பைபிள் மாந்தர்கள் 79 (தினத்தந்தி) யூதித்து

சர்வாதிகாரி நெபுகத்நேசரின் படைத்தளபதி ஒலோபெரின். இலட்சக்கணக்கான வீரர்களையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் தேர்கள் போன்றவற்றையும் அவர்களுடைய படை கொண்டிருந்தது.  எனவே செல்லுமிடமெல்லாம் வெற்றி அவனுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.

அடுத்ததாக யூதேயாவின் மீது ஒலோபெரின் தனது பார்வையைச் செலுத்தினான். அதைக் கேள்விப்பட்ட யூதேயாவிலுள்ள இஸ்ரயேலர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து கடவுளை நோக்கி கதறி மன்றாடினார்கள்.

யூதேயாவுக்கு உள்ளே நுழையும் மலைப்பாதைகள் எல்லாம் குறுகலானவை. அந்த மலைப்பாதைகளை எல்லாம் இஸ்ரயேலர்கள் வீரர்களைக் கொண்டு காவல் புரிந்தனர். எதிரிகள் வந்தால் மறைந்திருந்து தாக்க வசதியாக வியூகம் வகுத்தனர்.

த‌ன்னை எதிர்த்து நிற்க‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் திட்ட‌மிடுகிறார்க‌ள் என்ப‌தைக் கேள்விப்ப‌ட்ட‌ ஒலோப‌ரின் எக‌த்தாள‌மாய்ச் சிரித்தான். அப்போது அக்கியோர் என்ப‌வ‌ர் அவ‌ரிட‌ம், இஸ்ர‌யேல‌ர்க‌ள் க‌ட‌வுளின் ம‌க்க‌ள். அவ‌ர்க‌ளை அழிப்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்றார். ஒலோபெரின் கோப‌ம‌டைந்தார். அக்கியோரை இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் விர‌ட்டி விட்டார்.

அக்கியோர் த‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வாய்ப் பேசிய‌தால் அவ‌ரை இஸ்ர‌யேல‌ர்க‌ள் மிக‌வும் அன்பு செய்தார்க‌ள். ஒலோபெரின் ப‌டைக‌ளைத் திர‌ட்டினான். நாட்டில் நுழைந்து எல்லோரையும் வெட்டி வீழ்த்த‌வேண்டும் எனும் க‌ற்கால‌ சிந்த‌னையோடு க‌ள‌மிற‌ங்கினான்.

ஆனால் அவ‌னுடைய‌ ப‌டைத்த‌லைவ‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் வ‌ந்து, “இது ச‌ரிவ‌ராது. நாம் ஒரு புதிய‌ திட்ட‌ம் போடுவோம். இஸ்ர‌யேல‌ரின் நாட்டுக்குள் செல்லும் எல்லா நீர்நிலைக‌ளையும் கைப்ப‌ற்றுவோம். ந‌க‌ரில் த‌ண்ணீர் இல்லாவிட்டால் அவ‌ர்க‌ள் நம‌க்குப் ப‌ணிந்து தானே ஆக‌வேண்டும் ?

ஒலோபெரினுக்கு அந்த‌த் திட்ட‌ம் பிடித்துப் போன‌து. அப்ப‌டியே செய்தான். இஸ்ர‌யேல‌ர்க‌ள் இப்ப‌டி ஒரு விஷ‌ய‌த்தை யோசிக்க‌வில்லை. என‌வே அதிர்ச்சிய‌டைந்தார்க‌ள். ச‌ர‌ண‌டைவ‌தைத் த‌விர‌ வேறு வ‌ழியில்லை. க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம். ஐந்து நாட்க‌ள் பார்ப்போம். நில‌மை ச‌ரியாக‌வில்லையேல் ச‌ர‌ண‌டைவோம். என‌ முடிவெடுத்த‌ன‌ர்.

அப்போது யூதித்து த‌லைவ‌ர்க‌ள் முன்னால் வ‌ந்து நின்றாள். அறிவும், ஞான‌மும், அழ‌கும் க‌ல‌ந்த கைம்பெண் அவ‌ள். “க‌ட‌வுளுக்கே நாள் குறித்து பாவ‌ம் செய்யாதீர்க‌ள். நாம் தொட‌ர்ந்து க‌ட‌வுளிட‌ம் வேண்டுவோம்” என்றாள்.

அன்று இர‌வு யூதித்து அழ‌கிய‌ ஆடைக‌ளை உடுத்தி, ந‌றும‌ண‌ம் பூசி த‌ன‌து ப‌ணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிக‌ளின் கூடார‌ம் நோக்கிப் போனாள். இஸ்ர‌யேல‌ர்க‌ள் குழ‌ம்பினார்க‌ள்.

த‌ங்க‌ள் கூடார‌த்தை நோக்கி இர‌ண்டு பெண்க‌ள் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ எதிரிக‌ள் அவ‌ர்க‌ளை வ‌ழிம‌றித்த‌ன‌ர்.

“நீங்க‌ள் யார் ?”

“நாங்க‌ள் இஸ்ர‌யேல‌ர்க‌ள், அவ‌ர்க‌ளிட‌மிருந்து த‌ப்பி ஓடுகிறோம்”

“த‌ப்பி ஓடுகிறீர்க‌ளா ? உள‌வு பார்க்க‌ வ‌ந்திருக்கிறீர்க‌ளா ?”

“எந்த‌ நாட்டில் பெண்க‌ள் உள‌வு பார்க்கிறார்க‌ள் ? எங்க‌ளை உங்க‌ள் ப‌டைத்த‌ள‌ப‌தியிட‌ம் கூட்டிச் செல்லுங்க‌ள். அவ‌ரிட‌ம் பேசுகிறோம்” யூதித்து சொன்னாள்.

அவர்களை ஒலோபரினிடம் அழைத்துச் சென்றார்கள். ஒலோபெரின் அவளுடைய‌ அழகில் மயங்கினான்.

“ம்ம்… சொல்”

“இஸரயேல் மக்கள் பாவம் செய்கிறார்கள். எனவே கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள். அழிவது உறுதி” யூதித்து சொல்ல ஒலோபெரின் மகிழ்ந்தான்.

“ஓ.. அப்ப‌டியானால் போரைத் துவ‌ங்க‌லாமா ?”

“வேண்டாம். நான் தின‌மும் அதிகாலையில் க‌ட‌வுளிட‌ம் வேண்டும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள். க‌ட‌வுளிட‌ம் கேட்டு ச‌ரியான‌ நேர‌த்தைச் சொல்கிறேன்”.

யூதித்தின் அழ‌கில் ம‌ய‌ங்கிய‌ ஓலோபெரின் அவ‌ளை எப்ப‌டியாவ‌து அடைய‌வேண்டும் என‌ க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக்கொண்டான். அத‌ற்காக‌ ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதில் யூதித்தையும் அழைத்தான்.

ஓலோபெரினுக்கு மோக‌த்தின் சிணுங்க‌ல்க‌ளையும், ம‌துவையும் ஊற்றிக் கொண்டே இருந்தாள் யூதித்து. விருந்து முடிந்து எல்லோரும் போய்விட்ட‌ன‌ர். ஓலோபெரினுக்கு ம‌து வார்ப்ப‌தை யூதித்து நிறுத்த‌வில்லை. ஓலோபெரின் த‌ன்னிலை ம‌றந்தான். யூதித்தை இழுத்துக்கொண்டு ம‌ஞ்ச‌த்தில் ச‌ரிந்தான்.

இந்த‌ ச‌ம‌ய‌த்துக்காக‌க் காத்திருந்த‌ யூதித்து, தூணில் தொங்கிய அவ‌னுடைய‌ வாளை எடுத்தாள். இர‌ண்டு கைக‌ளாலும் அதைத் தூக்கி ஓலோபெரினின் க‌ழுத்தில் வேக‌மாக‌ இற‌க்கினாள். ஓலோபெரின் எனும் வீர‌னின் த‌லை உருண்டோடிய‌து. அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அதிகாலையிலேயே இட‌த்தைக் காலி செய்த‌ன‌ர்.

யூதித்து திரும்பி வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ இஸ்ர‌யேல‌ர்க‌ள் ம‌கிழ்ந்த‌ன‌ர். ஓடிச்சென்று அவ‌ளிட‌ம் விஷ‌ய‌த்தைக் கேட்ட‌ன‌ர்.

“நாம் வெற்றி பெறுவ‌து உறுதி.”

“ஏன் ? ஒலோபெரின் ஊரை விட்டு ஓடிவிட்டானா ?”

“அவ‌ன் த‌லையை விட்டு விட்டே ஓடிவிட்டான்” சொன்ன‌ யூதித்து பைக்குள் இருந்த‌ ஒலோபெரினின் த‌லையை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் விய‌ந்து போனார்க‌ள்.

“த‌லைவ‌ன் இல்லாத‌ ப‌டை வெல்லாது. என‌வே நாம் அவ‌ர்க‌ளுக்கு எதிராய் போரிட்டுச் செல்வோம். அவ‌ர்க‌ளுடைய‌ கூடார‌த்துக்கு தொலைவில் நிற்போம். ந‌ம்மைக் காணும் அவ‌ர்க‌ள் போருக்கு ஆய‌த்த‌மாவார்க‌ள். ஓலோபெரினின் உத்த‌ர‌வு கேட்டு அவ‌ன் கூடார‌த்துக்குச் செல்ப‌வ‌ர்க‌ள் அவ‌ன் இற‌ந்து கிட‌ப்ப‌தைக் க‌ண்டு சித‌றிப் போவார்க‌ள். சித‌றும் அவ‌ர்க‌ளை நாம் வெல்வோம்”

யூதித்தின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரயேலர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.

இஸ்ரயேலர்களை காப்பாற்றிய கடவுளை யூதித்தும், மக்களும் தொழுதனர். புகழ்ப் பாக்களைப் பாடினர்.

பைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து

இஸ்ரயேலரான தோபித்து அசீரியர்களின் காலத்தில் நாடுகடத்தப்பட்டு நினிவேயில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன்னுடைய செல்வத்தை 400 வெள்ளிக்காசாய் மாற்றி தூர தேசமான மேதியாவிலுள்ள கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.

