தினத் தந்தியில் எனது தொடர் : சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்.

 

தினத்தந்தி இளைஞர் மலரில் “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” எனும் ஒரு தன்னம்பிக்கைத் தொடர் எழுதி வருகிறேன். பல பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தாலும் தன்னம்பிக்கை தொடர்பாக “தொடர் கட்டுரை” எழுதுவது இது தான் முதல் தடவை. அதுவும் தினத்தந்தி போன்ற விரிவான வாசகர்களைக் கொண்டுள்ள பத்திரிகையில் எழுதுவதில் மகிழ்ச்சி அதிகம்.

சனிக்கிழமை தோறும் வெளியாகும் தினத்தந்தியின் இலவச இணைப்பான “இளைஞர் மலர்” இதழில் இது வருகிறது, வாய்ப்பிருந்தால் படியுங்கள். !

1. 

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானது “தயாராதல்” எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். 

ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும் உலகப் புகழ் பெற்றவர். மிகத் திறமையான ஜனாதிபதி, தலை சிறந்த தலைவர் என உலகின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய பெயரை எழுதியவர். ஒரு முறை அவர் வழக்கம் போல அசத்தலான ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் ரொம்பவே வசீகரிக்கப்பட்டான். பேச்சு முடிந்தபின் அவன் அவரிடம் கேட்டான்

“சார். ரொம்ப ரொம்ப பிரமாதமா பேசறீங்க. இதன் ரகசியத்தைச் சொல்ல முடியுமா ?”. ஆபிரகாம் லிங்கன் சிரித்துக் கொண்டே சொன்னார்

“நான் மேடையில் அரை மணி நேரம் பேசினதைத் தான் கேட்டாய். அதற்காக அரை நாள் நான் தயாரானதைப் பார்க்கவில்லையே” !

அவருடைய அந்தப் பதிலில் அடங்கியிருந்தது அவருடைய வெற்றிக்கான ரகசியம் !. “தயாராதல் ! “

ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஒவ்வோர் மேடைப்பேச்சுக்கும் முன்பும் தன்னை மிகச் சிறப்பாகத் தன்னைத் தயாரித்துக் கொள்பவர். எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கில்லாடிகளாய் இருக்க முடிவதில்லை. எனவே ஆபிரகாம் லிங்கனுக்கே தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு தான் அவருடைய உரையை வசீகரிக்கும் விதமாக மாற்றியமைக்கிறது. அந்த தயாரிப்பு தான் அவரை மேடைப் பயமின்றி பேச வைக்கிறது. அந்தத் தயாரிப்பு தான் அவரை உலகத் தலைவருக்குரிய குணாதிசயத்தோடு பணியாற்ற வைக்கிறது.

அவர் மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லா பேச்சாளர்களுடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான தயாராகும் வழிகள் அடங்கியிருக்கின்றன. கண்ணாடியின் முன் நின்று பேசுவது, வீட்டில் உள்ள நபர்களை கூட்டமாய் நினைத்து அவர்கள் முன் உரையாற்றுவது, டேப் ரிகார்டரில் ரெக்கார்ட் பண்ணிப் பழகுவது என ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவமும் சொல்லும் பாடம் ஒன்று தான். தயாராதல் மிக முக்கியம் !

 “வெற்றிக்கு மிக மிக முக்கியமான தேவை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு முக்கியத் தேவை தயாராதல் !” என்கிறார் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆர்தர் ஆஷே. வெற்றிக் கோப்பைகளுடன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடைய தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இது ! தயாரிப்பு இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் ஜொலிக்க முடியாது.

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சில நிமிட விளையாட்டுக்காக ஆண்டுக் கணக்கில் தங்களைத் தயாரித்துக் கொள்வார்கள். அந்தத் தயாரிப்பு தான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை அவர்களுடைய கையைப் பிடித்து உள்ளங்கைக்குள் வெற்றிக் கோப்பையைத் திணிக்கிறது.

தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டு பேர் மலையேறச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மலையேற்றத்துக்குரிய உபகரணங்களோடு மலையேறச் செல்கிறார். இன்னொருவர் எந்த ஒரு உபகரணமும் எடுக்காமல் மலையேறச் செல்கிறார். இது தான் தன்னம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு செயலைச் செய்யும் முன் அந்தச் செயலுக்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வது தன்னம்பிக்கையாளரின் வழக்கம். அதீத நம்பிக்கை உடையவர்களோ சரியான தயாரிப்புகள் இல்லாமல் களமிறங்குவார்கள். தயாரிப்புகள் இல்லாமல் இறங்கும் மனிதர்கள் கடைசியில் அதிர்ஷ்டத்தைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்காரருடைய வெற்றியோ முழுக்க முழுக்க அவரைச் சார்ந்தே இருக்கிறது.  !

குடும்ப வாழ்க்கையிலும் இந்த அதீத நம்பிக்கை சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உதாரணமாக, காதலிக்கும் போது தங்கள் வாழ்க்கையில் காதலிக்கும் நபரை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம், வசீகரிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஒரு காதல் கடிதத்தை எழுதவே இராத்திரி முழுதும் விழித்திருந்து பேப்பர் கிழிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது. காதல் வாழ்க்கை தென்றலாய் வீசுகிறது.

அதே நேரம், அவர்கள் திருமணத்தில் இணைந்தபின் “இனிமேல் இவர் நமக்கே” எனும் அதீத நம்பிக்கை எதையும் தயாரிக்காத ஏனோ தானோ எனும் சூழலுக்குத் தம்பதியரைத் தள்ளி விடுகிறது. வாழ்க்கை தன்னுடைய சுவாரஸ்யத்தையும், பிடிமானத்தையும் இழந்து தத்தளிக்கத் துவங்குகிறது.

