ஏமாற்றும் காதலனா ?

kvr3

“அவன் இப்படிச் செய்வான்னு கொஞ்சம் கூட நினைச்சே பாக்கலடி” ர‌ம்யாவின் விசும்பல் பிரியாவையும் கலங்க வைத்தது.

கடந்த ஒரு வாரமா இந்தப் புலம்பல் தான். ர‌ம்யாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் பிரியா ரொம்பவே குழம்பிப் போனாள். இருக்காதா பின்னே ? அவன் செய்த காரியம் அப்படி !

அந்த அவன் மிஸ்டர். விஜ‌ய் ! விஜ‌யும், ர‌ம்யாவும் உயிருக்கு உயிராய் பழகினார்கள். அதிலும் ர‌ம்யாவுக்கு விஜ‌ய் தான் எல்லாமே. விஜ‌ய் இல்லாத ஒரு வாழ்க்கையையெல்லாம் அவள் நெனச்சுக் கூட பாத்ததில்லை. நின்னா, பேசினா, சாப்பிட்டா என எப்பவுமே புராணம் தான். அப்படி இறுக்கமாய் இருந்த ர‌ம்யா-விஜ‌ய் காதலில் கொஞ்ச நாளாகவே சின்னச் சின்ன விரிசல்கள். காரணம் விஜ‌யின் வாழ்க்கையில் புதிதாய் நுழைந்திருந்த பெண். சுடர் !

இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வனப்புடன் வந்த சுடருக்கு நெடுநெடுவென வளர்ந்திருந்த விஜ‌யின் மீது ஒரு சபலம். உரசல்களில் பற்றிக் கொண்டான் விஜ‌ய். விஜ‌ய்க்கு ர‌ம்யாவின் அன்பையும் மீறி சுடரின் மேனியின் மீது மோகம் முளை விட்டது. அடிக்கடி இருவரும் தனியே சந்தித்துக் கொள்வதெல்லாம் சகஜமாய் இருந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கடுகளவு கூட ர‌ம்யா சந்தேகப் பட்டதே இல்லை. கடந்த வாரம் விஜ‌யின் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதம் தான் அவளைப் புரட்டிப் போட்டது. நான்கைந்து டன் மலையை தலையில் போட்டதுபோல இருந்தது அந்த மெல்லிய காகிதம்.

சுடர் தான் காதலை காகிதத்தில் பொழிந்திருந்தாள். “ஓனி மோனிக் கண்ணா” என்றெல்லாம் அவள் எழுதியிருந்த கடிதம் ஏதோ சுடரும் விஜ‌யும் நான்கு ஜென்மமாகக் காதலித்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. போதாக்குறைக்கு சமீபகாலமாக நடந்த அவர்களுடைய காதல் சில்மிஷங்களையெல்லாம் வேறு கடிதத்தில் கிறுக்கியிருக்க ர‌ம்யாவுக்கு வாழ்க்கையே இருட்டியது.

“விட்டுருடி.. கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்படு. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி அடுத்தவ வாலைப் புடிச்சு சுத்தியிருந்தான்னா என்ன பண்றது?” பிரியாவின் நிஜமான அக்கறையைக் கேட்கும் நிலையில் ர‌ம்யா இல்லை.

“விஜ‌ய் கூட ஏமாற்றுவானா ? பச்சைப் புள்ளை மாதிரி இருப்பானே ! அப்போ இவ்ளோ நாள் பொழிஞ்ச அன்பெல்லாம் சும்மாவா ? என்னை விட அவ இப்போ அவனுக்கு பெட்டரா தெரியுதா ? “   ர‌ம்யாவின் மனதில் கேள்விகளுக்குப் பதிலாய் கேள்விகளே முளைத்தன.

பிரியாவும் ர‌ம்யாவும் நீண்டகால தோழிகள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு தோழிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய தோழிகள். பிரியா கொஞ்சம் ஸ்மார்ட் பேர்வழி. அவளே இந்த இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ரொம்பவே திணறிவிட்டாள்.

வாரம் ஒன்று ஓடியது.

ர‌ம்யாவிடம் கடந்த வாரத்தில் இருந்த படபடப்பும், வெறுப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது. எதிரே நீளமாய், நீலமாய் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பேச ஆரம்பித்தாள் பிரியா.

“ர‌ம்யா…. விஜ‌ய் பத்தி நீ என்ன நினைக்கிறே ?”

“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ? லாஸ்ட் ஒன் வீக் நான் அவன் கூட பேசலை. அவன் கூட பேசாம ஒரு வாரம் இருக்கிறது இதான் பஸ்ட் டைம். எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

“வெரி குட்… இத பாரு… உன்னோட வெல் விஷரா சொல்றேன். இனிமே இந்த விஜ‌ய் உனக்கு வேண்டாம்..”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… பட்…”

“என்ன இழுக்கறே…”

“இல்லே… பழைய விஷயங்களையெல்லாம் நினைக்கும்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஸீ… கஷ்டப்படவேண்டியது அவன். நீயில்லை. நீ எந்தத் தப்பும் பண்ணல. அதனால தான் சொல்றேன். இனி அவனோட உன் வாழ்க்கை சந்தோசமா இருக்காது” பிரியா சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னோட நம்பிக்கையை அவன் எப்போ உடைச்சானோ அந்த வினாடியே இந்த பந்தம் முடிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிபட்டுட்டான். அதனால தான் உன் கிட்டே ஒரு விளக்கம் சொல்லக் கூட ஆளைக் காணோம். இப்போதைக்கு சுடரோட பிடியில அவன் கிடக்கட்டும். பட், என்னிக்காவது அவன் ரியலைஸ் பண்ணுவான்.

பஸ்ட் ஆஃப் ஆல், நீ இந்த முடிவை மிக மிகத் தெளிவா எடுத்தே ஆகணும். நோ மோர் விஜ‌ய் இன் யுவர் லைஃப். இது தான் ரொம்ப முக்கியம். இந்த முடிவைப் பொறுத்து தான் உன்னோட அடுத்தடுத்த முன்னேற்றமே இருக்கும். சோ, மறுபடியும் சொல்றேன். அவன் வேண்டாம்ங்கற முடிவை கல்வெட்டு மாதிரி மனசுல எழுதிக்கோ.

இந்த விஷயம் இதோட முடிஞ்சு போகாது. என்னிக்கு அவனுக்கு சுடர் சுடுதோ அல்லது போரடிக்குதோ உடனே உன்னைத் தேடுவான். உன்னோட அருமை அவனுக்கு அப்போ தான் தெரியும். இல்லேன்னா, உன்னோட தேவை அவனுக்கு அப்போ வரும். மே பி, அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான். ரொம்ப செண்டிமெண்டா பேசி குழப்பப் பாப்பான். இல்லேன்னா பழைய எவிடன்ஸ் எதையாச்சும் வெச்சு மிரட்டப் பாப்பான். அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நீ வேற யாரையாச்சும் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அவன் சைக்கோத் தனமா கூட செயல்படக் சேன்ஸ் இருக்கு. நான் உன்னை பயப்படுத்தறதுக்காக சொல்லல, தட்ஸ் லைஃப் !

பிரியா சொல்லச் சொல்ல ர‌ம்யாவுக்கு பயமும், குழப்பமும் ஒருசேர வந்து தொற்றிக் கொண்டது. “கை ரேகை பாக்கறீங்களாம்மா” என்று நெருங்கிய பாட்டியை நிராகரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் பிரியா. ர‌ம்யா மணலில் கிறுக்கத் தொடங்கினாள்.

ஒருவேளை அவன் போன் பண்ணினா நல்லது. இல்லேன்னா நீயே ஒரு போன் பண்ணி, “சாரி.. இனிமே நமக்குள்ள எந்த விதமான உறவும் கிடையாது” ன்னு தெளிவா சொல்லிடு. உன்னோட குரல்ல ஏமாற்றம், அழுகைம், ஏக்கம், கோபம் ன்னு எதுவும் காட்டாதே. ரொம்ப நார்மலா பேசு. நீ என்ன மனநிலைல பேசறேன்னு அவனுக்கு தெரியக் கூடாது. பட், நீ இனிமே அவனை லவ் பண்ணப் போறதில்லேங்கற மெசேஜ் அவனுக்குப் போய் சேரணும் அது முக்கியம். காரணம் கேட்டான்னா, சுடரோட “கொஞ்சல் லெட்டர்” மேட்டரை கிளியரா சொல்லிடு.

நிறைய பேர் பண்ற ஒரு பெரிய தப்பு என்னண்ணா, “சரி, லவ் தான் பண்ணலே.. ஃபைன்… பிரண்ட்ஸா இருப்போமே ?” ன்னு ஒரு படி இறங்கிடறது தான். இந்த விஷயத்துல ஆம்பளைங்க ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. தேவையில்லாம உன்னோட டென்ஷனும், மன அழுத்தமும் அதிகமாகும். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு தடவை சின்சியரா லவ் பண்ணின ஒருத்தனை ஒரு நல்ல நண்பனா உன்னால பாக்கவே முடியாது. உன்னால என்ன, யாராலயுமே பாக்க முடியாது. இது தான் உண்மை ! மற்ற டயலாக்ஸ் எல்லாமே வெறும் சால்ஜாப்பு தான்.

உன்னைப் பாக்கணும், உன் கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னு இறங்கி வந்தான்னா அவாய்ட் பண்ணு. “இப்போ முடியாது வேணும்ன்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணுவோமே” ன்னு சொல்லு. சந்திக்கிறது ரொம்ப டேஞ்சர். உன்னோட உறுதி உடையவும் கூடாது, உன் வாழ்க்கை சிதையவும் கூடாது. சோ, அவனைப் பாக்கறதை அவாய்ட் பண்ணியே ஆகணும்.

அவனை ஞாபகப் படுத்தற பொருள் எதையும் வீட்லயோ, கையிலயோ வெச்சுக்காதே. அவனோட லவ் லெட்டர்ஸை எல்லாம் கிழிச்சுப் போடு. போட்டோ கீட்டோ ஏதாச்சும் இருந்தா எரிச்சுப் போடு. அவன் தந்த கிஃப்ட் ஏதாச்சும் இருந்தா ஒண்ணு அவன் கிட்டேயே குடுத்துடு. இல்லேன்னா டிஸ்போஸ் பண்ணிடு. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவனை ஞாபகப் படுத்தும். இது ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கு எவ்வளவு அவனோட நினைவையும், அவனை ஞாபகப் படுத்தற பொருட்களையும் விட்டு தூரமா போறியோ அந்த அளவுக்கு நீ சீக்கிரமா நார்மல் ஆயிடுவே. இது தான் நிறைய கவுன்சிலிங்ல சொல்ற பாலபாடம்.

அதே போல அவனோட பேவரிட் பிளேஸஸ், ஹோட்டல்ஸ், அவனோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு அவாய்ட் பண்ணு. அவனோட பிரண்ட்ஸ் மூலமா அவனுக்கு தேவையில்லாத இன்பர்மேஷன் போறதுக்கு அது காரணமாயிடும். அவனை நேரில பாக்க வேண்டிய சேன்ஸ் கூட வந்துடும். தட்ஸ் நாட் குட். உன்னோட மனசும் ரொம்ப காயப்படும். சோ, அதையெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணு.

அவனோட எஸ்.எம்.எஸ், இ-மெயில் எதுக்குமே நீ ரிப்ளை பண்ணாதே. அது கெஞ்சலா இருக்கலாம், கொஞ்சலா இருக்கலாம், மிரட்டலா இருக்கலாம். நீ அதை வாசித்தது போலவே காட்டிக்க வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் ! அவ்ளோ தான். அவனுக்கு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு வரி அனுப்பத் தோணும், பட்.. வேண்டாம். சொல்லாம இருக்கிற வார்த்தைக்குத் தான் மரியாதை அதிகம். வலிமையும் அதிகம் ! சோ, ஜஸ்ட் இக்னோர் !

இந்த பிரிவை ஒரு துக்கம் மாதிரி அனுசரிக்காதே. ஒரு புதிய தொடக்கம் மாதிரி கொண்டாடு. தேவையில்லாம ரொமாண்டிக் சாங் கேக்கறது. குப்புறப் படுத்து சொகப் பாட்டு கேக்கறது. புலம்பறது. அவன் இல்லேன்னா லைஃப்பே இல்லேன்னு பெனாத்தறது எல்லாமே சுத்த வேஸ்ட். நல்ல எனர்ஜட்டிக் விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தணும். அது தான் ரொம்ப முக்கியம்.

ஏதாச்சும் இருந்தா என் கிட்டே கொட்டு. சும்மா மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்காதே. தேவையில்லாம மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டுப் பூட்டினா இல்லாத நோயெல்லாம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு ஜாலியா இருக்கப் பாரு. உனக்குப் பிடிச்ச விஷயங்களை நிறைய செய். படம் பாரு. டூர் போ. பிரண்ட்ஸைப் போய் பாரு. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. விஜ‌யை வெறுப்பேத்தணும்ன்னு நினைச்சு எதையும் செய்யாதே. அது நீ அவனை மறக்கலேங்கறதுக்கு அடையாளம். சோ, எதைச் செஞ்சாலும் உனக்காக, உன் சந்தோசத்துக்காக செய் !

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நாளைக்கு அவன் வீட்டுக்கு வந்து கெஞ்சினான், மன்னிச்சுடுன்னு சொன்னான், தப்பு பண்ணிட்டேன்னு அழுதான்னு சொல்லிட்டு வராதே. அடிச்சே கொன்னுடுவேன். ஸ்டாப் ஈஸ் ஸ்டாப் ! அவ்ளோ தான். புல் ஸ்டாப் போட்டதை மாத்தாதே. இன்னிக்கு சுடரைத் தேடி போனவன், நாளைக்கு இன்னொரு பொண்ணைத் தேடிப் போகமாட்டான்னு என்ன நிச்சயம் ?

ஒருவேளை உனக்குள்ள ரொம்ப ஆத்திரம் இருந்தா, நீ ஒருதடவை விஜ‌யைப் பார்த்து பேசிடு. பட், பேசும்போ “இது தான் லாஸ்ட் டைம். இனிமே பேச மாட்டேன். நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நினைச்சுப் பாக்கலேன்னு” பேசலாம் தப்பில்லை. இது உன்னோட சாய்ஸ். அவன்கிட்டே நேரடியா பேசி இந்த ரிலேஷனை முடிக்கணும்ன்னு உனக்கு கட்டாயமா தோணினா மட்டும் இதைப் பண்ணு.

டைம் ஈஸ் த பெஸ்ட் ஹீலர் ன்னு சொல்லுவாங்க. அது இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப உண்மை. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கொ. அது தான் உண்மையும் கூட ! உன்னோட எமோஷன்ஸ், கோபம், எரிச்சல் எல்லாத்தையும் எழுது. எழுதறது ஒரு வடிகால். ஆனா அதை அப்படியே அவனுக்கு அனுப்பி மட்டும் வெச்சுடாதே !

மைண்டை டைவர்ட் பண்ணனும். அது தான் முக்கியம். ஏதாச்சும் புது ஹாபி ஆரம்பிக்கலாம். யோகா கிளாஸ் போலாம். டு சம்திங். அவன் உன்னைப்பற்றி ஏதாச்சும் கதை கட்டி வுட்டா உடட்டும். அவன் எப்படிப்பட்டவன் ன்னு நீ அதை வெச்சு புரிஞ்சுக்கலாம். அடிக்கிற காத்துக்கெல்லாம் வேலி கட்ட முடியாது.

