உலகம் : கொடுமையிலும், கொடுமை…

3தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.

அந்த மலைப்பாம்பு காடு மலை தாண்டியெல்லாம் வரவில்லை சார்லஸ் ஜேசன் டார்னெல் என்பவர் வளர்த்தது. அவர் குழந்தையின் தாயின் பாய்பிரண்டாம்.

இரவில் எதேச்சையாக எழுந்தவர் கூண்டில் பாம்பைக் காணாமல் அங்கும் இங்கும் தேடினால், பாம்பு படுக்கையில் படுத்திருந்த குழந்தையை முறுக்கிப் பிடித்து கடித்துக் கொண்டிருந்ததாம். அலறியடித்துப் போய் பாம்பை அடித்து இழுத்து மாற்றியும், குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது மிகப்பெரிய சோகம்.

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த பாம்பு அனுமதி வாங்காமல் 2வளர்க்கப்பட்டதாம். ஆதாம் காலத்திலிருந்தே பாம்புக்கும், மனுஷனுக்கும் ஒத்து வருவதில்லை. அப்புறமும் எதுக்கு இந்த விபரீத ஆசையோ ?

மலைப்பாம்பை சின்னதாக இருக்கும் போது ஆசைப்பட்டு வாங்கி விடுகிறார்கள். அது வளர்ந்தபின் புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது, வெளியே விடவும் முடியாமல், தொடர்ந்து வளர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறார்கள். இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்வது இது பன்னிரண்டாவது முறையாம்.

காட்டில் இருக்க வேண்டியவை காட்டிலும், நாட்டில் இருக்க வேண்டியவை நாட்டிலும் இருப்பதே இயற்கையோடு இணைந்த வாழ்வு. அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு இரண்டு வயது குழந்தையைப் பலிகொடுக்க வேண்டியிருந்ததே உலக மகா துயரம்.

பிடித்திருந்தால் தமிழிஷ் வாக்களிக்கலாம்..

இந்த எஸ்.எம்.எஸ்-ஐப் படித்தால் மரணம் நிச்சயம் !!! கதையல்ல நிஜம்!!!

sms

எஸ்.எம்.எஸ் ஐ வாசித்தால் முதலில் தலை வலி வருகிறது. பின் அந்த வலி மிகக் கடுமையான வலியாக மாறி மூளையில் இரத்தக் கசிவை உருவாக்கி விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த இரத்தக் கசிவு உயிரையே பறித்துக் கொள்கிறது.

இது மர்மக் கதையோ, அறிவியல் புனைக் கதையோ இல்லை உண்மை சம்பவம் என அடித்துச் சொல்கின்றனர் சிலர்.

இந்த பரபரப்பான செய்திகள் உலவிக் கொண்டிருப்பது எகிப்திலும், சவுதி அரேபியாவிலும்.

இந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் இப்போதெல்லாம் எந்த எஸ்.எம்.எஸ் வந்தாலும் படிக்காமலேயே அழித்து விடுகின்றனராம். எஸ்.எம்.எஸ் வருமோ எனும் பயத்திலேயே கழிகிறதாம் பலருடைய வாழ்க்கை.

எகிப்திய அரசும், நலவாழ்வுத் துறை அமைச்சகமும் இப்படிப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் என மக்களை அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் மறைமுகமாக எகிப்திய காவல்துறை இந்தக் கதையின் பின்னணியை தீவிரமாய் ஆராய்ந்து வருகிறதாம்.

முன்பெல்லாம் பதினைந்து காசு அஞ்சலட்டையில் நமக்கு கடிதங்கள் வரும். இந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்து பதினைந்து பேருக்கு அனுப்பாவிடில் உன் தலை சுக்கு நூறாகவோ நூற்று ஐம்பதாகவோ உடைந்து விடும் என.

பள்ளிக்கூட நாட்களில் இப்படிப் பட்ட கடிதங்கள் வந்ததனால் மிரண்டு போய் ஒளித்து ஒளித்து கடிதம் எழுதிய நண்பர்கள் பலர் எனக்கும் இருந்தார்கள்.

பதின் வயதுகளில் எனக்கு அப்படி வந்த முதல் கடிதத்தை கிழித்துப் போடும் போது எனக்குள்ளும் சிறு பயம் இருக்கத் தான் செய்தது ! பின் அது வேடிக்கையாய் மாறி, யாருக்கு அப்படிப்பட்ட கடிதம் வந்தாலும் என்னிடம் கொண்டு வந்து கிழிக்கச் சொல்வார்கள். பள்ளிக்கூடத்தில் என்ன கிழிச்சேன் என்பதற்கு ஒரு பதில் இதுவாகவும் இருக்கலாம் என்பது எனது பள்ளிக்கூட சுவாரஸ்ய நினைவுகள்.