எனக்கு இதெல்லாம் தெரியும் என தம்பட்டம் அடிப்பதை தன்னம்பிக்கை என பலர் நினைக்கிறார்கள். அது தன்னம்பிக்கையல்ல. தன்னம்பிக்கை வார்த்தைகளில் மிளிர்வதல்ல, அது செயல்களில் ஒளிர்வது.

சரியாய் தயாரானவன் தேர்வுக்கு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் செல்வான். அவனுடைய கண்களில் தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விடும். தயாராகாமல் ஏனோ தானோ என்று செல்பவனோ அதிர்ஷ்டத்தையும், அடுத்தவனையும் நம்பியே தேர்வு எழுதச் செல்வான். வெற்றி எப்போதுமே தயாராய் இருப்பவனுக்காய் தயாராய் இருக்கிறது !

ஒரு வெற்றிக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் தயாராய் வைத்திருக்கும் போது நமக்கு முன்னால் இருக்கும் பணி எளிதாக முடிந்து விடுகிறது. உதாரணமாக ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே எளிதான வேலை. அதே நேரம் ஒரு கால் ஊனமாய் உள்ள மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அந்த வேலை மிகக் கடினமானதாகி விடுகிறதல்லவா ? இந்த ஊனம் தன்னம்பிக்கைக்கு ஒரு வேகத் தடையையும் தந்து விடக் கூடுமல்லவா ? எனவே தயாராதல் என்பது ஒவ்வோர் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது !

ஐந்து மணி ரயிலைப் பிடிக்க நான்கு மணிக்கே கிளம்புவது ரொம்ப எளிதான வேலை. ஆனால் அதே ரயிலைப் பிடிக்க ரொம்பவே தாமதமாய்க் கிளம்பும் சூழலை நினைத்துப் பாருங்கள். எத்தனை பரபரப்பு, எவ்வளவு கஷ்டம் ! சரியாய்த் திட்டமிடுதல், சரியாகத் தயாராதல் இவை இல்லாவிடில் தேவையற்ற மன அழுத்தம் நம் முதுகில் ஏறி அமர்ந்து விடுகிறது. அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது.

சிலர் வேலையில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றி வானில் வட்டமிடுவார்கள். அதற்குக் காரணம் சிறப்பான திட்டமிடுதலும், அதற்காகத் தயாராவதும் தான். வந்தோமா, போனோமா என்று இருப்பவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்வதில்லை. அவர்கள் காற்றில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள். எப்போதும் நிலத்திலுள்ள கயிறோடு கட்டப்பட்டு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு  இலக்கு இருப்பதில்லை. எனவே அவர்களால் எந்தத் திசையில் பறக்க வேண்டுமென முடிவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சொந்தமாகச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே சுயமாக செயல்பட முடிவதில்லை. அவர்கள் எப்போதும் இன்னொருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.

திட்டமிட்டுப் பறப்பவர்கள் கழுகைப் போன்றவர்கள். அவர்களுடைய சிறகுகள் அவர்களுக்கு வலுவூட்டும். அவர்களுடைய பார்வை அவர்களுக்குத் திசைகளைக் காட்டும். அவர்களுடைய பயணம் அவர்கள் திட்டமிட்ட திசையில் நடக்கும். அவர்களுடைய வெற்றியையோ, தோல்வியையோ இன்னொருவர் நிர்ணயிக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை மொத்தத்தில் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

வெற்றியின் ரகசியங்களில் ஒன்று இது தான். வெற்றி என்பதைப் பெற ஏதேதோ வேண்டுமென நாமாகவே கருதிக் கொள்கிறோம். ஆனால் சில வேளைகளில் வெற்றிக்காக சரியான திட்டமிடுதலும், தயாரித்தலுமே போதுமானதாக இருக்கிறது.

உட்கார்ந்து எழுதவே ஒரு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார் ஒரு எழுத்தாளர். வெளியே உறைய வைக்கும் குளிர். கையில் போதுமான அளவு பணம் இல்லை. ஒரே ஒரு காபி வாங்கிக் கொண்டு அந்த காபி ஷாப்பில் பல மணிநேரம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாவலுக்கான முயற்சியில் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தத் தயாரிப்பு தான் அந்த எழுத்தாளரை உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக்கியது. இன்று அவருடைய நாவலுக்காய் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே கடைகளில் நிரம்பி விடுகிறது கூட்டம். அவர்தான் ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.ஜே ரௌலிங்கர்.

வெற்றியை நோக்கிய பயணத்தில் இந்த தயாரிப்பு ரொம்பவே அவசியம். இன்றைக்கு வெற்றியாளர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும்போது புலப்படும் விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்கள் இலட்சியத்துக்காக தங்களைத் தயாரித்துக் கொண்டார்கள்.

அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிடம் ஒருமுறை கேட்டார்கள் “உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ?”

“வேறொன்றுமில்லை, சிறப்பாகத் தயாராவதே எனது வெற்றியின் ரகசியம்” என்று பளிச் எனப் பதிலளித்தார் அவர்.

தயாராதல் வெற்றியின் ரகசியம்

தயாராவோம் வெற்றிகள் அவசியம்.

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

குழந்தைகளுக்கான செல்போன் !!! 2G அல்ல 2LKG !

“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.

“பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லாமல் சொல்கின்றன மேலை நாடுகளில் நடக்கும் சமாச்சாரங்கள்.

நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !

நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான் மேலை நாடுகளில் இப்போதைய ஹாட் டாப்பிக்.

எதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள்.

பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,  இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.

இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.

அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.

போதாக்குறைக்கு,  “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.

மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம்.

“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !

இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ?

உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு !

அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும்.

முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.

விட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது.

ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர்.

குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.

 

நன்றி : அவள் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !

“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”

“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.

லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி.

அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.

சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி.

கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !

சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும்.  சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.

பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?

பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர்.

2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.

வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர்.

இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.

நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள். 

இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.

எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன. 

கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர்.

அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.

கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன. 

கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.

நன்றி : பெண்ணே நீ

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்

இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் ! 

இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.

எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட்  சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும். 

சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை. விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.

உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை  வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.

ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.

கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.

டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” – மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.

நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.

டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.

நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான்.  உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.

ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம்.  ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.

ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.

மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து ! 

இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.

இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.

கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !

நன்றி : அவள் விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

 

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

  1. உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !
  2. 

  3. பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
  4. என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
  5. அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
  6. உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
  7. “சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
  8. அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி ! 
  9. நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
  10. ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
  11.  நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
  12. திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !  
  13. பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள்  நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.

கடுப்பாகாதீங்க ஆண்களே…..  பெண்களுக்கும் இது பொருந்தும் ! 

நன்றி : விகடன்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள்

1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.

2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.

5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.

6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !

7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.

8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.

9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.

10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.

11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !

12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.

13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.

14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.

15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.

16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !

17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.

18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?

19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.

20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.

21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !

22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.

23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.

24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.

25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.

26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !

27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.

28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.

29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !

30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !

31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.

32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.

33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !

34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !

35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.

37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.

38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.

 

என்றும் இளமை தரும் டெலோமியர் !!! ஜூவி கட்டுரை

கேன்சர் என்றாலே உலகம் பதறும். அதன் விளைவுகள் அப்படி. உலகில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் புற்றுநோயினால் வருகிறது. 2007ம் ஆண்டில் மட்டும் கேன்சரால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 7.6 மில்லியன் ! கேன்சருக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்தால், பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் கண்டுபிடிப்புக்காக உலகம் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு நீரூற்றும் கண்டுபிடிப்பு தான் இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது !

இந்த 1.4 மில்லியன் டாலர் விருதைக் கர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்கள் மூன்று பேர். எலிசபெத் பிளாக்பர்ன், காரல் கிரைடர் மற்றும் ஜேக் ஸாஸ்டெக். இவர்களில் முதல் இருவர் பெண்கள். 1901ம் ஆண்டு துவங்கி இதுவரை 800 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெண்கள் வெறும் 36 பேர் மட்டுமே ! இரண்டு பெண்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வதும் இது தான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு. சரி, இவர்களுடைய கண்டுபிடிப்பு தான் என்ன ?

குரோமோசோம்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். செல்களிலுள்ள டி.என்.ஏ மற்றும் புரோட்டீனின் ஒழுங்கான வடிவம் என அதைச் சொல்லலாம். குரோமா என்றால் உடல், சோமா என்றால் நிறம் என்கிறது கிரேக்க மொழி. குரோமோசோம்களைக் குறித்து வெளியான ஆராய்ச்சிகள் எக்கச்சக்கம். அந்த குரோமோசோமின் கடைசியில் டெலோமியர் எனும் ஒரு பகுதி இருக்கிறது. விஞ்ஞானிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத பகுதி. ஆனால் அது தான் குரோமோசோம்களைக் கண்ட்ரோல் செய்யும் ரிமோட் என்பது தான் இந்தக் கண்டுபிடிப்பு.

ஒரு செல் இரண்டாகப் பிரிவது உடலின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. அப்படி செல்கள் இரண்டாகப் பிரியும் போது அதிலுள்ள குரோமோசோம்களின் மாறாத பிரதி இரண்டு செல்களிலும் இருக்கும். இந்த வால்பகுதியான டெலோமியர் அப்படியல்ல. செல் பிரியும்போதெல்லாம் இந்த டெலோமியரின் நீளம் குறைந்தால் உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும். ஒருவேளை இந்த டெலோமியர் எப்போதுமே ஒரே நீளத்தில் இருந்தால் ? வேறென்ன என்றும் இளமை தான். கான்சர் செல்களில் இந்த பிரச்சினை தான் வருகிறது. டெலோமியர் எப்போதுமே நீளம் குறைவதில்லை. கான்சரும் அழிவதில்லை.

இந்த டெலோமியரின் சூட்சுமத்தைத் தான் இந்த விஞ்ஞானிகள் உடைத்திருக்கிறார்கள். குரோமோசோம்களின் நீளத்தை நிர்ணயிப்பது டெலோமியர் தான் என்பதில் துவங்கி, இந்த டெலோமியர் எப்படி இயங்குகிறது, என்னென்ன செய்கிறது என்பதையெல்லாம் விலாவரியாக அறிந்து தெளிந்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு என்ஸைம் தான் குரோமோசோம்களை அச்சு அசலாகப் பிரதியெடுக்கிறது. அதைக் கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் ஹைலைட். அந்த என்சைமுக்கு இவர்கள் இட்ட பெயர் டெலோமிரேஸ் !

