ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !

செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !

அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.

நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.

இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.

நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.

மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். 

“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.

கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.

வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.

எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.

ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.

“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.

பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.

பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.

வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.

சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

 

பாலியல் எனும் வார்த்தையை பலரும் பல விதமான கண்ணோட்டங்களில் அணுகுகின்றனர். சிலருக்கு பாலியல் என்றாலே மிட் நைட் கேள்வி – பதில் நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே பேசப்படும் “சுய இன்பத்தால ஆண்மை போயிடுமா டாக்டர்” டைப் கேள்விகள் தான் சிலரைப் பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வு விஷயங்கள். வார இதழ்களுக்குக் கல்லா கட்டும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது படுக்கையறைப் புரபசர் வாத்சாயனாரின் வழிமுறைகளை விளக்குவது. பாலியல் கல்வி என்றாலே பலரும் பதட்டப்படுவதற்கு இது தான் காரணம். “ஸ்கூல்ல தியரி சொல்லிக் குடுப்பீங்க. பிள்ளைங்க போய் பிராக்டிக்கல் கத்துகிட்டா என்ன பண்றது ?” என்பது சிலருடைய அங்கலாய்ப்பு !

இன்னும் சிலருக்கு பாலியல் என்பது பழுப்பேறிப் போன காகிதத்தில் கடைகளின் உள்பக்கமாய்த் தொங்கும் “சரோஜா தேவிக் கதைகள்”. யாருக்கும் தெரியாமல் வாங்கி, படித்து பொழுதைப் போக்கும் சமாச்சாரம். “எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் யார் கண்ணுக்கும் தெரியாது” எனும் புதிருக்கு கடவுள் என்பது மட்டுமல்ல விடை. இத்தகைய புத்தகங்களும் தான். இப்போது டெக்னாலஜியும், பிராட்பேண்டும், ஹைடெக் செல்பேசியும் வந்தபிறகு சரோஜா தேவி இ-புக் வடிவம் எடுத்திருக்கிறது. அது ஒன்று தான் வித்தியாசம்.

கடலின் கரையில் அலைகள் அதிகமாய் இருக்கும். ஆனால் அலைகளே கடலல்ல என்பதைச் சொல்லும் நூல்கள் தமிழில் மிக மிக அரிது. அந்த வெற்றிடத்தை கன கட்சிதமாக நிரப்பியிருக்கிறது எழுத்தாளர், சகபதிவர், நண்பர் பத்மஹரி அவர்களுடைய “பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் நூல். தேவையற்ற, அதிகம் அலசப்பட்ட விஷயங்களை லாவகமாய்த் தாண்டி பாலியல் குறித்துத் தெரியாத விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகியதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ஆசிரியர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். படித்தது உயிரி தொழில்நுட்பவியல். இப்போது ஜப்பானில் பி.ஹைச்.டி க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு நரைத்த தலை பேராசிரியர் அடையவேண்டிய இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே அடைந்திருக்கும் எழுத்தாளருக்கு, தமிழும் கைவந்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பாக்கியம் என்று சொல்லலாம்.

ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காரே, வாசிச்சா புரியுமா ? எனும் சந்தேகத்துடன் தான் இவருடைய எழுத்தை வாசிக்கத் துவங்கினேன். சரளமாய் ஓடித் திரியும் இவருடைய தமிழ் ஒரு இனிய ஆச்சரியம். அறிவியல் விஷயங்களை ஜஸ்ட் லைக் தேட், தமிழில் விதைத்து விட்டுப் போவதில் வெற்றி கண்டிருக்கிறார்.

ஃபீடோ பீலியா எனும் குழந்தைகள் மீதான வன்முறை, கள்ள உறவுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விலங்குகளோடான உறவுகள் – போன்ற பல விஷயங்கள் இதுவரை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அலசப்பட்டதில்லை. அல்லது அதுகுறித்துத் தமிழில் நான் வாசித்ததில்லை. பத்மஹரியின் நூல் அந்த பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது.

முதல் நூலையே பாலியல் சார்ந்து எழுதியிருப்பதில் பாலியல் குறித்த புரிதல் சமூகத்துக்குத் தேவை எனும் அவருடைய அக்கறை புலப்படுகிறது.

தொடரும் அவருடைய நூல்களில் சமூகம் மேலும் பயனடையும் எனும் நம்பிக்கை பலப்படுகிறது !

வாழ்த்துக்கள் ஹரி ! தொடர்க உங்கள் பயணம்.

 

நூல் விலை : 130/; –

கிடைக்குமிடம் :

Blackhole Media Publication Limited,  No.7/1, 3-rd Avenue, Ashok nagar,  Chennai-600 083. India

Cell: (+91) 9600086474, 9600123146

Email: admin@blackholemedia.in

Website: http://blackholemedia.in/

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

வாடகை மனைவி…கார்ப்பரேட் காமம் !

