ஆண்பாவம் பொசொல்லாதது ! (ஆண்கள் ஸ்பெஷல்)

பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.

பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.

ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.

கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.

கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.

வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது  வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.

ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ?  இந்த மாதிரி ! ”

அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.

அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப் பட்டவர்கள்.அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.

பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா ?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும் !!!.

மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.

வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன ?

தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.

“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா ? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா ?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.

“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி !! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.

என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை..நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா ?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா ?

வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன ?

“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம் !

இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.

ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.

ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான்,  தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.

ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.

பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம்

ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம் ‍

ஆனால் இதயத்தில்

அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.

 

வாழ்த்துகள்.

நினைவில் நிற்கும் கலாம் : A Christian Article

2003ம் ஆண்டு, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்னுடைய முழு கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டைய “உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை ஆண்டு மலரில்” எனது “வழியோரம் நதியூறும்” எனும் கவிதையையும் பிரசுரித்திருந்தது. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலம்.

அறக்கட்டளையின் தலைவர் ராம்மோகன் ஆண்டுவிழா மலர் ஒன்றை அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பினார். சிறிது நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் அப்துல் கலாம் அவரிடமிருந்து வந்தது.

“வழியோரம் நதியூறும்” கவிதையைப் படித்தேன். சேவியர் சிறப்பாக எழுதியிருந்தார். கவிஞருக்குப் பாராட்டுகள். என அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். நமது கவிதை ஒன்றை ஜனாதிபதி பாராட்டினார் எனும் மகிழ்ச்சியை விட, ஒரு ஜனாதிபதி ஒரு சாதாரண ஆண்டு விழா மலரைக் கூட படிக்கிறார். அதற்குக் கூட பதில் அளிக்கிறார் என்பது என்னை மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடையச் செய்தது.

ஏழை சொல் அம்ப‌ல‌ம் ஏறாது என்று சொல்வார்க‌ள். ஏழையாய்ப் பிற‌ந்த‌ அப்துல் க‌லாமின் சொல் விண்வெளியையே எட்டிப் பார்த்த‌து. இது இளைய‌ ச‌மூக‌த்தின‌ருக்கு ஒரு பாட‌ம். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள் ம‌றைந்த‌ போது ஒரு விஷ‌ய‌ம் மிக‌த் தெளிவாக‌த் தெரிந்த‌து. அவ‌ர் விண்வெளியில் சாதித்த‌தோ, அணுவிய‌லில் சாதித்த‌தோ, ப‌த‌வியில் சாதித்த‌தோ எதுவுமே முன்னிலைப் ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. மூன்றே மூன்று விஷ‌ய‌ங்க‌ள் தான் முன்னால் நின்ற‌ன‌.

ஒன்று. அவ‌ருடைய எளிமை,

இரண்டு அவருடைய நேர்மை,

மூன்று மாண‌வ‌ ச‌மூக‌த்தின் மேல் அவ‌ர் கொண்டிருந்த‌ அக்க‌றை.

சாதார‌ வார்ட் க‌வுன்சில‌ர்க‌ள் வீதி வீதியாக‌ வாங்கிக் குவித்து, ஆட‌ம்ப‌ர‌க் கார்க‌ளில் அராஜ‌க‌ம் செய்யும் கால‌ம் இது. நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வே இருந்த‌ அப்துல் காலாம் க‌டைசி வ‌ரை த‌ன‌து எளிய‌ வீட்டின் ஏழ்மையைக் கூட‌ மாற்ற‌ நினைக்க‌வில்லை என்ப‌து ந‌ம்ப‌ முடியாத‌ விய‌ப்பு.

ஒரு எம்.எல்.ஏ ப‌த‌விக்கு வ‌ந்தால் அவ‌ருடைய‌ அத்த‌னை சொந்த‌க்கார‌ர்க‌ளும் மாளிகை க‌ட்டி, தொழில் தொட‌ங்கி, வ‌ங்கியில் க‌ணிச‌மான‌ ப‌ண‌த்தையும் சேர்ப்பார்க‌ள். ஆனால் அப்துல் க‌லாமின் சொந்த‌க் கார‌ர்க‌ள் எல்லோருமே இன்னும் அதே ஏழ்மை ம‌ற்றும் எளிமை நிலையிலேயே இருக்கின்ற‌னர். இது நில‌வுக்கு ராக்கெட் விட்ட‌தை விட‌ப் புதுமையாய் இருக்கிற‌து.

அவ‌ரைப் ப‌ற்றி வ‌ருகின்ற‌ க‌தைக‌ளெல்லாம் சிலிர்ப்பூட்டுகின்ற‌ன‌. ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ள் அவ‌ரை அர‌வ‌ணைப்ப‌த‌ற்கு அவ‌ருடைய‌ எளிமையும், நேர்மையும், இனிமையான‌ குண‌மும், ச‌மூக‌ அக்க‌றையும் தான் கார‌ண‌ம். சமீப காலத்தில் இந்திய‌ தேசம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்டவர்கள் இர‌ண்டு பேர். ஒருவர் அன்னைத் தெரசா இன்னொருவர் அப்துல் கலாம்.

அன்னை தெர‌சா, இயேசுவே என‌து ம‌ண‌வாள‌ன் என‌ அறிக்கையிட்டு இயேசுவின் மீதான‌ அன்பிலும், விசுவாச‌த்திலும் நிலைத்திருந்த‌வ‌ர். அப்துல் க‌லாம் இஸ்லாமிய‌ர். இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கையில் நிலைத்திருந்த‌வ‌ர். ஆனால் இருவ‌ரையும் உல‌க‌ம் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி அர‌வ‌ணைத்துக் கொண்ட‌து. கார‌ண‌ம் இருவ‌ரிட‌மும் இருந்த‌ இர‌ண்டு குண‌ங்க‌ள். ஒன்று எளிமை, இன்னொன்று இர‌க்க‌ம்.

விழாவுக்கு ஒரு ஆடை வாங்கி, நாளுக்கு ஒரு வேஷ‌ம் க‌ட்டும் ப‌ழ‌க்க‌ம் க‌லாமிட‌ம் இருக்க‌வில்லை. த‌ன‌து ஆடையைத் தைக்க தானே ஒரு சின்ன‌க் க‌டையில் கொண்டு போய் கொடுப்பாராம். தைக்க‌க் கொடுத்து விட்டு, “இர‌ண்டு தைய‌ல் போடுப்பா. அப்போ தான் சீக்கிர‌ம் பிரியாது” என்பாராம். இப்ப‌டி எளிமையாய் ஒரு த‌லைவ‌ர் இருக்க‌ முடியுமா ?

உல‌கின் அத்த‌னை மேடைக‌ளிலும் பேசிய‌வ‌ர், அத்த‌னை த‌லைவ‌ர்க‌ளுட‌னும் உரையாடிய‌வ‌ர், விஞ்ஞான‌த்தில் உச்ச‌த்தில் உலாவிய‌வ‌ர். ஆனால் க‌டைசிவ‌ரை அவ‌ர் எளிமையின் தெருக்களில் தான் உலவினார். அது தான் அவ‌ரை ஒரு ரோல் மாட‌லாக‌ உருமாற்றிய‌து.

அவ‌ருடைய‌ குணாதிச‌ய‌த்தைக் க‌ட்டியெழுப்பிய‌தில் பெரும்ப‌ங்கு அவ‌ருடைய‌ பெற்றோரைச் சாரும். யாரிட‌மும் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌க் கூடாது, எல்லோரையும் ம‌திக்க‌ வேண்டும், ச‌க‌ம‌னித‌னை நேசிக்க‌ வேண்டும், எளிமையாக‌ இருக்க‌ வேண்டும் எனும் அத்த‌னை உய‌ரிய‌ குண‌ங்க‌ளும் அவ‌ருக்கு அவ‌ருடைய‌ பெற்றோரிட‌மிருந்தே கிடைத்த‌ன‌.