“என்ன சொல்றதெல்லாம் புரியுதா ? இல்லை கனவுலகத்துல இருக்கியா ?”

“கேட்டுட்டு தான் இருக்கேன் பிரியா … நீ சொல்றதெல்லாம் சரி தான்… பட் அவன் சைட்ல இருந்து என்ன ரியாக்ஷன் வரும்னு தெரியலயே”

“என்ன பண்ணுவான்னு நினைக்கிறே ? “

“ஒண்ணும் தெரியல. பட், அவனை நான் கழற்றி வுட்டதுல நிச்சயம் கடுப்பாவான்.”

“அவனோட கேரக்டரை வெச்சு அவன் எப்படி பிகேவ் பண்ணுவான்னு நீ புரிஞ்சுக்கலாமேடி”

“ஊஹூம்.. அவன் ஒரு கல்லுளி மங்கன். விஜ‌யைப் பொறுத்தவரை அவன் என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாதுடி….”

அவன் கூட இவ்ளோ நாள் பழகியிருக்கே ! அவனைப் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் சொல்றேன்.

இந்த கழற்றி விட்ட கேஸ்களை ஐந்து டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு புரிந்து கொள்ளக் கூடியவர். சென்ஸிபிள் டைப் ன்னு சொல்லுவாங்க. நேருக்கு நேரா பேசி, என்ன பிரச்சினை, ஏன் பிரியறேன்னு சொன்னா போதும். புரிஞ்சுப்பாங்க. ரொம்ப ஈஸி டைப் இவங்க தான். “என்னன்னு சொல்லத் தெரியல, பட் இந்த ரிலேஷன் வேண்டாம்ன்னு தோணுது” ன்னு சொன்னா கூட ஓகே சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.

இரண்டாவது டைப் கம்ப்ளையிண்ட் டைப். வைனிங் பீப்பிள் ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. உன்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் போய் புலம்பித் தள்ளுவாங்க. அவங்க கிட்டே உன்னோட பெயர் டேமேஜ் ஆகறமாதிரி நடந்துப்பாங்க. எப்படியாவது உன்னை மோசமானவளா காட்ட டிரை பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆட்கள் கிட்டே எதிர்த்துப் பேசக் கூடாது. உன் கிட்டே கேட்கிறவங்க கிட்டேயெல்லாம் டென்ஷன் ஆகாம, “இனிமே இந்த காதல்ல நம்பிக்கை இல்லை” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.

மூணாவது டைப் ஆதிக்க டைப். எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சுக்கப் பாப்பாங்க. ரொம்ப கடுமையா நடந்துக்கவோ, வீட்டுல வந்து நேரடியா பேசவோ டிரை பண்ணுவாங்க. தன்னோட வலிமையால இந்த பிரச்சினையைக் கையாள நினைப்பாங்க. முரண்டு பிடிக்காம ஆனா அதே நேரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

நாலாவது டைப் சுய பச்சாதாப டைப் ன்னு சொல்லலாம். ரொம்ப பரிதாபமா, எளிமையா, மென்மையா உன்னோட மனசை மாத்தப் பாப்பாங்க. ரொம்ப செண்டிமெண்ட் கதை பேசி, மெல்ல சில்மிஷ வேலை காட்டி இழுக்கப் பாப்பாங்க. சமயத்துல குடம் குடமா கண்ணீர் கூட வடிப்பாங்க. சோ, இந்த மாதிரி ஆட்களை அவங்க போக்கிலேயே போய் புரிய வைக்கணும்.

கடைசி டைப் தற்கொலை கேஸ். இது ரொம்ப டேஞ்சர் கேஸ். திடீர்ன்னு கையை வெட்டிகிட்டு செத்துப் போவாங்க. சிலர் தற்கொலை பண்ணமாட்டாங்க, ஆனா செத்துடுவேன்னு பேசிப் பேசியே உன்னை குழப்புவாங்க. பயமுறுத்துவாங்க. உன்னை ஒரு பிளாக் மெயில் வட்டத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க. இவங்க கிட்டேயும் கொஞ்சம் கவனமா பேசணும்.

சொல்லி நிறுத்திய பிரியா வித்தியாவைப் பார்த்தாள்.

“இப்போ சொல்லுடி, உன்னோட பழைய ஆள் எந்த டைப் ?”

“கண்டிப்பா சூயிசைட் கேஸ் இல்லை ! அந்த அளவுக்கு அவன் தைரியசாலியும் இல்லை, கோழையும் இல்லை, அரைவேக்காடு ” சொல்லிவிட்டுச் சிரித்த ர‌ம்யாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பிரியா.

குழந்தைகளைப் பாதுகாப்போம் !

 ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள்.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல்.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க பெற்றோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது ! குழந்தைகளின் உடல் நலம் குறித்த பாதுகாப்பு உணர்வுகள் இன்னொரு பக்கம் பெற்றோர் முன்னால் வந்து நிற்கின்றன.

வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகளுக்கு ஆபத்துகள் காத்திருக்கின்றன. அது  மனிதர்கள், விலங்குகள், அஃறிணைகள் என எந்த வடிவத்திலும் வரலாம் ! குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி ? 

 

வீட்டுக்கு வெளியே

 

வெளியே போகும் முன்

குழந்தைகளுடன் வெளியே போகிறீர்களா ? ஒரு நிமிடம் நில்லுங்கள். அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். திருடர்களும், அசம்பாவிதங்களும் நம்மிடம் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே வீட்டை விட்டுக் கிளம்பும் போதே உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் மொபைல் கேமராவை எடுத்து உங்கள் குழந்தைகளைப் போட்டோ எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தை எங்கேனும் தவறிப் போனால் கண்டுபிடிக்க பேருதவியாய் இருக்கும். “ஒரு மாதிரி பிங்க் கலந்த வயலெட் கலர்ல ஒரு பிராக் மாதிரி கவுன்.. “ என்றெல்லாம் பதட்டத்தில் உளறுவதை இந்த படம் தடுக்கும்.

படத்தைக் காமித்து “இதான் குழந்தை… “ என விசாரிக்க உதவியாய் இருக்கும். தொழில் நுட்பம் இன்றைக்கு வெகுவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அவற்றை குழந்தைகள் பாதுகாப்புக்காய் பயன்படுத்துவதற்கு இது ஒரு சின்ன உதாரணம் !

அதே போல ஒரு வேளை தவறினால் எந்த இடத்தில் சந்தித்துக் கொள்வது ? என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பெரிய பார்க்கள், விழாக்கள், ஷாப்பிங் மால்களில் இது உதவும்.

ஒருவேளை தவறினால் உதவி கேட்பது யாரிடம் என்பதைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக காவலரிடம் உதவி கேட்கவேண்டுமெனில், உடையை மட்டும் சொல்லாமல் “பேட்ஜ்” அணிந்திருப்பார், இந்த “லோகோ” உடையில் இருக்கும் என்பன போன்ற விஷயங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுங்கள் !

எங்கே இருக்காங்க குழந்தைகள் ?

உங்க குழந்தைங்க விளையாடப் போவதிலோ, நண்பர்களுடன் வெளியே போவதிலோ தவறில்லை. ஆனால் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் ? யாருடன் இருக்கிறார்கள் போன்ற விஷயங்களையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

உதாரணமாக, “படத்துக்கு போறேன்” என்று உங்கள் பையன் சொன்னால், யாருடன் செல்கிறான். எங்கே செல்கிறான். எப்போ காட்சி துவங்கும், எப்போ முடியும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

“வெளியே போறேன்னு சொன்னான், எங்கே போனான், யார் கூட போனான்னு தெரியலையே” என புலம்பும் நிலையை வைத்துக் கொள்ளாதீர்கள். பக்கத்து தெருவுக்குப் போனால் கூட சொல்லி விட்டுப் போகும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளெனில் அவர்களுடன் செல் போன் தொடர்பில் இருங்கள். அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாய் தோன்றினால் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.


கடைவீதிகளில்..

கடைவீதிக்குப் போகும் போது குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனால் முதல் கவனம் குழந்தையின் மீது இருக்கட்டும். அழகான புடவையைப் பார்த்து குழந்தையை விட்டு விடாதீர்கள். பெற்றோரின் கவனம் சிதறும் நேரம் பார்த்து குழந்தையை யாரேனும் கடத்தில் செல்லும் வாய்ப்பு உண்டு.

யாரேனும் உங்கள் குழந்தையை உற்றுக் கவனிப்பதாய் தோன்றினால், அவர்களிடம் போய் சும்மா பேசுங்கள். முடிந்தால் உங்கள் செல்போன் கேமராவில் அவரை படம் எடுங்கள். நீங்கள் அவரைக் கவனித்தீர்கள், அவருடன் பேசினீர்கள் என்றாலே ‘அடையாளம் தெரிந்து விட்டது’ என அந்த நபர் விலகி விடுவார்.

“குழந்தை ரொம்ப கியூட் அதான் பாத்தேன்” என யாரேனும் சொன்னால், “நன்றி” என ஸ்நேகமாய் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டுங்கள். அவருடன் அமர்ந்து உங்கள் குழந்தையின் சாதனைகளையெல்லாம் பட்டியல் போடவேண்டாம் !

உங்கள் குழந்தையை யாராவது நெருங்குகிறார்கள், பேசுகிறார்களெனில் உடனே அந்த இடத்திற்குச் செல்லுங்கள். அந்த நபரைப் பற்றிய விவரங்களை கேளுங்கள்.


காரில் போகும்போது

“காரில் ஏறினதும் நீ பண்ண வேண்டிய முதல் வேலை என்ன ?”

“சீட் பெல்ட் போடறது மம்மி…”

நாலு நாள் இந்த உரையாடல் நீங்கள் காரில் ஏறியதும் நடந்தால், ஐந்தாவது நாளில் இருந்து குழந்தை தானாகவே சீட் பெல்ட் போடப் பழகிவிடும். அப்புறம் ஒருவேளை நீங்கள் சீட் பெல்ட் போடாவிட்டால் உங்களிடம் அதே கேள்வியை குழந்தையே கேட்கும் !

சீட் பெல்ட் போடுவது கார் பயணத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போனாலும் சரி, தூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்குப் போனாலும் சரி. அலட்சியம் வேண்டாம்.

என்னதான் காரில் ஏர்பேக் போன்ற வசதிகள் இருந்தாலும் சீட் பெல்ட் போடாமல் பயணித்தால் பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். குழந்தை மீது அக்கறை இருக்கிறதா, சீட் பெல்ட் போடப் பழக்குங்கள். 

 

குழந்தையோடு பேசுகிறீர்களா ?

உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் தேவை என்ன தெரியுமா ? உங்களிடம் உங்கள் குழந்தை பாதுகாப்பை உணர்வது தான். “என்ன பிரச்சினைன்னாலும் அம்மா பாத்துப்பாங்க, அப்பா பாத்துப்பாங்க” எனும் ஆழமான நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

அதுக்கு முதல் தேவை குழந்தைங்க கூட போதுமான அளவு நேரம் செலவிடறது ! குழந்தைகளோட மனநிலை எப்படி இருக்கு ? அவர்களுடைய நாள் எப்படிப் போச்சு ? அவர்கள் என்ன பண்ணினாங்க ? போன்ற எல்லா விஷயங்களையும் அன்புடன் கேட்டறியுங்கள். அவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் தோளாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பதின் வயதுப் பிள்ளைகளிடமெல்லாம் அதிக நேரம் உரையாடலில் செலவிடுங்கள். அவர்களுடைய வழிகளைச் செம்மைப் படுத்தவும், அச்சுறுத்தல்கள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும் உங்கள் உரையாடல் உதவ வேண்டும். அவர்களுடைய பயங்கள், கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

“ஐயோ இதெல்லாம் நான் எப்படி அம்மா கிட்டே சொல்வது” என குழந்தை நினைக்கக் கூடாது. “எதுவா இருந்தாலும் மம்மி கிட்டே சொல்வேன்” என குழந்தை நினைக்குமளவுக்கு இயல்பாகப் பழகுங்கள்.

பள்ளி செல்லும் போது !…

பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் நடந்து போகிறதென வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோடு சிறிது நாட்கள் நீங்களும் கூடவே நடந்து செல்லுங்கள். சாலையில் எப்படி நடப்பது, எங்கெங்கே கவனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். எந்த இடம் பாதுகாப்பானது, யாரிடம் உதவி கேட்கலாம் போன்ற விஷயங்களையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை பொது வாகனங்களில் பயணிக்கும் குழந்தையெனில் பஸ் ஸ்டான்ட் க்கு போய் குழந்தைக்கு எந்த பஸ், எங்கே ஏறுவது, எங்கே இறங்குவது, எப்படி ஏறி இறங்குவது போன்ற விஷயங்களை பழக்குங்கள். பஸ்பயணத்தில் அச்சுறுத்தலெனில் ஓட்டுநரை அணுக குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பயணத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்கள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் போன்றவையெல்லாம் குழந்தைகள் அறிந்து வைத்திருப்பது அவசியமானது !

தெரியாத நபர் “லிஃப்ட்” கொடுத்தால் மறுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி வாங்கச் சொல்லுங்கள் !

குழந்தைகள் பயணிக்கையில் எப்போதும் ஒன்றிரண்டு பேராய் நடப்பது, பஸ்ஸில் பயணிப்பது பாதுகாப்பானது. தனியே எங்கே செல்வதாக இருந்தாலும் உங்களுக்குத் தகவல் தெரிய வேண்டும் என்பது பால பாடம்.

வாகனங்கள் எச்சரிக்கை !

வாகனங்கள் குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகள். அதுவும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பத்து மடங்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இரண்டு விதமான ஆபத்துகள் வாகன விஷயத்தில் உண்டு.

ஒன்று விபத்து. நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங்களின் பின்னாலோ, பக்கவாட்டிலோ குழந்தைகள் போகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக வாகன டயரின் அருகே நின்று பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் வரும் சாலையில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

இரண்டாவது கடத்தல் ! குழந்தைகள் கடத்துபவர்கள் வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளை வசீகரிக்கும் விதமாக சாக்லேட், பொம்மை போன்ற ஏதாவது பொருளைக் காட்டி அவர்கள் காரின் அருகே வந்ததும் சுருட்டிக் கொண்டு பறந்து விடுவது அவர்களுடைய பாப்புலர் திட்டம்.

தெரியாத நபர் இருக்கும் காரின் அருகே எக்காரணம் கொண்டும் போகவேண்டாம் என குழந்தைகளைப் பழக்குங்கள் !

போன் நம்பர் தெரியுமா ?

உங்க போன் நம்பர் உங்க குழந்தைக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால் முதலில் அதைச் சொல்லிக் கொடுங்கள். குட்டிப் பிள்ளைகள் கூட ஒரு போன் நம்பரை எளிதில் கற்றுக் கொள்வார்கள். பள்ளி செல்லத் துவங்கிவிட்டால், வீட்டு விலாசத்தையும் கூடவே சொல்லிக் கொடுங்கள்.