 இந்தியாவின் குடும்ப அமைப்புகளும், கண்ணியமான காதலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மக்களால் சிலாகிக்கப்பட்டது. கவனிக்கவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தான் ! இப்போது இந்தியாவின் கலாச்சார மாறுதல்கள் மேலை நாடுகளின் கலாச்சாரச் சாயலையே ஈயடிச்சான் காப்பியடிக்கின்றன. கலாச்சாரங்களைப் பொறுத்தவரை தண்ணீரை விடுத்து, பாலை அருந்தும் அன்னப்பறவையாய் இந்தியா இப்போது இல்லை. பாலை விடுத்துத் தண்ணீரை அருந்தும் பறவையாக உருமாறியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

“மேலை நாடுகளிலெல்லாம் டைவர்ஸ் ரொம்ப சகஜமாம். கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துலேயே பிரிஞ்சுடறாங்களாம்… ” என கன்னத்தில் கை வைத்து நாம் அங்கலாய்த்த காலம் ஒன்று உண்டு. இப்போதோ, நம்ம ஊரிலேயே பத்துக்கு நாலு இளம் ஜோடிகள் டைவர்ஸ் செய்து கொள்ளலாமா என பேசித் திரிகிறார்கள். நகர்ப்புறங்களில் மணமுறிவுகள் சகட்டுமேனிக்கு எகிறிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கின்றன புள்ளி விவரங்கள்.

“அடி ஆத்தி…. அமெரிக்கால கல்யாணம் பண்ணாமலேயே ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கறாங்களாமே”  ஒரு காலத்தில் கலாச்சார அதிர்ச்சியாய் பேசப்பட்ட இத்தகைய வாசகங்கள் இப்போது நம்மைச் சலனப்படுத்துவதில்லை. காரணம் இந்தியாவிலேயே இந்த சமாச்சாரம் படு வேகமாகப் பரவி வருகிறது. லிவ்விங் டுகதர் என ஸ்டைலான பேருடன் !  போதாக்குறைக்கு “இதெல்லாம் தப்பில்லை “ என உச்ச நீதிமன்றமே தனது பொன்னான தீர்ப்பை வழங்கி இளசுகளின் மோகத்தில் பால் வார்த்திருக்கிறது. “மணப்பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென படித்த ஆண்கள் நினைப்பதில்லை” சொல்லி ஒரு நடிகை வாங்கிக் கட்டிக்கொண்டது மறந்திருக்காது. அப்போது பரபரப்பாய் இருந்த விஷயத்தை  சுப்ரீம் கோர்ட்டே இப்போது அங்கீகரித்து ஆசீர்வதித்திருக்கிறது.

இதெல்லாம் என்ன பெரிய சமாச்சாரம் என்பது போல அடுத்த புயல் புதிதாய்க் கரை கடந்திருக்கிறது. அதுதான் வாடகை மனைவி கலாச்சாரம். வாடகை மனைவியென்றதும் ஏதோ குழந்தையில்லாதவர்களுக்காக தனது கருவறையை வாடகைக்கு விடும் வாடகைத் தாயை நினைத்து விடாதீர்கள். அது வேறு இது வேறு. வாடகை மனைவி என்பது தற்காலிக மனைவி. இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால் “கொஞ்ச நாளைக்கு மனைவிபோல” வாழ்வது !

இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரமும், அங்கே புழங்கும் அதீத பணமும் இத்தகைய விபரீத உறவுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. இதற்கென்றே இருக்கும் புரோக்கர்கள் ஆண்களுக்கு மனைவியரை தயார் செய்து கொடுக்கிறார்கள். மனைவியர் பெரும்பாலும் வட நாடுகளிலிருந்து வாடகைக்காய் அழைத்து வரப்படும் பெண்கள்.

ஒரு வாரத்துக்கு மனைவியாய் இருக்க ஒரு கட்டணம், ஒரு மாதத்துக்கு கொஞ்சம் சலுகை விலையில் இன்னொரு கட்டணம் என இதன் பின்னணியில் நிழல் நிறுவனங்களே இயங்குகின்றனவாம். வேலை அழுத்தத்திலும், பணப் புழக்கத்திலும் இருக்கும் ஆண்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு மனைவியுடன் (!) ஊட்டி, கோடைக்கானல் எங்காவது போய் கொஞ்ச நாளைக்கு அடைக்கலமாகிவிடுகின்றனர். ரெடிமேட் தாலி இலவசமாகக் கிடைப்பதால் இவர்களுக்குக் ஹோட்டல்களில் இடம் கிடைப்பது முதல், பொது இடங்களில் சில்மிஷத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதுவரை எந்தச் சிக்கலும் இல்லை.