“அவனவன் தன் தன் தாய்க்கும், த‌க‌ப்ப‌னுக்கும் ப‌ய‌ந்திருக்க‌வும்..” என‌ க‌ட‌வுள் லேவிய‌ராக‌ம‌த்தில் கூறுகிறார். தாய் த‌க‌ப்ப‌னின் ஆலோச‌னைக‌ளை அச‌ட்டை ப‌ண்ணாதிருக்க‌ வேண்டும் என‌ விவிலிய‌ம் வ‌லியுறுத்துகிற‌து. ந‌ல்ல‌ ம‌ர‌ம் கெட்ட‌ க‌னியைத் த‌ருவ‌தில்லை. குழந்தைகளின் குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு அதிகம்.

“இயேசு த‌ன‌து சீட‌ர்க‌ளின் பாத‌ங்க‌ளைக் க‌ழுவி அடிமையின் ரூப‌னானார்”. அவ‌ர் ப‌ணிவைச் செய‌லில் காட்டினார். ஒரு ம‌னித‌ர் வாழ்க்கையில் உய‌ர‌ உய‌ர‌ ப‌ணிவில் மேலும் மேலும் செழிக்க‌ வேண்டும். ம‌னித‌ர்க‌ளில் உச்ச‌மாய் இருந்தார் மனித வடிவமாய் வந்த இயேசு. என‌வே அடிமையின் கோல‌மாய் த‌ன்னை தாழ்த்தினார்.

க‌லாம் கிறிஸ்த‌வ‌ர‌ல்ல‌. ஆனால் இயேசுவின் ப‌ணிவை அப்ப‌டியே செய‌ல்ப‌டுத்தினார். சிற‌ப்பு வ‌ர‌வேற்பு வேண்டவே வேண்டாம் என்பார், சிற‌ப்புக் க‌வ‌ன‌த்தைத் த‌விர்ப்பார். பாராட்டுக்குக் கூச்ச‌ப்ப‌டுவார். காவ‌லாளி ஆனாலும் ச‌ரி  ஒபாமா ஆனாலும் ச‌ரி ப‌ணிவில் வேறுபாடு காட்டுவ‌தில்லை. கார‌ண‌ம் அவ‌ர‌து ப‌ணிவு ஆளுக்கும், சூழ‌லுக்கும் த‌க்க‌ப‌டி மாறுவ‌தில்லை. அவருடைய இயல்பில் கலந்திருந்தது. நில‌த்தை மாற்றி ந‌ட்டாலும் மாம‌ர‌த்தில் ப‌லாப்ப‌ழ‌ம் காய்க்குமா என்ன‌ ?

தனக்கு விதிக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் தான் இறைவனின் சித்தப்படி வாழ்பவர்கள். இயேசு முப்பது ஆண்டுகள் மரங்களோடு வாழ்ந்தார். தச்சுத் தொழிலை அவர் முழு ஈடுபாட்டுடன் செய்தார். கலாம், ஏழ்மையான சிறு வயதில் நியூஸ் பேப்பர் விற்றும், சின்னச் சின்ன வேலைகள் செய்தும் தான் வாழ்க்கையை ஓட்டினார். எந்தக் கணத்திலும் அவர் தனக்கு இறைவன் அளித்த எல்லை போதவில்லை என முணுமுணுத்ததேயில்லை.

எந்தக் காலகட்டத்திலும் நேர்மையாய் இருப்பதே இறைவன் நமக்கிட்ட கட்டளை. எந்த ஒரு செயலிலும் நேர்மையைப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்களே கடவுளுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்பவர்கள். “சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பவர்கள் தான் பெரியவற்றுக்கு அதிபதி ஆக முடியும்” என இயேசுவே சொல்கிறார். கலாம் தனது வாழ்க்கையில் அதைச் செய்து காட்டினார்.

அவ‌ருடைய‌ கையெழுத்துப் போட்ட செக்கை பிரேம் ப‌ண்ணி வைக்க‌ ஆசைப்ப‌ட்ட‌ க‌டைக்கார‌ர்க‌ளிட‌ம் ‘செக்கை போட்டு ப‌ண‌த்தை எடுங்க‌ள். உங்க‌ள் பொருள் இல‌வ‌ச‌மாய் என்னிட‌ம் இருக்க‌வேண்டாம். ப‌ண‌த்தைப் போடாவிட்டால் பொருளைத் திருப்பி அனுப்புவேன். பிளீஸ்” என‌ அடுத்த‌வ‌ர்க‌ளின் எந்த‌ வித‌ பொருளுக்கும், ச‌லுகைக்கும் ஆசைப்ப‌டாத‌ ம‌னித‌ர்க‌ளை நாம் க‌டைசியாய் எப்போது ச‌ந்தித்தோம் ?

சுய‌ந‌ல‌ம் இல்லாத‌ ஒரு வாழ்க்கையை க‌லாம் வாழ்ந்தார். அவ‌ருடைய‌ வாழ்க்கை த‌ன‌க்காக‌வோ, த‌ன‌து உற‌வின‌ர்க‌ளுக்காக‌வோ, ந‌ண்ப‌ர்க‌ளுக்காக‌வோ சொத்தை சேமிக்க‌ வேண்டும் என்று இருக்க‌வில்லை. த‌ன‌து வ‌ருமான‌த்தின் பெரும்ப‌குதியை பிற‌ருக்கு வ‌ழ‌ங்குவ‌தை அவ‌ர் வ‌ழக்கமாக வைத்திருந்தார்.

ந‌ம‌க்கென‌ வாழ்ந்து ந‌ம‌க்கென‌ ம‌ரிக்கும் வாழ்க்கை கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைய‌ல்ல‌. க‌லாம் த‌ன‌க்கென‌ ம‌ட்டுமே வாழ‌வில்லை. அவர் ம‌த‌ங்க‌ளைத் தாண்டி ம‌னித‌ர்க‌ளை நேசித்தார். அதுதான் க‌லாமை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

க‌லாமின் வாழ்க்கை ந‌ம‌க்கு எளிமையான‌ வாழ்க்கையையும், ப‌ணிவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும், நேர்மையையும், பிற‌ர் பொருளுக்கு ஆசைப்ப‌டாத‌ த‌ன்மையையும், சுய‌ந‌ல‌ம‌ற்ற‌ ம‌ன‌தையும் க‌ற்றுத் த‌ர‌ட்டும். க‌லாமைப் போன்ற‌ த‌லைவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு ஊக்க‌மூட்டும் முன்னுதார‌ண‌ங்க‌ள்.

அதே நேர‌த்தில், இறைம‌க‌ன் இயேசு ம‌ட்டுமே ந‌ம‌க்கு இருக்க‌ வேண்டிய‌ ஒரே வ‌ழிகாட்டி. அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளும், வாழ்க்கையும் ம‌ட்டுமே நாம் பின்ப‌ற்ற‌ வேண்டிய‌ அடிச்சுவ‌டுக‌ள். க‌லாமின் வாழ்க்கையிலிருந்து ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை எடுத்துக் கொள்வோம். எப்போதும் இறைம‌க‌ன் இயேசுவோடு ம‌ட்டுமே ந‌ம‌து செய‌ல்க‌ளை ஒப்பீடு செய்வோம்.

அனைவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்

 

அன்புட‌ன்

சேவிய‌ர்

வயிறை வணங்காதீர் : Christian Article

“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.

அதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான‌ உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.

தேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ?” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.

உணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.

இத்தனையும் ஏன் ? உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே ! சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் !

இயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வ‌ச‌ன‌த்தின் வ‌ழியாக‌ விரும்புவ‌தைச் சாப்பிட‌லாம் எனும் அங்கீகார‌த்தை அவ‌ர் ந‌ம‌க்குக் கொடுத்திருக்கிறார்.

