விரல் நுனியில் விரசம்…

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ? புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது. பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள். அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது. இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும். இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்

சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது. ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம்.

பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம். சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம். விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !

பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து. செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாடவேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.

“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம். இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான். பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !. இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி. ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?

கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது. நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

0

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

o

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது. ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

o

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு. இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

o

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

0

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

தாய்க்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் : குழந்தைக்கு ரொம்ப நல்லது !

Pablo-Picasso-Mother-And-Child-25656காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, ஒரே தலை சுற்றல் வாந்தி மயக்கம் என “மார்னிங் சிக்னெஸ்” குறித்துப் புலம்பும் தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு உற்சாக டானிக்காக வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

தாய்மைக் காலத்தின் முதல் பாகத்தில் இத்தகைய அசௌகரியங்களைச் சந்திக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிக அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கிறது இந்த ஆராய்ச்சி.

தலை சுற்றல், வாந்தி , மயக்கம் எல்லாமே ஆரோக்கியமான தாய்மையின் அடையாளங்கள் எனவும், இத்தகைய அறிகுறிகள் காணப்படும் பெண்களின் குழந்தைகள் இதயம் தொடர்பான நோய்கள் வருவதிலிருந்து தப்புகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கூடவே இப்படிப்பட்ட சிக்கல்கள் அன்னைக்கு இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் பெருமளவில் குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

121 தாய்மார்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு குழந்தைகளுடைய மூன்றாவது வயது மற்றும் ஏழாவது வயதில் சோதனைகளை நடத்தியது. இதில் தாய்மைக்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்த தாய்மார்களின் குழந்தைகளை விட தாய்மைக்காலத்தில் கஷ்டப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் படு சுட்டிகளாக இருந்தார்களாம்.

சரளமாகப் பேசுவது, சிறு சிறு கணிதங்களைச் செய்வது என நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தாய்மைக் காலத்தில் நிகழும் ஹார்மோன் வெளியேற்றமே இந்த “மார்னிங் சிக்னெஸ்” எனப்படும் சிக்கல்களுக்குக் காரணம் எனவும், இது கருவையும், கருப்பையையும் பாதுகாக்கும் நிகழ்வு எனவும் மருத்துவ விளக்கம் அளிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தாய்மைக் காலத்தில் சிக்கல்களைத் தாங்க வேண்டிய தாய்மார்களுக்கு இந்த தகவல் மிகவும் உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

வாந்தி, மயக்கம் வரும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவாற்றல் விருத்தியடைகிறது என நினைத்து அன்னையர்  இனிமேல் மகிழ்ச்சி அடைவார்களாக.

புகைத்தலை விடுதல் நல்லது, ஆனால்…

 smoke1நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அந்த பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தப் பழக்கத்தை விட்டு வெளியே வர விரும்புபவர்களை திசைதிருப்பி வேறு பழக்கத்துக்குள் அமிழ்த்த வியாபார உலகம் கண்விழித்துக் காத்துக் கிடக்கிறது.

அந்த மாற்று வழிகளில் சில எலக்ட்ரானிக் சிகரெட், நிக்கோட்டின் சூயிங்கம் போன்றவை. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கலந்த இந்த பொருட்கள் புகைத்தலின் இன்பத்தைத் தரும். ஆனால் சிகரெட்டில் உள்ள பல நூற்றுக் கணக்கான தார் போன்ற விஷத்தன்மையுடைய பொருட்கள் இவற்றில் இருப்பதில்லை.

எனவே இத்தகைய பொருட்கள் சற்றும் ஆபத்தற்றவை என பொதுப்படையாய் விளம்பரம் செய்யப்படுகின்றன. அதிலும் கணினி நிறுவனங்களின் வாசல்களில் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கான விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.

ஆனால் இத்தகைய விளம்பரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதுடன், இத்தகைய புகைக்கான மாற்றுப் பொருட்களின் சிக்கலையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது தற்போதைய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

புகைக்குப் பதிலாக நிக்கோட்டின் சூயிங்கம் பயன்படுத்தினால் அவர்களுக்கு வாய்ப்  புற்று நோய் வரும் வாய்ப்பு வெகுவாக அதிகரிக்கிறது என எச்சரிக்கை செய்கிறது இந்த ஆராய்ச்சி.