ஒருவாரமோ, இரண்டு வாரமோ புதிய துணையுடன் நேரத்தையும், பர்ஸையும் கரைத்துவிட்டு கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் ஆண்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார்கள். பார்த்த வேலைக்குச் சம்பளம் வாங்கிக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விடுகிறார்கள் பெண்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஏழ்மை நிலையிலுள்ள மக்களிடையே இந்த பழக்கம் இருந்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஒரு மாதத்துக்கோ, இரண்டு மாதங்களுக்கோ தனது மகளையே வாடகை மனைவியாய் அனுப்பி வைக்கும் துயரத்தை அது படம்பிடித்தது. அது வறுமையின் உச்சத்தில் நிகழ்ந்த துயரம் என்றால், இப்போது நடப்பதோ மோகத்தின் வேகத்தில் நடக்கும் கொடுமை எனலாம்.

மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு வாடகைக்கு பெண்களை அழைத்து வந்த தரகர்களை கடந்த மாதம் காவல்துறை கைது செய்தது. இந்த வாடகை மனைவி சமாச்சாரங்களின் பல விஷயங்கள் அப்போது வெளிச்சத்துக்கு வந்தன. இதில் இன்னொரு துயரம் என்னவென்றால், இதில் சம்பாதிப்பதெல்லாம் புரோக்கர்கள் தான். பெண்களுக்குப் பத்தாயிரம் என்றால், அதே போல பத்து மடங்கு வரை இவர்களுக்குக் கிடைக்கிறதாம் !

எப்படிப் பார்த்தாலும் இது ஒரு ஹைடெக் விபச்சாரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த தொழிலில் கல்லூரி மாணவிகள் போன்றவர்களும் ஈடுபடுவது தான் திடுக்கிட வைக்கிறது. படிக்க பணம் வேண்டும், பாக்கெட் மணிக்கு காசு வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்லி இந்த தொழிலில் இவர்கள் விரும்பியே வருகிறார்களாம். 

இந்தியாவில் விபச்சாரத் தொழில் ஒன்றும் புதிதல்ல. பண்டைய தேவதாசிகள் கதைகளில் தெரிவது கூட பாலியல் தொழிலின் மத பிம்பம் தான். இன்றைக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 28 இலட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறது மினிஸ்ட்ரி ஆஃப் விமன். இதில் 35 சதவீதம் பேர் பதினெட்டு வயதுக்கு முன்பே இந்தத் தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள்.

மும்பையில் மட்டுமே ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபடுவதொன்றும் புதிதல்ல. அந்த விஷயம் சமூகத்தின் எல்லா திசைகளிலும் சல்லிவேரைப் போல விரிந்து பரவியிருப்பது தான் கவலைக்குரிய விஷயம். கணவன் மனைவி எனும் புனிதமான உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக நடக்கும் இந்த பிஸினஸ் அச்சுறுத்துகிறது. கூடவே உண்மையான கணவன் மனைவியர் இதனால் சந்திக்கப்போகும் பிரச்சினைகளின் விஸ்வரூபமும் திகிலடைய வைக்கிறது.

வாடகை மனைவிக் கலாச்சார விதை நடப்பட்டாகிவிட்டது, அது முளையிலேயே அழிக்கப்படுமா ? அல்லது விருட்சமாய் வளர்ந்து அடுத்த தலைமுறையினரையே அடக்கம் செய்து விடுமா என்பது போகப் போகத் தெரியும் !

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

குட் டச், பேட் டச் – பெண்ணே நீ கட்டுரை

“குட் டச், பேட் டச்” ன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. நல்ல தொடுதல், மோசமான தொடுதல். பொதுவா எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் இது. ஆனாலும் இன்னிக்கும் பல்லாயிரம் பேர் இதனால பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

சுருக்கமா இதைச் சொல்லணும்ன்னா, நல்ல தொடுதல் ஒரு அம்மாவோட அரவணைப்பைப் போல அன்பானது. எந்தவிதமான கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நேசம் உடையது. குறைந்த பட்சம் எந்த தப்பான சிந்தனையும் இல்லாத தொடுதல் நல்ல தொடுதல்.

மோசமான தொடுதல்ங்கறது தலை கீழ். தப்பான சிந்தனையோட தொடறது. குறிப்பா பெண் குழந்தைகளைக் கொஞ்சுவது போலவோ, விளையாடுவது போலவோ பாவனை காட்டி உள்ளுக்குள் வக்கிரமாய் தொடுவது என சொல்லலாம். இதைத் தவிர குழந்தைகளை அடிக்கிறது, உதைக்கிறது, அவர்களைக் காயப்படுத்தறது என நல்ல தொடுதல் இல்லாத எல்லாமே மோசமான தொடுதல்களில் வரும் விஷயங்கள் தான்.

