மனைவியிடம் கணவன் என்னதான் எதிர்பார்க்கிறான் ?

kvr1


ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள். அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்” குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

 

ஏமாற்றும் காதலனா ?

kvr3

“அவன் இப்படிச் செய்வான்னு கொஞ்சம் கூட நினைச்சே பாக்கலடி” ர‌ம்யாவின் விசும்பல் பிரியாவையும் கலங்க வைத்தது.

கடந்த ஒரு வாரமா இந்தப் புலம்பல் தான். ர‌ம்யாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் பிரியா ரொம்பவே குழம்பிப் போனாள். இருக்காதா பின்னே ? அவன் செய்த காரியம் அப்படி !

அந்த அவன் மிஸ்டர். விஜ‌ய் ! விஜ‌யும், ர‌ம்யாவும் உயிருக்கு உயிராய் பழகினார்கள். அதிலும் ர‌ம்யாவுக்கு விஜ‌ய் தான் எல்லாமே. விஜ‌ய் இல்லாத ஒரு வாழ்க்கையையெல்லாம் அவள் நெனச்சுக் கூட பாத்ததில்லை. நின்னா, பேசினா, சாப்பிட்டா என எப்பவுமே புராணம் தான். அப்படி இறுக்கமாய் இருந்த ர‌ம்யா-விஜ‌ய் காதலில் கொஞ்ச நாளாகவே சின்னச் சின்ன விரிசல்கள். காரணம் விஜ‌யின் வாழ்க்கையில் புதிதாய் நுழைந்திருந்த பெண். சுடர் !

இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வனப்புடன் வந்த சுடருக்கு நெடுநெடுவென வளர்ந்திருந்த விஜ‌யின் மீது ஒரு சபலம். உரசல்களில் பற்றிக் கொண்டான் விஜ‌ய். விஜ‌ய்க்கு ர‌ம்யாவின் அன்பையும் மீறி சுடரின் மேனியின் மீது மோகம் முளை விட்டது. அடிக்கடி இருவரும் தனியே சந்தித்துக் கொள்வதெல்லாம் சகஜமாய் இருந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கடுகளவு கூட ர‌ம்யா சந்தேகப் பட்டதே இல்லை. கடந்த வாரம் விஜ‌யின் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதம் தான் அவளைப் புரட்டிப் போட்டது. நான்கைந்து டன் மலையை தலையில் போட்டதுபோல இருந்தது அந்த மெல்லிய காகிதம்.

சுடர் தான் காதலை காகிதத்தில் பொழிந்திருந்தாள். “ஓனி மோனிக் கண்ணா” என்றெல்லாம் அவள் எழுதியிருந்த கடிதம் ஏதோ சுடரும் விஜ‌யும் நான்கு ஜென்மமாகக் காதலித்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. போதாக்குறைக்கு சமீபகாலமாக நடந்த அவர்களுடைய காதல் சில்மிஷங்களையெல்லாம் வேறு கடிதத்தில் கிறுக்கியிருக்க ர‌ம்யாவுக்கு வாழ்க்கையே இருட்டியது.

“விட்டுருடி.. கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்படு. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி அடுத்தவ வாலைப் புடிச்சு சுத்தியிருந்தான்னா என்ன பண்றது?” பிரியாவின் நிஜமான அக்கறையைக் கேட்கும் நிலையில் ர‌ம்யா இல்லை.

“விஜ‌ய் கூட ஏமாற்றுவானா ? பச்சைப் புள்ளை மாதிரி இருப்பானே ! அப்போ இவ்ளோ நாள் பொழிஞ்ச அன்பெல்லாம் சும்மாவா ? என்னை விட அவ இப்போ அவனுக்கு பெட்டரா தெரியுதா ? “   ர‌ம்யாவின் மனதில் கேள்விகளுக்குப் பதிலாய் கேள்விகளே முளைத்தன.

பிரியாவும் ர‌ம்யாவும் நீண்டகால தோழிகள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு தோழிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய தோழிகள். பிரியா கொஞ்சம் ஸ்மார்ட் பேர்வழி. அவளே இந்த இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ரொம்பவே திணறிவிட்டாள்.

வாரம் ஒன்று ஓடியது.

ர‌ம்யாவிடம் கடந்த வாரத்தில் இருந்த படபடப்பும், வெறுப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது. எதிரே நீளமாய், நீலமாய் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பேச ஆரம்பித்தாள் பிரியா.

“ர‌ம்யா…. விஜ‌ய் பத்தி நீ என்ன நினைக்கிறே ?”

“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ? லாஸ்ட் ஒன் வீக் நான் அவன் கூட பேசலை. அவன் கூட பேசாம ஒரு வாரம் இருக்கிறது இதான் பஸ்ட் டைம். எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

“வெரி குட்… இத பாரு… உன்னோட வெல் விஷரா சொல்றேன். இனிமே இந்த விஜ‌ய் உனக்கு வேண்டாம்..”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… பட்…”

“என்ன இழுக்கறே…”

“இல்லே… பழைய விஷயங்களையெல்லாம் நினைக்கும்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஸீ… கஷ்டப்படவேண்டியது அவன். நீயில்லை. நீ எந்தத் தப்பும் பண்ணல. அதனால தான் சொல்றேன். இனி அவனோட உன் வாழ்க்கை சந்தோசமா இருக்காது” பிரியா சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னோட நம்பிக்கையை அவன் எப்போ உடைச்சானோ அந்த வினாடியே இந்த பந்தம் முடிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிபட்டுட்டான். அதனால தான் உன் கிட்டே ஒரு விளக்கம் சொல்லக் கூட ஆளைக் காணோம். இப்போதைக்கு சுடரோட பிடியில அவன் கிடக்கட்டும். பட், என்னிக்காவது அவன் ரியலைஸ் பண்ணுவான்.

பஸ்ட் ஆஃப் ஆல், நீ இந்த முடிவை மிக மிகத் தெளிவா எடுத்தே ஆகணும். நோ மோர் விஜ‌ய் இன் யுவர் லைஃப். இது தான் ரொம்ப முக்கியம். இந்த முடிவைப் பொறுத்து தான் உன்னோட அடுத்தடுத்த முன்னேற்றமே இருக்கும். சோ, மறுபடியும் சொல்றேன். அவன் வேண்டாம்ங்கற முடிவை கல்வெட்டு மாதிரி மனசுல எழுதிக்கோ.

இந்த விஷயம் இதோட முடிஞ்சு போகாது. என்னிக்கு அவனுக்கு சுடர் சுடுதோ அல்லது போரடிக்குதோ உடனே உன்னைத் தேடுவான். உன்னோட அருமை அவனுக்கு அப்போ தான் தெரியும். இல்லேன்னா, உன்னோட தேவை அவனுக்கு அப்போ வரும். மே பி, அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான். ரொம்ப செண்டிமெண்டா பேசி குழப்பப் பாப்பான். இல்லேன்னா பழைய எவிடன்ஸ் எதையாச்சும் வெச்சு மிரட்டப் பாப்பான். அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நீ வேற யாரையாச்சும் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அவன் சைக்கோத் தனமா கூட செயல்படக் சேன்ஸ் இருக்கு. நான் உன்னை பயப்படுத்தறதுக்காக சொல்லல, தட்ஸ் லைஃப் !

பிரியா சொல்லச் சொல்ல ர‌ம்யாவுக்கு பயமும், குழப்பமும் ஒருசேர வந்து தொற்றிக் கொண்டது. “கை ரேகை பாக்கறீங்களாம்மா” என்று நெருங்கிய பாட்டியை நிராகரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் பிரியா. ர‌ம்யா மணலில் கிறுக்கத் தொடங்கினாள்.

ஒருவேளை அவன் போன் பண்ணினா நல்லது. இல்லேன்னா நீயே ஒரு போன் பண்ணி, “சாரி.. இனிமே நமக்குள்ள எந்த விதமான உறவும் கிடையாது” ன்னு தெளிவா சொல்லிடு. உன்னோட குரல்ல ஏமாற்றம், அழுகைம், ஏக்கம், கோபம் ன்னு எதுவும் காட்டாதே. ரொம்ப நார்மலா பேசு. நீ என்ன மனநிலைல பேசறேன்னு அவனுக்கு தெரியக் கூடாது. பட், நீ இனிமே அவனை லவ் பண்ணப் போறதில்லேங்கற மெசேஜ் அவனுக்குப் போய் சேரணும் அது முக்கியம். காரணம் கேட்டான்னா, சுடரோட “கொஞ்சல் லெட்டர்” மேட்டரை கிளியரா சொல்லிடு.