தோபித்துவுக்கு ஒரு மகன். பெயர் தோபியா. அந்தக் காலகட்டத்தில் மன்னன் இஸ்ரயேலர்களைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே எறிவதை பெருமையாய் செய்து கொண்டிருந்தான். அந்த இஸ்ரயேலரின் பிணங்களை எடுத்து நல்லடக்கம் செய்வது தோபித்தின் வழக்கமாய் இருந்தது.

ஒருநாள் தான் கொன்ற இஸ்ரயேலரின் பிணங்களைப் பார்க்க வந்தான் மன்னன். ஆனால் எந்த பிணத்தையும் காணாமல் கடும் கோபமடைந்தான். மக்கள் தோபித்து செய்யும் காரியங்களைப் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

கோபமடைந்த மன்னன் தோபித்தின் மகனையும், மனைவியையும் சிறைப்பிடிக்க, தோபித்து தப்பி ஓடினார். அந்த மன்னனின் ஆட்சி முடிந்தபின் தோபித்தின் குடும்பம் விடுதலையானது.

அதே நேரத்தில் மேதியா நாட்டில் சாரா என்றொரு எழில் மங்கை இருந்தாள். பேரழகியான அவளை சாத்தானான அசுமதேயு பிடித்திருந்தான். அவளை மணக்கும் ஆண்களை முதலிரவிலேயே அவன் கொன்று விடுவான். இப்படி ஏழு பேர் அவளை மணந்து ஏழுபேரும் முதலிரவிலேயே இறந்து விட்டனர். இவர்கள் தோபித்துவின் உறவினர்கள். சாராவும் தந்தையும் கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினர்.

தோபித்துவின் கஷ்டகாலம் அதிகரித்தது. ஒரு பறவை அவரது கண்ணில் எச்சமிட கண்ணின் பார்வை முழுமையாய் போய்விட்டது. வீட்டில் வறுமை வந்தது. திடீரென அவருக்கு மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நானூறு கிலோ வெள்ளி நினைவுக்கு வந்தது. தோபியாவை அனுப்பி அதை கொண்டு வர முடிவு செய்தார்.

கடவுள் தோபியாவின் மன்றாட்டையும், சாராவின் மன்றாட்டையும் கேட்டார். இருவரின் சிக்கலையும் தீர்க்க தனது தூதரான இரபேலை அனுப்பினார்.

“தோபியா, நான் பணத்தை கபேலிடம் கொடுத்தபோது ஒரு ஆவணம் தயாரித்து அதை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவரும், இன்னொரு பாதியை நானும் எடுத்துக் கொண்டோம். அது தான் அடையாளம்” என்று சொல்லி ஒரு ஆவணத்தின் பாகத்தைக் கொடுத்தார் தோபித்து.

தெரியாத ஊருக்கு மிகப்பெரிய வேலைக்காகப் புறப்பட்ட தோபியா, வழித்துணைக்காக அவர் ஒருவரை அழைத்துக் கொண்டார். அவர் இரபேல் !

தோபியாவும், இரபேலும் பயணம் செய்தனர். தீக்ரிசு எனும் ஆற்றங்கரையில் வந்தபோது காலைக் கழுவுவதற்காக தோபியா ஆற்றில் கால் வைத்தார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவருடைய காலைக் கவ்வியது.

“அந்த‌ மீனை பிடி. அத‌ன் இத‌ய‌ம், ஈர‌ல், பித்த‌ப்பை மூன்றையும் த‌னியே பாதுகாப்பாய் வை. ப‌ய‌ன்ப‌டும்” என்றார் இர‌பேல். தோபியா அப்ப‌டியே செய்தார்.

இர‌பேல் தோபியாவை இர‌குவேலின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அவ‌ருடைய‌ ம‌க‌ள் தான் சாரா.

“நாம் இன்று இங்கே த‌ங்குவோம். இது இர‌குவேலின் வீடு. அவ‌ருக்கு ஒரு அழ‌கிய‌ ம‌க‌ள் உண்டு. அவ‌ள் பெய‌ர் சாரா. உன‌து முறைப்பெண்.” இர‌பேல் சொன்னார்.

“ஓ.. சாராவை என‌க்குத் தெரியும். அவ‌ளை ஏழுபேர் ம‌ண‌த்து ஏழுபேரும் இற‌ந்து போனார்க‌ளே” தோபியா ப‌த‌ட்ட‌மாய்ச் சொன்னார்.

“க‌வ‌லைப்ப‌டாதே.. உன‌க்கு ஒன்றும் ஆகாது” இர‌பேல் சொன்னார்.

இர‌குவேல் அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்றார். தோபியாவைப் பார்த்த‌தும் அவ‌ர் முக‌த்தில் ஒரு குழ‌ப்ப‌ம்.

“உன்னை மாதிரி ஒரு சொந்த‌க்கார‌ர் என‌க்கு உண்டு… அவ‌ரோட‌ பேர் தோபித்து”

“ஓ… நான் அவ‌ரோட‌ பைய‌ன் தான் நான்” தோபியா சிரித்தார். இர‌குவேல் வியந்து போய் அவ‌ர்க‌ளை ஆன‌ந்த‌மாய் வீட்டுக்குள் அழைத்தார்.

சாராவைப் பார்த்த‌தும் தோபியாவுக்கு ரொம்ப‌ பிடித்துப் போய்விட்ட‌து. அன்று இர‌வே அவ‌ளை அவ‌ர் ம‌ண‌முடித்தார்.

“இரவு நீ சாராவை நெருங்கும்போது அந்த மீனின் ஈரலின் ஒரு பகுதியையும், இதயத்தின் ஒரு பகுதியையும் தீயில் போடு. பேய் ஓடிவிடும்” இரபேல் சொன்னார்.

தோபியா அப்படியே செய்ய, பேய் ஓடியது.

மறுநாள் தோபியாவின் மரணச் செய்தியை எதிர்பார்த்து, அடக்கத்துக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரகுவேல் தோபியா உயிருடன் இருப்பதைப் பார்த்து பரவசமடைந்தார். அவருடைய மனபாரம் முழுமையாய் நீங்கியது.பின்னர் தோபியா கபேலைச் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு, மனைவியுடனும், இரபேலுடனும் தன் வீடு திரும்பினார்.

மகன் திரும்பியதை அறிந்து மகிழ்ந்த தோபித்து, நடந்த கதைகளைக் கேட்டு வியந்தார்.

“உன் கையிலிருக்கும் மீனின் பித்தப்பையை அவருடைய கண்ணில் தேய்” இரபேல் சொல்ல அப்படியே செய்தார் தோபியா. என்ன ஆச்சரியம், தோபித்து பார்வை பெற்றார்.

தோபித்து இர‌பேலைப் பார்த்து” உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என ஆனந்தமாய்ச் சொன்னார்.

“கொடுப்பதே என் வழக்கம். நான் க‌ட‌வுளின் தூத‌ன்”. இரபேல் புன்னகையுடன் சொல்லி விட்டு மறைந்தார்.

க‌ட‌வுளின் விய‌த்த‌கு செய‌லை அனைவ‌ரும் போற்றின‌ர்.

பைபிள் மாந்தர்கள் 77(தினத்தந்தி) மலாக்கி/ம‌ல்கியா

77 

இறைவாக்கினர் மலாக்கி கிமு 430களில் இறைவாக்கு உரைத்தவர். மலாக்கி என்றால் “எனது தூதர்” என்பது பொருள். எருசலேம் தேவாலயம்  மீண்டும் கட்டப்பட்டு இப்போது ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆலயம் கட்டும்போது இருந்த பற்று மக்களிடையே இப்போது இல்லை.குருக்களும், மக்களும் தீமை செய்பவர்களாக மாற்றிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில் மலாக்கி இறைவாக்குரைத்தார்.

“மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான். பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே? நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன்?” என்று க‌ட‌வுள் குருக்க‌ளைப் பார்த்துக் கேட்டார்.

ஆல‌ய‌த்தின் மீதிருந்த‌ அச்ச‌மும், ப‌க்தியும், ப‌ற்றும் விலகியதால் கோயிலில் குருடான‌வைக‌ளைப் ப‌டைப்ப‌தும், நொண்டியானதையும், தீட்டான‌வைக‌ளைப் ப‌டைப்ப‌தும் ச‌க‌ஜ‌மாகி இருந்த‌து.

உங்க‌ளுடைய‌ மாநில‌த்தின் த‌லைவ‌ர் வ‌ந்தால் அவ‌ருக்கு ப‌ரிச‌ளிக்கும் போது இப்ப‌டி கூனும், நொண்டியும், குருடுமான‌வ‌ற்றைக் கொடுப்பீர்க‌ளா ?

இப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌லிக‌ளை நீங்க‌ள் இடுவ‌தை விட‌ ஆல‌ய‌த்தின் க‌த‌வை இழுத்து மூடுங்க‌ள். உங்க‌ள் காணிக்கைக‌ள் எதுவும் நான் ஏற்றுக் கொள்ள‌ மாட்டேன். என்ற‌ க‌ட‌வுளின் கோப‌த்தை ம‌லாக்கி குருக்க‌ளிட‌ம் எடுத்துரைத்தார்.

குருக்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ ப‌ணிக‌ளை உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும். அவ‌ர்க‌ள் ஓர‌வ‌ஞ்ச‌னைய‌ற்ற‌ போத‌னையை ம‌க்க‌ளுக்கு உரைக்க‌ வேண்டும். தீமைய‌ற்ற‌ ம‌ன‌மும், நேர்மையும் அவ‌ர்க‌ளிட‌ம் இருக்க‌ வேண்டும். நெறிகேட்டில் இருக்கும் ம‌னித‌ர்க‌ளை ந‌ல்வ‌ழிப்ப‌டுத்தும் சிந்த‌னை அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌ வேண்டும். என‌ குருக்க‌ளின் குணாதிச‌ய‌ங்க‌ளைக் க‌ட‌வுள் நினைவூட்டுகிறார்.

“ம‌க்க‌ளே, நாம் எல்லோரும் ஒரே க‌ட‌வுளின் பிள்ளைக‌ள். ந‌ம் அனைவ‌ருக்கும் த‌ந்தை இறைவ‌ன். அப்ப‌டியிருக்கையில் ஏன் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ந‌ம்பிக்கைத் துரோக‌ம் செய்கிறோம் ?”  என‌ ம‌க்க‌ளைப் பார்த்து கேட்டார் ம‌லாக்கி.