பலரும் செய்யும் தப்புகளில் ஒன்று தங்கள் முழுப் பெயரைக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்காதது தான். உன்னோட அப்பா பேரென்ன என கேட்டால் “ராஜூ” என்று குழந்தை சொல்வதை விட “சுப்ரமணிய ராஜூ” என சொல்வது அதிக பயன் தரும். அப்பா, அம்மாவின் முழுப் பெயரை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சில முக்கிய அடையாளங்களையும் குழந்தைக்குச் சொல்லிக் கொடுங்கள். அவ்வப்போது வீட்டில் விளையாட்டாக குழந்தையிடம் திருடன் போலீஸ் விளையாட்டை விளையாடி போன் நம்பர், விலாசம் எல்லாம் கேட்டு பழக்கப்படுத்துங்கள்.

விளையாட்டாய் பழகும் விஷயங்கள் குழந்தையின் மனதில் எளிதில் பதியும் என்பது குழந்தை உளவியல் !

கையில் நம்பர்

குழந்தைகளின் கையில் போன் நம்பரை எளிதில் அழியாத பேனாவைக் கொண்டு எழுதி வைக்கலாம். வெளியிடங்களில் ஒருவேளை குழந்தை தவறிப் போனால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் என்பது சிலருடைய கருத்து. குறிப்பாக பேசத் தெரியாத குழந்தைகள் விஷயத்தில் இது ரொம்ப பயன் தரும். ஒரு வேளை குழந்தை பதட்டத்தில் எண்ணை மறந்து விட்டால் கூட இது உதவும் !

வெளியூரில் போய் ஏதாவது ஹோட்டலில் தங்குகிறீர்களெனில் அந்த ஹோட்டலின் பிஸினஸ் கார்ட்/விசிடிங் கார்ட் நான்கைந்து எடுத்து குழந்தையின் பாக்கெட்களில் போட்டு வைப்பது நல்லது. தவறிப்போனால் ஹோட்டல் பெயரும், தொடர்பு எண்களும் அவர்களிடம் இருக்கும் !

கைகளில் அழகிய அகலமான ரப்பர் பேன்ட் ஒன்றைப் போட்டு அதில் பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதி வைப்பது கூட நல்ல யோசனையே.

ஷாப்பிங், தீம்பார்க் போன்ற இடங்களுக்குப் போனால், எக்காரணம் கொண்டும் அந்த இடங்களை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லுங்கள். வெளியே வந்தால் ஆபத்து அதிகமேயன்றி குறைவில்லை ! குழந்தை குட்டிகளுடன் நிற்கும் ஏதேனும் அம்மாக்களிடம் சென்று உதவி கேட்பது ரொம்ப நல்ல விஷயம் என்பதையும் சொல்லிக் கொடுங்கள் !

உடல் நலம் கவனம்

பொது இடங்களுக்குப் போகும் போது குழந்தைகளின் உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். தண்ணீர் விளையாட்டெனில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணி மணிகள் கைவசம் இருக்கட்டும். வெயில் எனில் குடை தொப்பி போன்றவை நிச்சயம் தேவை.

தண்ணீர் எப்போதும் கையில் இருக்கட்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது சுற்றுலா, ஷாப்பிங், பார்க் போன்ற இடங்களில் ரொம்ப அவசியம். உடலில் தண்ணீர் பற்றாக்குறை  நிலை வந்தால் சோர்வும், நோய்களும் வந்து விடும்.

குழந்தைகள் பெரும்பாலும் “தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்பதில்லை. எனவே பெரியவர்கள் தான் அதைக் கவனித்து அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

நல்ல வசதியான செருப்பை அணிவது அவசியம். சிம்பிளாக காலை உறுத்தாத செருப்புகள் சிறப்பானவை. அதே போல நல்ல வசதியான ஆடைகள் அணிவியுங்கள். ஸ்டைலாக இருப்பதை விட வசதியாக இருப்பதே அதிக மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் என்பது மனதில் இருக்கட்டும் !

 

 வீட்டுக்கு உள்ளே

 

குழந்தை தனியாய் இருக்கிறதா ?

வீட்டில் குழந்தையைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையெனில் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் எடுத்து சொல்லிக் கொடுங்கள்.

முக்கியமாக வீட்டுக் கதவுகளையெல்லாம் பத்திரமாகப் பூட்டி வைக்கச் சொல்லுங்கள். யாரேனும் வந்துக் கதவைத் தட்டினால் என்ன செய்ய வேண்டும் ? தெரியாத நபர் எனில் என்ன செய்ய வேண்டும் போன்றவற்றையெல்லா தெளிவாகச் சொல்லுங்கள்.

வீட்டில் போன் அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக வீட்டில் குழந்தை தனியே இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது ! . “நீங்க யாரு, டாடி கிட்டே என்ன சொல்லணும்..” என கேட்க குழந்தைகளைப் பழக்குங்கள்.

வீட்டுக்குப் போன் செய்து அடிக்கடி விசாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டில் குழந்தைகள் தனியே இருந்தால் அவர்கள் தண்ணீர், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்துகள் கூட நேரலாம். எனவே அது குறித்த பாதுகாப்பு அம்சங்களையும் சொல்லிக் கொடுங்கள் !

பக்கத்து வீடுகள்

உங்கள் பக்கத்து வீட்டு நபர்களின் வீடுகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எந்தெந்த வீடுகள் பாதுகாப்பானவை. எவையெல்லாம் உங்கள் குழந்தை நம்பிக்கையுடன் செல்லலாம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

தெரியாத வீடுகளுக்கு குழந்தைகள் செல்ல அனுமதிக்க வேண்டாம். தெரிந்த நபர்களின் வீடுகளுக்குக் கூட நீங்கள் கூடவே சென்று பழக்கப் படுத்துவதே நல்லது. நபர்கள் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்காக வீடு பாதுகாப்பாய் இருக்க வேண்டுமென்பதில்லை. அங்கே கவனிக்கப் படாத கிணறு இருக்கலாம், ஆபத்தான மாடி இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் ஆபத்து ஒளிந்திருக்கலாம். எனவே நீங்கள் அந்த வீடுகளைப் பார்த்திருப்பது நல்லது ! 

பக்கத்து வீடுகளுக்குச் சென்றால் கூட, குழந்தை அந்த வீட்டை அடைந்து விட்டதா என்பதை போனில் விசாரித்து அறியுங்கள். அந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லுங்கள்.

நெருப்போடு கவனம் தேவை

தீ தொடர்பான ஆபத்துகள் குழந்தைகளுக்கு வருவதை பத்திரிகைகள் அவ்வப்போது துயரத்துடன் பதிவு செய்கின்றன. குழந்தைகளுக்கு நெருப்பு குறித்த ஆபத்துகளும், எச்சரிக்கை உணர்வுகளும் தெரிந்திருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம்.

தீப்பெட்டி, லைட்டர் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வேளை வீட்டில் தீ பிடித்தால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் எங்கேயாவது ஒளிந்து கொள்ளவே முயலும் என்பது உளவியல் பாடம் !

உடையில் தீ பிடித்தால் ஓடக்கூடாது ! தண்ணீர் ஊற்றவேண்டும், இல்லையேல் தரையில் புரளவேண்டும் ! எரிந்து கொண்டிருக்கும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது, அப்போது மின் உபகரணங்கள் எதையும் தொடக் கூடாது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுன்கள்.

சுவாரஸ்யமாய் சீரியல் பார்த்துக் கொண்டே, “மூணு விசில் வந்துச்சுன்னு நெனைக்கிறேன். பாப்பா அந்த அடுப்பை அணைச்சு வை” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். சிரமம் பார்க்காமல் அத்தகைய வேலைகளை நீங்களே செய்யுங்கள். சமையலறை, கியாஸ் பக்கத்தில் குழந்தைகளை அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது !

கொசு, பூச்சி மருந்துகள் !

வீட்டில் கொசு, பூச்சி, கரப்பான் போன்றவையெல்லாம் வராமல் இருப்பதற்காக நீங்கள் வாங்கி அடிப்பீர்களே ஹிட் போன்ற சமாச்சாரங்கள், அவை குழந்தைகளுக்கு ரொம்பவே டேஞ்சர் என்பது தெரியுமா ? பலருக்கும் தெரியாத விஷயங்களில் இதுவும் ஒன்று !

இத்தகைய ஸ்ப்ரேயை குழந்தைகள் தெரியாமல் முகத்தில் அடித்து உள்ளிழுத்தால் அவர்களுடைய மூளை நேரடியாகவே பாதிக்கப்படும். சுய நினைவு இல்லாமல் விழுந்து விடுவார்கள். எவ்வளவு சுவாசிக்கிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த பாதிப்பு அதிகமாகும்.

எனவே ஹிட் போன்ற சமாச்சாரங்களை குழந்தைகளின் கண்களுக்கே எட்டாத இடத்தில் வைத்து விடுங்கள்.  அதே போல பாத்ரூம் கிளீனிங் பொருட்கள், பாத்திரம் கழுவும் பொருட்கள் போன்றவற்றையும் தூரமாகவே வையுங்கள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் கெமிகல் பொருட்கள், நச்சுப் பொருட்கள் போன்ற சர்வ சங்கதிகளும் குழந்தைகளால் எடுக்க முடியாத இடத்தில் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் !

விளையாட்டுப் பொருட்களில் கவனம்

குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களிலும் கவனம் தேவை. ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பாகங்கள் உடைய விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை வாயில் போட்டு ஆபத்தை விலைக்கு வாங்கி விடலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களையே வாங்குங்கள் !

அதே போல தரம் குறைந்த விஷத் தன்மையுடைய பெயிண்டிங், மாலை போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கித் தராதீர்கள். அது அவர்களுக்கு அலர்ஜி போன்ற நோய்களைத் தந்து விடும்.

விளையாட்டுப் பொருட்கள் உடைந்து சுக்கு நூறானபின்னும் அதை ஒரு கோணியில் கட்டி வீட்டிலேயே வைத்திருக்கும் தவறைச் செய்யாதீர்கள். உடைந்த பொம்மைகளையும், விளையாட்டுப் பொருட்களையும் தூரப் போடுங்கள்.

குழந்தைகள் விளையாடும் இடத்தில் கூட அவர்களுக்குக் காயம் தரக்கூடிய கூர்மையான பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிடுங்கள். குழந்தைகளுக்கு அருகில் இருக்கும் பொருட்கள் மீதான கவனத்தை விட, விளையாட்டே பிரதானமாய் தெரியும். எனவே அவை ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மின் உபகரணங்களில் கவனம்

குழந்தைகள் மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் போது ரொம்பவே கவனம் தேவை. என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது ? என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அடிக்கடி அவற்றை குழந்தைகளுக்கு நினைவூட்டிக் கொண்டே இருங்கள். குறிப்பாக பிளக் பாயின்ட் போன்றவற்றுக்கு ஒரு கவர் வாங்கி  மாட்டுங்கள் !

வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், ஃபிரிட்ஜ் போன்றவற்றையெல்லாம் குழந்தைகள் கையாள விடாதீர்கள். மின் பொருட்களில் எப்போதுமே ஆபத்து ஒளிந்திருக்கும். எனவே வெகு சில ஆபத்தற்ற மின் உபகரணங்களைத் தவிர வேறு எதையும் குழந்தைகள் தொட அனுமதிக்காதீர்கள்.

மின்சாரத்தில் இருக்கின்ற ஆபத்துகளைக் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிப் புரிய வைக்கலாம். லைட்டும், சுவிட்சும் விளையாட்டுப் பொருட்களல்ல என்பது அவர்களுக்கு மழலை வயதிலேயே புரிய வேண்டியது அவசியம்.

 

வீட்டுப் பொருட்களில் கவனம்

நமது வீடு குழந்தைக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டியது நமது கடமை. குறிப்பாக மாடிப் படிகள், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாய் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். பாதுகாப்பு இல்லை என தோன்றினால் கிரில், கதவு, வலை என தேவையானவற்றைப் போட்டு பாதுகாப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

ஷேவிங் செட் போன்றவற்றை பத்திரமாய் வைத்திருப்பது, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பாதுகாப்பாய் வைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது என வீட்டுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.

டிவி, கனமான பொருட்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை குழந்தை இழுத்துத் தள்ளாத வகையில் இருக்க வேண்டும். ஒரு மேஜை விரிப்பின் முனை கூட கீழே தொங்காமல் இருப்பது நலம். அப்படி இல்லையேல் மேஜை விரிப்பே இல்லாமல் இருப்பது நல்லது !

கத்தி, பிளேடு, அரிவாள் போன்ற விஷயங்களெல்லாம் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ரொம்ப ரொம்ப பாதுகாப்பான இடத்தில் இருக்கட்டும். தவறி விழாத இடத்தில், குழந்தையால் எடுக்க முடியாத இடத்தில் அவற்றை வையுங்கள். மாத்திரைகள், மருந்துகள் போன்ற சமாச்சாரங்களும் டிராக்களில் பூட்டப்பட்டே இருக்கட்டும் !

சின்னச் சின்ன இத்தகைய விஷயங்களில் பெரிய பெரிய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன.

 

மருந்துகளில் கவனம்

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விஷயத்தில் பலரும் டாக்டர்களாகி விடுவார்கள்.  அப்படி ஆகாமல் இருப்பது குழந்தைக்கும், நமக்கும் ரொம்ப நல்லது. சரியான நேரத்தில் டாக்டரிடம் போக வேண்டியதும், அவருடைய அறிவுரைப்படி நடக்க வேண்டியதும் ரொம்ப அவசியம். 50% பெற்றோரும் டாக்டர் சொல்வது பாதி புரியாமல் தான் டாக்டரின் அறையை விட்டு வெளியே வருகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. டாக்டர் சொல்வதை முதலில் தெளிவாய் கேளுங்கள்.

“கடைசி நாள்” அதாவது எக்ஸ்பயரி டேட் என்ன என்பதை கவனமாய் பாருங்கள். கவரிலும், பாட்டிலிலும் ஒரே நாள் இருக்கிறதா என்றும் பாருங்கள். பழைய மருந்துகளை வாங்கவே வாங்காதீர்கள். அது பழையதாகி விட்டது என மருந்து கடைக் காரரிடமும் சொல்லி விடுங்கள். காலாவதியான மருந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் !

மருந்தை எவ்வளவு தடவை கொடுக்க வேண்டும், எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படியே கேளுங்கள். அதிக காய்ச்சலா இருக்கு என ரெண்டு மாத்திரை எக்ஸ்ட்ராவாய்க் கொடுக்காதீர்கள். அது ஆபத்தானது !.

“இந்த மருந்து இல்லை, இதே மாதிரி இன்னொரு மருந்து இருக்கு” என கண்ணி வலை விரிக்கும் மருந்து கடைக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். நிறைய லாபம் பார்க்க விரும்பும் பலரும் சொல்லும் டயலாக் இது ! எந்த மருந்தை டாக்டர் சொல்கிறாரோ அதையே வாங்குங்கள் !

பழைய மருந்துகளை கொடுப்பது, ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை இன்னொரு குழந்தைக்கும் கொடுப்பது இப்படியெல்லாம் நீங்களே டாக்டராய் மாறி குழந்தையின் வாழ்வோடு விளையாடாதீங்க !

 

தண்ணீரில் பாதுகாப்பு

தண்ணீர் இன்னொரு டேஞ்சர் விஷயம். குறிப்பாக சின்னப் பிள்ளைகள் உள்ள இடங்களில் தண்ணீர் ரொம்ப ஆபத்து. குழந்தைகளைத் தனியே எக்காரணம் கொண்டும் நீச்சல் குளம், குளம், குட்டை, ஏரி, கடல் போன்ற எந்த இடத்திலும் விடாதீர்கள்.  உங்கள் நேரடிப் பாதுகாப்பு நிச்சயம் தேவை.