நிறைய பேர் பண்ற ஒரு பெரிய தப்பு என்னண்ணா, “சரி, லவ் தான் பண்ணலே.. ஃபைன்… பிரண்ட்ஸா இருப்போமே ?” ன்னு ஒரு படி இறங்கிடறது தான். இந்த விஷயத்துல ஆம்பளைங்க ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. தேவையில்லாம உன்னோட டென்ஷனும், மன அழுத்தமும் அதிகமாகும். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு தடவை சின்சியரா லவ் பண்ணின ஒருத்தனை ஒரு நல்ல நண்பனா உன்னால பாக்கவே முடியாது. உன்னால என்ன, யாராலயுமே பாக்க முடியாது. இது தான் உண்மை ! மற்ற டயலாக்ஸ் எல்லாமே வெறும் சால்ஜாப்பு தான்.

உன்னைப் பாக்கணும், உன் கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னு இறங்கி வந்தான்னா அவாய்ட் பண்ணு. “இப்போ முடியாது வேணும்ன்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணுவோமே” ன்னு சொல்லு. சந்திக்கிறது ரொம்ப டேஞ்சர். உன்னோட உறுதி உடையவும் கூடாது, உன் வாழ்க்கை சிதையவும் கூடாது. சோ, அவனைப் பாக்கறதை அவாய்ட் பண்ணியே ஆகணும்.

அவனை ஞாபகப் படுத்தற பொருள் எதையும் வீட்லயோ, கையிலயோ வெச்சுக்காதே. அவனோட லவ் லெட்டர்ஸை எல்லாம் கிழிச்சுப் போடு. போட்டோ கீட்டோ ஏதாச்சும் இருந்தா எரிச்சுப் போடு. அவன் தந்த கிஃப்ட் ஏதாச்சும் இருந்தா ஒண்ணு அவன் கிட்டேயே குடுத்துடு. இல்லேன்னா டிஸ்போஸ் பண்ணிடு. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவனை ஞாபகப் படுத்தும். இது ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கு எவ்வளவு அவனோட நினைவையும், அவனை ஞாபகப் படுத்தற பொருட்களையும் விட்டு தூரமா போறியோ அந்த அளவுக்கு நீ சீக்கிரமா நார்மல் ஆயிடுவே. இது தான் நிறைய கவுன்சிலிங்ல சொல்ற பாலபாடம்.

அதே போல அவனோட பேவரிட் பிளேஸஸ், ஹோட்டல்ஸ், அவனோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு அவாய்ட் பண்ணு. அவனோட பிரண்ட்ஸ் மூலமா அவனுக்கு தேவையில்லாத இன்பர்மேஷன் போறதுக்கு அது காரணமாயிடும். அவனை நேரில பாக்க வேண்டிய சேன்ஸ் கூட வந்துடும். தட்ஸ் நாட் குட். உன்னோட மனசும் ரொம்ப காயப்படும். சோ, அதையெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணு.

அவனோட எஸ்.எம்.எஸ், இ-மெயில் எதுக்குமே நீ ரிப்ளை பண்ணாதே. அது கெஞ்சலா இருக்கலாம், கொஞ்சலா இருக்கலாம், மிரட்டலா இருக்கலாம். நீ அதை வாசித்தது போலவே காட்டிக்க வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் ! அவ்ளோ தான். அவனுக்கு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு வரி அனுப்பத் தோணும், பட்.. வேண்டாம். சொல்லாம இருக்கிற வார்த்தைக்குத் தான் மரியாதை அதிகம். வலிமையும் அதிகம் ! சோ, ஜஸ்ட் இக்னோர் !

இந்த பிரிவை ஒரு துக்கம் மாதிரி அனுசரிக்காதே. ஒரு புதிய தொடக்கம் மாதிரி கொண்டாடு. தேவையில்லாம ரொமாண்டிக் சாங் கேக்கறது. குப்புறப் படுத்து சொகப் பாட்டு கேக்கறது. புலம்பறது. அவன் இல்லேன்னா லைஃப்பே இல்லேன்னு பெனாத்தறது எல்லாமே சுத்த வேஸ்ட். நல்ல எனர்ஜட்டிக் விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தணும். அது தான் ரொம்ப முக்கியம்.

ஏதாச்சும் இருந்தா என் கிட்டே கொட்டு. சும்மா மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்காதே. தேவையில்லாம மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டுப் பூட்டினா இல்லாத நோயெல்லாம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு ஜாலியா இருக்கப் பாரு. உனக்குப் பிடிச்ச விஷயங்களை நிறைய செய். படம் பாரு. டூர் போ. பிரண்ட்ஸைப் போய் பாரு. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. விஜ‌யை வெறுப்பேத்தணும்ன்னு நினைச்சு எதையும் செய்யாதே. அது நீ அவனை மறக்கலேங்கறதுக்கு அடையாளம். சோ, எதைச் செஞ்சாலும் உனக்காக, உன் சந்தோசத்துக்காக செய் !

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நாளைக்கு அவன் வீட்டுக்கு வந்து கெஞ்சினான், மன்னிச்சுடுன்னு சொன்னான், தப்பு பண்ணிட்டேன்னு அழுதான்னு சொல்லிட்டு வராதே. அடிச்சே கொன்னுடுவேன். ஸ்டாப் ஈஸ் ஸ்டாப் ! அவ்ளோ தான். புல் ஸ்டாப் போட்டதை மாத்தாதே. இன்னிக்கு சுடரைத் தேடி போனவன், நாளைக்கு இன்னொரு பொண்ணைத் தேடிப் போகமாட்டான்னு என்ன நிச்சயம் ?

ஒருவேளை உனக்குள்ள ரொம்ப ஆத்திரம் இருந்தா, நீ ஒருதடவை விஜ‌யைப் பார்த்து பேசிடு. பட், பேசும்போ “இது தான் லாஸ்ட் டைம். இனிமே பேச மாட்டேன். நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நினைச்சுப் பாக்கலேன்னு” பேசலாம் தப்பில்லை. இது உன்னோட சாய்ஸ். அவன்கிட்டே நேரடியா பேசி இந்த ரிலேஷனை முடிக்கணும்ன்னு உனக்கு கட்டாயமா தோணினா மட்டும் இதைப் பண்ணு.

டைம் ஈஸ் த பெஸ்ட் ஹீலர் ன்னு சொல்லுவாங்க. அது இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப உண்மை. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கொ. அது தான் உண்மையும் கூட ! உன்னோட எமோஷன்ஸ், கோபம், எரிச்சல் எல்லாத்தையும் எழுது. எழுதறது ஒரு வடிகால். ஆனா அதை அப்படியே அவனுக்கு அனுப்பி மட்டும் வெச்சுடாதே !

மைண்டை டைவர்ட் பண்ணனும். அது தான் முக்கியம். ஏதாச்சும் புது ஹாபி ஆரம்பிக்கலாம். யோகா கிளாஸ் போலாம். டு சம்திங். அவன் உன்னைப்பற்றி ஏதாச்சும் கதை கட்டி வுட்டா உடட்டும். அவன் எப்படிப்பட்டவன் ன்னு நீ அதை வெச்சு புரிஞ்சுக்கலாம். அடிக்கிற காத்துக்கெல்லாம் வேலி கட்ட முடியாது.

“என்ன சொல்றதெல்லாம் புரியுதா ? இல்லை கனவுலகத்துல இருக்கியா ?”

“கேட்டுட்டு தான் இருக்கேன் பிரியா … நீ சொல்றதெல்லாம் சரி தான்… பட் அவன் சைட்ல இருந்து என்ன ரியாக்ஷன் வரும்னு தெரியலயே”

“என்ன பண்ணுவான்னு நினைக்கிறே ? “

“ஒண்ணும் தெரியல. பட், அவனை நான் கழற்றி வுட்டதுல நிச்சயம் கடுப்பாவான்.”

“அவனோட கேரக்டரை வெச்சு அவன் எப்படி பிகேவ் பண்ணுவான்னு நீ புரிஞ்சுக்கலாமேடி”

“ஊஹூம்.. அவன் ஒரு கல்லுளி மங்கன். விஜ‌யைப் பொறுத்தவரை அவன் என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாதுடி….”

அவன் கூட இவ்ளோ நாள் பழகியிருக்கே ! அவனைப் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் சொல்றேன்.

இந்த கழற்றி விட்ட கேஸ்களை ஐந்து டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு புரிந்து கொள்ளக் கூடியவர். சென்ஸிபிள் டைப் ன்னு சொல்லுவாங்க. நேருக்கு நேரா பேசி, என்ன பிரச்சினை, ஏன் பிரியறேன்னு சொன்னா போதும். புரிஞ்சுப்பாங்க. ரொம்ப ஈஸி டைப் இவங்க தான். “என்னன்னு சொல்லத் தெரியல, பட் இந்த ரிலேஷன் வேண்டாம்ன்னு தோணுது” ன்னு சொன்னா கூட ஓகே சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.

