என்னது !!
நிஜமாவா ?
வாட்….!!!
ஓ..மை..காட்….
2014 டிசம்பர் இருபத்து மூன்றாம் தியதி உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் உதடுகள் அதிர்ச்சியின் உச்சத்தில் அசைந்தன. அவர்களால் நம்ப முடியவில்லை. கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். நிஜம் தான். இனிமேல் அவர் நம்முடன் இல்லை. அவர்களுக்கு நிஜத்தை ஏற்றுக்கொள்ளவே நிறைய நேரம் பிடித்தது.
இன்னும் இரண்டு தினங்களில் கிறிஸ்மஸ். கிறிஸ்து பிறப்பை வரவேற்க வீடுகளெங்கும் நட்சத்திரங்கள் தொங்கின. அந்த சூழலில் நட்சத்திரங்களோடு வாழ்ந்து நட்சத்திரமாய் ஜொலித்த ஒரு பளீர் நட்சத்திரம் உதிர்ந்து விட்டிருக்கிறது. இயேசு பிறந்தபோது வானில் வால் நட்சத்திரம் தோன்றியது வரலாறு. இவருடைய படைப்புகள் தோன்றிய போதெல்லாம் புதுப் புது திரை நட்சத்திரங்கள் தோன்றியது வியப்பின் குறியீடு.
அவசர அவசரமாக தொலைக்காட்சி ரிமோட்கள் அழுத்தப்பட்டன. மின் பத்திரிகைகள், இணைய தளங்கள் பரபரப்பாயின, சமூக வலைத்தளங்களில் இயக்குனர் சிகரம் பலருடைய புரஃபைல் பிக்சராக மாறிப் போனார். இரங்கல் செய்திகளால் இணையமே அழுது புரண்டது.
மலர்கள் உதிர்வது கவலையளிக்கும் விஷயம்
செடியே உதிர்வது கலங்க வைக்கும்விஷயம்.
தோட்டமே வீழ்வது கதிகலங்க வைக்கும் விஷயம்
வாழ்க்கை எவ்வளவு நிஜமோ அதை விட அதிக நிஜத் தன்மை வாய்ந்தது மரணம். மரணத்தின் கதவுகளைத் திறக்காமல் யாருடைய வாழ்க்கையும் முடிவடைவதில்லை. சில மரணங்கள் சலசலப்புகளை உருவாக்குகின்றன. சில மரணங்கள் அதிர்ச்சிப் பேரலைகளை எழுப்புகின்றன. சில மரணங்கள் எந்த விதமான சலனங்களையும் ஏற்படுத்தாமல் கடந்து போகின்றன.
பாலசந்தர் ஒரு தோட்டமாய் வாழ்ந்தார். அந்தத் தோட்டத்தில் தான் எத்தனை விதமான மலர்கள் உருவாகின ! பாலசந்தர் ஒரு வானமாக இருந்தார் அதில் தான் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள் மின்னின!
ஒட்டுமொத்த திரையுலகமே பதறித் தவித்தது. புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்களெல்லாம் தங்களுடைய இமேஜை மறந்து கண்ணீர் விட்டுக் கதறினார்கள். மைலாப்பூரில் இருந்த அவருடைய வீட்டை நோக்கி ரசிகர்களும், திரையுலக பிரமுகர்களும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.
திரையுலகம் ஸ்தம்பித்தது. படப்பிடிப்புகளெல்லாம் அப்படியே நிறுத்தப்பட்டன. கிளிசரின் தேவைப்படாமலேயே கண்களெல்லாம் தண்ணீரில் மிதந்தன.
“திரையுலகம் உள்ளவரை இவருடைய புகழ் மேலும், மேலும் வளரும். புதிய திருப்பங்கள் பலவற்றை கலைத்துறையில் ஏற்படுத்தியவர் இவர்” என தி.மு.க தலைவர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி கசிந்துருகினார்.
