தனிமையை இனிமையாக்க

alone

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர்.

இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டும் என பரபரப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடைய அருகாமை தான் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இன்னும் சிலர் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பார்கள். தனிமையாய் இருந்தால் தனிமையை ரசித்துக் கொள்வார்கள். கூட்டத்தில் இருந்தால் அந்த கணத்தை நேசிப்பார்கள்.

வாழ்க்கை எந்திரமாகி விட்டது. அலுவலகப் பணிகளுக்கான ஓடல்களில் பெரும்பாலான நேரம் முடிந்து விடும். குடும்பத்தினருக்கான ஓட்டம் மீதி நேரத்தை அபகரித்துவிடும். எஞ்சியிருக்கும் நேரத்தை அரைகுறையாய் கிடைக்கும் தூக்கம் எடுத்துக் கொள்ளும். இதில் நம்மோடு நாமே இருக்கும் தனிமை நிமிடங்கள் கிடைப்பதே அபூர்வம்.

எது எப்படியோ, விரும்புகிறோமோ இல்லையோ, தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வப்போது சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த தனிமையான கணங்களை இனிமையான கணங்களாய் மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

தனிமையில் இருக்கையில் நீ உன்னோடு இருக்கிறாய். உன்னை உனக்குப் பிடிக்காவிட்டால் தான் தனிமை பிடிக்காமல் போகும். உன்னை உனக்குப் பிடிக்குமெனில் தனிமை என்பது வரவேற்புக்குரியது.

நாள் முழுக்க ஏதேதோ விஷயங்களுக்காக ஓடிய நம்மை நமக்கென இயங்க வைப்பது தனிமை தான். அத்தகைய தனிமை நிமிடங்களில் என்னென்ன செய்யலாம்.

1. எழுதலாம். நமக்குத் தோன்றும் விஷயங்கள், நமது அனுபவங்கள், அல்லது நமது கற்பனைகள் நமது ரகசிய மனக் கிடங்கு என ஏதோ ஒரு விஷயத்தை எழுதலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதோ, ஒரு டைரி வாங்குவதோ என எழுத்தின் தளம் எதுவாகவும் இருக்கலாம். எழுதுவது நமது மனதை மகிழ்வாக்கும், இலகுவாக்கும் கூடவே தனிமையை இனிமையாக்கும்.

2. ‘யாருமே இல்லேன்னா இதைச் செய்வேன்’ என எல்லாருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த விஷயத்தைச் செய்யுங்கள். அது கன்னா பின்னாவென நடனமாடுவதானாலும் சரி, சத்தமாய்ப் பாடுவதானாலும் சரி, ஒரு படம் பார்ப்பதானாலும் சரி, உங்கள் வீட்டுச் செல்லப் பிராணியுடன் உருண்டு புரள்வதானாலும் சரி எது உங்கள் ஏக்கமோ அதை நிறைவேற்றுங்கள்.

3. தனிமை தந்திருக்கும் சுதந்திரத்தை உணருங்கள். இது உங்களுக்கான நேரம், உங்களுக்கான தருணம். இங்கே நீங்கள் தான் பாஸ், நீங்கள் தான் வேலையா பவுலர், நீங்கள் தான் பேட்ஸ்மேன், நீங்கள் தான் அம்பயர் ஏன் நீங்கள் தான் பார்வையாளர்கள். எனவே உங்கள் ரசனையை செயல்படுத்துங்கள்.

4. தனிமையில் இருக்கும் போது நீங்கள் யாருடனெல்லாம் பகையாய் இருக்கிறீர்கள், வெறுப்பாய் இருக்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். நீண்ட நாட்களாகப் பேசாமலிருக்கும் நண்பர்களை நினையுங்கள் அந்த பெயர்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவராய் அழையுங்கள். “சும்மா தான் பேசி ரொம்ப நாளாச்சு” என இரண்டு நிமிடம் பேசுங்கள். சொல்ல முடியாத மகிழ்ச்சியை உணர்வீர்கள்.

5. உங்களுடைய நண்பர்கள் பட்டியலில், அல்லது உறவினர் பட்டியலில் ஒரு சில பெயர்கள் உங்களிடம் எப்போதும் இருக்கும். ‘இவனை மன்னிக்கவே கூடாது’ எனும் செய்தியுடன். அதில் ஒரு நபருக்கு போன் பண்ணுங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லாவிட்டாலும் கூட ஒரு மன்னிப்பைக் கேளுங்கள். மனித நேயத்தின் அற்புத தருணத்தை உணர்வீர்கள்.

6. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு காதல் கடிதம் எழுதுங்கள். திருமணம் ஆகவில்லையேல் உங்கள் பெற்றோருக்கு ஒரு அன்பின் மடல் எழுதுங்கள். எழுதும்போது அவர்கள் உங்களுக்காய் செய்த நல்ல விஷயங்கள் மட்டுமே மனதில் வரிசையாய் வரட்டும். உங்கள் இதயத்தின் அன்பைப் பிழிந்து வடிக்கும் அந்தக் கடிதம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

7. தனிமை நேரத்தை உங்களுடைய திட்டமிடலுக்குப் பயன்படுத்துங்கள். அல்லது உங்களுடைய பழைய பொருட்களையெல்லாம் புரட்டிப் பார்த்து அடுக்கி வைப்பதில் செலவிடுங்கள். பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்து அந்தக் காலத்துக்குச் சென்று வாருங்கள். அந்த நினைவுகள் நம்மை ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

8. ஒரு புதிய கலையைக் கற்றுக் கொள்ள அந்த நேரத்தைச் செலவிடலாம். அது ஒரு புதிர் விளையாட்டைக் கற்றுக் கொள்வதானாலும் சரி, ஒரு இசைக்கருவியை கற்றுக் கொள்வதானாலும் சரி, அல்லது கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்வதானாலும் சரி. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவது உங்களுக்கு உற்சாகமூட்டும்.

9. தியானம் செய்யலாம். தனிமை கிடைப்பது தியானத்துக்கு ஜாக்பாட் போல. செல்போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடலாம். அல்லது வெறுமனே பகல் கனவுக்குள் நுழைந்து மனதை இலகுவாக்கலாம்.

10. வாசிக்கலாம். ஒரு நல்ல நூலை வாசிப்பது உங்களுடைய தனிமைக்குத் துணை. கூடவே உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எந்த புத்தகம் என்றில்லை, எது உங்களுக்குப் பயனளிக்குமோ அதைப் படியுங்கள்.

தனிமையை இனிமையாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அதை அர்த்தமுள்ளதாகவும், இனிமையுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றவும் ஏராளம் வழிகள் உண்டு. அவற்றில் ஒரு பத்து சிந்தனைகளே இவை. முயற்சி செய்து பாருங்கள்.

 

Thanks Vettimani, London.

ஆன்மீகம் : பெண்மையைப் போற்றுவோம்

couple

ரெண்டு பேர் சீட்டு விளையாடிட்டு இருந்தாங்க. அவங்க கைல இருந்த சீட்டுகள் எல்லாம் மாறி மாறி சண்டை போட்டுச்சாம். ராஜா சொல்லிச்சாம், நான் தான் ராஜா. எனக்கு தான் மரியாதை அதிகம். உடனே ராணி சொல்லிச்சாம், ‘பேச வந்துட்டான் பாரு’ நான் தான் பவர்புல். எனக்கு வேற யாரும் தேவையில்லைன்னு. சட்டுன்னு ஜோக்கர் வந்து சொல்லிச்சாம், நீங்க என்னதான் பெரிய பிஸ்தாவா இருந்தாலும் என்னைத் தான் எல்லாரும் விரும்பி தேடுவாங்க, நான் தான் கேம் ஃபினிஷர் ன்னு ! கொஞ்ச நேரம் கழிச்சு, சீட்டு விளையாடின ரெண்டு பேரும் எல்லா சீட்டையும் அடுக்கி, டப்பாக்குள்ள போட்டு மூடி ஓரமா தூக்கிப் போட்டாங்க. சீட்டுகள் எல்லாம் இருட்டுக்குள்ள போய் பேசாம வாய மூடிட்டு கிடந்துச்சாம்.

