ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது

 

தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் !

இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ரைட் திரும்பு என கையைப் பிடித்து கூட்டிப் போகின்றன இந்த கருவிகள்.

செயற்கைக் கோளைப் பயன்படுத்தி பூமியிலுள்ள எந்த ஒரு இடத்தையும் வெகு துல்லியமாய்க் காட்டும் வல்லமை படைத்தது தான் இந்த ஜி.பி.எஸ். ஆங்கிலத்தில் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என அழைக்கப்படும் இதற்கு தமிழில் பல பெயர்கள் உண்டு. புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்கள் உண்டு. உங்களுக்கு வசதியான ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது முதலில் அமெரிக்க ராணுவப் பயன்பாட்டுக்காய் ஆரம்பிக்கப் பட்ட விஷயம் தான். ராணுவத்துக்கு ரகசிய இடங்களை கண்டு சொல்லவும், இரவு பகல் பாராமல் சில இடங்களைக் கண்காணிக்கவும், துல்லியமாய் வேவு பார்க்கவும் இந்த ஜி.பி.எஸ் பயன்பட்டது. பிறகு அது காலத்துக்கேற்ற மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது.

இன்றைக்கு நீங்கள் மொட்டை மாடியில் காயப் போடும் துணியில் அழுக்கு இருக்கிறதா என்பதைச் சொல்லுமளவுக்கு ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும். இது அச்சமும், வியப்பும் கலந்த ஒரு மனநிலையில் உங்களை இட்டுச் சென்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

இப்போதைக்கு இதன் மிகப்பெரிய பயன்பாடு கார்களில் வழிகாட்டுவது தான். ஒரு இடத்துக்குப் போகவேண்டும் என நீங்கள் சொன்னால். அந்த இடத்துக்குப் போக எந்தெந்த வழிகள் உண்டு. எப்படிப் போனால் சீக்கிரம் போகலாம். எந்த ரூட் ரொம்ப கடியான ரூட். எந்த ரூட்டில் சாப்பிட ஹோட்டல் இருக்கிறது என சர்வ சங்கதிகளையும் புட்டுப் புட்டு வைக்கும் ! ஊரோடு ஒத்து வாழ் என்பதைக் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு ஜி.பி.எஸ் சோடு ஒத்துவாழ் என காரோட்டும் போது நினைத்துக் கொண்டாலே போதும்

அமெரிக்காவுக்குச் சொந்தமானாலும் இதை உலகெங்கும் பயன்படுத்த அது அனுமதித்திருக்கிறது ! 1973ம் ஆண்டு தான் இது தனது பயணத்தைத் துவங்கியது ! 24 செயற்கைக் கோள்கள் இந்த ஜி.பி.எஸ் சிறப்பாகச் செயல்பட இரவு பகல் பாராமல் உழைக்கின்றன. இவை பூமியின் வட்டப்பாதையில் தினமும் இரண்டு முறை சுற்றி, தகவல்களை பூமிக்கு இறக்குமதி செய்து கொண்டே இருக்கின்றன.

சரி, இந்த செயற்கைக் கோள்களில் ஒன்று பழுதாகிப் போனால் என்ன செய்வது ? ஒட்டு மொத்த வழிகாட்டலும் தடைபடுமே ?? பயம் வேண்டாம். அப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே அனுமானித்து தான் மூன்று “எக்ஸ்ட்ரா” செயற்கைக் கோள்களை வான்வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். ஒரு செயற்கைக் கோள் வலுவிழந்தால் இது “பை ரன்னராக” ஓடத் துவங்கும் !

அப்படியானால் 1973க்கு முன்னாடி “புவியிடங்காட்டிகள்” ஏதும் இல்லையா எனும் சந்தேகம் உங்களுக்கு வருகிறதா ? 1940களிலேயே புவியிடங்காட்டிகள் உண்டு. அவை ரேடியோ அலைகள் சார்ந்த கருவிகள். லோரான் (LORAN) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (Decca Navigator) இரண்டும் மிக முக்கியமானவை. லாங் ரேஞ்ச் நாவிகேட்டர் (Long Range Navigator ) என்பதன் சுருக்கமே லோரான் ! இரண்டாம் உலகப் போரில் எதிரிகள் பதுங்கியிருக்கும் இடங்களை உளவு பார்த்து வில்லன் வேலை செய்ததில் இந்த் இரண்டுக்கும் கணிசமான பங்கு உண்டு !

இன்றைய ஜி.பி.எஸ் கள் உருவான கதை ரொம்ப சுவாரஸ்யமானது ! இந்த சிந்தனைக்கான முதல் விதையைப் போட்டவர் பெரிலின் நாட்டு இயற்பியலார் பிரைட் வார்ட் வின்டர்பெர்க் என்பவர். அவர் முன்வைத்த அணு கடிகாரத்தை (Atomic Clock ) செயற்கைக் கோள்களில் பொருத்தி  ஜெனரல் ரெலேடிவிடி யை சோதிக்கும் சிந்தனை இந்த ஜி.பி.எஸ்களின் அடிப்படை. இதை அவர் 1956ம் ஆண்டு வெளியிட்டார்.

இரண்டாவது ஐடியாவைத் தந்தது ரஷ்யா ! 1957ம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் (sputnik) எனும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. ரிச்சர்ட் கிரெஷ்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் அதன் ரேடியோ அலைகளைக் கவனித்து வந்தார்கள். செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த வேறுபாடு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. செயற்கைக் கோள் எங்கே இருக்கிறது என்பதையே அந்த வேறுபாடு மிகத் துல்லியமாகச் சொன்னது ! முதல் சிந்தனையையும், இரண்டாவது சிந்தனையையும் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டதில் இன்றைய ஜி.பி.எஸ் உருவானது !

அமெரிக்க கடற்படை உருவாக்கிய டிரான்சிட் எனும் ஜி.பி.எஸ் கருவிக்கு செயற்கைக் கோளால் இயங்கிய முதல் ஜி,பி.எஸ் எனும் பெயரைக் கொடுக்கலாம். தப்பில்லை ! 1960 ம் ஆண்டு இது வெள்ளோட்டம் விடப்பட்டது.

கடற்படை இப்படி  டிரான்சிட் டை அறிமுகம் செய்ததால் வான்படையும் தன் பங்குக்கு ஒரு புவியிடங்காட்டியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பெயர் மொஸைக் (MOSAIC). ஒரே விஷயத்தை தனித்தனியே முயல்வதை விட கூட்டாக முயற்சி செய்யலாமே எனும் யோசனையில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

1973ம் ஆண்டு 12 இராணுவ அதிகாரிகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்த ஒரு புவியிடங்காட்டிக்கான வழி  வகைகளைக் குறித்து விவாதித்தார்கள். டி.என்.எஸ்.எஸ் (DNSS ) எனப்படும் டிஃபன்ஸ் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (Defence Navigation Satelitte System ) அங்கே உருவானது. அது பின்னர் நேவ்ஸ்டார் (Navstar) என்றழைக்கப்பட்டு, அதன் பின் நேவ்ஸ்டார் ஜி.பி.எஸ் (Navstar – GPS ) என்றாகி கடைசியில் வெறும் ஜி.பி.எஸ் என்று நிலை பெற்றுவிட்டது !

ஜிபிஎஸ் முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா என்றாலே அலர்ஜி தானே ! அவை இதைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. ஜி.பி.எஸ் போல தனியே ஒரு சமாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களுடைய இலக்காய் இருக்கிறது.

குறிப்பாக, ரஷ்யா தனது ராணுவப் பயன்பாட்டுக்காய் வைத்திருக்கும் குளோனாஸ் (GLONASS) தன்னிச்சையாய் இயங்கக் கூடியது. த ரஷ்யன் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் ( The Russioan GLObal Navigation Sattelite System) என்பதன் சுருக்கமே குளோனாஸ். 1976ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த சிஸ்டம் 1991ம் ஆண்டு உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. பின்னர் அரசியல் மாற்றங்களால் களையிழந்து போன அது கடந்த 2010ம் ஆண்டில் குளோனாஸ் கே (GLONASS-K) எனும் பெயரில் நவீனமானது !

ரஷ்யா வெற்றிபெற்றால் சீனா சும்மா இருக்குமா ? அவர்களுக்கு  காம்பஸ் இருக்கிறது. அவர்களுடைய  காம்பஸ் (COMPASS) கருவி பீடோ 2 (Beidou – 2 ) என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு சீனாவையும், அதன் சுற்றியுள்ள இடங்களையும் கவனிக்கும் வகையில் தான் இதன் பயன்பாடு இருக்கிறது. சீனாவின் திட்டம் அப்படியே அதை விரிவாக்கி உலகம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் மாற்றுவதில் தான் என்பதில் சந்தேகம் இல்லை !

ரஷ்யா, சீனா போல ஐரோப்பியன் யூனியன் தனது பங்குக்கு உருவாக்கி வரும் புவியிடங்காட்டி கலிலியோ இடங்காட்டி. ஜி.என்.எஸ்.எஸ் (G.N.S.S) அல்லது கலிலியோ நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Galileo Navigation satellite System ) எனும் இந்த புவியிடங்காட்டி விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரலாம் !

துவக்க காலத்தில் ஒரு ஜி.பி.எஸ் சிஸ்டத்தை உங்கள் காரில் வாங்கி வைக்கும் பணத்தில் ஒரு குட்டிக் கார் வாங்கிவிடலாம் எனுமளவுக்கு காஸ்ட்லி. இப்போதோ அது ரொம்ப மலிவு விலைக்கு வந்து விட்டது ! சில ஆயிரம் ரூபாய்களுக்கே இதை வாங்கி விடலாம். இன்னும் சொல்லப் போனால் எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த ஜி.பி.எஸ் அழகான வடிவமைப்பிலேயே வந்து விட்டது. ஒரு மொபைலை கையில் வைத்துக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் போய் விடலாம் எனும் சூழல் உருவாகிவிட்டது !

கூகிள் எர்த் (Google Earth) கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் தெருவைத் துல்லியமாய் நோட்டமிடும் இந்த மென்பொருளுக்கும் ஜி.பி.எஸ் தான் அடிப்படை. ஜி.பி.எஸ் இன் பயன்கள் நீண்டாலும் அது தனி மனித சுதந்திரத்தில் மூக்கு நுழைக்கிறது எனும் குற்றச்சாட்டு வலிமையாகவே எழுகிறது ! நோட்டம் விடுதல், வேவு பார்த்தல் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கலாம் எனும் அச்சமும் உண்டு.

பொதுவாக, புவியிடங்காட்டி ஒரு இடத்தைக் கணிக்கவும் அதன் தூரத்தையும், நேரத்தையும் சொல்லவும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து அலைகளைப் பெறும். குறைந்தபட்சம் மூன்று செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் இதற்குத் தேவைப்படும்.