குடும்ப‌ வாழ்க்கையின் ம‌க‌த்துவ‌த்தையும், குடும்ப‌ங்க‌ள் இணைந்தே வாழ‌வேண்டிய‌வை எனும் இறைவனின் அடிப்ப‌டை திட்ட‌த்தையும் ம‌லாக்கி தெளிவாக‌ எடுத்துரைத்தார்.

“ம‌ண‌முறிவை நான் வெறுக்கிறேன். இள‌மையில் நீ செய்த‌ திரும‌ண‌த்துக்கு நான் சாட்சியாய் இருந்தேன். அப்ப‌டியிருக்க‌ உன் துணைவிக்கு ஏன் ந‌ம்பிக்கைத் துரோக‌ம் செய்கிறாய் ? உங்க‌ளை ஒன்றாக‌ இணைத்த‌ என‌து திட்ட‌த்தை விட்டு ஏன் வில‌குகிறீர்க‌ள் ? ம‌ண‌முறிவு செய்கிற‌வ‌ன் எவ‌னும் வ‌ன்முறையை மேலாடை கொண்டு ம‌றைக்கிறான். எச்சரிக்கையாய் இருங்கள். மண முறிவு செய்யாதீர்கள்” என்று க‌ட‌வுள் ம‌லாக்கி மூல‌ம் பேசினார்.

இறைம‌க‌ன் இயேசுவைக் குறித்தும், அவ‌ருக்கான‌ ஆய‌த்த‌த்தைக் குறித்தும் கூட‌ இவ‌ர் இறைவாக்கு உரைத்தார்.

“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்” என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து பேசிய‌து ம‌லாக்கி இறைவாக்கின‌ர் தான்.

க‌ட‌வுளின் வ‌ருகை நெருங்கி வ‌ருகிற‌து என்ப‌து இவ‌ருடைய‌ இறைவாக்கின் இன்னொரு அம்ச‌மாக‌ இருந்த‌து.

“இதோ க‌ட‌வுளின் நாள் வ‌ருகிற‌து. அவ‌ர் தோன்றும்போது நிற்க‌ வ‌ல்ல‌வ‌ர் யார் ? புட‌மிடுப‌வ‌ரின் நெருப்பென‌ அவ‌ர் இருப்பார். சூனிய‌க்கார‌ர், விப‌ச்சார‌ர், பொய்ய‌ர், தொழிலாள‌ர்க‌ளை வ‌ஞ்சிப்போர், கைம்பெண் அனாதை போன்றோரை கொடுமைப்ப‌டுத்துவோர், க‌ட‌வுளுக்கு அஞ்சாதோர், ஆகிய அனைவ‌ர் மேலும் இதோ த‌ண்ட‌னைத் தீர்ப்பு வ‌ருகிற‌து”.

“சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர். வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது. முற்றிலும் சுட்டெரித்து விடும்”

“என்னிட‌ம் திரும்பி வாருங்க‌ள். நான் உங்க‌ளோடு இருந்தேன். நீங்க‌ள் என்னோடு இருந்தீர்க‌ள். இப்போது வில‌கி விட்டீர்க‌ள். மீண்டும் என்னிடம் வாருங்க‌ள். உங்க‌ளை ம‌ட்டும‌ல்ல‌, உங்க‌ள் நில‌ங்க‌ளை, விளைச்ச‌லை எல்லாவ‌ற்றையும் ஆசீர்வ‌திப்பேன். என‌க்கு அஞ்சி ந‌ட‌ப்போரின் பெய‌ர் வாழ்வின் நூலில் இருக்கும். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன் ” என‌ க‌ட‌வுளின் வார்த்தையை எடுத்துரைத்தார் ம‌லாக்கி.

ம‌லாக்கி நூல் மூன்று முக்கிய‌ பாட‌ங்க‌ளை ந‌ம‌க்கு க‌ற்றுத் த‌ருகிற‌து.

  1. புதிய ஏற்பாட்டின் காலத்தில் க‌டவுளின் ஆல‌ய‌ம் என்ப‌து ந‌ம‌து உட‌லும், கிறிஸ்துவைத் த‌லையாக‌க் கொண்ட‌ இறைம‌க்க‌ளின் கூட்ட‌மும் தான். இயேசு எனும் திராட்சைக் கொடியில் நாம் இணைந்தே இருப்ப‌தும், அவ‌ரில் க‌னிகொடுப்ப‌தும் இன்றைய‌ வாழ்வின் தேவைக‌ள்.
  1. க‌ட‌வுள் .. க‌ண‌வ‌ன்…ம‌னைவி எனும் மூன்று புள்ளிக‌ளால் உருவான‌ ஆன்மீக‌ ஆல‌ய‌ங்க‌ளாக‌ குடும்ப‌ங்க‌ளும் அமைய‌வேண்டும். அதில் பிரிவுக‌ள் எழாம‌ல் குடும்ப‌த்தைக் க‌ட்டியெழுப்ப‌வேண்டும்.
  1. கட‌வுளை விட்டு பாவ‌ம் ந‌ம்மை வில‌க்கி வைத்தாலும், அதிலேயே மூழ்கி விடாம‌ல் இறைவ‌ன் மீது கொள்ளும் அன்பினாலும், அவ‌ர‌து வ‌ருகையின் மீது கொண்ட‌ ந‌ம்பிக்கையினால் நாம் மீண்டெழுந்து அவ‌ரிட‌ம் செல்ல‌ வேண்டும்.

இந்த‌ பாட‌ங்க‌ளை இறைவாக்கினர் மலாக்கியிடமிருந்து க‌ற்றுக் கொள்வோம்.

பைபிள் மாந்தர்கள் 76 (தினத்தந்தி) செக்கரியா

செக்க‌ரியா எனும் பெய‌ருக்கு “க‌ட‌வுள் நினைவுகூர்ந்தார்” என்ப‌து பொருள். பாபிலோனிய‌ர்க‌ளின் அடிமைத்த‌ளையின் கால‌த்தில் வ‌ள‌ர்ந்த‌வ‌ர் செக்க‌ரியா. கி.மு 538ல் யூத‌ ம‌க்க‌ளுக்கு சைர‌ஸ் ம‌ன்ன‌ன் விடுத‌லைய‌ளித்தான், அப்போது பாபிலோனை விட்டு வெளியேறிய‌ முத‌ல் கூட்டத்தினரில் செக்க‌ரியா இறைவாக்கின‌ரும் இருந்தார்.

க‌ட‌வுளின் ஆல‌ய‌ம் க‌ட்டும் ப‌ணியை ஊக்குவித்தார். ஆனால் அந்த‌ ப‌ணி ப‌த்து ஆண்டுக‌ள் த‌டைப‌ட்டுக் கிட‌ந்த‌து. கோவில் குறித்த‌ அக்க‌றையின்மை மக்களிடையே நிர‌ம்பியிருந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் இவ‌ருக்கு க‌ட‌வுளின் எட்டு காட்சிக‌ள் அருள‌ப்ப‌ட்ட‌ன.

முதல் காட்சியில், “சிவ‌ப்புக் குதிரையில் ஒருவ‌ர் வ‌ருவ‌தைக் கண்டார் செக்கரியா. சிவ‌ப்பும் ம‌ங்கிய‌ நிற‌மும் உடைய‌ குதிரைகள் பின்னால் நின்ற‌ன‌.”

குதிரைக‌ள் தேவ‌தூத‌ரிட‌ம், “உல‌க‌மெங்கும் அமைதி நிலவுகிறது ‌” என்ற‌ன‌.

தூத‌ன் , “க‌ட‌வுளே. இஸ்ரேல் யூதா மீது எழுபது ஆண்டுகள் காட்டிய கோபம் போதும், எப்போது இவைக‌ளை ஆறுத‌ல் ப‌டுத்துவீர்” என்று கேட்டார்.

“எருச‌லேமுக்குத் திரும்பி வ‌ருவேன். ஆறுத‌ல் ப‌டுத்துவேன்.” பதிலளித்தார் க‌ட‌வுள்.

க‌ட‌வுளின் ஆல‌ய‌ம் க‌ட்டி முடிக்க‌ப்ப‌டும், யூதா ஆசீர்வ‌திக்க‌ப்ப‌டும் எனும் உத்த‌ர‌வாதங்கள் இந்த‌க் காட்சியின் மூல‌ம் விள‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இர‌ண்டாவ‌து காட்சியில் செக்க‌ரியா நான்கு கொம்புக‌ளைக் க‌ண்டார்.

“இவை இஸ்ர‌யேல், யூதா ம‌க்க‌ளை அன்னிய‌ நாடுக‌ளுக்குத் துர‌த்திய‌ கொம்புக‌ள்” என்றார் தூத‌ன்.

அப்போது அங்கே நான்கு தொழிலாள‌ர்க‌ள் வ‌ந்தார்க‌ள். “இவ‌ர்க‌ள் யார் ?” என்றார் செக்க‌ரியா. “இவ‌ர்க‌ள் இந்த‌ கொம்புக‌ளை வெளியேற்ற‌ வ‌ந்திருக்கிறார்க‌ள்” என்றார் தூத‌ர்.

எதிரிகளைக் கடவுள் த‌ன‌து எல்லையிலிருந்து துர‌த்திவிடுவார் என்று அந்த‌ காட்சி விள‌க்கிய‌து.

மூன்றாவ‌து காட்சியில் ஒரு ம‌னித‌ர் அள‌வு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றார்.

“எருசலேமின் அள‌ந்து நீள‌ அக‌ல‌ம் எல்லாம் பார்க்க‌ப் போகிறேன்” என்றார் அந்த ம‌னித‌ர்.

“எருச‌லேம் அள‌க்க‌ முடியாத‌ வ‌கையில் பெரிதாக‌ உள்ளது. அது சுவர்களில்லாத நகரம். கர்த்தர் நெருப்புச் சுவராக நின்று அதைக் காப்பார்” என்றார் தூத‌ன்

எருச‌லேம் என்ப‌து நாடுக‌ளைக் க‌ட‌ந்து இறைம‌க்க‌ள் வாழும் கூட்ட‌மாகும் எனும் புதிய‌ ஏற்பாட்டு உண்மையின் தீர்க்க‌த்த‌ரிச‌ன‌மாய் அது இருக்கிற‌து.