இப்படித் தான் மனித வாழ்க்கை. வாழ்க்கை எனும் ஆட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. ஒவ்வொரு தேவை. ஒவ்வொரு எதிர்பார்ப்பு. ஆட்டம் முடிந்து விட்டால் எல்லாருமே ஒன்றாக, ஒரே மூலையில். இப்படி ஒரு பிரபல பழமொழியும் உண்டு. மண்ணிலிருந்து வந்து மண்ணுக்கே திரும்பும் வாழ்க்கை. இந்த ஒரு சின்ன உண்மையைப் புரிந்து கொள்ளாததால் தான் இன்றைக்கு உலகில் நான் பெரியவனா, நீ பெரியவனா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, அடக்குமுறையா அதுவா இதுவா என பல்வேறு போராட்டங்கள், குழப்பங்கள்.

உலகில் வாழ்ந்தாலும், உலகிற்காய் வாழாத வாழ்க்கை தான் கிறிஸ்தவர்களின் அடிப்படை. கிறிஸ்தவராக மாறிவிட்டாலே வேற்றுமைகள் மனதிலிருந்து அகன்று போய்விட வேண்டும் என்பதையே இறைவன் எதிர்பார்க்கிறார். “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.” கலாத்தியர் 3-28, எனும் வசனம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

எல்லோரும் இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம், இயேசு எனும் திராட்சைக் கொடியின் கிளைகளாக இருக்கிறோம். அவருடைய உடலின் உறுப்புகளாய் இருக்கிறோம். அது சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி, ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி கடவுளின் பார்வையில் எல்லாரும் ஒன்றே !

இந்த இடத்தில் தான் நம்முடைய சிந்தனைகள் பல வேளைகளில் மாறுபட்டு ஓடுகின்றன. எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம் என்பதால் எல்லாரும் ஒரே செயலையோ, ஒரே பணியையோ செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. ஒவ்வொருவருக்கும் இறைவன் என்ன பணியைத் தந்திருக்கிறாரோ அதைச் செய்வதே மிக முக்கியம்.
1. துணையாளர் எனும் தூய பணி

பெண்களுக்கு இறைவன் கொடுத்த முதல் பணி துணையாளர் பணி ! ஆதாமைப் படைத்த இறைவன் ஏவாளை ஆதாமின் துணையாளனாக, இணையாளனாகப் படைக்கிறார். ஆதாமுக்குத் துணையாகத் தானே இறைவன் ஏவாளைப் படைத்தார், அப்படியானால் ஏவாள் இரண்டாம்பட்சம் தானே எனும் தவறான எண்ணம் பரவலாக உண்டு. அதற்காகத் தான் இறைவன், யோவான் 14 : 16, ல் தூய ஆவியானவரையும் ‘துணையாளர்” என அழைத்து நமது சந்தேகங்களை விலக்குகிறார். “துணை” எனும் வார்த்தை கடவுளைக் குறிப்பிடுவதாக பைபிளில் பல இடங்களில் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தூய ஆவியானவரின் பணி எப்படி நமக்குள் கரைந்து நம்மை வலுவூட்டு, நன்மையின் பாதையில் நடத்துகிறதோ, அத்தகைய உயரிய பணியே பெண்களுக்கு இறைவன் தந்த முதல் பணி. தந்தைக்குப் பணிந்திருத்தல் எப்படி என்பதை இயேசு தனது வாழ்க்கையில் காட்டினார். ஏவாள் அந்த சிந்தனையிலிருந்து விலகிய கணத்தில் பாவம் மனிதர்களுக்குள் நுழைந்தது. மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் பெண்ணைப் படைக்கிறார். அதாவது ஆணின் முழுமை, பெண்ணால் தான் உருவாகிறது, அப்போது தான் படைப்பின் முழுமையும் உருவாகிறது. பெண், முழுமையின் சின்னமாக இருக்கிறாள்.

நீதிமொழிகள் பெண்களுக்கான இலக்கணத்தை மிக அழகாகச் சித்தரிக்கிறது. ஆண்டவரிடம் கொண்டுள்ள அச்சம் ( நீ.மொ 31 : 30 ), ஆடை நெய்தும், சமையல் செய்தும், ஏழைகளுக்குக் கொடுத்தும் என பணி செய்து இறுக்கமான கைகள், ஞானத்தோடு பேசி அன்போடு அறிவுரை கூறும் நாவு என பெண்மையின் குணாதிசயம் விரிகிறது. புற அழகையோ, பியூட்டி பார்லர்களின் தற்காலிக விளம்பரங்களையோ எந்த இடத்திலும் பைபிள் பேசவில்லை. காரணம் இறைவன் அகத்தைப் பார்க்கிறவர் ! ஆகவே தான் சொல்கிறார் நல்ல மனைவி பவளத்தை விட மேலானவள் ( நீ.மொ 31 : 10 ) !

2. தாய்மை எனும் உயரிய பணி

ஒரு ஆணின் உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அவனைப் பிணம் என்போம். ஒரு பெண்ணின் உடலில் இருந்து உயிர் பிரிந்து வரும்போது அவளைத் தாய் என்கிறோம். பெண்மை தவிர வேறு எவருக்கும் கிடைக்க முடியாத மிகப்பெரிய கவுரவம் இது ! இதையே பவுல் அதை ஒரு இறை பணி என்கிறார். இன்றைய உலகமோ அதை பெண்ணடிமைத்தனம் என்கிறது.

ஒரு சமூகம் கட்டியெழுப்பப் பட வேண்டுமெனில் குடும்பம் மிக ஆரோக்கியமான உறவுகளிலும், மதிப்பீடுகளிலும் கட்டியெழுப்பப் பட வேண்டும். அது தவறும் போது சமூகமே சமநிலை இழந்து விடுகிறது. அந்த குடும்பத்தைக் கட்டியெழுப்பும் உயரிய பணி அன்னையரிடமே இருக்கிறது. “தாயைப் போல பிள்ளை” என்பதன் கிறிஸ்தவப் பார்வையையே பவுலடிகளார் சொல்கிறார்.

ஒரு தாய் இருந்தார். அவருடைய கணவன் இறை நம்பிக்கை இல்லாதவர். அது அந்தத் தாயைப் பாதிக்கவில்லை. மகனை நல்ல வழியில் வளர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். அந்த மகன் வளர்ந்தான். திருச்சபையின் வலுவான பணியாளர்களில் ஒருவராக மாறினார். அந்தத் தாயின் பெயர். ஐனிக்கேயாள். மகனின் பெயர் திமோத்தேயு. பவுலடிகளாருடன் சேர்ந்து அவர் செய்த பணி எத்தனை அர்த்தமுள்ளது ! ஐனிக்கேயாள் இறை அழைத்தலை முழுமையாய் நிறைவேற்றினார் என்று சொல்லலாமல்லவா !

3. இறைவனுக்கு சான்று பகர்தல்

நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் ( அப் : 2 : 17 ). இயேசு தனது இறை பணியை முழுமையாய் ஆண்களுக்கென சமர்ப்பிக்கவில்லை. பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் இருந்தாலும் மதலேன் மரியாவுக்கே முதல் காட்சியை இயேசு வழங்குகிறார். உயிர்த்த இயேசுவின் முதல் சாட்சி !

இறைவனுக்குச் சான்றுபகரும் பணி மாபெரும் பணி. அதை நமது வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும், எந்த ஒரு சூழலிலும் வெளிப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக அன்புக்கும், பொறுமைக்கும் இலக்கணமான பெண்களுக்கு, வாழ்க்கையில் இயேசுவைப் பிரதிபலிக்க வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். பழைய ஏற்பாட்டிலும் சரி, முதலாம் நூற்றாண்டிலும் சரி, பல பெண் தீர்க்கத்தரிசிகள், அறிவுரையாளர்கள், மற்றும் நீதிபதிகள் இறைப் பணிக்காக இருந்திருக்கிறார்கள். மிரியம், தெபோராள், அன்னா, பிரிஸில்லா என இந்த பட்டியல் நீளூம்.

லாசரின் வீட்டில் “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என இயேசு சொல்வது பெண்களின் இறை அழைத்தலையும், இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு அவருக்கு சான்று பகரும் வாழ்க்கை வாழவேண்டும் எனும் தேவையுமே காட்டுகிறது எனலாம்.