எலிசபெத் பிளாக்பர்ன் னின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. 1975லேயே அமெரிக்கா போய் செட்டிலாகி, அமெரிக்கப் பிரஜையும் ஆகி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். டெலோமிரஸ் பற்றிய முதல் அறிக்கையை அமெரிக்காவில் 1980லேயே வெளியிட்டு விருது வாங்கியவர் இவர். அந்த ஆராய்ச்சியில் படிப்படியான வளர்ச்சி தான் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று நோபல் பரிசை அவருக்குத் தந்திருக்கிறது.

பிறப்பால் ஆஸ்திரேலியன் என்பதால் ஆஸ்திரேலிய பிரதமர் துவங்கி, கடைகோடி ஆஸ்திரேலியர் வரை எலிசபெத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். 61 வயதானாலும் இன்னும் அவர் ஒரு ஆஸ்திரேலியன் தான் என சிலாகிக்கின்றனர். இருக்காதா பின்னே, ஆஸ்திரேலியாவிலிருந்து நோபல் பரிசு வாங்கியிருக்கும் முதல் பெண்மணியல்லவா அவர். போகட்டும், கல்பனா சாவ்லாவை நாம் கொண்டாடவில்லையா ?

ஜான் ஹாப்கின் பல்கலைக்கழக காரல் கிரைடருக்கு 48 வயதாகிறது. இவரும் நீண்ட நெடிய வருடங்களாக பிளாக்பெர்ன்னுடன் இந்த ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். விருது கிடைத்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளிவே வரவில்லை. 

ஜேக் ஸாஸ்டெக் அமெரிக்காவின் பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார். 56 வயதாகும் இவர் 1980ம் ஆண்டு முதலே எலிசபெத் பிளாக்பெர்னுடன் இந்த ஆராய்ச்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்.

ஸ்வீடனின் கரோலின்கா விலுள்ள நோபல் குழுவினர் நோபல் பரிசை வழங்கினார்கள். இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது. செல்களைக் குறித்த நமது பல தலைமுறை அறிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமது ஆராய்ச்சிகள் பலவற்றை கலைத்துப் போட்டு புதிதாய் துவங்க வைத்திருக்கிறது. மருத்துவத்தின் பல்வேறு சன்னல்களையும், கதவுகளையும் திறந்து விட்ட மகத்தான கண்டுபிடிப்பு இது. என நோபல் புகழாரம் சூட்டினார்கள்.

கான்சர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரும் இப்போது பழைய ஆராய்ச்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு டெலோமிரஸைக் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். டெலோமியரைக் இஷ்டப்படி ஆட்டுவிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பதே இப்போதைய ஹாட் ஆராய்ச்சி. 

காரணம் இருக்கிறது.   கான்சர் செல்களிலுள்ள டெலோமியரை அழித்தால் கான்சர் செல் அழியும். அவ்வளவு தான். கான்சருக்கான மருந்து ரெடி. அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமலேயே கான்சர் செல்கள் அழிந்து போகும் ! அதையே உல்டாவாக்கினால் இளமைக்கான மருந்து தயார். நல்ல செல்களிலுள்ள டெலோமியர் நீளம் குறையாமல் பாதுகாத்தால் போதும். உடல் வயதாகாமல் அப்படியே இருக்கும். முக்கியமாக, வாழும் காலம் முழுதும் ஆரோக்கியமாய் வாழலாம். 

அனீமியா, அல்சீமர், தோல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான வேர் இந்த டெலோமியரில் தான் இருக்கிறது என்கின்றனர். உலகில் உள்ள கொடிய நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு டெலோமியரின் சிதைவே காரணமாய் இருக்கலாம் என்பது இப்போதைய மருத்துவ உலகின் நம்பிக்கை. இன்னும் சொல்லப் போனால் மன வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும் டெலோமியருக்கும் தொடர்பு இருக்கிறதாம். “மன அழுத்தத்தில் இருக்காதே, நோய் வரும், இளமை போகும்” என்பார்கள். அதன் காரணமும் டெலோமியர் தானாம். மன அழுத்தம் டெலோமியரைச் சிதைத்து உடலை நோயிலும், முதுமையிலும் தள்ளி விடுகிறது.

உலகெங்குமுள்ள ஆராய்ச்சியாளர்களையும், மருத்துவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இது அஸ்திவாரத்தையே ஆட்டிப் போட்ட அட்டகாச ஆராய்ச்சி என்கிறார் பேராசிரியர் ரோஜர் ரெடல். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்.

டெலோமியர் என்பது நமது ஷூ லேஸின் முனை போல. முனை போய்விட்டால் ஷூ லேஸ் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து போகும். முனை ஷார்ப்பாக இருந்தால் ஷூலேஸ் நன்றாக இருக்கும். டெலோமியர் பக்காவாக இருந்தால் செல் ஆரோக்கியமாக, இளமையாக இருக்கும். என அறிவியல் தெரியாதவர்களுக்கு இதை விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நோபல் பரிசு எனும் அங்கீகாரம் இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் நடத்த உதவும். உலகை உலுக்கும் நோய்களுக்கு இந்த நோபல் ஒரு முடிவைத் தர வேண்டும் என்பதே உங்ளைப் போல எனது விருப்பமும்

நன்றி : ஜூ.வி

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

(பிரெஞ்ச்) நாவல் : குட்டி இளவரசன்.

