பைபிள் மாந்தர்கள் 10 (தினத்தந்தி) : ராகேல் – லேயா

ராகேல் – லேயா

rachel and leah

ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள். இளையவனான யாக்கோபுக்கு தந்தையின் வாழ்த்து கிடைத்ததால் மூத்த மகன் ஏசாவுக்கு கடும் கோபம். அவனைக் கொல்லத் திட்டமிடுகிறான். அதை அறிந்த பெற்றோர், அவனை தூரதேசத்திலிருக்கும் தாய்மாமனான லாபான் வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தாய்மாமன் பெண்ணைக் கல்யாணம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்பது அவர்களுடைய திட்டம்.

யாக்கோபு தாய்மானனின் ஊரை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டார். வழியில் ஒரு நாள் இரவு தூங்கும்போது ஒரு கனவு கண்டார். பூமியிலிருந்து வானத்துக்கு ஏணி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.. ஆண்டவர் அதற்கு மேல் நின்று கொண்டு “உனக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். என் பாதுகாப்பும், ஆசீர்வாதமும் எப்போதும் உனக்கு உண்டு” என வாக்களித்தார்.

உற்சாகமான யாக்கோபு தாய்மானம் ஊரை அடைந்தார். நகருக்கு அருகேயிருந்த கிணற்றில் மந்தைக்குத் தண்ணி காட்ட ஒரு அழகிய இளம் பெண் வந்தாள். அவள் பெயர் ராகேல். அவள் தான் தனது தாய்மாமன் மகள் என அறிந்ததும் யாக்கோபு அவளை கட்டியணைத்து கண்ணீர் விட்டு நடந்த விஷயங்களையெல்லாம் சொன்னார். அவள் வியந்தாள். வீட்டிலிருந்த எல்லோரும் யாக்கோபை மிக அன்புடன் வரவேற்றார்கள். யாக்கோபு அங்கே தங்கினான்.

நீ என் உறவினர் தான். இருந்தாலும், உன் வேலைக்கு என்ன சம்பளம் வேண்டும் கேள். என்றார் லாபான். “ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்கிறேன். உங்கள் மகள் ராகேலை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” என்றார் யாக்கோபு. ராகேலுக்கு ஒரு அக்கா உண்டு. அவள் அழகில் கொஞ்சம் கம்மி. பெயர் லேயா. லாபான் சம்மதித்தார்.

ஏழு ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபுக்கும் ராகேலுக்கும் திருமண விருந்து நடந்தது. அன்று இரவு முதலிரவில் ராகேலுக்குப் பதில் லேயாவை அனுப்பி வைத்தார் தந்தை. யாக்கோபு அறியவில்லை. மறு நாள் காலையில் தான் அதிர்ச்சியடைந்தார்.

“மன்னித்துக் கொள். மூத்தவள் இருக்கும்போ எப்படி இளையவளுக்குக் கல்யாணம். ஒரு ஏழு நாள் கழித்து இளையவளையும் திருமணம் செய்து கொள். ஆனால் மீண்டும் ஒரு 7 வருஷம் நீ எனக்காக உழைக்க வேண்டும்” என்றார் லாபான். யாக்கோபு சம்மதித்தான். அப்படி அக்கா தங்கை இருவரையுமே மணந்தான்.

காலங்கள் கடந்தன. “இப்போது நான் என் மனைவி பிள்ளைகளுடன் விடைபெறுகிறேன்” என்றார் யாக்கோபு. அவருக்கு 11 பிள்ளைகள் இருந்தார்கள். “கூலியாக எனக்கு மந்தையிலுள்ளவற்றில் கலப்பு நிறமோ, வரியோ, புள்ளியோ உள்ள செம்மரியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் கறுப்பு ஆட்டுக்குட்டிகள் எனக்கான ஊதியம்” என்றார். லாபான் ஒத்துக் கொண்டார். ஆனால் அன்று இரவே அத்தகைய ஆடுகளையெல்லாம் மந்தையிலிருந்து பிரித்து தூரமாய் ஒட்டிச் சென்று விட்டார்.