4. மனதில் தியானிக்கும் பண்பு !

இயேசுவின் அன்னை, மரியாள், ஒரு நல்ல வழிகாட்டி, அல்லது எடுத்துக்காட்டு எனலாம். கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம். அதை வெளியே சொல்ல முடியாத நிலமை. வெளியே சொன்னால் ஊர் நிச்சயம் நம்பப் போவதில்லை. நடத்தை கெட்டவள், அல்லது மனநிலை சரியில்லாதவள் என்றே சொல்லும். ஆனாலும் இறைவனின் சித்தத்துக்காக அத்தகைய பேச்சுகள் வாங்குவதைக் கூட ஒரு பொருட்டாக எண்ணாத துணிவு மரியாளுக்கு இருந்தது !

பன்னிரண்டு வயதில் மகனின் ஆன்மீக விஷயங்களைக் கண்டு கதிகலங்கினாலும், எல்லாவற்றையும் “உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்த” மனம் மரியாளுக்கு இருந்தது. இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய ஒரு முன்னுதாரணம் தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் ஊருக்கு விளம்புவதும், ஊரார் என்ன சொல்வார்களோ என கலங்கிப் புலம்புவதும் இன்றைக்கு பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது இல்லையா ?
5. குடும்பத்தைக் கட்டியெழுப்புதல்

ஆண் ஒரு வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்ப ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். அதையே பைபிளும் சொல்கிறது. பெண்களின் முதல் பணியாக பைபிள் சொல்வது, “கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல கணவருக்குக் கீழ்ப்படிதல்”. ஆண்களுக்கான பணியாய்ச் சொன்னது “மனைவியரை அன்பு செய்யுங்கள்” என்பது. ஒரு முறை இது குறித்து ஒரு நண்பர் அருமையான விளக்கம் கொடுத்தார். கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிவது பெரும்பாலும் இயல்பாக வந்து விடுகிறது. சாப்பிடு என்று சொன்னவுடன் பழத்தை ஆதாம் சாப்பிட்டான். அதனால் தான் அவனுக்கு “அன்பு செய்” எனும் கட்டளை தரப்படுகிறது. பெண்கள் அன்பில் எப்போதுமே உயர் நிலையில் இருப்பார்கள். கணவன் மீது உயிரையே வைத்திருப்பார்கள். அதனால் தான் “கீழ்ப்படி” எனும் கட்டளை அவர்களுக்குத் தரப்படுகிறது. இறைவனின் சித்தம் என்பது இருவருமே சமமாய், அன்புடனும் ஒருவருக்கொருவர் புரிதலுடனும் இருப்பது தான் என்றார்.

ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைகள் பரஸ்பர அன்பும், புரிதலும், கீழ்ப்படிதலும் தான். கணவன் மனைவி தாண்டி குழந்தைகளுக்கும் இறைவன் சொல்வது கீழ்ப்படிதல் போதனைதான் இல்லையா. இத்தகைய கிறிஸ்தவ போதனையின் அடிப்படையில் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்பும் போது அது உலகிற்கே ஒளியாக திகழ்கிறது !

இசைக்கச்சேரியில் மிருதங்கம், புல்லாங்குழல், கீபோர்ட், வயலின் எல்லாமே இருக்கும். என்னிடம் துளைகளே இல்லை என மிருந்தங்கம் கவலைப்படலாமா ? அல்லது நான் ஒல்லியாய் இருக்கிறேன் என புல்லாங்குழல் புலம்பலாமா ? ஒவ்வொன்றின் படைப்பும் அதற்குரிய இசையைத் தருவதற்காகவே. தான் அடுத்த கருவியைப் போல மாறவேண்டுமென்றோ, எனது இசை தான் உயர்ந்தது என்றோ பேசித் திரிவது வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை.

உலக அளவிலுள்ள கிறிஸ்தவர்களில் 60% பேர் பெண்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். கடவுள் ஆணையும் பெண்ணையும் தனித்துவத்துடனும், வெவ்வேறு பணிகளுக்காகவும் படைக்கிறார். ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாறாமல், அந்தந்த படைப்புக்குரிய உயர் நிலையை அடைவதே இறை சித்தம். இந்த நிலைகளில் எந்த விதத்திலும் மேன்மை அதிகமானதென்றோ, மேன்மை குறைந்ததென்றோ எதுவும் இல்லை. அப்படி நாம் எண்ணிக் கொண்டால், அது பாரபட்சம் பார்க்காத நமது பரம பிதாவையே அவமானப் படுத்தும் செயல் !

இணைந்தே பயணிப்போம், இறையரசை நிலைநாட்டுவோம்

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?!

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள். 

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. 

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.

நன்றி : ஜூனியர் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

அனிதா அந்த நிறுவனத்தின் மரியாதைக்குரிய அதிகாரி. அவரிடம் சுமார் நாற்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் அவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. வேலையை முடிப்பதிலாகட்டும், ஊழியர்களைக் கவனிப்பதிலாகட்டும் அவர் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் அனிதாவுக்கு கொஞ்ச நாளாவே மூட் அவுட். எதிலும் பற்றற்ற தன்மை அவருடைய வேலையிலும் தெரிந்தது. எதிலும் போதிய கவனம் இல்லை. கொடுக்கின்ற வேலைகளிலும் தாமதம். அதுவரை தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் மேனேஜராய் இருந்த அவர் அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தார்.

இதையெல்லாம் கவனித்து வந்த அனிதாவின் மேனேஜர் சாம்பமூர்த்திக்கு உள்ளூர ரொம்பக் கவலை. அவர் கொஞ்சம் வயதானவர். தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தை மீசையிலும் தலையிலும் வெள்ளையாய் எழுதி வைத்திருப்பவர். கடந்த ஆறு வருடங்களாக அனிதாவின் மேனேஜர் அவர் தான். ஒரு நிர்வாகி என்பதற்கும் மேலாக ஒரு மகளைப் போன்ற பாசத்தைக் கண்களில் எப்போதுமே வைத்திருப்பார். அனிதாவின் தடுமாற்றங்கள் அவருக்கு ரொம்பவே கவலையளித்தது. ஒரு நாள் மாலைப் பொழுதில் அவர் இண்டர்காமில் அனிதாவை அழைத்தார்.

அனிதா கண்ணாடிகளால் சூழப்பட்டிருந்த சாம்பமூர்த்தியின் அறைக்கதவைத் தட்டினாள்.

“சொல்லுங்க சார்”

“உக்காரும்மா, கொஞ்சம் பேசணும்”

அனிதா குழப்பத்துடன் அவருக்கு மேஜைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“அனிதா எப்படிம்மா இருக்கே ?”

“என்னசார் திடீர் கேள்வி.. நல்லா இருக்கேன் சார் “

“அனிதா… உன்னை எனக்கு ஆறு வருஷமா தெரியும். வேலையில நீ எப்பவுமே சோடை போனதில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை” சாம்பமூர்த்தி சொல்லி விட்டு சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

“இப்போ நாலஞ்சு மாசமா உன்னைக் கவனிக்கிறேன். ரொம்பவே குழப்பமா இருக்கே. கவனம் சிதறுது. உற்சாகம் காணாம போயிடுச்சு. அடிக்கடி சோர்வாயிடறீங்க. வாட் ஹேப்பண்ட் ?”

“ஒண்ணும் இல்லையே சார்… “ அனிதா சொல்ல சாம்பமூர்த்தி புன்னகைத்தார்.

“வீட்ல ஏதும் பிராப்ளமா ?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார்… “ சொல்லி முடிக்கும் போதே அனிதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அனிதாவின் கண்களில் முளைத்த கண்ணீர் சாம்பமூர்த்தியை சங்கடப்படுத்தியது.

“சரிம்மா.. நீ ஒரு வாரம் லீவ் போட்டு உன்னோட ஹஸ்பண்ட் கூட எங்கேயாவது போய்ட்டு வா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடும். “ அவர் சொல்ல அனிதா தலை கவிழ்ந்தாள்.