“அன்பும், அடக்கமும் கொண்ட எளிய மனிதர் இவர். கலை உலக வாழ்கையை திண்ணை நாடகங்கள் மூலம் துவக்கியவர். எண்ணற்ற தேசிய, மாநில விருதுகளை பெற்றவர். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு ஈடு செய்ய முடியாது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என துயரத்தை வெளிப்படுத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா.
“இவர் இயக்கிய மரோ சரித்ரா தெலுங்கின் சிறந்த படங்களில் ஒன்று. எங்கள் விசாகபட்டினம் அவருக்கு பிடித்த நகரம். அவரது கனவு நகரம். அந்த நகரம் புதுப்பொலிவு பெறுவதை பார்க்காமலேயே அவர் சென்று விட்டாரே” என கண்ணீர் விட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
“இவர் கலையுலகிற்கு உணர்வோடு ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறத்தக்கது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கலங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
“இவருடைய புகழ் தமிழ் சினிமாவில் நேற்று, இன்று, நாளை வரலாறாக நிற்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எங்கள் குடும்பத்தோடு 40 ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர்” என நெகிழ்ந்தார் தமாகா தலைவர் வாசன்.
“இவருடைய மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு. திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் இவர். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர். திரைதுறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்” என நினைவுகளில் கலங்கினார் ஸ்டாலின்.
”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளி மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.
இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என புலம்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ
இப்படி எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் அத்தனை தலைவர்கள் அந்த மரணத்தினால் கதிகலங்கிப் போனார்கள். காரணம் அவர்கள் எல்லோருக்கும் அவரிடம் இருந்த மரியாதை. எந்த விதமான அரசியல் சிக்கல்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இருந்த அவருடைய தூய்மையான கலைப்பயணம்.
இயக்குனர் சிகரம் என்று சொன்னால் போதும் தமிழகம் நன்கறியும். அவருடைய பெயரைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவுக்கு தனது படைப்புகளைப் பேச வைத்து அமைதி காத்தவர் பாலசந்தர்.
பாலசந்தரின் மகன் பால கைலாசம் 54வது வயதில் நிமோனியா காய்ச்சலில் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார். சின்னத்திரை தயாரிப்புகளில் பலரை அறிமுகம் செய்தும், பல வெற்றிகளைக் கொடுத்தும் பிரபலமாக இருந்தவர் பால கைலாசம். அவருடைய மறைவு பாலசந்தரை வெகுவாகப் பாதித்தது. மகன் இறந்த அதே ஆண்டு, சில மாதங்களிலேயே அவரும் பிரிந்து சென்றது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரட்டைத் துயரமாய் மாறிப் போனது..
“இயக்குனரின் மறைவு திரையுலகிற்கு பெரிய இழப்பு, அவர் எனக்கு குரு மட்டுமல்ல அப்பா மாதிரி. அப்படித்தான் என்னை கடைசிவரை பார்த்தார். ஒரு நடிகனாக எப்போதும் என்னை பார்த்ததில்லை. என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்தார். அவரை இழந்தது என்னை நானே இழந்த மாதிரி உணர்கிறேன். இன்னொரு கே.பி.சாரை திரையுலகில் பார்க்கவே முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என சூப்பர் ஸ்டார் கண்ணீர் விட்டுப் பேசியதில் துளியளவும் கலப்படம் இல்லை. கேபி எனும் பெயரைக் கேட்டாலே கையைக் கட்டிக்கொண்டு எழும்பி நிற்கும் பணிவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் எப்போதும் இருந்தது.
“ஐயா.. நன்றி. நீங்கள் கொடை வள்ளல் ஐயா. உங்களுக்கு நன்றி சொல்லி தீருமா ?” என அழுதார் உலகநாயகன் கமலஹாசன். உலகமே கொண்டாடும் நடிகனாக இருந்தாலும் பாலசந்தரின் முன்னால் ஒரு குழந்தையாய் கலந்தும், கரைந்தும் விடும் தன்மை கமலிடம் இருந்தது.
இப்படி ஒட்டு மொத்த திரையுலகையும் கலங்கடித்த கே.பாலசந்தர் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது ?
(தோழமை வெளியீடு )
You must be logged in to post a comment.