இரண்டாவது டைப் கம்ப்ளையிண்ட் டைப். வைனிங் பீப்பிள் ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. உன்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் போய் புலம்பித் தள்ளுவாங்க. அவங்க கிட்டே உன்னோட பெயர் டேமேஜ் ஆகறமாதிரி நடந்துப்பாங்க. எப்படியாவது உன்னை மோசமானவளா காட்ட டிரை பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆட்கள் கிட்டே எதிர்த்துப் பேசக் கூடாது. உன் கிட்டே கேட்கிறவங்க கிட்டேயெல்லாம் டென்ஷன் ஆகாம, “இனிமே இந்த காதல்ல நம்பிக்கை இல்லை” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.

மூணாவது டைப் ஆதிக்க டைப். எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சுக்கப் பாப்பாங்க. ரொம்ப கடுமையா நடந்துக்கவோ, வீட்டுல வந்து நேரடியா பேசவோ டிரை பண்ணுவாங்க. தன்னோட வலிமையால இந்த பிரச்சினையைக் கையாள நினைப்பாங்க. முரண்டு பிடிக்காம ஆனா அதே நேரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

நாலாவது டைப் சுய பச்சாதாப டைப் ன்னு சொல்லலாம். ரொம்ப பரிதாபமா, எளிமையா, மென்மையா உன்னோட மனசை மாத்தப் பாப்பாங்க. ரொம்ப செண்டிமெண்ட் கதை பேசி, மெல்ல சில்மிஷ வேலை காட்டி இழுக்கப் பாப்பாங்க. சமயத்துல குடம் குடமா கண்ணீர் கூட வடிப்பாங்க. சோ, இந்த மாதிரி ஆட்களை அவங்க போக்கிலேயே போய் புரிய வைக்கணும்.

கடைசி டைப் தற்கொலை கேஸ். இது ரொம்ப டேஞ்சர் கேஸ். திடீர்ன்னு கையை வெட்டிகிட்டு செத்துப் போவாங்க. சிலர் தற்கொலை பண்ணமாட்டாங்க, ஆனா செத்துடுவேன்னு பேசிப் பேசியே உன்னை குழப்புவாங்க. பயமுறுத்துவாங்க. உன்னை ஒரு பிளாக் மெயில் வட்டத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க. இவங்க கிட்டேயும் கொஞ்சம் கவனமா பேசணும்.

சொல்லி நிறுத்திய பிரியா வித்தியாவைப் பார்த்தாள்.

“இப்போ சொல்லுடி, உன்னோட பழைய ஆள் எந்த டைப் ?”

“கண்டிப்பா சூயிசைட் கேஸ் இல்லை ! அந்த அளவுக்கு அவன் தைரியசாலியும் இல்லை, கோழையும் இல்லை, அரைவேக்காடு ” சொல்லிவிட்டுச் சிரித்த ர‌ம்யாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பிரியா.

ஆன்மீகம் : பெண்மையைப் போற்றுவோம்

couple

ரெண்டு பேர் சீட்டு விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க கைல இருந்த சீட்டுகள் எல்லாம் மாறி மாறி சண்டை போட்டுச்சாம். ராஜா சொல்லிச்சாம், நான் தான் ராஜா. எனக்கு தான் மரியாதை அதிகம். உடனே ராணி சொல்லிச்சாம், ‘பேச வந்துட்டான் பாரு’ நான் தான் பவர்புல். எனக்கு வேற யாரும் தேவையில்லைன்னு. சட்டுன்னு ஜோக்கர் வந்து சொல்லிச்சாம், நீங்க என்னதான் பெரிய பிஸ்தாவா இருந்தாலும் என்னைத் தான் எல்லாரும் விரும்பி தேடுவாங்க, நான் தான் கேம் ஃபினிஷர் ன்னு ! கொஞ்ச நேரம் கழிச்சு, சீட்டு விளையாடின ரெண்டு பேரும் எல்லா சீட்டையும் அடுக்கி, டப்பாக்குள்ள போட்டு மூடி ஓரமா தூக்கிப் போட்டாங்க. சீட்டுகள் எல்லாம் இருட்டுக்குள்ள போய் பேசாம வாய மூடிட்டு கிடந்துச்சாம்.

இப்படித் தான் மனித வாழ்க்கை. வாழ்க்கை எனும் ஆட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. ஒவ்வொரு தேவை. ஒவ்வொரு எதிர்பார்ப்பு. ஆட்டம் முடிந்து விட்டால் எல்லாருமே ஒன்றாக, ஒரே மூலையில். இப்படி ஒரு பிரபல பழமொழியும் உண்டு. மண்ணிலிருந்து வந்து மண்ணுக்கே திரும்பும் வாழ்க்கை. இந்த ஒரு சின்ன உண்மையைப் புரிந்து கொள்ளாததால் தான் இன்றைக்கு உலகில் நான் பெரியவனா, நீ பெரியவனா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, அடக்குமுறையா அதுவா இதுவா என பல்வேறு போராட்டங்கள், குழப்பங்கள்.

உலகில் வாழ்ந்தாலும், உலகிற்காய் வாழாத வாழ்க்கை தான் கிறிஸ்தவர்களின் அடிப்படை. கிறிஸ்தவராக மாறிவிட்டாலே வேற்றுமைகள் மனதிலிருந்து அகன்று போய்விட வேண்டும் என்பதையே இறைவன் எதிர்பார்க்கிறார். “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலாத்தியர் 3-28, எனும் வசனம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

எல்லோரும் இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம், இயேசு எனும் திராட்சைக் கொடியின் கிளைகளாக இருக்கிறோம். அவருடைய உடலின் உறுப்புகளாய் இருக்கிறோம். அது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி, ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி கடவுளின் பார்வையில் எல்லாரும் ஒன்றே !

இந்த இடத்தில் தான் நம்முடைய சிந்தனைகள் பல வேளைகளில் மாறுபட்டு ஓடுகின்றன. எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம் என்பதால் எல்லாரும் ஒரே செயலையோ, ஒரே பணியையோ செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. ஒவ்வொருவருக்கும் இறைவன் என்ன பணியைத் தந்திருக்கிறாரோ அதைச் செய்வதே மிக முக்கியம்.
1. துணையாளர் எனும் தூய பணி

பெண்களுக்கு இறைவன் கொடுத்த முதல் பணி துணையாளர் பணி ! ஆதாமைப் படைத்த இறைவன் ஏவாளை ஆதாமின் துணையாளனாக, இணையாளனாகப் படைக்கிறார். ஆதாமுக்குத் துணையாகத் தானே இறைவன் ஏவாளைப் படைத்தார், அப்படியானால் ஏவாள் இரண்டாம்பட்சம் தானே எனும் தவறான எண்ணம் பரவலாக உண்டு. அதற்காகத் தான் இறைவன், யோவான் 14 : 16, ல் தூய ஆவியானவரையும் ‘துணையாளர்” என அழைத்து நமது சந்தேகங்களை விலக்குகிறார். “துணை” எனும் வார்த்தை கடவுளைக் குறிப்பிடுவதாக பைபிளில் பல இடங்களில் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூய ஆவியானவரின் பணி எப்படி நமக்குள் கரைந்து நம்மை வலுவூட்டு, நன்மையின் பாதையில் நடத்துகிறதோ, அத்தகைய உயரிய பணியே பெண்களுக்கு இறைவன் தந்த முதல் பணி. தந்தைக்குப் பணிந்திருத்தல் எப்படி என்பதை இயேசு தனது வாழ்க்கையில் காட்டினார். ஏவாள் அந்த சிந்தனையிலிருந்து விலகிய கணத்தில் பாவம் மனிதர்களுக்குள் நுழைந்தது. மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் பெண்ணைப் படைக்கிறார். அதாவது ஆணின் முழுமை, பெண்ணால் தான் உருவாகிறது, அப்போது தான் படைப்பின் முழுமையும் உருவாகிறது. பெண், முழுமையின் சின்னமாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் பெண்களுக்கான இலக்கணத்தை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஆண்டவரிடம் கொண்டுள்ள அச்சம் ( நீ.மொ 31 : 30 ), ஆடை நெய்தும், சமையல் செய்தும், ஏழைகளுக்குக் கொடுத்தும் என பணி செய்து இறுக்கமான கைகள், ஞானத்தோடு பேசி அன்போடு அறிவுரை கூறும் நாவு என பெண்மையின் குணாதிசயம் விரிகிறது. புற அழகையோ, பியூட்டி பார்லர்களின் தற்காலிக விளம்பரங்களையோ எந்த இடத்திலும் பைபிள் பேசவில்லை. காரணம் இறைவன் அகத்தைப் பார்க்கிறவர் ! ஆகவே தான் சொல்கிறார் நல்ல மனைவி பவளத்தை விட மேலானவள் ( நீ.மொ 31 : 10 ) !

2. தாய்மை எனும் உயரிய பணி

ஒரு ஆணின் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அவனைப் பிணம் என்போம். ஒரு பெண்ணின் உடலில் இருந்து உயிர் பிரிந்து வரும்போது அவளைத் தாய் என்கிறோம். பெண்மை தவிர வேறு எவருக்கும் கிடைக்க முடியாத மிகப்பெரிய கவுரவம் இது ! இதையே பவுல் அதை ஒரு இறை பணி என்கிறார். இன்றைய உலகமோ அதை பெண்ணடிமைத்தனம் என்கிறது.