“ஹஸ்பண்ட் கூட போறதா ? ஹஸ்பண்டை விட்டுட்டுப் போகணும்ன்னு அவர் நினைக்கிறாரு. டைவர்ஸ் கிடைக்குமான்னு கேக்கறாரு சார் ?” அனிதாவின் குரல் தழுதழுக்க சாம்பமூர்த்தி அதிர்ந்து போனார்.

அனிதாவுடன் பேசப் பேச அவளுடைய சூழல் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. பிரச்சினை ஒண்ணும் புதுசில்லை. காலம் காலமாக பெரும்பாலான தம்பதியர் சந்திக்கின்ற பிரச்சினை தான். அவரு வீட்ல ஒரே பையன். அப்பா கிடையாது. அம்மா தான் எல்லாமே. காலைல காபி போடறதுல இருந்து, கால் தடுக்கினா மருந்து போடறது வரை எல்லாமே அம்மா தான். இப்போ கூடவே ஒரு ஆள் மனைவி !

கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் அம்மாவை தனியே விட்டு விட்டு ஹனிமூன் போனபோது தான் அவருக்கும் அம்மாவை மிஸ் பண்ணும் உணர்வு வந்திருக்கிறது ! கூடவே இருந்தபோது ஒன்றும் தோன்றவில்லை. எங்கோ தூரத்தில் அம்மாவை விட்டு விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து செய்த படகுச் சவாரி சேகருக்கு ரசிக்கவில்லை.

“ஏங்க சோகமா இருக்கீங்க, என்னாச்சு ? உடம்பு சரியில்லையா ”

“இல்லே அனிதா, மனசு சரியில்லை. அம்மா பாவம் அங்கே தனியா இருந்து என்ன பண்றாங்களோ ?”

சேகரின் பதில் அனிதாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. “ஹனிமூன் நேரத்துல கூட அம்மா நெனப்பு தானா ?” என அனிதாவின் மனம் புகைந்தது.

அந்த சின்ன நெருப்புப் பொறி தான். எப்படா ஹனிமூன் முடியும் என காத்திருந்தது போல கணவன் பதறி அடித்து வீட்டுக்கு ஓடியதும். வந்ததும் வராததுமாய் அம்மா, அம்மா என உருகியதும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிளட் பிரஷரை ஏற்றி விட்டது. அது மாமியார் மீதான வெறுப்பாய் முளைக்கத் துவங்கியது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு கணவனே கதியென வந்து நிற்கிறேன். அவருக்கு அம்மாவின் தோளில் தொங்கணுமா ? என அனிதாவுக்குள் எழுந்த குரல்கள் தினம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர, அவளுடைய நிம்மதியே போய் விட்டது.

அதன்பின் எது செய்தாலுமே தான் நிராகரிக்கப் படுவதாகவும், மாமியார் தான் மரியாதைக்குரியவராய் இருப்பது போலவும் அவளுக்குள் காட்சிகள் விரிந்தன. அது கணவன் மனைவியிடையே விவாதம், ஊடல், சண்டை என வளர்ச்சியடைந்தது.

“உன்னைக் கட்டிகிட்டதோட என் நிம்மதியே போச்சு. எனக்கு அம்மா தான் முக்கியம். உன்னால அதை சகிச்சுக்க முடியாட்டா டைவர்ஸ் பண்ணிக்கலாம்” என சேகர் சொன்ன வார்த்தை தான் அவளை ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அலுவலகத்திலும் அவளுடைய கவனம் ஒட்டு மொத்தமாய்ப் போய்விட்டது.

அனிதா, தனது கவலைகளையெல்லாம் சாம்பமூர்த்தியிடம் கொட்டினாள். அவருக்குப் புரிந்து போய்விட்டது. தனது அனுபவத்தின் மூலைகளிலிருந்து அனிதாவின் பிரச்சினைகளுக்கான விடைகளை எடுக்க ஆரம்பித்தார்.

அனிதாவின் கதை இன்றைய பெரும்பாலான பெண்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.

“அம்மாவா, நானா ? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் மேரிடல் கவுன்சிலிங் வல்லுனர்கள். யூகேவில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது ! 

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.

தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் பிள்ளையார் சுழி. அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் கிரெட்சன் எனும் ஆலோசகர்.

அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

“மனைவியா ? அம்மாவா ? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.

இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா ? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.

வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில்  பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.

யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட  வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். “உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்”. சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.

உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும் ? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.

உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் ! 

உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.

உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !

அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.

மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.

சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் ? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ? 

மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான் !

அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. “அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு” என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். “ என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்” ன்னு மாமியார் சொன்னா, “ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா “ ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா “உங்க ஆளுங்க கிட்டே பேசும்போ மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ” ன்னு நக்கல் அடிக்காதீங்க.

சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

 நன்றி : பெண்ணே நீ

அழகா இல்லேன்னா வெளியே போ…

“அழகா இல்லாதவங்களுக்கு இங்கே இடமில்லை” அப்படி போர்ட் மாட்டி ஒரு இணையதளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா ? பியூட்டிபுல் பீபுள்.காம் எனும் பெயர் கொண்ட அந்த இணையதளம் தான் இன்றைய தேதியில் உலகிலேயே மிகப்பெரிய டேட்டிங் நெட்வர்க். அழகில்லாதவங்களுக்கு அங்கே அனுமதி இல்லையாம். அழகு இருக்கா இல்லையான்னு எப்படி முடிவெடுக்கறாங்க ? 

முதல்ல அந்த தளத்துல போய் உங்க போட்டோவை அப்லோட் பண்ணி, உங்களைப் பற்றிய சிறு குறிப்பும் வரையவேண்டும். உடனே அந்த தளத்தில இருக்கிற அழகர்களும், அழகிகளும் சேர்ந்து உங்களுக்கு மார்க் போடுவாங்க. எப்படி ? ஆணுக்கு பெண்களெல்லாம் ஓட்டு போடுவாங்க. பெண்களுக்கு ஆண்கள் ஜொள் ஓட்டு போடுவாங்க !

“ஆள் சூப்பர்”, “பரவாயில்லை”, “ஊஹூம் அவ்வளவு நல்லாயில்ல”, “ஐயோ வேண்டவே வேண்டாம்” இப்படி நாலுல ஒண்ணை டிக் பண்ணுவாங்க. சூப்பர்ன்னு நிறைய பேரு சொன்னா உங்களுக்கு அங்கே இடம் உண்டு. இல்லேன்னா பொட்டியைக் கட்டிட்டு கிளம்ப வேண்டியது தான். உலக அழகியே போனாலும், அங்கே இருக்கிறவங்க “இவ அழகிதான்” ன்னு சொன்னாதான் இடம் கிடைக்கும்.

ஏதோ ஒண்ணோ ரெண்டோ பேரு வேலையில்லாம இதுல இருக்காங்கன்னு நினைக்காதீங்க. உறுப்பினர்களோட எண்ணிக்கை ஐம்பது இலட்சத்தை தாண்டிடுச்சாம். என்னதான் நடக்குது இங்கே ? வேறென்ன ? வெட்டியா உக்காந்து மார்க் போடறது, அழகா இருக்கிற துணையைத் தேடிப் புடிச்சு கடலை போடறது, ஜொள் வடிக்கிறது, தள்ளி கிட்டு போறது, இத்யாதி இத்யாதி என இந்த சைட் சமீப காலமாக ரொம்ப ஹாட்.

வர்ற விண்ணப்பத்துல 80 சதவீதமும் நிராகரிக்கப்படுமாம். சராசரியா வெறும் 20 சதவீதம் மக்கள் மட்டும் தான் அழகு உடையவர்களா ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றவங்க சோர்ந்து போய் திண்ணைக்கே திரும்ப வேண்டியது தான். “என்ன பண்ண அழகு இருந்தா தான் எல்லோருக்குமே புடிக்குது. என்னதான் வெளியே வேற விதமா பேசினாலும், அழகைத் தேடித் தான் நாம ஓடறோம். நமக்கு கண்கள் தான் இருக்கு, ஆண்டெனாவா இருக்கு ?”  என தத்துவம் பேசுகிறார் இதன் கர்த்தா கிரேக் ஹாட்ஜ்

இவர் ஹிண்ட்ஸோடு சேர்ந்து 2001ம் ஆண்டு டென்மார்க்ல இந்த தளத்தை ஆரம்பிக்கும்போ இது இப்படி பட்டையைக் கிளப்பும் என நினைத்திருக்கவில்லை. 2009 கடைசியில் தான் இந்த தளம் சூடு போட்ட மீட்டர் கணக்கா எகிறியது. இன்னிக்கு இந்த தளம் 12 மொழிகள்ள ஏகப்பட்ட நாடுகள்ல  இயங்குதுன்னா பாத்துக்கோங்க !