அஞ்சலட்டை என்பது, மின்னஞ்சலாகி, இப்போது எஸ்.எம்,எஸ் ஆகி இருக்கிறது. ஆவிகளைக் குறித்தும், வேற்றுக் கிரக வாசிகளைக் குறித்தும் கதை எழுதப் பிரியப்படுபவர்களுக்கு நல்ல தீனி… வெறென்ன சொல்ல ?

ஆதலினால் தூங்குங்கள்…

sleep2 

சிலர் படுத்த உடனே சட்டென தூங்கி விடுவார்கள். சிலருக்கு தூக்கம் என்பது காவேரி ஆறு போல, எப்படிக் கூப்பிட்டாலும் வந்து சேராது.

இப்படி தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களை பல்வேறு நோய்கள் வந்து வாட்டி வதைக்கும் என அதிர்ச்சியூட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுவும் சின்ன சின்ன நோய்கள் அல்ல ! பார்கின்ஸன், அல்சீமர் என மருத்துவம் திகிலுடன் அணுகும் பெரிய பெரிய நோய்கள்.

இரவில் அமைதியான தூக்கம் இல்லாமல் படுக்கையை உதைப்பது, அழுவது, இடிப்பது, உடலை முறுக்கிப் பிடிப்பது என பல்வேறு வெளிப்பாடுகளால் இந்த சரியான தூக்கமின்மை அறியப்படுகிறது.

இத்தகைய நிலையில் இருப்பவர்கள் போகப் போக நரம்பு வலுவிழக்கும் பல்வேறு நோய்களுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அதுவே அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய சோகமாய் மாறி விடுகிறது.

அதுவும் ஐந்து வருடங்கள் இத்தகைய சிக்கல் இருந்தால் நோய் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடு எனவும், அதுவே பன்னிரண்டு ஆண்டுகள் எனில் 52 விழுக்காடு எனவும் இந்த ஆராய்ச்சி அச்சுறுத்துகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக 93 பேரை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு தான் இந்த முடிவைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்ட் போஸ்ட்மா இதைக் குறித்து விளக்குகையில், தூக்கம் மனிதனுடைய வாழ்வின் மிக முக்கியமான செயல் எனவும், இயல்பான நிம்மதியான தூக்கம் இல்லாதவர்கள் மன அளவிலும், உடல் அளவிலும் மாபெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் கூறுகிறார்.

நிம்மதியாய் தூங்கினாலே போதும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதே ஒரு ஆனந்தமான தூக்கத்துக்கான அழைப்பிதழ் தானே !

மறைந்தவர்கள் இனிமேல் கூடவே இருப்பார்கள் !

இறந்தவர்களின் நினைவாக என்ன செய்வார்கள் ? பழங்காலமெனில் நடுகற்கள், தற்போது நினைவகங்கள். எதிர்காலத்தில் ?

இந்த கேள்விக்கு விடையாய் வந்திருக்கிறது சுவிட்சர்லாந்திலுள்ள அல்கோர்டான்ஸா எனும் நிறுவனம். இவர்கள் இறந்தவர்களின் அருகாமை எப்போதும் பிரியமானவர்களுடன் இருக்கக் கூடிய ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

அதாவது இறந்தவர்களின் எலும்புகளை எரித்து, அதிலிருந்து கிடைக்கும் சாம்பலில் இருந்து வைரம் தயாரிக்கின்றனர் !  

இந்த வைரங்களை இறந்தவர்களின் நினைவாக வைத்திருந்தால் மறைந்து போனவர்களின் நினைவும், அருகாமையும் எப்போதும் கூடவே இருக்கும் என்பதால் இப்படிப்பட்ட வைரங்களைத் தயாரிக்க மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.

பலர், இது இறந்தவர்களை அவமதிக்கும் செயல் என எதிர்க்கிறார்கள். கிறிஸ்தவ அமைப்புகள் உடலை எரியூட்டுவதை எதிர்ப்பதால் ஆன்மீக அமைப்புகளிடமிருந்தும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பொதுமக்களிடையே இத்தகைய வைரம் தயாரித்தலுக்கு பரவலான கிடைத்துள்ளது.

இது ஒரு நல்ல செயல். சிலர் கல்லறைத் தோட்டங்களில் சென்று கசிந்துருகி கண்ணீர் விட்டு வருவார்கள். நாங்கள் கைகளிலேயே இறந்தவர்களை எப்போதும் இருக்க வைக்கிறோம் என்கிறார் இந்த நிறுவன இயக்குனர் வெய்ட் பிரீமர்.

