பழைய ஏற்பாட்டு மன்னர்களில் முக்கியமான ஒருவர் ஆசா. யூதா பகுதியை நாற்பத்தோரு ஆண்டுகள் எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் அவர். இத்தனை நீண்ட நெடிய காலம் அவர் ஆட்சி செய்வதற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான். அவர் கடவுளின் மீது வைத்திருந்த நம்பிக்கை !
தாவீது மன்னனைப் போல, கடவுளின் பார்வையில் நல்லதைச் செய்து வந்தார் ஆசா. கடவுளுக்கு எதிரான பாவம் இழைப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்கத் தயங்காதவராய் இருந்தார்.
அரசனானதும் முதல் வேலையாக ‘விலை ஆடவர்கள்’ எல்லாரையும் நாட்டை விட்டே துரத்தி விட்டார். விலை மகளிரைப் போல விலை ஆடவர் நாட்டை பாவத்துக்குள் அமிழ்த்தி வைத்திருந்த காலகட்டம் அது.
இரண்டாவதாக அவனுடைய மூதாதையர்கள் செய்து வைத்திருந்த வேற்று தெய்வச் சிலைகளையெல்லாம் அகற்றினான். பரம்பரை பரம்பரையாய் நடக்கிறது என கடவுள் சொல்லாத வழக்கங்களை அவன் பின்பற்றவில்லை. !
பார்த்தான், அவனுடைய தாய் மாக்காவே அசேரா எனும் தெய்வத்துக்கு ஒரு சிலை செய்து வைத்திருந்தாள். ஆசா அதையும் விட்டு வைக்கவில்லை. அதையும் சுட்டெரித்தான். கூடவே, ‘அரச அன்னை’ எனும் பதவியில் இருந்து அவளை இறக்கினான்.கடவுளுக்கு எதிரானவர் தாயாய் இருந்தால் கூட தயை காட்டவில்லை !
கடவுளிடம் மனதை முழுதும் அர்ப்பணித்தான். தான் நேர்ந்து கொண்டவற்றை மட்டுமல்ல, தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் கூட நிறைவேற்றினான். அவனது வாழ்க்கை கடவுளின் அருளினால் அருமையாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாடு அமைதியாய் இருந்தது.
அவரிடம் ஐந்து இலட்சத்து எண்பதாயிரம் வீரர்கள் இருந்தார்கள். அப்போது எத்தியோப்பிய மன்னன் பத்து இலட்சம் வீரர்களுடனும், முன்னூறு தேர்களுடனும் படையெடுத்து வந்தான். ஆசா அசரவில்லை, கடவுளை நோக்கி மன்றாடினான்.
“ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்” என்று வேண்டினார். கடவுள் உதவிக்கு வந்தார். ஐந்து இலட்சம் வீரர்கள் பத்து இலட்சம் வீரர்களை துரத்தித் துரத்தி அடித்து அத்தனை பேரையும் கொன்றனர்.
அப்போது அசரியா என்பவர் மன்னனிடம் சென்று இறைவாக்கு உரைத்தார். “ஆசாவே ! நீங்கள் ஆண்டவரை நாடினால் அவரைக் கண்டடைவீர்கள். புறக்கணித்தால் புறக்கணிக்கப் படுவீர்கள். மனத் திடன் கொள்ளுங்கள்”
அசரியாவின் பேச்சைக் கேட்ட மன்னன் ஆசா இன்னும் மகிழ்ந்தான். தான் கைப்பற்றியிருந்த அத்தனை நாடுகளிலும் கடவுளுக்கு எதிராய் இருந்தவற்றையெல்லாம் அகற்றினான். எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கடவுளுக்குப் பலியிட்டான் !
“நாம் கடவுளை முழு மனதோடு நாடுவோம். ஆண்டவரை நாடாத மக்களை அழிப்போம்” என்று தீவிரமாய்ப் பேசுமளவுக்கு அவனுடைய இறை ஆர்வம் இருந்தது. அவனது ஆட்சியின் முப்பத்து ஐந்தாம் ஆண்டுவரை போர் எனும் பேச்சே வரவில்லை.
சோதனை முப்பத்து ஆறாம் ஆண்டில் வந்தது. பாசா எனும் இஸ்ரயேல் மன்னன், யூதா மன்னன் ஆசாவுக்கு எதிரானான். அதுவரை கடவுளை முழுமையாய் நாடிய ஆசா ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்தான். கடவுளின் ஆலயத்தில் இருந்த செல்வங்களையெல்லாம் எடுத்து சிரிய மன்னன் பெனதாத் க்கு அனுப்பி, அவனுடைய உதவியை நாடினான்.
அது ஆசாவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால், அவன் கடவுளை நம்பாமல் இன்னொரு மனிதனை நம்பியதால் கடவுள் கவலையடைந்தார். அப்போது “அனானி” எனும் தீர்க்கத்தரிசி மன்னனிடம் வந்தார்.
“நீ கடவுளை நம்பாமல் வேறு மன்னனை நம்பிவிட்டாய். இதை விடப் பெரிய படையை கடவுளின் அருளால் நீ வீழ்த்தவில்லையா ? உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்: எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.
அப்போதும் ஆசா சுதாரித்துக் கொள்ளவில்லை. எரிச்சலடைந்து அவரைச் சிறையிலடைத்தான்.
ஆசாவுக்கு இப்போது போர் உடலில் நிகழ்ந்தது. அவனுடைய பாதத்தில் ஒரு பெரிய புண் வந்தது. அப்போதும் அவன் கடவுளை நோக்கி மன்றாடவில்லை. மருத்துவர்களிடம் சரணடைந்தார். கடைசியில் மரணமடைந்தான்.
ஆசாவின் வாழ்க்கை நமக்கு மாபெரும் எச்சரிக்கை. கடவுளின் வழியில் நேர்மையாக நடந்த ஒரு மன்னன், அதி அற்புதங்களைக் கண்டவன் கடவுளை விட்டு விலகிப் போகும் மதியீனன் ஆகிறான்.
தனது சுயத்தின் மீது வைக்கும் நம்பிக்கை கடவுளின் அன்பை விட்டு நம்மை விலக்கி விடும். முழுமையாய் இறைவனில் சரணடைதலே மீட்பைத் தரும் என்பதையே ஆசாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது
ஃ