யாக்கோபு தளரவில்லை. புன்னை, வாதுமை மற்றும் அர்மோன் மரத்து பச்சைக் கிளைகளை வெட்டு அவற்றின் தோலை வரி வரியாய் உரித்தோ, புள்ளி புள்ளியாய் வெட்டியோ வைத்தார். ஆடுகள் பொலியும் நேரத்தில் அவற்றுக்கு முன்னே அந்தக் கொம்புகளைப் போட்டார். வலிமையான ஆடுகள் பொலியும் போதெல்லாம் அப்படியே செய்தார். அதைப் பார்த்துப் பொலிந்த ஆடுகளெல்லாம் வரியுடைய அல்லது புள்ளிகளையுடைய குட்டிகளையே ஈன்றன !

கொஞ்ச காலத்திலேயே லாபானின் சூழ்ச்சியை முறியடித்து யாக்கோபு மிகப்பெரிய மந்தைக்குச் சொந்தக்காரர் ஆனார். அந்த மந்தை லாபானின் மந்தையை விட மிகவும் வலிமையானதாகவும் ஆனது ! யாக்கோபு பின்னர் தன் சகோதரனோடு அன்பில் இணைந்தார். கடவுள் அவரை “இஸ்ரயேல்” என பெயரிட்டார். அவரிடமிருந்தே கடவுளின் பிரியத்துக்குரிய சந்ததியான இஸ்ரேல் உருவானது !.

கடவுளின் சித்தமும், திட்டங்களும் சுவாரஸ்யமானவை. யாக்கோபு இளைஞனாய் இருந்த காலத்தில் ஏமாற்றுக் காரனான இருந்தான். கடவுள் அவனை ஒரு இனத்தின் தலைவராக்க விரும்பினார். ஆனால் அதற்கு முன் யாக்கோபு சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொள்வது அவசியமானதாய் இருந்தது.

அதற்குத் தான் லாபான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இளைய மகள் என நினைத்து மூத்த மகளைத் திருமணம் செய்கிறார் யாக்கோபு. பிறரை ஏமாற்றிப் பழக்கப்பட்ட யாக்கோபு ஏமாந்து போகிறார். மீண்டும் அவரது உழைப்பு இரண்டு மடங்காகிறது ! ராகேல் – லேயாள் எனும் இரு மனைவியரிடையே மன உளைச்சல்களையும் சம்பாதிக்கிறார்.

யாக்கோபு வலிமையாய் மாறுகிறான். ஆனாலும் கடவுள் அவனை பயன்படுத்தவில்லை. காரணம் அவர் தனது சொந்த  முயற்சியினால் அனைத்தையும் சாதிக்க நினைக்கிறார். கடைசியில் அவர் கால் செயலிழந்து, முழுமையாய் வீழ்ச்சியடைகையில் முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போது தான் அவர் இஸ்ரயேல் என அழைக்கப்படுகிறார்.

லாபான், தந்திரமாய் செய்த தவறுகளுக்கெல்லாம் விளைவுகள் கிடைக்கின்றன. தவறிழைக்கும் மனிதர்கள் கடவுளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை ! அதற்கு லாபான் விதிவிலக்கல்ல.

கடவுளை முழுமையாய் நம்புகையில் அவர் நமக்கு மிகச்சிறந்த வழியைக் காட்டுகிறார். நம்மை வழிநடத்தியும் செல்கிறார். அரைகுறை மனதுடனும், நிரம்பிய சுய பலத்துடனும் வாழ்க்கையை எதிர்கொள்கையில் அவர் ஓரமாய் நின்று விடுகிறார்.

பலம் பெற வேண்டுமெனில் பலவீனனாய் மாற வேண்டும் என்பதே கடவுள் சொல்லும் பாடம் !