சரி… இப்படி ஒரு வைரம் தயாரிக்க ஆகும் செலவு எவ்வளவு என தேடினால், சுமார் மூன்றே கால் இலட்சம் ரூபாய்கள் என்கிறது தகவல்.

உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருக்கிறதா !! : உஷார் !!!

ஒரு பத்து பதினைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து எங்கேயாவது ஒரு இடத்தில் மாதம் ஓரிரண்டு முறையாவது கூடி பழைய கதைகளைப் பேசி வெட்டியாய் அரட்டையடித்துச் சிரிப்பது கடந்த பல ஆண்டு காலப் பழக்கம்.

உலக அரசியல் பற்றியும், நோபல் பரிசு பற்றியும், சர்வதேச இலக்கியங்களைப் பற்றியும் எங்கள் உரையாடல் இருக்கும் என்றால் அது கடைந்தெடுத்த பொய். வெறுமனே யாரையாவது கிண்டலடித்துக் கொண்டோ, அல்லது அலுவலகத்தில் ஏதேனும் ஒரு உயரதிகாரியை வம்பிழுத்துக் கொண்டோ, எதுவும் இல்லையேல் கல்லூரி காலம் தொட்டே தொடரும் அடுத்தவனின் காதல் கதைகளை அசைபோட்டுக் கொண்டோ முழுக்க முழுக்க வெட்டியாய் முடியும் எங்கள் சந்திப்பு. ( குடித்த தண்ணிக்கும், அடித்த தம்முக்கும், கடித்த சிக்கனுக்கும் யாரு பணம் கொடுப்பது எனும் சண்டை மட்டும் வந்ததேயில்லை என்பது ஆச்சரியம் )

கடந்த முறை இப்படி ஒன்று கூடியபோது என் நண்பன் ஒருவனின் கையில் பெருவிரலோடு சேர்த்து ஒரு சின்ன கட்டு. ‘என்னடா மச்சி என்னாச்சு ? பொதுவா பெருவிரலுக்கு கேடு வராதே… நீ என்ன பண்ணினே’ என ஆரம்பித்தார்கள். அவன் சொன்ன செய்தி உலுக்கிப் போட்டது அனைவரையுமே.

ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரு கம்பெனியில் இருப்பது சாவான பாவம் என்பதால், இவன் இப்போது தான் கம்பெனி தாவி, இன்னொரு கம்பெனியில் குடியேறியிருந்தான். அலுவலகம் செல்லும் வழியில் பைக் வழுக்கி விழ கையில் அடி. கை வலிக்கிறதே என அருகில் இருந்த ஒரு மிகப் பிரபலமான மருத்துவ மனையின் கிளை ஒன்றுக்குச் சென்றிருக்கிறான். 

வரவேற்பறையில் இருந்த பெண் முதலில் பார்த்தது இவனுடைய கழுத்தில் கிடந்த ‘அடையாள அட்டையை’. பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்குப் புரிந்து விட்டது.. வடிவேலு பாணியில், “ஒருத்தன் மாட்டியிருக்காண்டா” என்று உள்ளுக்குள் நினைத்திருப்பாள் போல.

கனிவான குரலில் அவனை அருகில் அமரச் செய்து ( ஆட்டுக்கு மஞ்சள் பூசுவது போல ) கவனித்திருக்கிறார்கள். சற்று நேரம் அமர்ந்திருந்த அவனைப் பரிசோதித்திருக்கிறார் ஒரு டாக்டர். அவர் பார்த்து விட்டு, பெருவிரலில் எலும்பு உடைந்திருக்கிறது. ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்து ஒரு சிறு மெட்டல் ஸ்குரூ மாட்டவேண்டும். அதற்கு முன் எக்ஸ்ரே, ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ், பேக்ஸ் எல்லாம் எடுக்க வேண்டுமென பட்டியலிட்டிருக்கிறார்.

இவன் சற்று உஷாராகி, ‘ஐயோ அதெல்லாம் வேண்டாம்… அதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே’ என்றிருக்கிறான்.

அவரோ, பிரச்சனையில்லை. உங்கள் கம்பெனி மெடிகல் இன்சூரன்ஸில் எல்லாம் கவர் ஆகிவிடும் என திருவாய் மலர்ந்திருக்கிறார்.

