மிஸ்ட் கால் பயங்கரம் ! உஷார் !!!

கல்பனாவின் எண்ணுக்கு அந்த மிஸ்ட் கால் வந்திருந்தது. நீண்ட நேரம் யோசித்துப் பார்த்தாள். ஊஹூம் யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. சரி யாராய் இருக்கும் என கூப்பிட்டுப் பார்ப்போமே என்று அந்த எண்ணை அழைத்தாள்.

“உங்க நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்துது” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. ஹாய்… நீங்க கல்பனா தானே ?” மறுமுனையில் ஒரு வசீகரிக்கும் ஆண் குரல். அந்தக் குரலின் வசீகரத்தை ஒரு வினாடி ரசித்த சுகந்தி சொன்னாள்.

“இல்லீங்க… இது ராங் நம்பர்…..”

“ஓ… ஐ யாம் சாரி இந்த நம்பர் தான் குடுத்தாங்க… ” மறுமுனையில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“சாரிங்க.. இது ராங் நம்பர்…” சொல்லிவிட்டு போனை வைத்தாள் சுகந்தி. அந்த நிகழ்ச்சியை அத்தோடு மறந்தும் போய்விட்டாள்.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் ஒரு அழைப்பு. அழைத்தது அவனே தான்.

“கல்பனா இருக்காங்களா ? “ அதே குரல் !

“இல்லீங்க, மறுபடியும் நீங்க தப்பான நம்பருக்கு கூப்பிட்டுட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன நம்பர் வேணும் ?” சுகந்தி கேட்டாள்.

அவன் சொன்னான் !

“ஐயோ.. இது எங்க வீட்டு நம்பர். நீங்க தப்பா நோட் பண்ணியிருப்பீங்க… முதல்ல போய் சரியான நம்பரை வாங்கிக்கோங்க ” சுகந்தி சொன்னாள்.

“அதான் என்னோட பிரச்சினையே ! தப்பா நினைச்சுக்காதீங்க. நான் அண்ணா யூனிவர்சிடி ல பி.ஹெச்.டி பண்ணிட்டிருக்கேங்க. சில தகவல்களைத் தேடி அலையறேன். கிடைக்கவே இல்லை. கல்பனா கிட்டே அந்த தகவல்கள் இருக்குன்னு சொன்னாங்க. யூனிவர்சிடில அவங்க நம்பர்ன்னு இதைத் தான் குடுத்தாங்க… எப்படின்னு தெரியல…” மறுமுனையில் அவன் குரலில் கொஞ்சம் கவலை தெரிந்தது.

அண்ணா யூனிவர்சிடி, ஆராய்ச்சி மாணவன் என்றதும் சுகந்தியின் மனதில் கொஞ்சம் வியப்பு. இவளும் எம்.பில் முடித்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ண வேண்டும் எனும் ஆர்வத்தில் இருப்பவள் தான்.

“ஓ.. என்ன ஆராய்ச்சி பண்றீங்க சார் ?” சுகந்தி கேட்டாள்.

“என்னை நீங்க விஜய்ன்னே கூப்பிடலாம். சார் ன்னு கூப்பிடற அளவுக்கு இன்னும் வயசாகலை எனக்கு “ மறு முனையில் விஜய் சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.

“நான் நானோ டெக்னாலஜில ரிசர்ச் பண்றேங்க”

“ஓ..ரியலி.. நான் கூட அதே ஏரியால தான் ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்” சுகந்தி சொன்னாள்.

“ஓ.. நீங்க கூட ஸ்டுடண்டா ? வாவ்… இஃப் யூ டோண்ட் மைண்ட்…. எனக்கு கொஞ்சம் தகவல்கள் கொடுக்க முடியுமா ?” விஜய் கேட்டான்.

“தகவல்ன்னு சொன்னா….” சுகந்தி இழுத்தாள்.

“உங்க ஆராய்ச்சிக்கு நீங்க பத்திரமா மூட்டை கட்டி வெச்சிருக்கிற விஷயம் எதுவும் தரவேண்டாங்க… ஏதோ இந்த போனா போவுதுன்னு ரெண்டு மூணு தகவல் குடுத்தீங்கன்னா கூட போதும்” அவன் சிரிக்க சுகந்தியும் சிரித்தாள்.

“நீங்க எங்கே தங்கியிருக்கீங்க ?” சுகந்தி கேட்டாள்.