 

பைபிள் மாந்தர்கள் 9 (தினத்தந்தி) : இரட்டையர்கள் ஈசா – யாக்கோபு

Jacob-Blessing-Isaac

ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கிற்கு 40 வயதாக இருந்தபோது ரபேக்காவைத் திருமணம் செய்தார்.  சுமார் 19 வருடங்கள் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை. ஈசாக் உருக்கமாக செபித்தான். ரபேக்கா கர்ப்பமானாள். இரட்டைக் குழந்தைகள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கருவறையிலேயே இரண்டு பேரும் முட்டி மோதிக் கொண்டார்கள்.

ரபேக்கா ஆண்டவரிடம் கேட்டாள்.  ஆண்டவர் அவளிடம், “உன்னுடைய வயிற்றிலிருந்து இரண்டு பெரிய இனங்கள் தோன்றும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார். ரபேக்கா அமைதியானாள். பேறுகாலம் வந்தது. முதலில் ஒரு குழந்தை வெளிவந்தது. உடல் முழுக்க ரோமமும், செந்நிறமுமாக அந்தக் குழந்தை இருந்தது. இரண்டாவது குழந்தை முதல் குழந்தையின் குதிகாலைப் பிடித்துக் கொண்டே வெளிவந்தது. முதல் குழந்தைக்கு ஏசா என்றும், இரண்டாவது குழந்தைக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.

ஏசா வேட்டையில் கில்லாடி. விதவிதமாய் வேட்டையாடிக் கொண்டு வரும் உணவினால் ஈசாக்கிற்கு அவன் மீது அதிக பிரியம். யாக்கோபுவோ அமைதியாய், வீட்டைச் சுற்றி வரும் பழக்கமுடையவனாய் இருந்தான். அவன் அம்மாவின் செல்லப் பிள்ளை.

ஏசா ஒரு நாள் வேட்டையாடி களைத்துப் போய் வந்தான். அப்போது யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். “ரொம்பப் பசிக்குது கொஞ்சம் கூழ் கொடு” என்றான் ஏசா. யாக்கோபுவோ குறுக்குப் புத்தியுடன், “கூழ் தருகிறேன். உன் தலைமகனுக்குரிய உரிமையை எனக்குத் தா” என்றான். அவனும் கொடுத்தான். வெறும் ஒரு சாப்பாட்டுக்காக ஏசா தனது மூத்த மகனுக்குரிய உரிமையை இழந்தான்.

காலங்கள் உருண்டோடின. ஈசாக் வாழ்வின் இறுதி கட்டத்துக்கு வந்தார். அவருடைய கண்பார்வை மங்கியது. ஒரு நாள் அவர்  ஏசாவை அழைத்து, “ நீ போய் வேட்டையாடி எனக்கு சுவையாய் சமைத்துக் கொடு. நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார். ஏசா காட்டுக்குக் கிளம்பினான்.

இந்த உரையாடலை ரகசியமாய்க் கேட்டுக் கொண்டிருந்த ரபேக்கா அவசரம் அவசரமாய் யாக்கோபை அழைத்து விஷயத்தைச் சொன்னாள். கூடவே,, “நீ போய் நம்ம மந்தையிலிருந்து ரெண்டு கொழுத்த ஆட்டுக் குட்டியை அடித்து வா. நான் சமைத்துத் தரேன். நீ ஏசா மாதிரி போய் ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றாள்.

“அம்மா, என் உடல் ஏசா மாதிரி ரோமமா இருக்காது.. கண்டுபிடிச்சா வாழ்த்துக்குப் பதிலா சாபம் தான் கிடைக்கும்” யாக்கோபு தயங்கினார். ரபேக்கா ஊக்கமூட்டினாள். காரியங்கள் மளமளவென நடந்தன. யாக்கோபு கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகளை ரபேக்கா சமைத்தாள். கூடவே ஆட்டின் தோலை எடுத்து யாக்கோபின் கைகளில் கட்டினாள். ஏசாவின் ஆடைகளை எடுத்து யாக்கோபை உடுத்தச் செய்தாள்.