1943ல் வெளியான பிரஞ்ச் நாவலான லே பெட்டிட் பிரின்ஸ் நாவலின் தமிழ்ப்பதிப்பான குட்டி இளவரசன் நாவலைப் படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள் என்று சொல்வதற்காகவே இந்தப் பதிவு !பெரியவர்களின் உதாசீனத்தால் சின்ன வயதிலேயே ஓவியம் வரையும் ஆர்வத்தை விட்டு விட்டவன் தான் நமது நாயகன். மலைப்பாம்பு யானையை விழுங்கும் அவனுடைய ஓவியத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாத ஆதங்கம் அவனுக்கு. ஓவியத்தை விட்டு விட்டு  பைலட் ஆக ஆசைப்படுகிறான். அவன் ஓட்டிச் செல்லும் விமானமோ சகாரா பாலைவனத்தில் விழுந்து விடுகிறது. அங்கே ஒரு சிறுவனைச் சந்திக்கிறான். அவன் வேறு கிரகத்திலிருந்து இங்கே வந்திருப்பவன்.

சிறுவனின் கிரகமோ ரொம்பச் சின்னது. ரொம்பச் சின்னதாக  மூன்று எரிமலைகளும், ஒரு ரோஜாப்பூவும், பவோபாப் மரங்களும் தான் அந்தக் கிரகத்தின் சொத்துக்கள். ரோஜா மீதான  அவனுடைய காதல் அபரிமிதமானது. பவோபாப் மரங்கள் குறித்த கவலைகளும் அவனுக்கு நிறைய இருக்கிறது.

தனது கிரகத்திலிருந்து பல கிரகங்கள் சுற்றி விட்டு பூமிக்கு வருகிறான். பூமிக்கு வரும் முன் அவன் சந்திக்கும் ஆறு கிரகங்களுமே ரொம்பச் சின்னவை. எல்லாமே ஒற்றை நபர் கிரகங்கள் !

முதல் கிரகத்தில் ஒரு அரசன் இருக்கிறான். கட்டளையினால் நட்சத்திரங்களைக் கூட பணிய வைக்கும் வல்லமை அவனுக்கு உண்டு. என்ன செய்ய ? அவனுடைய நாட்டில் அவனுடைய கட்டளைகளைக் கேட்பதற்கு ஆட்கள் தான் இல்லை.

இரண்டாவது கிரகத்தில் இருக்கும் மனிதன் ரொம்பவே தற்பெருமைக்காரன். யாராவது அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனை யாரும் குற்றம் சொன்னதேயில்லை, காரணம் அந்தக் கிரகத்தில் அவன் மட்டும் தான்.

மூன்றாவது கிரகத்தில் இருந்தவன் குடிகாரன். ஏன் குடிக்கிறோம் என்பதையே தெரியாத குடிகாரன். ஐயோ குடிகாரனாகி விட்டோமே எனும் கவலையை மறக்கவும் குடித்துக் கொண்டிருக்கிறான்.

நான்காவது கிரகத்தில் ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவருடைய வேலை பொழுதெல்லாம் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைக் கணக்கு பார்ப்பது தான். அதை வைத்துக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் அவன் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கிறார்.

அடுத்த கிரகத்தில் தெருவிளக்கு எரியவைக்கும் நபர் மட்டுமே இருக்கிறார். அந்தக் கிரகமோ நிமிடத்துக்கு ஒருமுறை பகல் இரவு என மாறி மாறி வருகிறது. அதனால் அவரும் நிமிடத்துக்கு ஒரு முறை லைட்டை போட்டுப் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. ஆளில்லாத கிரகத்தில் எதுக்கு லைட் போடணும், அணைக்கணும் எனும் கேள்வி அவனிடம் இல்லை.

அடுத்த கிரகத்தில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். தகவல்கள் புள்ளி விவரங்கள் போன்றவற்றில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம்.

ஏழாவதாக வந்த கிராமம் தான் பூமி. பூமியில் கதாநாயகனிடம் சிறுவன் ஓவியம் வரையச் சொல்கிறான். ஒரு ஆடு வரைய வேண்டும் என்பது சிறுவனின் விருப்பம். ஆனால் வரையும் ஆடுகள் எதுவும் சிறுவனைக் கவரவில்லை. எனவே அவர் ஒரு பெட்டியை வரைகிறார். அதற்குள் ஆடு இருக்கிறது என்று சொல்ல, சிறுவனுக்குப் பரம திருப்தி. அவன் தனது கிரகம் குறித்துப் பேசுகிறான். தனது ரோஜாப்பூ பற்றி, போவபாப் மரங்கள் பற்றி பேசுகிறான்.

கடைசியில் பாலைவனத்தில் தண்ணீர் தேடித் தண்ணீர் தேடி, ஒரு கிணறை அடைகிறார்கள். ஒரு பாம்பு சிறுவனைக் கடிக்கிறது,  சிறுவன் தனது கிராமத்துக்குப் போய் விடுகிறான்.

Antoine de Saint-Exupery எழுதிய இந்த நாவல் உலகெங்கும் 190 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எட்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. சகாரா பாலைவனத்தில் உண்மையாகவே விமான விபத்தில் சிக்கிக் கொண்ட எழுத்தாளரின் அனுபவங்களின் வெப்பம் எழுத்துகளில் உறைந்திருக்கிறது. அவருடைய மரணத்துக்கு முந்தைய வருடத்தில் 1943ல் வெளியான இந்த நூல் அவருடைய புகழ் மரணமடையாமலிருப்பதை உறுதி செய்கிறது. 