இதுல வேற ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அந்த அழகுக் குழுல சேர போட்டி போட ஆரம்பிச்சுட்டாங்க. பிரிட்டிஷ் ஆண்கள் எட்டுக்கு ஒருத்தர் எனும் விகிதத்துல தான் இதுல சேர முடியுதாம். பிரிட்டிஷ் பெண்களோட நிலமை 30 சதவீதமாம். இந்த அழகு சைட்ல ஆதிக்கம் செலுத்தறது ஸ்வீடன் ஆண்கள் தானாம் அவங்க 65% அழகர்களா இருக்காங்களாம். பெண்கள்ள நார்வேஜியன் தான் முதலிடம் 76 சதவீதம் பெண்கள் அங்கே அழகோ அழகு தானாம். அப்போ லாஸ்ட்ல இருக்கிறது ? ஜெர்மன் பொண்ணுங்களாம் ! இந்தியா இன்னும் ஆட்டத்துக்குள்ள வரல போல !

ஒருதடவை உறுப்பினராகிட்டா லைஃப் லாங் நீங்க அழகியா தொடரவும் முடியாது. உங்க லேட்டஸ்ட் போட்டோல நீங்க கொஞ்சம் அசிங்கமா தெரிஞ்சாலும் அவுட் தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி  சுமார் 5000 பேரை இங்கேருந்து துரத்தியிருக்காங்க. விஷயம் என்னன்னு பார்த்தா, அவங்க கொஞ்சம் குண்டாயிட்டாங்களாம் ! அடப் பாவமே !

இதுல சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னன்னா இந்த தளத்தை ஆரம்பிச்ச கிரேக் ஹாட்ஜ்க்கு சமீபத்துல தான் கல்யாணம் ஆச்சு. பொண்ணை “பியூட்டிபுல் பீபுள். காம் ல தானே புடிச்சீங்க” ன்னு கேட்டா, “சேச்சே .. இல்லை “ என்கிறார். இதெந்த ஊர் நியாமுங்கோ ?

 Thanks : Pennae Nee

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

வாங்க ஜெயிக்கலாம் : எனது புதிய நூல்

“இதையெல்லாம் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க” எனக்கு முன்னால் கத்தையாய் கொஞ்சம் பேப்பரைப் போட்டார் பிலால், பிளாக் ஹோல் மீடியா நிறுவனர்.

ஏதோ ஸ்கூல் பிள்ளைங்களோட பரீட்சை பேப்பர் போல இருந்தது. வித விதமான கை எழுத்துகளில் கிறுக்கலாய் கிடந்த பேப்பர்களில் ஒன்றை எடுத்து வாசித்தேன். புரியாமல் அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.

“என்ன தலைவரே இதெல்லாம் ?”

தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் அவர், அருகில் ஆசிரியர் யாணன் அவர்கள்.

ஒருபக்கம் பெண்கள் வளர்கிறாங்கன்னு சொல்றோம். இன்னொரு பக்கம் அவங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையக் காணோம். அப்படி என்னென்ன பிரச்சினைகளைத் தான் பெண்கள் முக்கியமா எதிர்கொள்றாங்க ? அவங்களுக்கு இன்னிக்கு என்னென்ன விஷயத்துல பாதுகாப்பும், ஆலோசனையும் தேவைன்னு யோசிச்சோம். பெண்களோட பிரச்சினையை பெண்களே சொல்லட்டுமேன்னு முடிவு பண்ணினோம். அதோட விளைவு தான் இந்தப் பேப்பர்கள் !

வேலைபாக்கிற பெண்கள் தொடங்கி படிக்கிற பெண்கள் வரை நிறைய பேர்கிட்டே பேப்பரைக் கொடுத்து அவங்களுக்கு ஆலோசனை தேவைப்படற ஐந்து பிரச்சினைகளை எழுதச் சொன்னோம். அந்தப் பிரச்சினைகள் தான் இந்தக் காகிதங்கள்ல இருக்கு.

இந்தப் பிரச்சினைகள்ல முக்கியமான சில பிரச்சினைகளை எடுத்து ஒரு நல்ல புக் போடணும். அது பெண்களோட பிரச்சினைகளுக்கு ஒரு தோழியா கூடவே இருந்து வழிகாட்டணும். அதுதான் பிளாக் ஹோல் மீடியாவோட ஐடியா.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த பேப்பர்களை ஒவ்வொன்றாகப் புரட்டினேன். படிகப் படிக்க வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை ? பெண்கள் வளர வளர அவர்களுக்கு எதிரான சதி வலைகளும் கூட வளர்கிறதோ எனும் பயமும் உருவாகிவிட்டது. கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகளும், புதைகுழிகளும் அவர்களுடைய பாதைகளில் மறைந்து தான் கிடக்கின்றன. வாசித்தவற்றில் பல பிரச்சினைகள் புதியவை. சில பிரச்சினைகள் விகடன், பெண்ணே நீ போன்ற இதழ்களுக்காக பிரத்தேயகமாக எழுதப்பட்டவை.

“என்ன செய்யலாம் சொல்லுங்க” என்றேன்.

அந்தந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது, பிரச்சினைகளைக் குறித்து அலசி ஆராய்வது, கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து கட்டுரைகள் எழுதுவது என முடிவானது !

அப்படி எழுதப்பட்ட கட்டுரைகள் தான் “வாங்க ஜெயிக்கலாம்” எனும் கட்டுரைத் தொகுப்பு.

பெண்களோட வளர்ச்சிக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்களை இந்த நூல் அடையாளம் காட்டுகிறது. “நீ நெருப்பின் நடுவில் இருக்கிறாய்” என்று சொல்லிவிட்டுக் கடந்து போகாமல், எப்படி வெந்து போகாமல் வெளியே வருவது என்றும் இந்த கட்டுரைகள் வழிகாட்டுகின்றன.

வெற்றி என்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ பெறும் மதிப்பெண்களில் மட்டும் அடங்கிவிடுவதல்ல. சமூகம் நம்மீது திணிக்கும் ஒவ்வொரு சவாலிலும் ஜெயித்துக் காட்டுவது தான். வாங்க ஜெயிக்கலாம் நூல் அந்தப் பணியை திறம்படச் செய்திருக்கிறது என நம்புகிறேன்.

வாய்ப்புக் கிடைத்தால், வாசித்துப் பாருங்கள்.வாசித்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர் , சென்னை – 16

Pages : 172,  Rs : 130/-

9600086474

91-44-43534303/ 43534304

admim@blackholemedia.in

www.blackholemedia.in

வாக்களிக்க விரும்பினால் கிளிக்குங்கள்

மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

சந்தி உற்சாகமாக இருந்தாள். மாலை நேர சன்னலின் வழியே வழக்கமான சூரியன் இன்று ரொம்பவே அழகாய்த் தெரிந்தான். காரணம் அருகில் கணவன் ரமேஷ்.

வசந்திக்கு இது இரண்டாவது ஹனிமூன். முதல் கணவன் சங்கருடன் ஆறு மாதங்கள் படாத பாடுபட்டு இப்போது தான் விடுதலை. எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதற்கெடுத்தாலும் சண்டை என கவலையில் போனது அவளுடைய முதல் வாழ்க்கை. விவாகரத்து வாங்கி எல்லாவற்றையும் முடித்து வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இப்போது புதிய வாழ்க்கை, புதிய கனவுகள் என அவளுடைய சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன.

