகைய வார்த்தை மனிதனாக அவதாரம் எடுத்த நாளைத் தான் கிறிஸ்தவம் கிறிஸ்து பிறப்பு என்கிறது !

கிறிஸ்மஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் ? வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், குடில், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாடை, நல்ல சாப்பாடு, அலங்காரம், அப்புறம் ஆலய திருப்பலி, இயேசுவின் பிறப்பு ! அவ்வளவு தானே ?

விழாக்கள் எல்லாமே இப்போது ஒரு வியாபார தளங்களாகி விட்டன. எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சரி, எப்படிடா ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றே புதுப் புது விஷயங்களுடன் கடை விரிக்கும். தீபாவளி போன்ற விழாக்களுக்கு எரிந்து தீரும் பட்டாசுகள் பல கோடி ரூபாய்களை அழித்து முடிக்கும். கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் சாக்லேட், ஆடைகள், அலங்காரங்கள் என பல விஷயங்களைக் காட்டி பொருளாதாரத்தின் பல்லைப் பிடுங்கும்.

உஷாராகிக் கொள்வது ரொம்ப நல்லது, ரொம்ப முக்கியமானது !

அலங்காரங்களே தேவையில்லையா ? மகிழ்ச்சியாய் எல்லோரும் இருக்க வேண்டாமா என மனசு குரல் கொடுக்கிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மகிழ்ச்சிக்கும், நீங்கள் தேவையில்லாமல் செலவிடும் பல்வேறு விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது !

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல் என்றால் நான் இதைத் தான் சொல்வேன். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், “இயேசு என் இடத்தில் இருந்தால் என்ன செய்வார் ?” எனும் கேள்வியைக் கொண்டே தீர்மானியுங்கள். வாழ்க்கை ரொம்பவே அர்த்தமுள்ளதாகி விடும்.

சரி, இயேசுவின் பிறப்பையே கொஞ்சம் பார்க்கலாமே ! இந்த பிரபஞ்சத்திலேயே ‘தான் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்’ என தீர்மானித்துப் பிறந்த ஒரே ஒரு நபர் இயேசு மட்டுமே ! அப்படிப்பட்ட இயேசு எப்படி அவதரித்தார் ? அவருடைய வம்சாவழிப் பட்டியலில் பாவிகளுக்கு இடம். அவர் நினைத்திருந்தால் குற்றமே இல்லாத ஒரு பரம்பரையில் வந்திருக்க முடியாதா ?

அவருடைய பிறப்பு விலங்குகளுடைய கொட்டிலில். ஏன், அவர் நினைத்திருந்தால் மாளிகையில் அரசனின் மகனாய் அவதரித்திருக்க முடியாதா ?

அவர் பிறப்பு அறிவிக்கப் பட்டது சமூக அமைப்பின் கடைநிலையில் இருக்கும் இடையர்களுக்கு ! ஏன் மாளிகையில் பட்டாடைவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க முடியாதா ?
அவர் பிறந்த இடத்தில் அலங்காரம் இருந்ததா ? அலங்கோலம் தானே இருந்தது ! அவரைச் சுற்றிப் புத்தாடை இருந்ததா கந்தல் இருந்ததா ? அவருக்கு சாக்லேட் பந்தி நடந்ததா ?

இப்படி இயேசுவின் உண்மையான பிறப்பு நிகழ்வு எப்படி நடந்தது என்பதையும், ஏன் நடந்தது என்பதையும் மனதில் அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

1.        கிறிஸ்மஸ் ஒரு பகிர்வின் நாளாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டாரத்தில், உறவு வட்டாரத்தில் நீங்கள் வெறுக்கும் நபர் இருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நபருடன் நிச்சயமாகப் பேசுங்கள். தொலைபேசுங்கள், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள். முடிந்தால் அவருடைய வீட்டுக்கே சென்று பேசுங்கள். ‘நான் ஏன் அவன் கிட்டே பேசணும் ?” எனும் ஈகோவைக் கழற்றாமல் இயேசுவை அணியவே முடியாது ! ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, உங்களையே விடுதலையாக்கும்.