சிறுவர்களின் உலகத்துக்குள் பெரியவர்களால் புக முடியவில்லை. பெரியவர்களுடைய உலகமோ சிறுவர்களை வசீகரிப்பதில்லை. பெரியவர்கள் எல்லாவற்றையுமே அறிவு ரீதியாகப் பார்க்கிறார்கள். அல்லது பொருளாதார ரீதியாகப் பார்க்கிறார்கள். ஆனால் சிறுவர்களின் உலகமோ எல்லாவற்றையும் உணர்வு ரீதியாகப் பார்க்கிறது. சிறுவர்களின் பார்வை எல்லோருக்கும் வந்தால் உலகம் எத்துணை இனிமையாய் இருக்கும் எனும் ஏக்கம் கலந்த கேள்வியை இந்த நாவல் தன்னுள்ளே இறுக்கமாய்ப் பொதிந்து வைத்திருக்கிறது.

எனக்கு இந்த நாவலில் பிடித்த விஷயங்கள் சில உண்டு. ஒன்று இதன் எளிமை. பிரெஞ்ச் மூலத்திலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம், ச.மதன கல்யாணி ஆகியோர் மொழி பெயர்த்திருக்கின்றனர். சுவாரஸ்யமான நடை.

ரொம்பவே சின்னப் புத்தகம். நாவல் என்றால் விஷ்ணுபுரம் ரேஞ்சுக்கு தலையணை சைஸில் இருக்கவேண்டும். ஏகப்பட்ட தத்துவ மூட்டைகளோ, கதாபாத்திரங்களோ இருந்தாகவேண்டும் எனும் தப்பான நம்பிக்கைகளை உதறித்தள்ளியிருப்பது பெரிய பலம். குறிப்பாக என்னைப் போன்ற “ஃபாஸ்ட் புட்” வாசகர்களுக்கு நிறைவளிக்கும் நூல். சிற்றிதழில் வரும் ஒரு பக்கக் கவிதையை வாசித்துப் புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலைப் படித்து விடலாம் என்பது ரொம்பப் பிடித்தமான விஷயம் !

வீட்டின் வரவேற்பறையில் ஒரு கையில் சூடான தேனீரையும், இன்னொரு கையில் குட்டி இளவரசனையும் கொடுத்த நண்பர் சுந்தரபுத்தனுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லாமல் போனால் என்னை எக்சுபெரியே மன்னிக்க மாட்டார் !

மறுவாசிப்பில் இருக்கிறேன் !…

பிடித்திருந்தால் வாக்களியுங்கள் 

முதுகு வலிக்குதா ? இது உதவலாம் !

முன்பெல்லாம் வழுக்கை விழும் பருவத்தில் தான் முதுகு வலி மெல்லமாய் எட்டிப் பார்க்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. அரும்பு மீசை எட்டிப்பார்க்கும் வயதிலேயே முதுகில் வலியும் ஒட்டிக் கொண்டு விடுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையே அதற்குரிய பெருமையைப் பெற்றுக் கொள்கிறது. முன்பெல்லாம் பனையேறினாலும் தடுமாறாத தலைமுறை நிமிர்ந்து நின்றது. இன்றோ, படியேறினாலே தடுமாறும் தலைமுறையே கண்ணுக்கு முன்னால் நிற்கிறது.

நடக்க விரும்பாத மனநிலையும், உடற்பயிற்சி செய்ய நேரம் கண்டு பிடிக்கத் திணறும் அலுவல் சூழலும் வலிகளை முதுகில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது. உலக அளவில் 80 விழுக்காடு மக்களுக்கு வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் முதுகு வலி வந்துவிடுகிறது என்கிறது புள்ளி விவரம் ஒன்று.

சரி, இந்த முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்யலாம் ?

  1.  உட்காரும்போதும் நடக்கும் போதும் சரியான நிமிர்ந்த நிலையில் இருந்தால் முதுகு வலியை பெருமளவு தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர். அதிலும் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய அலுவலில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லையேல் முதுகு வலி வெகு நிச்சயம். 

  2. உடற்பயிற்சி கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, வலுவான உடலுக்கும், வலியில்லாத முதுகுக்கும் உத்தரவாதம். நடப்பது, ஓடுவது போன்ற எளிய உடற்பயிற்சிகளும், யோகா போன்றவையும் முதுகு வலியை விரட்டும் நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுங்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 

  3.  தொப்பையை விரட்டுங்கள். தொப்பை முதுகு வலியின் நெருங்கிய நண்பன். உடலில் எடை அதிகரிக்க அதிகரிக்க அது முதுகை அழுத்தி அதிக வலியை முதுகுக்கு வழங்குகிறது. உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே முதுகு வலி கொஞ்சம் அச்சத்துடன் தான் உங்களை நெருங்கும். 

  4. நீச்சல் பழகுங்கள். முதுகு வலியை ஓட ஓட விரட்டும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கும், உடற்பயிற்சியும் நீச்சலே. நீச்சல் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் ஏற்ற மிகச் சிறப்பான உடற்பயிற்சி. 

  5. அருகிலுள்ள இடங்களுக்கும், கடைகளுக்கும் நடந்து செல்ல முனையுங்கள். அல்லது மிதி வண்டி ஓட்டுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்கும். வீட்டில் செல்லப் பிராணி வைத்திருக்கிறீர்களா ? அதனுடன் ஓடியாடி விளையாடுங்கள். அதுவும் உங்களுக்குப் பயனளிக்கும். 

  6. நீண்டநேரம் நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நின்றேயாக வேண்டிய கட்டாயமெனில் சரியான வகையில் நில்லுங்கள். வளைந்து நெளிந்து நின்றால் முதுகு வலி விரைந்தோடி வரும். 