“நான் சிஸ் மெரிடியன், வேளச்சேரி “ விஜய் சொல்ல சுகந்தி ஆச்சரியமானாள். அவளும் அதே தெருவில் இருக்கும் காஸா பிளாங்கா அப்பார்ட்மெண்டில் தான் இருந்தாள்.

இருவரும் சில நாட்களுக்குப் பின் ரத்னா கஃபேவில் சந்தித்துக் கொண்டார்கள். அந்தப் பழக்கம் முதலில் ஆரோக்கியமான கல்வியில் ஆரம்பித்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜாலி, அன்பு, காதல் என தளம் மாறியது !

“என்ன மேடம், ஒரு நாள் வீட்டுக்குக் கூப்பிட்டு அப்பா அம்மாவை அறிமுகப் படுத்த மாட்டேங்கறீங்க, ஒரு கப் காபி தரமாட்டேங்கறீங்க ?” விஜய் சீண்டினான்.

“காபி வேணும்ன்னா இன்னிக்கே வாங்க…” சுகந்தி விஜயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குப் பிடித்தவருடனான மாலைப் பொழுது அவர்கள் மேல் ஒரு மெல்லிய போர்வையாய் படர்ந்தது. நெருக்கமும், இணக்கமும் அவர்களை எல்லை தாண்ட வைத்தது. முதலில் குற்ற உணர்வாய் தோன்றிய விஷயம் பின்னர் அடிக்கடி நடந்தது !

திடீரென ஒருநாள் விஜய் காணாமல் போய்விட்டான் ! அவனுடைய செல்போன் நம்பரை அழைத்தால், அது உபயோகத்தில் இல்லை என்றது. சுகந்திக்குப் பதட்டம் அதிகரித்தது. அவனுடைய அப்பார்ட்மெண்டில் சென்று விசாரித்தால் அப்படி யாரும் அங்கே இருந்திருக்கவில்லை. யூனிவர்சிட்டியில் தெரிந்த நபர்கள் மூலமாக விசாரித்தால் அங்கும் அவனைப் பற்றிய தடயங்கள் ஏதும் இருக்கவில்லை.

உட்கார்ந்து யோசித்தவளுக்குத் தான் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஒரு ராங் நம்பரில் ஆரம்பித்தவர் ராங் நபர் என்பது அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான். இவளுடைய குடும்பம் பற்றியும், படிப்பு பற்றியும், ரசனை பற்றியும் எல்லாம் தெரிந்து கொண்டே அவளை வலையில் வீழ்த்தியிருக்கிறான். சுகந்திக்கு அவமானமாய் இருந்தது.  கடுமையான ஏமாற்றம் மன உளைச்சல் என உழன்ற சுகந்தி வாழ்க்கையைப் புரிந்து கொண்டபோது ரொம்ப தாமதமாகியிருந்தது.

இது ஏதோ ஒரு சுகந்திக்கு நடந்த கதையல்ல. நகரின் பல இடங்களிலும் பல வகைகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியே. சைபர் கிரைமுக்கு வரும் பல்வேறு புகார்கள் பயமுறுத்துகின்றன.

மிஸ்ட் கால், ராங் நம்பர்  போன்றவையெல்லாம் ஒரு தூண்டில் என்பதை பலரும் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. யாரோ அழைத்திருக்கிறார்களே ஏதாவது முக்கியமான சமாச்சாரமோ ? என திரும்ப அழைத்தால் போச்சு ! பேசிப் பேசி வசீகரித்து ஏமாற்றி விட மறு முனை காத்துக் கொண்டிருக்கிறது !

தெரியாத எண்ணிலிருந்து மிஸ்ட் கால் வந்தால் அந்த எண்ணுக்குத் திரும்ப அழைக்காமல் இருப்பது தான் உசிதம். ஒருவேளை அழைத்தவர் ஏதேனும் முக்கியமான தகவல் சொல்லவேண்டுமென்றால் மீண்டும் அழைப்பார் என காத்திருப்பது தான் நல்லது. பேசியே ஆகவேண்டும் என தோன்றினால் உங்கள் கணவரிடமோ, அப்பாவிடமோ கொடுத்து பேசச் சொல்லுங்கள்,

“ஓ… அப்படியா ? என் நம்பர்ல இருந்து மிஸ்ட் கால் வந்திருந்ததா ? இருக்காதே …” என பார்ட்டி எஸ்கேப் ஆகி விடுவார்.