நன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.

எதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.

இயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உண‌வு ஒருவ‌னை ஏழையாக்கும் என்ப‌தை பைபிள் தான் ந‌ம‌க்குச் சொல்கிற‌து.

உண‌வின் மீது அதீத‌ நாட்ட‌ம் ஏற்ப‌டும் போது அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கிற‌து. அத‌ன் தேட‌ல் அதிக‌ரிக்கும் போது சிந்த‌னை முழுதும் அதுவே நிர‌ம்புகிற‌து. சிந்த‌னை முழுதும் அது நிர‌ம்பும் போது அவ‌னுக்கு அது க‌ட‌வுளாகிப் போகிற‌து.

“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என ப‌வுல் அவ‌ர்க‌ளைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே !

க‌ட‌வுளைத் த‌விர‌ எதை முத‌ன்மைப் ப‌டுத்தினாலும் அது ‘சிலை வ‌ழிபாடாகிற‌து’. சில‌ருக்கு ப‌ண‌ம். சில‌ருக்கு புக‌ழ். சில‌ருக்கு உண‌வு ! என‌ சிலை வ‌ழிபாடு வேறுப‌டுகிற‌து. க‌ற்சிலையை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ள் நாம். ஆனால் வேறு எந்தெந்த‌ சிலைக‌ளை வ‌ழிப‌டுகிறோம் என்ப‌தை உண‌ர வேண்டும்.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்ப‌தே உண‌வைக் குறித்த‌ ந‌ம‌து பார்வையாய் இருக்க‌ வேண்டும் என‌ ப‌வுல் அறிவுறுத்துகிறார்.

ம‌னித‌ன் அப்ப‌த்தினால் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌வுளின் வாயினின்று வ‌ரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு உண‌வாக‌ வேண்டும். அதுவே மிக‌வும் முக்கிய‌மான‌து ! “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.

உணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ! ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.

அர‌ச‌ன் உண்கின்ற‌ அட்ட‌காச‌மான‌ உண‌வை வேண்டாம் என‌ ம‌றுத்து எளிமையான‌ உண‌வை தேர்ந்தெடுத்த‌ தானியேலை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்தார். க‌டைசிவ‌ரை அவ‌ரோடு இருந்தார்.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை  மட்டுமே உண்ணவும் வேண்டும்.

சுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை !

இதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில் ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் ?

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (ச‌ங் 34 : 8) என்கிறது சங்கீதம். ந‌ம‌து சுவை ந‌ர‌ம்புக‌ள் நாவில் அல்ல‌, வாழ்க்கையில் இருக்க‌ வேண்டும். அத‌ற்கு நாம் இறைம‌க‌னைச் சுவைக்க‌ வேண்டும்.”

“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைக‌ள் ந‌ம‌க்கு பாலைப் போல‌ இருக்க‌ வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வ‌ச‌ன‌த்துக்கு ஏற்ப‌ நாம் இறைவார்த்தையைப் ப‌ருகுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆன்மீக‌ உண‌வையும், பான‌த்தையும் ப‌ருகும் போது உட‌லின் தேவைக‌ள் இர‌ண்டாம் ப‌ட்சாமாகிவிடும் என்ப‌தையே இயேசு வ‌லியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் க‌வ‌லை வேண்டாம்” என‌ இயேசு சொன்ன‌த‌ன் பொருள் இது தான்.

உணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி ?

எனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.

  1. சுவையான‌ உண‌வுக்காக‌த் தேடி ஓடும் ம‌ன‌நிலையை விட்டு வெளியே வ‌ருவோம். அது நோயையும், சோர்வையும் தான் த‌ரும். வார்த்தையாகிய‌ இறைவ‌னைத் தேடி ஓடும் ம‌ன‌நிலையை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.
  1. “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுள‌த்தை நிறைவேற்றுவ‌தே நம‌து உண‌வு எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொள்வோம்.
  1. உண‌வு என்ப‌து க‌ள‌ஞ்சிய‌த்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்ப‌த‌ற்கான‌த‌ல்ல‌. வ‌றிய‌வ‌ர்க‌ளோடும், ஏழைக‌ளோடும் ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌து. ஏழை இலாச‌ரை உதாசீன‌ம் செய்யாம‌ல் ச‌மூக‌த்தின் ப‌சிக்கு உண‌வ‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளாக வாழவேண்டும் எனும் ம‌னித‌ நேய‌த்தை வ‌ள‌ர்த்துக் கொள்வோம்.

ப‌டைத்த‌வ‌ர் கொடுத்த‌தே உண‌வு, அதை ப‌டைத்த‌வ‌ருக்கு மேலாக‌ உய‌ர்த்தாதிருப்போம் !

 

 

சேவிய‌ர்

ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special

ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.

வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.

உலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.  சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.

நோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.

தொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.

இருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ! ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.

“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.

இயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் காட்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.

இயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.

ஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.

இரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.

ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.

ஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.

“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;

இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.

மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு  வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம்? என்ன வழி ? ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா ?

கோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.

“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என்பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.

“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.

“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.

அலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.

“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.

கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.

நமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.

ஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.

“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எபே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.

இந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.

” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.

ஒளி மீட்பின் அடையாளம்.

ஒளி தீர்ப்பின் அடையாளம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

*

நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்

நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம். மனதில் தளும்பும் ஆனந்தம், உதடுகளில் அமர்ந்திருக்கும் புன்னகை இவையே ஒருவன் வாழ்க்கையைக் குறித்த புரிதலோடு இருக்கிறான் என்பதன் அடையாளங்கள். –

ஹக் சிட்னி

முக்கியமற்றது எனும் நினைப்பில் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லக் கூடிய விஷயம் இந்த நகைச்சுவை உணர்வு. சில வேளைகளில் நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களை கிண்டலடிக்கக் கூட நாம் தயங்குவதில்லை. “எப்பப் பாரு ஏதாவது சொல்றது, சிரிக்கிறதுன்னே இருக்கான். லைஃப்ல உருப்படற வழியே இல்லை” என சகட்டு மேனிக்கு விமர்சனங்களை அள்ளி விடுபவர்களும் ஏராளம்.

ஆனால் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஒரு விஷயம் கவனிச்சுக்கோங்க. நகைச்சுவை உணர்வு என்பது நீங்கள் ஜோக் அடிக்கிறீர்களா என்பதை வைத்து கணக்கிடுவதல்ல ! ஒரு செயலில் இருக்கும், அல்லது ஒரு சொல்லில் இருக்கும் நகைச்சுவையை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எல்லாரையும் சிரிக்க வைத்து விட்டு உள்ளுக்குள் நகைச்சுவை உணர்வே இல்லாமல் போனால் அது பிழைப்புக்காக குரங்காட்டி வித்தை செய்பவரைப் போலவோ, மேடையில் கோமாளி வேஷம் போடுபவரைப் போலவோ ஆகிப் போகும் !

நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப் படுத்துமளவுக்கு கிண்டல் செய்வது என்பது சிலருடைய பார்முலா ! அது குரூர நகைச்சுவை. அதை விட்டு விடுங்கள். நகைச்சுவையில் அந்த நபரும் இணைந்து சிரிப்பதே முழுமையான நகைச்சுவை !

நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள். தலைமைப் பண்பின் மிக முக்கியமான விஷயமாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் நகைச்சுவை உணர்வு உடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்.