யாக்கோபு உணவுடன் தந்தையின் அருகே சென்றார். “அப்பா ஏசா வந்திருக்கிறேன்” யாக்கோபு சொன்னார். “ஏசாவா, அதற்குள் வேட்டை முடிந்து விட்டதா.. யாக்கோபின் குரல் போல இருக்கிறதே” ஈசாக் சந்தேகித்தார்.. “நான் ஏசா தான்” யாக்கோபு மீண்டும் பொய் சொன்னர். ஈசாக் அவனை அருகே அழைத்து கைகளைத் தடவினார். ம்ம்… ரோமம் அடர்ந்த கைகள். நெருங்கி அவனுடைய ஆடையின் வாசனையை நுகர்ந்தார். ம்ம்… ஏசாயின் வாசனை. இப்போது ஈசாக் முழுமையாய் ஏமாந்தார். தனது கையை யாக்கோபின் தலையில் வைத்தார். நாடுகளுக்கும், மக்களுக்கும், சகோதரர் யாவருக்கும் நீயே தலைவன்” என்றார்.

காட்டிலிருந்து ஏசா திரும்பி வந்தபோது விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். கதறிப் புலம்பினார். ஈசாக் வருந்தினார், ஆனாலும் ஆசீர்வாதத்தைத் திரும்பப் பெற முடியாது என கைகளை விரித்தார்.

″உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்″ என்றார். ( தொடக்க நூல் 25 : 23 ). என்று கடவுள் ஏற்கனவே ரெபேக்காவிடம் சொல்லியிருந்தார். அந்த திட்டம் கடைசியில் நிறைவேறுகிறது. ஆனால் அவர் விரும்பிய வழியில் நடந்ததா என்பது கேள்விக்குறியே !

பெற்றோர் செய்யக் கூடாத ஒரு செயல் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது. ஈசாக்கும் ரபேக்காவும் காட்டுகிறார்கள். அது சகோதரர்களுக்கிடையே சிறுவயதிலிருந்தே கசப்புணர்வை உருவாக்கி விடுகிறது.

ஈசாக் தனது வாழ்வில் அனைத்தை விடவும் உணவை நேசிக்கிறார்.ஆசி வழங்குவதற்கு முன்பு கூட, சாப்பாடு கொண்டு வா. அதை முதலில் ருசிக்கட்டும் என்கிறார். உணவு அவருக்குக் கடவுளாய் மாறிவிடுகிறது.

ஏசாவோ, கஞ்சிக்காக ‘தலைமகன்’ எனும் உயரிய ஆசீர்வாதத்தை இழக்கிறான். விரும்பிய பெண்களையெல்லாம் மணக்கிறான். சகோதரன் மேல் கொலை வெறி கொள்கிறான். என ஆன்மீகம் அகன்று விட்ட நிலையையே அது காட்டுகிறது.

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அதை அவர் மிகவும் அற்புதமான முறையில் நடத்துவார். அவரை நம்புவதும், அவர் காட்டும் வழியில் நடப்பதுமே அவசியம் ! என்பதையே இரட்டையர் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.

பைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் !

ஈசாக் !

4320480586_839e41e9c2

ஈசாக் என்றதும் சட்டென என்ன ஞாபகத்துக்கு வருகிறது ? ஆபிரகாம் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடத் துணிந்த செயலைத் தவிர ? ஈசாக்கின் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறது !

ஈசாக் தனது மனைவி ரெபேக்காவுடன் கெரார் என்னுமிடத்துக்குச் சென்றார். அங்கே பெலிஸ்திய மன்னன் அபிமெலேக்கு அரசாண்டு கொண்டிருந்தான். ரெபேக்கா மிகவும் அழகானவளாக இருந்தாள்., அந்தக் காலத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருந்தது. அன்னியர்கள் யாரேனும் அழகான மனைவியுடன் நாட்டில் நுழைந்தால், அவளை அடைவதற்காக கணவனைக் கொன்று விடுவது சர்வ சாதாரணம். எனவே “யார் இந்தப் பெண்” என கேட்டவர்களிடமெல்லாம் “இவள் என் சகோதரி” என்றே சொல்லி வந்தார்.

