இந்த இடம் எங்கே இருக்கு சொல்லுங்க பாக்கலாம் !!!

 

அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?

ஊஹூம்… ஊஹூம்

 

பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….

ஒருவேளை காவிரி….  ???

ம்ஹூம்..

 

ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???

ம்ம்ம்ம்ஹூஊம்…

 

மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?

தெரியலையே !!…
.

.

.

 

 

அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.

ஹி…ஹி… ஆமா… ஆமா !!!

தற்கொலை விரும்பிகளால் நிரம்பும் சீனா & சென்னை !

 மன அழுத்தமோ, வேலைப்பளுவோ, நிராகரிப்போ நிகழ்ந்து விட்டால் எதைப் பற்றியும் யோசிக்காமல் தற்கொலை செய்து கொள்வது என்பது பலவீனமான மனதின் வெளிப்பாடு.
இது இன்றைக்கு சீனாவின் மிகப்பெரிய தேசப் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

சீனாவில் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தெரியுமா ? 2,50,000 !!! இவர்கள் வயது 15 க்கும் 34 க்கும் இடையே ! இதை  இணைய தளங்கள் ஊக்குவிக்கின்றன என்பது கூடுதல் அதிர்ச்சி !

வாழவேண்டிய வயதில், வாழ்க்கையின் முதல் பக்கத்திலேயே இவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாக விரையமாவது சீன அரசின் மிகப்பெரிய கவலையாக மாறியிருக்கிறது.

ஒவ்வொரு இரண்டு நிமிடமும் ஒரு தற்கொலையும், எட்டு தற்கொலை முயற்சிகளும் சீனாவின் மெயின்லாண்டில் பதிவாவதாக சீனாவின் மனநல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளின் காரணங்களை ஆராய்ந்தால் முதலிடத்தில் இருப்பது திருமண வாழ்வின் தோல்வி. சுமார் 30 விழுக்காடு தற்கொலைகள் திருமண வாழ்க்கையின் அமைதியின்மையினால் நிகழ்கின்றனவாம்.

இரண்டாவது இடத்தில் இருப்பது கடுமையான வேலையினால் உருவாகும் மன அழுத்தம். இது இருபது விழுக்காடு. மிச்சமுள்ள ஐம்பது விழுக்காடுகளை வறுமை, சரியான வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் அங்கீகாரமின்மை உட்பட பல்வேறு காரணங்கள் நிரப்புகின்றன.

சீனாவிலும் நகர்ப்புறங்களை விட வசதிகள் குறைவான ஊர்ப்பகுதிகளில் இந்த தற்கொலைகள் அதிகம் நிகழ்வதாக அரசு தெரிவிக்கிறது. இந்தியாவைப் போலவே சீனாவிலும் இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்ததால் கிராமங்கள் முதியோர் இல்லங்களாய் காட்சியளிக்கின்றனவாம்.

பள்ளிக்கூடத்தில் பயிலும் பல பதின் வயதினரும் தற்கொலை செய்து கொள்வது உண்மையிலேயே கலவரமூட்டுகிறது. இந்த விழுக்காடு 17 என அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. படிப்பின் பயமும், தனிமை உணர்வும் இவர்களை வாட்டுகிறதாம்.

தற்கொலை, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையின்மையின் வெளிப்பாடு. சென்னையிலும் கடந்த ஆண்டு மட்டுமே 2500 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் திகிலூட்டுகின்றன.

பொறுமையும், சகிப்புத் தன்மையும், முக்கியமாக குடும்ப உறவுகளில் பிடிப்பின்மையும் இத்தகைய காலமாற்றத்தின் காரணம் எனலாம். வாழ்க்கை நாகரீகத்தின் அடித்தளத்தில் கட்டப்படாமல், உண்மை உறவுகளின் மேல் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதையே இவை சுட்டிக் காட்டுகின்றன.