செயற்கைக் கோள் இடைவிடாமல் தொடர்ந்து தகவல்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.  எப்போது அந்தத் தகவல் அனுப்பப் படுகிறது? எந்த செயற்கைக் கோளில் இருந்து அது அனுப்பப் படுகிறது? அப்போது அந்த செயற்கைக் கோளின் இருப்பிடம் என்ன ? எனும் மூன்று கேள்விகள் மிக முக்கியமானவை. இந்த தகவல்களை பூமியிலுள்ள ரிசீவர்கள் பெற்றுக் கொண்டு செயற்கைக் கோளுக்கான தூரத்தைக் கண்டுபிடிக்கின்றன.

ஒர்ய் இருப்பிடைத்தைக் கண்டுபிடிக்க மூன்று செயற்கைக் கோள்கள் தேவை என்றோமில்லையா ? மூன்று கோளங்கள் போல இருக்கும் இந்த சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம் ! இதை விஞ்ஞானம் டிரைலேட்டிரேஷன் (trilateration) முறை என்கிறது. அடிப்படையில் செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் தகவலையும், அது வந்து சேர எடுத்துக் கொள்கின்ற நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த புவியிடங்காட்டி செயல்படுகிறது.

இதில் சின்ன ஒரு பிழை ஏற்பட்டால் கூட தகவலில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்து விடும். ஒளியின் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் தகவல்களில் பிழை வரக் கூடாது என்பதற்காகத் தான் மூன்று செயற்கைக் கோள்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. தகவல்கள் மிக மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த ரிசீவர் கடிகாரத்தில் ஒரு குட்டித் தவறு நேர்ந்தால் கூட எல்லாம் குழப்பமாகிவிடும். அதாவது ஒரு வினாடியை இலட்சமாக உடைத்து, அதில் ஒரு பாகம் அளவுக்கு நேரப் பிழை ஏற்பட்டால், பூமியில் இடம் சுமார் 300 மீட்டர் தூரம் தூரமாய் போய்விடும் ! தகவலின் நேர்த்தி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இதற்கு மேல் ஆழமாகச் சொன்னால் நீங்கள் கணக்கு பாடம் நடத்துவது போல இருக்கும் என்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன் !

0

ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது

எப்படா பேங்க் திறக்கும் பணம் எடுக்கலாம் என காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. பணம் எடுப்பதற்காக அரை நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டு வங்கியில் கியூ கட்டி நின்றதெல்லாம் நம் அப்பாக்களின் காலம். இப்போதைய ஏ.டி.எம் வசதி அதையெல்லாம் நிறுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி ஏ.டி.எம் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பரிமாற்றம், அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்காக மட்டுமே வங்கிப் படி ஏறினால் போதும் என்பதே இன்றைய நிலமை.

பெரும்பாலான வங்கிப் பரிவர்த்தனைகள் இணையத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது. இப்போது அது அப்படியே மொபைலுக்கும் தாவியிருக்கிறது. இதனால் “விர்ச்சுவல் பேங்க்” எனும் கான்சப்ட் பரவலாகத் துவங்கியிருக்கிறது.

விர்ச்சுவல் வங்கியை “இருக்கும், ஆனால் இருக்காது” என்று சொல்லலாம். அதாவது ஒரு வங்கி இருக்கும் ஆனால் அதற்கென தனியே கட்டிடங்கள் ஏதும் இருக்காது. எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் இணையம் மூலமாகவோ, ஏ.டி.எம் மூலமாகவோ தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சரி, நாம் ஏ.டி.எம் க்கு வருவோம். உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. நல்ல  குளு குளு ஏடிஎம் அறைகளுக்குள் நுழைந்து கார்ட் போடுகிறீர்கள். கடவுச் சொல் டைப் செய்கிறீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமென தட்டுகிறீர்கள். பணம் கொட்டுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு சைலன்டாகப் போய் விடுகிறீர்கள் !

“எப்படித் தான் இந்த சாதனம் இயங்குகிறது? “ என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா ? கொஞ்சம் சிம்பிளான வகையில் அதை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா ?

ஏ.டி.எம் என்பதன் விரிவாக்கம் “ஆட்டோமேட்டர் டெல்லர் மெஷின்” என்பது தான். அதை கனடாவில் ஏ.பி.எம் “ஆட்டோமேட்டட்  பேங்கிங் மெஷின்” என்கிறார்கள் கனடாவில். “எனி டைம் மணி” என்பதெல்லாம் ‘எப்பவும் பணம் கிடைக்கும்’ எனும் பொருளில் சும்மா சொல்வது ! மற்றபடி அதல்ல ஏடிஎம்மின் விரிவாக்கம்.

ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !

1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.

பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !  1967ம் ஆண்டு இங்கிலாந்தில் இன்னொரு வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். அப்போதைய ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒத்த ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்.

உங்களுக்கு முன்னால் இருக்கும் ஏ.டி.எம் மெஷின் கணினியோ, ஒரு மாயாஜாலம் செய்யும் கருவியோ கிடையாது. வருகின்ற தகவல்கள் அடிப்படையில் பணிபுரிகின்ற ஒரு கருவி அவ்வளவு தான். அதற்கான தகவல்கள் தருகின்ற மென்பொருள் கட்டமைப்பை “சுவிட்ச்” என்பார்கள். இந்த சுவிட்ச் மென்பொருள் ஏதோ தொலை தூரத்தில் இருக்கும்.

இதை இரண்டு விதமாக கணினியுடன் இணைக்கலாம். ஒன்று லீஸ்ட் லைன் எனப்படுவது நேரடியாக ஏ.டி.எம்மையும் கணினியையும் இணைப்பது. நான்கு வயர்கள், அதற்கான தனியான போன்லைன், பாயின்ட் டு பாயின்ட் என இது இருக்கும். இன்னொரு வகை “டயல் அப்” கனெக்‌ஷன். இதில் உண்மையான நேரடிக் கம்பித் தொடர்பு இருக்காது. மோடம் வழியாக, பொதுவான போன் தொடர்பு மூலம் இணைப்பு உருவாக்கப்படும்.

தேவைக்கு ஏற்ப எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்து கொள்ளலாம்., முதலாவது வகை ரொம்பக் காஸ்ட்லி. ஆனால் வேகம் அதிகம், தொடர்ந்து அதிக திறனுடன் செயல்படும். இரண்டாவது ரொம்ப சீப். அதற்கேற்பவே பணிகளின் வேகமும் இருக்கும்.

உங்கள் ஏடிஎம் கார்டை கொஞ்சம் பாருங்கள். ஏதோ ஒரு பதினாறு இலக்க எண் இருக்கிறது என்று நினைப்பீர்கள். சில கார்ட்களில் அதிகமாகவே உண்டு இப்போது. ஆனால் அந்த எண்ணுக்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. உங்கள் கையிலிருக்கும் கார்ட் எந்த கார்ட் என்பதை முதல் எண் சொல்லிவிடும். 4ல் ஆரம்பித்தால் விசா கார்ட், 5ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்ட், 6ல் ஆரம்பித்தால் டிஸ்கவர் என ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு சேவை வழங்குபவரைக் குறிக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சேவை வழங்குபவர், வங்கி அடையாளம், அக்கவுண்ட் நம்பர், என எல்லாவற்றின் கலவையுமாகவே அந்த கார்ட் எண் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கார்டின் பின்னால் ஒரு கருப்பு பட்டை போல ஒரு பகுதி உண்டு. அந்தப் பகுதியைத் தான் ஏ.டி.எம்மில் உள்ள “கார்ட் ரீடர்” வாசிக்கும். அது தான் முதல் படி. வாசித்த தகவலை அது முதல் கட்ட பரிசோதனைக்கு அனுப்பும். அந்த முதல் கட்ட பரிசோதனைத் தகவல்கள் ரொம்பச் சின்னவை. ஆனால் அதை ஏ.டி.எம் ஃபைலே சரிபார்க்கும்.

கார்டைப் போட்டபிறகு நீங்கள் கடவுச் சொல் கொடுப்பீர்கள். “வெல்கம்” என அது அழைக்கும். பிறகு ஏதேனும் பரிமாற்றம் நடத்த நீங்கள் முயலும் போது தான் கார்ட் ரீடர் வாசித்த தகவல் உங்கள் வங்கிக்குப் போகும்.

ஏடிஎம் பின்னால் ரொம்பவே பாதுகாப்பாக பணத்தை அடுக்கி வைக்கும் அறைகள் இருக்கும். பணத்தை அதன் எடையை வைத்து தான் ஏடிஎம் எண்ணும். அப்போது நோட்டுகள் ஒட்டிவந்தால் கண்டுபிடித்துவிடும். அப்படியே தனியே வைக்கும். கூடவே ஒரு “எலக்ட்ரானிக் ஐ” எனும் சென்சாரும் உண்டு. அது பணப்பெட்டியிலிருந்து ஒரு நோட்டு வெளியே வந்தாலும் கணக்கப் பிள்ளை போல குறித்து வைத்துக் கொள்ளும். அந்தத் தகவல் பல ஆண்டுகள் சேமிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டால் உங்களுக்குப் பணம் கிடைக்கிறது அல்லவா ? அதற்கு ஏ.டி.எம் நிறைய வேலைகளைச் செய்யும். முதலில் உங்களுடைய தகவலை சுவிட்ச்க்கு அனுப்பும். சுவிட்ச் அதைக் கொண்டு உங்களுடைய வங்கியைத் தேடும். பிறகு உங்கள் பைலைத் தேடும். வந்திருப்பது சரியான ஆள் தானா என்பதைப் பார்க்கும்.

கார்ட் சரியானது என்பதைச் சோதித்தபின். உங்கள் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கும். அதைப் பார்த்தபின் உங்களுடைய “ஒரு நாள் லிமிட்” தொகையைத் தாண்டி விட்டீர்களா என்று பார்க்கும். எல்லாம் பார்த்து பணம் கொடுக்கலாம் என முடிவு செய்த பின் ஏ.டி.எம் க்கு ஒரு தகவலை அனுப்பும். “ஆள் சரியான பார்ட்டி தான், பணம் கொடுத்துவிடு” ! அப்போது தான் ஏ.டி.எம் தனது சுருக்குப் பையைத் திறந்து பணத்தைத் தரும்.

இந்த எல்லா வேலைகளையும் ஏடிஎம் சில வினாடிகளுக்குள் செய்து முடிக்கும். ஒரு நாலு வினாடி தாமதம் ஆனால் உள்ளே நிற்கும் நமக்கு எவ்வளவு டென்ஷனாகும் இல்லையா ?