  7. உங்கள் வீடுகளிலுள்ள இருக்கைகள் முதுகுக்கு கேடயமாக இருக்க வேண்டும். அதிக சாய்வாகவோ, முதுகு பக்கமே இல்லாததாகவோ இருந்தால் சிக்கல் தேடி வரும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள். 

  8. இருக்கைகளின் மிக ஓரமாகவோ, மிகவும் உள்வாங்கியோ அமராதீர்கள். கால்களை சரியானபடி தரையில் வையுங்கள். உங்கள் பாதங்களுக்கு இடையே உள்ள தூரம் உங்கள் தோளின் அளவாய் இருப்பதே சிறந்தது. 

  9. அவ்வப்போது உங்கள் முதுகை பின்னோக்கி வளைத்து பயிற்சி செய்யுங்கள். எப்போதும் முன்னோக்கியே வளையும் முதுகுக்கு அது மிகவும் தேவையானது. 

  10. படுக்கை இன்னொரு முக்கியமான விஷயம். மிகவும் அதிக சொகுசு வேண்டும் என நீங்கள் படுக்கைகளைத் தேர்ந்தெடுத்தால் இடுக்கண்ணையும் சேர்ந்தே தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது பொருள். முதுகை நேராகப் பிடிக்கக் கூடிய படுக்கைகளே பாதுகாப்பானவை. படுக்கையை விட்டு எழும்பும் போதும் ஒருக்களித்து கைகளை ஊன்றியே எழும்புங்கள். முதுகை வளைத்து எழும்பாதீர்கள். 

  11. உங்கள் தலையணையைப் பாருங்கள். அளவாய் இருக்கட்டும் உங்கள் தலையணை அதிக உயரமாகவோ, ஒழுங்கற்றதாகவோ இருந்தால் முதுகு வலி வரலாம். 

  12. அதிக எடையுள்ள பொருட்களை தூக்கிச் சுமப்பதைத் தவிர்ப்பது முதுகுக்கு நல்லது. எடையுள்ள பொருட்களைத் தூக்கும் போது அமர்ந்த நிலையில், முதுகு நேராக இருக்கும் படி தூக்க வேண்டும். 

  13. புகைப்பதை நிறுத்துங்கள். புகை பிடிப்பதால் உடலிலுள்ள உயிர்வழியின் அளவு குறைகிறது. அது முதுகு வலியையும் தந்து விடும்.

இவை தவிர உடலிலுள்ள குறைபாடுகளின் காரணமாகக் கூட முதுகு வலி வரக் கூடும்.

அதிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடலிலுள்ள கால்சியம் குறைபாடு தன் வேலையைக் காட்டி மூட்டு வலிகளுக்கும், முதுகு வலிகளுக்கும் காரணமாகி விடுகிறது.

எனவே எல்லா பயிற்சிகளையும் தவறாமல் கடைபிடித்தும் முதுகு வலி வருகிறதே என நினைப்பவர்கள் யாரேனும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

 

30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் ?!

இன்னும் ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கக் கூடாது. முதல்ல லைஃப்ல செட்டில் ஆயிடணும். சின்னதா ஒரு அப்பார்ட்மெண்டாவது வாங்கணும். அப்புறம் தான் குழந்தையைப் பற்றி யோசிக்கணும். இது தான் பெரும்பாலான இளசுகளின் சிந்தனை. முன்பெல்லாம் கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம் கையில் குழந்தை இல்லையென்றால் கொஞ்சம் நக்கலாய்ப் பார்ப்பார்கள். இப்போ நிலமை தலை கீழ். “என்னடா அதுக்குள்ள அப்பாவாயிட்டே” என கிண்டல் தான் வரும்.

திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல் வைத்துக் கொள்ளத் தான் பலரும் விரும்புகிறார்கள். லைஃபை என்ஜாய் பண்ணணும், சம்பாதிக்கணும், ஹாயா இருக்கணும். இதை இளம் வயதினர் தங்கள் தேசிய கீதமாகவே ஆக்கிவிட்டார்கள். இப்படி திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அப்புறம் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவது ரொம்பவே ஆபத்து என எச்சரிக்கின்றன அடுக்கடுக்காய் வரும் ஆராய்ச்சிகள்.

இளம் வயதில் அப்பாவாகி விடுபவர்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன. வயதான பின் குழந்தை பெற்றுக் கொண்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடுகிறது. அவர்கள் நோஞ்சான்களாகவோ, டல்லடிக்கும் பிள்ளைகளாகவோ வளர்கிறார்கள். அவர்களுடைய மூளை வளர்ச்சியிலும், உடல் வளர்ச்சியிலும் ஒழுங்கற்ற தன்மை வந்து விடுகிறது. எனும் நிஜம் திகைப்பூட்டுகிறது.

இதைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய களமிறங்கியது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். அதனுடன் கைகோர்த்துக் கொண்டது இங்கிலாந்தின் கோபன்ஹாகன் மருத்துவமனை. இதற்கு நிதியுதவி செய்தது வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பும், டானிஷ் புற்று நோய் குழுவும்.

அவர்கள் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சிகரமானது. மருத்துவ உலகில் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பல்வேறு நோய்களுக்கான மர்ம முடிச்சை அது அவிழ்த்திருக்கிறது. அதாவது ஆண்கள் வயதாகும் போது அவர்களுக்கு பெனிங் விரை புற்றுநோய் எனும் ஒரு நோய் வந்து விடுகிறது. இந்த நோயை ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ் என்கிறது மருத்துவம். இது ஆபத்தான புற்று நோய் என்று அலறாதீர்கள். இது இருப்பதே கூட பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை.