அலுவலகங்களில் பிறரோடு இணைந்து பணிசெய்வதே வெற்றிபெறுவதன் முதல் தேவை. அத்தகைய மனநிலையைத் தருவதற்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே கை கொடுக்கிறது ! இயல்பாய் எல்லோருடனும் சிரித்து அன்னியோன்யமாய் வேலை பார்ப்பவனை அலுவலகத்துக்குப் பிடித்துப் போவதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உலகில் ஆட்டிப் படைக்கும் சிக்கல் மன அழுத்தம். அதற்கான காரணம் உலகமயமாதலாகவும் இருக்கலாம், அல்லது குழாயடிச் சண்டையாகவும் இருக்கலாம். காரணம் முக்கியமில்லை. ஆனால் மன அழுத்தம் மட்டும் வந்து விட்டால் வாழ்க்கை அதோ கதி தான். உடலும் பணால் ! உள்ளமும் பணால் ! அத்தகைய மன அழுத்தம் வராமல் தடுக்கும் வல்லமை நகைச்சுவை உணர்வுக்கு ரொம்பவே உண்டு.

அதனால் தான் மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார், “ எனக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன்”. ரொம்பவே உண்மையான வார்த்தை !! இன்றைக்கு தற்கொலைப் பட்டியல்களை புரட்டிப் பார்த்தால் வாழ்க்கையை கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அணுகாமையும் ஒரு முக்கியமான காரணமாய் நம் கண்ணுக்கு முன்னால் விரிகிறதா இல்லையா ?

மனித மூளையின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் சிரிப்பு ரொம்பவே முக்கியம். லண்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “நல்ல சிரித்து வாழும் மனிதர்களின் மூளை சுறுசுறுப்பாகவும், கற்றுக் கொள்ளும் தன்மையிலும் இருக்கும்.” என்று தெரியவந்தது ! அது நகைச்சுவை கேட்பதோ, படிப்பதோ, பார்ப்பதோ என எந்த ஒரு வகையிலும் இருக்கலாம். அதனால் தான் மேலை நாடுகளில் மருத்துவர்கள் “நல்ல ஜோக் படமா போட்டு அரை மணி நேரம் சிரிங்க” என்றெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுகிறார்கள்.

உங்களுடைய கோபத்தையோ, உங்கள் மீது வேறொரு நபருக்கு இருக்கும் கோபத்தையோ அழிக்க நகைச்சுவை உணர்வைப் போல சிறந்த ஒரு ஆயுதம் இருக்கவே முடியாது ! அது உங்களுடைய நட்பு வட்டாரத்தை இதன் மூலம் ரொம்ப உற்சாகமாய் இயங்கவும் வைக்கும் இல்லையா ?

வாழ்க்கை எப்போதும் வசந்தங்களையே தருவதில்லை. சுண்டிப் போடும் தாயக்கட்டையில் எப்போதும் ஒரே எண் வருவதில்லை. வாழ்க்கை கலவையான உணர்வுகளின் சங்கமம். வாழ்வில் வருகின்ற நிகழ்வுகளையெல்லாம் இயல்பாகவும், இலகுவாகவும் எடுத்துக் கொள்ள நகைச்சுவை உணர்வு அவசியம். அது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்.

உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். வாழ்க்கை அழுவதற்கானதல்ல. அழுதாலும், சிரித்தாலும் கடிகாரம் ஓடிக் கொண்டே தான் இருக்கும், நாட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் அழுவதும் சிரிப்பதும் உங்களுடைய தீர்மானத்தில் !

உடலை நேசிப்போம்

நமது உடல் ஆன்மாவை விட ஆழமான ரகசியங்களை உள்ளடக்கியது ! அதை முழுமையாய் புரிந்து கொள்வது இயலாத காரியம் –

இ.எம்.ஃபாஸ்டர்.

உடல் ஒரு அதிசயங்களின் சுரங்கம். அறிவு தேடும் வேட்டையில் பெரும்பாலும் நாம் கவனிக்க மறந்து போகும் விஷயமும் நமது உடல் தான். உடலுக்கும் மனசுக்கும் நேரடித் தொடர்பு உண்டு !

“ஐயோ நான் ரொம்ப கறுப்பா இருக்கேன்” என நினைத்து கவலைப்பட்டுக் கவலைப்பட்டு மன அழுத்தத்தில் மாண்டு போனவர்களும் உண்டு. தனது உடலைப் பற்றி அவமானப்பட்டுப் பட்டு ஒதுங்கியே இருந்து உருப்படாமல் போனவர்களும் உண்டு. என் கண்ணு சரியில்லை, மூக்கு சரியில்லை, நாடி சரியில்லை என அறுவை சிகிச்சை செய்து ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், வெற்றியாளர்கள் தங்கள் உடலை நேசிப்பவர்கள். தங்கள் உடல் எப்படியிருந்தாலும் தரப்பட்ட உடலை நேசிப்பவர்களே வெற்றியின் கனியையும், மகிழ்ச்சியின் இனிமையையும் ரசிக்க முடியும். உடலுக்கும் மனதுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தங்களுடைய உடலை நேசிப்பவர்களே தன்னம்பிக்கையாய் நடை போட முடியும்.

நீங்கள் கண்ணாடியில் உங்களையே பார்க்கும் போது என்ன தெரிகிறது ? இறைவன் கொடுத்த அழகான உடல். கைகள், முகம், தலை, புன்னகை இவை தெரிகிறதா ? இல்லை கன்னத்தில் இருக்கும் ஒரு பரு, வரிசை பிசகியிருக்கும் ஒரு பல், உதிர்ந்து போயிருக்கும் கொஞ்சம் தலைமுடி இப்படி இருக்கும் சின்னச் சின்ன குறைகள் கண்ணுக்குத் தெரிகிறதா ? இந்தக் கேள்விக்கான விடையில் இருக்கிறது நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா ? இல்லையா என்பதன் பதில் !

ஒரு பெண் இருந்தார். அவருக்கு நடிகை ஆக வேண்டும் எனும் அதீத ஆர்வம். அதற்குரிய தகுதியும், அழகும் தன்னிடம் இருப்பதாக நம்பினாள். ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார்.

அந்தப் பெண் கவலைப்படவில்லை. தன் மீதான நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார். ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் தான் மர்லின் மன்றோ.

உங்களைக் குறித்தும், உங்களுடைய உடல் அமைப்பைக் குறித்தும் முழுமையான ஏற்றுக் கொள்தல் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் உடலை நீங்களே நிராகரித்தால் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறருடைய விமர்சனங்களை வைத்து உங்களை நீங்களே எடைபோட்டீர்கள் எனில் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது !

தன் மீதும், தன் உடல் மீதும் மரியாதை வைப்பவர்கள் தான் கெட்ட பழக்கங்களான மது , மாது, புகை, போதை எனும் தீய பழக்கங்களை விட்டு தள்ளியிருப்பார்கள். அவர்கள் ஆன்மீகவாதிகளாய் இருந்தால், “இறைவன் வாழும் கோயில் எனது உடல்” என அதற்கு அதிக பட்ச மரியாதையையும் தருவார்கள்.

உடல் ஒரு அதிசயம். நமது உடலிலுள்ள இரத்தக் குழாய்களை அப்படியே நீட்டினால் எவ்வளவு தூரம் வரும் தெரியுமா ? 75,000 மைல்கள். சென்னையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வரை செல்லும் தூரம் எவ்வளவு தெரியுமா ? 8500 மைல்கள் தான். இரண்டு இடங்களுக்கும் இடையே ஒன்பது தடவை பயணம் செய்யுமளவுக்கு தூரம் நமது இரத்தக் குழாய்களின் நீளம் என்பது வியப்பாய் இல்லையா !

இதயத்தோட எடை சுமார் 300 கிராம் தான். அது தினமும் பம்ப் பண்ணும் இரத்தத்தைக் கொண்டு பல டேங்க்கர் லாரிகளை நிரப்பலாம் !