திடீரென வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. முதல் கணவனிடமிருந்து. தான் தவறு செய்தது போல மறுமுனையில் சங்கர் கண்ணீர் விட்டான். இவளைப் பிரிந்து வாழ முடியாது என புலம்பினான். அவனுடைய குரல் அவளை அசைத்தது. அவளுடைய உற்சாகமெல்லாம் வடிந்து போக சட்டென அமைதியானாள்.

“யார் போன்ல” ரமேஷ் கேட்டான்.

“அ..அவர் தான்… சங்கர்” குரல் தடுமாறியது, கண்கள் கலங்கின.

“ஓஹோ… பழைய புருஷன் ஞாபகம் அழ வைக்குதோ ? அப்புறம் எதுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டே” ரமேஷின் குரலில் கோபம் குதித்தது.

அந்த ரம்மியமான மாலைப் பொழுது வசந்தியின் புதிய வாழ்க்கையில் ஒரு கீறலாய் விழுந்து விட்டது. ரமேஷின் தேவையற்ற சந்தேகப் பார்வையும் வசந்தியின் மீது விழ அவளுடைய புதிய திருமண வாழ்க்கையும் நொண்டியடிக்க ஆரம்பித்தது. 

“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்பதெல்லாம் ரொம்பவே பழசாகிப் போச்சு. “உள்ளார்ந்த நேசம் இல்லையேல் டைவர்ஸ்” என்பது தான் இப்போதைய வாழ்க்கை.

மண முறிவுகளை இரண்டு கோணத்தில் பார்க்கலாம். ஒரு கோணத்தில் மண முறிவுகள் பலவீனமான குடும்ப உறவின் வெளிப்பாடுகள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போதல், அகந்தை களைதல் எனும் பல விஷயங்களில் நிகழும் தோல்வி. அர்ப்பணித்தல் இல்லாததன் அடையாளம். 

இன்னொரு கோணத்தில் மணமுறிவுகள் தைரியத்தின் சின்னங்களாகவும் பார்க்கலாம். இது ஒரு வகையில் பெண்களின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடுகள். சமூகத்தின் பல துறைகளில் பட்டையைக் கிளப்பும் பெண்கள் வீடுகளில் அங்கீகாரம் கிடைக்காவிடில் என்ன செய்வது ?. குடும்பம் என்பது முதலாளி தொழிலாளி சமாச்சாரமல்ல. கணவன் மனைவி உறவு என்பது சர்வாதிகார – அடிமை உறவு நிலையுமல்ல. எனவே உண்மையான புரிதல் இல்லையா ? பிரிதலே நல்லது என பெண்களும் பேச ஆரம்பிக்கின்றனர்.  

ஆனால் சமூகம் தனது வழக்கமான புராணத்தைத் தான் பாடிக் கொண்டிருக்கிறது. ரொம்பவே நாசூக்காக, ஹைடெக் வாசனையுடன். “பொண்ணு சரியில்லே” என்பது தான் பெரும்பாலான டைவர்ஸ்களின் முனகல்கள். இதில் எவ்வளவு சதவீதம் உண்மை என்பது கணவர்களின் மனசாட்சி சொல்லும். சமூகத்தின் நரம்புகளில் இன்னும் ஆணாதிக்க ரத்தம் தான் வேகமாகப் பாய்கிறது என்பதன் உதாரணம் இது. ஆண்களின் இயலாமையை மறைக்க பெண்களின் நடத்தை மேல் ஒரு சந்தேகத்தைப் போட்டு விட்டால் போதுமே !  

சிலர் திருட்டுக் காதலுக்காக அழகான குடும்ப வாழ்க்கையை சிதைக்க நினைப்பார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். மறு மணங்கள் மரணங்களினாலோ, சரி செய்ய முடியாத சிக்கல்களாலோ நிகழலாம். ஆனால் திருட்டுத் தனமான ஆசைகளுக்காக சிதைவது அவலம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் இத்தகைய சூழல் ஏற்பட்டால் அது குழந்தைகளின் அமைதியான வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடும். கூடவே அந்த குற்ற உணர்வு உங்களையும் துரத்தித் துரத்தி நிம்மதியற்ற எல்லைக்குள் தள்ளி விடும்.

மணமுறிவு எனும் முடிவை யாரும் ஒரு நிமிடத்தில் எடுத்து விடுவதில்லை. ஆற அமர யோசித்து வேறு வழியில்லையேல் மட்டுமே எடுக்கின்றனர். ஆனால் அதன் பின் நடக்கும் இரண்டாவது திருமணங்கள் பல வேளைகளில் பெண்களை ரொம்பவே நிலைகுலைய வைத்து விடுகிறது. ஏகப்பட்ட அவமானங்கள், நெருக்கடிகள், சிக்கல்களுக்கிடையே காலம் தள்ள வேண்டிய சூழலுக்குள் தள்ளி விடுகிறது. அதற்குக் காரணம் சரியான திட்டமிடல் இல்லாதது தான். மறுமணம் ரொம்ப நல்ல விஷயம். ஆனால் அப்படி ஒரு முடிவை எடுத்தபின் பெண்கள் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு ரொம்பவே அவசியம். மண முறிவு தரும் மனக் காயங்களும், சமூக சிக்கல்களும் அதீத கனம் வாய்ந்தவை.

இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

  1. இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் முதலில் செய்ய வேண்டியது முதல் திருமணத்தின் மிச்சம் மீதிகளை செட்டில் செய்வது தான். உங்கள் கணவரைப் பிரிந்து வாழ முடியுமா என்பதை முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். புதிய வாழ்க்கையில் பழைய நினைவுகள் உறுத்தாமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். மன ரீதியாக முடிவெடுத்துவிட்டீர்களெனில் பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். இப்போது சட்ட ரீதியான, குடும்ப ரீதியான, சமூக ரீதியான பிரிவுகளையும் நிகழ்த்தி விடுங்கள். உங்கள் புதிய வாழ்க்கை “ரொம்பப் புதிதாய்” இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
  2. எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்” எனும் சிந்தனையைக் கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். கடந்த திருமண பந்தம் எப்படிச் சென்றது என்பதை மிக மிக அமைதியாக ஆழமாக சிந்தியுங்கள். உங்கள் தரப்பில் என்னென்ன பிழைகள் இருந்தன என்பதை கொஞ்சமும் தயவு தாட்சண்யமில்லாமல், பாரபட்சமில்லாமல் அலசுங்கள். அந்த பிழைகளை அடுத்த முறை செய்யப் போவதில்லை எனும் முடிவை எடுங்கள். இது மிகவும் முக்கியம்.
  3. “என்னம்மா இப்படி ஆயிடுச்சே” என குசலம் விசாரிக்க வரும் பழைய உறவின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரையும் விலக்கி விடுங்கள். நீங்கள் புதைத்துப் போட்டவற்றை தோண்டி எடுத்து வேடிக்கை காட்ட பலரும் விரும்புவார்கள். உங்கள் புதிய வாழ்க்கையின் தோல்வி பழைய உறவுகளுக்கு ரொம்பவே உங்கள் பழைய சிந்தனைகளையும், வலிகளையும் கிளறும் எந்த உறவையும் அனுமதிக்காதீர்கள்.
  4. முதல் திருமணத்தில் நீங்கள் இழந்ததாய் நினைத்ததைப் பெறப் போகும் வாழ்க்கை தான் இரண்டாவது திருமணம். “இருந்ததும் போச்சே” எனும் நிலை வரவே கூடாது என்பதில் கவனம் தேவை. அதற்காக உங்கள் வருங்காலக் கணவரைப் பற்றி முழுமையாய் கொள்ளுங்கள். அவசரம் கூடவே கூடாது. அவருடைய கடந்த காலம், குடும்பம், சூழல், சிந்தனைகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது என்று சற்றே சந்தேகம் எழுந்தாலும் விட்டு விடுங்கள். முழுமையான நம்பிக்கை, சந்தேகமற்ற மனம் இரண்டும் மிக மிக முக்கியம்.
  5. உங்களைப் பற்றி உங்கள் வருங்காலக் கணவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இருவருடைய விருப்பங்கள், செயல்கள், எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், உரையாடல் வகைகள், மதம், குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் என பலவற்றைக் குறித்த தெளிவும் ரொம்ப அவசியம்.திருமணம் ஏன் தோல்வியடைந்தது. எவையெல்லாம் உங்களைக் காயப்படுத்தும், எவையெல்லாம் உங்களை மகிழ்விக்கும், எவையெல்லாம் உங்கள் எதிர்பார்ப்புகள் என்பதையெல்லாம் பேசுங்கள். திருமணத்துக்குப் பின் விரும்பத் தகாத ரகசியங்கள் வெளியாவது குடும்ப உறவைப் பாதிக்கும்.
  6. என்னதான் உலகம் பற்றித் தெரிந்த அறிவுள்ளவராய் இருந்தாலும் ஒரு கவுன்சிலிங் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சிந்தனைகள் சரிதானா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேனும் இது உதவும். எனவே நல்ல மேரேஜ் கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டு தெளிவு பெறுங்கள். நீங்களும் உங்கள் வருங்காலக் கணவருமாக திருமணத்துக்கு முந்தைய “பிரீ மேரிடல்” கவுன்சிலிங் ஒன்றில் கலந்து கொண்டால் சூப்பர்.
  7. புதிய திருமணம் செய்து கொண்டால் ஒரு புதிய இடத்துக்குப் போங்கள். புது வீடு, புதிய அக்கம் பக்கம், புதிய சூழல் என அமைவது ரொம்ப நல்லது. பழைய சிந்தனைகளும், கசப்புகளும் உங்களை கலவரப்படுத்தாமல் இருக்க இது உதவும்.
  8. அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். புதிய பொழுது போக்குகள், புதிய பழக்கங்கள் என உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். எதிலும் உற்சாகமற்றவராகவோ, குற்ற உணர்வுடையவராகவோ உங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்.
  9. சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தால் சிந்தியுங்கள். அவை உங்களால் முடியும் என்றால் ஆனந்தமாய் ஒத்துக் கொள்ளுங்கள். முடியாதவற்றை முடியும் என்று சொல்லி பிரச்சினையில் உழல வேண்டாம்.