ஆஹா… இவர்களுடைய திட்டம் இது தானா ? என உள்ளுக்குள் நினைத்த நண்பன்.
‘டாக்டர். நான் நேற்று தான் இந்த கம்பெனில சேர்ந்தேன். எனக்கு இன்னும் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. இப்போதைக்கு ஏதேனும் முதலுதவி செய்யுங்கள். இன்சூரன்ஸ் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறான்.

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போல காதைப் பொத்திய அவர், ஒரு அற்பப் பதரைப் பார்ப்பது போல இவனை ஏற இறங்கப் பார்த்திருக்கிறார். பின் நர்சைக் கூப்பிட்டு இவனுக்கு பர்ஸ்ட் எய்ட் குடும்மா என சலிப்புடன் சொல்லியிருக்கிறார்.

நர்சும் அவனைக் கூப்பிட்டு அருகிலுள்ள அறைக்குச் சென்று, விரலைப் பிடித்து ஒரு கட்டு போட்டு விட இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகிவிட்டது !

இவன் சிரித்துக் கொண்டே கதையைச் சொல்ல, சிரித்துக் கொண்டிருந்த தூக்கி வாரிப் போட்டது.

ஒருவேளை அவன் இன்சூரன்ஸ் இருக்கிறது என்று சொல்லியிருந்தால் நல்லா இருக்கும் ஒரு எலும்பை உடைத்து ஒட்டுப் போட்டிருப்பார்களோ ? தேவையற்ற அறுவை சிகிச்சை நடந்திருக்குமோ ? பல பத்தாயிரங்கள் கறக்கப்பட்டிருக்குமோ ? என்றெல்லாம் கலவரமாய் பேசிக்கொண்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து, நிறைய பேர் நிறைய கதைகளைப் பரிமாறினார்கள். இன்சூரன்ஸ் கம்பெனிக்குப் பேசி எவ்வளவு கவரேஜ் இருக்குமோ அதுக்குத் தக்கபடி சிகிச்சைகளும், பில்லும் மருத்துவமனைகளில் தரப்படும் என்பதே பலருடைய அனுபவக் கதையாக இருந்தது.

எங்கள் குழுவில் இருந்த project director சொன்னார். மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவ மனைக்குச் செல்லும்போது இல்லை என்று சொல்வதே நல்லது. எவ்வளவு செலவாகிறதோ அதை நீங்கள் பிறகு மெடிக்கல் இன்சூரன்ஸில் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் தேவையற்ற பல விஷயங்கள் நடக்காது. இல்லையேல் நீங்கள் பொன் முட்டையிடும் வாத்து என கண்டுகொண்டு உங்களிடமிருந்து இல்லாத முட்டையை எல்லாம் எடுப்பார்கள். !

எங்கள் எல்லோர் மனதிலும் ஓடிய கேள்வி இது தான்.

மெடிக்கல் இன்சூரன்ஸ் நல்லதா ? கெட்டதா ?

பின் குறிப்பு : இது சற்றும் கலப்படமில்லாத உண்மை நிகழ்வு. நண்பன் சத்யம் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். 

படம் :

மருத்துவக் காப்பீடு எனும் புலியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது நம்மைப் பாதுகாக்குமா, பாழாக்குமா என கிலியுடன் திரிவதைச் சித்தரிக்கிறது இந்தப் படம் என யாரேனும் விளக்கம் சொல்லக் கூடும். எனவே நான் அமைதி காக்கிறேன் J

சீன நதியில் என் ஓடம்

அத்தி பூத்தார் போல கிடைத்த ஓய்வு வேளையில் வலைத்தளத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். சரி நம்ம தளத்தையெல்லாம் யாரெல்லாம் வந்து பாக்கறாங்க, எங்கெங்கே இணைப்பு கொடுத்திருக்கிறாங்க என பார்த்த போது நிறைய வியப்பு காத்திருந்தது.

முதல் வியப்பு  சீனத் தளத்தில்  , ஓவியம் போன்ற சீன எழுத்துக்களின் இடையே “கனியிலே கலை வண்ணம் கண்டார் “ எனும் நமது ஒரு பதிவின் சுட்டியும், பதிவின் சாராம்சமும். 

கவிப்பேரரசு பாணியில சொல்லணும்ன்னா சீன நதியிலும் என் ஓடம்

அதற்கும் நிறைய பேர் பின்னூட்டமிட்டிருந்தார்கள். என்னன்னு தான் புரியல. விவேக் கிட்டே கேட்டா, “ இங்கேயுமாடா ஜிலேபியைப் பிச்சுப் போட்டிருக்காங்க “ என்று கேட்டாலும் கேட்பார்.

