சர்வாதிகாரி நெபுகத்நேசரின் படைத்தளபதி ஒலோபெரின். இலட்சக்கணக்கான வீரர்களையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் தேர்கள் போன்றவற்றையும் அவர்களுடைய படை கொண்டிருந்தது. எனவே செல்லுமிடமெல்லாம் வெற்றி அவனுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.
அடுத்ததாக யூதேயாவின் மீது ஒலோபெரின் தனது பார்வையைச் செலுத்தினான். அதைக் கேள்விப்பட்ட யூதேயாவிலுள்ள இஸ்ரயேலர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து கடவுளை நோக்கி கதறி மன்றாடினார்கள்.
யூதேயாவுக்கு உள்ளே நுழையும் மலைப்பாதைகள் எல்லாம் குறுகலானவை. அந்த மலைப்பாதைகளை எல்லாம் இஸ்ரயேலர்கள் வீரர்களைக் கொண்டு காவல் புரிந்தனர். எதிரிகள் வந்தால் மறைந்திருந்து தாக்க வசதியாக வியூகம் வகுத்தனர்.
தன்னை எதிர்த்து நிற்க இஸ்ரயேலர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ஒலோபரின் எகத்தாளமாய்ச் சிரித்தான். அப்போது அக்கியோர் என்பவர் அவரிடம், இஸ்ரயேலர்கள் கடவுளின் மக்கள். அவர்களை அழிப்பது இயலாத காரியம் என்றார். ஒலோபெரின் கோபமடைந்தார். அக்கியோரை இஸ்ரயேலரின் நாட்டுக்குள் விரட்டி விட்டார்.
அக்கியோர் தங்களுக்கு ஆதரவாய்ப் பேசியதால் அவரை இஸ்ரயேலர்கள் மிகவும் அன்பு செய்தார்கள். ஒலோபெரின் படைகளைத் திரட்டினான். நாட்டில் நுழைந்து எல்லோரையும் வெட்டி வீழ்த்தவேண்டும் எனும் கற்கால சிந்தனையோடு களமிறங்கினான்.
ஆனால் அவனுடைய படைத்தலைவர்கள் அவரிடம் வந்து, “இது சரிவராது. நாம் ஒரு புதிய திட்டம் போடுவோம். இஸ்ரயேலரின் நாட்டுக்குள் செல்லும் எல்லா நீர்நிலைகளையும் கைப்பற்றுவோம். நகரில் தண்ணீர் இல்லாவிட்டால் அவர்கள் நமக்குப் பணிந்து தானே ஆகவேண்டும் ?
ஒலோபெரினுக்கு அந்தத் திட்டம் பிடித்துப் போனது. அப்படியே செய்தான். இஸ்ரயேலர்கள் இப்படி ஒரு விஷயத்தை யோசிக்கவில்லை. எனவே அதிர்ச்சியடைந்தார்கள். சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. கடவுளிடம் வேண்டுவோம். ஐந்து நாட்கள் பார்ப்போம். நிலமை சரியாகவில்லையேல் சரணடைவோம். என முடிவெடுத்தனர்.
அப்போது யூதித்து தலைவர்கள் முன்னால் வந்து நின்றாள். அறிவும், ஞானமும், அழகும் கலந்த கைம்பெண் அவள். “கடவுளுக்கே நாள் குறித்து பாவம் செய்யாதீர்கள். நாம் தொடர்ந்து கடவுளிடம் வேண்டுவோம்” என்றாள்.
அன்று இரவு யூதித்து அழகிய ஆடைகளை உடுத்தி, நறுமணம் பூசி தனது பணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிகளின் கூடாரம் நோக்கிப் போனாள். இஸ்ரயேலர்கள் குழம்பினார்கள்.
தங்கள் கூடாரத்தை நோக்கி இரண்டு பெண்கள் வருவதைக் கண்ட எதிரிகள் அவர்களை வழிமறித்தனர்.