வீடுகளிலும் ரொம்ப சின்னப் பிள்ளைகள் இருந்தால் கவனம் இரண்டு மடங்கு வேண்டும். பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தால் குழந்தை அதைத் திறக்க முடியாதபடி வையுங்கள். அல்லது அந்த அறையைப் பூட்டியே வையுங்கள். முடிந்தவரை குடம் போன்ற வாய் குறுகலான பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வையுங்கள்.

குழந்தைகள் தண்ணீரில் விளையாட அதிக ஆர்வம் காட்டும். ஆனால் தவழும் பிள்ளைகளுக்கு ஆபத்தை விளைவிக்க ஒரு பக்கெட் தண்ணீரே போதுமானது. எனவே கவனம் அவசியம்.

இணையத்தில் கவனம்

இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே சிறுவர் சிறுமியர் இன்டர்நெட் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். இணையம் அவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லித் தரும். அதே நேரத்தில் தேவையற்ற பல விஷயங்களையும் அது கற்றுத் தரும். எனவே குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கவனிப்பது, வரையறுப்பதும் பெற்றோரின் கடமையாகும்.

இணையத்தில் சொந்தப் புகைப்படமோ, குடும்பத்தினரின் புகைப்படமோ அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையான தகவல்களை இணையப் பக்கங்களில் போட்டு வைக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் இணைய நண்பர்களை தனியே நேரில் சந்திக்க வேண்டாம் எனும் அடிப்படை விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தவறான இணையப் பக்கங்கள், தேவையற்ற சேட் தளங்கள் போன்றவற்றை அனுமதிக்காமல் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இணையத்துக்கு என ஒதுக்குங்கள். இரவு நேரத்தில் இணையத்தில் உலவுவதை தடை செய்யுங்கள். இப்போதெல்லாம் குழந்தையின் மனசையும், பாதுகாப்பையும் பலவீனப்படுத்துபவை இணையத்திலேயே உண்டு !

 

பாலியல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்க !

 

நல்ல தொடுதல் எது ?

சின்ன வயதுப் பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று பாலியல் ரீதியான தொந்தரவுகள். இதை “குட் டச், பேட் டச்” என்பார்கள். நல்ல தொடுதல் எது, மோசமான தொடுதல் எது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக மிக முக்கியம் !

குழந்தைகளைக் கொஞ்சுவது போல தொடுவது, விளையாட்டு எனும் போர்வையில் வக்கிரம் காட்டுவது இவையெல்லாம் எங்கும் நடக்கும் விஷயங்கள். 72.1 சதவீதம் குழந்தைகள் இதைப்பற்றி யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பல குழந்தைகளுக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டாவது காரணம், இந்த தொல்லைகளையெல்லாம் தருவது 90% குழந்தைக்குத் தெரிந்த நபர்களே என்கின்றன புள்ளி விவரங்கள்.

வளரும்போ குழந்தைக்கு எல்லாம் புரியும் என்று விட்டு விடுவது ரொம்பவே ஆபத்தானது. ஒரு குழந்தை மூன்று வயதைத் தாண்டினாலே அதனிடம் மோசமான தொடுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்கலாம் ! மிக முக்கியமாக ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்குமே இதைச் சொல்லிக் கொடுங்கள் ! ஆபத்து இருவருக்குமே உண்டு !

நோ சொல்வது நல்லது !

யாராய் இருந்தாலும் சரி, புடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்லப் பழக்க வேண்டும். குழந்தைகள் நெருங்கிய சொந்தக்காரர்களிடம் “நோ” சொல்லத் தயங்கும். குறிப்பாக கொஞ்சம் வயதில் பெரியவர்களிடம் அவர்களுடைய தயக்கம் அதிகமாக இருக்கும். அதைப் போக்க வேண்டும். தப்பாக யாரேனும் தொட முயற்சி செய்தால் “தொடாதே..” என அழுத்தமாகவும், சத்தமாகவும் சொல்லப் பழக்க வேண்டும். குழந்தை சத்தமாகச் சொன்னால் அதன் பின்னர் அந்த நபரால் தொந்தரவு எற்படும் வாய்ப்பு ரொம்பக் கம்மி !

குழந்தைகளை நம்புங்க !

குழந்தைங்க சொல்வதை பெற்றோர் முழுமையாய் நம்ப வேண்டும். குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுவும் பாலியல் விஷயங்களில் இட்டுக் கட்டி எதையும் சொல்லவே மாட்டார்கள். எனவே குழந்தைகள் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். குழந்தை பேசி முடிக்கும் வரை இடை மறிக்காதீர்கள்.  

“சே..சே.. அந்தத் தாத்தா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு… “, “அந்த மாமா ரொம்ப நல்லவரு, அவரைப் பற்றி தப்பா நினைக்காதே” என்றெல்லாம் சொல்லவே சொல்லாதீர்கள். குழந்தை அசௌகரியமாய் உணரும் நபர்களிடம் குழந்தையை தனியே இருக்க விடாதீர்கள். அது ரொம்ப முக்கியம்.

 

குழந்தைகளிடம் கேளுங்க !

குழந்தைகள் கிட்டே நடந்த விஷயங்களையெல்லாம் தினமும் கேக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளியில் நடந்த விஷயங்களானாலும் சரி. சொந்தக்காரங்க வீட்டில் நடந்த விஷயமானாலும் சரி, எல்லாவற்றையும் கேளுங்கள். உங்கள் கள்ளம் கபடமற்ற மழலைகள் உண்மையைச் சொல்வார்கள்.

ஒருவேளை விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருந்தால் கூட பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசுங்கள். எந்தத் தவறுக்கும் உங்கள் குழந்தை காரணமல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

நம்பிக்கையை வளருங்க

எதுன்னாலும் மம்மி கிட்டே தயங்காம சொல்லலாம் எனும் நம்பிக்கை குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் குழந்தையோடு இயல்பான அன்பை வைத்திருக்க வேண்டியது தான். எரிச்சல், கோபம் காட்டும் பெற்றோரிடம் குழந்தைகள் உண்மையை மறைக்கும்.

“மம்மி எனக்கு இந்த அங்கிளைப் புடிக்காது” என்று குழந்தை சொன்னால் அரவணைத்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை உணர்வு கொள்ளுங்கள். ஏதேனும் சிக்கல் நடந்திருக்கலாம். எனவே குழந்தையின் விருப்பத்தை மதியுங்கள். அந்த நபரைக் கொஞ்சம் கவனியுங்கள் !

குழந்தையை மிரட்டினாங்களா ?

“மம்மி கிட்டே சொல்லாதே..” என்று யாராவது எதையாவது சொன்னார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் தப்பான விஷயங்கள் தான் பெற்றோரின் காதுகளுக்குப் போகக் கூடாது என சில்மிஷவாதிகள் நினைப்பார்கள். அத்தகைய விஷயங்களை நீங்கள் நிச்சயம் அறிய வேண்டும். அது தான் உங்களை எச்சரிக்கையாய் வைத்திருக்க உதவும். உங்கள் குழந்தையைப் பாதுகாக்கவும் அது ரொம்ப அவசியம்.

“உன்னைப் பத்தி அம்மா கிட்டே சொல்லி அடி வாங்கி தருவேன்”  போன்ற மிரட்டல்களில் ரொம்ப கவனம் தேவை. தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகிவிடக் கூடும் !

யாராகவும் இருக்கலாம் !

பாலியல் தொந்தரவுகளைத் தருபவர்கள் இளைஞர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு தப்பான அபிப்பிராயம். வயசு வித்தியாசம், சாதி, மத, பண வித்தியாசம் இல்லாமல் யாருக்குள்ளும் இந்த நரி ஒளிந்திருக்கலாம். எனவே ஆள் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.

குழந்தைக்கு யாராவது கிஃப்ட் வாங்கி குடுத்தாங்களா ? சாக்லேட் வாங்கி குடுத்தாங்களா ? அல்லது ஏதேனும் வாங்கித் தரேன்னு ஆசை காட்டினாங்களா என அறிந்து கொள்ளுங்கள். இவையெல்லாம் சிக்கல்கலுக்கான முன்னுரையாகக் கூட இருக்கலாம்.

குழந்தையின் உடல் மொழி !

குழந்தைக்கு விரும்பத் தகாத சம்பவங்கள் ஏதும் நடந்திருந்தால் குழந்தையின் முகமே சட்டென காட்டிக் கொடுத்துவிடும். அதைக் கவனித்து விசாரிக்க வேண்டியது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய விஷயம். குழந்தை சோகமாய் இருந்தாலோ, பேசாமல் இருந்தாலோ கவனியுங்க ! குழந்தையின் உடலில் காயம் இருந்தல் உடனே கவனியுங்கள்.

குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயமுறுத்தியோ, அதட்டியோ விஷயத்தைக் கேட்காதீர்கள். ரொம்ப ரொம்பப் பொறுமையாய் கேளுங்கள் !

திடீர்ப் பாசம் வருதா ?

குழந்தையிடம் உறவினர்கள் யாராச்சும் திடீரென பாசம் காட்டுகிறார்களா என கவனியுங்கள். குழந்தையை அடிக்கடி கொஞ்சுவது, தனியே மாடிக்கோ, பால்கனிக்கோ, தனிமையான அறைகளுக்கோ கூட்டிப் போவது போன்ற விஷயங்களில் கவனமாய் இருங்கள். குழந்தையைக் கூட்டிக் கொன்டு சினிமா போகிறேன் என்றெல்லாம் சொன்னால் மறுத்து விடுங்கள். பிறர் குழந்தையோடு பழகுவதெல்லாம் உங்கள் பார்வையில் படும் படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

நோ போட்டோ !

குழந்தையை யாராச்சும் புகைபடம் எடுக்க வந்தால் “வேண்டாம்” என சொல்லப் பழக்குங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் குழந்தையைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம். குழந்தையை யாரேனும் ஆபாசமாய்ப் படம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு.

அதே போல குழந்தையிடம் ஆபாசப் படங்கள் அடங்கிய புத்தகங்கள் யாராச்சும் காட்டுகிறார்களா போன்றவையும் கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகளின் மனதைக் கறையாக்கி அதில் குளிர்காயும் குறை மனசுக்காரர்களும் உண்டு !

கிராமத்திலும் உண்டு !

இதெல்லாம் நகரத்துச் சமாச்சாரங்கள். கிராமத்துல எதுவுமே கிடையாது என தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கிராமங்களோ நகரமோ எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை நிச்சயம் உண்டு.

அதே போல குழந்தை கிட்டே ஒரு தடவை எல்லா எச்சரிகை உணர்வையும் சொல்லியாச்சுன்னும் விட்டுடாதீங்க. அடிக்கடி சொல்லிட்டே இருங்க. குழந்தைகள் மெல்லிய மனசுக்காரர்கள் அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

 

நன்றி : தேவதை, மாத இதழ்.

ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

 

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

  1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !
  2. 

  3. பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
  4. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
  5. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
  6. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
  7. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
  8. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி ! 
  9. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
  10. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
  11.  நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
  12. திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !  
  13. பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள்  நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.

கடுப்பாகாதீங்க ஆண்களே…..  பெண்களுக்கும் இது பொருந்தும் ! 

நன்றி : விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

அதிகம் பொய் சொல்வது ஆணா ? பெண்ணா ?

 

பொய் சொல்லாத மனுஷன் வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது” ன்னு எல்லாரும் அடிச்சுச் சொல்றாங்க. அவங்க அடிக்கிற அடியைப் பாக்கும்போ நமக்கு அரிச்சந்திரன் மேலயே மைல்டா டவுட் வருது. அவரு மட்டும் எப்படி பொய்யே சொல்லாம வாழ்க்கையை ஓட்டியிருக்காரோ ?.

கொஞ்ச நேரம் உக்காந்து யோசிச்சா இந்த டயலாக் உண்மை தாங்கறது நமக்கே புரியும். காலைல எழும்பி , “ஹே.. இன்னிக்கு காபி நல்லா இருக்கு” ன்னு சொல்ற முதல் பொய்ல ஆரம்பிச்சு  “அப்பப்பா…. செம டிராபிக் ” ங்கற பொய்யோட லேட்டா வீடு வந்து சேரதுக்குள்ளே எத்தனை பொய் சொல்லியிருப்போம் ? கூட்டிக் கழிச்சுப் பாத்தா சில நேரம் நமக்கே மலைப்பா இருக்கும்.

இந்த பொய்ங்கற சமாச்சாரத்தை ரெண்டு பெரிய பிரிவா பிரிக்கிறாங்க. ஒண்ணு அடுத்தவங்களுக்கு இடஞ்சல் இல்லாத பொய்கள். “வாவ்… சுடிதார் கலக்கலா இருக்குடி? எங்கே வாங்கின ?” ன்னு தோழியிடம் சொல்றதோ, “சார், உங்க ஐடியா சூப்பர்” ன்னு மேனேஜர் கிட்டே சொல்றதோ ஒரு வகை. இதெல்லாம் அடுத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு சொல்றதா இருக்கலாம். அல்லது அடுத்தவங்களோட தன்னம்பிக்கையை வளர்க்கிறதுக்காக சொல்றதா இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இதுல டேஞ்சர் இல்லை. இதை வெள்ளைப் பொய்கள் ன்னு ஆங்கிலத்தில சொல்லுவாங்க.

இன்னொரு வகை பொய் தான் டேஞ்சர். ஒரு பொண்ணு கூட பெசண்ட் நகர் பீச்சில சுண்டல் சாப்பிட்டுட்டு, “ ஆபீஸ்ல ஆடிட், அதான் டார்லிங் லேட்” ன்னு மனைவி கிட்டே சொல்றதோ, இல்லேன்னா  “ நான் தம் அடிக்கிறதே இல்லை, சே.. அந்த நாற்றமே எனக்கு உவ்வே..” என்று சொல்றதோ பெரிய பொய்கள் லிஸ்ட்ல வரும்.

எல்லோருக்குமாய் பெய்யும் மழை போல எல்லோருக்குள்ளேயும் கொஞ்சம் பொய் கலந்து தான் இருக்கு. அது இலக்கியத்தில வர செம்புலப் பெயல் நீர் போல கலந்து வரும்போ உண்மையும் பொய்யும் கண்டு பிடிக்க முடியறதில்லை. அதனால “நான் பொய் சொல்ல மாட்டேன்” ன்னு ஒருத்தர் சொன்னா, அதையும் ஒரு பொய்யா அவரோட லிஸ்ட்ல தாராளமா சேத்துக்கலாம்.

அதென்னவோ தெரியல, பெண்கள் தான் அதிகம் பொய் சொல்வாங்கன்னு ஒரு பேச்சை நம்ம ஊரில் ரொம்ப சகஜமா கேக்கலாம். இளச்சவன் தலைல மிளகா அரைக்கிறதுங்கறது இது தான். நம்ம ஊரு தான் காலங் காலமா ஆண்கள் சொல்றதுக்கு “ஆமாம்” போடற ஊராச்சே. அதனால தான் இந்த பழமொழியெல்லாம் இன்னும் கிழ மொழியாகாம வழக்கத்துல இருக்கு.