சில ஸ்பானிஷ் தளங்களிலிருந்தெல்லாம் அலசல் வலைத்தளத்தின் சில பதிவுகளைப் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் படம் சார்ந்தவை. (அதை சொல்லணுமா என்ன ? )

Long Live China !

படத்துக்கான விளக்கம் : சீன தளத்தில் நம்ம படைப்பை பிரசுரித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீன ஒலிம்பிக் படம் ஒன்று J

வியப்பூட்டும் முதல் கணினி

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில்  அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.

அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.

1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி இந்த முதல் கணினி தன்னை நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.

பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இருவருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் நிஜம்.

பெண்கள் “பை” மாட்டும் புதிய இடம் !

பெண்கள் எது செய்தாலும் அழகு தான் என வாதிடும் இளசுகளுக்கு இந்த செய்தி உரித்தாகுக.

தோளில் மாட்டிய பையைப் பார்த்திருக்கிறோம், கையில் தூக்கிச் செல்லும் பையைப் பார்த்திருக்கிறோம், இடுப்பில் தொங்க விடப்பட்டிருக்கும் பாட்டியின் சுருக்குப் பையையும் பார்த்திருக்கிறோம்.

 

இதோ.. இது புத்தம் புதுசுங்க !!!! காலில் பை !!!

அந்தப் பையில் அப்படி என்ன தான் இருக்கும் ? என்பது அவர்களுக்கும், மாட்டி விட்ட மவராசனுக்குமே வெளிச்சம்.

சீனாவின் ஜூராசிக் பார்க்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஜூராசிக் பார்க் எனும் திரைப்படத்தை இயக்கியபின் டைனோசர் குறித்த அறிதல் உலகின் கடை கோடி வரைக்கும் சட்டென பரவியது.

எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், சிறுவர்கள், வணிக வியாபார நிறுவனங்கள் என பல்வேறு நிலையினரின் ஆர்வத்தை அந்தத் திரைப்படம் தூண்டி விட்டது என்றால் மிகையல்ல. தற்போது சீனாவின் மிகப்பெரிய டைனோசர் பார்க் பார்வையாளர்களுக்காய் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் யுனான் பகுதியில் துவங்கப்பட்டுள்ள டைனோசர் பள்ளத்தாக்கு கிராபிக்ஸ் கலக்கல்களுக்கான தளம் அல்ல. உண்மையிலேயே டைனோசர்களின் உறை நிலை படிமங்கள் புதைந்து கிடக்கும் கல்லறைத் தோட்டம் அது.

இந்தப் பூங்காவில் 60 உண்மையான டைனோசர் எலும்புக் கூடுகள் உள்ளன என்பது வியப்பூட்டும் செய்தியாகும். இதில் நூறு மில்லியன் வருடங்களுக்கு முந்தைய எலும்புக் கூடும் உண்டு என சொல்லப்படுகிறது.

பலகோடி ரூபாய் செலவில், நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் உள்ளே ஆங்காங்கே சிறுவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக பல டைனோசர் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை துவங்கப்பட்ட இந்த பூங்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

எந்தக் குழந்தை வேண்டும் ? தாய்மார்களே முடிவு செய்யலாம் !!!

எந்தக் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை நிர்ணயம் செய்வதில் தாய்மார்களின் உணவுப் பழக்கமும் இடம்பெற்றிருக்கிறது என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

அதிக கலோரி கொண்ட உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும், குறைந்த கலோரி கொண்ட உணவுப் பொருட்களை உண்ணும் பெண்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக காலை உணவை உண்ணாமல் விட்டு விடும் தாய்மார்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.

ஆக்ஸ்போஃட் மற்றும் எக்சீடர் பல்கலைக்கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இத்தகைய சுவாரஸ்யங்கள் தெரிய வந்துள்ளன.

குழந்தையின் பாலியலை நிர்ணயிக்கும் நிரூபிக்கப்பட்ட காரணியாக விந்தணுக்களே இருக்கின்றன. எனினும் இரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவுக்கும் இந்த பாலியல் நிர்ணயத்துக்கும் கூட தெளிவிக்கப்படாத நெருங்கிய பந்தம் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

இதனால் தான் குறைந்த கலோரி உணவை வழக்கமாகக் கொண்டிருக்கும் மேலை நாடுகளில் ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாய் இருக்கிறது என்று நம்புகிறார் எக்சீடர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஃபியோனா மாத்யூஸ்.

தாயாகப் போகும் பெண்கள் இதை சோதித்துப் பார்க்கலாம் மருத்துவரின் உணவுப் பட்டியலை மீறாமல் 🙂