ஒரு சமூகம் கட்டியெழுப்பப் பட வேண்டுமெனில் குடும்பம் மிக ஆரோக்கியமான உறவுகளிலும், மதிப்பீடுகளிலும் கட்டியெழுப்பப் பட வேண்டும். அது தவறும் போது சமூகமே சமநிலை இழந்து விடுகிறது. அந்த குடும்பத்தைக் கட்டியெழுப்பும் உயரிய பணி அன்னையரிடமே இருக்கிறது. “தாயைப் போல பிள்ளை” என்பதன் கிறிஸ்தவப் பார்வையையே பவுலடிகளார் சொல்கிறார்.

ஒரு தாய் இருந்தார். அவருடைய கணவன் இறை நம்பிக்கை இல்லாதவர். அது அந்தத் தாயைப் பாதிக்கவில்லை. மகனை நல்ல வழியில் வளர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். அந்த மகன் வளர்ந்தான். திருச்சபையின் வலுவான பணியாளர்களில் ஒருவராக மாறினார். அந்தத் தாயின் பெயர். ஐனிக்கேயாள். மகனின் பெயர் திமோத்தேயு. பவுலடிகளாருடன் சேர்ந்து அவர் செய்த பணி எத்தனை அர்த்தமுள்ளது ! ஐனிக்கேயாள் இறை அழைத்தலை முழுமையாய் நிறைவேற்றினார் என்று சொல்லலாமல்லவா !

3. இறைவனுக்கு சான்று பகர்தல்

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் ( அப் : 2 : 17 ). இயேசு தனது இறை பணியை முழுமையாய் ஆண்களுக்கென சமர்ப்பிக்கவில்லை. பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் இருந்தாலும் மதலேன் மரியாவுக்கே முதல் காட்சியை இயேசு வழங்குகிறார். உயிர்த்த இயேசுவின் முதல் சாட்சி !

இறைவனுக்குச் சான்றுபகரும் பணி மாபெரும் பணி. அதை நமது வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழலிலும் வெளிப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக அன்புக்கும், பொறுமைக்கும் இலக்கணமான பெண்களுக்கு, வாழ்க்கையில் இயேசுவைப் பிரதிபலிக்க வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். பழைய ஏற்பாட்டிலும் சரி, முதலாம் நூற்றாண்டிலும் சரி, பல பெண் தீர்க்கத்தரிசிகள், அறிவுரையாளர்கள், மற்றும் நீதிபதிகள் இறைப் பணிக்காக இருந்திருக்கிறார்கள். மிரியம், தெபோராள், அன்னா, பிரிஸில்லா என இந்த பட்டியல் நீளூம்.

லாசரின் வீட்டில் “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என இயேசு சொல்வது பெண்களின் இறை அழைத்தலையும், இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு அவருக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழவேண்டும் எனும் தேவையுமே காட்டுகிறது எனலாம்.

4. மனதில் தியானிக்கும் பண்பு !

இயேசுவின் அன்னை, மரியாள், ஒரு நல்ல வழிகாட்டி, அல்லது எடுத்துக்காட்டு எனலாம். கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம். அதை வெளியே சொல்ல முடியாத நிலமை. வெளியே சொன்னால் ஊர் நிச்சயம் நம்பப் போவதில்லை. நடத்தை கெட்டவள், அல்லது மனநிலை சரியில்லாதவள் என்றே சொல்லும். ஆனாலும் இறைவனின் சித்தத்துக்காக அத்தகைய பேச்சுகள் வாங்குவதைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாத துணிவு மரியாளுக்கு இருந்தது !

பன்னிரண்டு வயதில் மகனின் ஆன்மீக விஷயங்களைக் கண்டு கதிகலங்கினாலும், எல்லாவற்றையும் “உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்த” மனம் மரியாளுக்கு இருந்தது. இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய ஒரு முன்னுதாரணம் தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் ஊருக்கு விளம்புவதும், ஊரார் என்ன சொல்வார்களோ என கலங்கிப் புலம்புவதும் இன்றைக்கு பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா ?
5. குடும்பத்தைக் கட்டியெழுப்புதல்

ஆண் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். அதையே பைபிளும் சொல்கிறது. பெண்களின் முதல் பணியாக பைபிள் சொல்வது, “கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்குக் கீழ்ப்படிதல்”. ஆண்களுக்கான பணியாய்ச் சொன்னது “மனைவியரை அன்பு செய்யுங்கள்” என்பது. ஒரு முறை இது குறித்து ஒரு நண்பர் அருமையான விளக்கம் கொடுத்தார். கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிவது பெரும்பாலும் இயல்பாக வந்து விடுகிறது. சாப்பிடு என்று சொன்னவுடன் பழத்தை ஆதாம் சாப்பிட்டான். அதனால் தான் அவனுக்கு “அன்பு செய்” எனும் கட்டளை தரப்படுகிறது. பெண்கள் அன்பில் எப்போதுமே உயர் நிலையில் இருப்பார்கள். கணவன் மீது உயிரையே வைத்திருப்பார்கள். அதனால் தான் “கீழ்ப்படி” எனும் கட்டளை அவர்களுக்குத் தரப்படுகிறது. இறைவனின் சித்தம் என்பது இருவருமே சமமாய், அன்புடனும் ஒருவருக்கொருவர் புரிதலுடனும் இருப்பது தான் என்றார்.

ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைகள் பரஸ்பர அன்பும், புரிதலும், கீழ்ப்படிதலும் தான். கணவன் மனைவி தாண்டி குழந்தைகளுக்கும் இறைவன் சொல்வது கீழ்ப்படிதல் போதனைதான் இல்லையா. இத்தகைய கிறிஸ்தவ போதனையின் அடிப்படையில் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்பும் போது அது உலகிற்கே ஒளியாக திகழ்கிறது !

இசைக்கச்சேரியில் மிருதங்கம், புல்லாங்குழல், கீபோர்ட், வயலின் எல்லாமே இருக்கும். என்னிடம் துளைகளே இல்லை என மிருந்தங்கம் கவலைப்படலாமா ? அல்லது நான் ஒல்லியாய் இருக்கிறேன் என புல்லாங்குழல் புலம்பலாமா ? ஒவ்வொன்றின் படைப்பும் அதற்குரிய இசையைத் தருவதற்காகவே. தான் அடுத்த கருவியைப் போல மாறவேண்டுமென்றோ, எனது இசை தான் உயர்ந்தது என்றோ பேசித் திரிவது வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை.

உலக அளவிலுள்ள கிறிஸ்தவர்களில் 60% பேர் பெண்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். கடவுள் ஆணையும் பெண்ணையும் தனித்துவத்துடனும், வெவ்வேறு பணிகளுக்காகவும் படைக்கிறார். ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறாமல், அந்தந்த படைப்புக்குரிய உயர் நிலையை அடைவதே இறை சித்தம். இந்த நிலைகளில் எந்த விதத்திலும் மேன்மை அதிகமானதென்றோ, மேன்மை குறைந்ததென்றோ எதுவும் இல்லை. அப்படி நாம் எண்ணிக் கொண்டால், அது பாரபட்சம் பார்க்காத நமது பரம பிதாவையே அவமானப் படுத்தும் செயல் !

இணைந்தே பயணிப்போம், இறையரசை நிலைநாட்டுவோம்

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

காரோட்டினால் நீ கன்னியல்ல ! : நாடுகளின் ஆணாதிக்க முகம்.

 “பெண்கள் காரோட்டினால் அவர்களுடைய கன்னித் தன்மை அத்தோடு முடிந்து போய்விடும். அவர்கள் விபச்சாரிகளாக மாறுவார்கள். ஆபாசத் தொழிலுக்குள் விழுந்து விடுவார்கள். லெஸ்பியன்களாவார்கள். விவாகரத்து செய்து கொள்வார்கள்” இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள் ? அதிர்ச்சியடைவீர்கள். அல்லது சொன்னவனுக்கு மனநிலை சரியில்லை போல என நினைத்துக் கொள்வீர்கள். அப்படித்தானே ? காரணம் நாம் இந்தியாவில் இருக்கிறோம் !

மேலே குறிப்பிட்ட வாசகங்கள் அச்சு அசலாக ஒரு நாட்டின் சட்டசபை போன்ற அதிகார மையத்தில்,, உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்தவை ! நடந்தது சவுதி அரேபியா ! சொன்னவர் கமால் சுபி எனும் உறுப்பினர் ! அந்த “கன்சல்டேட்டிவ் அசம்ப்ளி ஆஃப் சவுதி அரேபியாவில்” உள்ள மொத்த உறுப்பினர்கள் 150 !