அமைதியாக குட்டிக் குட்டியாக இருக்கும் இந்த புற்று நோய் அணுக்கள் ஜெம் செல்களில் பாதிப்பை உருவாக்கி விடுகின்றன. இந்த ஜெம் செல்கள் தான் உயிரணுக்களை உருவாக்க வேண்டும். அப்படி அவை உயிரணுக்களை உருவாக்கும் போது இந்த நோயின் தாக்கமும் உயிரணுவில் பதிவாகி விடுகிறது. அந்த பாதிப்பு பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏக்களில் சைலண்டாய் போய் அமர்ந்து கொள்கிறது. குழந்தை வளர வளர இந்த டி.என்.ஏ தனது சுய ரூபத்தைக் காட்டுகிறது. இது தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியில் விரும்பத் தகாத மாற்றங்கள் உருவாகக் காரணம். குழந்தை இறந்தே பிறப்பதற்கும் கூட இது ஒரு காரணமாகி விடுகிறது.

மிகச் சிறிய துணிக்கைகளாக இந்த புற்று நோய் ஆரம்பமாகிறது. வயதாக வயதாக இந்த செல்கள் பலுகிப் பெருகுகின்றன. விளைவு ? உயிரணுக்களும் அதிக அளவில் பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. கடைசியில் இந்த உயிரணுக்களால் உருவாகும் குழந்தைகள் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றன. வயதான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில பொதுவான நோய்கள் வர இதுதான் காரணம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ வில்கீ. பிறவிச் சிக்கல்களுக்கும் விரை புற்று நோய்க்கும் இடையேயான தொடர்பை விளக்கும் முதல் ஆராய்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த பாதிப்பினால் வரும் நோய்களின் பட்டியல் அதிர்ச்சியூட்டுகிறது. அக்கோண்ரோபிளாசியா எனப்படும் நோய் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதித்து குள்ளமாக்கி விடுகிறது. அபெர்ட் எனப்படும் நோய் ஒழுங்கற்ற முகம், ஒழுங்கற்ற கை, கால்களைக் குழந்தைக்குத் தந்து விடுகிறது.  நூனன் சிண்ட்ரோம் எனப்படும் நோய் குழந்தைகளை குறுகிய கழுத்து, கோணலான முகம், கூடு கட்டும் நெஞ்சு என ஊனமாக்கி விடுகிறது. கேஸ்டிலோ சிண்ட்ரோம் எனப்படும் நோய் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற தோல், வலுவற்ற மூட்டுகள், சமநிலையற்ற ஹார்மோன் வளர்ச்சி என ஏகப்பட்ட சிக்கல்கள். லேட்டாக குழந்தை பெற்றுக் கொள்வது எனும் சிம்பிள் மேட்டர் தான் இத்தகைய அச்சுறுத்தும் நோய்களுக்கெல்லாம் காரணம் என்பது தான் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது. 

நேச்சர் ஜெனடிக்ஸ் எனும் புத்தகம் இந்த ஆராய்ச்சியின் முழு தகவல்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்போது இந்த ஆராய்ச்சி மேலும் சில நோய்களின் மூலத்தை அறிய களமிறங்கியிருக்கிறது. அதில் முக்கியமான மூன்று நோய்கள் ஆட்டிஸ்ம், ஸ்கிட்ஸேப்ரேனியா மற்றும் மார்பகப் புற்று நோய்.

ஆட்டிஸ்ம் ( autism) என்பது  மூளையைத் தாக்கும் நோய். இந்த நோய் வரும் குழந்தைகள் சுமார் மூன்று வயது வரை வெகு சாதாரணமாய் இருப்பார்கள். அதன் பின் குழந்தையின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரியும். இத்தகைய குழந்தைகளிடம் வந்து சேரும் பிரச்சினைகள் கவனச் சிதைவு, ஒரே போன்ற செயல்களைச் செய்து கொண்டே இருப்பது, உற்சாகம் இல்லாமை, பேசுவதில் பிரச்சினை போன்றவை. இந்தக் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்தவும் செய்வார்கள். 

ஸ்கிட்ஸேப்ரேனியா (Schizophrenia) என்பது மூளையின் செயல்பாடுகளில் இயல்பற்ற நிலையை உருவாக்கும் ஒரு நோய். இந்த நோய் வந்த குழந்தைகள் எதையெதையோ பிதற்றுவார்கள், ஏதேதோ கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய சிந்தனை, பழக்கம் எல்லாவற்றிலும் பளிச் என வேறுபாடு தெரியும். இந்த நோய்கள் வரக் காரணம் இந்த ஸ்பெரோமைட்டிக் செமினோமாஸ்  அல்லது இது போன்ற வேறு ஏதோ ஒன்று என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. 

முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.

இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதே நல்லது. குறிப்பாக உயிரணுக்களின் இயக்கமும், வலிமையும் இளமையில் ஆரோக்கியமாக இருக்கின்றன. எனவே குழந்தை பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது, பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. வயதான ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமாகக் குறைகின்றன. நவீன தம்பதியரில் ஐந்தில் ஒரு தம்பதியருக்கு கருத்தரிப்பதில் தாமதம் நிலவுகிறது என்பது அதிர்ச்சிகர உண்மை!.

வாழ்க்கையில் பணமும் அந்தஸ்தும் முன்னிருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டால், குடும்ப ஆனந்தம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டு விடும். இந்த கசப்பான உண்மையையே இந்த ஆராய்ச்சிகள் அதிர்ச்சியுடன் விவரிக்கின்றன.

நன்றி : ஜூனியர் விகடன்

 

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்