10.  முதல் திருமணத்தில் குழந்தைகள் இருந்தால் சிக்கல் இன்னும் அதிகமாகும். உங்கள் குழந்தைகளின் நலனின் அக்கறை கொள்பவர் கணவராக வருவது முக்கியம். கணவரின் குடும்பத்தினரின் மனநிலையும் இதில் ரொம்ப அவசியம். பழைய குடும்ப வாழ்க்கையில் குழந்தையின் பொருளாதார உரிமைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியம். உங்களுடைய திருமண தேடுதல்கள் குழந்தைகளின் மனநிலையையோ, எதிர்காலத்தையோ எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

11. மறுமணங்களில் உள்ள ஒரு சிக்கல் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் எழும். குழந்தைகளுக்கா கணவனுக்கா ? மனைவி தனக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டுமென்பது கணவனின் விருப்பமாய் இருக்கும். பிள்ளைகளோ தங்களுக்கே அம்மா முக்கியத்துவம் தரவேண்டும் என ஆசைப்படுவார்கள். இதில் அழகான பேலன்ஸ் செய்ய முடிந்தால் வாழ்க்கை நலமாகும்.

12.  மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு இந்த செய்தி எல்லாம் கொஞ்சகாலம் தான். அப்புறம் போரடித்துப் போய் அந்த வாய்களெல்லாம் புதுசாக வேறு அவலை மெல்லக் கிளம்பிவிடும்.  

 இரண்டாவது திருமணங்களில் மணமுறிவுகள் முதல் திருமணத்தை விட அதிகம் என்கின்றன சர்வதேசப் புள்ளி விவரங்கள். எனவே இரட்டைக் கவனம் ரொம்பவே அவசியம். 

நன்றி : பெண்ணே நீ…

தமிழிஷில் வாக்களிக்க…

நீங்கள் எந்த வகை தம்பதியர்… ?

“டைவர்ஸ் தான் ஒரே வழி” என முண்டியடிக்கும் மக்களில் முக்கால் வாசி பேர் புதுமணத் தம்பதியர். ஆண்டு தோறும் டைவர்ஸ் கணக்கு எகிறிக் கொண்டிருப்பதாய் சொல்கின்றன புள்ளி விவரங்கள். “ஒத்து வரலேன்னா டைவர்ஸ் பண்ணிக்கோப்பா” என்பது தான் லேட்டஸ்ட் அறிவுரை. என்னவாயிற்று இந்தியாவின் குடும்ப வாழ்க்கைக் கலாச்சாரத்துக்கு ?

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு கணவனும் மனைவியும் வேலைக்கு ஓடும் யுகம் இது. நின்று பிரேக் பாஸ்ட் சாப்பிடக் கூட நேரமில்லை. இரவு உணவு பதினொரு மணிக்கோ பன்னிரண்டு மணிக்கோ ! ஒரு வகையில் இந்த பரபரப்பு தான் குடும்ப உறவுகளுக்கு எமனாய் வந்து முடிந்திருக்கிறது. முக்கால் வாசி நேரம் வீட்டுக்கு வெளியே வேலை. அப்பாடா என எப்போதாச்சும் நேரம் கிடைத்தால் டிவியில் உப்பு சப்பில்லாத ஏதோ ஒரு ஷோ. ஒரே வீட்டில் இருந்தாலும் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாளாச்சு என கணக்குப் போட்டுப் பாருங்கள். அங்கே தான் இருக்கிறது குடும்ப வாழ்வின் சிக்கல்.

கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப்படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் குடும்ப ஆலோசகர்.

முதல் வகை தம்பதியினர் “அமைதி தம்பதியர்”. அமைதி என்றதும் உம்மணாமூச்சியாய் இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். நிறைய பேசுவார்கள். “கந்தசாமில விக்ரம் பிச்சு உதறிட்டாரு இல்ல ? நாலு நாளா வெயில் மண்டையைப் பொளக்குதுப்பா., அமெரிக்காவில இந்த நேரம் ஸ்னோ. என்னவோ தெரியல ஈரான் வேற அணுகுண்டு தயாரிக்கப் போவுதாம்.”

இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு பேசிக் கொள்வார்கள். ஆனால் தங்களைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள். சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். “என்ன சோகமா இருக்கே ஏதாவது பிரச்சினையா” என அக்கறையாய் விசாரிக்க மாட்டார்கள். அப்படியே விசாரித்தாலும் “ஒண்ணுமில்லையே” ன்னு சொல்லி விட்டால் ஓகே என விட்டு விடுவார்கள். ஒரு வீட்டில் இருக்கிறார்களே தவிர இவர்கள் இரண்டு வாழ்க்கை வாழ்பவர்கள். இரயில் தண்டவாளங்கள் போல. வாழ்க்கை சந்தோசமாகத் தான் போகும். பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் என்ன ? ஆத்மார்த்த புரிதலோ அன்போ இருக்காது. வீட்டுக்கு போனா ஒரு துணை உண்டு என சந்தோசப் பட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான்.

சண்டையைத் தவிர்க்கும்” தம்பதியர் இரண்டாவது வகை. “சரி விடும்மா .. நீ சொல்றது தான் சரி” என்பது இந்த வகை தம்பதியினரின் உரையாடல். நம்ம ஊர் கிராமத்து பெண்களை இந்த கூட்டத்தில் கன கட்சிதமாய் பொருத்தலாம். “தேவையில்லாம எதுக்கு சண்டை” என அடுத்தவர் சொல்வதை ஒத்துக் கொள்வது. இல்லாவிட்டால் ஒன்றுமே பேசாமல் சைலண்டாகி விடுவது. இது தான் இவர்களுடைய வழக்கம். அன்னியோன்யமாக இவர்கள் பேசிக்கொள்வதும் ரொம்பக் குறைவு. பேச ஆரம்பிப்பார்கள் திடீரென ஒரு கருத்து வேற்றுமை வரும். உடனே ஒருவர் சைலண்டாகிவிடுவார்.

எப்போதும் சண்டை” மூன்றாவது வகை தம்பதியர். “ சாப்பாட்டுல ஏதோ குறையுதே ..” என்று எதார்த்தமாய்ச் சொன்னாலே “ ஆமா உங்க அம்மா சமைச்சா மட்டும் தான் உங்களுக்குப் புடிக்கும்” என்பது இந்த ரகம். அடுத்தவர் செய்வதிலுள்ள குற்றத்தை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பது இங்கே சகஜம். இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். பெரும்பாலும் உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். இந்த தம்பதியரிர் நிம்மதியின்றி பெரும்பாலும் மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

நட்புத் தம்பதியர்” நான்காவது வகையினர். நல்ல நட்புடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். கேஷுவல் கப்பிள் என்று சொல்லலாம். தாம்பத்ய நெருக்கம் இருக்காது. வெளியிலிருந்து பார்ப்பவர்களால் எந்தக் குறையும் சொல்ல முடியாத குடும்பம் இது. இவர்கள் பேச்சில் குறை வைக்க மாட்டார்கள். ஒபாமாவின் ஹெல்த் பிளான் முதல் ஒசாமாவின் அட்டாக் பிளான் வரை பேசுவார்கள். அலுவலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் ஒரு அழுத்தமான குடும்ப உறவு அவர்களுக்கிடையே இருக்காது.

நெருக்கமான தம்பதியர்” ஐந்தாவது வகை. “இதுக்கு முன்னாடி ஒருத்தியை காதலிச்சு நாலஞ்சு வருஷம் சுத்தினேன்” என்பது வரை வெளிப்படையாய் பேசுவார்கள். எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். ஆனாலும் ஆழமான குடும்ப உறவும் புரிதலும் இருக்கும். இப்படி வாழ்வது வெகு கடினம். அடுத்தவரை அப்படியே ஏற்றுக் கொள்தலும், அர்ப்பணித்தலும் தான் இதில் ஹைலைட். ரொம்ப ரொம்ப கொஞ்சம் தம்பதியர் தான் இந்த நிலையில் வருவார்கள். உண்மையில் பல தம்பதியர் இதை விரும்புவதே இல்லை.

கணவன் மனைவியரிடையே மனம் விட்டு பேசிக்கிற பழக்கம் இருந்தா போதும், மத்ததெல்லாம் தானா அமைந்து விடும். உரையாடல்களில் மிக முக்கியமான விஷயம் மரியாதை. அடுத்தவர் சொல்வதை கவனமுடனும், நேர்மையாகவும் கேட்பது. தான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நினைச்சீங்கன்னா, நோ யூஸ்.

அதேமாதிரி கொஞ்சம் பொறுமை வேணும். பேசறவங்களைப் பேச விடணும். முழுதாகப் பேசி முடிக்கும் முன் “முடிவு சொல்கிறேன் பேர்வழி” என குதிக்கக் கூடாது. கிளைமேக்ஸ் பார்க்காமல் தியேட்டரை விட்டு வெளியேறி கருத்து சொல்வது தப்பில்லையா. உரையாடலை முழுமையாய் கேளுங்கள், பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

நிறைய தடவை கேட்டிருப்பீர்கள். இன்னொரு தடவை கேக்கிறதிலும் தப்பில்லை. ஈகோவை தூக்கி தூர எறியுங்கள். கோ…கோ.. ஈகோ ன்னு சொல்லுங்க. தோல்விகள் கூட காதலில் வெற்றிகளே என்பது கில்லாடிகளுக்குத் தெரியும்.

அடிக்கடி பேசுங்கள். சும்மா ஹாய், பை பேச்சுகளெல்லாம் குடும்ப வாழ்க்கைல உதவாது. தினமும் பேசுங்கள். மனம் விட்டு பேசும் தம்பதிகள் டைவர்ஸ் கேட்டு ஓட மாட்டாங்க.

ஒரு முக்கியமான விஷயம். பேசறதுக்கு முன்னாடி நிலைமையை கொஞ்சம் பாத்துக்கோங்க. பார்ட்டி டென்ஷனாய் இருந்தால் கொஞ்சம் அமைதியா போறது உசிதம். எதேச்சையா சொல்ற சமாச்சாரம் கூட குத்தலா தோணும். மௌனம் கூட உணர்வுகளின் உரையாடல் தான்.

“கல்யாணம் ஆன புதுசில அடிக்கடி வெளியே போவோம்.. இப்பல்லாம் எங்க … “ ங்கற நிலமை வரக் கூடாதுங்க ! அப்பப்போ வெளியே போயிட்டு வாங்க. பழைய சமாச்சாரங்களை சுவாரஸ்யமா பேசுங்க. காதல் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும்.

இன்னொரு விஷயம். உங்களுக்குள்ளே பேசிட்டிருக்கும்போ தேவையில்லாம மூன்றாவது நபரை குத்தம் சொல்லாதீங்க. அது சுத்திச் சுத்தி பிரச்சினையில கொண்டு விடும். வேலில போறதை எதுக்கு… வேணாம் விட்டுடுங்க.

கணவன் மனைவிக்கு கொஞ்சம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கலாம் தப்பில்லை. குறிப்பா சில நம்பிக்கைகள் உங்க துணைக்கு இருக்கலாம். சாமி போட்டோல முழிக்கிறது மாதிரி. அதை சகட்டு மேனிக்கு விமர்சனம் பண்ணாதீங்க.

உரையாடல் எப்பவும் ஸ்மூத்தா இருக்காது. ஏதாச்சும் பிராப்ளம் இருந்தா திறந்த மனதோட யோசிங்க. “நீ சொல்றது தான் தப்புன்னு” சட்டுன்னு குற்றம் சுமத்தாதீங்க. குற்றங்கறது அனுமர் வால் போல நீண்டுகிட்டே இருக்கும் !

பேசும்போ மனசார உண்மையைப் பேசுங்க. நீங்க பேசறது பொய்யின்னு தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம் எப்பவுமே உரையாடல் ஹெல்தியா இருக்காது.

திடீர் திடீர்ன்னு கொஞ்சம் சர்ப்ரைஸ் குடுங்க. சின்னச் சின்ன பரிசுகள், சின்னச் சின்ன வாழ்த்துகள், சின்னச் சின்ன பாராட்டுகள் இவையெல்லாம் ரொம்ப முக்கியம். அதேமாதிரி என்ன முடிவு எடுத்தாலும் இரண்டு பேருமாப் பேசி முடிவெடுங்க.

உங்க ஆளு பேசறதை கவனிங்க. சிம்பிளா கேட்டுட்டு போயிடாதீங்க. நிறைய பேரு பேசறதைக் கேட்பாங்க. ஆனா கவனிக்க மாட்டாங்க. அதென்ன வித்தியாசம் ?

வீட்டுக்குள்ள கிரைண்டர் ஓடுது. அந்த சத்தத்தை நாம கேட்கிறோம் ஆனா, கவனிக்கிறதில்லை. ஆனா நம்ம பார்ட்னர் பேசறதை நாம கவனிக்கணும். என்ன சொல்கிறார் ? என்ன மனநிலையில் சொல்கிறார் ? என்ன நோக்கத்துக்காகச் சொல்கிறார் ? என்பதெல்லாம் கவனிச்சா தான் புரியும். உங்க வாழ்க்கைத் துணையை எந்த அளவுக்கு நேசிக்கிறீங்க என்பதை இந்த கவனிப்பு காட்டிக் கொடுக்கும் ! அதிகம் கவனித்தால், அதிகம் நெருக்கமாயிடுவீங்க. குடும்ப வாழ்க்கை வலுவடையும். அடுத்தவரைப் பாராட்டும் மனநிலை உருவாகும்.

இதையெல்லாம் மனசுல வெச்சிருந்தா இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் உங்க குடும்ப வாழ்க்கையை யாரும் அசைக்க முடியாது.

நன்றி : அவள் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்….

ஆப்பிள் பெண்ணும், ஆரஞ்சுப் பையனும்

அவ ஆப்பிள் மாதிரிடா என்று காதலிக்கும்போது கவிதை எழுதித் திரியும் ஆண்களும், அவன் ஆரஞ்ச் மாதிரிடி சாஃப்டான ஆளு என தோழியருடன் சிணுங்கித் திரியும் பெண்களும் திருமணத்தில் இணைந்தால் இப்படித் தான் இருக்கும் !!

இதைத் தான் திருமணத்துக்குப் “பின்” என்கிறார்களோ !!!