பா.ம.க வுக்கு அப்படி என்ன கோபம் தி.மு.க மீது ?

அப்படி என்னதான் ஒரு “மஞ்சள் காமாலை” பார்வையோ பா.ம.க விற்கு தி.மு.க வின் மீது. எதிர் கட்சி பத்திரிகைகளே கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கும் செய்தியைக் கூட தி.மு.க எதிர்ப்பு அலைக்காகப் பயன்படுத்துகிறது பா.ம.க

இன்று பெரும்பாலான பத்திரிகைகள் “கர்நாடக விஷ சாராயத்தைக் குடித்து மக்கள் சாவு:” என்று செய்தி வெளியிட்டிருக்க கூட்டணி கட்சியாக இருக்கும் பா.ம. க மட்டும் தன்னுடைய தமிழ் ஓசை நாளிதழில் முதல் பக்கத்தில் தி.மு.க வை கடுமையாக விமர்சித்திருக்கிறது

“தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை படுதோல்வி. கள்ளச்சாராயம் குடித்து பலர் பலி” என்பது தான் இன்றைய தமிழ் ஓசை நாளிதழின் முதன்மைச் செய்தி !

கூடவே சிற்சில புள்ளி விவரங்களை ஆங்காங்கே இணைத்து முழுக்க முழுக்க இது தமிழக அரசின் தோல்வி போன்ற தோற்றத்தை பா.ம.க வலிந்து கட்டி எழுதியிருப்பது நிச்சயம் எதிர் கட்சியினருக்கு ஆனந்தத்தை அளித்திருக்கலாம்.

இந்த கழுத்து வலியுடனும் நாளை கலைஞர் ஏதேனும் கருத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

“நாங்கள் கூடவே இருந்து குழி பறிப்போம் – மரம் நடுவதற்காக” என பஞ்ச் டயலாக்கையும் வேறொரு செய்தியில் படிக்க நேர்ந்தது.

என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே தயாநிதி மாறன் ஆதரவாளர்கள், ம.தி.மு.க, வி.சிறுத்தை போன்ற கட்சிகள் எல்லாம் பா.ம.கவுடன் இணையப் போகுதில்லையா அதான் விஷயம் என என் காதில் நண்பர் கிசுகிசுத்தார். அப்படியா ? தயாநிதி மாறனுக்கும் மருத்துவருக்கும் ஆகவே ஆகாதே ? என்றால்.. அரசியல்ல இதெல்லாம் சகஜம் கிறது  கவுண்டமணிக்கே தெரியும், என்கிறார்.

எப்படியோ, ஒரு ஆரோக்கியமான கூட்டணி கட்சியாக தன்னை தைரியத்துடன் காட்டிக் கொள்ளும் வகையில் பா.ம.க தனித்துவம் பெறுகிறது. ஆனால் ஆரோக்கியமான கூட்டணிக் கட்சி என்றால் அரசை எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என புதிய விதிமுறையை அது எழுதி ஆளும் கட்சியினரை எரிச்சல் அடையச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கதே.

என்ன சொல்ல,
வீடு இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.