வீட்டு எண்ணுக்குக் அழைப்புகள் வருவதிலும் பல கொக்கிகள் உண்டு. வீட்டில் ஆள் இருக்கிறார்களா ? வெளியே எங்கேயாவது போயிருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவும் போன் செய்வார்கள். உங்கள் கவனத்தைத் திசை திருப்பி வீட்டுக்குள் நுழைய முயலவும் போன் செய்வார்கள். உஷாராய் இருங்கள். 

ஆர்குட், ஃபேஸ் புக் போன்ற இணைய தளங்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை வைப்பதும், தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் ரொம்பத் தப்பு. அந்தப் படங்களைப் பார்த்து, எண்ணைப் பார்த்து உங்களுக்கு மிஸ்ட் கால் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் உண்டு. அந்த புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் போட்டு உங்கள் பெயருக்குக் களங்கள் விளைவிக்கவும் முயல்வார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இத்தகைய செய்திகளை விளக்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

உங்கள் மொபைல் எண்களை கடைகளில் சர்வீஸுக்குக் கொடுக்கும் போது தெரியாத இடங்களில் கொடுக்காதீர்கள்.  உங்கள் செல்போனிலுள்ள தகவல்கள் பிரதி எடுக்கப்படலாம். உங்களுடைய மொலைலில் இருந்து நீங்கள் அழித்து விட்ட தகவல்களைக் கூட மீண்டெடுக்க மென்பொருட்கள் உண்டு என்பதை மறக்காதீர்கள். அதே போல புளூடூத் எப்போதும் இயக்க நிலையில் இருப்பதும் சிக்கலானதே. 

இன்னொரு விஷயம், உங்களுக்கு மின்னஞ்சலிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ, இணைய தளங்கள் மூலமாகவோ கிடைக்கும் தேவையற்ற எண்களுக்கு போன் செய்யவே செய்யாதீர்கள். இது சிக்கலை நீங்களே போய் காசு கொடுத்து வாங்கி வருவதற்குச் சமம்.

மிஸ்ட் கால், ராங் கால் போல இன்னொரு விஷயம் ராங் எஸ்.எம்.எஸ். முதலில் “குட் நைட்” என்று ஒரு எஸ் எம் எஸ் வரும். “ யாரது ? “ என்று நீங்கள் திரும்பி எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நீங்கள் அவனுடைய லிஸ்ட்டில் சேர்ந்து விடுவீர்கள். பின் சிக்கல்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். சைலண்டாக விட்டு விட்டால் தப்பிக்கலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், தெரியாத எண்களிலிருந்து வரும் மிஸ்ட் கால், ராங் கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விடுங்கள். தேவையற்ற பல சிக்கல்கள் தவிர்க்கப் பட்டு விடும். 

நூல் : மேற்குலக ஓவியர்கள் – எனது பார்வையில்…

 ஓவியங்களைக் குறித்த அறிதலும் புரிதலும் இல்லை என்றாலும் அது மீது ஒரு அபரிமிதமான காதல் எனக்குண்டு. ஓவியங்கள் குறித்த நூல்களைத் தேடித் தேடி வாசிப்பதற்கு அதுதான் முழு முதல்க் காரணம்.

ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதில் கலக்கும் ஒவ்வோர் துளியிலும் ஓவியனின் மனசும் கரைந்திருப்பதாகத் தோன்றும் எனக்கு. “ஒரு பொருளை எப்படிப் பார்க்கிறேனோ அப்படி வரைவதில்லை, எப்படி சிந்திக்கிறேனோ அப்படியே வரைகிறேன்” எனும் பிக்காஸோவின் வார்த்தைகள் ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒலிக்கும்.

கவிதைகளோடு எனக்கு நெருங்கிய நேசம் உண்டு. கவிதைகளின் கூறுகளையும், தன்மைகளையும், அதன் உட்பொருட்களையும் ரசிக்கும் அவியாத தாகமும் உண்டு. சினிமாப் பாடல்களிலும், கானாப் பாடல்களிலும், ஏன் பஸ்ஸில் கல்லூரி இளைஞர்கள் மெட்டமைத்துப் பாடும் பாடல்களில் கூட கவித்துவம் ரசிக்கும் வெறி எனக்குண்டு. அந்த கவிதையின் ரசனை தான் என்னை ஓவியங்களின் பிரியனாக்கியதோ எனும் வியப்பும் எனக்கு உண்டு. ஒருவகையில் ஓவியம் என்பது படமாக்கப்பட்ட கவிதையே !