பெண்கள் வாகனங்கள் ஓட்டுவது சவுதியில் சட்டப்படி குற்றம் ! அப்படியானால் பெண்கள் எங்கேயாவது போகவேண்டுமென்றால் என்ன செய்வது ? யாராவது ஒரு ஆணை சார்ந்தே இருக்க வேண்டும். பெரும்பாலும் கணவன், மகன், அப்பா அல்லது பாதுகாவலன் ! 

ஒருத்தர் சாகக் கிடக்கிறார் என்றால் கூட அவசரத்துக்குக் கார் எடுத்துக் கொண்டு ஒரு பெண் ஆஸ்பிட்டலுக்குப் போக முடியாது ! ஒருவேளை ஏதேனும் ஒரு பெண் அத்தி பூத்தார் போல எதையேனும் மீறினால் முதல் அவமானப் பேச்சு அந்த வீட்டு ஆணுக்குத் தான் ! “ஆண்மையில்லாதவன். ஒரு பெண்ணை ஒழுங்காக வைக்கத் தெரியாதவன்” என ஊர் ஏசும். மீறிய பெண்ணுக்கு சவுக்கடி போன்ற தண்டனைகளும் கிடைக்கும் ! 

“ஏன்பா பெண்கள் காரோட்டக் கூடாது ?”  என்று கேட்டால், பெண்கள் காரோட்டினால் அடிக்கடி வெளியே போவார்கள், பிற ஆண்களுடன் பழகுவார்கள், விருப்பம் போல நடப்பார்கள், சுதந்திரமாக இருப்பார்கள், வீட்டிலுள்ள ஆண்களுக்கு அடங்கி இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள் ஆண்கள் !

சுமார் 2.7 கோடி பேர் வசிக்கும் சவுதியில் எப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றே கால் கோடிப் பெண்கள் உண்டு. இவர்களில் யாருக்கு எங்கே போக வேண்டுமானாலும் இன்னொரு ஆணின் டைம் படி தான் போக முடியும். சுமார் 4 இலட்சம் பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ! இவர்களெல்லாம் ஸ்கூல், காலேஜ் போவதே ஓரு மிகப்பெரிய சவால் !

வாகனம் ஓட்டுவது ஒரு பெண்ணோட அடிப்படை உரிமை. இறைவாக்கினர் வாழ்ந்த காலத்துல கூட பெண்கள் ஒட்டகங்கள் ஓட்டினார்கள். அப்போதைய வாகனம் ஒட்டகம். இப்போதைய வாகனம் கார். ஒட்டகம் ஓட்டுவது முகமது காலத்துல கூட சரியாய் இருந்தது. அப்படின்னா இன்னிக்கு கார் ஓட்டுவது கூட சரியானது தானே ! எனும் கோஷத்தோடு பெண்கள் மெதுவாகப் போராட்டக் களத்தில் நுழைந்தார்கள்.

1990ம் ஆண்டு எதிர்ப்பின் முதல் திரி எரிந்தது. தலைநகரான ரியாத்தில் பன்னிரண்டு பெண்கள் கார் ஓட்டினார்கள். நினைத்தது போலவே அவர்கள் கைது செய்யப் பட்டார்கள் ! பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் அவமானங்களுக்கும் பயந்து பெண்கள் அமைதியானார்கள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தக் கனல் எரிந்து கொண்டே இருந்தது !

வஜேகா அல் குவைடர் (Wajeha al-Huwaider) எனும் பெண்மணி “எங்களுக்கும் காரோட்டும் உரிமை தாருங்கள்” எனும் விண்ணப்பத்தை ஆயிரத்து நூறு துணிச்சலான பெண்களின் கையொப்பத்துடன் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் அளித்தார். 2008ம் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று அவர் காரை ஓட்டி தனது நிலையைப் பதிவும் செய்தார் !

இங்கே தான் அவருக்குத் தொழில் நுட்பம் கை கொடுத்தது. அவர் கார் ஓட்டிய வீடியோவை யூ-டியூபில் போட சரசரவென உலகம் முழுதும் அது கவனத்தை ஈர்த்தெடுத்தது. அவர் ஒரு எழுத்தாளர்.

“நான் கொஞ்ச நாள் அமெரிக்காவில் இருந்த போது தான் சுதந்திரம்னா என்ன என்பதை கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். சவுதிப் பெண்கள் வலிமையற்றவர்கள். அவர்களைக் காக்க எந்த சட்டமும் இல்லை. ஏதோ ஒரு ஆணிடம் அவர்கள் அடிமைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என ஆவேசக் குரல் கொடுக்கிறார் இந்தப் பெண்மணி !

1990ல் மாற்றத்துக்கான விதை ஊன்றப்பட்டபோது இணையம் பிரபலமாகவில்லை. 2011ல் இன்டர்நெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு “விமன்2டிரைவ்” – “பெண்களும் வாகனம் ஓட்டவேண்டும்” எனும் இயக்கம் ஃபேஸ்புக்கில் பதிவானது. மனல் அல் ஷரிப் (Manal al-Sharif) எனும் பெண்மணி முன்னணியில் நின்றார். இயக்கம் சட்டென ஆதரவுகளை அள்ளியது. கடந்த ஆண்டு ஜூன் 17ல் காரோட்டுவோம் என அறிவித்து சுமார் 50 பேர் காரை ஓட்டிக் கைதானார்கள் !

சவுதிப் பெண்கள் ஏதோ படிப்பறிவில்லாதவர்கள் என நினைத்து விடாதீர்கள். சுமார் 70 சதவீதம் பெண்கள் படித்தவர்கள். ஆனால் அலுவலகங்களில் பெண்கள் எத்தனை சதவீதம் தெரியுமா ? 5 சதவீதம் ! மிச்ச 95 சதவீதமும் ஆண்களே ! இந்த விஷயத்தில் உலகப் பட்டியலில் முதலிடம்.

ஒரு காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாகத் தான் இருந்தார்கள். ஆனால் அந்த சங்கிலி உடைக்கபட்டு இப்போது அவர்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள். அதே போல அவர்களுடைய சுதந்திரங்கள் ஒவ்வொன்றாய் மீண்டெடுக்கப்படும். ஆண்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் பெண்களை அடக்கி ஆளப் பார்க்கிறார்கள் என்கிறார் சவுதியைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் பெரோனா.

“என்னோட வயசான அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும், அம்மாவை அலுவலகம் கூட்டிப் போக வேண்டும், தோழிகளுக்கு ஊர் சுற்றிக் காட்ட வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஏகபட்ட ஆசைகள். இவையெல்லாம் ஒரு நாள் நிறைவேறுமா? “ என ஏக்கத்துடன் விரிகிறது அவருடைய கனவு. ஆனால் அதற்கான உரையாடலை ஆரம்பித்தால், “இன்னிக்கு காரெடுத்துட்டு போற பொண்ணுங்க நாளைக்கு நைட் கிளப் போவாங்க” என முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றனர் என்கிறார் அவர்.

உலகிலேயே பெண்கள் காரோட்டக் கூடாது என முரண்டு பிடிக்கும் ஒரே நாடு சவுதி அரேபியா தான். கணக்கெடுக்கப்பட்ட 134 நாடுகளில் பாலியல் ரீதியாக வேறுபாடு காட்டும் நாடுகளில் 130வது இடம் சவுதி அரேபியாவுக்கு !

பெரும்பாலான வங்கிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள், உணவகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தனியே வாசல்கள் உண்டு ! ஏன் பெரும்பாலான வீடுகளிலேயே தனித்தனி வாசல்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் உண்டு ! ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் எட்டிக் கூட பார்க்க முடியாது ! 

கொஞ்சம் லெபனான் பக்கம் எட்டிப் பார்த்தால் அங்கே ஆண்கள் எளிதாக பெண்களை டைவர்ஸ் செய்துவிடலாம். ஆனால் பெண்கள் விவாகரத்து கேட்டால் குதிரைக் கொம்பு. அப்படியே “புருஷன் கொடுமைப்படுத்தறான் ஐயா..” என்று சொன்னால் கூட “பார்த்த சாட்சி எங்கே, சர்டிபிகேட் எங்கே, லொட்டு லொசுக்கு எங்கே…” என சட்டம் அவர்களுக்கு எதிராகவே நிற்கும் ! இஸ்ரேல் நாட்டுப் பெண்களுக்கு விவாகரத்து வேண்டுமென விண்ணப்பிக்கும் உரிமையே கிடையாது !

“என் மனைவி இந்த நாட்டை விட்டு வெளியே போறதை தடுக்கணும்” என ஒரு புகாரை கணவன் பதிவு செய்தால் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியே போக முடியாது என்பது எகிப்து, பெஹ்ரைன் நாடுகளின் சட்டம் ! ஈராக், லிபியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன், ஓமன் இங்கெல்லாம் பெண்கள் வெளிநாடு போக வேண்டுமெனில் கணவனின் அனுமதிக் கடிதம் வேண்டும் !

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகக் கொடுமையானதாய் ஒரு விஷயம் உண்டு ! கேட்கவே பதறடிக்கும் விஷயம் அது !