ஆனா உண்மை என்ன சொல்லுது தெரியுமா ? அதிகமா பொய் சொல்றது  ஆண்கள் தானாம். அப்போ பெண்கள் ? அவங்க திறமையா பொய் சொல்லுவாங்களாம் ! அடடா ! இதுல கூட நுணுக்கமான வெற்றி பெண்களுக்குத் தானா ?

பெண்களோட பொய் ஏரியா ஷாப்பிங். இருக்கிற பணத்தையெல்லாம் ரங்கநாதன் தெருவில இறைச்சிட்டு வந்தா கூட, “ஜஸ்ட் 275 ரூபாய்க்கு ஒரு சாரி எடுத்தேன்ங்க, மேட்சிங் பிளவுள் வெறும் 23 ரூபா தான்” ன்னு அவர்கள் சொல்லும் எவரெஸ்ட் அப்படியே நம்பி விடும் அப்பாவி ஆண்கள் ஏராளம். ரொம்ப உஷாரா விலை ஸ்டிக்கரையெல்லாம் ஏழு கடல் ஏழு மலை தாண்டி பூதத்தோட காலடில போட்டு வெச்சுடுவாங்க. என்ன தான் ஊரையே புரட்டினாலும் கண்டு பிடிக்க முடியாது.

“ பொண்ணுங்க தான் அதிகம் பொய் சொல்வாங்க. நாங்க எல்லாம் அப்பாவிங்க. எவ்ளோ பொய் சொல்லி லவ் பண்ணிட்டு கடைசில என்னைத் தாடி வளர்க்க விட்டுட்டா. பொண்ணுன்னாலே பொய் தான் ” என ஆண்களும், “லவ் பண்ணும்போ என்னென்ன சொல்றாங்க ! கண்ணு அழகா இருக்குங்கறாங்க, பேச்சு பாட்டு மாதிரி இருக்குங்கறாங்க, சிரிச்சா கியூட் ன்னு சொல்றாங்க… எல்லாம் பொய், ஆணுன்னாலே பொய் தான்” என பெண்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கிறாங்க.

சரி நீங்க சண்டை போடாதீங்க, யார் ரொம்பப் பொய் சொல்றதுன்னு நான் சொல்றேன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க லண்டன்ல. இதுக்கெல்லாமா போய் ஆராய்ச்சி பண்ணுவாங்கன்னு நீங்க கேக்கக் கூடாது. அந்த ஆராய்ச்சி முடிவு என்ன சொல்லுதுன்னா, பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியா மூணு பொய் சொல்றாங்களாம். ஆண்களோ ஒரு நாள் ஆறு பொய் சொல்றாங்களாம் ! இந்த ஆராய்ச்சியே பொய் ன்னு ஆண்கள் போராட்டம் நடத்தாதிருப்பார்களாக.

இந்த ஆராய்ச்சில நிறைய சுவாரஸ்யங்கள். ஆண்களும் பெண்களும் பொதுவா சொல்ற பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, நல்லா தான் இருக்கேன்” என்பது தானாம்.

 “ஹே.. உன் உடம்பு இளைச்சுடுச்சு டியர். நீ குண்டாவே தெரியல “, “சாரி, செல்போன்ல சிக்னலே கிடைக்கல”, “அந்த நேரம் பாத்து என் போன் பேட்டரி டவுன் ஆயிடுச்சு”, “ஓ… மிஸ்ட் கால் ரொம்ப லேட்டாதாண்டா பாத்தேன்”, “ ரொம்ப எல்லாம் குடிக்கலம்மா, ஜஸ்ட் ஒரே ஒரு ஸ்மால்”, “ இதோ வந்துட்டே இருக்கேன்”, “ இந்த டிராபிக் படுத்துது… செம கடியா இருக்கு” இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா ? இதெல்லாம் ஆண்கள் சகஜமா சொல்ற பொய்களாம் ! உஷார் ஆயிடுங்க அம்மணிகளே !

அப்போ பெண்களோட பொய்கள் லிஸ்ட் ? அது இல்லாமலா ? “ இது புதுசா வாங்கினதில்லீங்க, பழசு தான்”, “ சே… இது ரொம்ப மலிவா கிடைச்சுது”, “ அது எங்கே இருந்துதுன்னே எனக்குத் தெரியாது, நான் அதை தொடவே இல்லை”, “ இல்லையே, நான் அதை எறியவே இல்லையே”, “சாரி.. உங்க போன் கால் மிஸ் பண்ணிட்டேன்”,” இன்னிக்கு ரொம்ப தலை வலியா இருக்குங்க” இதெல்லாம் பெண்களோட பேவரிட் பொய் லிஸ்ட்டாம் ! ஆண்களே, இது கேட்டுக் கேட்டு பழகின வார்த்தைங்க தானே ?

குறிப்பா இந்த ரொமாண்டிக், லவ் காலத்துல பொய்களெல்லாம் நிறுத்தாம வந்துட்டே இருக்கும். வேணும்னா அனுமர் வால், திரௌபதி சேலை இப்படி ஏதாச்சும் புரண உதாரணத்தை மனசுல நினைச்சுக்கோங்க.

“இன்னிக்கு இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்கே” என அவன் கடலை போட ஆரம்பிக்கும் நிமிஷத்திலிருந்து “ நீ சிரிக்கும்போ உன் கண்ணும் சேர்ந்தே சிரிக்குது”, “ நீ இல்லேன்னா நான் இல்லே”, “உன்னைத் தவிர ஒரு பெண்ணை நான் நினைச்சுக் கூட பாக்க முடியாது” என சகட்டு மேனிக்கு உடைத்துத் தள்ளுவதில் ஏதோ ஒண்ணிரண்டைத் தவிர எல்லாமே அக்மார்க் பொய்கள் தான். ஆனால் என்ன, அந்தப் பொய் தான் அந்த நிமிஷத்துல காதலிக்கும் தேவை. அப்போ தான் வீட்டுக்குப் போற வழியிலேயே “ ஹே.. ஐ மிஸ் யூ டா”, ” ஐ லவ் யூ சோ சோ சோ சோ மச்” என்றெல்லாம் எஸ் எம் எஸ்ஸித் தள்ள முடியும் !

“பெண்கள் அன்பின் வெளிப்பாடாய் செக்ஸை அனுமதிப்பார்கள், ஆண்களோ செக்ஸுக்காக  அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்பார் ஜேம்ஸ் டாப்சன் எனும் எழுத்தாளர். கிட்டத் தட்ட அது உண்மை என்பதை ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

ஹெல்த் அண்ட் சயின்ஸ் அட்வைசரி குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல இருட்டுப் பொய்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற சங்கதி போல, பெண்களுடன் உறவு கொள்வதற்காக எக்கச் சக்க பொய் சொல்லியிருக்கிறோம் என ஒத்துக் கொண்ட ஆண்கள் 47 சதவீதமாம் ! அப்பாடா, எல்லா ஆண்களும் பொய் சொல்லல. என் வீட்டுக் காரர் இந்த லிஸ்ட்ல வரமாட்டார் என வீட்டம்மாக்கள் மனசைத் திடப்படுத்திக் கொள்ளலாம். ஆனா பெண்களில் இது 10 சதவீதம் தானாம் !

கல்லூரி மாணவர்கள் இந்த விஷயத்துல எப்படி என ஒரு ஆராய்ச்சி நடத்தியது வாஷிங்டன் ஸ்டேட் அமைப்பு. அங்கேயும் ஆண்கள் தான் முன்னணி. 22 சதவீதம் பேர் சக மாணவிகளை பொய் ஐஸ் மழை பொழிந்து “அந்த” விஷயத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

“அந்த” ஏரியா பொய்களெல்லாம், “போன மாசம் தான் ஹெல்த் செக்கப் பண்னினேன், எனக்கு எயிட்ஸ் மாதிரி நோயெல்லாம் இல்லை”,” நான் கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்கேன்”, “ உன்னைத் தவிர வேறொருத்தியை நான் நெனைக்கவே மாட்டேன்”,” இதான் பஸ்ட் டைம்”, ” ஐ லவ் யூ சோ மச்”, “ இது லாங் லைஃப் பந்தம்”, “ இந்த டைம்ல கர்ப்பம் எல்லாம் ஆகவே ஆகாது… ஐ பிராமிஸ்” என சில்மிச மசாலா பொய்கள் ! இந்த ஏரியாவில் நடந்த பொய்களோட டீட்டெயில்ஸ் எல்லாம் கொஞ்சம் அசைவ வாசனைங்கறதனால இதோட நிறுத்திக்கறேன்.

ஏற்கனவே சொன்னது மாதிரி, பெண்களோட மெயின் பொய் ஏரியா ஷாப்பிங் தான். 75 சதவீதம் பெண்கள் எவ்ளோ பணம் செலவழிச்சோம்ங்கற உண்மையை சொல்லவே மாட்டாங்களாம். 60 சதவீதம் பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலயாவது புருஷனை ஏமாத்தறாங்களாம். வெளிநாடுகள்ல பெண்கள் சொல்லும் பொய்ல கொடுமையான பொய் என்ன தெரியுமா ? “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, குழந்தைகளும் இல்லை” ங்கறது தானாம். வீட்ல குழந்தைங்க இருக்கிற அம்மாக்கள் சொல்ற பகீர் பொய் இது !

சைக்காலஜிஸ்ட் பெல்லா டி பாலோ பொய் பற்றி சொல்ற தகவல்கள் ஆச்சரியப்படுத்துது. நேரடியா பொய் சொன்னா பல வேளைகள்ல மாட்டிப்பாங்க. அதனால பொய் பார்ட்டிங்க போன்ல தான் அதிகம் பொய் சொல்றாங்களாம். உலகத்துல சொல்லப்படற பொய்கள்ல 60 சதவீதம் பொய்களை துரோகம் பட்டியல்ல சேக்கலாமாம். 70 சதவீதம் பொய்யர்கள் சொன்ன பொய்யை திரும்பத் திரும்ப சொல்றாங்களாம். ஏழு பொய்ல ஒரு பொய் கண்டுபிடிக்கப் படுமாம் ! இப்படியெல்லாம் தன்னோட ஆய்வு முடிவுகளை சைக்காலஜி டுடே மேகசின்ல டாக்டர் பெல்லா டி பாலோ எழுதியிருக்காங்க.

பொய் பேசறவங்கள்ல 4 சதவீதம் பேர் புரபஷனல் பொய்யர்களாம். இவங்களோட பொய்யைக் கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம் மத்தவங்களோட பொய்யை ஈசியா கண்டு பிடிக்கலாமாம். அதெப்படி ?

பேசும்போ சாதாரணமா பேசறாரா ? இல்லே வித்தியாசமான வார்த்தையெல்லாம் யூஸ் பண்றாரா பாக்கணும். முரணா பேசறாரான்னு கவனிக்கணும்.

பேசறவங்க கிட்டே அவங்க எதிர்பார்க்காத ஒரு கேள்வியை சட்டுன்னு கேளுங்க. அதுலயே பொய்யர்களை நிலை குலைய வெச்சுடும்.

ரொம்ப சைலண்ட் பார்ட்டி ஒரு நாள் கலகலப்பா இருந்தாலோ, கலகலப்புப் பார்ட்டி ரொம்ப சைலண்டா இருந்தாலோ சம்திங் ராங். ஜோக் அடிச்சா கொஞ்சம் டியூப் லைட் மாதிரி சிரிக்கிறாரா ? ஜோக்கே சொல்லாம கூட விழுந்து விழுந்து சிரிக்கிறாரா ? பேசறதுல கொஞ்சம் செயற்கைத் தனம் இருக்கா உஷாராயிடுங்க. பொய்யா இருக்கலாம்.

“நான் நினைக்கிறேன், அப்படித் தான் இருக்கும், நான் நம்பறேன்… “ இப்படியெல்லாம் பேச்சில அடிக்கடி வந்தா கொஞ்சம் சந்தேக கேஸ் தான். அதே போல பாடி லேங்க்வேஜ் கவனிக்க வேண்டியது ரொம்ப முக்கியம். இல்லேன்னு சொல்லி ஆமான்னு தலையாட்டுவாங்க…

பொய் பார்ட்டிங்க தேவையில்லாம ரொம்ப விளக்கம் குடுப்பாங்க. “ஏங்க லேட்” ன்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டா கூட அஞ்சு நிமிஷம் ஏதாச்சும் விளக்கம் குடுத்துட்டே இருப்பாங்க.

நிறைய பேரு நினைக்கிறாங்க பொய் பேசறவங்க கண்ணைப் பாத்து பேசமாட்டாங்க, முகத்தை திருப்பிக்குவாங்கன்னு. பட், உண்மைல பொய் பேசறவங்க கண்ணை நேருக்கு நேரா பாத்து பேசுவாங்க. அவங்க சொன்னதுக்கு நீங்க எப்படி ரியாக்ஷன் கொடுக்கறீங்கன்னு பாப்பாங்க. சோ, கொஞ்சம் அந்த ஏரியாவிலயும் கவனம் செலுத்தணும். இப்படி கொஞ்சம் கவனமா இருந்தா பொய் பேசறதைக் கண்டு பிடிக்கலாம்.

சுவாரஸ்யமான பொய்கள் அழகு தான். கவிதைக்குப் பொய் அழகுன்னு சொல்றதைப் போல. இலக்கியத்துல வர தற்குறிப்பேற்ற அணியே ஒரு வகையில் பொய் பேசற சமாச்சாரம் தானே ! ஆனா அது இன்னொரு நபரைப் பாதிக்கற அளவுக்கு இருந்தா பொய் பேசறது ரொம்பவே தப்பாயிடும். “பொய்மையும் வாய்மையிடத்து” ங்கறதை தப்பா புரிஞ்சுக்காம இருந்தா சரி !

நன்றி : பெண்ணே நீ !

தமிழிஷில் வாக்களிக்க…

வெளியூர் போனா வீடு பத்திரமா இருக்குமா ?

 

“ஹாய் மாலதி எப்படி இருக்கே ?”

“நல்லா இருக்கேன் ரம்யா…நீ எப்படி இருக்கே ? என்ன ஒரு சர்ப்ரைஸ் கால்…”

“என்னத்த சொல்றது. ஒரே ஊர்ல இருக்கோம் ஆனாலும் பாத்து பல மாசங்களாச்சு. அப்பப்போ போன்ல நாலுவார்த்தை பேசறதோட சரி”

“என்ன பண்ண சொல்றே ? நான் பிரீயா இருக்கும்போ உனக்கு வேலை வந்துடுது. உனக்கு நேரம் இருக்கும்போ எனக்கு ஏதாச்சும் ஒரு வேலை வந்துடுது” ரம்யாவின் குரலில் நட்பின் சிரிப்பு வழிந்தது.

“சரி… எனி திங் இண்டரஸ்டிங் ?”

“ஆமா.. நான் இரண்டு வாரம் லீவ்ல குடும்பத்தோட ஊர் சுத்த போறேன்” ரம்யாவின் குரலில் உற்சாகம் சிறகு விரித்தது.