இன்றைக்கு ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் ரொம்பவே அருகி வருகின்றன. அதுவும் பிறநாட்டு ஓவியங்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஓவியர்களிடையே மங்கி வருகிறது. ஓவியங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது என்பது ஒரு காரணம். அப்படியே எழுதினாலும் அதன் புனிதம் கெடாமல் பதிப்பிக்க தாகமுள்ள பதிப்பகங்கள் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

தற்கால ஓவியர்களில் அந்தப் பணியை தன் கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவர்கள் வெகு சிலர். கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் இந்தப் பணியைச் செய்கிறார். ஆனால் அவருடைய நூல்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே வருகின்றன. “தாத்தா ஆனதுக்கப்புறம் ஓடியாடும் ஓவியங்களே என் வாழ்க்கையாகிப் போச்சு” என்று பேரனைச் சுட்டிக் காட்டிச் சொன்னார் சென்ற முறை அவரைச் சந்தித்த போது.

ஓவியங்கள் வரைவதுடன் நின்று விடாமல் அதன் கூறுகளையும், தன்மைகளையும் எழுத்திலும், பேச்சிலும் கொண்டு வருவதில் இன்றைக்கு முனைப்புடன் செயலாற்றி வருபவர் ஓவியர் நண்பர் புகழேந்தி அவர்கள். ஓவியங்களோடு வார்த்தைகளும் வசப்பட்டிருப்பது அவருடைய பலம். அவருடைய மேற்குலக ஓவியங்கள், வண்ணங்களும் வரலாறும் எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

ஐரோப்பிய ஓவியர்களைப் பற்றியும் அவர்களுடைய ஓவியங்களைப் பற்றியுமான நூல் இது. ஓவியங்களைப் பற்றிப் பேச ஓவியரால் தான் முடியும் எனும் கூற்று எத்தனை ஆத்மார்த்தமானது என்பதை தனது ஒவ்வொரு வாக்கியத்திலும் நிரூபிக்கிறார் ஆசிரியர்.

ஒரு ஓவியம் எப்படி உருவானது, அதை எத்தனை அடுக்குகளாக வரைந்தார்கள். முதலில் எதை வரைந்தார்கள், கடைசியாக எதை வரைந்தார்கள், ஏன் அப்படி ? என்பன போன்ற நுணுக்கமான விளக்கங்களை ஒரு ஓவியரன்றி வேறு எவராலும் சொல்லி விட முடியாது !

லிம்பர்க் சகோதரர்கள், ஜான் வான் ஐக், ரோஜர் வாண்டா வேடன், லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ரபேல், டிசியன், ரூபன்ஸ், பிரான்ஸ் ஹால்ஸ், ரெம்ப்ரெண்ட் எனும் பத்து ஓவியர்களைப் பற்றிய விரிவான பதிவுகளே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

அவர்களுடைய வாழ்க்கை, ஓவியங்கள், பின்னணி என ஒவ்வோர் செய்தியையும் நேர்த்தியுடன் சொன்னதில் நூல் வெற்றியடைகிறது. கூடவே அந்த ஓவியர்களில் ஓவியங்களை வண்ணத்தில் போட்டிருப்பது நூலின் தரத்தை அதிகரிக்கிறது.

ஊடகங்களோ, புகைப்படக் கலையோ உருவாகாத காலகட்டத்தில் ஓவியங்களின் பங்களிப்புகள் எப்படி இருந்தன. கட்சிதமான அளவுள்ள அழகிகளை வரைந்த ஓவியர்கள், வனப்பு இல்லாத பணிப்பெண்களை வரைந்த ஓவியர்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மேற்குலக ஓவியர்கள் செய்த பங்களிப்பு ? அவர்கள் மரபுகளை உடைத்துச் செய்த விஷயங்கள் என்பன போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லியிருப்பது நூலின் ஆழத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

அருவி வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் ஓவியங்களை ரசிப்பவர்களையும், ஓவியர்களை ரசிப்பவர்களையும் ஒரு சேர வசீகரிக்கும்

அருவி வெளியீடு

விலை : 150

94443-02967

சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?

நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?

எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.

திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.

இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர். ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ? திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர். 

திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும். 

“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன. வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.

குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன. 

பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.

பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது  குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர். 

மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.

சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).

தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.

ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.  

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.

கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை !  முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.

நன்றி : பெண்ணே நீ…

நண்பர்கள் வாக்களிக்க விரும்பினால்…

சேவியர்

கொல்லுங்க பிளீஸ்….

 

1966ம் ஆண்டு ! மும்பையின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்து வந்தாள் அருணா ஷான்பாக் எனும் இளம் பெண். வசீகரிக்கும் அழகிலும், நேர்மையான பணியிலும் வலம் வந்த அவளுக்கு மருத்துவமனையில் மிக நல்ல பெயர். 1973ம் ஆண்டு நவம்பர் 11ம் தியதி. நாளை முதல் திருமண விடுப்பில் செல்ல இருக்கும் உற்சாகத்தில் இருந்தாள் அவள். அன்று வேலை முடிந்து மருத்துவமனையின் ஒரு அறையில் ஆடைமாற்றிக் கொண்டிருந்த போது விதி விளையாடியது. அந்த மருத்துவமனையில் வார்ட் பாய் ஆக இருந்த சோகன்லால் வால்மீகியின் காமக் கண்களில் விழுந்தாள் அவள். 

ஆடைமாற்றிக் கொண்டிருந்தவளின் அறைக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அடக்கி அவளைப் பாலியல் வன்முறை செய்ய எத்தனித்தான். அவளுக்கோ அது மாதவிடாய் காலம். அப்போதாவது விட்டதா அந்த மிருகம் ? அவளை குப்புறக் கவிழ்த்து கழுத்தில் நாய்ச் சங்கிலியால் நெரித்து பின்புறம் வழியாக புணர்ந்து தன் வெறியை முடித்துக் கொண்டது. கழுத்தில் சுற்றிய சங்கிலி அழுத்தியதில் அருணாவின்  கழுத்து நெரிபட்டு சுவாசக் குழாய் உடைபட்டு மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லும் பாதை நாசமாகி அவளுடைய மூளை இறந்தே போய் விட்டது.

அந்த வெறி பிடித்த விலங்கின் சில நிமிட வெறி அவளைக் கோரமான கோமோ நிலைக்குத் தள்ளியது. அன்றிலிருந்து இன்று வரை நீண்ட நெடிய 36 வருடங்களாக அதே மருத்துவமனையில் கோமோ நிலையில் கிடக்கிறார் அவர் எனும் செய்தி அதிர வைக்கிறது. தினமும் ஐந்து தடவை அவளுடைய அறைக் கதவு திறக்கப்படும். விழுங்க முடியாத அவளுடைய தொண்டையில் நீர் ஆகாரம் செலுத்தப்படும். அவ்வளவு தான். 

அவளைப் பலாத்காரம் செய்து இந்த நிலைக்கு ஆளாக்கியவன் ஏழு வருட காலம் சிறை தண்டனை பெற்று வெளியே வந்தும் முப்பது வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் அவனால் பாதிக்கப்பட்ட அவள் முப்பத்து ஆறு ஆண்டு காலமாக வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் இருட்டு அறைகளுக்குள் கிடக்கிறாள்.

இனிமேல் பிழைக்கவே முடியாது எனும் நிலையில் உள்ளவர்களை நிம்மதியாய் சாக அனுமதிப்பதைக் கருணைக் கொலை என்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கருணைக் கொலை செய்வதை எந்த நாடும் சட்டமாக்கவில்லை. நெதர்லாந்து மட்டும் மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பரிந்துரை இருந்தால், கருணைக் கொலையை அனுமதிக்கிறது. கருணைக் கொலை எனும் பெயரில் தப்பு ஏதும் நடந்து விடக் கூடாதே எனும் அதீத எச்சரிக்க உணர்வு உலகெங்கும் இருப்பதையே இது தெரிவிக்கிறது.  