தப்பான தொடுதலில் மிக முக்கியமானது பாலியல் ரீதியிலான தொடுதல். இந்தியா மாதிரி கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரம் இருக்கிற இடங்களில் இது ரொம்பவே அதிகம். மாமா, மச்சான் ன்னு புடை சூழ வீடு நிரம்பியிருக்கும்போ பல தப்பான விஷயங்களும் நடந்து விடுகிறது. தப்பான தொடுதலுக்கு ஆளான குழந்தைகள் இதை பெரும்பாலும் வெளியே சொல்வதில்லைங்கறது தான் கவலைக்குரிய முதல் விஷயம். சுமார் 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப் பற்றி யார் கிட்டேயும் சொல்வதே இல்லையாம் ! இது இந்தியாவில் அரசு சார்பாக நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவரம் சொல்லும் சேதி !!

90 சதவீதம் தொந்தரவுகளும் குழந்தைக்குத் தெரிந்த நபர்களால் தான் வருதுங்கறது தான் ரொம்பவே அதிர்ச்சியூட்டும் செய்தி. இந்த பேட் டச் விஷயத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்வதும், அதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியமான தேவைகள். ஒரு குழந்தை மூன்று வயதாக இருக்கும் போதே பெற்றோர் இந்த எச்சரிக்கையையும், வழிகாட்டுதலையும் குழந்தைகளுக்கு வழங்கலாம் என்பது உளவியலார் கருத்து ! எனவே பிள்ளை வளரட்டும்ன்னு காத்திருக்காதீங்க.

குழந்தைங்களை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்த்துவதும். எது நல்லது, எது கெட்டதுங்கற புரிதலை குழந்தைகளுக்குச் சொல்வதும் இன்றைய தேதியில் ரொம்ப முக்கியமான விஷயங்கள்.

இதொண்ணும் நிலாவுக்கு ராக்கெட் விடறமாதிரி கஷ்டமான விஷயம் கிடையாது. சிம்பிள் தான். நான் சொல்லப் போற தகவல்களை மனசுல வெச்சுருந்தீங்கன்னா போதும் !

1. குழந்தை ஸ்கூல் போயிட்டு வந்தாலோ, வெளியே யார் வீட்டுக்காவது போய் வந்தாலோ அங்கே நடந்த எல்லா விஷயங்களையும் கேளுங்க. கள்ளம் கபடமில்லாமல் பிள்ளைங்க சொல்ற விஷயங்களை வெச்சே நீங்க விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியும். ஒருவேளை ஏதாச்சும் தப்பு நடந்திருக்குன்னு தெரிஞ்சா கூட பதட்டப்பட்டு குழந்தைகளைப் பயப்படுத்தாதீங்க. முழுசா கேளுங்க.

2. “நோ” ன்னு சொல்ல குழந்தையைப் பழக்கணும். குழந்தை கிட்டே குழந்தையோட உடம்பு குழந்தைக்கு மட்டுமே சொந்தமானதுங்கற உண்மையை சொல்லுங்க. யாராச்சும் தப்பா தொட முயற்சி பண்ணினா “நோ” ன்னு அழுத்தமா, சத்தமா சொல்லப் பழக்குங்க.

3. குழந்தையை தன்னம்பிக்கை உடைய குழந்தையா வளர்க்க வேண்டியது அவசியம். அப்பா அம்மா அதுக்கு முன் மாதிரிகையா இருக்கணும். குழந்தைங்க கூட ரொம்ப நேரம் செலவிடுங்க. அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு வரவேண்டியது அவசியம்.

4. அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே நல்ல உரையாடல் பழக்கம் வேணும். அன்பான, விரிவான, அமைதியான உரையாடல் ரொம்ப முக்கியம். தினமும் குழந்தை கூட பேசுங்க. “அம்மா கிட்டே எதுன்னாலும் நம்பிக்கையா சொல்லலாம்” ங்கற நிலமை தான் இருக்கணும். அதுதான் அடிப்படை. இல்லேன்னா, குழந்தை உங்க கிட்டே விஷயத்தை மறைக்கவும் வாய்ப்பு உண்டு.

5. குழந்தை என்ன சொல்லுதோ அதை ரொம்பக் கவனமா கேளுங்க. எந்த குழந்தையும் கற்பனையா ஒரு பாலியல் தப்பை உருவாக்கிச் சொல்லாது. பொதுவா தெரிந்த நபர்கள் விளையாட்டுங்கற போர்வைல தான் இதைச் செய்வாங்க. அதைக் கவனத்துல வெச்சுக்கோங்க. குழந்தைகளை முழுக்க முழுக்க நீங்க நம்ப வேண்டியது ரொம்ப முக்கியம்.