நான்காவ‌து காட்சியில் இஸ்ரவேலின் பழைய தலைவரான யோசுவா அழுக்கு ஆடையுடன் நிற்பதைப் பார்த்தார் செக்க‌ரியா. அருகில் சாத்தான்.

“சாத்தானே க‌ர்த்த‌ன் உன்னை தொட‌ர்ந்து குற்ற‌ம் சாட்டுவார். எருச‌லேமையோ ஆசீர்வ‌திப்பார்” யோசுவா சொன்னார்.

“யோசுவாவின் ஆடைக‌ளை மாற்றுங்க‌ள்.” என்றார் தூதன். அப்ப‌டியே செய்த‌ன‌ர்.

“உன்னுடைய‌ குற்ற‌ங்க‌ள் நீங்கிவிட்ட‌ன‌, உன‌க்கு புதிய‌ ஆடை த‌ந்திருக்கிறேன்” என்றார் தூத‌ன்.

“நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்” என்ற‌ க‌ட‌வுளின் வார்த்தையையும் யோசுவாவிட‌ம் சொன்னார் தூத‌ன்.

சாத்தான் இறை ப‌ணிக‌ளை எதிர்ப்ப‌தையும், யோசுவாவின் குற்ற‌ங்க‌ள் நீக்க‌ப்ப‌ட்ட‌தையும் இந்த‌க் காட்சி விள‌க்கிய‌து.

ஐந்தாவ‌து காட்சியில் பொன்னாலான‌ ஒரு விள‌க்குத் த‌ண்டைப் பார்த்தார் செக்க‌ரியா. அத‌ன் மேல் ஏழு விள‌க்குக‌ள் இருந்த‌ன‌. உச்சியிலிருந்த அகலில் இருந்து தனித் தனி குழாய்களில் எண்ணை விளக்குகளுக்குப் போய்க்கொண்டிருந்தன. அகலின் இருபுறமும் இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் அகல் விளக்குகளுக்கு வேண்டிய எண்ணெயைக் கொடுக்கின்றன” இதுவே அவ‌ர் க‌ண்ட‌ காட்சி.

“உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல. எனது ஆவியாலே ஆகும். அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்.” என்றார் க‌ட‌வுள்.

ஆல‌ய‌ம் க‌ட்டும் ப‌ணிக்கு எதிராக‌ நின்ற‌ ம‌லைபோன்ற‌ த‌டைக‌ள் த‌க‌ர்க்க‌ப்ப‌டும் என்றும், அவ‌ருடைய‌ ஆற்ற‌லினால் எல்லாம் நிறைவேறும் என்றும் அந்த‌ காட்சி விள‌க்கிய‌து.

ஆறாவ‌து காட்சியில் இருபது முழம் நீளம், பத்து முழம் அகலமான ப‌ற‌க்கும் ஏட்டுச் சுருளைக் க‌ண்டார். அது ம‌ண்ணுல‌கிலுள்ள‌ தீய‌வ‌ர் மீதான‌ சாப‌ம் என்றார் க‌ட‌வுள்.

ஏழாவ‌து காட்சியில் ஒரு ம‌ர‌க்காலும், அத‌னுள் ஒரு பெண்ணும் இருக்கும் காட்சி காண்பிக்க‌ப்ப‌ட்ட‌து. பின் சிற‌குக‌ள் கொண்ட‌ இர‌ண்டு பெண்க‌ள் வ‌ந்து அதைத் தூக்கிக் கொண்டு போனார்க‌ள். தீமையின் அழிவை அது காட்டிய‌து.

எட்டாவ‌து காட்சியில் கட‌வுளின் தேர்க‌ளும், குதிரைக‌ளும் ம‌க்க‌ளைப் பாதுகாக்கும் காட்சி விள‌க்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌க் காட்சிக‌ளின் மூல‌ம் க‌ட‌வுளின் செய்திக‌ளை செக்க‌ரியா ம‌க்க‌ளுக்கு விள‌க்கினார்.

“உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றிவேந்தர். எளிமையுள்ளவர். கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்” என்றும் “தாங்க‌ள் ஊடுருவ‌க் குத்திய‌வ‌ரை உற்று நோக்குவ‌ர்” என்றும் இவ‌ர் இயேசுவைக் குறித்து ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்பே உரைத்த‌ தீர்க்க‌த்த‌ரிச‌ன‌ங்க‌ள் இவ‌ருடைய‌ இறைவாக்குக‌ளின் வ‌லிமையை உரைக்கின்ற‌ன‌.

அனைத்தையும் இறைவ‌னில் அர்ப்ப‌ணித்து விட்டால் ந‌ம்மை அவ‌ர் விய‌த்த‌கு வ‌கையில் பாதுகாப்பார் என்ப‌தை செக்க‌ரியாவின் இறைவார்த்தைக‌ள் விள‌க்குகின்ற‌ன‌.

பைபிள் மாந்தர்கள் 75 (தினத்தந்தி) ஆகாய்

கி.மு 520ல் இறைவாக்கு உரைத்த ஒரு இறைவாக்கினர் தான் ஆகாய். ஆகாய் என்னும் பெயருக்கு “விழாக் கொண்டாட்டம்” அல்லது ” புனிதப் பயணம் செய்பவர்” என்பது பொருள்.

இந்த இறைவாக்கினரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் பைபிளில் இல்லை. இவர் சொன்ன இறை வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. இறைவாக்கினர்களை முதன்மைப் படுத்தாமல் அவர்கள் சொன்ன இறை வார்த்தைகளை மட்டும் முதன்மைப்படுத்தும் முறை விவிலியத்தில் வெகு சகஜமாகக் காணப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே வழியாக‌ மீட்டுக் கொண்டு வரப்பட்டபின் பல இறைவாக்கினர்கள் அவர்களுக்குத் தோன்றி கடவுளின் செய்திகளை அளித்து வந்தனர். ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் அந்த செய்திகள் இருந்தது.

மக்கள் அடிமைகளாக்கப் பட்டது அவர்கள் செய்த பாவத்துக்குக் கடவுள் அளித்த தண்டனை என்பதை சில இறைவாக்கினர்கள் பறை சாற்றினார்கள். அடிமைத்தனத்தில் சிக்கி உழன்ற போது சில இறைவாக்கினர்கள் வந்து ஆறுதலின் செய்தியை அளித்தார்கள். அந்த அடிமைத்தனம் மாறிய பிறகு வந்த இறைவாக்கினர்கள் “மறுவாழ்வின்” செய்தியை அளித்தார்கள். அதற்குப் பிறகு தோன்றிய ஆகாய் இறைவாக்கினர் புதிய ஒரு செய்தியை அளித்தார்.

இஸ்ரேல் மக்கள் பாபிலோனியர்களின் அடிமைத்தனத்தில் கிமு 587 முதல் கிமு 538 வரை சிக்கிக் கிடந்தனர். அதன் பிந்தைய காலம் தான் ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்குக் காலம்.

நெபுகத்நேசரின் படைகள் கிமு 587ல் எருசலேமின் மீது போர்தொடுத்து எருசலேம் கோயிலைத் தரைமட்டமாக்கின. யூதர்கள் அடிமைகளாயினர். அரசர் சைரசின் கட்டளைப்படி கிமு 538ம் ஆண்டில் அவர்கள்  விடுவிக்கப்பட்டனர். கூடவே நெபுகத்நேசர் அபகரித்து வைத்திருந்த அவர்களின் செல்வங்களையும் மன்னர் அவர்களிடமே அளித்தார்.

அடிமைத்தன மக்கள் மகிழ்ச்சியோடு யூதா, இஸ்ரேல் தேசங்களுக்குத் திரும்பினர். உடனே கடவுளுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டுமென வேலை ஆரம்பித்தார்கள். ஆனால் அது தொடரவில்லை. சுமார் 18 ஆண்டு காலம் அந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது. அப்போது தான் ஆகாய் வந்தார்.

“கடவுளுக்குக் கோயில் கட்டுங்கள்” என்பது தான் ஆகாய் இறைவாக்கினர் உரைத்த இறைவாக்கின் மையம்.

கோயில் இறைவ‌னின் வீடு. அது ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் ஒரு த‌ள‌மாக‌வும் விள‌ங்குகிற‌து. என‌வே தான் ஆகாய் இறைவாக்கின‌ர், சோர்வுற்றுக் கிட‌ந்த‌ ம‌க்க‌ளை உசுப்பி க‌ட‌வுளுக்குக் கோயில் க‌ட்டும் ப‌ணியை துரித‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கிறார்.

நாட்டில் நிக‌ழும் வ‌றுமைக்குக் கார‌ண‌ம் ஆல‌ய‌ம் இல்லாத‌து தான்

“நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள். ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” என‌ அவ‌ர்க‌ளுடைய‌ தோல்விக‌ளுக்குக் கார‌ண‌ம் கோயில் இல்லாத‌து தான் என‌ ஆகாய் குறிப்பிட்டார்.

அந்த‌ க‌ஷ்ட‌ங்க‌ள் நீங்க வேண்டுமானால் செய்ய வேண்டியது ஒன்றே. “எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள். கடவுளின் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.”

ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஆகாய் இறைவாக்கின‌ரின் வார்த்தைக்குக் கீழ்ப்ப‌டிந்த‌ன‌ர். க‌ட‌வுளுக்கான‌ ஆல‌ய‌த்தைக் க‌ட்டுவ‌தென‌ முடிவெடுத்த‌ன‌ர்.

ஆகாய் ம‌கிழ்ந்தார். கடவுள் பேசினார். “இதுவ‌ரை உங்க‌ளுடைய‌ நில‌மை எப்ப‌டி இருந்த‌து தெரியுமா ? நீங்கள் இருபது மரக்காலுக்கு மதிப்புப் போட்டு வந்து பார்க்கையில் பத்து தான் இருந்தது. பழம் பிழியும் ஆலைக்குள் வரும் போது ஐம்பது குடம் இரசத்துக்கு மதிப்புப் போட்ட போது, இருபது தான் இருந்தது. உங்களையும், உங்கள் உழைப்பின் பலன்களையும் வெப்பக் காற்றாலும் நச்சுப் பனியாலும் கல் மழையாலும் நாம் அழித்தோம்”

ஆனால் இனிமேல் அப்ப‌டியிருக்காது.

“விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்” என்றார் க‌ட‌வுள்.

ப‌ழைய‌ ஏற்பாட்டில் க‌ட‌வுள் வாழ்வ‌த‌ற்காக‌ ஆல‌ய‌ங்க‌ள் க‌ட்டுவ‌து வ‌ழ‌க்க‌மாய் இருந்த‌து. புதிய‌ ஏற்பாட்டில் நாமே க‌ட‌வுள் வாழும் ஆல‌ய‌மாக‌ மாறிவிட்டோம். “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில்” என்கிற‌து பைபிள்.

அந்த‌ ஆல‌ய‌த்தை தூய‌ ஆவியினால் க‌ட்டியெழுப்பும் ப‌ணியை நாம் செய்ய‌ வேண்டும். ஆகாயின் காலத்தில் அடித்த‌ள‌ம் போட்ட‌பின்பு 18 ஆண்டுக‌ள் க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌டாம‌லேயே இருந்த‌து. அதே போல, கிறிஸ்த‌வ‌ வாழ்க்கைக்குள் நுழைந்தும் ப‌ல‌ நீண்ட‌ நெடிய‌ ஆண்டுக‌ள் க‌ட‌வுளின் ஆல‌ய‌மாக‌ ந‌ம்மை மாற்றாம‌ல் இருக்கிறோம். ந‌ம‌து பாவ‌த்தை வெளியேற்றி, இறைவ‌னை உள்ளே இருத்தி ந‌ம‌து உட‌லை இறைவ‌னின் ஆல‌ய‌மாய் மாற்றும் ப‌ணியை செய்ய‌ வேண்டும் என்ப‌தே நாம் க‌ற்றுக் கொள்ளும் பாட‌மாகும்.

பைபிள் மாந்தர்கள் 74 (தினத்தந்தி) செப்பனியா

பழைய ஏற்பாட்டில் வருகின்ற சின்ன தீர்க்கத்தரிசிகள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் செப்பனியா. பெரும்பாலான இறைவாக்கினர் மூலமாகக் கடவுள் பேசிய விஷயம் ஒன்று தான். “தீமை செய்யும் வழியை விட்டு விலகி என் பக்கம் வாருங்கள்” என்பதே அது. இறை வார்த்தைகள் எழுத்து வடிவில் இல்லாத அந்த காலகட்டத்தில் இறைவாக்கினர்களின் மூலமாக இறைவன் பேசிய‌வை அவை.

செப்பனியா இறைவாக்கினரின் வாழ்க்கையும், தீர்க்கத்தரிசனமும் கூட அதை அடியொற்றியே இருக்கிறது. கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர் இறைவாக்கு உரைத்தார். எசேக்கியாவின் கொள்ளுப்பேரன், அமரியாவின் பேரன், கெதலியாவின் மகன் என இவரைப் பற்றிய வம்ச வரலாறு குறிப்பிடப்படுகிறது.

“கடவுளின் பிரியத்துக்குரிய யூதா நாடு வேற்று தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அழிவு நிச்சயம். ஆனாலும் யூதாவின் தலைநகரான எருசலேம் மீண்டும் தனது பழைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும். இறையச்சம் கொண்ட மக்கள் அங்கே மீண்டும் வாழ்வார்கள்” என்பது செப்பனியாவின் இறைவாக்கு நூலின் சாரம்சமாகும்.

“க‌ட‌வுள் கோப‌ம் கொள்ளும் நாளில் ஒரே வினாடியில் அவ‌ர் உல‌கை அழித்து விடுவார். க‌ட‌வுள் ந‌ல்ல‌தும் செய்ய‌ மாட்டார், தீமையும் செய்ய‌ மாட்டார் என‌ நினைத்து ப‌ஞ்ச‌ணையில் ப‌டுத்திருப்ப‌வ‌ர்க‌ள் அழிவார்க‌ள். வேற்று தெய்வங்களைத் தொழுபவர்கள் வெட்டி வீழ்த்தப்படுவார்கள். ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல், வில‌ங்குக‌ள், ப‌ற‌வைக‌ள் கூட அழிக்கப்படும். அந்த‌ நாளில் மீன் கூட கூக்குர‌லிட்டு அழும். அந்த நாள் தான் ஆண்ட‌வரின் நாள். சின‌த்தின் நாள்” என்றார் செப்ப‌னியா.

க‌ட‌வுளின் கோப‌த்தைப் ப‌ற்றிப் பேசி அத‌ன் மூல‌ம் ம‌க்கள் த‌ங்க‌ள் பாவ‌த்தை உண‌ர‌ச் செய்யும் ப‌ணியை செப்ப‌னியா செய்தார். கட‌வுளின் சின‌த்தில் சிக்கிக் கொண்டால் எரிம‌லை மூடிய‌ எறும்பைப் போல‌ அழிவ‌து உறுதி. என‌வே தான் அந்த‌ கோப‌ம் வ‌ந்து ச‌ந்திக்கும் முன்பே ம‌ன‌ம் திரும்ப‌ அவ‌ர் அழைப்பு விடுக்கிறார்.

“ப‌த‌ரைப் போல‌ நீங்க‌ள் தூற்ற‌ப்ப‌டும் முன் ம‌ன‌ம் திரும்புங்கள்” என மக்களைப் பார்த்து இறைவாக்கு உரைக்கிறார்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ளை க‌ட‌வுள் எகிப்திய‌ரின் அடிமைத்த‌ன‌த்திலிருந்து மோசே மூல‌மாக‌ மீட்டுக் கொண்டு வ‌ந்தார். எகிப்திய‌ர்க‌ளின் ப‌டைக‌ளை அழித்து ம‌க்க‌ளைக் காத்தார். நாற்ப‌து ஆண்டுக‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ய‌ண‌த்திலும்  கூட‌வே இருந்து பாதுகாத்தார். ஆனாலும் ம‌க்க‌ள் அவ‌ரை விட்டு வில‌கினார்க‌ள்.

க‌ல‌க‌ம் செய்து, தீட்டுக்குள்ளாகி, ம‌க்க‌ளை ஒடுக்கிய அந்த ந‌க‌ரை செப்ப‌னியா எச்ச‌ரித்தார். க‌ர்ஜ‌னை செய்யும் சிங்க‌ங்க‌ளைப் போல‌ ந‌க‌ர‌த்தின் த‌லைவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். மாலையில் கிடைப்ப‌தை காலை வ‌ரை வைத்திராத‌ ஓநாய்க‌ளாய் அந்த‌ நாட்டின் நீதிப‌திகள் இருக்கிறார்கள். வீண்பெருமை பேசும் வ‌ஞ்ச‌க‌ம் மிக்க‌ ம‌னித‌ர்களே அந்த‌ நாட்டின் இறைவாக்கின‌ர்க‌ள். புனித‌மான‌தைக் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்தி திருச்ச‌ட்ட‌த்தை உத‌றித் த‌ள்ளும் ம‌னித‌ர்களே  அந்த‌ நாட்டின் குருக்க‌ள்.

என‌ யூதாவின் நிலையை செப்ப‌னியா கடிந்துரைத்தார். த‌லைவ‌ர் முத‌ல் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ள் வ‌ரை இறைவ‌னை விட்டு வெகுதூர‌ம் வில‌கிச் சென்று விட்டார்க‌ள் என்ப‌தையே அவ‌ருடைய‌ இறைவாக்கு வெளிப்ப‌டுத்திய‌து.

ஆண்ட‌வ‌ரோ நீதியுள்ள‌வ‌ர், கொடுமை செய்யாத‌வ‌ர், காலை தோறும் அவ‌ர் தீர்ப்பை வ‌ழ‌ங்குப‌வ‌ர் என‌ இறைவ‌னைக் குறித்து செப்ப‌னியா உரைக்கிறார்.

க‌ட‌வுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவ‌ருடைய‌ பாதையில் ந‌ட‌க்கும் போது அவ‌ர் த‌ண்ட‌னை ம‌ன‌தை மாற்றி விடுகிறார். பின்ன‌ர் துய‌ர‌ம் ஆன‌ந்த‌மாய் மாறிவிடும்.

“சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு” என‌ செப்ப‌னியா இஸ்ர‌யேல‌ரை ஊக்க‌ப்ப‌டுத்தும் ம‌கிழ்ச்சிப் பாட‌லைக் க‌டைசியாக‌ப் பாடுகிறார்.

“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்” என்கிற‌து அந்த‌ ம‌கிழ்வின் பாட‌ல்.

செப்ப‌னியா யூதா தேச‌த்தில் இறைவாக்கு உரைத்தாலும் ம‌ற்ற‌ இறைவாக்கின‌ர்க‌ளைப் போல‌வே இவ‌ர‌து வார்த்தைகள் கால‌ம் க‌ட‌ந்து ந‌ம‌க்கு இறைவ‌னின் எண்ண‌த்தைப் போதிக்கின்ற‌ன‌.

1.ம‌ன‌த்தாழ்மையோடு க‌ட‌வுளின் வ‌ழியைப் பின்ப‌ற்றுவ‌து மிக‌வும் அவ‌சிய‌ம்.

2.க‌ட‌வுள் தீமையை வெறுப்ப‌வ‌ர், ஆனால் ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பும் போது த‌ன‌து க‌டும் கோப‌த்தைக் கூட‌ ச‌ட்டென‌ மாற்றி அக‌ம் ம‌கிழ்ப‌வ‌ர்.

3.க‌ட‌வுள் த‌ன‌து ம‌க்க‌ள் வேறு தெய்வ‌ங்க‌ளை வ‌ழிப‌டுவ‌தை ஒரு போதும் அனும‌திப்ப‌தில்லை.

இந்த‌ மூன்று சிந்த‌னைக‌ளையும் ம‌ன‌தில் இருத்துவோம். செப்ப‌னியாவின் இறை வார்த்தைக‌ள் ந‌ம‌து வாழ்க்கையைச் செப்ப‌னிட‌ட்டும்.