நிக்கோட்டின் புற்றுநோயை வருவிக்கலாம் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி வெளியாகியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

புகை பிடிப்பதிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப நிக்கோட்டின் சார்ந்த பிற பொருட்களை நாடாமல் இருப்பதே ஆரோக்கியமானது!

சீரியஸா ஒரு சிரிப்பு சமாச்சாரம் !

 

தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள் என்கிறது ஆனந்தமூட்டும் புதிய ஆராய்ச்சி முடிவு ஒன்று.

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் எனும் செய்தியுடன் கூடவே, சிரிப்பு குழந்தைகளுக்கு தரும் “டானிக்” போன்றது எனவும் இந்த ஆராய்ச்சி சிரிப்பைக் குறித்து விவரித்து வியக்க வைக்கிறது.hero__3_1

தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைகின்றனவாம், இதனால் உடல் ஆரோக்கியமடைகிறது என்கின்றனர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையையும் அவர்கள் சொல்லித் தருகின்றனர்.

மன அழுத்தம், நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்தம் போன்ற சிக்கல்கள் உள்ள பலருக்கு “தினம் அரை மணி நேரம் சிரிப்பு” என சோதனை நடத்தியதில் அவர்களுடைய உடலில் இருந்த அழுத்தம் தரக்கூடிய மூலக்கூறுகள் படிப்படியாகக் குறைந்து உடல் மிகவும் ஆரோக்கியமானதாக மாறிவிட்டதாம்.

சிரிக்கும் போதும், ஆனந்தமாய் உணரும் போதும் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களே இந்த மாற்றத்துக்கான விதைகளைத் தூவுகின்றன. குறிப்பாக மகிழ்ச்சியளிக்கும் எண்டோர்பின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் பெர்க்.

மனம் விட்டுச் சத்தமாய் சிரிப்பது உடலிலுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியையும் தருகிறது என்பது சிறப்பம்சமாகும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றனவாம்.

அதே நேரத்தில் மிக அழுத்தமான அழுகாச்சிப் படங்களைப் பார்க்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலுக்குத் தீமைகளை விளைவிக்கின்றனவாம். அப்படிப் பட்ட படங்களைப் பார்க்கும் போது இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பெருமளவு குறைவது இதன் ஒரு காரணம் என்கின்றார் மருத்துவர் பெர்க்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமா, தினம் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் பாருங்கள் என்கிறார் மெரிலண்ட் ஆராய்ச்சிக் கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் மில்லர்.

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

புரோகோலி புசியுங்கள்

broccoli 

புரோகோலி தெரியுமா ? பரவலாக பலரும் பயன்படுத்தாத இந்த காய்கறிக்கு வயிற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு தளிர் புரோகோலியைச் சாப்பிட்டு வந்தால் உடலில் என்சைம்கள் அதிகமாய் சுரந்து அவை வயிற்றில் கான்சர் வரும் வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது என்பதே இவர்களுடைய புதிய ஆராய்ச்சி முடிவாகும்.

ஜப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் சுருங்கிய விளக்கம் வேண்டுமெனில் , “புரோகோலியில் உள்ள பயோ கெமிக்கல் பொருளான சல்ஃபோரோபேன் தான் இந்த பாதுகாப்புப் போரைப் புரிகிறது” எனச் சொல்லலாம்.

புரோகோலியை தினமும் உண்பது உடலிலுள்ள வாயு தொல்லைகளுக்கான நிரந்தரத் தீர்வாகி விடுகிறது. கூடவே வயிற்றில் கான்சர் வராமல் தடுக்கும் மாபெரும் பணியையும் செய்கிறது என்கிறார் ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெட் பாகே.