சொல்ல மறந்துட்டேன். தகவல்களை ஏ.டி.எம் கணினிக்கு அனுப்பும் போது அப்படியே அனுப்பாது. அதை குறியீடுகளாக மாற்றித் தான் அனுப்பும். அப்போது தான் வழியில் யாராவது வந்து தகவலைத் திருடினால் கூட பயன்படுத்த முடியாது. உதாரணமாக நீங்கள் “123456” எனும் கடவுச் சொல்லை பயன்படுத்தினால் அது “முனுசாமி” எனவும் போகலாம். அல்லது 7877786 என போகலாம். அது பயன்படுத்தப்படும் “என்கிரிப்ஷன்” மென்பொருளைப் பொறுத்தது.

ஸ்டேட்பேங்க், இந்தியன் வங்கி என ஏகப்பட்ட வங்கிகள் உண்டு இல்லையா ? இவை விசா, மாஸ்டர்கார்ட் என யாருடைய சேவையை நாடுகிறார்களோ அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதை “செட்டில்மென்ட்” என்பார்கள். ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ல் நீங்கள் சிட்டி பேங்க் கார்ட் போட்டு பணம் எடுக்கும் போது வங்கிகளுக்கு இடையேயான செட்டில்மென்டும் நடைபெறும் ! இவையெல்லாம் உடனுக்குடன் நடப்பதில்லை. பெரும்பாலும் தினசரி இரவில் நடக்கும்.

இப்படி மின் தகவல் மூலம் பண பரிமாற்றம் செய்வதி எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர் என்பார்கள். இங்கே மென்பொருளைத் தயாரிப்பவர்கள் சாஃப்ட்வேர் எஞ்ஞினீர்கள். இவர்கள் தயாராக்கும் சுவிட்ச் வழியாகத் தான் எல்லா தகவலும் வரும், போகும். இந்த சுவிட்சுக்குள் வந்து போகும் ஒவ்வோர் தகவலுக்கும் இவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். நாள் தோறும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து போகின்றன. சிறு துளிப் பெருவெள்ளம் போல மென்பொருள் நிறுவனங்கள் அள்ளிக் கொட்டுவது இப்படித் தான் !

இனிமேல் ஏடிஎம் மெஷின் முன்னால் நிற்கும்போது இந்த விஷயங்களெல்லாம் மனசுக்குள் வரும் தானே ?

வை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.

திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார்.

வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப்  பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய் பேசிக் கொண்டிருந்த வாக்கி டாக்கி தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம் !

IEEE802.11 என்பது இதன் தரக் கட்டுப்பாட்டு அடையாளம். ஆனால் வை-ஃபைக்கு மட்டுமேயான ஸ்பெஷல் அடையாளமல்ல. இந்த வை-ஃபை காப்பீட்டைக் கைவசம் வைத்திருக்கும் கர்வத்துக்குரியவர்கள் வை-ஃபை அலையன்ஸ் நிறுவனத்தினர் என்பதை எதற்கும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். வை-ஃபையை வயர்லெஸ் லோக்கல் ஏரியா நெட்வர்க் WLAN ( Wireless Local Area Network) எனவும் அழைக்கிறார்கள். துவக்க காலத்தில் இந்த வை-ஃபை வேவ்லேன் (WaveLan) என்று தான் அழைக்கப்பட்டது.

கணினிகள், மொபைல்கள், இன்னபிற எலக்ட்ரானிக் கருவிகள் இன்டர்நெட்டில் இணைந்து கொள்வதற்கு தான் இன்றைக்கு வை-ஃபை பெருமளவில் பயன்படுகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் எல்லை பெரிய அளவில் இருப்பதில்லை. சாதாரணமாக இவை 20 மீட்டர் எல்லைக்குள்ளே தான் இயங்கும். வயர்லெஸ் வசதியை உருவாக்கும் ஒவ்வொரு அனுமதிப் புள்ளியின் (அக்ஸஸ் பாயின்ட்) எல்லையும் இவ்வளவு தான்.

வை-ஃபை பயன்படுத்தும் கருவிகளையெல்லாம் இணைத்துக் கட்டும் புள்ளியை வயர்லெஸ் அக்ஸஸ் பாயின்ட் என்பார்கள். (WAP – Wireless Access Point). வயர்லெஸ் இணைப்பு வசதி கருவியில் இல்லாத பட்சத்தில் அது யூஎஸ்பி, கார்ட் போன்றவற்றால் இணைப்பை உருவாக்குவதுண்டு. இவற்றை வயர்லெஸ் அடாப்டர்கள் (Wireless Adaptor)  என்கிறோம். வயர்லெஸ் இணைப்பை பிரித்து கருவிகளுக்கு அனுப்பும் முக்கியமான பணியைச் செய்பவற்றை வயர்லெஸ் ரவுட்டர்கள் என்கிறோம். ஒரு வயர்லெஸ் இனைப்புடன், இன்னொரு வயர் இணைப்பும் தொடர்பு கொள்ள முடியும். இதை “நெட்வர்க் பிரிட்ஸ் கணெக்‌ஷன்” என்பார்கள்.

பொதுவாக ஒரு அக்ஸஸ் பாயின்ட் எல்லையில் முப்பது கருவிகளை வயர்லெஸ் மூலம் இணைக்கலாம் என்பது கணக்கு. அப்புறம் எப்படி பெரிய பெரிய விமான நிலையங்களிலெல்லாம் முழுக்க முழுக்க வயர்லெஸ் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். விஷயம் சிம்பிள் ! அதற்கு அவர்கள் நிறைய அக்ஸஸ் புள்ளிகளைப் பயன்படுத்துவார்கள்.

ஒவ்வொரு 20 மீட்டர் சுற்றளவுக்கும் ஒவ்வொரு பாயின்ட் வைத்து பல மைல்கள் தூரத்துக்கு இந்த எல்லையை விரிவாக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். அக்ஸஸ் பாயின்ட் என்பதை ஹாட் ஸ்பாட் என்றும் அழைப்பதுண்டு. ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்குத் தாவும் போது இந்த இணைப்பு துண்டிக்கப்படுவதில்லை. அப்படி துண்டிக்கப்படாமல் இருக்க கொஞ்சம் ஒன்றன் மேல் ஒன்றாக இதை நிறுவுவார்கள்.

ஒட்டுமொத்தமான வயர்லெஸ் அமைப்பை மூன்று விதமாக அமைக்கிறார்கள். ஒன்று அக்ஸஸ் பாயின்ட் மூலம் கருவிகளை இணைப்பது. இதை ஏ.பி (AP – Based ) வகை என்கிறார்கள். ஒரு ரவுட்டரில் இருந்து சுவிட்ச் மூலமாக பல்வேறு அக்ஸஸ் பாயின்ட்கள், அதற்கேற்ப கருவிகள் என இதன் அமைப்பு இருக்கும்.

இரண்டாவது வகை பீர் – டு- பீர் (Peer – to – Peer ) எனப்படும். இந்த வகையைச் செயல்படுத்த அக்ஸஸ் பாயின்ட்கள் தேவையில்லை. ஒரு எல்லைக்குள் இருக்கும் கருவிகள் எல்லாம் அந்த எல்லையில் இருக்கும் வயர்லெஸ் அமைப்பில் தானாகவே இணைந்து கொள்ள முடியும் என்பது இதன் வசதி. கொஞ்சம் எளிதானது, செலவும் கம்மி.

பாயின்ட் – டு – மல்டி பாயின்ட் (point to multi point) என்பது மூன்றாவது முறை. ஒரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க் (LAN) இன்னொரு கட்டிடத்திலுள்ள லோக்கல் ஏரியா நெட்வர்க்குடன் கம்பி இல்லாமலேயே இணையும் நுட்பம் இது. இரண்டு கட்டிடங்களிலும் வயர் இணைக்கப்பட்ட வலையமைப்பு இருக்கும். ஆனால் இரண்டுக்கும் இடையேயான இணைப்பு வயர்லெஸ் ஆக இருக்கும் என்பது தான் இந்த அமைப்பு.

வயர்லெஸ் நெட்வர்க் களின் தலைவலி அதன் பாதுகாப்புப் பிரச்சினையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்நுழைய விரும்பும் ஏகப்பட்ட டெக்னாலகி வில்லன்கள் உண்டு. அவர்கள் எதை எப்படி உடைக்கலாம் என கண்ணில் தொழிழ்நுட்பம் ஊற்றிக் காத்திருப்பார்கள். அவர்களிடமிருந்து தப்ப பல்வேறு தொழில் நுட்ப மாற்றங்களை வை-ஃபை சந்தித்து வந்திருக்கிறது !. முதலில் WEP (Wired Equivalent privacy) எனும் தொழில் நுட்பத்தை வை-ஃபை பயன்படுத்தியது. அது ரொம்ப சிம்பிளாக உடைக்கக் கூடிய பாதுகாப்பாய் மாறிப் போனது.

இப்போது WPA மற்றும் அதன் அட்வான்ஸ் வடிவங்கள் வந்து விட்டன. WiFi Protected access என்பதன் சுருக்கம் தான் இந்த WPA. பல அடுக்குப் பாதுகாப்புகள் இப்போது வந்து விட்டன. தகவலை சங்கேத மொழியில் மாற்றுவது, கடவுச் சொல் பயன்படுத்துவது இப்படி. தொழில்நுட்பங்கள் வளர வளர அது தொடர்பான நவீனங்களும் புதுப் புது அவதாரங்களை எடுத்துக் கொள்வது ஆச்சரியமில்லை தானே !

சரி, இந்த வை-ஃபை இணைப்பு, அதற்கான வசதிகளை உருவாக்குவதெல்லாம் நிறுவனங்களுக்குச் சரிப்பட்ட விஷயம். ஒருவேளை உங்கள் வீட்டில் ஒரு பிரத்யேக வை-ஃபை இணைப்பு வைக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் ? என்ன செய்வது ? இப்படி ஒரு கேள்வியை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பியிருக்கிறார்கள் நொவாடெல் வயர்லெஸ் நிறுவனத்தினர். அவர்களுடைய அட்டகாசமான தயாரிப்பு தான் மை-ஃபை (MiFi). 2009ம் ஆண்டு இது அறிமுகமானது ! மை வை-ஃபை( My WiFi) அதாவது என்னுடைய சொந்த வயர்லெஸ் இணைப்பு என்பதன் சுருக் மொழி தான் மை-ஃபை என்பது !