பைபிள் மாந்தர்கள் 73 (தினத்தந்தி) அபக்கூக்கு

“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,

திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,

ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,

வயல்களில் தானியம் விளையாவிடினும்,

கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,

தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,

நான் ஆண்டவரில் களிகூர்வேன்;

என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.”

எனும் மிகப் பிரபலமான‌ நம்பிக்கையின் பாடலைப் பாடியவர் அபக்கூக்கு.

அபக்கூக்கு என்றும் ஆபகூக் என்றும் அழைக்கப்படும் இந்த இறைவாக்கினர்,  கிமு ஏழாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வாழ்ந்தவர்.

நாட்டில் பாபிலோனியர்களின் படையெடுப்பு ! கடவுளின் மக்களுக்கு சவால் விடுக்கும் பாபிலோனிய அச்சுறுத்தல். அவர்களுடைய கொள்ளையினால் நாட்டின் வளங்களெல்லாம் மறைந்து போகின்றன. அவர்களுடைய கொடுமையினால் நிம்மதியெல்லாம் கரைந்து போகின்றன.

“க‌ட‌வுளே, பொல்லாத‌வ‌ர்க‌ளெல்லாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளை அழிக்கிறார்க‌ளே. ஏன் பேசாம‌ல் மௌன‌மாய் இருக்கிறீர் ?” என‌ கேட்கிறார் இறைவாக்கின‌ர். அத‌ற்கு க‌ட‌வுள் “நேர்மையுடையோர் ந‌ம்பிக்கையில் நிலைத்திருக்க‌ட்டும், த‌ண்ட‌னை குறித்த‌ கால‌த்தில் நிக‌ழும்” என‌ ப‌தில் கொடுக்கிறார்.

இறைவ‌னின் பிர‌ம்மாண்டத்தையும், அவ‌ர‌து விய‌த்த‌கு ஆற்ற‌லையும் பேசும் அபக்கூக்கு, நேர்மையாள‌ன் ஏன் துன்புறுகிறான் எனும் வினாவையும் கடவுளிடம் தைரியமாய் வைக்கிறார்.

“ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன், உமது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; உமது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது. உமது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது. நீர்  நின்றால், நிலம் அதிர்கின்றது, நீர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன”  என‌ க‌ட‌வுளின் இருப்பையும், அவ‌ர‌து ம‌கிமையையும் விள‌க்குகின்றார் அப‌கூக்கு.

அவ‌ருக்கு நேர்மையாள‌ர்க‌ள் துன்புறுவ‌து வ‌ருத்த‌த்தைக் கொடுக்கிற‌து. அவ‌ர் த‌ன‌து துய‌ர‌த்தை

“ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.” என‌ க‌ண்ணீரோடு ப‌திவு செய்கிறார்.

அவ‌ர‌து குர‌லைக் கேட்கும் க‌ட‌வுள் அவ‌ருக்கு உட‌ன‌டியாக‌ப் ப‌தில் கொடுக்கிறார்.

“நான் க‌ல்தேய‌ரை அனுப்புவேன். அவ‌ர்க‌ள் கொடுமையான‌வ‌ர்க‌ள். அச்ச‌த்தையும் திகிலையும் உருவாக்குப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுடைய‌ குதிரைக‌ள் வேங்கையை விட‌ வேக‌மாய்ப் பாய்ப‌வை. மாலை நேர‌ ஓநாய்க‌ளை விட‌க் கொடிய‌வை. இரைமேல் பாயும் க‌ழுகென‌ அவ‌ர்க‌ள் ப‌டைக‌ள் வ‌ருகின்ற‌ன‌.” என்றார்.

அப‌கூக்கு ம‌றுமொழியாக‌, ” ஆண்ட‌வ‌ரே, தொன்று தொட்டே இருப்பவர் நீர். தீமையைக் காண‌ நாணுகின்ற‌ க‌ண்க‌ள் உம்முடைய‌வை. கொடுமையைப் பார்க்க‌த் தாங்காத‌வ‌ர் நீர். பொல்லாத‌வ‌ர்க‌ள் நேர்மையாள‌ரை விழுங்குகையில் பார்த்துக் கொண்டிருக்க‌ வேண்டுமோ?” என்றார்.

க‌ட‌வுள் அவ‌ரிட‌ம், ” காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த‌ கால‌த்தில் நிறைவேறுவ‌த‌ற்கான‌ காட்சி உண்டு. அது தாம‌த‌மாய் வ‌ருவ‌து போல‌ தோன்றும். ஆனால் ந‌ட‌ந்தே தீரும். ந‌ம்பாத‌வ‌ர்க‌ள் உள்ள‌த்தில் நேர்மைய‌ற்ற‌வ‌ர்க‌ள்.  நேர்மையுடைய‌வ‌ரோ, ந‌ம்பிக்கையினால் வாழ்வ‌டைவார்க‌ள்” என்றார்.

அப‌கூக் மூல‌மாக‌ இறைவ‌ன் பேசிய‌ வார்த்தைக‌ள் கால‌ங்க‌ள் க‌ட‌ந்து வாழ்ப‌வை. நேர்மையின் மீதான‌ க‌ட‌வுளின் தாக‌மும், ம‌க்க‌ள் எளிமையாக‌ அன்பாக‌ வாழ‌வேண்டும் எனும் அவ‌ருடைய‌ ஆத‌ங்க‌மும் அவ‌ருடைய‌ குர‌லில் எதிரொலிக்கிற‌து.

“செல்வ‌ம் ஏமாற்றிவிடும். பேராசை பாதாள‌த்தைப் போல‌ ப‌ர‌ந்து விரிந்த‌து. சாவைப் போல அவைகளும் நிறைவ‌டைவ‌தில்லை. பிற‌ருடைய‌ பொருட்க‌ளைக் க‌வ‌ர்ந்து கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு அழிவு நிச்ச‌ய‌ம். த‌ன் குடும்ப‌த்துக்கு தீய‌ வ‌ழியில் ப‌ண‌ம் சேர்ப்ப‌வ‌னுக்கு அழிவு நிச்சயம். குடும்ப‌த்துக்கே அழிவைக் கொண்டுவ‌ருகிறான் அவ‌ன். வ‌ன்முறையால் ந‌க‌ரைக் க‌ட்டியெழுப்புப‌வ‌ர்க‌ள் அழிவார்க‌ள்”

என‌ க‌ட‌வுள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக‌ளும் த‌ன்ன‌ல‌ம் வெறுத்து ச‌க‌ம‌னித‌ க‌ரிச‌னை கொண்டிருக்க‌ வேண்டும் என்ப‌தைப் போதிக்கிற‌து.

“சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே!பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!” என‌ சிலை வ‌ழிபாட்டையும் க‌ட‌வுள் அப‌கூக்கு மூல‌ம் எதிர்க்கிறார்.

சிறிய‌ இறைவாக்கின‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லில் இட‌ம்பெற்றிருந்தாலும் அப‌கூக்கின் வார்த்தைக‌ள் மிக‌ப்பெரிய‌ போத‌னையை ம‌னுக்குல‌த்துக்கு எடுத்துச் சொல்கின்ற‌ன‌.

  1. பேராசை கொள்வ‌து க‌ட‌வுளுக்கு எதிரான‌ செய‌ல்
  2. ஆண‌வ‌ம் கொள்பவ‌ர்க‌ளை க‌ட‌வுள் எதிர்க்கிறார்.
  3. ப‌டைத்த‌வ‌ரை விட்டு விட்டு ப‌டைப்புக‌ளை வ‌ழிப‌டுவ‌து த‌வ‌றான‌து.
  4. தீயோருக்கான‌ அழிவு தாம‌த‌மானாலும், வ‌ந்தே தீரும்.
  5. குடும்ப‌த்துக்காக‌ செய்கிறேன் என தீமை செய்ப‌வ‌ர்க‌ள் குடும்ப‌த்தையே அழிக்கிறார்க‌ள்.

எனும் சில‌ முக்கிய‌ பாட‌ங்க‌ளை இவ‌ருடைய‌ நூலில் இருந்து க‌ற்றுக் கொள்வோம்.

தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும் எனும் இறை வார்த்தையில் ந‌ம்பிக்கை வைப்போம்.

பைபிள் மாந்தர்கள் 72 (தினத்தந்தி) நாகூம்

அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களின் பரம எதிரிகளாக இருந்தார்கள். அசீரியர்களின் தலைநகரம் நினிவே. அது மிகவும் செல்வச் செழிப்போடு இருந்தது. பல‌ மைல் சுற்றளவுள்ள பெரும் சுவர்கள் அந்த நகரைச் சூழ்ந்திருந்ததாகவும்,நகருக்குத் தண்ணீர் கொண்டு வர கால்வாய் இருந்ததாகவும், அரண்மனைகள் மற்றும் நூலகங்கள் இருந்ததாகவும் அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் அழிவைப் பற்றிக்  கூறுவதே இறைவாக்கினர் நாகூம் நூலின் சாரம்சம். நாகூம் என்றால் ஆறுதலளிப்பவர் என்று பொருள்.

கிமு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. தனது மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் கடவுள் விட்டு வைப்பதில்லை என்பதை நாகூம் விளக்குகிறார். யூதாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்கோஸ் எனும் இட‌த்தைச் சேர்ந்த‌ அவ‌ருக்கு காட்சியாக‌ இறைவார்த்தை கொடுக்க‌ப்ப‌ட்ட‌து.

க‌ட‌வுள் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌வ‌ர். “சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி ! மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம் ! அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார் ! அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன ! குன்றுகள் கரைகின்றன ! அவ‌ர் கோப‌ம் தீயாய் கொட்டுகிற‌து ! பாறைக‌ள் த‌விடு பொடியாகின்ற‌ன‌ !” என‌ க‌ட‌வுளின் மாட்சியைப் ப‌ற்றி க‌ண்ட‌ காட்சியை விள‌க்குகிறார்.

எதிரியின் நாடு அழிந்து விட்ட‌து, என‌வே ஆன‌ந்த‌ப்ப‌டு ! இனிமேல் தீய‌வ‌ன் எழ‌மாட்டான். அவ‌ன் புதைக்க‌ப்ப‌ட்டான் என்கிறார் க‌ட‌வுள்.

” நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?” என நினிவேயைப் பேசி ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ? ” என‌ நாகூம் கேட்கிறார். தீய‌வ‌னின் அழிவுக்கு ஆன‌ந்த‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் தான் உண்டே த‌விர‌, அத‌ற்காய் அழுது புல‌ம்புப‌வ‌ர்க‌ள் இல்லை.

“உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை”

“உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்” என‌ நாகூம் இறைவாக்கின‌ர் க‌ர்ஜித்தார்.

நினிவே ந‌க‌ர‌ம் வ‌லிமையின் உச்ச‌மாய், செழிப்பின் உச்ச‌மாய், க‌ம்பீர‌த்தின் உச்ச‌மாய் இருந்த‌து. ஆனால் அது க‌ட‌வுளின் ம‌க்க‌ளுக்கு எதிராய்ச் செய‌ல்ப‌ட்ட‌து. என‌வே சிங்க‌த்தைப் போல‌ பிட‌ரி சிலிர்த்த‌ தேச‌ம் ம‌ண்ணோடு ம‌ண்ணாகிப் போன‌து.

ஏற‌க்குறைய‌ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தான் இந்த‌ நினிவே ந‌க‌ர‌ம் பாவ‌த்தில் விழுந்து த‌த்த‌ளித்த‌து. க‌ட‌வுள் நாட்டை அழிக்க‌ வேண்டுமென‌ முடிவெடுத்து யோனாவை அனுப்பினார். யோனாவின் மூல‌மாய் வெளிப்ப‌ட்ட‌ க‌ட‌வுளின் வார்த்தைக‌ளுக்கு நினிவே ந‌க‌ர‌ ம‌க்க‌ள் செவி சாய்த்தார்க‌ள். த‌ங்களுடைய‌ த‌வ‌றை உண‌ர்ந்தார்க‌ள். பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வெளியே வ‌ந்தார்க‌ள். என‌வே க‌ட‌வுள் அவ‌ர்க‌ளைத் த‌ண்டிக்க‌வில்லை. ம‌ன‌ம் திரும்பிய‌ ம‌க்க‌ளுக்கு இர‌க்க‌ம் காட்டினார்.

ஆனால் இப்போது நில‌மை மீண்டும் த‌லைகீழ். இப்போது அழிவு ஒன்றே நினிவேயின் மீதான‌ க‌ட‌வுளின் தீர்ப்பாகிப் போன‌து. நாகூம் இறைவாக்கின‌ரின் நூல் வெறும் எச்ச‌ரிக்கையின் நூல் அல்ல‌. அது க‌ட‌வுளின் தீராத் துய‌ர‌த்தின் எரிம‌லை வெளிப்பாடு.

நினிவேயின் அழிவு பாவ‌த்தின் மீதான‌ க‌ட‌வுளின் ச‌ம‌ர‌ச‌ம‌ற்ற‌ த‌ன்மையைக் காட்டுகிற‌து. நினிவேயின் அழிவு யூதாவின் ம‌கிழ்ச்சியாய் மாறிய‌து.நாகூம் இறைவாக்கு உரைத்த இருபது ஆண்டுகளுக்குள்ளேயே மாபெரும் நகரமான நினிவே அழிக்கப்பட்டது. அழிவில் என்னென்ன நேரும் என கடவுள் நாகூம் மூலமாகச் சொல்லியிருந்தவை அனைத்தும் நிறைவேறின.

இயேசுவின்  நற்செய்திப் பணியைக் குறிப்பிடுவதாக அமைந்த “நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன” எனும் வசனங்கள் குறிப்பிடத் தக்கவை.

நாகூம் இறைவாக்கின‌ரின் நூல் ந‌ம‌க்கு ப‌ல்வேறு ப‌டிப்பினைக‌ளைக் க‌ற்றுத் த‌ருகிற‌து.

  1. இறைவ‌ன் அன்பு வ‌டிவான‌வ‌ர். அவ‌ர் ம‌ன‌ம் திரும்புப‌வ‌ர்க‌ளை மார்போட‌ணைக்கும் தாயைப் போன்ற‌வ‌ர். ஆனால் பாவ‌த்தில் மூழ்கிக் கிட‌ப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌ம் திருந்த‌ ம‌றுத்தால் அழிக்க‌வும் த‌ய‌ங்க‌ மாட்டார்.
  2. இறைம‌க்க‌ளின் மீதான‌ தாக்குத‌ல் இறைவ‌னுக்கு கோப‌த்தைக் கொண்டு வ‌ருகிற‌து. க‌ட‌வுளின் ம‌க்க‌ளாக‌ இருப்ப‌தில் ஒரு ஒப்ப‌ற்ற‌ பாதுகாப்பு உண‌ர்வு உண்டு.
  3. இறைவ‌ன் மீதான‌ ந‌ம்பிக்கையும், இறைவ‌னுக்குக் கீழ்ப்ப‌டியும் ம‌ன‌மும் நாம் ஒவ்வொருவ‌ரும் பெற்றிருக்க‌ வேண்டிய‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள்.
  4. க‌ட‌வுள் கோப‌ம் கொள்வ‌தில் பொறுமையாய் இருப்ப‌வ‌ர். அலட்சியமாய் அந்தப் பொறுமையை எடுத்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் அழிவார்க‌ள்.
  5. ஒரு முறை க‌ட‌வுளின் அன்புக்குள் வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து அதைக் காத்துக் கொள்ள‌ வேண்டும். மீட்பின் அனுப‌வ‌த்தைப் பெற்றுவிட்டோம் எனும் நினைப்புடன் ஓய்ந்துவிட்டால் பாவ‌ம் ந‌ம்மை மூழ்க‌டித்துவிடும்.

இந்த‌ பாட‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொள்வோம். இறைவனின் அன்பைப் பெற்றுக் கொள்வோம்.

பைபிள் மாந்தர்கள் 71 (தினத்தந்தி) மீக்கா

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சின்ன இறைவாக்கினர்களில் ஒருவர் மீக்கா. யூதாவிலுள்ள மெரேசேத் தான் இவருடைய சொந்த ஊர். அது எருசலேமுக்குத் தென் மேற்கே சுமார் 20 மைல்கள் தொலைவில் இருக்கிறது.  கிமு 737 க்கும் 690க்கும் இடைப்பட்ட காலத்தில் இறைவாக்கு உரைத்தவர். “கடவுளுக்கு இணையானவர் யார்” அல்லது “கடவுளுக்கு ஒப்பானவர் யார் ?” என்பது இந்தப் பெயரின் பொருள். மிக்கேல் எனும் பெயரின் இன்னொரு வடிவமாக மீக்கா எனும் பெயர் அமைந்திருக்கிறது.

கடவுளின் செய்தியை மக்களுக்கு உரைப்பவர்கள் தான் இறைவாக்கினர்கள். அல்லது தீர்க்கத் தரிசிகள். சில வேளைகளில் அவர்களுடைய வார்த்தைகள்  எதிர்காலத்தில் நடைபெற இருப்பவற்றைக் குறித்த எச்சரிக்கையாய் இருக்கும். சில வேளைகளில் நிகழ்காலத்தில் அவர்கள் செய்ய வேண்டியவை குறித்த அறிவுரையாய் இருக்கும். இன்னும் சில வேளைகளில் மீட்புக்கான மனம் திரும்புதல் குறித்ததாக இருக்கும். செய்தி எதுவானாலும், அது கடவுளின் செய்தி என்பது மட்டுமே அடிக்கோடிட வேண்டிய விஷ‌ய‌மாகும்.

“எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர், உன்னிடமிருந்தே தோன்றுவார். அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்” எனும் இறைவார்த்தைகள் கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய தீர்க்கத் தரிசனமாய்க் கருதப்படுகிறது. இறைமகன் இயேசுவின் மனித வரவைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகத் துல்லியமாய் உரைக்கப்பட்ட இறைவாக்கு இது.

மீக்காவின் இறைவாக்கு யூதா மற்றும் இஸ்ரேல் நாட்டின் மீது இருந்தது.  கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களாக இருந்தாலும் இஸ்ரயேலர்கள் பாவத்தைத் தேடி ஓடுபவர்களாகவே இருந்தார்கள்.  நாடு செல்வச் செழிப்புடன் இருந்தது. ஆனால் மக்களின் மனங்களோ வறண்டு கிடந்தன. ஏழை எளிய மக்கள் மேலும் மேலும் நசுக்கப்பட்டார்கள்.

ஏழைகளை வஞ்சித்து விட்டு கடவுளை வழிபாடு செய்கிறேன் என்பது போலித்தனமான ஆன்மீகம். இதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. அடுத்திருக்கும் மனிதனை அன்பு செய்வதே, கடவுளை அன்பு செய்வதன் அடையாளம் எனும் அற்புதமான மனித நேயச் செய்தியை மீக்கா இறைவாக்காய்த் தருகிறார்.

மீக்காவின் வார்த்தைகளில் அழகியலும், கடவுளின் மனமும் ஒரு சேர வெளிப்படுகின்றன.

“இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார். அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார். நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும். பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்”

என கடவுளின் வருகையின் வீரியத்தை மீக்கா இறைவாக்கினர் விளக்குகிறார். இஸ்ரயேலும், யூதாவும் அழிவுறும். அது கடவுளின் வழியை விட்டு விலகிவிட்டது. எனும் எச்சரிக்கையையும் அவர் விடுக்கிறார்.

“தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு!” என்கிறார் ஆண்டவர்.

“இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ! நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள். என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள். என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்.

அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்” என தலைவர்கள் செய்யும் கொடுமைகளைக் குறித்த கடவுளின் வார்த்தை ஆக்ரோஷமாய்த் தாக்குகிறது. எருசலேமைக் குறித்தும், சமாரியாவைக் குறித்தும் இவர் சொன்ன இறைவார்த்தைகள் அனைத்தும் பின்னாட்களில் அப்படியே நடந்தன.

சிலைவழிபாடு,  வஞ்சனை, திருடுதல், பேராசை, பாலியல் தவறுகள், அடக்குமுறை, கபடம், அநியாயம், கொள்ளையடித்தல், பொய் உரைத்தல், கொலை செய்தல் என மீக்கா இடும் பட்டியல் மிகப் பெரிது. அவருடைய செய்தியின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான். “பாவத்தை விட்டு விலகி கடவுளிடம் வாருங்கள்”.