நமது உடலிலுள்ள எலும்புகள் வியப்பின் குறியீடு. எலும்பு அதன் தன்மையின் அடிப்படையிலும் எடையின் அடிப்படையிலும் பார்த்தால், காங்கிரீட்டை விட, இரும்பை விட வலிமையானது. விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் நமது கட்டை விரலைப் போல ஒரு ரோபோ விரலை உருவாக்க முடியவில்லை. அவர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா ? “கட்டை விரலுக்கும் மூளைக்கும் இடையே நடக்கும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றம் தான் அதன் மிக நளினமான, இலகுவான அசைவுக்கு வழிசெய்கிறது. அதை அறிவியல் இன்னும் அறிந்து கொள்ளவில்லை ! “ வியப்பாக இருக்கிறது இல்லையா ?

இப்போது டச் ஸ்கிரீன் பற்றியும், டேல்லெட் பற்றியும் பேசுகிறோம். நமது தோலுக்கு அடியில் இருக்கும் ஒரு சின்னப் புள்ளியில் நூற்றுக் கணக்கான நரம்புகளின் முனைகள் தொடுதலை உணரவும், அந்தத் தகவலை மூளைக்கு அனுப்பவும் செய்கின்றன.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் நமது மொத்த உடலுக்குமான ஜெனடிக் தகவல்கள் உண்டு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் கோடான கோடித் தகவல்கள் உண்டு. அதை விரித்துப் படித்தால் ஒரு போர்வை போல நீளும். ஆனால் அந்த தகவல்கள் எல்லாம் ஒரு புள்ளிக்குள் சைலன்டாக ஒளிந்திருக்கின்றன.

வெறும் மூன்று பவுண்ட் எடையுள்ள மூளை நூறு பில்லியன் நரம்பு செல்களைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து உடலை கவனித்துக் கொண்டே இருக்கிறது. உடம்பின் ஒவ்வோர் செயலையும், கட்டளையையும் அது வகைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. உடலின் தன்மைக்குத் தக்கவாறும், சுற்றியிருக்கும் குளிர், சூடு போன்ற கால்லநிலைக்குத் தக்கதாகவும் அது உடலின் வெப்பத்தையும், உறுப்புகளின் செயலையும் மாற்றியமைக்கிறது. கடந்த பல வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் அது பதிவு செய்து கொண்டே இருக்கிறது !

உடலின் இருக்கும் இத்தனை அற்புதமான விஷயங்களைத் தாண்டி இனிமேல் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு உங்களைக் கவலைக்குள்ளாக்கும் எனில் நீங்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது தான் பொருள்.

நாம் ஒரு வானுயர்ந்த மலையையோ, ஒரு அழகிய கட்டிடத்தையோ, ஆடையையோ, ஒரு படைப்பையோ ரசிக்கவோ பாராட்டவோ தயங்குவதில்லை. ஆனால் நமது உடலை நேசிக்கவும் பாராட்டவும் மட்டும் தயங்குவது ஏன் ? என கேள்வி விடுக்கிறார் டாக்டர் கிளென் ஷிரால்டி.

ஒருவகையில் நமது மீடியாக்கள் உருவாக்கும் பிம்பத்தையே நமது மனம் உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறது. கருப்பு நிறம் மோசம், முகப்பரு மோசம், முடி உதிர்ந்தால் மோசம், கை கால்கள் வழவழவென இல்லாதிருந்தால் மோசம், என நம்மை தேவையற்ற மன அழுத்தத்துக்குள் தள்ளி விடுவதில் முக்கியப் பங்கு ஆற்றுபவை நமது மீடியாக்களே ! அந்த வலைகளை நிராகரியுங்கள். நீங்கள் எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்று எப்படி அவர்கள் நிர்ணயம் செய்ய முடியும் என கேள்வி எழுப்புங்கள். !

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் அடுத்தவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய விஷயங்களல்ல !

உங்களை நீங்கள் நேசியுங்கள். உடல் எப்படி இருந்தாலும், உங்கள் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் அது நிச்சயம் போதுமானது !

மன்னிப்பு மகத்துவமானது.

இருட்டு இருட்டைத் துரத்த முடியாது ! வெளிச்சமே இருட்டை விரட்ட முடியும். அதே போல வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பினால் மட்டுமே அது முடியும் –

மார்டின் லூதர் கிங். ஜூனியர்.

மன்னிப்பு எனும் ஒற்றை வாக்கியத்துக்கு இருக்கும் வலிமை அலாதியானது. தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் மனிதனாகப் பிறந்த அனைவரும் அள்ளி அணைக்க வேண்டிய குணாதிசயம் மன்னிப்பு. இந்த மன்னிப்பு எனும் விஷயம் மட்டும் இருந்து விட்டால் உலகில் நிலவும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை அனலில் இட்ட பஞ்சைப் போல சட்டெனக் காணாமல் போய்விடும் என்பது சர்வ நிச்சயம் ! எனவே எனக்கு தமிழ்லயே புடிக்காத வார்த்தை “மன்னிப்பு” என்று இனிமேல் யாரும் சொல்லாதீர்கள். அது மனுக்குலத்தின் அடித்தளத்தில் விஷம் ஊற்றும் போதனை.

மன்னிப்பு என்பது என்ன ? ஒருவருக்கு எதிராக இன்னொருவர் செய்யும் தவறை அந்த நபர் மன்னித்து அந்த நபரை முழுமையாய் ஏற்றுக் கொள்வது ! இது இரண்டு நபர்களுக்கு இடையேயும் இருக்கலாம், அல்லது தனக்குத் தானே கூட இருக்கலாம். அதாவது தன்னைத் தானே மன்னிப்பது ! தான் ஏதோ தப்பு செய்துவிட்டோம் எனும் தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்தால் நமக்கு நாமே ஒரு மன்னிப்பை வழங்குவது சுய மன்னிப்பு எனலாம்.

மன்னிப்பு என்பது மனதில் இருக்கும் சுமைகளை இறக்கும் முயற்சி. ஒருவகையில் மன்னிக்கும் போது நாம் அடுத்த நபருக்கு மட்டுமல்லாமல் நமக்கு நாமே நல்ல விஷயத்தைச் செய்கிறோம் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அதாவது ஒரு நபரை மன்னிக்கும் போது அவரைப் பற்றிய எரிச்சல், கோபம், பழிவாங்கும் எண்ணம் போன்றவையெல்லாம் சட்டென மறந்து விடுகின்றன. அதுவரை ஒரு பாறையைப் போல் இருந்த நமது மனசு சட்டென ஒரு இறகைப் போல மாறி பறக்கத் துவங்கிவிடுகிறது.

ஆனால் மன்னிப்பு என்பது மனதின் ஆழத்திலிருந்து எழவேண்டும். வெறுமனே வார்த்தைகளில் மன்னித்து விட்டேன் என்று சொல்லி விட்டு, வெறுப்பை மனதில் சுமப்பது நம்மை நாமே ஏமாற்றுவதற்குச் சமம். “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே என் மூஞ்சியிலயே முழிக்காதே” என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது உண்மையில் மன்னிப்பு அல்ல. ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அந்தச் சிக்கலில் இருந்து விலகியிருக்கும் மனநிலை.

உண்மையான மன்னிப்பெனில் எப்படி இருக்க வேண்டும் ? “உன்னை மன்னிச்சுட்டேன். இனிமே அந்த விஷயத்தையே மறந்துட்டேன். நாம எப்பவும் போல நட்பா இருப்போம்” என ஓருவர் சொல்கிறார் எனில் அது ஆத்மார்த்தமான நட்பாய் இருக்கும். ஆனால் பலரும் அதற்கு முன்வருவதில்லை. காரணம், மன்னிப்பு என்பது கோழைகளின் வழக்கம் என நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் மன்னிப்பு என்பதைக் கோழைகளால் தரமுடியாது. அதற்கு மிக மிக வலுவான மனம் இருக்க வேண்டும் ! யாரேனும் மன்னிப்பை தயக்கமில்லாமல் வழங்கிறார்களெனில் அவர்கள் தைரியசாலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மன்னிப்பு வழங்குவது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டுமே தவிர, போனாப் போகுது என்றோ, நான் பெரியவன் தியாக மனப்பான்மை உடையவன் போன்ற கர்வ சிந்தனைகளிலோ வரக் கூடாது., அப்படி வரும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பு அல்ல. உண்மையான மன்னிப்பின் இலக்கணம் அடுத்த நபர் கேட்பதற்கு முன்பாகவே அந்த நபரை உள்ளத்தில் உண்மையாகவே மன்னித்து விடுவது தான்.