6. “எனக்கு அந்த மாமாவைப் புடிக்காது” ன்னு ஒரு குழந்தை சொன்னா உள் மனசுல ஒரு சின்ன மணி அடிக்கட்டும். ஒருவேளை ஏதேனும் சில்மிஷம் நடந்திருக்கலாம். குழந்தையை வற்புறுத்தாதீங்க. யாராச்சும் குழந்தை கூட பழகற விதத்துல சந்தேகம் தெரிஞ்சா அந்த நபரை முழுமையா தவிர்க்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

7. நீங்க இல்லாதப்போ குழந்தையை ஒரு மூணாவது நபர் கிட்டே ரொம்ப நேரம் விட்டுட்டு போகாதீங்க. உங்களுக்கு சந்தேகமே வராத இடத்துல கூட குரூரமான மனசு ஒளிஞ்சிருக்கலாம்.

8. “அம்மா கிட்டே சொல்லாதே” ன்னு யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களான்னு கேளுங்க. பிள்ளைங்க கள்ளம் கபடமில்லாதவங்க. நீங்க கேட்டா சொல்லிடுவாங்க. நிறைய தப்புகள் இந்த வாக்குறுதிக்குப் பின்னால இருக்க வாய்ப்பு உண்டு.

9. அதே மாதிரி “அம்மா கிட்டே சொல்லுவேன், அப்பா கிட்டே சொல்லுவேன்” ன்னு யாராச்சு மிரட்டினாங்களான்னும் கேளுங்க. இப்படிப்பட்ட பிளாக் மெயில் தொந்தரவு ரொம்ப ஆபத்தானது ! தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடும்.

10. யாராச்சும் சாக்லேட் குடுத்தாங்களா ? கிஃப்ட் குடுத்தாங்களா ? ஏதாச்சும் வாங்கித் தரேன்னு சொன்னாங்களான்னு கேளுங்க. இதெல்லாம் மோசமான தொடுதலுக்கான முன்னுரைகளாய் இருக்கலாம். இந்த விஷயத்துல மட்டும் படிச்சவங்க, படிக்காதவங்க, ஏழைங்க, பணக்காரங்கன்னு வித்தியாசமே கிடையாது. இது உங்க மனசுல இருக்க வேண்டியது அவசியம்.

11. குழந்தை கிட்டே பதட்டமோ, சோகமோ, கவலையோ இருந்தா அமைதியா உக்காந்து என்ன விஷயம்ன்னு கேளுங்க. குழந்தையோட உடம்புல ஏதாச்சும் காயம், அடையாளம் ஏதாச்சும் இருக்கான்னும் பாருங்க. வித்தியாசமா ஏதாச்சும் தெரிஞ்சா உஷாராயிடுங்க.

12. இப்படி ஏதாச்சும் தப்பு நடந்தா, தப்பான விஷயத்தை யாராச்சும் பண்ண முயற்சி பண்ணினா, யார் கிட்டே தகவல் சொல்லணும்ங்கற விஷயத்தை குழந்தை கிட்டே சொல்லிடுங்க. முக்கியமான போன் நம்பர்களை குழந்தைகிட்டே எழுதிக் குடுத்திருங்க.

13. குழந்தைங்க தப்பு செய்தா உடனே எகிறிக் குதிச்சு களேபரம் பண்ணாதீங்க. அதுக்காக தப்பை கண்டிக்காதீங்கன்னு சொல்ல வரலை ! தப்பு பண்றது சகஜம், ஆனா அதை திரும்ப பண்ணக் கூடாதுங்கறதை சொல்லிப் புரியவையுங்க. தப்பு பண்ணினா கூட அதை உங்க கிட்டே சொல்ற அளவுக்கு குழந்தைகளை பழக்குங்க.

14. திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், பூங்கா போன்ற இடங்கள்ல எப்படி நடந்துக்கணும்ங்கறதை அவங்களுக்கு சொல்லிக் குடுங்க. எப்படியெல்லாம் எச்சரிக்கையா இருக்கணுங்கறதை அவங்களுக்கு அமைதியா சொல்லிக் குடுங்க. அதுக்காக அவங்களை ஒரேயடியா பயமுறுத்தி வைக்காதீங்க.

15. திடீர்ன்னு யாராச்சும் சொந்தக்காரங்க குழந்தை கிட்டே ரொம்ப பாசமா இருந்தா கவனிங்க. கடைக்குக் கூட்டிட்டு போறேன், சினிமாக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னா மறுத்துடுங்க. இந்த தொந்தரவு தருபவர்களில் எல்லா வயசு மனிதர்களும் உண்டு. பதின் வயது விடலைகள் முதல், நரை விழுந்த கிழடுகள் வரை. எனவே விழிப்பு அவசியம்.