புரோகோலியில் வைட்டமின் A, வைட்டமின் C, ஃபோலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது உடல் நலத்துக்கு மிகவும் பயனளிப்பது. குறிப்பாக உடலின் குருதி அழுத்தத்தை இது கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C, தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது. கண்ணில் பூவிழுதல் (காட்டராக்) தொல்லையிலிருந்து கண்ணைக் காப்பாற்றவும் இந்த புரோகோலி துணை செய்கிறது.

இதிலுள்ள ஃபோலிக் அமிலம் தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். கூடவே வயதான பெண்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புச் சிதைவு நோயிலிருந்தும் புரோகோலி பாதுகாக்கிறது.

அல்ஸீமர், நீரிழிவு, இதய நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காப்பாற்றும் சக்தி இந்த புரோகோலிக்கு உண்டு ! இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமை கூட உண்டு என்பது கூடுதல் தகவல்.

இன்னும் என்ன தயக்கம், புரோகோலி புசிக்க ஆரம்பிக்கலாமே !

0

தூக்கமே வரலையா ?

 sleep

தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் தொடர்புண்டு என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் தூக்கத்துக்கும் தற்கொலைக்கும் கூட தொடர்பு உண்டு என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

“படுத்தால் தூக்கம் வர ரொம்ப நேரமாகிறது, தூக்கம் வந்தாலும் நிம்மதியான தூக்கமா இருப்பதில்லை, அதிகாலை மூணு மணிக்கு முழிச்சா அப்புறம் தூக்கமே வரதில்லை….” என புலம்பும் மக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எனும் உந்துதலுக்கு ஆளாவார்கள் என எச்சரிக்கின்றது இந்த ஆய்வு.

ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 88 இலட்சம் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். ஒவ்வோர் தற்கொலைக்குப் பின்னாலும் பல தற்கொலை முயற்சிகள் இருக்கின்றன. ஒரே முயற்சியில் பெரும்பாலும் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை.

ஒவ்வோர் சாவுக்குப் பின்னாலும் நாற்பது முறை கூட “தற்கொலை முயற்சிகள்” நடந்திருக்கின்றனவாம். இப்படிப்பட்ட தற்கொலை முயற்சிகளுக்கு இந்த தூக்கமின்மையும் ஒரு முக்கியமான காரணமாகிவிடுகிறது.

சரியான தூக்கமின்மை பல்வேறு காரணங்களால் வருகிறது. மன அழுத்தம், உடல் நலமின்மை தொடங்கிய பல்வேறு காரணங்களால் வரும் தூக்கமின்மை தெளிவற்ற மனநிலைக்கு மனிதனைத் தள்ளி, தற்கொலை சிந்தனையைத் தூண்டி விடுகிறது என்பதே மருத்துவர்களின் கூற்று.

இதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பது தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் தற்கொலை சிந்தனைக்கும், தூக்கமின்மைக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீரோடோனின் எனும் வேதியல் பொருள் தான் மனதின் தன்மையை நிர்ணயிக்கிறது, அந்த வேதியல் பொருளின் நிலையற்ற தன்மைக்கு இந்த தூக்கமின்மை ஒரு முக்கியக் காரணமாகிவிடுகிறது. எனவே தான் இந்த தற்கொலை சிந்தனைகள் தலை தூக்குகின்றன என்கிறார் மருத்துவர் டானியல் பிரீமென்.

எனினும், தூக்கமின்மையில் தவிக்கும் எல்லோருக்குமே தற்கொலை சிந்தனைகள் வரவேண்டுமென்பதில்லை. உலகெங்கும் தற்கொலை சிந்தனை கொண்டவர்களை விட தூக்கமின்மையால் தவிக்கும் மக்கள் மிக அதிகம் என்பது கவனிக்கத் தக்கது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தூக்கம் மிகவும் இன்றியமையாயது என தொடர்ச்சியாய் ஆய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நிம்மதியான தூக்கத்துக்கு நேரம் ஒதுக்குவதும், அதற்காக மனதை இலகுவாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவேண்டும் என்பதும் கவனிக்கவேண்டிய செய்திகளாகும்.

“வாக்கிங்” போற பார்ட்டியா நீங்க ?

walkingஉடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.

அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை.

உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.

அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள்.

எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது.

இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியர் கேரி டோனோவன்.

தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

எனவே, அறைகளுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து நடங்கள்.

கவனம் தேவை, நிமிடத்துக்கு நூறு அடிகள் !

இது, மீன் சமாச்சாரம் !

 fish_cartoon08

மீன் அசைவம் என சிலர் ஒதுக்க, அசைவப் பிரியர்களிலும் பலர் மீன் ‘கடல் உணவு’ என கைகழுவ, மீன் உணவு என்பது வெறும் சுவை தொடர்பானது அல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் வல்லமையும் அதற்கு உண்டு என கூற வந்திருக்கிறது ஆராய்ச்சி முடிவு ஒன்று.

அதாவது வாரம் ஒருமுறைக்கு மேலாக மீன் உணவு உண்பது பதின் வயது பருவத்தினருடைய மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதாம். கவனிக்கவும், ஒருமுறைக்கு மேல் உண்பதே பலனளிக்கிறது.

பதின் வயது பகுதியின் இரண்டாவது பகுதி, மூளையில் பெருமளவு மாற்றங்கள் நிகழும் பகுதி. ஆங்கிலத்தில் இதை பிளாஸ்டிசிடி என அழைக்கிறார்கள்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் பதின் வயதினருடைய திறமை எப்படி இருக்கும், அவர்களுடைய உணர்வு ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையெல்லாம் மூளை முடிவு செய்கிறது.

இந்தக் காலகட்டத்தில், அதாவது 15 வயதுக்கு மேல் மீன் உணவை வாரம் ஒரு முறையை விட அதிகமாய் உண்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு பெருமளவில் உதவுகிறதாம்.

ஸ்வீடனின் நிகழ்த்தப்பட்ட விரிவான இந்த ஆய்வு சுமார் 5000 பேரை வைத்து நிகழ்த்தப்பட்டது. இதில் மீன் உணவு உண்டவர்களின் திறன் வெகுவாக உயர்ந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பதின் வயதினருடைய அறிவு, புதிதாய் எதையேனும் கற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் இவையெல்லாம் மீன் உணவினால் மெருகேறுகிறதாம்.

அதிலும் குறிப்பாக ஒமேகா – 3 நிரம்பியுள்ள மீன்களை உண்பது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்

smoke3

சமூக நலனில் அக்கறை கொண்ட சில அரசியல் தலைவர்களும், நலவாழ்வு நிலை பெறவேண்டுமெனும் வேட்கை கொண்ட நல்லவர்களும் போராடிப் போராடி புகையற்ற வாழ்வுக்கான ஒரு வாசலைத் திறந்து வைக்கும் போது வந்திருக்கிறது எலக்ட்ரானிக் சிகரெட்.

பெரும்பாலும் கணினி மென்பொருள் நிறுவனங்களைக் குறிவைத்து இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. ( பாவம் ஐ.டி யோட தற்போதைய நிலை தெரியாது போல )

எரியாது ஆனால் புகை வரும்
நிக்கோட்டின் மட்டுமே உண்டு, அதுவும் உங்களுக்குத் தேவையான அடர்த்தியில் என்றெல்லாம் கூவிக் கூவி பிரச்சாரம் செய்து, கூடவே கலர்புள் விளம்பர கையடக்கப் பிரதிகளையும் கொடுக்கிறார்கள்.

எங்கள் அலுவலகத்துக்கு முன்பு கடை விரித்திருந்த மூன்று பேரை அணுனேன்.

எப்படி இழுக்கவேண்டும், எப்படி காட்ரிஜ் மாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்முறை விளக்கம் செய்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டேன்.

smoke2“என்னங்க இது…”

“இது எலக்ட்ரானிக் சிகரெட் … நவீனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு… உடலுக்கு கெடுதல் இல்லாத சிகரெட் இது..”

“ஓ.. கெடுதல் இல்லையா ? அப்போ நிகோட்டினே இல்லையா ?” இது நான்.

“ம்..வந்து… நிகோடின் இருக்கு. ஆனா நிகோடின் தீமைன்னும் எந்த அறிக்கையும் சொல்லலையே…” விற்பனைப் பெண் இழுத்தார்.