அதை மிகத் தெளிவாக “ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்” என முத்தாய்ப்பாய் விளக்குகிறார் மீக்கா.

  1. கடவுளை விட்டு விலகிச் செல்கையில் அழிவு நிச்சயம். ஆனால் மனம் திரும்பி வருவோருக்கு அடைக்கலம் அதிக‌ நிச்சயம்.
  2. ஏழைகளின் மீதான வன்முறை கடவுளின் மீதான வன்முறை ! மனித நேயம் மனதில் நிரம்பியிருக்க வேண்டியது ஆன்மீகத்தின் அடிப்படை.

இந்த இரண்டு விஷயங்களையும் மீக்காவின் இறைவாக்கு நூலிலிருந்து கற்றுக் கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் உயரிய போதனையான “கடவுளை நேசி”, “மனிதனை நேசி” எனும் போதனைகளை ஒட்டியே மீக்காவின் இறைவார்த்தைகள் இருப்பது, கடவுளின் வார்த்தை நிலையானது என்பதை நிரூபிக்கிற‌து.

பைபிள் மாந்தர்கள் 70 (தினத்தந்தி) யோனா

யோனா ஒரு இறைவாக்கினர். யோனா என்றால் புறா என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களையும், புதிய ஏற்பாட்டில் தூய ஆவியானவரையும் புறா எனும் குறியீடு குறிப்பிடுகிறது.

யோனாவுக்கு கடவுளின் வாக்கு அருளப்பட்டது. “நீ போய் நினிவே நகர மக்களை எச்சரி. அவர்களுடைய பாவம் அதிகமாகிவிட்டது” கடவுள் சொன்னார்.

யோனாவோ, க‌ட‌வுளின் அழைப்பை உதாசீன‌ப் ப‌டுத்தி விட்டு த‌ர்கீசு எனும் இட‌த்துக்குப் போகும் க‌ப்ப‌லில் ஏறிக் கொண்டார். அசீரியாவின் மிக முக்கியமான நகரமான நினிவே கிழ‌க்கில் இருந்த‌து. த‌ர்கீசு மேற்கில் இருந்த‌து. க‌ட‌வுள் அழைத்த‌ இட‌த்துக்கு நேர் எதிரே ஓடினார் யோனா.

திடீரென‌ க‌ட‌லில் பெரும் காற்று வீசிய‌து. கட‌ல் கொந்த‌ளித்த‌து. க‌ப்ப‌ல் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போய்விட‌லாம் எனும் சூழ‌ல். க‌ப்ப‌லில் இருந்த‌வ‌ர்க‌ளெல்லாம் திகைத்துப் போய் அவ‌ர‌வ‌ர் க‌ட‌வுளை நோக்கி க‌த‌றி வேண்ட‌த் துவ‌ங்கினார்க‌ள்.

க‌ப்ப‌லில் இருந்த‌ ச‌ர‌க்குக‌ளையெல்லாம் க‌ட‌லில் எறிந்து க‌ப்ப‌லின் எடையைக் குறைக்கும் முய‌ற்சியிலும் அவ‌ர்க‌ள் ஈடுப‌ட்ட‌ன‌ர். யோனாவோ எதையும் க‌ண்டு கொள்ளாம‌ல் க‌ப்ப‌லின் அடித்த‌ள‌த்தில் போய் தூங்கிக் கொண்டிருந்தார். மாலுமி அவரை எழுப்பி செபிக்கச் சொன்னார்.

பின்னர், க‌ப்ப‌லில் உள்ள‌வ‌ர்க‌ளெல்லாம் ஒன்று கூடினார்க‌ள். “வாருங்க‌ள், இந்த‌ தீங்கு யாரால் வ‌ந்த‌து என்ப‌தை அறிய‌ சீட்டுக் குலுக்குவோம்” என்று சொல்லிக் கொண்டே சீட்டில் எல்லார் பெய‌ரையும் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்தார்க‌ள்.

“யோனா” ‍ பெயர் வந்தது.

எல்லோரும் யோனாவைப் பார்த்தார்கள்.

“யார் நீ ? எங்கிருந்து வ‌ருகிறாய் ?”

“நான் ஒரு எபிரேய‌ன். விண்ணையும் ம‌ண்ணையும் ப‌டைத்த‌ க‌ட‌வுளை வ‌ண‌ங்குப‌வ‌ன். அந்த‌ க‌ட‌வுள் என‌க்கு ஒரு வேலை கொடுத்தார். நான் அவ‌ரிட‌மிருந்து த‌ப்பி ஓடிவ‌ந்தேன்” என்றார் யோனா.

க‌ட‌ல் சீற்ற‌ம் அதிக‌மாகிக் கொண்டே இருந்த‌து. கொந்த‌ளிப்பு அட‌ங்க‌வில்லை.

“யோனா… நீ ஏன் இப்ப‌டிச் செய்தாய் ? இந்த‌ கொந்த‌ளிப்பு அட‌ங்க‌ என்ன‌ செய்ய‌வேண்டும் ? ”

“இந்த‌ கொந்த‌ளிப்புக்குக் கார‌ண‌ம் நான் தான். என்னைக் க‌ட‌லில் எறிந்து விடுங்கள். அது தான் ஒரே வழி” யோனா சொன்னார்.

அவ‌ர்க‌ள் த‌ய‌ங்கின‌ர். ஆனால் க‌ட‌ல் சீற்ற‌ம் அதிக‌ரித்துக் கொண்டே வ‌ந்த‌து. என‌வே வேறு வ‌ழியின்றி யோனாவைத் தூக்கிக் க‌ட‌லில் எறிந்த‌ன‌ர்.

ம‌ந்திர‌த்துக்குக் க‌ட்டுப்ப‌ட்ட‌து போல‌ க‌ட‌ல் ச‌ட்டென‌ அமைதியான‌து. க‌ட‌லில் விழுந்த‌ யோனா மூழ்கினார். மூழ்கிக் கொண்டிருந்த‌ அவ‌ரை ஒரு மீன் வ‌ந்து முழுதாய் விழுங்கிய‌து !

யோனா மூன்று நாட்க‌ள் மீனின் வ‌யிற்றில் இருந்தார். பாதுகாப்பாக‌ !

மீனின் வ‌யிற்றிலிருந்து யோனா க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாடினார். க‌ட‌வுள் மீனுக்குக் க‌ட்ட‌ளையிட‌ யோனாவை அது க‌ரையில் க‌க்கிய‌து,

க‌ட‌வுளின் வாக்கு மீண்டும் யோனாவுக்குக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இப்போது யோனா த‌ய‌ங்க‌வில்லை. நினிவே ந‌க‌ருக்குள் நுழைந்தார். இன்னும் நாற்ப‌து நாட்க‌ளில் நினிவே ந‌க‌ர் அழிக்க‌ப்ப‌டும் எனும் க‌ட‌வுளின் வார்த்தையை உரைத்தார்.

ம‌க்க‌ள் அதிர்ந்த‌ன‌ர். எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டு நோன்பிருக்க‌த் துவ‌ங்கின‌ர். விஷய‌ம் ம‌ன்ன‌னின் காதுக‌ளுக்கும் சென்ற‌து. அவ‌னும் உட‌னே அர‌ச‌வை விட்டிற‌ங்கி சாக்கு உடுத்தி சாம்ப‌லில் உட்கார்ந்தார். மக்கள் யாவரும் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர கட்டளையும் இட்டார்.

ம‌க்க‌ள் ச‌ட்டென‌ ம‌ன‌ம் மாறிய‌தைக் க‌ண்ட‌ இர‌க்க‌த்தின் க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். அந்த‌ நாட்டுக்குச் செய்ய‌ இருந்த‌ த‌ண்ட‌னையை வில‌க்கினார்.

யோனாவோ க‌டும் கோப‌ம‌டைந்தார். ‘கடவுளே, நீர் இப்ப‌டிச் செய்வ‌து ச‌ரிய‌ல்ல‌, இனி நான் வாழ்வ‌தை விட‌ சாவ‌தே மேல்’ என்றார்.

‘யோனாவே நீ கோப‌ப்ப‌டுவ‌து நியாய‌மா ?” என்று கேட்டார் க‌ட‌வுள்.

யோனா கோப‌த்தோடு நாட்டை விட்டு வெளியேறி ந‌க‌ருக்கு வெளியே ஒரு ப‌ந்த‌ல் அமைத்து ந‌க‌ருக்கு என்ன‌ நேரும் என்ப‌தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ‌ருக்கு அருகே ஒரு சின்ன‌ ஆம‌ண‌க்கு விதை முளைத்து ஒரே இரவில் வேக‌மாய் வ‌ள‌ர்ந்து அவ‌ருக்கு நிழ‌ல் கொடுக்கும் செடியான‌து. யோனா அந்த‌ நிழ‌லில் இருந்தார். ம‌று நாள் ஒரு புழு வ‌ந்து அந்த‌ச் செடியை அரிக்க‌ செடி அழிந்த‌து.

யோனா க‌ல‌ங்கினார். ‘க‌ட‌வுளே என‌க்கு சாவு வ‌ர‌ட்டும் என‌ வேண்டினார்’

‘ஒரு ஆம‌ண‌க்குச் செடிக்காக‌ நீ இவ்வ‌ள‌வு க‌ல‌ங்குவ‌து முறையா ?” க‌ட‌வுள் கேட்டார்.

‘ஆம். முறைதான்.’

‘தானாகவே ஒரு இர‌வில் முளைத்து ம‌று இர‌வில் அழிந்த‌ செடிக்காக‌ இவ்வ‌ள‌வு வ‌ருந்துகிறாயே. இந்த‌ நினிவே ந‌க‌ரில் இருக்கும் இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ நான் ம‌ன‌மிர‌ங்காம‌ல் இருப்பேனா ?” க‌ட‌வுள் கேட்க‌ யோனா ம‌ன‌ம் தெளிந்தார்.

க‌ட‌வுளின் அள‌வ‌ற்ற‌ அன்பையும், இரக்கத்தையும் உல‌கிற்கு விய‌ப்புட‌ன் சொல்கிற‌து யோனாவின் வாழ்க்கை.