“நீங்கள் யார் ?”
“நாங்கள் இஸ்ரயேலர்கள், அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறோம்”
“தப்பி ஓடுகிறீர்களா ? உளவு பார்க்க வந்திருக்கிறீர்களா ?”
“எந்த நாட்டில் பெண்கள் உளவு பார்க்கிறார்கள் ? எங்களை உங்கள் படைத்தளபதியிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் பேசுகிறோம்” யூதித்து சொன்னாள்.
அவர்களை ஒலோபரினிடம் அழைத்துச் சென்றார்கள். ஒலோபெரின் அவளுடைய அழகில் மயங்கினான்.
“ம்ம்… சொல்”
“இஸரயேல் மக்கள் பாவம் செய்கிறார்கள். எனவே கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள். அழிவது உறுதி” யூதித்து சொல்ல ஒலோபெரின் மகிழ்ந்தான்.
“ஓ.. அப்படியானால் போரைத் துவங்கலாமா ?”
“வேண்டாம். நான் தினமும் அதிகாலையில் கடவுளிடம் வேண்டும் வழக்கம் கொண்டவள். கடவுளிடம் கேட்டு சரியான நேரத்தைச் சொல்கிறேன்”.
யூதித்தின் அழகில் மயங்கிய ஓலோபெரின் அவளை எப்படியாவது அடையவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டான். அதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதில் யூதித்தையும் அழைத்தான்.
ஓலோபெரினுக்கு மோகத்தின் சிணுங்கல்களையும், மதுவையும் ஊற்றிக் கொண்டே இருந்தாள் யூதித்து. விருந்து முடிந்து எல்லோரும் போய்விட்டனர். ஓலோபெரினுக்கு மது வார்ப்பதை யூதித்து நிறுத்தவில்லை. ஓலோபெரின் தன்னிலை மறந்தான். யூதித்தை இழுத்துக்கொண்டு மஞ்சத்தில் சரிந்தான்.
இந்த சமயத்துக்காகக் காத்திருந்த யூதித்து, தூணில் தொங்கிய அவனுடைய வாளை எடுத்தாள். இரண்டு கைகளாலும் அதைத் தூக்கி ஓலோபெரினின் கழுத்தில் வேகமாக இறக்கினாள். ஓலோபெரின் எனும் வீரனின் தலை உருண்டோடியது. அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அதிகாலையிலேயே இடத்தைக் காலி செய்தனர்.
யூதித்து திரும்பி வருவதைக் கண்ட இஸ்ரயேலர்கள் மகிழ்ந்தனர். ஓடிச்சென்று அவளிடம் விஷயத்தைக் கேட்டனர்.
“நாம் வெற்றி பெறுவது உறுதி.”
“ஏன் ? ஒலோபெரின் ஊரை விட்டு ஓடிவிட்டானா ?”
“அவன் தலையை விட்டு விட்டே ஓடிவிட்டான்” சொன்ன யூதித்து பைக்குள் இருந்த ஒலோபெரினின் தலையை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் வியந்து போனார்கள்.
“தலைவன் இல்லாத படை வெல்லாது. எனவே நாம் அவர்களுக்கு எதிராய் போரிட்டுச் செல்வோம். அவர்களுடைய கூடாரத்துக்கு தொலைவில் நிற்போம். நம்மைக் காணும் அவர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள். ஓலோபெரினின் உத்தரவு கேட்டு அவன் கூடாரத்துக்குச் செல்பவர்கள் அவன் இறந்து கிடப்பதைக் கண்டு சிதறிப் போவார்கள். சிதறும் அவர்களை நாம் வெல்வோம்”
யூதித்தின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரயேலர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.
இஸ்ரயேலர்களை காப்பாற்றிய கடவுளை யூதித்தும், மக்களும் தொழுதனர். புகழ்ப் பாக்களைப் பாடினர்.