“வாவ்… ரெண்டு வாரமா ? எப்படி லீவ் கிடைச்சுது ? உன் மேனேஜர் தான் லீவே தராத கஞ்சப் பயலாச்சே…. “

“அதையேன்டி கேக்கறே… ஆறு மாசத்துக்கு முன்னாடியே அவர் கிட்டே கெஞ்சி கூத்தாடி ரெண்டு வாரம் லீவ் வாங்கியிருக்கேன். பாவம் குழந்தைங்க, வீட்லயே அடஞ்சு கிடந்து ரொம்பவே சோர்ந்து போயிட்டாங்க”

“ஆமாமா….  குழந்தைங்க கூட நேரம் செலவிடவே முடியறதில்லை. அப்பப்போ வெளியேவாவது கூட்டிட்டு போறது ரொம்ப நல்லது !” சொன்ன மாலதி தொடர்ந்தாள், “சரி எங்கே போறீங்க ?”

“தாய்லாந்து ! “

“வாவ்… கடல் கடந்த பயணமா ? சூப்பர்….”

“ஆனா மனசுக்குள்ள ஒரு சின்ன பயம் இருந்துட்டே இருக்குடி…” ரம்யா சொன்னாள்.

“என்னடி பயம் ? பறக்கறதுக்கு பயமா ?”

“சே…சே… அதெல்லாம் ஒண்ணுமில்லை. தினமும் நியூஸ் பேப்பரைப் படிக்கிறேன். பூட்டிய வீட்டில் கொள்ளை, பட்டப் பகலில் கொள்ளைன்னு ஒரே டென்ஷன். நான் வேற இரண்டு வாரத்துக்கு வீட்டை அம்போன்னு விட்டுட்டு போயிடப் போறேன். எவனாவது வந்து சுத்தமா தொடச்சிட்டு போயிடுவானோன்னு நினைச்சா பக்குன்னு இருக்கு” ரம்யாவின் குரலில் கவலை அடர்த்தியாய் இருந்தது.

“ஒரு ரெண்டு வாரத்துக்கு உன் வீட்ல யாரையாவது தங்க வைக்கலாமே ? சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ் இப்படி யாராச்சும்  ?”

“பாத்தேன். அப்படி யாரும் கிடைக்கல.”

“அப்போ உன்னோட பயம் நியாயமானது தான்.  ஆனா, கொஞ்சம் உஷாரா இருந்தா இந்த சிக்கலையெல்லாம் சமாளிக்கவும் வழி இருக்கு….” மாலதி சொன்னாள்.

“சரி… என்னென்ன பண்ணனும்ன்னு கொஞ்சம் ஐடியா கொடேன்” ரம்யா கேட்க மாலதி ஆரம்பித்தாள்.

முதல்ல வீட்ல இருக்கிற எல்லா எலக்ட்ரிக் சமாச்சாரத்தோட கனக்ஷனையும் உருவி விட்டுடு. சார்ஜர், டிவி, கம்ப்யூட்டர் எதுவுமே பிளக் பாயிண்ட்ல மாட்டியிருக்காம பாத்துக்கோ. எலக்ட்ரிக் தீ விபத்துல இருந்து தப்பிக்க இது ரொம்ப முக்கியம். சட்டு புட்டுன்னு காலநிலை மாறி மின்னல் ஏதாச்சும் வந்தா கூட எல்லா பொருளும் பாதுகாப்பா இருக்கும்.

அதேமாதிரி கேஸ் நல்லா மூடியிருக்கட்டும். பாதுகாப்பான இடத்துல கேஸ் சிலிண்டரை வைக்கிறது உத்தமம்.

எல்லா சன்னல்களையும், கதவுகளையும் பூட்டு வாங்கி இழுத்துப் பூட்டு. வீட்டை இலட்சக்கணக்கில செலவு பண்ணி கட்டிட்டு பூட்டு வாங்க கஞ்சத் தனம் பாக்கக் கூடாது. நல்ல பூட்டா பாத்து வாங்கணும். சிரமம் பார்க்காம எல்லா கொக்கி, தாழ்ப்பாளையும் போட்டு வை.

இப்பல்லாம் அலாரம் அடிக்கிற பூட்டு கூட இருக்கு. தப்பான சாவி போட்டா சத்தம் போடும். வேணும்ன்னா அதைக் கூட வாங்கி மாட்டலாம். முக்கியமான சமாச்சாரம், வீட்டுக் கீயை வீட்டுக்கு வெளியே ஒளிச்சு வைக்கிற சமாச்சாரமெல்லாம் வேண்டாம். உன்னை விட புத்திசாலிங்க தான் திருடங்க.

ரொம்ப பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரங்க கிட்டே மட்டும் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லிடு. அப்படியே உன்னோட செல்போன் நம்பர்ஸ் எல்லாம் கொடு. அப்பப்போ வீட்டு மேல ஒரு கண் வெச்சுக்கச் சொல்லு.

அதுக்காக ஊர் முழுக்க நீ வெளியூர் போற விஷயத்தை டமாரம் அடிக்காதே. அது வம்பை விலை கொடுத்து வாங்கற மாதிரி. கொஞ்சம் உஷாரா தான் பேசணும். குறிப்பா கேண்டீன்ல, ஜிம்ல, கடைவீதில எல்லாம் இதுபத்தி பேசாதே.

ரொம்ப நம்பிக்கையான  நபர் ஒருத்தர் கிட்டே உன்னோட வீட்டுச் சாவி ஒண்ணைக் குடுத்து வை. ஏதாச்சும் அவசரமா வீட்டைத் திறக்க வேண்டியிருந்தா பயன்படும். முடிஞ்சா அப்பப்போ வீட்டை வந்து திறந்து பாத்துட்டுப் போகச் சொல்லு.

பேப்பர் காரப் பையன் கிட்டே மாசம் ஒண்ணாம் தியதில இருந்து பேப்பர் வேண்டாம்ன்னு சொல்லு. ஒரு வாரம், இரண்டு வாரத்துக்குப் பேப்பர் நிறுத்தினா நீ ஊர்ல இல்லேங்கற விஷயம் பேப்பர் காரப் பையனுக்கு தெரிஞ்சு போயிடும்.   அதே போல காலைல பால்க்காரர் கிட்டேயும் “கொஞ்ச நாளைக்குப் பால் வேண்டாப்பா..” ன்னு சொல்லி நிப்பாட்டி வை.

போஸ்ட் ஆபீஸ்ல போய் உன்னோட லெட்டர்ஸை எல்லாம் இரண்டு வாரம் கழிச்சு வந்து கலெக்ட் பண்ணிக்கறேன்னு சொல்லு. பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்ல அந்த வசதி இருக்கு.

வீட்ல இருக்கிற போனோட வால்யூமை ரொம்ப கம்மியா வை. ரொம்ப நேரம் சும்மா அடிச்சிட்டே இருக்கிற மாதிரி வெளியாட்களுக்குத் தெரியக் கூடாது. அதே மாதிரி உன்னோட ஆன்சரிங் மெஷின்ல நீ வெளியூர் போற சமாச்சாரத்தை எல்லாம் போட்டு வைக்காதே.

வீட்டு முற்றத்துல சைக்கிள், பாத்திரம், விளையாட்டு இப்படிப்பட்ட ஐட்டம்ஸ் எல்லாம் போட்டு வைக்காதே. அதையெல்லாம் வீட்டுக்குள்ளே பத்திரமா பூட்டி வெச்சுடு.  வீட்ல இருக்கிற பணம், நகை எல்லாத்தையும் மறக்காம பேங்க் லாக்கர்ல வெச்சுடு. வீட்ல அலமாராவில போட்டு பூட்டி வைக்கிற வேலையே வேண்டாம்.
காரை தெருவிலே நிப்பாட்டுவேன்னா, யாரையாவது வெச்சு காரை அப்பப்போ எடுத்து இடம் மாத்தி நிப்பாட்டச் சொல்லு. ஆள் இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் கிடைக்கும்.

வீடு ஆள் நடமாட்டம் இருக்கும்போ எப்படி இருக்குமோ அதே மாதிரி இருக்கற மாதிரி செட் பண்ணு. குறிப்பா டோர் கர்ட்டன், விண்டோ கர்ட்டனெல்லாம் முழுசா இழுத்து மூட வேண்டாம். நார்மலா இருக்கட்டும். சன்னல் பக்கத்துல அலமாரா, டீவி இப்படிப் பட்ட பொருள் இருந்தா கொஞ்சம் தள்ளி வைக்கப் பாரு.

முடிஞ்சா கிளம்பறதுக்கு முன்னாடி வீட்டை ஹேண்டி கேம்ல வீடியோ எடுத்து வை. திரும்பி வந்தப்புறம் எல்லாம் அதனதன் இடத்துல இருக்கான்னு செக் பண்ண வசதியா இருக்கும்.

கடைசியா ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். உன்னோட ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் நீ வெளியூர் போற விஷயத்தைச் சொல்லு. போலீஸ் விடியற்காலை, ராத்திரின்னு அடிக்கடி அந்தப் பக்கமா விசிட் அடிக்கும்போ உங்க வீட்டுப் பக்கத்துல இறங்கி ஒரு பார்வை பாத்துட்டு போவாங்க ! இதுக்கு கட்டணம் ஏதும் கிடையாது ! ரொம்ப பேருக்கு இப்படி ஒரு போலீஸ் சர்வீஸ் இருக்கிறதே தெரியாது !

சொல்லி விட்டு நீளமாய் பெருமூச்சு விட்ட மாலதி கேட்டாள் “என்ன ? சத்தமே காணோம் ? நான் சொல்றதெல்லாம் நோட் பண்ணிட்டியா இல்லையா ?”  

“நோட் பண்ணல, ஆனா எல்லாத்தையும் மொபைல்லயே ரெக்கார்ட் பண்ணிட்டேன். இதுல இவ்ளோ விஷயம் இருக்கிறது எனக்குத் தெரியவே இல்லைடி. நான் வெளியூர் போறதுக்கு முன்னாடி உன்னை வீட்ல வந்து பாக்கறேன்” ரம்யா சிரித்தாள்.

“ஓ.. வீட்டுக்கு வரியா ?”

“ஆமா… என்னோட வீட்டுச் சாவி ஒண்ணை உன் கிட்டே தான் குடுத்துட்டுப் போகப் போறேன். அப்பப்போ வந்து வீட்டைப் பாத்துக்கோ”

“அடிப்பாவி… கடைசில ஐடியா குடுத்தவளை வாட்ச்மேன் ஆக்கிட்டியே” மாலதி நகைச்சுவையாய் சொல்ல ரம்யா சிரித்தாள். அந்த சிரிப்பில்  உற்சாகம் மின்னியது

நன்றி : பெண்ணே நீ

தமிழிஷில் வாக்களிக்க

பெண்களை விருந்துக்கு அழைத்து…பின்….

டேட் ரேப் :  ஒரு பகீர் பயங்கரம்.

 

“ஹேப்பி பர்த் டே”

சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை.

“தேங்க்யூ ..”

“அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா  ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான்.

“ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள்.

“டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?”

சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்று காரில் ஏறிப் போய் விட்டான் விக்னேஷ்.

விக்னேஷ் வசந்தியோடு வேலை பார்ப்பவன். கடந்த ஒரு ஆண்டாக இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. வசந்திக்கு விக்னேஷை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே கண்ணியமாய் நடந்து கொள்வான். என்ன தேவையென்றாலும் வந்து உதவுவான். அறிவுரைகள் சொல்வான். போதாக்குறைக்கு அவ்வப்போது அவளை சில்லென மாற்றும் ஐஸ் கட்டிகளையும் வைத்துப் போவான் !

அதிகாலையிலேயே உற்சாகம் வந்து தொற்றிக் கொண்டது வசந்திக்கு. புத்தம் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு அலுவலகம் சென்றாள். எல்லோரிடமும் வாழ்த்துக்களை வாங்கி வாங்கி அவளுடைய பொழுது ரொம்ப சுவாரஸ்யமாகக் கழிந்தது.

மாலை நேரம் !

“போலாமா ?” கார் சாவியைக் கையில் வைத்து சுழற்றிக் கொண்டே கேட்டான் விக்னேஷ்.

“எங்கே ?” வசந்தி விளையாடினாள்.

“எங்கேயா ?…. ஹேய்… காலைலயே சொன்னேன்..  டின்னர் எல்லாமே ரெடி.. கமான்…” விக்னேஷ் குரலில் இருந்த கெஞ்சலை ரசித்துக் கொண்டே வசந்தி சொன்னாள், 

“சரி..சரி.. நான் ரெடி… பட்… கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் ஓகேவா ?”

“யா…”

இருவரும் காரில் கிளம்பினார்கள். கார் நேராக விக்னேஷின் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

“என்ன.. உங்க வீட்டுக்கு வரீங்க ? ஹோட்டல் போவோம்ன்னு நினைச்சேன்… ”

“ஸ்பெஷல் டின்னரெல்லாம் ஹோட்டல்ல குடுக்க முடியுமா என்ன ? நானே ஸ்பெஷலா பண்ணியிருக்கேன் வாங்க…”

விக்னேஷின் வித்தியாசமான அணுகுமுறை வசந்திக்குச் சிலிர்ப்பாய் இருந்தது.

மிக அழகான வீடு. வெகு சுத்தமாக இருந்தது. ஒரு பேச்சிலர் தங்கும் வீடு என்பதை சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது ! “ஒருவேளை நான் வருவேன் என்று சொன்னதால் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்திருக்கிறானோ ?” வசந்தியின் மனதில் கேள்விகள் ஓடின.

விக்னேஷ் வசந்தியை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.

“வாவ் !!! ..” வசந்தி விழிகளை விரித்து ஆச்சரியப் பட்டாள்.

டேபிளின் நடுவே ஒரு கேக். அருகே இரண்டு மெழுகுவர்த்திகள். சுற்றிலும் உணவு வகைகள் மூடப்பட்ட பாத்திரங்களில்.

“என்ன விக்னேஷ்.. கலக்கறீங்க. என் லைஃப்ல நான் இப்படி ஒரு டிரீட் வாங்கினதே இல்லை” வசந்தி நெகிழ்ந்தாள்.

“நானும் இப்படி ஒரு டிரீட்டை யாருக்கும் குடுத்ததில்லை. இதான் முதல் தடவை”

டின்னர் சாப்பாடு ரொம்பவே மகிழ்வாய் சென்று கொண்டிருந்தது.

விக்னேஷ் ஒரு கப்பில் கொஞ்சமாய் வைன் ஊற்றி வசந்தியிடம் நீட்டினான்.

“என்னது இது ?”

“இது ஷேர்டோனே…”

“நான் பெயரைக் கேக்கலை… இது வைனா ?”

“ஏன் வைன்னு சொல்றீங்க, பதப்படுத்தப்பட்ட திராட்சைப் பழரசம் ன்னு தமிழ்ல்ல சொல்லுங்க” விக்னேஷ் சிரித்துக் கொண்டே வசந்தியின் கைகளில் அதைத் திணித்தான். “இது டாஸ்மாக் சரக்கு கிடையாதுங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது !”

வசந்தி தயக்கத்துடன் வாங்கி அருந்தினாள்.

கொஞ்ச நேரத்தில் ஒரு வித மயக்க நிலைக்குப் போனாள்.

“விக்னேஷ்…. வாட்ஸ் ஹே…ப்பனிங்யா…. “ வசந்தியின் குரல் குழறியது.

விக்னேஷ் இதற்காகவே காத்திருந்தவன் போல அவளைக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த படுக்கையறைக்குப் போனான். ஒரு வெறிப் புன்னகை அவனுடைய இதழ்களில் கோரமாய் உறைந்தது !