அடப்பாவிகளா ? முழுப்பூசணிக்கா சோத்துல மறையாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே ஒரு பூசணித் தோட்டமே சோத்துக்குள்ள மறையுதே… என்று மனம் திடுக்கிட்டது

“என்னங்க இப்படி சொல்றீங்க ? ஒரு சிகரெட்ல இருக்கிற நிகோடினை மனுஷனோட இரத்தக் குழாயில செலுத்தினா அவன் உடனே செத்துடுவான்.. தெரியாதா உங்களுக்கு” என்றேன்.

“ஐ..மீன்…. சாதா சிகரெட்ல நிகோடினோட சேர்த்து வேறையும் நிறைய தீமைகள் இருக்கு.. இதுல அதெல்லாம் இல்லை…” இழுத்தார்கள் விற்பனையாளர்கள்.

“இதுல சயனைட் மட்டும் இருக்கு, மத்ததுல சலனைடும் பூச்சி மருந்தும் இருக்குன்னு சொல்றமாதிரி இருக்கு நீங்க சொல்றது.. .. “ என்றேன்

அதற்குள் கொஞ்சம் கூட்டம் கூடிவிட விற்பனையாளர்கள் என்னை எப்படியும் விரட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் ஒன்று சேர்ந்தார்கள்.

“நீங்க குடிக்கிற காஃபில கூட நிகோடின் இருக்கு தெரியுமா…” விற்பனை பெண் கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

“இருக்கு… ஆனா அதுல இருக்கிற அளவு எவ்வளவு எம்.ஜி தெரியுமா ?” நானும் விடவில்லை.

“சார்… விருப்பம் இருந்தா வாங்குங்க சார்… இல்லேன்னா விட்டுடுங்க.. நாங்க யாரையும் கம்பல் பண்ணல..” ஜகா வாங்கியது சிகரெட் கிளிகள்.smoke1

“நான் உங்களைச் சொல்லலீங்க.. அதோ பாருங்க, சிகரெட் புடிக்கக் கூடாதுன்னு போர்ட் போட்டிருக்கு, அதுக்கு பத்தடி தூரத்துல நீங்க சிகரெட் விக்கறீங்க.. நியாயமா ?” என்றேன்.
அதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு சிகரெட் பிரியர்

“இது எவ்ளோ ஆகுதுங்க ?” என்றார்

“நாலு சிகரெட் நானூறு ரூபா… ஒவ்வொரு சிகரெட்டும் பத்து சாதா சிகரெட்டுக்கு சமம்’ விற்பனையாளர் என்னை விட்டு அங்கே தாவினார்.

“ஓ… நானூறு ரூபாய்க்கு நான் 100 வில்ஸ் வாங்கி அடிப்பேன்” சொல்லிச் சென்றார் அவர்.  ஐடியில் எப்போ வேலை போகுமோ எனும் கவலையில் இருந்தவர் அவர் !.

“அதெல்லாம் ஹெல்த்தியானது இல்லை. அன்கெல்தி தான் குடிப்பீங்கன்னா குடிங்க…” என்றார் விற்பனையாள பெண் அவரை நோக்கி.

“என்னங்க.. நீங்க ஏதோ ஆப்பிள் ஜூஸ் விக்கற மாதிரி பேசறீங்க.. இதுவும் அன் கெல்தி தான்… “ என்றேன்.

கூட்டம் சலசலவென சிரிக்க, விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் இந்த சனியன் ஒழிந்தபிறகு வரலாம் கடை கட்டலாம் எனும் முடிவோடு நடையைக் கட்டினர்.

ஐயா அன்புமணி, சிகரெட்டுக்கு தடை என்றால் அது எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கும் பொருந்தும் என்று ஒரு தடவை சொல்லிடுங்க.

பின் குறிப்பு : புகைப்படத்தில் இருக்கும் நண்பர் என்னுடைய விண்ணப்பத்தின் பேரில் ஒரு போஸ் குடுக்கிறார் அவ்வளவே. மற்றபடி அவருக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை.