சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

ரோபோவுக்குள் மனிதன் !

ரோபோவுக்குள் மனிதன் !

அவதார் ! படத்தை அவ்ளோ சீக்கிரம் மறந்திருக்க மாட்டீங்க. மனித உடல் ஒரு இடத்தில் இருக்க மனமும், உயிரும் அப்படியே இன்னொரு நீல நிற உடலுக்குள் தாவும் . அப்படியே பண்டோரா எனும் கிரகத்திலுள்ள மனிதர்களோடு போரிடவும் செய்யும்.

ஒரு வகையில் நமது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையின் ஹைடெக் வடிவம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த அவதார் எனும் பெயரில் ஒரு ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கான்செப்ட் கூட அதே தான். மனித மூளையை அப்படியே ஒரு ரோபோவுக்கு பொருத்தினால் எப்படி இருக்கும் என்பது தான் சிந்தனை.

இன்னும் பத்தே வருடங்களில் இந்த சிந்தனை செயல் வடிவம் பெற்று விடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இட்ஸ்கோவ், இந்த திட்டத்தின் காரணகர்த்தா. பொதுவாக இத்தகைய ‘பிலிம்’ காட்டும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தான் நடக்கும். அதுவும் இந்த கருவை வைத்துக் கொண்டு ஹாலிவுட்டில் ரோபோ காப், கேப்ரிகா, புல்மென்டல் ஆல்கெமிஸ்ட், ஹோஸ்ட் இன் த செல் என வரிசையாக படங்களை சுட்டுத் தள்ளினார்கள்.

இப்போது இந்த கருவைக் கையில் எடுத்திருப்பது ரஷ்யா என்பது தான் ஒரு வித்தியாசம்.

பிறவிக் குறைபாடு உடையவர்களோ, நிரந்தர ஊனமானவர்களோ, அல்லது சாகக் கிடப்பவர்களோ தங்கள் மூளையை அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு ரோபோ தலையில் வைத்து சாகா வரத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

அறிவியலின் மிகப்பெரிய கனவுகளின் ஒன்று தான் இத்தகைய மூளை மாற்று சிகிச்சை போன்றவை. இதை அறிவியல் “முழு உடல் மாற்று” என்றும் “ மூளை மாற்று சிகிச்சை” என்றும் அழைக்கிறது. இந்த விஷயத்தில், மூளையை மற்ற நரம்புகளுடன் இணைப்பது படு சிக்கலான விஷயம். இன்றைய நுட்பம் தோற்றுப் பின் வாங்கும் இடங்களில் ஒன்றும் இது தான்.

ஆனால் சமீபத்தில் எலிகளை வைத்து இந்த ஆராய்ச்சி சில சுவடுகள் முன்னேறிச் சென்றது குறிப்பிடத் தக்கது !

மேட்ரிக்ஸ், அவதார் போன்ற திரைப்படங்கள் சொல்லும் “மைன்ட் அப்லோடிங்” அதாவது மனம் மாற்று முறை சாத்தியமானால் விஞ்ஞானத்தின் மிக முக்கியமான மைல் கல் அதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த பத்தாண்டுத் திட்டமாக மூளையை உள்வாங்கிச் செயல்படும் ரோபோவைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடக்கப் போகின்றனவாம். அமெரிக்காவிலுள்ள டி.ஏ.ஆர்.பி.ஏ எனும் ராணுவ ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தனது திட்டத்தைச் சொல்கிறார் இட்ஸ்கோவ்.

நூறு விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் இணைந்துப் பணியாற்றப் போகிறார்களாம். இந்த திட்டம் செயல்வடிவம் பெற்றால் விலை மதிப்பற்ற விஞ்ஞானிகள், ஞானிகள், தலைவர்கள் போன்றவர்களின் மூளைகளைத் தாங்கிய ரோபோ மனிதர்கள் அருங்காட்சியகங்களில் வசிக்கக் கூடும் !

விஞ்ஞானம் மிரட்டுகிறது இல்லையா ?

 

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம்

மிரட்டும் மரபணு பயிர்கள் : பசுமை விகடன் கட்டுரை

இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.

2050ல் உலகின் மக்கள் தொகை 9.1 பில்லியன் அளவுக்கு அதிகமாகும். இன்றைக்கு இருப்பதை விட 70 சதவீதம் அதிக உணவுப் பொருள் தேவைப்படும். என்ன செய்வீர்கள் ? விவசாய நிலங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. ஒரே வழி இது தான். மரபணு மாற்று விதைகள். இல்லையேல் உங்கள் நாடு பட்டினியில் மடியும். என்றெல்லாம் உருட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது அமெரிக்கா.

சரி அதென்ன மரபணு மாற்று விதைகள். வேறுவேறு தாவரங்களின் டி.என்.ஏக்களில் உள்ள தேவையான மரபணுக்களை வெட்டி எடுத்து புதிய விதை தயாரிப்பது. இதை ரீ காம்பினண்ட் டி.என்.ஏ தொழில் நுட்பம் என்கிறார்கள். கேட்பதற்கு “வாவ்..” எனத் தோன்றும் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இது இயற்கை விதிகளுக்கே முரணானது. இரண்டாவது இந்த தாவரங்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான விஷத் தன்மையும் உண்டு. இவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.

ஒருவகையில் இந்த மரபணு விதைகளில் இருப்பது தடுப்பு மருந்து டெக்னிக் என்று கூட சொல்லலாம். நோய்க்கான கிருமியைக் கொண்டு நோய்த்தடுப்பு செய்வது போல, பூச்சிக்கான மருந்தை விதையில் செலுத்தி பூச்சி தாக்காத விதைகளை உருவாக்குவது. இதன் எதிர்விளைவு என்ன தெரியுமா ? பூச்சிகள் இன்னும் அதிகம் வீரியமாகும். அப்படி வீரியமாகும் போது சாதாரண பயிர்கள் இருப்பதையும் இழக்க வேண்டியது தான்.

உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையில் பி.டி (Bacillus thuringiensis )  கத்தரி தான் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதற்கு மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவான GEAE அங்கீகாரம் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இதை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மேஹோ எனும் நிறுவனம். எப்படி அரசு பி.டி கத்தரிக்கு அனுமதி வழங்கியது என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. “அமெரிக்காவின் கரம் இனிமேல் இந்திய வயல்களிலெல்லாம் விளையாடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின.  இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின.  இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!

கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !

இந்த கத்தரி பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும். விதைகளுக்காக மேலை நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் உண்டு. இன்று கத்தரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால் இயற்கை விவசாயம் என்னவாகும் ? மகரந்தச் சேர்க்கையினால் நல்ல தாவரங்களும் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் இணைகையில் என்ன நேரும் என்பதெல்லாம் இன்னும் புதிர் தான். ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் டன் எனுமளவில் இருக்கிறது நமது கத்தரி விவசாயம். இதில் எவ்வளவு பெரிய பாதிப்பை இந்த விதைகள் உண்டாக்கப் போகின்றன என்பது திகிலாகவே இருக்கிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.

இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது. 

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அங்கலாய்க்கிறது அமெரிக்கா. எப்படியாவது அகல பாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பெரியண்ணனுக்குக் கிடைத்திருப்பது தான் மரபணு விதை எனும் மந்திர வித்தை. அமெரிக்கா சொன்னால் ஆமாம் சாமி போடுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் இருந்தால் பிரச்சினையே இல்லையே. என்பது தான் எதிர்ப்பவர்களின் ஆவேசக் குரல்.

என்னதான் வானவில் வார்த்தைகளைக் கூறினாலும் அயர்லாந்து மரபணு விதைக்கான கதவை இறுக மூடிவிட்டது. “பேசினது போதும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டது அந்த அரசு. மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபலும் ஒட்டப்போகிறார்கள். பால் பொருட்களைக் கூட மரபணு மாற்றப்படாத தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம். மரபணு திகில் அயர்லாந்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு இந்த சிறு உதாரணமே போதும்.

அயர்லாந்தின் இந்த முடிவை உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. தங்களால் செய்ய முடியாததை அயர்லாந்து செய்திருக்கிறதே எனும் வியப்பும் ஒரு காரணம். அயர்லாந்து மட்டுமல்ல உலகின் புத்திசாலி நாடுகள் பலவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி , பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. 

ஏற்கனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன. அமெரிக்காவின் அடுத்த மரபணுகுண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. பெரியண்னன் விடுவாரா ? மீண்டும் மீண்டும் ஜப்பானை வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்து கூட கொள்கையில் உறுதியாய் இருக்கிறது. எங்களுக்கு எந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளும் வேண்டாம். பயிர்களும் வேண்டாம் என அரசு தீர்மானமே போட்டு விட்டது. எந்த ஏற்றுமதி உணவுப் பொருளோ, இறக்குமதிப் பொருளோ மரபணு மாற்றப்படாதது எனும் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஏன் நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாய் பிடிகொடுத்து பேசவில்லை ! 

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்றால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. யூ.கே உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஆய்வுகளில் இறங்கும் என அவர்கள் அறிவித்திருக்கின்றனர். அறிவிப்பை வெளியிட்டது 1660 முதல் லண்டனில் இயங்கும் பழம் பெரும் ராயல் சொசைட்டி அமைப்பு. இனிமேல் ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட்கள் செலவில் ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். அதுவும் தொடர்ச்சியாய் பத்து ஆண்டுகளுக்கு. அதில் மரபணு மாற்று விதைகளுக்கும் ஒரு இடம் உண்டாம்.  மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கோ பயிர்களுக்கோ ஐரோப்ப யூனியன் (இ.யு) எந்த விதமான அதிகாரப் பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. எனினும் ராயல் சொசைடியின் இந்த அறிவிப்பு சர்வதேசக் குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.

இந்த அறிவிப்பை யூ.கேவின் ஏ.பி.சி (அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி கவுன்சில் )  வரவேற்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு தான் உலகிலேயெ மிக முக்கியமானது என திருவாய் மலர்ந்திருக்கிறார் இதன் தலைவர் ஜூலியன் லிட்டில். உலகெங்கும் ஏற்கனவே 13 மில்லியன் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த மரபணு மாற்று பயிர்களை இன்னும் தடை செய்வதில் அர்த்தமில்லை என்பது இவர் வாதம்.

பச்சைக் கொடி கும்பலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை அமைச்சர் டோனி பர்க். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் அதிக உணவை எப்படி உற்பத்தி செய்வது ? அறிவியலின் கரம் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.

உலகின் வறுமைக்கு ஒரே தீர்வு மரபணு மாற்று விதைகள் தான் என அமெரிக்கா கிழிந்த டேப் மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மட்டுமே தீர்வு என்பதில் நாடுகள் ஒன்றுபடவில்லை. கடந்த ஆண்டு யூஎன் நடத்திய ஆய்வில் 60 நாடுகள் பங்கேற்றன. மரபணு மாற்றம் உலக வறுமைக்குத் தீர்வல்ல என்பது தான் அவர்களுடைய முடிவு !

இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை பொய்க்கிறது. விவசாய நிலங்கள் அழிகின்றன. எனவே இருக்கும் கொஞ்ச நிலத்தில் அதிகம் விளைய வேண்டும். மழை இல்லாவிட்டாலும் விளைய வேண்டும். உரம் இல்லாவிட்டாலும் விளைய வேண்டும், பூச்சி தாக்காமல் வளர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எனது மரபணு விதைகள் தான். என “வாலிப வயோதிக அன்பர்களே “ ரேஞ்சுக்கு அமெரிக்கா திரும்பத் திரும்ப பல்லவி பாடுகிறது. உண்மையில் இந்த விதைகளின் விலைகளைக் கேட்டால் நமது வறுமையை ஒழிக்க வந்ததாய் தெரியவில்லை. அமெரிக்க வறுமையை ஒழிக்க வந்ததாய் தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்க நிறுவனமான மோன்சேண்டோவின் பணம் கறக்கும் வித்தை. அதற்குப் பலியாகி விடக் கூடாது. நமது ஊரில் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் கத்தரி விதையை 150க்கு விற்கும் வியாபார தந்திரம். என்கிறார் தமிழ்நாட்டிலுள்ள இந்திய விவசாயிகள் சங்க ஜெனரல் செக்ரிடரி ஆர்.வி கிரி

உணவைப் பொறுத்தவரை உலகெங்கும் அதற்கு ஒரே விளைவு தான். அமெரிக்கன் தின்று சாகாத மரபணு பயிர் இந்தியனை அழிக்கும் என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்கர் உண்டால் விஷம், உகாண்டா உண்டால் அமிர்தம் என ஒரே பயிர் இரண்டு முகம் காட்ட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 500 டன் சோயாவை ஆண்டு தோறும் உண்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லை. உலகில் 26 நாடுகள் ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்திருக்கின்றன. அவர்களெல்லாம் அழிந்து விடவில்லை என கணக்குகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.

உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர். 

இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.

லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார். 

உணவுப் பற்றாக்குறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதற்குக் காரணம் என்ன ? நிச்சயமாய் உலகில் ஏற்பட்டுள்ள விதைப் பற்றாக்குறை அல்ல. உலகிலுள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் தேவையான விதைகள் உலகில் உண்டு. அப்படி இருக்க எதற்கு இந்த செயற்கை விதைகள் என்பது ஓங்கி ஒலிக்கும் ஒரு கேள்வி. வறுமையையும், ஊட்டச்சத்து குறைவையும் ஒழிப்பேன் என களத்தில் குதிக்கின்றன விதைகள். உண்மையில் இயற்கையை விட்டு விலகிச் செல்லச் செல்லத் தான் வறுமையிலும், நோயிலும் தான் விழுகிறோம்.

மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.

இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?

உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.

நன்றி : பசுமை விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஜூ.வி : அமெரிக்க அதிர்ச்சி !

k1கல்லறைப் பயணத்துக்கும் காசில்லை

“சொல்லவே மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அண்ணன் தற்கொலை பண்ணிகிட்டார். ஏதோ பணக் கஷ்டத்துல இருந்திருக்கார் போல. தலையில துப்பாக்கியை வெச்சு சுட்டிருக்கார். உயிர் போயிடுச்சு. அவரோட அறையில இருந்து உங்க அட்ரஸ் கிடச்சுது. இப்போ அவரோட உடல் இங்கே மார்ச்சுவரில தாஇருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” மெதுவாய் பேசுகிறது குரல்.

“ஐயோ..என் அண்ணனா ? இறந்துட்டாரா ?” மறுமுனையில் பெண்ணின் குரல் பதறுகிறது.

“ஆமாம்மா. உடம்பு இங்கே தான் இருக்கு வந்து வாங்கிக்கறீங்களா ?” குரல் மறுபடியும் அமைதியாய் ஒலிக்கிறது.

மறுமுனையில் கொஞ்ச நேரம் மௌனம். பின் இறுகிய குரல் விசும்பலுடன் பேசத் துவங்குகிறது

“என் கிட்டே பணமே இல்லை. அவரோட இறுதிச் சடங்கை செய்ய எனக்கு வசதியும் இல்லை. அவரோட இறுதிச் சடங்கை நீங்களே செஞ்சுடுங்க. கொஞ்சம் அன்போட செய்யுங்க பிளீஸ்…” அழுகையுடன் மறுமுனை போன் வைக்கப்படுகிறது.

இது ஏதோ ஒரு அவார்ட் திரைப்படத்தில் வரும் சோகக் காட்சியல்ல. ஆப்பிரிக்கா, சோமாலியா போன்ற நாடுகளின் குடிசைகளிலிருந்து ஒலிக்கும் குரலுமல்ல. இந்த குரல் ஒலிப்பது சாட்சாத் அமெரிக்காவிலிருந்து ! இது ஒரு அபூர்வ நிகழ்வும் அல்ல. இப்படிப் பட்டப் பேச்சைத் தினமும் கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் எவர்கிரீன் கல்லறைத் தோட்ட நிர்வாகி ஆல்பர்ட் காஸ்கின்

உலகின் வல்லரசு. பெரிய அண்ணன். நிலவுக்கே கூட சட்டென போய்வரக் கூடிய வசதி. நினைத்த நேரத்தில் வேண்டாத நாட்டின் தலையில் குண்டு போடக் கூடிய கர்வம். வரிசை வரிசையாய் கண்ணாடி மாளிகைகள். டாலர் கட்டுகள். கோட் சூட்டுகள். இப்படிப் பார்த்துப் பார்த்தே பழகிப் போன அமெரிக்கா இப்போது நொடிந்து கிடக்கிறது.

அமெரிக்காவுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சில ஆண்டுகளுக்கு முன் யாரேனும் சொல்லியிருந்தால் அது முதல் பரிசு பெறக் கூடிய நகைச்சுவையாய் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கோ அது கசப்பான உண்மையாகியிருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கிக் கொண்டிருந்த வங்கிகளுக்குத் தான் ஆரம்பித்தது முதல் சிக்கல். யாருமே பணம் திருப்பிக் கட்டாமல் வங்கிகள் திவாலாயின. காட்டுத் தீயாய் பரவிய இந்த அழிவு, பிற வங்கிகள், ஆட்டோ மொபைல், கிரெடிட் கார்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. இந்த டிராகனின் தீப்பிழம்புகளிலிருந்து தப்பிப் பிழைத்தவை வெகு சொற்பமே. காய்ந்து போன இலைகளைப் போல வேலைகளிலிருந்து மக்கள் உதிர ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் வேலையில்லாமல் பரிதவிக்கும் அமெரிக்கர்கள் சுமார் 10 சதவீதம் பேர் !

ஐந்து நாள் வேலை, இரண்டு நாள் கொண்டாட்டம் என இருந்த அமெரிக்கர்களுக்கு வேலையில்லையேல் என்ன செய்வதென புரியவில்லை. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக் கூட கையில் பணமில்லாமல் புலம்ப வேண்டிய நிலமை. வேலை இருந்த வரைக்கும் கம்பெனி மருத்துவக் காப்பீடு கொடுத்து வந்தது. வேலையில்லையேல் கைக்காசை வைத்துக் கொண்டுதான் அதையும் வாங்க வேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லையேல் எப்படி மருத்துவக் காப்பீட்டுக்கு மாதா மாதம் பிரீமியம் கட்டுவது ?

மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவ மனைக்குப் போனால் அவ்வளவு தான். தீட்டித் தள்ளி விடுவார்கள். இன்றைய தேதியில் சுமார் 57 சதவீதம் அமெரிக்கர்கள் தேவையான் மருத்துவக் காப்பீடு வாங்கப் பணமில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது “காமன்வெல்த் ஃபண்ட்” நடத்திய ஆய்வு.

மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கு விபத்தோ, பெரிய நோயோ வந்துவிட்டால் சாவு ஒன்று தான் முடிவு. அமெரிக்காவில் சமீப காலமாக நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கும் காரணம் இந்த திடீர் ஏழ்மையே. தற்கொலைகளுடனும் எல்லாம் முடிந்து போவதில்லை. அவற்றைத் தொடர்கின்றன அடக்கம் செய்யக் கூட முடியாத துயரக் கதைகள். விபத்திலோ, நோயிலோ பலியான சகோதரர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் என பல உடல்களால் நிரம்பி வழிகின்றன மார்ச்சுவரிகள்.

“பணமில்லை, நீங்களே இறுதிச் சடங்கைச் செய்யுங்களேன் பிளீஸ்” என கண்ணீருடன் கெஞ்சுபவர்களின் எண்ணிக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 36 சதவீதம் அதிகம். இறுதிச் சடங்கு செய்யவேண்டுமென்றால் செலவு அப்படி இப்படி சுமார் 10,000 டாலர்கள் ஆகிவிடும். அதை அரசாங்கம் செய்துவிட்டால் சாம்பலை மட்டும் ஒரு மாதம் கழிந்து சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்கான செலவு சுமார் 350 டாலர்கள் மட்டுமே.

“என்னிடம் அப்பாவை எரிக்கக் கூட பணம் இல்லை என மகன் சொல்கிறான். மகனை எரிக்கப் பணம் இல்லை என்று அம்மா சொல்கிறார். இப்படி ஒரு கொடூரமான துயரத்தை நான் சந்தித்ததேயில்லை என நிலைகுலைந்து போய் பேசுகிறார் டேவிட் ஸ்மித் எனும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர இன்வெஸ்டிகேட்டர்.

“பன்னிரண்டு வருடங்களாக “இறுதிச் சடங்குகளை நடத்தும் குழு”வின் இயக்குனராக இருக்கிறேன். இதுவரை இப்படி அதிக எண்ணிக்கையில் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததே இல்லை. இறுதிச் சடங்குகளை நடத்த எல்லோருமே விரும்புகிறார்கள், ஆனால் பாவம் வசதியின்றித் தவிக்கிறார்கள்” என பதறுகிறார் பாப் ஆச்சர்மான்

இப்படி அடுக்கடுக்காய், திகில் நிரம்பிய, பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருப்பது கலிபோர்னியாவின் முன்னணி நாளிதழான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ். கையில் பணமில்லை. வாழ வழியில்லை. அப்படியே செத்துப் போனால் கூட இறுதிச் சடங்கு செய்யவும் பணமில்லை. இப்படி அடுக்கடுக்கான துயரங்களுடன் தான் நகர்கிறது இன்றைய அமெரிக்கர்களின் வாழ்க்கை.

தமிழிஷில் வாக்களிக்க…

உலகம் : கொடுமையிலும், கொடுமை…

3தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.

அந்த மலைப்பாம்பு காடு மலை தாண்டியெல்லாம் வரவில்லை சார்லஸ் ஜேசன் டார்னெல் என்பவர் வளர்த்தது. அவர் குழந்தையின் தாயின் பாய்பிரண்டாம்.

இரவில் எதேச்சையாக எழுந்தவர் கூண்டில் பாம்பைக் காணாமல் அங்கும் இங்கும் தேடினால், பாம்பு படுக்கையில் படுத்திருந்த குழந்தையை முறுக்கிப் பிடித்து கடித்துக் கொண்டிருந்ததாம். அலறியடித்துப் போய் பாம்பை அடித்து இழுத்து மாற்றியும், குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது மிகப்பெரிய சோகம்.

காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க சிறப்பு அனுமதி பெறவேண்டும். ஆனால் அந்த பாம்பு அனுமதி வாங்காமல் 2வளர்க்கப்பட்டதாம். ஆதாம் காலத்திலிருந்தே பாம்புக்கும், மனுஷனுக்கும் ஒத்து வருவதில்லை. அப்புறமும் எதுக்கு இந்த விபரீத ஆசையோ ?

மலைப்பாம்பை சின்னதாக இருக்கும் போது ஆசைப்பட்டு வாங்கி விடுகிறார்கள். அது வளர்ந்தபின் புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது, வெளியே விடவும் முடியாமல், தொடர்ந்து வளர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கிறார்கள். இது போன்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்வது இது பன்னிரண்டாவது முறையாம்.

காட்டில் இருக்க வேண்டியவை காட்டிலும், நாட்டில் இருக்க வேண்டியவை நாட்டிலும் இருப்பதே இயற்கையோடு இணைந்த வாழ்வு. அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க ஒரு இரண்டு வயது குழந்தையைப் பலிகொடுக்க வேண்டியிருந்ததே உலக மகா துயரம்.

பிடித்திருந்தால் தமிழிஷ் வாக்களிக்கலாம்..

வரும் வழியில் : சென்னையைக் கலக்கும் வை.கோ

இன்று வரும் வழியில் சுவாரஸ்யமான ஒரு போஸ்டரைப் பார்க்க நேர்ந்தது.

ஒபாமா சிரித்துக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் அது. இதென்னடா சென்னைக்கு வந்த சோதனை ? ஒபாமா தன்னுடைய கட்சி அலுவலகத்தை சென்னையில் துவங்கியிருக்கிறாரா ? இல்லை ஓட்டு கேட்க (கவனிக்க, ஒட்டுக் கேட்க அல்ல ) சென்னை வந்திருக்கிறாரா ? என்று குழம்பியபடியே உற்றுப் பார்த்தால் இன்னொரு ஆச்சரியம்.

அருகிலேயே கோட் சூட்டுடன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். கூர்மையாய் பார்த்தேன் அட !!! நம்ம வை.கோ ? கையில் ஒரு புக், பேனா வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதற்கு நிற்பவரைப் போல நிற்கிறாரே !

என்ன நடக்குது ? ஒருவேளை ம.தி.மு.க வுடன் ஒபாமா கூட்டு சேர்ந்துவிட்டாரா ? இல்லை
அவருக்கு இவர் தமிழ் கத்துக் கொடுக்கிறாரா ? இது உண்மையா இல்லை குரோம்பேட்டை கிராபிக்ஸ் வேலையா ?  என்று யோசித்துக் கொண்டே காரோட்டினேன்.

அடுத்த போஸ்டரில் தான் என்ன எழுதியிருந்தது என்பதை வாசிக்க முடிந்தது.
“ஒபாமாவைச் சந்தித்து வந்த மக்கள் தலைவன் வைகோவை வரவேற்கிறோம்”  !!
ஆஹா… ஆஹா… சுவாரஸ்யமாய் இருக்கிறதே என நினைத்துக் கொண்டே பார்த்தால்,

காஞ்சி புர மதிமுக இன்னும் ஒரு படி மேலே போய்
“அமெரிக்காவின் அதிசயம் ஒபாமாவைச் சந்தித்து வந்த
முதல் இந்தியன் வை.கோ
இந்தியாவின் அதிசயம் “ என்று ஒரு அட்டகாச போஸ்டர்.

மதிமுகவின் போஸ்டர்கள்… மன்னிக்கவும், வை.கோ ரசிகர் மன்றத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களின் குருவி போஸ்டரை விட விர்ரென்று பறக்கிறது. சென்னை முழுவதும்.

அதிலும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா எனும் வாசகங்கள் வேறு :!!! ஒபாமாவைச் சந்தித்து வந்த நூறாவது நாள் – என்று கூட போஸ்டர் ஒட்டப்படலாம்.. சொல்ல முடியாது.

உங்களால புஷ்ஷை தான் பார்க்க முடியும், எங்கள் தலைவர் ஒபாமாவையே சந்திப்பார் என நாளை மதிமுக தெருமுனை கூட்டங்கள் புகழ் பாக்கள் பாடலாம்.

ஒபாமாவைச் சந்தித்த முதல் இந்தியப் பெண் என்னும் பெருமையை நீங்கள் பெறவேண்டும் என அதிமுகவின்  ஓ போடும் செல்வங்கள் அம்மாவை தூண்டி விடக் கூடும்.

கடல் கடந்து சென்றாயே, கள்ளத் தோணியிலா ? ஒபாமா என்ன புறநானூற்றுப் பாடல் கூறும் வீரத்திருமகனா ? திராவிடக் கருமகனா ? என எதிர் கட்சி அறிக்கை வெளியிடக் கூடும்.

எப்படியோ, காடுவெட்டி குருவை விடுவித்தால் மத்திய அரசுக்கு ஆதரவு என பா.ம.க பரபரப்பைக் கிளப்புகிறது. அரசு கவிழும் என பா.ஜ.க பட்டையைக் கிளப்புகிறது, பா.ஜ.கவின் எம்.பிக்களே எங்கள் பக்கம் என காங்கிரஸ் கலக்குகிறது. இந்தப் பரபரப்பில் காணாமல் போன வர்கள் இரண்டு பேர் ஒன்று அம்மா.. இன்னொன்று வை.கோ..

வை.கோ முந்திக் கொண்டு ஒபாமாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டார்.

மிச்சமிருக்கும் நபர் சார்பாக, அடுத்த போஸ்டர் விரைவில் ஒட்டப்படலாம்.

அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ?

 

அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிங்க்ஸ் கவுண்டி மருத்துவ மனையில் பணியாளர்களின் உதாசீனத்தால், மருத்துவமனை தரையிலேயே கிடந்து, உதவி கிடைக்காமல் இறந்து போயிருக்கிறார் நாற்பத்தொன்பது வயதான எஸ்மின் கிரீன்.

 

மனித நேயம் மிச்சமிருப்பதாய் கருதப்படும் மருத்துவமனைகளில் ஊழியர்களின் அலட்சியமும், பாராமுகமுமே மிச்சமிருப்பதாய் பறைசாற்றுகிறது இந்த நிகழ்வு.

 

முதலில் மூடி மறைக்கப்பட்டாலும், நவீனத்தின் பயனாக மருத்துவமனை காமராக்கள் எஸ்மின் கிரீன் சுமார் ஒரு மணி நேரம் தரையில் விழுந்து மரணத்தோடு போராடி, உதவிக் கரங்கள் ஏதும் இல்லாமல் கடைசியில் சாவின் கரங்களின் தன்னை ஒப்புவித்த நிகழ்வுகளை படமாகியிருக்கின்றன.

 

மருத்துவமனை காவலர், மற்றும் செவிலியர் தரையில் மரணத்தோடு மல்லிட்டுக் கொண்டிருந்த எஸ்மின் கிரீனை கண்டும் காணாமல் சென்றிருக்கின்றனர். இதன் உச்சமாக ஒரு செவிலி காலால் அந்த அம்மாவை உதைத்து தூங்கிக்கொண்டிருக்கிறாரா என சோதித்திருக்கிறார். சலனமே இல்லாமல் கிடந்த கிரீனை நிராகரித்து நகர்ந்திருக்கிறார்.

 

அந்த அறையில் காத்திருந்த மேலும் சிலர் கூட அவரை நிராகரித்து இருக்கைகளில் ஏதுவுமே நடவாதது போல அமர்ந்திருந்தது மனிதத்தின் மீது மிகப்பெரிய கேள்விக்குறியை நாட்டியிருக்கிறது.

 

முதலில் மருத்துவ அறிக்கை எஸ்மினை பணியாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகவும் அவர் நலமுடன் இருந்ததாகவும் தெரிவித்தது. தற்போது காமராக்கள் இதை வேறுவிதமாய் சொல்லவே, வேறு வழியில்லாமல் பணியாளர்கள் சிலரை பணி நீக்கம் செய்து நியாயத்தின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது மருத்துவமனை.

 

எஸ்மின் கிரீன் சுமார் 24 மணி நேரம் அவசர சிகிச்சை காத்திருப்பு அறையிலேயே படுக்கை ஏதும் கிடைக்காமலும், உதவி கிடைக்காமலும் அமர்ந்திருந்தார் என்கிறது தகவல். அவர் கருப்பு இனத்தைச் சேர்ந்தவராக இருந்ததாலேயே நிராகரிப்புக்கு உள்ளானார் என குரல் கொடுக்கின்றனர் பலர்.  

உலகின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்குள்ளே நிற வெறியும், இனவெறியும் மரித்துப் போன மனிதாபிமானமுமாக வீ ச்சமடிக்கிறது

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா..

ஆத்தா ஆடுவளத்தா, கோழி வளத்தா கணக்கா, அமெரிக்காவிலுள்ள பயிற்சியாளர் ஒருவர் ஓணான்களை வளர்க்கிறார்.

பல்லி, பாம்பு, பூச்சி என விதவிதமாய் வளர்ப்பது மேலை நாட்டவர்களின் வழக்கம் எனினும், இந்த ஓணான்கள் சற்று வித்தியாசமானவை.

11.jpg

மனிதர்களைப் போல பல வித்தைகளைச் செய்து காட்டுகின்றன, விளையாட்டு சோபாவில் அமர்ந்து ஒய்யாரமாய் போஸ் கொடுக்கின்றன, விளையாட்டு இசைக்கருவிகளை வைத்து படம் காட்டுகின்றன.

21.jpg

எல்லாம் நல்லது தான் ஆபீசர், இந்தியாவுல இதுகளையெல்லாம் கொண்டு வந்துடாதீங்க. வைத்தியசாலைகளில் எண்ணை தயாரிக்கவும், பசங்களுக்கு ஈக்கில் வைத்து பிடிக்கவும், குறிபார்த்துக் கல்லெறியவும் தான் ஓணான்கள் பயன்படுகின்றன இங்கே.