“அம்மா என்னுடைய கண்களைக் கட்டினார்கள். எனக்குப் பயமாக இருந்தது. திடீரென எனது பிறப்பு உறுப்பிலிருந்து ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. உயிர் போகும் வலி. பின்னர் என் பிறப்பு உறுப்பு முழுவதும் எதேதோ கத்திகள் கிழிப்பது தெரிந்தது. என் உயிர் அந்த வினாடியிலேயே போய் விடாதா என கதறினேன்” என்கிறார் வேரிஸ் டிரீ எனும் பெண்மணி.

இவர் சொல்வது அந்தக் கொடுமையைத் தான். பெண்களின் பிறப்பு உறுப்பை வெட்டியும், தைத்தும் செய்யப்படும் கொடுமை. ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் இந்தக் கொடுமை நிகழ்கிறது ! எழுதுவதற்கே விரல்கள் நடுங்கும் இந்தக் கொடுமையை ஆங்கிலத்தில் ஃபீமெயில் ஜெனிடல் மியூட்டிலேஷன் என்கிறார்கள். சிறுமியாக இருக்கும் போதே பெண்களுடைய பிறப்பு உறுப்பின் உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளை வெட்டி எடுப்பதும், பெண் குறியின் வாசலைத் தைத்து குறுகலாக்குவதும் என இந்த கொடூரமான நிகழ்வின் பாகங்கள் திகிலூட்டுகின்றன.

சுமார் 14 கோடி ஆப்பிரிக்கப் பெண்களுக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்கிறது. முப்பது இலட்சம் பேர் ஆண்டு தோறும் இந்தச் சடங்குக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளி விவரங்களே சாட்சியாய் இருக்கின்றன.

ஜீன்ஸ் – டிஷர்ட் போட்டதற்காக ஆபாசமாய் உடையணிந்தாள் எனும் கோஷத்தோடு ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்தனர் சூடான் நாட்டில். சமீபத்தில் அது சர்வதேச மனித உரிமைகள் கமிஷனின் கவனத்துக்கு வந்தது !

“குடும்பத்துக்கு கெட்ட பேரு உண்டாக்கிட்டா” எனும் குற்றச்சாட்டோடு கருணைக் கொலை எனும் பெயரில் பெண்கள் உயிரோடு புதைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் உலகின் பலபாகங்களிலும் இருப்பதாக யூனிசெஃப் அறிக்கை பதறடிக்கிறது.

அல்பேனியா, மால்டோவா, ரொமானியா, பல்கேரியா, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ் போன்ற நாடுகளிலுள்ள பெண்களை அதிக அளவில் “செக்ஸ் அடிமைகளாக” வெளிநாடுகளுக்கு விற்கப்படும் அவலம் தொடர்கிறது ! பணக்கார மேற்கு ஐரோப்ப நாடுகளில் அவர்கள் எஜமானனின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் துயர நிலைக்குத் தள்ளபடுகிறார்கள் !

ஒரு பெண்ணைப் பிடிச்சுப் போச்சுன்னா அந்தப் பொண்ணைக் கடத்திக் கொண்டு போய் பையனின் வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாய் சம்மதிக்க வைக்கும் வழக்கம் கசகஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற இடங்களில் பரவலாக உண்டு. எத்தியோப்பியா, ருவாண்டா பகுதிகளில் நிலமை இன்னும் மோசம். கடத்திக் கொண்டு போன கையோடு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறையும் செய்து விடுகிறார்கள். அப்புறமென்ன தமிழ் சினிமா போல, கெடுத்தவனோடு வாழ் எனும் கிளைமேக்ஸ் தான் !

மார்ச் 8, உலக பெண்கள் தினம். இந்த நாளில் நமக்குக் கிடைத்திருக்கும் விலை மதிப்பற்ற இந்த சுதந்திரம் மனதுக்கு நிறைவளிக்கலாம். அந்த நிறைவோடு நின்று விடாமல் உலக அளவிலான பெண்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் நம்மால் முடிந்த அளவு குரல்கொடுக்கும் முடிவையும் எடுப்போம் !

சகோதரியர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.

Thanks : தேவதை பெண்கள் இதழ் , பெண்கள் தின சிறப்புக் கட்டுரை.

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

 அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6  சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் !  8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது !  எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட். 

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் ! 

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

ஹை ஹீல்ஸ் : அழகா, ஆபத்தா ?

அழகிப் போட்டி பார்த்திருக்கிறீர்களா ? பளீரென வெளிச்சம் வீசும் பாதையில் வசீகர அசைவுடன் பூனை நடை போட்டு வரும் அந்த அழகிகளின் செருப்புகளை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா ? ஒரு வைன் கோப்பையைப் போல நெடு நெடுவென இருக்கும் அந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளில் கண்ணுக்குத் தெரியாத ஏராளம் ஆபத்துகள் இருக்கின்றன.

திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. பிறரால் கவனிக்கப் பட வேண்டும் எனும் ஆழ்மன ஆர்வம் அவர்களை ஹீல்ஸ் பாதையில் கவனத்தைச் செலுத்த வைக்கிறது.

“ஹை ஹீல்ஸை” தமிழில் “உயரமான குதிகால்” என்று சொல்லலாமா ? பிழையெனில் தமிழ் அறிஞர்கள் மன்னிப்பார்களாக ! ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.

சிலருக்கு பாதங்கள் வசீகரமாக இருக்காது. அல்லது அவர்களாகவே அப்படி நினைத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள் ஹை ஹீல்ஸ் வசீகரங்களுக்குள் தங்களுடைய பாதங்களைப் பூட்டி வைக்க முயல்வார்கள்.

அழகிப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கேட்டால் “ஹீல்ஸ் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பார்கள். பாதிக் காசை கால் செருப்புக்கே கரைப்பார்கள். என்ன செய்ய ? தங்கள் வளைவுகளை வசீகரமாய்க் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்கள். பின்னழகை எடுப்பாய்க் காட்டுவதில் ஹீல்ஸ் செருப்புகள் கில்லாடிகள்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்களே இப்படித் தான், அந்தக் காலத்துல…” என பாட்டி புராணத்தை ஆரம்பிக்கிறீர்களா ? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ! ஹீல்ஸ் சமாச்சாரம் இன்று நேற்று வந்த விஷயமல்ல. கி.மு 3500 லேயே எகிப்தில் ஹீல்ஸ் செருப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏழைகள் வெறுங்கால்களோடும் பணக்காரர்கள் ஹீல்ஸ் செருப்புகளோடும் அலைந்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் குறைந்த பட்சம் 5500 ஆண்டுகளுக்கு முன்பே ஹீல்ஸ் தனது ஹிஸ்டரியை ஆரம்பித்திருக்கிறது !

பண்டைய ரோமில் விலை மாதர்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பார்களாம். அவர்களுடைய ஹீல்ஸ் அளவைப் பார்த்து தான் இது எந்த மாதிரிப் பெண் என்பதை ஆண்கள் அடையாளம் கண்டு கொள்வார்களாம். ஆண்கள் கூட ஹை ஹீல்ஸ் அணிவதுண்டு. குறிப்பாக ஹாலிவுட்டின் கௌபாய் படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும்.

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தது. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது.

கடையில போய் பார்த்தா பல அளவுகளில் செருப்புகள் இருக்கும் இல்லையா ? இதில் எது ஹை ஹீல்ஸ் எது லோ ஹீல்ஸ் தெரியுமா ? பொதுவாக செருப்பின் குதிகால் உயரம் 6 சென்டி மீட்டர் வரை உயரமாய் இருந்தால் அது லோ ஹீல்ஸ் ! 8.5 சென்டீ மீட்டர் வரை இருந்தால் நடுத்தர ஹீல்ஸ் ! அதைத் தாண்டினால் அதை ஹை ஹீல்ஸ் என்பார்கள். இது செருப்புகளின் கணக்கு !

“இந்த ஹை ஹீல்ஸ் கண்டு பிடிச்சவனுக்கு கோயில் கட்டிக் கும்பிடணும்” என்று ஒரு முறை மர்லின் மன்றோ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அவரை உறை பனியில் செய்த கவர்ச்சிச் சிலையாய்க் காட்டியதில் ஹை ஹீல்ஸின் பங்கு கணிசமானது ! எனவே அவர் அப்படிச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை !

ஆனால் சாதாரணமாய் பயன்படுத்தலாமா இதை ? விருப்பம் போல போட்டுக் கொண்டு நடக்கலாமா ? சாதாரணச் செருப்பு அணிவதற்கும் ஹீல்ஸ் அணிவதற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா ?

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? ஹை ஹீல்ஸ் போடும் பெண்கள் நடக்கும் போது ஏகப்பட்ட எனர்ஜியைச் செலவழிக்கிறார்களாம். தொடர்ந்து கொஞ்ச நாள் ஹை ஹீல்ஸ் போட்டால் அதன் பிறகு நடக்கும் முறையே மாறிவிடுமாம். அதன் பின் ஹை ஹீல்ஸ் போடாவிட்டால் கூட நடப்பதற்காய் உடல் அதிக அளவு எனர்ஜியைச் செலவிடுமாம்.