மன்னிக்க மறுக்காதது போலவே மன்னிப்புக் கேட்கவும் தயங்காத உறுதியான மனம் இருத்தல் அவசியம். மன்னிப்புக் கேட்பதைப் போல கடினமான விஷயம் இல்லை. காரணம் உங்களுடைய பலவீனத்தையோ, உங்களுடைய குறையையோ , உங்களுடைய தவறையோ நீங்கள் அந்த இடத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள். உங்களுடைய பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதில் உண்டு. ஆனால் எதைக் குறித்தும் கவலையில்லாமல் நீங்கள் தைரியமாக மன்னிப்புக் கேட்கிறீர்களெனில், நீங்கள் எல்லாவற்றையும் விட அதிகமாய் அன்பைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே பொருள் !
மன்னிக்கத் தயங்காத மனிதர்கள் தான் ஆனந்தமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. காரணம் அது மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்கிறது, தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கிறது, உறவுகளைக் கட்டி எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒரு நாள் அவளுக்கு ஒரு போன்கால். உயிரை உலுக்கும் போன்கால். “அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்றுவிட்டான்”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். கொலைகாரன் மீது சூவுக்கு கடுமையான கோபம். மனதை ஒருமுகப்படுத்தி செபத்தில் நிலைத்திருந்தாள்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள். கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான கரடு முரடு உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு சொன்னாள்.

“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது” என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என சந்தேகித்தார்கள். சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் சொல்ல முடியாத நிம்மதி நிரம்பி வழிந்தது.

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது ! மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

வாழ்க்கை கடினமானதா ?

Man-Praying

மிக எளிதான வாழ்க்கை வேண்டுமென செபம் செய்யாதீர்கள். எந்தக் கடினத்தையும் தாங்கும் வலிமை வேண்டும் என்றே செபம் செய்யுங்கள் –

ஜான் எஃப் கென்னடி.

வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. அப்படி இருக்கும் மனிதர்கள் கல்லறைகளில் தான் காணக் கிடைபார்கள். காரணம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் உழைப்பும், அதைக் கடந்து செல்லும் மனநிலையும் தேவைப்படுகிறது ! அது கடினமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நம்மிடம் தான் இருக்கிறது.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என்பவர்கள் எதனுடன் ஒப்பிட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அல்லது யாருடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டமாய் இருக்கிறது என்பதை முடிவு செய்கிறீர்கள் எனும் தெளிவு இருக்க வேண்டும்.

கஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு கஷ்டம். இஷ்டம் என்று நினைப்பவர்களுக்கு இஷ்டம் ! வண்ணத்துப் பூச்சியின் கூடுடைக்கும் போராட்டத்தைப் பார்க்கும் போது, “அடடா.. எவ்ளோ கஷ்டப்படுது” என மனசில் சிந்தனை ஓடும் இல்லையா ? அந்தக் கடினமான வேலை இல்லாவிட்டால் வண்ணத்துப்  பூச்சி ஆரோக்கியமாய் வெளிவர இயலாது என்பது தானே உண்மை !

நமது கஷ்டங்கள் நீண்டகாலம் தொடர்ந்தால், அதன் எல்லையில் மகிழ்ச்சியும் அந்த அளவுக்குப் பெரியதாக இருக்கும் என்பது பெரியவர்களின் மொழி. இறுகி இறுகிக் கிடக்கும் கரி தானே வைரமாய் மாற முடியும் ! எரிவதற்குப் பயன்படுவதா ? இல்லை வைரமாய்த் திரிவதற்குப் பயன்படுவதா என்பதை சோதனைகள் தான் முடிவு செய்கின்றன.

ஆகாய விமானத்தின் உடலைப் பாருங்கள். எவ்வளவு உறுதியாய் இருக்கிறது. அதை அடைய அது பல கஷ்டங்களைத் தாண்டி வர வேண்டியிருக்கிறது. அதிக பட்ச வெப்பத்தில் அதைப் போடுவார்கள். பின் அதிகபட்சக் குளிரில் போடுவார்கள். இப்படிப் பல முறை செய்து அந்த உலோகமானது எந்தக் காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வகையில் மாற்றுவார்கள். அப்படி கடினப் பாதையில் செல்லும் உலோகம் தான் உயர உயரப் பறக்கும். அப்படிப் பட்ட சிக்கலைச் சந்திக்காத உலோகம் அடுப்படியில் பாத்திரமாக உருமாறிவிடும் !

ஒவ்வொரு கடினப் பாதையும் நமக்கு நன்மைகளைத் தருவது போல, நல்ல படிப்பினைகளையும் தருகிறது. “அனுபவம் ரொம்ப இருக்கு” என ஒருவரைப் பார்த்து எப்போது சொல்வோம் ?. அவர் இத்தகைய சிக்கல்களில் நுழைந்து நுழைந்து வெளியேறி வரும்போது தானே ?

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் ரசித்துச் செய்யும் மனிதர்கள் பெரும்பாலான கடின நிமிடங்களை இலகுவாகத் தாண்டி விடுகிறார்கள். “காலைல இருந்து நைட் வரை வேலையைக் கட்டிட்டு அழ வேண்டியிருக்கு” என நினைக்காமல் காலை முதல் மாலையிலான நமது வாழ்க்கை அது, அதை ரசித்துச் செய்வோம் என நினைத்தால் அந்த கடின நிமிடம் உங்களுக்குப் பிடித்தமானதாய் மாறிவிடும்.

வார இறுதிகளில், “ஐயோ நாளைக்கு மறுபடியும் வேலைக்குப் போகணுமா” என நினைக்காமல் அந்த நாளை, அந்த நிமிடத்தை, அந்த ஓய்வை ரசிக்கத் துவங்கினால் வார இறுதிகளும் வரமாய் மாறிப் போகும். ஒரு சமையல் செய்வதானாலும் சரி, அல்லது ஒரு ராக்கெட்டைச் செய்வதானாலும் சரி, நமது பாகத்தை ரசித்துச் செய்வோமென்றால் நம்முடைய பெரும்பாலான பொழுதுகள் இனிமையாகவே கடந்து விடும் என்பதே உண்மை.

இனிமையும் சந்தோசமும் அடுத்த வேலையிலோ, அடுத்த நிமிடத்திலோ தான் கிடைக்கும் என நினைப்பது நமது கண் முன்னால் இருக்கும் இனிய நிமிடங்களை உதாசீனப் படுத்துவதாகும்.

ஒரு சிக்கலைத் தீர்க்க அதன் முழு வடிவத்தையும், எப்படி தோன்றியது எனும் வரலாற்றையும் அறிய வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. உதாரணமாக ஏதோ ஒரு காரணத்துக்காக உங்கள் தம்பி உங்களிடம் கோபமாய் இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே நடந்த நிகழ்ச்சிகளின் போஸ்ட்மார்ட்டம் தேவையே இல்லை. ஓடிப் போய், “தம்பி.. நீ என்னைக்குன்னாலும் என் தம்பி தாண்டா… என் மேல ஏதாச்சும் கோபமிருந்தா மன்னிச்சுக்கடா… ” என அணைத்துக் கொள்ளுங்கள். தம்பியின் கோபத்துக்கான காரணம் தேவையில்லை. அது என்னவாய் இருந்தாலும் உங்கள் அணைப்பில் அணைந்தே போய்விடும்.

வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு என புலம்பும் மனிதர்கள் பெரும்பாலும் முன் வைப்பது பொருளாதாரச் சிக்கல்களை. இரண்டாவது உறவு சார்ந்த சிக்கல்களை. மூன்றாவது உடல் பலவீனம் சார்ந்த சிக்கல்களை.  இவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது நமது தன்னம்பிக்கையையும், வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதையும் பொறுத்தது.

ஒரு சூழல் வரும்போது, அதை சமாளித்து வெற்றிகரமாய்ப் பயணிக்க முடியும் எனும் உள்ள உறுதி முதல் தேவை. அமைதியாக அந்தச் சிக்கலான சூழலை எப்படிக் கடப்பது, அதில் என்னென்ன நல்ல விஷயங்கள் இருக்கின்றன, என்னென்ன சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன போன்ற விஷயங்களையெல்லாம் கவனியுங்கள். பாசிடிவ் மனநிலையோடு அந்த சூழலை அணுகுங்கள்.

கசப்பு கூட அறுசுவையில் ஒன்று தான். சின்னச் சின்ன சவால்களும், சிக்கல்களும் கூட ஆனந்தம் தர முடியும்.

வாழ்க்கை ரொம்பவே கஷ்டமானது, சுமை என்று நினைக்காமல் அதை சிம்பிளாக்க முயலுங்கள். வாழ்க்கை கஷ்டமானதா, சுவாரஸ்யமானதா என்பது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது ! நம்மிக்கையுடன் எதிர்கொள்வோம் !

உங்களால் முடியும் அசாதாரண வெற்றி !

 girl-755857_960_720

அசாதாரண வெற்றிக்கான சூழல்களை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அந்த வெற்றி கிடைக்காது. கிடைக்கும் சூழல்களை சரிவரப் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றி சாத்தியமாகும் –

ஜீன் பால்

உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ரொம்பவே சாதாரண மனிதர்கள் பலர் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

“அவனுக்குப் பேசவே தெரியாதுடா.. அவனைப் பாரு டிவில புரோக்ராம் பண்றானாம்” என்று வியப்போம் ! “ஒழுங்கா தமிழே எழுதத் தெரியாது, சினிமால பாட்டு எழுதுறான் பாரு. நல்ல திறமை இருக்கிற நாம இங்கே கெடக்கிறோம்” என புலம்புவோம். ஒன்றும் இல்லாவிட்டால் ‘அட அங்கே பாருடா.. அந்த நோஞ்சான் பயலுக்கு சூப்பரா ஒரு லவ்டா..” என பெருமூச்சாவது விடுவோம் !

அந்த சலிப்புக்கோ, எரிச்சலுக்கோ, புகைக்கோ காரணம் நம்மைச் சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள். சொல்லப் போனால் நம்மை விடத் திறமைகள் குறைவாகவே இருக்கும் வெகு சாதாரண மனிதர்கள் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பது தான்.

அவர்களுடைய வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அவர்களிடம் சில குணாதிசயங்கள் இருக்கும். ஒன்று மற்றவர்கள் செய்யத் தயங்குகிற, அல்லது செய்ய முடியாது என நினைக்கின்ற சில விஷயங்களைத் துணிந்து செய்திருப்பார்கள். உதாரணமாக ஒரு அழகான பெண்ணிடம் போய் காதலைச் சொல்ல பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். ஆனால் ஒருவன் போய் சட்டென சொல்லுவான். அவன் அவள் பார்வையை இழுக்க என்னென்ன வலை விரிக்க வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான்.

அதன் காரணம் என்ன ? அதில் இருக்கிறது இரண்டாவது பாயின்ட். தோற்றுவிடுவோமோ எனும் பயத்தைக் களைதல். காதலைச் சொல்லி நிராகரிக்கப்படுவோமோ எனும் பயத்தினால் காதலைச் சொல்லாதவர்கள் எக்கச்சக்கம். தோல்வி அடைந்தால் பரவாயில்லை என தைரியமாக ஒரு செயலை முன் வைப்பவர்களே வெற்றிக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள்.

அலுவலை எடுத்துக் கொண்டால் ஒரு சின்ன மாற்றம் வருகிறது என்றாலே நடுங்கி, பயந்து போய் விடுபவர்கள் உண்டு. அந்த மாற்றத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டு தங்களுடைய வேலையைச் சரிவர செய்து பெயரை நிலைநாட்டுபவர்களும் உண்டு. அப்படி தங்கள் பணியைச் செய்பவர்கள் கவனிக்கப்படுவார்கள். வெற்றியடைவார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின் விளக்கு கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தபோது பல்பின் உள்ளே பயன்படுத்த வேண்டிய இழையை உருவாக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்தார். முடியவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்து அந்த இழையை முயன்றார். தோல்வியே மிஞ்சியது. அருகில் இருந்த உதவியாளர் நிக்கோலா டெஸ்லா சொன்னார், “சே… எல்லாமே வேஸ்டாகிப் போச்சு. ஒண்ணுமே உருப்படியா அமையவில்லை”.

எடிசன் அவனை உற்றுப் பார்த்து விட்டுச் சொன்னார், ”பத்தாயிரம் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு தோல்வியடைந்த முயற்சியும், சரியான பாதையில் ஒரு அடி முன்னே வைக்க நமக்கு உதவுகிறது”

இது தான் வெற்றியாளர்களுடைய பார்வை. எந்தத் தோல்வியும் தன்னம்பிக்கையுடைய மனிதனுக்கு எதிரே அணை கட்ட முடியாது. ஆறாம் வகுப்பில் படுதோல்வி அடைந்தவர் தானே உலகப் புகழ்பெற்ற சர் வின்ஸ்டன் சர்ச்சில் ! தோல்வி அவரை தன்னம்பிக்கையின் தேசத்திலிருந்து கடத்திச் சென்று விடவில்லை. அவருடைய தன்னம்பிக்கை அவரை வெற்றிகளின் சாம்ராஜ்யத்தில் உச்சத்தில் வைத்தது !

வெற்றியடைந்தபின் பிரமிப்பூட்டும் வகையில் நம் முன்னால் தெரிபவர்களெல்லாம் வெறும் சாமான்யர்களே ! ஆனால் நம்மிடம் இல்லாத சில குணாதிசயங்கள் அவர்களிடம் இருக்கின்றன என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த எக்ஸ்ட்ரா விஷயங்கள் நம்மிடம் இருந்தால் நாமும் அதே போன்ற சாதனையாளர்களாய் மாற முடியும்.

“இதுக்கு மேல என்னால முடியாதுப்பா…” என பின்வாங்குபவர்கள் சாதனை வெற்றிகளைச் செய்ய முடியாது. பல வேளைகளில் அவர்கள் சாதாரண வெற்றிகளைக் கூட பெற முடியாது !

“வாய்ப்பு கிடையாது” என நூறு முறை விரட்டப்பட்டவர்கள் தான் பிற்காலத்தில் நடிகர்களாக உலகை உலுக்கியிருக்கிறார்கள். “உன் மூஞ்சி சதுரமா இருக்கு… நீயெல்லாம் ஏன்பா நடிக்கணும்ன்னு கிளம்பறே’ என கிண்டலடிக்கப் பட்டவர் தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஜான் ட்ரவால்டோ. பிற்காலத்தில் அவருடைய கால்ஷீட்டுக்காகக் காத்திருந்த கூட்டம் கணக்கில்லாதது ! பின் வாங்காத மனசு அவரிடம் இருந்தது தான் அவரை வெற்றியாளராய் மாற்றியிருக்கிறது.

தொடர்ந்த முயற்சியே வெற்றியைத் தரும். எப்போது முயற்சி செய்வதை நிறுத்தி விடுகிறோமோ அப்போது தோல்வி நம்மை அமுக்கிப் பிடிக்கிறது. நான் அதைப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து முயற்சி செய்பவர்கள் வெற்றியை அடையாமல் போனதேயில்லை” என்கிறார் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஹாரிசன் ஃபோர்ட்.