2.        மகிழ்ச்சியை இறைவனை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளால் உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து பாடல்கள் பாடுவது, உரையாடுவது என எந்த நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீடெனில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் விழாவையும், அதன் அர்த்தத்தையும் விளக்குங்கள். அவர்களுக்குக் கதைகள் சொல்லி கிறிஸ்மஸைச் சிறப்பானதாக்குங்கள்.

3.        உங்களுக்குச் சொந்தமல்லாத, பக்கத்து வீட்டு நபர் யாரோ ஒருவரை இந்த விழாநாள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குங்கள். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தி வையுங்கள். அந்த நபருக்கு ஏதேனும் முக்கியமான தேவைகள் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை அர்த்தப் படுத்துங்கள்.

4.        ஏதோ ஒரு நல்ல விஷயத்தை இந்த நாளில் நிச்சயம் செய்யுங்கள். ஒரு முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் கிறிஸ்துப் பிறப்பு மகிழ்ச்சியைப் பகிர்வதாகவோ, ஒரு மருத்துவமனை சென்று நோயாளியை சந்திப்பதாகவோ, ஒரு அனாதை இல்லத்துக்கு உணவு கொடுப்பதாகவோ, உங்கள் மனதில் எழும் இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வை நிச்சயம் செய்யுங்கள். உங்கள் பெயரை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல் இயேசுவை முன்னிலைப்படுத்தியே அவற்றைச் செய்யுங்கள்.

5.         குடும்ப உறவை வலுவாக்கும் ஒரு நாளாக இதைக் கொண்டாடுங்கள். பார்க், சினிமா, பூங்கா, இத்யாதிகளைத் தவிர்த்து வீட்டில் அனைவரும் ஒன்றாய் இருந்து கொண்டாடுவதே சிறந்தது. தேவையற்ற பார்ட்டி அழைப்புகள், கொண்டாட்ட அழைப்புகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குடும்ப உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே வாழ்த்துக் கடிதங்கள் எழுதிப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

6.         பரிசுகள் கொடுக்கிறீர்களெனில் அது ஆத்மார்த்தமானதாய் இருக்கட்டும். அதிக விலையுள்ள பொருட்கள் தான் நல்லது என்பதெல்லாம் மாயை. உங்கள் கைப்பட எழுதப்படும் ஒரு வாழ்த்து மடலை விட உயர்ந்த வாழ்த்து அட்டைகள் கிடையாது. ஒரு நபரைச் சென்று பார்த்து ஒரு அன்பான புன்னகையைக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்த பரிசு என்பதை உணர்கிறோமா ? விதவையின் காணிக்கை இரண்டு காசு தான், ஆனால் கொடுத்த மனநிலை தானே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது !

7.          கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழிகிறவர். தீர்ப்பும், முடிவும் அவர் கையில். எல்லோரிலும் இறைவனின் பிம்பத்தைக் காண்பதே ஆன்மீக வளர் நிலை. விழா நாட்கள் மதச் சண்டைகள், சச்சரவுகள், சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் கிறிஸ்மஸ் கொண்டாடுவது மாபெரும் பரிசேயத் தனம் ஆகிவிடும்.

8.         உங்களை அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்வதில் பயன் இல்லை. உங்களை அன்பு செய்யாதவர்கள், உங்களை அறியாதவர்கள், உங்கள் விரோதிகள் என எல்லோருக்காகவும் ஜெபியுங்கள்.

9.        அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு எனும் நல்ல விஷயங்களே கிறிஸ்மஸ் விழாவில் நிரம்பியிருக்க வேண்டியவை. அவற்றை மனதில் நிரப்புங்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றை அழித்து விட இந்த ஆண்டு தூய ஆவியின் துணையை நாடுங்கள்.

10.  “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” எனும் வாசகங்களை உள்வாங்கி கிறிஸ்மஸ் தினத்தை வீணடிக்காதிருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கிறிஸ்மஸ் விழா பொழிவிழக்க அது ஒன்றே போதும், எனவே அதை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.