16. ஆபாசப் புத்தகம், படம் இப்படியெல்லாம் யாராச்சும் காட்டினா வீட்ல சொல்லச் சொல்லுங்க. குழந்தைங்களை தப்பான சிந்தனைக்குள்ள கொண்டு போய் அவங்களை பயமுறுத்தி பாலியல் பிரச்சினை செய்றவங்க ஏராளம்.

17. யாராச்சும் குழந்தையை போட்டோ எடுக்க வந்தால் “வேண்டாம்” ன்னு சொல்லப் பழக்குங்க. குழந்தைகளை மோசமா படம் எடுக்கவும் இது வழி வகுக்கும்.

18. அதேபோல குழந்தைங்க கிட்டே ஒரு தடவை இதைப் பற்றி சொல்லிட்டேன்னு விட்டுடாதீங்க. அடிக்கடி கேட்டுட்டே இருங்க. குழந்தைங்களை மத்தவங்க சீக்கிரம் ஏமாத்திட முடியும் !

19. கிராமத்து அம்மாக்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. இந்த மாதிரி பேட் டச் சமாச்சாரங்களெல்லாம் நகரத்துல மட்டும் தான்னு ! ஆனா அது ரொம்ப தப்பான அபிப்பிராயம். இந்த விஷயத்துல எல்லா இடத்துலயும் சிக்கல் உண்டு. அதுவும் சம அளவில் !

20. தப்பு நடந்தது தெரிஞ்சா அதை லேசா எடுத்துக்காதீங்க. “அவரு தெரியாம பண்ணியிருப்பாரு. இனிமே பண்ண மாட்டாரு” ன்னு நீங்களா தீர்ப்பு எழுதாதீங்க. இந்த மாதிரி சிந்தனை உள்ளவங்க சினிமாவோட கிளைமேக்ஸ் மாதிரி சட்டுன்னு திருந்த மாட்டாங்க.

எது தப்பு எது சரின்னு தெரியாத மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளைக் கொடுப்பது குழந்தைகள் பாதுகாப்பா இருக்க வழி வகுக்கும். இன்னொரு முக்கியமான விஷயம். பாலியல் சிக்கல் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் உண்டு. சுமார் 18 சதவீதம் ஆண் குழந்தைகள் இந்த சிக்கலை சந்திக்கிறாங்க என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஒட்டு மொத்த சமூகமும் ஒரு நாளில் திருந்தி விடப் போவதில்லை. பெற்றோர் விழிப்பாய் இருப்பதும், குழந்தைகளை விழிப்பாய் இருக்கப் பழக்குவதுமே இந்தக் சிக்கலை எதிர்கொள்ளும் வழிகளாகும் !

 
 

வாக்களிக்க விரும்பினால்

 

“மருந்தை” நாடும் பெண்கள், சிக்கலில் தாம்பத்யம்!!!

“என் பையனை தலையணை மந்திரம் போட்டு மயக்கிட்டா” என மாமியார்கள் புலம்புவதும், “அவனை முந்தானைல முடிஞ்சுட்டா” என பெண்கள் கிண்டலடிப்பதும் வெகு சகஜம். தாம்பத்யத்தின் தேவையை ஒருவகையில் இந்த வாசகங்களெல்லாம் திரும்பத் திரும்ப உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. தாம்பத்யம் உயிர்ப்பாக இருக்கும் காலமெல்லாம் தம்பதியருக்கு ஹனிமூன் காலம் தான். அந்த ஏரியா வீக் ஆகும்போது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து குவியும். மன அழுத்தத்தை விரட்டும் ஒரு அசத்தலான விஷயம் செக்ஸ் என்கின்றனர் உளவியலார்கள்.

மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபிபோல செக்ஸ் வாழ்க்கை எப்போதும் வற்றாத விஷயமாய் இருப்பதில்லை என்பது தான் சிக்கல். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக ஆண்களுக்கு என்ன தான் “விருப்பம்” இருந்தாலும் உடல் ஒத்துழைக்காவிட்டால் தோல்வி தான். ஆண்மைக் குறைவு பல்வேறு காரணங்களில் இருக்கலாம். நோய், மன அழுத்தம், உடல் குறைபாடு, விருப்பமின்மை இப்படி ஏதோ ஒன்று !

இதை வெளியே சொல்வது அவமானம் என பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். “வாலிப வயோதிக அன்பர்களே” என்று தெருக்கடை முனை முதல் தொலைக்காட்சித் திரை வரை கேட்கும் குரல்களுக்கு  மூலதனமே இந்தப் பயம் தான்.  ஆண்மைக் குறைவு சிக்கலைச் சரிசெய்ய ஏகப்பட்ட வழி வகைகள் உண்டு. ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமென்றால், “இரத்த ஓட்டத்தை தேவையான இடத்தில் பாயச் செய்து விட்டால்” பிரச்சினை தீர்ந்தது ! அந்த வேலையைச் செய்யும் ஆயிரத்து சொச்சம் மருந்துகளில் இன்றைக்கு முதலிடம் வயாகராவுக்கு !