துவக்க காலத்தில் யாரும் இவரை சிவப்புக் கம்பளம் வைத்து வரவேற்கவில்லை. உதாசீனம், நிராகரிப்பு, அவமானம் இவையெல்லாம் இவருடைய வாசலில் குவிந்து கிடந்தன. இவரிடம் இருந்ததோ முயற்சியும், அதை முன்னெடுத்துச் சென்லும் தன்னம்பிக்கையும் தான். முயன்று கொண்டே இருந்தார். காற்றுக்கு முன்னேறிச் செல்லும் பட்டம் போல ஹாலிவுட் வானில் உயரப் பறக்கிறார்.

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி தான் உண்டு. அதே போல வெற்றியாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் இடையே இருப்பதும் ஒரு குட்டி இடைவெளிதான். அந்த இடைவெளியை நிரப்பினால் உங்களால் சாதிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் முதலில் வருபவருக்கும் கடைசியில் வருகிறவருக்கும் இடையே இருப்பது சில வினாடிகள் தான். ஆனால் முதலில் வருபவரே சாதனையாளராகிறார் இல்லையா ?

உங்கள் மீதான நம்பிக்கை. தொடர்ந்த முயற்சி. தோல்வியடைதல் குறித்த பயமின்மை. புதியவற்றை பாசிடிவ் மனநிலையில் ஏற்றும் கொள்தல் போன்ற சில விஷயங்களை மனதில் கொண்டாலே போதும். சாதாரண மனிதர்கள் சாதனை மாமனிதர்களாய் மாற முடியும் !

இன்றே கடைசி நாள் !

 6592617

இதுவே உங்கள் வாழ்வின் கடைசி நாள் போல வாழுங்கள். கடந்த நாட்கள் கடந்து போய்விட்டன. எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. –

வேய்ன் டையர்

காலை முதல் மாலை வரை அரக்கப் பரக்க ஓடிக் கொண்டே இருக்கிறோம் இல்லையா ? வழக்கமான உதாரணங்களைச் சொல்லவேண்டுமென்றால் பேட்டரி போட்ட கடிகாரம் போல என்று சொல்லலாம். பரபரப்பாய் எழுந்து, குளித்து, சட்டென விழுங்கி, அவசரமாய் பேப்பரைப் புரட்டி, அல்லது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி செய்தியைக் கேட்டு, பாலிஷ் போட மறந்த ஷூவைச் சபித்துக் கொண்டே, கையாட்டும் குழந்தைக்கு ஒன்றரை வினாடி செலவு செய்து டாட்டா காட்டியபடி காரைக் கிளப்பி அலுவலகம் போனால் வேலை வேலை வேலை ! அப்புறம் ‘அடடா இருட்டிடுச்சே’ என்றோ ‘ மிட்நைட் ஆயிடுச்சா’ என்றோ பரபரத்து ஒரு ரிட்டன் டிரைவ் !

கேட்டால், ‘ரொம்ப பிஸி’. ‘இல்லேன்னா முடியாதுங்க’. ‘எல்லாமே ரொம்ப ரொம்ப முக்கியம்’. என்று ஏகப்பட்ட பதில்கள் ரெடிமேடாய் இருக்கும்.

எது முக்கியம் ? எது முக்கியமில்லை ? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு வேலையில் முழுமையாய் ஈடுபடுவதே வாழ்க்கை. சிலருக்கு வாழ்க்கையை அனுபவிப்பதே வேலை. சிலருக்கு பணம் சம்பாதிப்பது ! இன்னும் சிலருக்கு மனங்களைச் சம்பாதிப்பது. சிலருக்கு வெளிநாடுகள் போய் கிளையன்ட் மீட்டிங் கலந்து கொள்வது, வேறு சிலருக்கு சேரிகளுக்குப் போய் ஏழைக் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது. சிலருக்கு நண்பர்களோடு அரட்டை அடிப்பது. சிலருக்கு நெஞ்சுருக பிரார்த்திப்பது. ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவன். எனவே தான் அவனுடைய செயல்களும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன.

ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்று, “இன்னிக்கு தான்பா உன்னோட கடைசி நாள். என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோ, நாளைக்கு நீ காலி” என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள். நீங்கள் நாத்திகர் என்றால் கடவுள் என்பதை டாக்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள் !

உங்களுக்கு எழும் அச்சமும், மிரட்சியும், இன்ன பிற உணர்ச்சிகளைத் தவிர்த்து விட்டு பாருங்கள். உங்களுடைய அன்றைய தினமும் இதே பரபரப்பாய் தான் இயங்குமா ? காலையில் எழுந்து மாலை வரை ஓடிக் கொண்டே இருப்பீர்களா ? அல்லது கடைசியாய்ப் பார்க்கும் அலாதிப் பிரியத்துடன் சூரிய ஒளியைத் தொட்டுப் பார்ப்பீர்களா ? மனைவியைப் பிரியமாய் பார்த்துக் கொண்டே காபியை சுவைப்பீர்களா ? சாப்பிடும் போதும் மழலையை அணைத்துக் கொண்டே ஊட்டி விடுவீர்களா ? அலுவலகம் கிளம்பும் போது குழந்தையைக் கட்டியணைத்து, மனைவிக்கு டாட்டா காட்டி கிளம்புவீர்களா ? வேலையை விட முக்கியமான விஷயம் உறவு என்பதை உணர்ந்து நேரத்தோடு வீடு திரும்புவீர்களா ?

அதெப்படி நேற்றுவரை முதல் இடம் பிடித்தவையெல்லாம் இன்று சட்டென கடைசி இடத்துக்கு ஓடிவிட்டன ? நேற்று வரை உதாசீனப்படுத்தப்பட்டவையெல்லாம் இன்று முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டன ? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் !

உண்மையில் இந்தக் கடைசி நாளில் நீங்கள் எவற்றையெல்லாம் முக்கியம் என கருதுகிறீர்களோ அவையே மிக முக்கியமானவை. எனவே தான் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள், “இன்றே கடைசி தினம்” என்பது போல வாழுங்கள் என்று !

இது உங்களுடைய கடைசி தினமாக இருந்தால் நீங்கள் யார் மீதும் கோபமோ, விரோதமோ எதிர்ப்போ கொண்டிருக்க வாய்ப்பில்லை. வழியே போகும் பூனைக் குட்டியைக் கூட நேசத்தோடு தான் பார்ப்பீர்கள். யாரையாவது ஏமாற்றி, பணம் பிடுங்கி, வாழ்க்கையைக் கெடுக்கும் சிந்தனைகள் ஏதும் வராது.

சாகக் கிடக்கும் மனிதர்கள் சொல்வதைக் கவனித்திருக்கிறீர்களா ? “சாகப் போற நேரத்துல எதுக்கு அவன் கூட சண்டை போட்டுகிட்டு… அதை விட்டுடு” என்பார்கள். சமாதானத்தோடு சாவதா, சமாதானத்தோடு வாழ்வதா ? எது நல்லது ? எது தேவையானது ? வாழ்க்கையை விட மரணம் முக்கியமானதா ? சாகும் போது அன்பு செலுத்த மனம் சொல்கிறதெனில், ஏன் வாழும் போது அதைச் சொல்ல மனம் தயங்குகிறது. மன்னிப்பும், அரவணைப்பும் சாவுக்கு முன் எழுதப்பட வேண்டிய முடிவுரைகளா ? இல்லை வாழ்க்கையில் எழுதவேண்டிய முன்னுரைகளா என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இல்லையா ?

வாழ்க்கை வாழ்வதற்கானது. அதில் நின்று நிதானித்து நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன ? நாம் சரியான பாதையில் செல்கிறோமா ? என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்ள வேண்டியது அவசியம் !

நிதானிப்போம், வாழ்வோம்