அருணா ஷான்பாக் நிலமையும் அது தான். அவரைக் கருணைக் கொலை செய்ய சட்டம் அனுமதிக்கவில்லை. பல முறை விண்ணப்பித்தும் நீதிமன்றம் அவற்றை வாசலிலேயே நிராகரித்து அனுப்பி விட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவளுடைய பாதுகாவலரும் எழுத்தாளருமான பிங்கி விரானி அளித்துள்ள புதிய மனு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றம் விண்ணப்பத்தை முதன் முறையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

நீதிமன்றம் இயற்கை மரணத்தையே ஆதரிக்கிறது. அருணாவைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு வழங்காமல் இருந்தால் இயற்கை மரணம் நிகழ்ந்து விடும் என்பது தான் உண்மை. 

அருணாவுக்காக வாதாடிய சேகர் நாபேட் அருணாவின் மரணத்தை அனுமதிக்க வேண்டுமென்று உருக்கமாகவும், ஆழமாகவும் வாதாடினார்.

“வாழ்வது மனித உரிமை என்று சொல்லி தயவு செய்து இதை நிராகரிக்காதீர்கள். அருணாவைப் பாருங்கள். ஒரு மிருகம் கூட இந்த நிலையில் இருக்க முடியாது. இது மனித உரிமை மீறல் என்று சொல்லவே முடியாது. அவர் இயல்பு நிலைக்கு வர வாய்ப்பே இல்லை. அப்படியே வந்தால் கூட அவரால் வாழ்க்கை நடத்தவே முடியாது. முப்பத்து ஆறு ஆண்டு கால நீண்ட நெடிய மௌனத்தை நீதிமன்றம் கலைக்க வேண்டும். அவருடைய நிலமையை ஆராய்ந்து மரணத்தை அனுமதிக்க வேண்டும்”  என அவர் உருக்கமாய் வாதாடியதைக் கேட்டு உச்ச நீதிமன்றமே கதிகலங்கிப் போய்விட்டது.

நிலமையை ஆராய்ந்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு மருத்துவமனைக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முடிவுக்கான துவக்கம் அளிப்பது இதுவே முதல் முறை. 

“அருணாவின் கருணைக் கொலை பற்றி நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்”  என்கிறார் கிங் எட்வர்ட் மருத்துவமனையின் டீன் டாக்டர் சஞ்சய் ஓக். “மருத்துவமனையிலுள்ள நர்ஸ்கள் அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் அவரைப் பராமரித்தோம். இன்னும் பராமரிப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. ஆராய்ந்து பார்த்து நல்ல முடிவை நீதிமன்றம் எடுக்கட்டும்”  என்கிறார் அவர். அவர் அப்படிச் சொன்னாலும் மருத்துவமனை அருணாவுக்கு நல்ல சிகிச்சையையும், மருத்துவ உதவிகளையும் செய்யவில்லை எனும் குற்றச்சாட்டும் பலமாகவே உலவுகிறது.

கருணைக் கொலையை சட்டம் அனுமதிக்காது தான். ஆனாலும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனதன் தன்மையில் ஆராய்ந்து சரியான முடிவுகளை எடுப்பதே சரியான வழிமுறையாய் இருக்க முடியும். சட்டம் இருக்கிறது என்பதற்காக கண்மூடித்தனமாய் கதவடைப்பதும், குருட்டுத் தனமாய் அனுமதிப்பதும் எல்லா விஷயத்திலும் ஆபத்தானவையே. இப்போது மனித உரிமைகள் கமிஷனும், ஊடகங்களும் அருணாவின் மரண உரிமைக்கு ஆதரவு அலையை எழுப்பி வருகின்றன.

கைகளெல்லாம் வளைந்து, எலும்புகளெல்லாம் வலுவிழந்து, பற்களெல்லாம் அழுகி வீழ்ந்து அகோரமாகக் கிடக்கிறாள் அருணா. அவளுக்கு வலிக்குமா ? முப்பத்து ஆறு ஆண்டுகாலமாக “என்னைக் கொன்று விடுங்கள்” என கதறிக் கொண்டிருக்கிறாளா ? வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் கிடக்கும் அவளுடைய மனதில் என்ன நினைவுகள் ஓடுகின்றன ? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மனம் துடிப்பதையே நிறுத்தி விடுகிறது.

அவளுக்கு வாழ்க்கை மறுக்கப்பட்டு விட்டது, மரணமேனும் பரிசளிக்கப்பட வேண்டும் என்பதே மனிதத்தை நேசிக்கும் அனைவரின் விருப்பமும்.

வாக்களிக்க விரும்பினால்