மறு நாள் காலையில் விக்னேஷின் படுக்கையறையில் கண் விழித்த வசந்திக்கு படு பயங்கர ஷாக்…. என்ன நடந்தது என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தது.

விக்னேஷ் எதுவும் தெரியாதது போல ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தான்.

“விக்னேஷ்.. நேற்று என்ன ஆச்சு ?” வசந்தியின் குரலில் பதட்டம்.

“நத்திங்… வைன் குடிச்சே… தூக்கம் வருதுன்னு சொன்னே… பெட்ல படுக்க வெச்சேன்.. தட்ஸ் ஆல்” விக்னேஷ் சொன்னான்.

“பொய் சொல்லாதே விக்னேஷ்.. எனக்குத் தெரியும்… வாட் ஹேப்பண்ட் ?”

“நான் ஏதும் பண்ணல, நீதான் என்னைக் கம்பல் பண்ணி.…” வின்கேஷ் சொல்லிவிட்டு டீவியில் பார்வையை ஓட்டினான்…

வசந்தி உடைந்து போய் உட்கார்ந்தாள்.

சில நாட்களுக்குப் பின், நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தனது தோழியிடன் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் அவளுக்கு “டேட் ரேப்” எனும் விஷயமே தெரிய வந்தது.

அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.

தெரிந்த பெண்களை வசீகரமாய்ப் பேசி ஹோட்டலுக்கோ, தனிமையான இடங்களுக்கோ அழைத்துச் செல்ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்ய வேண்டியது. இது தான் டேட் ரேப்பின் அடிப்படை.

மது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலபமாகி விடுகிறது. பெண்களைக் கட்டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள். 

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக்காது. “நீதான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன்னே !” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந்திருக்கலாமோ ? “ என்று தான் நினைக்கத் தோன்றும்.

“என்னால தான் இப்படியெல்லாம் நடந்திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியுடனும், வலியுடனும் பெண்கள் முடங்கிவிடுவார்கள். !

பதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது இங்கிலாந்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காதலன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுகமானவர் இப்படிப் பட்டவர்களால் தான் நடக்கிறதாம்.

“அவளோட ஆடையே ரொம்ப செக்ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால்ஜாப்புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லாமலும் நடக்கும் எந்த உறவும் பலாத்காரம் தான். செக்ஸி ஆடை அணிவது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழைப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்களுடைய அறியாமை மட்டுமே.

டேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எதுவும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.

ரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்கப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்துகள். மூன்றாவது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் !

இந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியாவில் வெகு சாதாரணமாகக் கிடைக்கின்றன என்பது திகிலூட்டும் உண்மையாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவையும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

மயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மதுவிலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண்ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத்தால் விஷயம் முடிந்து விட்டது !. குடிப்பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழுமையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளியின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.

பெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கிறது காவல் துறை.  இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப்பதைக் காட்டிக் கொடுக்காது. எழுபத்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும் ! அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் உயிரே போய்விடும் எனும் அதிக பட்ச ஆபத்தும் இத்தகைய மருந்துகளில் உண்டு.

“இத்தகைய மருந்துகளைத் தான் ரயிலில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகாரிகள்.

உலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமானவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சைக்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அதனால் உலக நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இந்த டேட் ரேப் மாத்திரைகளின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.

வருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத்தில் ஒரே வழி !

  • பலாத்காரம் செய்பவர் சினிமாவில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக்காதீர்கள். ரொம்ப டீசண்டான  பார்ட்டியாக இருப்பார்.
  • 80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல்லது பெண்களின் வீடுகளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.
  • பாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் ! எனவே எச்சரிக்கை தேவை.
  • இத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொதுவாக இரவு விடுதி, நடன அரங்கு போன்ற இடங்களுக்கு சரியான பாதுகாவலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.
  • பார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள். 
  • எப்போதும் அலர்ட்டாக இருங்கள். ஏதேனும் தவறு நடக்கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.
  • ரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல்லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம்.
  • தெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண்டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.
  • இணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப்பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்களுடன் மதுவெல்லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.
  • ஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களையும் தொடாதீர்கள்.
  • உங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், செலவு செய்தாலும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண்டியதே இல்லை. எந்த நிலையிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத்தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.
  • ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாருங்கள். “ஐயோ என்னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என்றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.

விழிப்பாய் இருந்தால், விழாமல் இருக்கலாம்.

Thanks : Pennae Nee

தமிழிஷில் வாக்களிக்கலாமே…

மிஸ்ட் கால் பயங்கரம் ! உஷார் !!!

கல்பனாவின் எண்ணுக்கு அந்த மிஸ்ட் கால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தாள். ஊஹூம் யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. சரி யாராய் இருக்கும் என கூப்பிட்டுப் பார்ப்போமே என்று அந்த எண்ணை அழைத்தாள்.

“உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்துது” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. ஹாய்… நீங்க கல்பனா தானே ?” மறுமுனையில் ஒரு வசீகரிக்கும் ஆண் குரல். அந்தக் குரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி சொன்னாள்.

“இல்லீங்க… இது ராங் நம்பர்…..”

“ஓ… ஐ யாம் சாரி இந்த நம்பர் தான் குடுத்தாங்க… ” மறுமுனையில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“சாரிங்க.. இது ராங் நம்பர்…” சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி. அந்த நிகழ்ச்சியை அத்தோடு மறந்தும் போய்விட்டாள்.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு. அழைத்தது அவனே தான்.

“கல்பனா இருக்காங்களா ? “ அதே குரல் !

“இல்லீங்க, மறுபடியும் நீங்க தப்பான நம்பருக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன நம்பர் வேணும் ?” சுகந்தி கேட்டாள்.

அவன் சொன்னான் !

“ஐயோ.. இது எங்க வீட்டு நம்பர். நீங்க தப்பா நோட் பண்ணியிருப்பீங்க… முதல்ல போய் சரியான நம்பரை வாங்கிக்கோங்க ” சுகந்தி சொன்னாள்.

“அதான் என்னோட பிரச்சினையே ! தப்பா நினைச்சுக்காதீங்க. நான் அண்ணா யூனிவர்சிடி ல பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கேங்க. சில தகவல்களைத் தேடி அலையறேன். கிடைக்கவே இல்லை. கல்பனா கிட்டே அந்த தகவல்கள் இருக்குன்னு சொன்னாங்க. யூனிவர்சிடில அவங்க நம்பர்ன்னு இதைத் தான் குடுத்தாங்க… எப்படின்னு தெரியல…” மறுமுனையில் அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது.

அண்ணா யூனிவர்சிடி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு. இவளும் எம்.பில் முடித்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ண வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவள் தான்.

“ஓ.. என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார் ?” சுகந்தி கேட்டாள்.

“என்னை நீங்க விஜய்ன்னே கூப்பிடலாம். சார் ன்னு கூப்பிடற அளவுக்கு இன்னும் வயசாகலை எனக்கு “ மறு முனையில் விஜய் சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.

“நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க”

“ஓ..ரியலி.. நான் கூட அதே ஏரியால தான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. நீங்க கூட ஸ்டுடண்டா ? வாவ்… இஃப் யூ டோண்ட் மைண்ட்…. எனக்கு கொஞ்சம் தகவல்கள் கொடுக்க முடியுமா ?” விஜய் கேட்டான்.

“தகவல்ன்னு சொன்னா….” சுகந்தி இழுத்தாள்.

“உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வெச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க… ஏதோ இந்த போனா போவுதுன்னு ரெண்டு மூணு தகவல் குடுத்தீங்கன்னா கூட போதும்” அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள்.

“நீங்க எங்கே தங்கியிருக்கீங்க ?” சுகந்தி கேட்டாள்.

“நான் சிஸ் மெரிடியன், வேளச்சேரி “ விஜய் சொல்ல சுகந்தி ஆச்சரியமானாள். அவளும் அதே தெருவில் இருக்கும் காஸா பிளாங்கா அப்பார்ட்மெண்டில் தான் இருந்தாள்.

இருவரும் சில நாட்களுக்குப் பின் ரத்னா கஃபேவில் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் பழக்கம் முதலில் ஆரோக்கியமான கல்வியில் ஆரம்பித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தளம் மாறியது !

“என்ன மேடம், ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டு அப்பா அம்மாவை அறிமுகப் படுத்த மாட்டேங்கறீங்க, ஒரு கப் காபி தரமாட்டேங்கறீங்க ?” விஜய் சீண்டினான்.

“காபி வேணும்ன்னா இன்னிக்கே வாங்க…” சுகந்தி விஜயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குப் பிடித்தவருடனான மாலைப் பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது. நெருக்கமும், இணக்கமும் அவர்களை எல்லை தாண்ட வைத்தது. முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம் பின்னர் அடிக்கடி நடந்தது !

திடீரென ஒருநாள் விஜய் காணாமல் போய்விட்டான் ! அவனுடைய செல்போன் நம்பரை அழைத்தால், அது உபயோகத்தில் இல்லை என்றது. சுகந்திக்குப் பதட்டம் அதிகரித்தது. அவனுடைய அப்பார்ட்மெண்டில் சென்று விசாரித்தால் அப்படி யாரும் அங்கே இருந்திருக்கவில்லை. யூனிவர்சிட்டியில் தெரிந்த நபர்கள் மூலமாக விசாரித்தால் அங்கும் அவனைப் பற்றிய தடயங்கள் ஏதும் இருக்கவில்லை.

உட்கார்ந்து யோசித்தவளுக்குத் தான் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஒரு ராங் நம்பரில் ஆரம்பித்தவர் ராங் நபர் என்பது அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான். இவளுடைய குடும்பம் பற்றியும், படிப்பு பற்றியும், ரசனை பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டே அவளை வலையில் வீழ்த்தியிருக்கிறான். சுகந்திக்கு அவமானமாய் இருந்தது.  கடுமையான ஏமாற்றம் மன உளைச்சல் என உழன்ற சுகந்தி வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது ரொம்ப தாமதமாகியிருந்தது.

இது ஏதோ ஒரு சுகந்திக்கு நடந்த கதையல்ல. நகரின் பல இடங்களிலும் பல வகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே. சைபர் கிரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன.

மிஸ்ட் கால், ராங் நம்பர்  போன்றவையெல்லாம் ஒரு தூண்டில் என்பதை பலரும் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. யாரோ அழைத்திருக்கிறார்களே ஏதாவது முக்கியமான சமாச்சாரமோ ? என திரும்ப அழைத்தால் போச்சு ! பேசிப் பேசி வசீகரித்து ஏமாற்றி விட மறு முனை காத்துக் கொண்டிருக்கிறது !

தெரியாத எண்ணிலிருந்து மிஸ்ட் கால் வந்தால் அந்த எண்ணுக்குத் திரும்ப அழைக்காமல் இருப்பது தான் உசிதம். ஒருவேளை அழைத்தவர் ஏதேனும் முக்கியமான தகவல் சொல்லவேண்டுமென்றால் மீண்டும் அழைப்பார் என காத்திருப்பது தான் நல்லது. பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் உங்கள் கணவரிடமோ, அப்பாவிடமோ கொடுத்து பேசச் சொல்லுங்கள்,

“ஓ… அப்படியா ? என் நம்பர்ல இருந்து மிஸ்ட் கால் வந்திருந்ததா ? இருக்காதே …” என பார்ட்டி எஸ்கேப் ஆகி விடுவார்.

வீட்டு எண்ணுக்குக் அழைப்புகள் வருவதிலும் பல கொக்கிகள் உண்டு. வீட்டில் ஆள் இருக்கிறார்களா ? வெளியே எங்கேயாவது போயிருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவும் போன் செய்வார்கள். உங்கள் கவனத்தைத் திசை திருப்பி வீட்டுக்குள் நுழைய முயலவும் போன் செய்வார்கள். உஷாராய் இருங்கள். 

ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இணைய தளங்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு. அந்தப் படங்களைப் பார்த்து, எண்ணைப் பார்த்து உங்களுக்கு மிஸ்ட் கால் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அந்த புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் போட்டு உங்கள் பெயருக்குக் களங்கள் விளைவிக்கவும் முயல்வார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இத்தகைய செய்திகளை விளக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் மொபைல் எண்களை கடைகளில் சர்வீஸுக்குக் கொடுக்கும் போது தெரியாத இடங்களில் கொடுக்காதீர்கள்.  உங்கள் செல்போனிலுள்ள தகவல்கள் பிரதி எடுக்கப்படலாம். உங்களுடைய மொலைலில் இருந்து நீங்கள் அழித்து விட்ட தகவல்களைக் கூட மீண்டெடுக்க மென்பொருட்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள். அதே போல புளூடூத் எப்போதும் இயக்க நிலையில் இருப்பதும் சிக்கலானதே. 

இன்னொரு விஷயம், உங்களுக்கு மின்னஞ்சலிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, இணைய தளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள். இது சிக்கலை நீங்களே போய் காசு கொடுத்து வாங்கி வருவதற்குச் சமம்.

மிஸ்ட் கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ்.எம்.எஸ். முதலில் “குட் நைட்” என்று ஒரு எஸ் எம் எஸ் வரும். “ யாரது ? “ என்று நீங்கள் திரும்பி எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்ட்டில் சேர்ந்து விடுவீர்கள். பின் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். சைலண்டாக விட்டு விட்டால் தப்பிக்கலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், தெரியாத எண்களிலிருந்து வரும் மிஸ்ட் கால், ராங் கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள். தேவையற்ற பல சிக்கல்கள் தவிர்க்கப் பட்டு விடும். 

டாப் 10 ஷாப்பிங் டிப்ஸ்

 

கிடைக்கும் போனஸ் பணத்தில் ஏசி வாங்க வேண்டும், டி.வி வாங்க வேண்டும், பிரிட்ஜ் வாங்க வேண்டும் என திட்டமிடுவது சகஜம். அப்படி காத்திருந்து காத்திருந்து வாங்கும் பொருள் நமக்கு தலைவலியாய் மாறி விடக் கூடாது. அதற்கு கொஞ்சம் விஷயங்களை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

1. எந்தப் பொருள் வாங்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்தப் பொருளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுங்கள். அதே பொருள் அதே வசதிகளுடன் வேறு பிராண்டில் என்ன விலை என்பதைப் பாருங்கள். எந்தக் கம்பெனி நம்பிக்கையானது, எது அதிக கேரண்டி தருகிறது என்பதையெல்லாம் அறிந்தபின் முடிவெடுங்கள்.

2. இந்த விலையில் தான் பொருள் என முதலிலேயே முடிவு செய்ய வேண்டியது முக்கியம். அப்போது தான் அந்த விலையில் கிடைக்கக் கூடிய நல்ல பொருள் எது என உங்கள் தேடுதல் கூர்மையாகும். தேவையில்லாமல் ஆசைப்பட்டு விழா நாளில் மனவருத்தம் கொள்ள வேண்டியிருக்காது.

3. பொருளை வாங்கும் முன் அந்த பொருள் குறித்த விமர்சனங்கள், அலசல்கள் போன்றவற்றை கவனமாய் படியுங்கள். விளம்பரங்களைப் பார்த்து உடனே வாங்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதீர்கள். இணையத்தில் துழாவினால் அக்கு வேறு ஆணி வேறாக தகவல்களை அள்ளித் தருவார்கள்.

4. வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, ஏசி போன்றவற்றை “பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறதே” என வாங்காதீர்கள். எப்படி அதைப் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை பேர் பயன்படுத்தப் போகிறீர்கள். எத்தனை முறை பயன்படுத்தப் போகிறீர்கள். எந்த அறையில் அதை வைக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

5. “மின்சாரத்தைச் சேமிக்கும்” என நட்சத்திர அடையாளம் போட்டிருக்கும் பொருட்களை வாங்குவது நல்லது. அவை உங்களுடைய செலவையும் குறைக்கும். நாட்டுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தை நீங்கள் சேமிக்கும் போதும் நாட்டுக்காய் ஒரு யூனிட் மின்சாரத்தைத் தயாராக்குகிறீர்கள் என்பது தான் பொருள்.

6. பொருள் வாங்கும் போது கேரண்டி அட்டை, வாரண்டி அட்டை, மேனுவல், ரசீதுகள் போன்ற அனைத்தையும் கவனமாய் கேட்டு வாங்குங்கள்.

7. பில்லைச் சரிபார்ப்பதும், கேரண்டி அட்டையில் சீல், கையொப்பம் எல்லாம் இடப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதும் அவசியம். வாங்கும் போது கடைக்காரர்கள் உங்களிடம் அன்பாய் சிரித்துப் பேசுவார்கள். பழுது என்று போனால் வேறு விதமாக உங்களிடம் நடந்து கொள்வார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

8. பொருளை வாங்கி வீட்டிக் கொண்டு வைத்து விட்டு எப்படி இயக்குவது என கற்றுக் கொள்ள வேண்டாம். கடையிலேயே இயக்குவது குறித்த அனைத்து தகவல்களையும் ஒன்று விடாமல் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக ரிமோட் சமாச்சாரங்களை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

9. வாங்கும் போது மேனுவலைப் பார்த்து பொருளுடன் எல்லா இணை பொருட்களும் தரப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில நிறுவனங்கள் எக்ஸ்டா இணைப்புகளை இலவசமாகக் கொடுப்பார்கள். மேனுவலைப் பார்த்தால் தான் அது தெரியும்.

10. சர்வீஸ் செண்டர் எங்கே இருக்கிறது ? ஒரு வருடத்துக்கான சர்வீஸ் ஒப்பந்தம் இட்டால் எவ்வளவு பணம் ஆகும் ? இந்த நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி இருக்கிறது ? சர்வீஸ் விலை எப்படி ? என்பதை முழுமையாய் அறிந்து கொள்ளுங்கள். பொருள் வாங்கியபின் நமக்குத் தேவை தரமான சர்வீஸ் தான். “சர்வீஸ் நல்லாயில்லை” என்றால் பொருளை வாங்காமல் இருப்பது விவேகம்.

இன்றைய நூதன மோசடிகள்…

எப்படிக் கவிழ்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேடுபவர்களுக்குப் பஞ்சமேயில்லை. அதே அளவுக்கு, எப்படா வாய்ப்புக் கிடைக்கும் ஏமாறலாம் என அப்பாவியாய் இருப்பவர்களுக்கும் பஞ்சமில்லை. கொஞ்சம் உஷாராய் இருந்தால் எந்த பெரிய ஏமாற்றையும் எளிதில் கண்டு கொண்டு தப்பி விடலாம்.

பெரும்பாலான மக்களை அன்றும் இன்றும் வாட்டிக் கொண்டிருப்பது பைனான்ஸ் சமாச்சாரங்கள் தான். இதில் பல முகங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் கட்டுங்கள், ஆறு வருஷம் கழிச்சு யானை வரும் என்பது ஒரு வகை. உங்கள் பணத்துக்கு வட்டி நாப்பது சதவீதம் என சிலிர்ப்பூட்டுவது இன்னொரு வகை. கட்டுங்கள் உங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம் கிடைக்கும் என்பது சர்வதேச வகை. அப்பாடா, இப்போதான் சரியா ஒரு சேமிப்பு ஐடியா வந்திருக்கு என நீங்கள் நினைத்தால் சேமித்ததெல்லாம் போச்சு !

பைனான்ஸ் விஷயங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து மிரட்டுவது ரியல் எஸ்டேட் பிரச்சினைகள். அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கேட்கவே வேண்டாம். எப்படி ஏமாற்றுவது என்பதை ரூம் போட்டு யோசிப்பார்களோ என கேட்கத் தோன்றும். சேல் டீட் இருக்கிறது, பட்டா இருக்கிறது, அப்ரூவ்ட் லேண்ட் பழத்தில் ஊசி ஏற்றுவார்கள். கடைசியில் பார்த்தால் ஒரு இடத்தை நான்கு பேருக்கு விற்றிருப்பார்கள். அல்லது எல்லாமே போலியாய் தயாரித்த பத்திரமாய் இருக்கும்.

வழக்கமா இங்கே நாப்பது இலட்சம் போகும். ஒரு இடம் இருக்கு. இருபதுக்கு முடிச்சு தரேன். யார்கிட்டேயும் சொல்லாதீங்க. அப்புறம் போட்டிக்கு வந்துடுவாங்க என்றெல்லாம் ஒருவர் இழுக்கிறார் என்றாலே விவகாரம் தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இதை விட நல்ல இடம், இதை விட நல்ல விலைக்குக் கிடைக்காது என்று உங்களை நம்ப வைப்பதில் தான் இந்த புரோக்கர்களின் புத்திசாலித்தனமே இருக்கிறது. அவர்களுடைய வலையில் விழுந்து விட்டால், சிலந்தி வலையில் விழுந்த ஈயாகி விடுவீர்கள்.

திடீரென ஒருவர் தனியே அழைத்துப் போய் காது கடிப்பார். சுகம் அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு இருக்கு. வீட்டோட நம்பர் 8. உங்களைப் பார்த்தா நம்பர்ல நம்பிக்கை இல்லாதவர் போல தெரியுது அதான் சொன்னேன். நியூமராலஜி பிராப்ளம் இருக்கிறதனால ரேட் படியமாட்டேங்குது. ஒரு நாலஞ்சு இலட்சம் கம்மியாவே முடிச்சிடலாம் என்பார். அட, செம லாபமாச்சே என அட்வான்ஸ் கிட்வான்ஸ் கொடுத்து விடாதீர்கள். வியக்கும் வாய்க்கு அல்வா தான் மிஞ்சும்.

நகர்ப்புறங்களில் திடீர் திடீரென முளைக்கும் சிட்டி கட்டி தங்கம் வாங்குவது, பாத்திரம் வாங்குவது, பட்டுப்புடவை வாங்குவது என பலவும் மோசடிகள் தான். ஒன்றுகில் உங்கள் பணத்தை அபேஸ் செய்வார்கள். அல்லது உதவாக்கரை பொருளை உங்கள் தலையில் கட்டி வைத்து விட்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இந்த சாதாரண ஏமாற்றுகளுக்கு அடுத்தபடியாக வந்திருப்பது ஹைடெக் மோசடிகள். இந்த ஹைடெக் மோசடிகளின் கதைகளைக் கேட்டால் புல்லரிக்கும். இப்படியெல்லாம் கூட ஏமாற்ற முடியுமா என நீங்கள் வியந்து போகும் படி இருக்கும் பல ஏமாற்று வித்தைகள்.

திடீரென உங்கள் மின்னஞ்சல் கதவை ஒரு மெயில் தட்டும். வாவ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். உங்களுக்கு ஐந்து இலட்சம் டாலர் பணம் கிடைத்திருக்கிறது. அதை அனுப்ப ஜஸ்ட் ஐம்பதாயிரம் ரூபாய் நீங்கள் அனுப்பவேண்டும். உங்கள் வங்கி எண், விலாசம் எல்லாம் குடுங்கள். என குஷிப்படுத்தும். “ஆஹா, வந்தாள் மஹாலட்சுமி ..” என குதித்தால் நீங்கள் அம்பேல். சைலண்டாக அந்த மின்னஞ்சலை டெலீட் செய்தால் நீங்கள் அறிவாளி.

கண்காட்சி, பொருட்காட்சி எங்கேயாவது போவீர்கள். தினசரி குலுக்கலில் எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு உங்கள் அட்ரஸ் எழுதிப் போடுவீர்கள். பார்த்தால் மறு நாள் மாலையிலேயே போன் வரும். எடுத்தால் மறு முனை பாராட்டும். “வாழ்த்துக்கள்… நீங்க எங்க குலுக்கலிலே பரிசு வாங்கியிருக்கீங்க. அதிர்ஷ்டசாலிதான். உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு. சரி சரி, ஒரு நாலாயிரத்து ஐநூறு ரூபா டிடி எடுத்து இந்த அட்ரஸுக்கு அனுப்புங்க. உங்களுக்கு பரிசும், சிங்கப்பூர் போக நாலு டிக்கெட்டும் கிடைக்கும்..” என சரமாரி கதை வரும். தெய்வத்துக்கு நாலு தோப்புக் கரணம் போட்டு விட்டு பணத்தோடு டிடி எடுக்க பேங்கிற்கு ஓடினால் நீங்கள் காலி ! கட்பண்ணிக் கடாசி விட்டு வேலையைப் பார்த்தீர்களென்றால் அறிவாளி.

திடீரென உங்களுக்கு ஒரு மெயில் வரும். அதில் ஒரு லிங்க். லிங்கைக் கிளிக் செய்தால் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பக்கம் வரும். உங்கள் விலாசம், தொலைபேசி எண், இத்யாதி எல்லாவற்றையும் எழுதுங்கள். இது எங்கள் வருடாந்திர ஆடிட். என மெசேஜ் இருக்கும். உண்மையில் அது போலி சைட். மெயில் அட்ரசில் சில எக்ஸ்டா எழுத்துக்களுடன் உல்டா பண்ணியிருப்பார்கள். நீங்கள் அவசரப்பட்டு உடனே பாஸ்புக், கிரெடிட் கார்ட், பின் நம்பர் என சர்வத்தையும் எண்டர் பண்ணினால் கிளீன் போல்ட். வங்கிக்குப் போன் செய்து விஷயத்தை உறுதிப்படுத்தினால் நீங்கள் சமர்த்து.

வீட்டிலிருந்தபடியே மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். நீங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிக்க வேண்டியது இந்தப் பொருள் தான். தயாரிக்கும் பொருளை நாங்களே மாதா மாதம் வந்து வாங்கி கொள்வோம். பேனாவை எப்படிச் செய்வது என்பதை அறிய சிடி, புத்தகம், எல்லாம் அனுப்புவோம். தேவைப்படுவோருக்கு வீட்டில் வந்தே செய்முறை விளக்கமும் சொல்லித் தருவோம். முப்பதாம் தியதிக்குள் ரிஜிஸ்டர் செய்யுங்கள். பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்புங்கள். என கடிதம் வரும். அப்பாடா நமக்கொரு விடிவு காலம் என நினைத்தால் அது முடிவு காலமாகிவிடும். கொஞ்சம் யோசித்தால் கண்டத்திலிருந்து தப்பிக்கலாம்.

உங்கள் முகவெட்டு நன்றாக இருக்கிறதா ? உங்களுடைய புகைப்படங்களை அனுப்புங்கள். போட்டோ டெஸ்டில் பாஸாகி விட்டால் புதிதாக எடுக்கப்போகிற படத்தில் நீங்கள் தான் ஹீரோ/ஹீரோயின். புகைப்படங்களையும், எண்ட்ரீ பீஸாக வெறும் ஐநூறையும் அனுப்புங்கள். முகவரி இது தான் என ஒரு கோடம்பாக்கம் சந்து வந்து நிற்கும். அனுப்பினால் அவ்ளோ தான். எப்படியெல்லாமோ உங்கள் வாழ்க்கை திசைமாறி சீரழிய வாய்ப்பு உண்டு.

நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென உங்களுக்கு ஒரு போன் வரும். நான் உங்கள் கவிதைகளைப் படித்து பிரமித்துவிட்டேன். நான் இயக்குனர் லொடுக்கு பாண்டி. நான் ஒரு புது படம் தயாரிக்கிறேன். படத்தின் பெயர் “நிலாவில் மழை”. ஒரு பாட்டு எழுத வேண்டியிருக்கு. சுஜாதாம்மா தான் பாடறாங்க. மேடைல பாடற மாதிரி கான்சப்ட் அது. தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு. உங்களுக்கு சினிமா பாட்டு எழுத வருமா ? என தூண்டில் நீளும். ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுங்க, படம் வெளியானதும் பணத்தை நிச்சயம் தந்திடுவேன் என்பார்கள். ஆஹா.. உலகப் புகழ் என நினைத்தால் அம்பேல்.

திடீரென ஒரு மின்னஞ்சல் வரும். உங்கள் டேக்ஸ் ரீபண்ட் பணம் நாற்பத்திரண்டாயிரத்து எழுநூறு ரூபாய். நீங்க 2450 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்புங்க. எந்த பெயருக்கு செக் அனுப்ப வேண்டும் என்பதை ஒரு முறை கன்பர்ம் செய்யுங்கள். என்றெல்லாம் கதை விடும். என்னடா இது கூப்பிட்டு கூப்பிட்டு கவர்மெண்ட் காசு குடுக்குது என நினைத்தால் நீங்கள் காலி.

வெளிநாட்டுல வேலை வேணுமா என கத்தரிக்காய் மாதிரி கூவிக் கூவி விற்கும் ரகம் ரொம்ப ஆபத்து. துபாய், பஹ்ரைன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களின் சமீப கால கூக்குரல் மலேஷியா. ஏதோ ஒரு பெரிய ஆயில் கம்பெனி பெயரில் இந்த வேலை ஏலம் நடக்கும். நீங்கள் பணத்தை ஆன்லைனில் அனுப்பிக் கொடுக்க வேண்டும். அப்பாடா, இப்போதான் தெய்வம் கண்ணைத் தொறந்திடுச்சு என மொத்தத்தையும் அடகு வெச்சு பணம் கட்டினீங்கன்னா அவ்ளோ தான். உஷாரா கவுன்சிலேட், கம்பெனி என எல்லா இடத்துலயும் தீர விசாரிச்சீங்கன்னா நீங்க சமத்து !

ஏமாற்று என்பது மூட்டைப் பூச்சி போல, ஒண்ணை நசுக்கினா எங்கிருந்தோ ஒன்பது வந்து சேரும். எனவே கவனமாய் இருக்க வேண்டியது நம்ம பொறுப்பு. இவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

1. திடீர் பணம், புகழ் போன்றவை வருகிறது எனும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும் போது அதிக கவனம் அவசியம்.

2. “உடனே” என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப் படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. “முன் பணம்” கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத் தான் இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவப்பட்ட நபர்களிடம் விவாதிக்க தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்த தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்த தளம் லிஸ்ட் ஆகிறதா, என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது !

7. சஞ்சலம் தான் முதல் எதிரி. “ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே….” என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட்கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்ட்டை பிளாக் செய்யலாம். அதை யாரும் பின்னர் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கை தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் செய்யுங்கள். ஆன்லைனில் ஏதாவது பத்திரிகை, குரூப், பிளாக் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசைகாட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல ஆண்டி வைரஸ் மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து ஆன்லைனிலேயே படித்து ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல போலி பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. உஷார். பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகளை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம் தான் வேஸ்ட்.

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் “உதவி” பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களுக்கே கொடுங்கள். நேரில் கொடுப்பதை விட சிறப்பானது வேறில்லை.