இது இயங்கும் விதம் ரொம்ப சிம்பிள். இதை ஒரு மொபைல் போனுடன் இணைக்க வேண்டியது தான் ஒரே வேலை. மொபைலில் டேட்டா பிளான் உட்பட்ட அத்தியாவசிய சங்கதிகள் இருக்க வேண்டியது அவசியம். மொபைலை இந்த சின்னக் கருவியுடன் இணைத்து விட்டால் உங்களுடைய வீட்டில் உங்களுக்கே உங்களுக்கான வயர்லெஸ் தயார் ! ஒரு ஐந்து கருவிகளை அந்த வயர்லெஸ் இணைப்பு மூலம் நீங்கள் இணைக்க முடியும். வீட்டிலுள்ளவர்களுக்கான பிரத்யேக வயர்லெஸ் இணைப்பு உருவாக்கத்துக்கு இந்த வழி ரொம்ப எளிதானது.

அமெரிக்காவில் 2009ம் ஆண்டு மே மாதம் அறிமுகமான மை-ஃபை இன்று நெதர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான், எகிப்து ஸ்பெயின், கனடா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் மிகப்பிரசித்தம். இதிலும் ஒவ்வோர் நவீனப் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமீபத்திய வரவு 4ஜி வசதியுள்ள மை- ஃபை இணைப்பு.

பிராட்பேண்ட் வசதியைப் பொறுத்தவரை வயர்லெஸ் வசதி ஏற்கனவே நமது நாட்டிலும் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பது நாம் அறிந்ததே. இதன் காரணகர்த்தா, தென்கொரியாவிலுள்ள டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கிய மைப்ரோ எனும் கருவி என்பதையும் அறிந்து வைத்திருப்பது சுவாரஸ்யமானது !

துவக்க காலத்தில் இந்த வை-ஃபையினால் உலகமே முழுமையாய் வயர்லெஸ் இணைப்பு பெற்று விடும் என நினைத்தார்கள். அந்த மாற்றம் அத்தனை விரைவாக நடக்கவில்லை. கலிபோர்னியாவிலுள்ள சன்னிவேல், மினிசோடாவிலுள்ள மினியாபோலிஸ் போன்ற அமெரிக்க நகரங்கள் முதல் பெருமையைப் பெற்றுக் கொண்டன. அமெரிக்காவுக்கு வெளியே ஜெருசலேம் போன்ற இடங்கள் போட்டியில் வெல்ல, நமது இந்தியாவில் மைசூர் 2004ம் ஆண்டில் இந்தியாவின் முதல் வயர்லெஸ் இணைப்பு நகரம் எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது ! லண்டன் உட்பட பல நகரங்கள் முழுக்க வயர்லெஸ் இணைப்பு கொடுக்கும் திட்டங்களை இன்னும் செயல்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சிக்கல் என்னவென்றால் ரொம்ப அதிகம் பேர் பயன்படுத்தும் இடமாக இருந்தாலோ, ரொம்ப அதிக ரேடியோ அலைகள் அலையும் இடமாக இருந்தாலோ இந்த வயர்லெஸ் அமைப்பு அதிக வேகமுடையதாக இருப்பதில்லை. எனவே பெரிய அப்பார்ட்மென்ட், நெரிசலான நகரங்கள் போன்ற இடங்களில் இதன் செயல்திறன் குறைந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது. 2.4 GHz மற்றும் 5 GHz எனும் இரண்டு ரேடியோ அலை பிரீக்வன்ஸியில் இது வேலை செய்தாலும் முந்தையதற்குத் தான் கவரேஜ் அதிகம் !

எந்த விசைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் விதி. இந்த விஷயத்திலும் அது இல்லாமல் போகவில்லை. வை-ஃபையினால் ஊரு முழுக்க எலக்ட்ரோ மேக்னட்டிக் அதாவது மின்காந்த அலைகளின் ஆதிக்கம் தான். அதனால் உடல்நலனில் ஏகப்பட்ட பாதிப்புகள் நேர்கின்றன என பலரும் கூக்குரல் போட்டார்கள். சுமார் 725 பேர் தங்களுக்கு “எலக்ட்ரோமேக்னட்டிக் ஹைப்பர்சென்சிடிவிடி” இருப்பதாகப் புகார் கூறியிருந்தார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக இவர்களுக்கு வை-ஃபை தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நிரூபிக்க முடியவில்லை.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த சில ஆய்வுகள் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வை உருவாக்கியிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக ரொம்ப நேரம் வை-ஃபை கனெக்‌ஷனுடன் மடியிலேயே வைத்து வேலை பார்த்தால் ஆண்களின் ஆண்மைக்கே ஆபத்து என ஒரு ஆராய்ச்சி ஏதேன்ஸ் பல்கலைக்கழகத்தில் வெளியாகி வெலவெலக்க வைத்தது. இன்னொரு ஆராய்ச்சி ஆண்களுக்கு ஞாபக சக்தியை இது குறைக்கும் என மிரட்டியது. ஆனால் உலக நலவாழ்வு விஷயத்தில் கருத்துகளை அறுதியிட்டும் கூறும் இரண்டு முக்கியமான அமைப்புகள் இதை மறுத்திருப்பது ஆறுதல் செய்தி.

அமெரிக்காவிலுள்ள உலக நலவாழ்வு நிறுவனம் (WHO – World health organization) குறைந்த அளவிலான மின்காந்த அலைகளையே வை-ஃபை வெளியிடும் எனவே பயப்படத் தேவையில்லை என்றது. யூ.கேவிலுள்ள ஹெல்த் புரட்டக்‌ஷன் ஏஜென்சியும் அதை ஆதரித்தது. ஒரு வருடம் முழுவதும் வை-ஃபை பயன்படுத்துவதும், 20 நிமிடம் மொபைலில் பேசுவதும் ஒரே அளவிலான மின்காந்த அலைகளின் பாதிப்பையே ஏற்படுத்தும் என அந்த அமைப்பு சொன்னது.

இணையம் இல்லாத வாழ்க்கை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது எனும் சூழலை நோக்கி உலகம் நடை போடுகிறது. நவீனங்கள் எல்லாமே இன்று வை-ஃபை அல்லது, 3ஜி போன்ற வசதிகளுடன் தான் வருகின்றன. எனவே வயர்லெஸ் நுட்பமும் அசைக்க முடியாத வலுவான இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் வை-ஃபை குறித்து இவ்வளவேனும் நீங்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது தான் இல்லையா ?

Thanks : Daily Thanthi, Computer Jaalam

ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா ?

“கிரடிட் கார்ட் பார்த்திருக்கீங்களா ?” ங்கற மாதிரி அபத்தமான கேள்வியெல்லாம் நான் கேட்க மாட்டேன். உணவு, உடை, உறைவிடம் மாதிரி தேவையான ஒரு விஷயமாக கிரடிட் கார்ட் உருமாறிப் போன விஷயம் நான் அறிந்ததே ! ஆனால் அது சம்பந்தமாக வேறு ஒரு சின்ன கேள்வி !

“உங்களிடம் இருக்கும் கிரடிட் கார்ட், ஸ்மார்ட் கார்டா ? இல்லையா ?” என்பது தான் அந்தக் கேள்வி ! விசா கார்ட் தெரியும், மாஸ்டர் கார்ட் தெரியும். அதென்னப்பா ஸ்மார்ட் கார்ட் என சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. கவலைப் படாதீர்கள், அதைச் சொல்லத் தானே இந்த வாரம் வந்திருக்கிறேன் !

தமிழில் இந்த ஸ்மார்ட் கார்டை, நுண்ணறி அட்டை என்று அழைக்கிறார்கள். சில்லு அட்டை, ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை என்றெல்லாம் இதற்குச் செல்லப் பெயர்கள் உண்டு. நீங்கள் எந்தப் பெயரை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு பிரச்சினை இல்லை.

ஒரு சாதாரண கிரடிட் கார்ட் அளவிலும், அசப்பிலும் தான் ஸ்மார்ட் கார்ட் இருக்கும். ஆனால் அந்த கார்டில் ஒரு சின்ன சிம்கார்ட் போன்ற வடிவத்தில் ஒரு தங்க நிற சில்லு இருக்கும். இதில் பொதுவாக ஒரு மைக்ரோபிராசசர் இணைக்கப்பட்டிருக்கும். இப்போ உங்க கிரடிட் கார்டை எடுத்துப் பாருங்கள். அதில் இந்த தங்க நிற சிம் சாதனம் போன்றது இருந்தால் உங்களிடம் இருப்பது ஸ்மார்ட் கார்ட் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அந்த தங்கக் கலர் சின்ன கருவி தான் உங்களோட சாதாரண கார்டை ஸ்மார்ட் கார்ட் ஆக மாற்றித் தருகிறது. இதில் தகவல்களைச் சேமித்தும் வைக்கலாம், சேமிக்கப்பட்டிருப்பதை வாசித்தும் பார்க்கலாம். இந்த குட்டியூண்டு அமைப்புக்குள் 8 கிலோபைட் ரேம் (RAM), 346 கிலோபைட் ரோம்(ROM), 16 பிட் மைக்ரோபிராசசர்(Microprocessor), 256 கிலோபைட் புரோக்ராம் பண்ணக்கூடிய ரோம்(Programmable ROM) என பல விஷயங்கள் உண்டு. இவையெல்லாம் தான் உங்கள் கார்டின் செயல்பாடுகளை கவனிக்கின்றன.

இது தரக்கூடிய முதல் வசதி பாதுகாப்பு. ஒரு சின்ன சிலிம்மர் கருவியை வைத்து உங்கள் கிரடிட் கார்ட் தகவல்களையெல்லாம் திருடிச் செல்லும் தில்லாலங்கடி வேலை இதில் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. உங்கள் கார்டையே அலேக்காகத் தூக்கிக் கொண்டு போனால் தான் உண்டு ! அதனால் தான் நிறுவனங்கள் ஸ்மார்ட் கார்டை நோக்கி நடைபயில்கின்றன.

ஸ்மார்ட் கார்டைப் பொறுத்தவரை ராஜா இங்கிலாந்து தேசம் தான். கிரடிட் கார்ட் நம்ம ஊருக்கு வருவதற்கு முன்பே அவர்கள் ஸ்மார்ட் கார்ட் பயன்படுத்தத் துவங்கியவர்கள். சாதாரண கார்ட்கள் பெரும்பாலும் அங்கே இல்லை என்றே சொல்லலாம். நீங்கள் இங்கிலாந்துக்குச் செல்லும் போது உங்களுடைய சாதாரண கார்ட்கள் பயன்படாமல் போயிருந்தால் அதன் காரணமும் இது தான் !

ஜெர்மனியிலுள்ள எலக்ட்ரிக்கல் எஞ்சினியரான ஹெல்மெட் குரோடெப்புக்கும், அவரோடு வேலை செய்த நண்பரான ஜர்கென் டெத்லாப்க்கும் இந்த நேரத்தில் ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்வோம். காரணம், இந்த விஷயத்துக்கான விதையை 1968ம் ஆண்டிலேயே போட்டது இவர்கள் தான். அதற்கான காப்புரிமை அவர்களுக்கு 1982ல் கிடைத்தது ! சுடச்சுட அடுத்த ஆண்டே பிரான்ஸ் நாட்டில் கட்டணத் தொலைபேசிகளில் ஸ்மார்ட் கார்ட் பணம் செலுத்தப் பயன்பட்டது !

அந்தக் காலகட்டத்தில் பிரான்சிலுள்ள  ஆராய்ச்சியாளர் ரோலன்ட் மொரினோவுக்கு ‘மெமரி கார்ட்’ சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கார்ட் வடிவமைக்கும் சிந்தனை இருந்தது. அதற்குரிய காப்புரிமையையும் அவர் 1974ல் வாங்கி வைத்திருந்தார். அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக என அழைக்கப்படும் “மைக்ரோ பிராசசர்” சார்ந்த ஸ்மார்ட் கார்ட் உருவானது. அந்த பெருமையை அள்ளிக் கொண்டு போனவர் மைக்கேல் யூகன்.

அது படிப்படியாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இப்படி ஆளாளுக்கு குளத்தில் இறங்கி மீன் பிடிப்பது சரிவராது என மூன்று முன்னணி நிறுவனங்கள் ஒன்று கூடின. ஒரு பொதுப்படையான விதி வேண்டும் என்பதே அவர்களுடைய சிந்தனையாய் இருந்தது. அந்த நிறுவனங்கள், விசா, மாஸ்டர்கார்ட் மற்றும் யூரோபே. இ.எம்.வி (EMV) என இந்த நிறுவனங்களின் சங்கமத்தை அழைக்கிறார்கள். இதன் முதல் வடிவம் 1994ல் வெளியானது ! ஸ்மார்ட் கார்ட்களின் பொதுவான வரையறை உருவான வரலாறு இது!

இன்றைய ஸ்மார்ட் கார்ட்களை இரண்டு பெரிய பிரிவுகளுக்குள் அடக்கிறார்கள். தொடர்பு உடைய நுண்ணறி அட்டை ( contact smart cards ) மற்றும் தொடற்பற்ற நுண்ணறி அட்டை ( Contactless Smart Card) என்பதே அந்த இரண்டு பிரிவுகள். பெயரைப் பார்த்தாலே புரியும். தொடர்பு உடைய ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்த அதை இன்னொரு ரீடர் கருவியில் தேய்த்தோ, சொருகியோ தான் செயல்பட வைக்க முடியும். தொடர்பற்ற ஸ்மார்ட் கார்ட் அப்படியல்ல. போகிற போக்கில் சும்மா கார்டை எடுத்துக் காட்டினாலே வேலை செய்யும். பெரிய நிறுவனங்களில் கதவுகளைத் திறக்க “கார்டைக் காட்டினால் போதும்” எனும் வகையில் ஒரு அட்டை கொடுப்பார்கள். அவை இந்த தொடர்பற்ற ஸ்மார்ட் கார்டின் ஒரு உதாரணம் !

காண்டாக்ட் ஸ்மார்ட் கார்ட்களில் அந்த ‘தொடர்பை’ உருவாக்குவது சிம் கார்ட் வடிவத்தில் இருக்கும் அந்த சுமார் ஒரு சென்டீ மீட்டர் சதுர அளவு தான். இது தான் நம்முடைய கார்ட்க்கும், மற்ற கருவிகளுக்கும் இடையேயான தொடர்பை ஆரம்பித்து வைக்கும். அந்த தொடர்பை உருவாக்கத் தேவையான சக்தியை இது கார்ட் ரீடர் கருவியில் இருந்தே பெறுகிறது !

ஒருவகையில் ஸ்மார்ட் கார்ட் பரிமாற்றங்கள் அதிக வேகம் உடையவை. சாதாரண கிரடிட் கார்ட்கள் கார்ட் ரீடரில் பயன்படுத்தும் போது வெறும் கார்ட் எண் போன்ற தகவல்களே கிடைக்கும். அதைக் கொண்டு வங்கியில் உங்களுடைய அடையாளம் உறுதிப் படுத்தல், வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் என சர்வமும் கணினியில் தான் நடக்கும். ஒவ்வொன்றுக்கும் சில மைக்ரோ வினாடிகள் தேவைப்படும். ஆனால் ஸ்மார்ட் கார்டைப் பொறுத்தவரை முதல் கட்ட உறுதிப் படுத்தல்களை ஸ்மார்ட் கார்டிலேயே முடித்துக் கொள்ளலாம் என்பது ஒரு நவீனம் ! நாம் பயன்படுத்தும் அனைத்து கிரடிட் கார்ட் வகைகளும் இந்த கான்டாக்ட் ஸ்மார்ட் கார்ட் வகையைச் சேர்ந்தது தான்.

உங்களுடைய ஸ்மார்ட் கார்டில் இருக்கும் அந்த சின்ன தங்க நிற சதுரப் பாகம் அச்சு அசலாக சிம் கார்டைப் போலவே இருக்கிறது இல்லையா ? உண்மையில் சிம் கார்டுக்கும், இந்த ஸ்மார்ட் கார்ட் க்கும் ஒரே மாதிரியான சிப் தான். ஆனால் ஒன்றைத் தூக்கி இன்னொன்றில் போட்டால் வேலை செய்யாது. காரணம் இரண்டுக்குமான மென்பொருள் கட்டமைப்புகள் முற்றிலும் வித்தியாசமானது !

சரி, இரண்டாவது வகை கார்ட்க்கு வருவோம். இவை தொடர்பற்ற ஸ்மார்ட் கார்ட். இதிலும் சக்தி இருக்காது. ஆனால் கார்ட் ரீடரைத் தொடவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியானால் அந்த பவர் எப்படி கிடைக்கும் ? அதற்குத் தான் ஆர்.எஃப்.இன்டக்‌ஷன் (RF Induction Technology) டெக்னாலஜி பயன்படுகிறது. இது ரேடியோ ஒலி அலைகளின் மூலமாக மின் தூண்டல் நிகழ்த்தும் தொழில்நுட்பம் என சுருக்கமாகச் சொல்லலாம். ஒலி அலைகள் மூலமாகச் செயல்படுவதால் இதில் “தொடுதல்” தேவைப்படுவதில்லை. சும்மா பர்சுக்குள் கார்டை வைத்துக்கொண்டு பர்ஸைத் தூக்கிக் காட்டினாலே போதும் ! ஸ்மார்ட் கார்ட் செயல்படும் !

கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், பெட்ரோல் கார்ட், டிராவல் கார்ட், மெடிகல் கார்ட், டெலிவிஷன் கார்ட், ஐடி கார்ட், அனுமதி அட்டை, போன் கார்ட்  என பல்வேறு ஏரியாக்களில் இன்றைக்கு ஸ்மார்ட் கார்ட்கள் நுழைந்து விட்டன. வெளிநாடுகளில் இது ஒரு சின்ன பர்ஸாகவும் பயன்படுகிறது. இதில் பணத்தைப் ரீசார்ஜ் செய்து அந்த கார்டைப் பயன்படுத்தி ஆளில்லாத பார்க்கிங் நிலையம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இது ஒரு சிம்பிள் தொழில் நுட்பம். உங்கள் வங்கிக்கெல்லாம் தகவல் அனுப்பி தகராறு செய்ய வேண்டிய தேவையே இதில் இல்லை.

தங்கக் கலரில் கோடு கோடாக இருக்கும் ஸ்மார்ட் கார்டைப் பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள் ? ஏதோ அவங்களுக்குப் பிடித்த ஒரு டிசைன் போட்டிருக்கிறார்கள் என்று தானே ? இல்லை ! அந்த டிசைனில் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் வேலை உண்டு. சகட்டு மேனிக்கு நம் விருப்பம் போல கட்டம் கட்டி ஸ்மார்ட் கார்ட் தயாராக்கவும் முடியாது. மென்பொருள் கட்டமைப்பு, கார்ட் ஸ்டான்டர்ட் என பல்வேறு வகைகளுக்கு உட்பட்டு தான் இந்த வடிவம் இருக்கும்.

உதாரணமாக, இந்த ஸ்மார்ட் கார்டில் எட்டு பாகங்கள் உண்டு. C1, C2, C3 என C8 வரை வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். C1 என்பது பவர் சப்ளைக்கானது. சக்தியை ரீடரில் இருந்தோ, ரேடியோ அலைகளிலிருந்தோ எடுக்கும் பாகம் இது தான். C2 என்பது ரீசெட் சிக்னல் என்பார்கள். அதாவது சிலேட்டை அழித்து சுத்தம் செய்வது போல, பழைய டிரான்சாக்‌ஷன் மிச்சம் மீதிகளை அழித்து புதிய ஒரு பரிமாற்றத்துக்குத் தயாராக்கும் பகுதி ! மூன்றாவது பாகம் ஒரு கடிகாரப் பணியைச் செய்யும். உங்களுடைய கார்ட் பரிமாற்றம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது ? தகவல் எப்போது அனுப்பப்பட்டது? எப்போது பெறப்பட்டது? போன்ற எல்லா டைம் சார்ந்த சங்கதிகளும் இந்த C3 ல் அடக்கம் ! மின்சார விஷயங்களில் “எர்த்” பற்றித் தெரியும் தானே. ஏறக்குறைய அதே பணியைச் செய்யும் C5 GND என அழைக்கப்படுகிறது. C6 மென்பொருளுக்கானது. C7 பகுதி பெறுதல், அனுப்புதல் ( Input and Output) வேலைகளுக்கானது. C4 மற்றும் C8 பகுதிகள் பிற இணைப்புகளுக்கானவை.

தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதைப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அதை ஆங்கிலத்தில் கிரிப்டோகிராஃபி (cryptography) என்பார்கள். அதாவது ஒரு தகவலை அதே போல அனுப்பாமல் குண்டக்க மண்டக்க என மாற்றி அனுப்புவது. விஷயம் தெரிந்த மென்பொருட்கள் மட்டுமே அதை மீண்டும் தகவலாக மாற்ற முடியும். படங்கள், வீடியோக்கள் போன்றவற்றில் தீவிரவாதத் தகவல்களை மறைத்து வைத்து அனுப்பும் செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன அல்லவா ? அதெல்லாம் கூட இந்த கிரிப்டோகிராஃபி வகையைச் சேர்ந்தது தான் !

ஸ்மார்ட் கார்ட் வகைகளில் பயன்படுத்தப்படும்தைந்த பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை பப்ளிக் கீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Public Key Infrastructure) என்கின்றனர். மென் அடையாளம் காணுதல் தான் இதன் அடிப்படை. டிஜிடல் கையொப்பம், டெஸ் தகவல் பரிமாற்றம் என இதில் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தனிநபருக்கான தேசிய அடையாள அட்டைகள் போன்றவை ஸ்மார்ட் கார்ட் மயமாகும் நிலை விரைவில் வரும். அப்போது தனிநபர் விவரக் குறிப்புகளெல்லாம் சின்ன எலக்ட்ரானிக் சில்லுக்குள் சைலண்டாக அமர்ந்து நம்மை வியக்க வைக்கும் !

ஸ்மார்ட்டான விஷயம் தான் இல்லையா ?

Thanks : Daily Thanthi, Computer Jaalam

ஐ.பி ( IP Address ) ! கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் இருந்து ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும் ? விஷயம் தெரிந்த சில மணி நேரங்களுக்குள் சைபர் கிரைம் காவலர்கள் வந்து உங்களை அப்படியே அலேக்காக அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.

யாருக்குமே தெரியாத ஒரு ரகசிய இடத்திலிருந்து நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியது எப்படி போலீசுக்குத் தெரிந்தது ? என நீங்கள் வியந்து கொண்டே கம்பி எண்ண வேண்டியது தான். உங்களுக்கு இங்கே வில்லனாக மாறியது ஐ.பி அட்ரஸ் (IP address) எனப்படும் இன்டர்நெட் புரோட்டோகால் அட்ரஸ் (Internet Protocol Address ) தான். இன்டர்நெட் புரோட்டோகாலைத் தமிழில் இணைய நெறிமுறை என்கிறார்கள்.

ஊரில் எந்த மூலையில் உங்கள் வீடு இருந்தாலும் தபால்காரர் சைக்கிளை மிதித்துக் கொண்டு உங்கள் வாசலுக்கு வருவதுண்டு இல்லையா ? அவருக்குக் குழப்பமே இருக்காது. காரணம் உங்கள் வீட்டுக்கென தனியே ஒரு விலாசம் இருப்பது தான். அதே போல ஒவ்வொரு கணினிக்கும் இருக்கும் விலாசம் என்று இந்த ஐபி அட்ரஸைச் சொல்லலாம். நமக்கெல்லாம் வார்த்தைகள் புரியும். கணினிகளைப் பொறுத்தவரை எல்லாமே பூச்சியம், மற்றும் ஒன்று எனும் எண்கள் தான். எனவே தான் இந்த ஐபி அட்ரஸ் வெறும் எண்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கணினியில் டாஸ் பிராம்ட்டில் போய் ipconfig என டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள். உடனே உங்கள் கணினியின் ஐ.பி எண் திரையில் தெரியும். இந்த முகவரி உங்கள் கணினிக்கானது ! இதை வைத்துத் தான் உங்கள் கணினியில் இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது.

ஒவ்வொரு ஐ.பி எண்ணும் நான்கு பாகங்களைக் கொண்டது. உதாரணமாக 123.123.32.321 என்பதைப் போல ஒரு ஐ.பி எண் இருக்கும். உங்கள் கணினி எந்த நெட்வர்க்கில் இருக்கிறது, அந்த நெட்வர்க்கில் எந்த கணினி உங்கள் கணினி எனும் இரண்டு அடுக்கு அடையாளங்கள் இதில் உண்டு. இந்த ஐ.பி எண் முதலில் வடிவமைக்கப்பட்ட போது 32 பிட் அளவு கொண்ட எண்ணாகத் தான் வடிவமைத்தார்கள். இன்றும் இது பயன்பாட்டில் இருக்கிறது. நான்கு பாகமாக இருக்கும் இந்த எண்களில் ஒவ்வொரு எண்ணும் 0 முதல் 255 வரை இருக்கும். அதாவது 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை மட்டுமே ஐ.பி எண்கள் இருக்கும் ! இது இன்டர்நெட் புரோட்டோகால் வெர்ஷன் 4 (internet protocol version 4 : IpV4 ). சில ஐபி எண்களை நெட்வர்க்கில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென வைத்திருப்பார்கள். உதாரணமாக 255.255.255.255 எனும் எண்ணை நெட்வர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லாக் கணினிகளுக்கும் ‘மெசேஜ்’ அனுப்புவது போன்ற பணிகளுக்காய் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

ஆனால் புற்றீசல் போல சடசடவென அதிகரித்துக் கொண்டிருக்கும் கணினிகளின் எண்ணிக்கை ஐ.பி எண்களின் தட்டுப்பாட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 430 கோடி தனித்துவமான எண்களை மட்டுமே 32 பிட் வகையில் உருவாக்க முடியும். இதனால் தான் 1995ம் ஆண்டு IPv6 எனப்படும் ஒரு புதிய ஐ.பி அட்ரஸ் முறையை உருவாக்கினார்கள். இது 128 பிட்களால் அமைந்த எண் ! 2000லிருந்து இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஐ,பி எண்கள் உள்ளுக்குள் பைனரி எண்களாக அதாவது வெறும் 0 மற்றும் 1 எனும் எண்களால் அமையும். நமக்கு அது வாசிக்கும் வசதியாக 112.18.78.120 என்பது போல சாதாரண எண்களாக அமையும். இப்படி வரும் எண்கள் ஐ.பி 4 வகையைச் சேர்ந்தவை. ஐபி 6 வகைகள் 2008:db8:0:1111:0:656:9:1 என்பது போல அமையும் !

ஐபி எண்கள் தனித்துவமானவை என்பதை எப்படி உறுதி செய்வது ? ஒரே எண் இரன்டு இடங்களில் வரும் வாய்ப்பு உண்டா ? எனும் பல கேள்விகளுக்கான விடையாக நிற்கிறது ஐ.ஏ.என்.ஏ (IANA) அமைப்பு. இன்டர்நெட் அசைன்ட் நம்பர்ஸ் அதாரிடி ( Internet Assigned Numbers Authority) என்பதன் சுருக்கம் இது. 1988ம் ஆண்டு அமைக்கப்பட்ட இது அமெரிக்க அரசின் கீழ் இயங்குகிறது. உலகிலுள்ள கணினிகளுக்கெல்லாம் தனித்தெனி பெயர் விலாசம் எல்லாம் இருப்பதை உறுதி செய்வது இந்த அமைப்பு தான் !

TCP/IP எனும் நெட்வர்க் முறைதான் இன்றைக்கு பெரும்பாலும் கணினிகளை வலையுடன் இணைக்கின்றன. எல்லா கணினிகளும் இணையத்தோடு இணைந்தே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நாம் அறிந்ததே. சில நிறுவனங்கள் தங்களுக்குள்ளே ஒரு சின்ன வலையமைப்பை உருவாக்கி தனியே இயங்கி வருகின்றன.

ஐபி அட்ரஸ் இரண்டு வகை உண்டு. ஒன்று நிரந்தர ஐபி விலாசம். இதில் உங்கள் கணினிக்கென ஒரு நிரந்தரமான எண் இருக்கும். இன்னொன்று டைனமிக் விலாசம். உங்கள் கணினியின் விலாசம் மாறிக் கொண்டே இருக்கும். நிறுவனங்கள் தங்களுடைய கணினிகளை டைனமிக் விலாசம் மூலம் தான் இணைக்கின்றன. மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் இது தான். டி.ஹைச்.சி.பி Dynamic Host Configuration Protocol (DHCP) தான் இந்த டைனமிக் ஐ.பி அட்ரஸ் உருவாக்கி கணினிகளை இணைக்கும் வேலையைச் செய்கின்றன. எந்த முறையிலான விலாசம் ஆனாலும் அது தனித்துவமான எண்ணாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த ஐபி விலாசத்தில் உள்ள “பப்ளிக் ஐபி” பகுதியை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மையத்தில் அம்மைந்துள்ள  என்.ஐ.சி ( Network Information Center) அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பப்ளிக் ஐபி தான் தான் சர்வதேச அளவில் இணையங்களை இணைக்கும் பணியைச் செய்கிறது.

மொத்தம் ஐந்து பெரிய நெட்வர்க் பிரிவுகள் ஐபி பயன்பாட்டில் உள்ளன. A,B,C,D மற்றும் E என்பவை தான் அந்த ஐந்து பிரிவுகள். இதில் A  மிகப்பெரிய நெட்வர்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. சுமார் 17 மில்லியன் இணைப்புகளை இந்த நெட்வர்க்கில் இணைக்கலாம். B அதற்கு அடுத்த பிரிவு. இதில் 16 ஆயிரம் நெட்வர்க்கள் இணைக்கலாம், ஒவ்வொரு நெட்வர்க் இணைப்பிலும் 64 ஆயிரம் கணினிகள் இணைக்கலாம். C தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் அலுவல் நெட்வர்க்களில் பயன்படுத்தப்படும். 21 மில்லியன் நெட்வர்களை இதில் இணைக்கலாம். ஒவ்வொரு நெட்வர்க்கிலும் 254 கணினிகளை இணைக்கலாம். D பிரிவு ஆடியோ, வீடியோ கான்ஃபரன்சிங்கிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. E பிரிவு ஆராய்ச்சிகளுக்கானது.

பெரிய நிறுவனங்களில் ஒரு நெட்வர்க்கை சின்னச் சின்ன உள் வலையமைப்பாய்ப் பிரிப்பார்கள். ஒவ்வொரு சின்னச் சின்னக் குழுவையும் “சப்நெட்” (குட்டி வலை) என்று அழைப்பார்கள். இதனால் அந்த சின்னச் சின்னக் குழுக்கள் நெருக்கமாகவும், வேகமாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஏதேனும் நெட்வர்க் பிரச்சினை வந்தால் கூட அந்த ஒரு ஏரியாவை மட்டும் சரி பண்ணினால் போதும் என்பது போன்ற பல வசதிகள் இதில் உண்டு.

உங்களுடைய வீட்டில் இருக்கும் கணினியை நீங்கள் இணையத்தில் சேர்ந்தால், உங்களுடைய இன்டர்நெட் சேவை வழங்குநர் (ISP – Internet Service Provider) தான் உங்களுக்கு ஐபி விலாசம் தருவார். ஒருவேளை நீங்கள் ஒரு ரவுட்டர் வைத்து வயர்லெஸ் மூலம் நான்கைந்து கணினிகளை இணைத்தால் ரவுட்டர் ஒரு ஐபியைப் பெறும். உங்கள் வீட்டிலுள்ள கணினிகள் எல்லாம் சப்நெட் எனும் குட்டி வலையாக மாறி ஐபிகளைப் பெறும். அது சப்நெட் ஆக மாறி சப்நெட்மாஸ்க் எனும் இன்னொரு அடுக்கு அடையாள எண்களையும் பெறும் என்பது தான் இதிலுள்ள விஷயம். இந்த ஐபி விலாசங்களில் இரண்டு பாகம் உண்டு. ஒன்று எந்த வலையமைப்பில் அதாவது நெட்வர்க்கில் இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது. இன்னொன்று அந்த வலையமைப்பில் எந்த கணினி அந்த குறிப்பிட்ட கணினி என இனம் காண்பது.  நிறைய குட்டிக் குட்டி வீடுகள் இருக்கும் அப்பார்ட்மென்டில் கதவு எண்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் இல்லையா ? முதலில் வீட்டு விலாசத்தை வந்தடைவார்கள், பிறகு கதவு எண்ணை நோக்கிப் போவார்கள். அந்தமாதிரியான விஷயம் தான் இது.

சப்நெட் மாஸ்க் எண்கள் 255.0.0.0 , 255.255.0.0, 255.255.255.0 என மூன்று வகைகளாக அமைப்பார்கள். 255 என்பது 1111111 எனவும் 0 என்பது 00000000 எனவும் (எட்டு ஒன்று, எட்டு பூச்சியம்) உள்ளே பதிவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காரணம் முதலிலேயே சொன்னது போல, நாம் புத்திசாலி என நினைக்கும் கணினிக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு என்கள் தான் 0 மற்றும் 1 ! இத்தகைய ஒவ்வொரு குட்டி சப்நெட்களிலும் முதல் ஐபி எண் அந்த குட்டி நெட்வர்க்கை அடையாளம் காட்டவே எப்போதும் பயன்படும் என்பது சுவாரஸ்யத் தகவல்.

இந்த ஐபி அட்ரஸ் இல்லாமல் போனால் இணையம் எனும் ஒரு விஷயமே சாத்தியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல், தகவல் தேடல், சேட்டிங், விளையாட்டு என எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த ஐபி அட்ரஸ் தான் !

ரகசியமாய் நீங்கள் இணையத்தில் எங்கேயெல்லாம் உலவுகிறீர்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் இந்த ஐபி அட்ரஸைக் கொண்டு மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உங்களை வெலவெலக்க வைக்கலாம் என்பது உங்களுக்கு நான் தரும் கிளைமேக்ஸ் ஷாக் !

மனோரமா இயர் புக் : Top 10 கணினி இதழ்கள்

கணினி இதழ்கள் :

 

 

 

 

 

 

கணினி யுகம் ஆரம்பமான காலத்திலிருந்து பல்வேறு கணினி இதழ்கள் வெளியாகத் துவங்கின. இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான கணினி ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய மற்றும் புதிய சில கணினி இதழ்களின் அறிமுகம் இது.

1. பி.சி மேகசின் ( PC Magazine )

1982ம் ஆண்டிலிருந்தே வெளிவரும் கம்ப்யூட்டர் பத்திரிகை எனும் பெயர் இதற்கு உண்டு. 2009ம் ஆண்டு வரை அச்சு இதழாக வந்து கொண்டிருந்த இந்த இதழ் இப்போது இணைய இதழாக உருமாறியிருக்கிறது. www.pcmag.com என்பது இதன் இணைய தள முகவரி. நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம், மென்பொருள் வன்பொருள் குறித்த புதிய தகவல்கள், விமர்சனங்கள். மற்றும் வல்லுனர்களின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகிறது.

2. பைட் ( BYTE  )

கணினி உதயமான காலத்தில் முதலில் கால்பதித்த வெகு சில கணினி பத்திரிகைகளில் முக்கியமானது பைட். வாசிப்புக்குக் கொஞ்சம் கடினமான முழுக்க முழுக்க தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய பத்திரிகை இது. 1975ல் முதல் பதிப்பு வெளியானது. பல்வேறு மாற்றங்களுடன் 2011 வரை இதன் பெயர் இருப்பில் இருந்தது. தற்போது அது  http://www.informationweek.com/personal-tech/ எனும் தளத்துடன் இணைந்து இரண்டறக் கலந்து விட்டது.

3. பி.சி வேல்ட் (PC World )

சர்வதேச அளவில் பிரபலமான இன்னொரு கணினி பத்திரிகை பிசிவேர்ல்ட். 1982ல் முதல் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் வெற்றிகரமான இந்தப் பத்திரிகை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விருதுகளையும் அள்ளியிருக்கிறது. 2006ல் உலக அளவிலேயே அதிக அளவில் அச்சாகும் கணினிப் பத்திரிகை எனும் பெயருடன் 7. 5 இலட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது அது டிஜிடல் முகத்துக்குத் தாவி http://www.pcworld.com/ என இணையத்தில் முகம் காட்டுகிறது.

4. கம்ப்யூட்டர் வேர்ல்ட் ( Computer World )

1967ல் இருந்தே ஒரு கணினி இதழ் வெளியாகிறதெனில் அது இது தான். உலகின் முதல் கணினிப் பத்திரிகை என்பார்கள். மிகவும் பிரபலமான இந்த இதழ் மாதம் இருமுறையாக மலர்கிறது.  இதன் வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியாகின்றன. அச்சு, இணையம் என இரண்டு முகம் காட்டும் இந்த இதழை www.computerworld.com எனும் தளத்தில் சந்திக்கலாம்.

5. கிரியேட்டிவ் கம்ப்யூட்டிங் ( Creative Computing )

பழங்கால கணினி இதழ்களின் பட்டியலில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. 1974 முதல் 1985 வரை இந்த இதழ் வெளியானது. புரோகிராம்களின் சோர்ஸ் கோட்-ஐ க் கொடுத்து அதை பயன்பாட்டாளர்கள் தங்கள் கணினியில் எழுதிப் பார்க்க வழி செய்தது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் காலப் போக்கில் அதன் புகழ் மங்க நிறுவனம் இழுத்து மூடப்பட்டது !

6. வயர்ட் ( Wired )

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான கணினி பத்திரிகை வயர்ட். மென் வடிவிலும், அச்சு வடிவிலும் இந்தப் பத்திரிகை மிகப் பிரபலம். 1993ம் ஆண்டு துவக்கம் முதல் இந்த மாத இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. www.wired.com எனும் இணைய தளத்தில் இதைக் காணலாம். இன்றைய பிரபல கணினிப் பத்திரிகைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.

7. மேக்ஸிமம் பி.சி Maximum PC

பூட் எனும் பெயரில் அறிமுகமாகி பிரபலமாய் இருக்கும் பத்திரிகை மேக்ஸிமம் பி.சி. http://www.maximumpc.com/ எனும் இணைய தளம் இந்தப் பத்திரிகைக்குரியது. தொழில்நுட்ப விஷயங்கள், பொருட்களின் தரமதிப்பீடு, தொழில்நுட்ப அலசல், வன்பொருட்களின் புதிய வருகை,என பல தரப்பட்ட விஷயங்களைக் கலந்து கட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது !

8. மேக் வேர்ல்ட் MacWorld

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் நிறைய உண்டு. அதில் மிகப் பிரபலமான பத்திரிகை இது. 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. மேக் லைஃப் எனும் பத்திரிகை இதன் போட்டியாளர் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிக சர்குலேஷனுடன் மேக்வேர்ல்ட் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. http://www.macworld.com என்பது இதன் இணைய தள முகவரி.

9. ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் Smart Computing

விமர்சகர்களின் தரவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இதழ் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங். புதிய தொழில்நுட்ப விஷயங்களை வசீகரமான வகையில் தருவதில் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் இதழ் சிறப்பிடம் பிடிக்கிறது. http://www.smartcomputing.com/ என்பது இதற்கான இணைய தளம்.

10 பி.சி கேமர் PC Gamer

கணினி விளையாட்டுகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் ஏராளம் உண்டு. அதில் மிக முக்கியமானது பி.சி கேமர் எனும் மாத இதழ். 1993ன் இறுதியில் வெளியாகத் துவங்கிய பத்திரிகை இது. பல்வேறு நாடுகளில் இதன் வடிவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. http://www.pcgamer.com/ என்பது இதன் இணையதள முகவரி.

 

 

தொழில் நுட்பத் திகில் !!

தொழில் நுட்பம் வளர வளர மக்களுடைய தனிமையும், நிம்மதியும் பறிபோய்விடும் என்பது உண்மையாகத் தான் இருக்கிறது. குறிப்பாக இன்டர்நெட் வந்தபிறகு “உளவு” வேலைகள் சகஜமாகிவிட்டன. கூகிள் மேப் போன்ற மென்பொருட்கள் வீதி, வீடு, மொட்டை மாடி, என எல்லா இடங்களிலும் ரகசியக் கண் வைத்து கவனிக்கின்றன. யார் எங்கே போகிறார் என்றெல்லாம் கூட அது கண்டுபிடித்து விடுகிறது ! 

அதே போல தான் செல்போன். கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். ஒரு நபர் எங்கே இருக்கிறார். எப்போது அந்த இடத்துக்கு வந்தார். எங்கேயெல்லாம் போனார் என சர்வ சங்கதிகளையும் கண்டு பிடித்து விடலாம். காவல் துறையினருக்கு துப்புத் துலக்குவதில் இப்போதெல்லாம் அதிகம் பயன்படுவது செல் போன் தான் ! குற்றவாளிகளை வலை வைத்துப் பிடிக்க அது ரொம்ப வசதியாய் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டியும் நாம் கவனிக்கப் படுவோம் ! தொழில் நுட்பம் நமது வீட்டின் அறைகளுக்குள் நுழைந்து நம்மைக் கண்காணிக்கும் என்கிறார் அமெரிக்காவிலுள்ள சி.ஐ.ஏ ( சென்ட்ரல் இன்டலிஜன்ட் ஏஜன்ஸி) இயக்குனர் டேவிட் பீட்ரஸ். குறிப்பாக தொலைக்காட்சி போன்றவையெல்லாம் இன்றைக்கு இணையத் தொடர்போடு தான் வருகின்றன.

இணையப் பக்கங்களில் நுழையலாம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற திரைப்பட பக்கங்களில் போய் படம் பார்க்கலாம் என்றெல்லாம் ஏகப்பட்ட வசதிகள். இதனால் எப்போதும் உலகோடு நமது வீடு இணைக்கப் பட்டு விடுகிறது.

இப்படி இணையத்தில் உலவும் போது நமது செயல்பாடுகளையெல்லாம் ரகசியமாய்க் கவனிக்க முடியும் என கூறி அவர் திடுக்கிட வைக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம். நமது விருப்பம் என்ன ? நமது செயல்பாடுகள் என்ன போன்ற அனைத்து விஷயங்களும் ரகசியமாய் உறிஞ்சப்படலாம் என்கிறார் அவர். இணையத்தின் மூலமாக மட்டுமல்லாமல், ரேடியோ ஒலி அலைகள் மூலமாகக் கூட நபர்களைக் கண்காணிக்க முடியுமாம். 

ஒரு வகையில் நமக்குத் தெரியாமலேயே நமது விருப்பங்கள், செயல்பாடுகள் என ஏகப்பட்ட விஷயங்களை நாம் யாரோ ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த சிந்தனையே ஒரு வகை அசௌகரியத்தைத் தருகிறது இல்லையா ? இப்போது எல்லா மொபைல்களும் வேறு இணையத்தோடே இணைந்திருப்பதால் இந்த “உளவு” பல மடங்கு உயரும் என்பது அவருடைய கருத்து !

தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஃபிரிட்ஜ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களில் கூட “கம்ப்யூட்டர் சிப்” இணைத்து கவனிக்கலாம் என்று அவர் தெரிவிக்கும் கருத்து இன்னும் அதிர வைக்கிறது !

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது !

*

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

வின்டோஸ் 8, ஒரு பார்வை !

 கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது !

இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றலாம் என்பது மைக்ரோசாஃப்டின் திட்டம். அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை டவுன்லோட் செய்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டார்கள் !

வின்டோஸ் 8 ஐப் பொறுத்தவரை இது எல்லாவிதமான கம்ப்யூட்டர்களிலும் பொருந்தும் என்பது புதுமையான விஷயம். தொழில் நுட்ப அடிப்படையில் பேசும்போது வின்டோஸ் செயலிகள் எல்லாமே எக்ஸ்.86 எனும் பிராசசர்களுக்காகவே உருவாகும். அதனால் பிற இடங்களில் இதை நிறுவ முடியாத சூழல் இருந்தது. இந்த செயலி முதன் முறையாக அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து ஏ.ஆர்.எம் கட்டமைப்புக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

வின்டோஸ் செயலிகளில் இருக்கும் பலவீனங்களில் ஒன்று அதன் “ரீஸ்டார்ட்” நேரம். சில வேளைகளில் கணினியை இயக்கிவிட்டு ஒரு காபி குடித்து விட்டு வந்தால் தான் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி இருக்கும். இது ஒரு பரவலான குறையாகவே இருந்து வருகிறது. வின்டோஸ் 8 அந்த சிக்கலையும் புதுமையான முறையில் சரி செய்யும் என்கிறார்கள். ரிஃப்ரஷ், ரீசெட் எனும் இரண்டு புது கான்சப்ட் மூலமாக இந்த சிக்கலைச் சரிசெய்திருக்கிறோம் என்கின்றனர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினர்.

இன்றைய நவீன உலகில் எல்லாமே தொடு திரை தானே. குறிப்பாக மொபைல் புரட்சி வந்தபின் மக்களெல்லாம் போனில் தொட்டுத் தொட்டு விஷயங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். கணினியைப் பொறுத்தவரை இன்னும் கீ-போர்ட் முக்கியமான அம்சமாகவே இருக்கிறது. திரையில் தொட்டால் செயல்படுவது போல செயலிகள் இல்லை. அந்தக் குறையை வின்டோஸ் 8 போக்கும் ! இது தொடு திரை வசதியுடைய டேப்லெட்களுக்கும் பொருத்தமானதாய் உருவாகியிருக்கிறது.

இன்றைய ஹாட் டெக்னாலஜிகளில் ஒன்று கிளவுட் சிஸ்டம். இப்போதே எல்லா நிறுவனங்களும் கிளவுடை நோக்கி தங்கள் திட்டங்களை வரையறுத்து விட்டன.  எதிர்காலத்தில் முழுமையாய் இது தான் கணினித் துறையை ஆக்கிரமிக்கும் என நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐடியூன் வசதியையும் கிளவுட் மயமாக்கியிருக்கிறது.

ஆப்பிளின் ஐடியூன் பயனராக உங்கள் கணினியில் இருந்து மட்டுமே இயங்க முடியும் எனும் குறை இருந்தது. கிளவுட் முறை எந்தக் கணினியில், அல்லது மொபைலில் இருந்தும் உங்கள் பயனர் கணக்கை இயக்கும் வசதியைத் தந்திருக்கிறது. வின்டோஸ் 8 செயலி முதன் முறையாக அத்தகைய ஒரு வசதியை அறிமுகம் செய்கிறது ! இதுவரை எந்த கணினிச் செயலிகளிலும் இல்லாத வசதி இது !

இதன் மூலம், உங்களுடைய கணினி ஐடியை வைத்து எந்தக் கம்ப்யூட்டரில் இருந்து வேண்டுமானாலும் உள் நுழையலாம். உங்களுடைய “செட்டிங்” அப்படியே இருக்கும். உங்களுடைய டெஸ்க்டாப்பில் எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இது இன்னொரு வசீகரிக்கும் அம்சம் !

பாதுகாப்பு விஷயங்களைப் பலப்படுத்தவும், எளிமையாக கணினியில் உள் நுழையவும் படம் சார்ந்த பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது வின்டோஸ் 9. இதில் பயனர் நீளமான ஒரு கடவுச் சொல்லை நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. அடிக்கடி அதை மாற்றி, என்னத்த மாற்றினோம் எனவும் குழம்பவும் தேவையில்லை. படத்தைக் காட்டி உள் நுழையலாம் ! இரண்டாம் கட்ட பாதுகாப்பாக வார்த்தைகளைக் கொண்டும் பாஸ்வேர்ட் அமைக்கலாம்.

இன்னொரு அட்டகாசமான விஷயம், “வின்டோஸ் டு கோ” என்பது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு “டாஸ்” செயலி இருந்த காலத்தில் ஃப்ளாப்பி டிஸ்க்கில் தான் அந்த செயலிக்கான கோப்புகள் இருக்கும். அதைப் போட்டுதான் கணினியை இயக்க முடியும்.

அதன் பின் பிளாப்பிகளெல்லாம் அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டன. இந்த வின்டோஸ் டு கோ ஒரு புதுமையான மறுபிறவி எனலாம். அதாவது, வின்டோஸ் 8 செயலி முழுவதும் ஒரு 32 ஜிபி அளவுள்ள பென்டிரைவில் இருக்கும். அதை கணினியில் சொருகிவிட்டால் போதும். அங்கிருந்தே செயலி செயல்படத் துவங்கும். உங்கள் கம்ப்யூட்டலில் “இன்ஸ்டால்” செய்யத் தேவையில்லை ! புதுமையாய் இருக்கிறது இல்லையா ?

வின்டோஸ் செயலி பொதுவாகவே வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் எனும் பிரவுசரைத் தான் முன்மொழியும். காரணம், அதுவும் மைக்ரோசாஃப் தயாரிப்பு என்பது தான். ஆனால் பயனர்களுடைய விருப்பம் மாறுபடும். சிலர் மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசரை விரும்புவார்கள். வேறு சிலருக்கு கூளிள் குரோம் வசதியாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டு வேறு பிரவுசர்களை எந்த சிக்கலுமில்லாமல் நிறுவிக் கொள்ளவும் வின்டோஸ் 8  அனுமதிக்கிறது !

ஆனாலும் வின்டோஸ் 8க்காகவே மைக்ரோசாஃப்ட் களமிறக்கும் பிரவுசர் வின்டோஸ் எக்ஸ்ப்ளோரர் “மெட்ரோ” 10 ! தொடு திரை வசதியுடன் கூடிய முதல் பிரவுசர் இது தான். இது வின்டோஸ் 8ல் மிகவும் அற்புதமாகச் செயல்படுவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வின்டோஸ் செயலி என்றதும் “ஸ்டார்ட் பட்டன்” உங்களுக்கு மனதில் நிழலாடும் ! ஸ்டார்ட் பட்டன் இல்லாவிட்டால் கொஞ்சம் தடுமாறிப் போவோம் இல்லையா ? இந்த வின்டோஸ் 8ல் ஸ்டார்ட் பட்டனே கிடையாது. இது திரையில் ஆப்ளிகேஷன்களை வரிசைப்படுத்தி வைக்கும். அங்கிருந்து தேவையானவற்றை இயக்கவோ, முடிக்கவோ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். புதுமையான மாற்றம் என்பதால் காலம் காலமாக ஸ்டார்ட் பட்டன் கிளிக்கிப் பழகிய கைகளுக்கு கொஞ்சம் தடுமாற்றம் நேரிடலாம்.!

தொடுதிரை வசதி மெட்ரோ யூஐ வசதியின் மூலம் சாத்தியமாகி இருப்பதால், மவுஸ் பயன்பாடும் கீ போர்ட் பயன்பாடும் வெகுவாகக் குறையும். ஆனாலும் அது முழுமையாக நீக்கபடவில்லை. மவுஸ் தான் வேண்டும் என முரண்டு பிடிக்கும் கைகளுக்கு மவுஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் !

இப்போது பயன்பாட்டில் உள்ள யூ.எஸ்.பி 2 வின் அட்வான்ஸ் வெர்ஷனும் வருகிறது என்பது புதுமை. இந்த செயலியுடன் யூ.எஸ்.பி 3 வருகிறது. இதன் செயல்பாட்டுத் திறன் அதிகமாக இருக்கும்.

கொஞ்ச நாள் தொடர்ந்து வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தினால் அது ரொம்பவே ஸ்லோ ஆகி இம்சைப்படுத்தும் என்பது சர்வதேசக் குற்றச்சாட்டு. அதற்குக் காரணம் தேவையில்லாமல் சேரும் தற்காலிகக் கோப்புகள், நினைவிடக் கோளாறுகள் போன்றவை தான். அதை நிவர்த்தி செய்ய “புஷ் பட்டன் ரீசெட் ஆப்ஷன்” இருக்கிறது.

ஒரு பட்டனை அமுக்கினால் உங்கள் கணினியிலுள்ள வேண்டாத விஷயங்களையெல்லாம் அது அழித்து உங்கள் கணினியை சுறுசுறுப்பாக்கிவிடும். கணினியையே புத்தம் புதிது போல ஆக்க வேண்டுமெனில் அதற்கும் ஒரு தனி ஆப்ஷன் இருக்கிறது. அதை அமுக்கினால், கணினியின் அனைத்து கோப்புகளும் அழிந்து, புதிதாக வின்டோஸ் செயலில் நிறுவப்பட்டு விடும் !

இப்படி பல்வேறு விதங்களில் வசீகரிக்கும் வின்டோஸ் 8ன் முழுமையான வடிவம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரக் கூடும் என்கின்றனர். எனினும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் இன்னும் எந்த தேதியையும் குறிப்பிடவில்லை !

வரட்டும் ! காத்திருப்போம் !

Please Click, if you Like….

நன்றி : தினத்தந்தி (மவுஸ் பையன்)

வியப்பூட்டும் முதல் கணினி

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில்  அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.

அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.

1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி இந்த முதல் கணினி தன்னை நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.

பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இருவருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் நிஜம்.