ஆண்களுக்கு வயாகரா ? அப்படின்னா பெண்களுக்கு ? இப்படி சிந்தித்த மக்கள் தான் இன்று பணம் சம்பாதிக்க தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை உடல் சார்ந்த குறைபாடு விகிதம் ரொம்பவே குறைவு. பெரும்பாலும் மனம் தான் ! நிம்மதியான வாழ்க்கையோ, குடும்ப சூழலோ இல்லாவிட்டால் அவர்களால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாது. ஆனால் அதையெல்லாம் தாண்டித் தான் இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பாலியல் நதி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த “விருப்பம்” எனும் விஷயத்தைத் தான் மருந்து தயாரிப்பாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் ஆசையைத் தூண்டும் மருந்துகளைத் தயாரிக்கிறேன் பேர்வழி என ஏகப்பட்ட பேர் பிசினஸ் களத்தில் இறங்கிவிட்டார்கள். அவர்கள் சமீபத்தில் சுடச்சுட அறிவித்த பெயர் பிளிபான்செரின். இந்த மருந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் காலமெல்லாம் ஹனிமூன் தான் என ஏகப்பட்ட பில்டப் கொடுத்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தீர ஆய்வு செய்த எஃப்.டி.ஏ இந்த மருந்தை நிராகரித்து விட்டது. பக்கா விளைவு தரும் என எதிர்பார்க்கப் பட்ட மருந்தில் ஏகப்பட்ட பக்க விளைவுகளாம்.

முதலில் பெண்களுக்கான செக்ஸ் மருந்தையும் “இரத்த ஓட்டத்தை” அந்த இடத்தில் அதிகரிக்கும் விதத்தில் தான் உருவாக்கினார்கள். அது எடுபடவில்லை. அப்புறம் ஹார்மோன்களை வைத்து விளையாட ஆரம்பித்தார்கள் டெஸ்ட்டோஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் தான் பரவச நிலையின் காரணகர்த்தா. அதைத் தூண்டும் மருந்துகளைச் செய்ய முனைந்தார்கள். ஹார்மோனைத் தொட்டு விளையாடுவது ஆபத்து என அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. அதன் பின் மன அழுத்தம் தீர்க்கும் வித்தையைக் கொண்டு மருந்து தயாரித்துப் பார்த்தார்கள். அதுவும் பிளிபான்செரின் மூலமாக தோல்வியடைந்திருக்கிறது.

இப்போதைய லேட்டஸ்ட் தயாரிப்பு பெண்களுக்கான ஜெல் ! லிபிஜெல் என்று பெயரிடப்பட்டுள்ள இதைத் தயாரிப்பவர்கள் பயோசெனட் எனும் பிரபல மருந்து  தயாரிப்பாளர்கள். ஆனால் இதற்கும் பயனிருக்குமா ? அனுமதி கிடைக்குமா என்பதெல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இதற்கிடையில் பிரிமெலானோடைட் எனும் ஒரு புதிய மருந்தும் வருகிறது. இது ஒரு ஸ்ப்ரே ! மூக்கில் வைத்து ஸ்பிரே அடிக்க வேண்டும். அந்த வாயு நேரடியாக மூளைக்குப் போய் மூளையின் ஹைப்போத்தலாமஸ் பகுதியைத் தூண்டுமாம். அந்த ஏரியா தான் செக்ஸ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் இடம். இந்த ஸ்ப்ரேயின் சிறப்பு என்னவென்றால் , இதை ஆண்களும் பயன்படுத்தலாம் என்பது தான். ஆனால் இதுவும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம் !

இப்படி பெரும்பாலான பெண்களின் ஆர்வத்தைத் தூண்டும் மருந்துகள் தோல்வியிலேயே முடிந்தாலும் பல்வேறு விதங்களில், பெயர்களில் போலியான மருந்துகள் பெண்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் என்பதே உண்மையாகும்.

சரி பெண்களுக்கான ஆர்வத்தைத் தூண்டும் மருந்துகளின் தயாரிப்பு இருக்கட்டும். இந்த மருந்துகளெல்லாம் தேவை தானா ? இது உண்மையிலேயே பெண்களின் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டுமா ?

உலக அளவில் எடுக்கப்பட்ட முடிவுகள் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. சுமார் 40 சதவீதம் பெண்கள் பாலியல் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்கள். அல்லது கடலளவு இருக்க வேண்டிய ஆர்வம் சிறு டம்ளர் அளவுக்கே இருக்கிறது. எனவே, ஒருவகையில் பெண்களின் விருப்பத்தை அதிகரிப்பது அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கையை வலுவாக்கும்.

செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டுவது என்பதே தப்பான சிந்தனை என்கிறார் டாக்டர் லெனோர் டிஃபர். நியூயார்க் மருத்துவக் கல்லூரியின் உளவியல் நிபுணர் இவர். மக்கள் மக்களோடு தான் ஆர்வம் கொள்ளவேண்டுமே தவிர செக்ஸ் ஆர்வத்தை வலுக்கட்டாயமாகத் தூண்டக் கூடாது. ஒருவேளை மருந்து சாப்பிட்டு செக்ஸ் கிடைத்தே ஆகவேண்டும் என பெண்ணின் மனம் தூண்டப்பட்டால் அது வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாமல்லவா ? அப்படி ஒரு மருந்து இருந்தால் அது ஆண்களுக்கு வசதியாகிவிடக் கூடும். பெண்ணுடன் உறவை அந்த மருந்தின் மூலம் ஆண்கள் நிறைவேற்றக் கூடும். எனும் அவருடைய பயத்தில் நியாயம் இல்லாமலில்லை. 

செக்ஸ் ஆராய்ச்சியாளரான கனடாவின் ரோஸ்மெரி பாஸன் என்பவரும் இந்த விஷயத்தை எதிர்க்கிறார். பாலியல் ஆர்வம் என்பது தனிநபர் சார்ந்தது. அன்றைய பொழுது எப்படி இருந்தது ? அலுவல் எப்படி இருந்தது ? கணவனின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பதெல்லாம் தான் பெண்ணின் ஆர்வத்தை நிர்ணயிக்கின்றன. “பெண்ணின் விருப்பமென்பது ஸ்டவ் அடுப்பு அல்ல. தேவைப்படும் போது பற்ற வைத்துக் கொள்ள,”  என காட்டமாகவே சுடுகிறார் அவர்.

எல்லா பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்க வேண்டும். அது எப்போதுமே இருக்க வேண்டும். என்பதெல்லாம் ஒருவகையில் தவறான அனுமானங்கள். எந்த அளவு சரியான அளவு என்று சொல்ல முடியுமா ? என இந்த மருந்துக்கு எதிரான விமர்சனங்களும் லாஜிக் மீறாமல் தான் ஒலிக்கின்றன.

பெண்களுக்கான மருந்தை எப்படியேனும் கொண்டு வந்தே தீருவேன் என மருந்து கம்பெனிகள் மூக்கால் உழுவதற்கு ஒரே ஒரு காரணம் தான். பணம் ! வயாகரா எனும் ஒரு மாத்திரையைக் கொண்டே உச்சத்துக்குப் போய்விட்ட ஃபைசர் போல, பெண்களுக்கான ஒரு மருந்து கிடைத்தால் போதும் உச்சத்துக்கு போய்விடலாம் என கனவு காண்கின்றன நிறுவனங்கள். ஆனால் அவர்களின் பெரும்பாலானவர்கள் உண்மையான சிக்கலைச் சரிசெய்யும் முயற்சியில் இறங்கவில்லையோ என்று தான் யோசிக்கத் தோன்றுகிறது. அஸ்திவாரத்தை விட்டு விட்டு ஏழாவது மாடி கட்ட ஆசைப்படும் நிலையே பல நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளிலும் தெரிகின்றன.

தாம்பத்ய உறவு என்பது கணவன் மனைவியரிடையேயான புரிதலின் மூலம் வரவேண்டும். அவர்களுடைய உரையாடல், அரவணைப்பு என இந்த உறவின் நீளம் விரிவடைய வேண்டும். அதை விட்டு விட்டு மருந்தைக் குடித்து விட்டு விஷயத்தை முடிப்பதெல்லாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமான குடும்பத்தைக் கட்டியெழுப்பும் என்பது சொல்வதற்கில்லை.

ஆர்வமும் விருப்பமும் யாரும் கட்டளையிடுவதால் வராது என்பதே உண்மை. அதனால் தான் மருத்துவம் பெண்களின் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியில் பின்னடைவைச் சந்திக்கக் காரணம். சொல்லப் போனால் ஆண்களின் ஆர்வத்தையும் எந்த மருந்தும் அதிகரிப்பதில்லை. அவர்களுடைய ஆண்மைக் குறைவை நிவர்த்தி செய்கிறது அவ்வளவு தான். எனவே இத்தகைய மருந்துகளை ஒதுக்கி விட்டு, இலகுவான மனநிலையுடன் குடும்ப வாழ்க்கையை ஆனந்தமாய் அணுகுவதே நிரந்தரத் தீர்வாக முடியும்.

நன்றி : பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

விரல் நுனியில் விரசம்…

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

0

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க