“நமது உடலிலுள்ள உறுப்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் அமைந்திருக்கிறது. ஹை ஹீல்ஸ் காலில் சமநிலை அமைப்பை மாற்றி வைக்கிறது. அதன் பின் புதிய நிலையையே சாதாரண நிலை என மூளை எழுதிக் கொள்கிறது. இதனால் தான் தினமும் ஹீல்ஸ் போடும் பெண்கள், பின்னர் ஹீல்ஸ் போடாவிட்டால் கூட அவர்களுடைய உடல் சமநிலைக்கு வருவதில்லை. அதுவே அதிக எனர்ஜி செலவாகக் காரணம்” என்கிறார் டாக்டர் நெயில் ஜெ குரோலின்.

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களில் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

சுளுக்கோட போனா பரவாயில்லை, கொஞ்சம் தைலத்தைத் தடவிட்டு நம்ம வேலையைப் பார்க்கப் போகலாம். ஆனால் ஹீல்ஸ் மேட்டர் அவ்வளவு சின்னதல்ல. ஹீல்ஸ் போட்டால் கால் முட்டிகள், இணைப்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு அவை வலுவிழக்கும் என்கிறது இன்னொரு ஆராய்ச்சி.

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் உடலின் மூட்டு இணைப்புகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் எனும் ஆராய்ச்சியில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஹீல்ஸ் போட்டு நடக்கும் போது உருவாகும் அதிர்வுகள் சாதாரணமாய் நடப்பதை விட மிக அதிகம் என்பதால் இந்தப் பாதிப்பும் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல் பார்கேமா.

ஆஸ்டியோஆர்த்ரடிஸ் (Osteoarthritis) எனும் மூட்டுகளைச் சிதைக்கும் நோய் கூட ஹீல்ஸ் அணிவதால் வரலாம் என அதிர்ச்சியளிக்கிறார் யூ.கேயிலுள்ள ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரெட்மான்ட்.

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிக்கிறதில்லையா ? அதனால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! அப்படி வலியை வலியப் போய் அழைப்பது தான் ஹீல்ஸ் அணிவதால் ஆய பயன் !

நமது பரம்பரை வைத்தியர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடலின் அத்தனை உறுப்புகளுக்குமான தொடர்பு பாதத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த நரம்புகள் தூண்டப்படும் போது முழு உடலுக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. செருப்புகள் ஒரு வகையில் அந்த தூண்டுதலைத் தடுக்கின்றன. இந்த ஹை ஹீல்ஸ் அந்த தூண்டுதலை ரொம்பவே பாதிக்கும். இது உடல்வலியுடன், தலைவலியையும் உருவாக்கி விடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ரொம்ப சோர்வாக இருக்கும் போது பாதங்களைக் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவினால் சுகமாய் இருக்கும் இல்லையா ? அதன் காரணமும் இந்த நரம்புகள் தான். ஹீல்ஸ் போடுபவர்கள் அடிக்கடி இப்படி கால்களைக் கவனிக்கலாம் !

ஹீல்ஸ் போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதி கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். நூறு பேர் மத்தியிலே தடுமாறி விழுந்தா நல்லாவா இருக்கும் ?

மெட்டடார்சல்ஜியா (Metatarsalgia ) என மருத்துவம் அழைக்கும் ஓரு நிலை பாதங்களில் ஏற்படும் வலி தொடர்பானது. பாதத்தில் விரல்களுக்குக் பின்னால் பாதப் பந்து எனுமிடத்தில் எழும் இந்த வலியை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது ஹை ஹீல்ஸ் ! அதே போல தான் ஹேமர்டோஸ்(Hammertoes) எனும் நிலையும். இது விரல்களின் இயல்பான வடிவம் மாறி வளைந்தும் நெளிந்தும் போவது. புனியன் (Bunion) என்பது பெருவிரலை வளையச் செய்வது ! இவையெல்லாம் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்கள்.

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

தாய்மை நிலையில் இருப்பவர்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அவர்களுடைய உடலில் ஹீல்ஸ் செருப்புகள் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். தடுமாறி விழுந்தாலும் சிக்கல் தானே !

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். ஹீல்ஸ் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். போட்டே ஆகவேண்டுமெனில் அவ்வப்போது போடுங்கள். அதுவும் எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி ஹீல்ஸ் எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன ஹீல்ஸ் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஹை ஹீல்ஸ் போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

ஹை டெக் அழகியாய் அழகாய்த் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் ஹை ஹீல்ஸ் சமாச்சாரம். ஒரு அவசரத்துக்கு ஓடக் கூட முடியாத ஹை ஹீல்ஸ் உங்களுக்கு தேவையா என்பதை யோசியுங்கள். தற்காலிக அழகை விடவும் முக்கியமானது நிரந்தர ஆரோக்கியம் ! சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன், மற்றதெல்லாம் உங்கள் கையில்… சாரி, காலில் ! !

சேவியர்

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு

தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !

செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !

அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.

நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.

இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.

நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.

மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். 

“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.

கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.

வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.

எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.

ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.

ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.

“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.

பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.

பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.

வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.

சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.

சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.

சேவியர்

நன்றி : பெண்ணே நீ

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

முதுகு வலிக்குதா ? இது உதவலாம் !

முன்பெல்லாம் வழுக்கை விழும் பருவத்தில் தான் முதுகு வலி மெல்லமாய் எட்டிப் பார்க்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. அரும்பு மீசை எட்டிப்பார்க்கும் வயதிலேயே முதுகில் வலியும் ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையே அதற்குரிய பெருமையைப் பெற்றுக் கொள்கிறது. முன்பெல்லாம் பனையேறினாலும் தடுமாறாத தலைமுறை நிமிர்ந்து நின்றது. இன்றோ, படியேறினாலே தடுமாறும் தலைமுறையே கண்ணுக்கு முன்னால் நிற்கிறது.

நடக்க விரும்பாத மனநிலையும், உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டு பிடிக்கத் திணறும் அலுவல் சூழலும் வலிகளை முதுகில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது. உலக அளவில் 80 விழுக்காடு மக்களுக்கு வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் முதுகு வலி வந்துவிடுகிறது என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

சரி, இந்த முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்யலாம் ?

  1.  உட்காரும்போதும் நடக்கும் போதும் சரியான நிமிர்ந்த நிலையில் இருந்தால் முதுகு வலியை பெருமளவு தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர். அதிலும் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய அலுவலில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லையேல் முதுகு வலி வெகு நிச்சயம். 

  2. உடற்பயிற்சி கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, வலுவான உடலுக்கும், வலியில்லாத முதுகுக்கும் உத்தரவாதம். நடப்பது, ஓடுவது போன்ற எளிய உடற்பயிற்சிகளும், யோகா போன்றவையும் முதுகு வலியை விரட்டும் நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுங்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 

  3.  தொப்பையை விரட்டுங்கள். தொப்பை முதுகு வலியின் நெருங்கிய நண்பன். உடலில் எடை அதிகரிக்க அதிகரிக்க அது முதுகை அழுத்தி அதிக வலியை முதுகுக்கு வழங்குகிறது. உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே முதுகு வலி கொஞ்சம் அச்சத்துடன் தான் உங்களை நெருங்கும். 

  4. நீச்சல் பழகுங்கள். முதுகு வலியை ஓட ஓட விரட்டும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கும், உடற்பயிற்சியும் நீச்சலே. நீச்சல் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் ஏற்ற மிகச் சிறப்பான உடற்பயிற்சி. 

  5. அருகிலுள்ள இடங்களுக்கும், கடைகளுக்கும் நடந்து செல்ல முனையுங்கள். அல்லது மிதி வண்டி ஓட்டுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்கும். வீட்டில் செல்லப் பிராணி வைத்திருக்கிறீர்களா ? அதனுடன் ஓடியாடி விளையாடுங்கள். அதுவும் உங்களுக்குப் பயனளிக்கும். 

  6. நீண்டநேரம் நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நின்றேயாக வேண்டிய கட்டாயமெனில் சரியான வகையில் நில்லுங்கள். வளைந்து நெளிந்து நின்றால் முதுகு வலி விரைந்தோடி வரும். 

  7. உங்கள் வீடுகளிலுள்ள இருக்கைகள் முதுகுக்கு கேடயமாக இருக்க வேண்டும். அதிக சாய்வாகவோ, முதுகு பக்கமே இல்லாததாகவோ இருந்தால் சிக்கல் தேடி வரும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள். 

  8. இருக்கைகளின் மிக ஓரமாகவோ, மிகவும் உள்வாங்கியோ அமராதீர்கள். கால்களை சரியானபடி தரையில் வையுங்கள். உங்கள் பாதங்களுக்கு இடையே உள்ள தூரம் உங்கள் தோளின் அளவாய் இருப்பதே சிறந்தது. 

  9. அவ்வப்போது உங்கள் முதுகை பின்னோக்கி வளைத்து பயிற்சி செய்யுங்கள். எப்போதும் முன்னோக்கியே வளையும் முதுகுக்கு அது மிகவும் தேவையானது. 

  10. படுக்கை இன்னொரு முக்கியமான விஷயம். மிகவும் அதிக சொகுசு வேண்டும் என நீங்கள் படுக்கைகளைத் தேர்ந்தெடுத்தால் இடுக்கண்ணையும் சேர்ந்தே தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது பொருள். முதுகை நேராகப் பிடிக்கக் கூடிய படுக்கைகளே பாதுகாப்பானவை. படுக்கையை விட்டு எழும்பும் போதும் ஒருக்களித்து கைகளை ஊன்றியே எழும்புங்கள். முதுகை வளைத்து எழும்பாதீர்கள். 

  11. உங்கள் தலையணையைப் பாருங்கள். அளவாய் இருக்கட்டும் உங்கள் தலையணை அதிக உயரமாகவோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தால் முதுகு வலி வரலாம். 

  12. அதிக எடையுள்ள பொருட்களை தூக்கிச் சுமப்பதைத் தவிர்ப்பது முதுகுக்கு நல்லது. எடையுள்ள பொருட்களைத் தூக்கும் போது அமர்ந்த நிலையில், முதுகு நேராக இருக்கும் படி தூக்க வேண்டும். 

  13. புகைப்பதை நிறுத்துங்கள். புகை பிடிப்பதால் உடலிலுள்ள உயிர்வழியின் அளவு குறைகிறது. அது முதுகு வலியையும் தந்து விடும்.

இவை தவிர உடலிலுள்ள குறைபாடுகளின் காரணமாகக் கூட முதுகு வலி வரக் கூடும்.

அதிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலிலுள்ள கால்சியம் குறைபாடு தன் வேலையைக் காட்டி மூட்டு வலிகளுக்கும், முதுகு வலிகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே எல்லா பயிற்சிகளையும் தவறாமல் கடைபிடித்தும் முதுகு வலி வருகிறதே என நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

மல்லுக்கட்டும் பதின் வயது !

 “என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும்  கேட்கறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு ! என்ன பண்றதுன்னே தெரியலை” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலா இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை வீடுகளிலும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதுல பதட்டப்பட ஒண்ணுமே இல்லை. கொஞ்சம் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு களத்துல இறங்கினா உறவுகள் காயப்படும் அபாயம் உண்டு. இந்தப் பதின் வயதுப் பிரச்சினையைக் கையாளணும்ன்னா முதல்ல பெற்றோர் கொஞ்சம் பதின் வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரணும். அதாவது, உங்க மகளோட செயல்களைப் பார்த்து டென்ஷன் ஆகாம, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். அவளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை !

பட்டாம்பூச்சி பார்த்திருப்பீங்க. அது கூட்டுப் புழுவா இருந்து வெளிவரக் கூடிய நிகழ்ச்சியைப் பாருங்கள். ரொம்பவே கஷ்டப்பட்டு, கூட்டை உடைத்து வெளியே வரும். அப்படி வெளியே வந்தபிறகு தான் அது முழுமையான பட்டுப் பூச்சியாய் பரிமளிக்கும். அந்தச் செயல்பாடு கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாற ரொம்பவே அவசியம். நீங்க ஹெல்ப் பண்றேன்னு சொல்லி அந்தக் கூட்டை கொஞ்சம் கிழிச்சு விட்டீங்கன்னா, அந்தப் பட்டுப்பூச்சி காலம் முழுதும் ஊனமாவே இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

பதின் வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனுஷத் தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம். அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான் ! இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்.

மூத்த பிள்ளைகளை விட இளைய பிள்ளைகள் பதின் வயதைத் தொடும்போது எதிர்ப்பு உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறார் எழுத்தாளர் பிராங்க் சுல்லோவி. தன்னுடைய “பார்ன் டு ரிபெல்” எனும் நூலில் அவர் இதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார். “மூத்தவர்களுடைய குளோனிங் வடிவமல்ல நான்” என்பதை பெற்றோருக்கு உரத்துச் சொல்வதும் அதில் ஒரு காரணமாம். !

இனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது. பெற்றோரைக் கிண்டலடிப்பது, அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சகஜம். அதை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.

சுவிட்ச் போட்டால் லைட் எரிவது பொன்ற திடீர் மாற்றமல்ல இது. கொஞ்சம் கொஞ்சமாய் செயல்பாடுகளில் தெரியும் மாற்றம். இதை கொஞ்சம் அறிவியல் ரீதியாக அணுகினால், “பதின் வயதில் ஏற்படும் உடல் மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம்” எனும் கட்டத்துக்குள் அடக்கி விடலாம். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுடைய மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்களைக் கொண்டு வரும். உடல் வளர்ச்சி மாற்றங்கள், அச்சத்தையோ, தயக்கத்தையோ அல்லது அதற்கு நேர் எதிரான தைரியம் மற்றும் தன்னம்பிக்கையையோ கொண்டு வரும் என்கிறது உளவியல்.

பதின் வயது மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள் ? அது தப்பு. அப்போது தான் பிறரைச் சார்ந்து இருக்கும் மனநிலையே அவர்களுக்குள் வலுப்படுகிறது. பிறர் என்ன நினைக்கிறார்கள், பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள், தன்னைப் பற்றிய பிறருடைய கணிப்பு என்ன போன்றவையெல்லாம் அப்போது அவர்களுக்கு ரொம்ப முக்கியமாய்த் தோன்றுகிறது. இதனால் தான் மற்ற டீன் ஏஜ் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை அளவிடுகின்றனர்.

குறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம். அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் பேஷன் டிரஸ் தேவைப்படும். பன்னிரண்டு வயது வரை பவுடர் கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் தேவைப்படும் !

அதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள்.  இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலார்கள்.

எதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும். உடல் தரும் வளர்ச்சியும், அது தரும்  கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள். 

பதின் வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பதின் வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார். அவருடைய பார்வையில் பதின் வயது “மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்” போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார். அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை.

பதின் வயதினரைக் கையாளும் எளிய வழி, பதின் வயதினரை பதின் வயதினராய் நடத்துவது தான். அவர்களை சின்னப் பிள்ளைகளாக நினைக்காமல் இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அவர்களிடமும் ஒரு வார்த்தை கேளுங்கள் ! தன்னை பெரிய ஆளாய் மதிக்கிறார்கள் என்பதே அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு தரப்படும் டானிக் தான்.

பதின் வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.

நாடின் காஸ்லோ எனும் அமெரிக்க மனநல மருத்துவர் சொல்லும் கருத்து சுவாரஸ்யமானது. “உலகிலுள்ள எல்லா பெற்றோரும் தங்கள் பதின் வயது மகள் தங்களை வெறுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோரை வெறுப்பதே இல்லை. அவள் ஒரு பதட்டமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரும் தன்னோடு இணைந்து அந்தக் காலகட்டத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறாள்” என்கிறார் அவர்.

இந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும். தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது.

எந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள். “கல்யாணி கூட சேராதே’ என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள். தப்பான செயல்களில் ஈடுபடுத்தமாட்டாள் போன்ற செயல்பாட்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின் வயது மகள் புரிந்து கொள்வாள் !

இந்த பதின்வயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு என்கிறார் டாக்டர் கார்ல் பிக்கார்ட். 9 முதல் 13 வயது வரை, 13 முதல் 15 வயது வரை, 15 முதல் 19 வயது வரை என மூன்று படிகளாக பதின் வயதைப் பிரிக்கிறார் அவர். முதல் நிலையில் “நாங்கள் குழந்தைகள் அல்ல” என்பதை நிறுவுவதும், இரண்டாம் நிலையில் “தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே” பிரதானமான செயல்கள். மூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின் வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.

எல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பதின் வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விஷயங்களை அனுமதிக்கலாம். குறிப்பாக உங்கள் மகள் தலைமுடிக்கு கலர் அடிக்க விரும்புகிறாள் என வைத்துக் கொள்ளுங்கள் அதை அனுமதிப்பதால் அவளுடைய நடத்தை மாறிவிடப் போவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அதை விட முக்கியமான இணையப் பயன்பாட்டை வகைப்படுத்துவது நல்லது !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள்.  இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

அதற்காக அறிவுரை மூட்டையை அவிழ்க்காதீர்கள். டீன் ஏஜுக்கு அலர்ஜியான விஷயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாய்க் கூட இருக்கலாம். எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் அவளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும்.

இந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது !

சேவியர்.

நன்றி பெண்ணே நீ

பிடித்திருந்தால் வாக்களிக்கவும்