ஒரு நாள் இவள் ஈசாக்கின் மனைவி எனும் உண்மை மன்னனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடனே இந்த விஷயத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, யாரும் ஈசாக்கையோ, அவருடைய மனைவியையோ தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தான். பின் சில காலத்துக்குப் பின் ஈசாக் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

கெரார் பள்ளத்தாக்கில் ஈசாக்கின் ஊழியர்கள் ஒரு கிணறு தோண்டினார்கள். தண்ணீர் பீறிட்டு எழுந்தது. அந்தப் பகுதியிலுள்ள மேய்ப்பர்களோ, இந்தக் கிணறு எங்களுடையதே.. இதை உங்களுக்குத் தரமுடியாது என சண்டை பிடித்தனர்.. ஈசாக்கு, அமைதியாக அடுத்த இடத்துக்குச் சென்றார்.

இரண்டாவதாக வேறு ஒரு கிணறைத் தோண்டினார்கள். அங்கும் தண்ணீக் கிடைத்தது. அங்கும் தகராறு எழுந்தது. அப்போதும் ஈசாக்கு அமைதியாக விலகிச் சென்றார்.

மூன்றாவது வேறொரு இடத்தில் ஒரு கிணறு தோண்டினார்கள். அங்கே சண்டை ஏற்படவில்லை. எனவே ஈசாக்கு அங்கேயே தங்கினார், இதுவே கடவுள் தனக்கு அளித்த இடம் என அவர் நம்பினார்.

விசுவாசத்தின் தந்தை, தனது சொந்தத் தந்தையாகும் பாக்கியம் ஈசாக்கிற்குக் கிடைத்தது. ஆபிரகாம் எல்லாவற்றிலும் கடவுளை முதலிடத்தில் வைத்து வாழ்க்கையை நடத்தியவர். அதற்காக தனது மகனைக் கூட இழக்கத் தயாராகி விட்டவர் தான் ஈசாக். எனவே தந்தையின் ஆன்மீக வாசனை ஈசாக்கின் வாழ்க்கையிலும் நிரம்பியிருந்தது எனலாம்.

கடவுளை முதல் இடத்தில் வைக்கும் போது மனிதர்களோடான பகை உணர்ச்சிகள் மறைந்து விடுகிறது. மறு உலக வாழ்க்கையை நோக்கிய பயணத்தில், இவ் வுலக வாழ்க்கை செல்வங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை முக்கியமற்றதாகி விடுகின்றன.

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; என்றார் ( யோ : 22 – 36 ) இயேசு. இவ்வுலகைச் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே இவ்வுலக மனிதரோடு போராடுவார்கள். விண்ணக வாழ்க்கையை நோக்கிப் பயணம் செய்பவர்களுடைய சிந்தனை எப்போதுமே பாவத்தோடான போராட்டமாகவே இருக்கும்.

ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள் ( மத் 5 : 40 ) என்கிறார் இயேசு. விட்டுக் கொடுத்தலும், சண்டைகளைத் தவிர்த்தலுமே இயேசு சொன்ன பாடம். அதைத் தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் எனும் போதனையின் மூலம் உரக்கச் சொன்னார்.

பழைய ஏற்பாட்டில் கடவுளின் அருள் பெற்ற மக்கள் போர்களில் வென்றார்கள், எதிரிகளை முறியடித்தார்கள். உலக செல்வங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் புதிய ஏற்பாடு நமக்கு ஆன்மீகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதர்களோடான சண்டைகளை முற்றிலும் தவிர்த்து, சாத்தானோடும் அவனுடைய பாவ தூண்டுதல்களோடும் மட்டுமே சண்டையிட புதிய ஏற்பாடு அழைப்பு விடுக்கிறது.

புதிய ஏற்பாட்டில் இயேசு  காட்டிய வழி, பழைய ஏற்பாட்டு ஈசாக்கின் வாழ்க்கை யிலேயே இருந்தது வியப்பான விஷயம். அதனால் தான் ஈசாக் முப்பிதாக்களில் ஒருவராக இருக்கிறார்.

ஈசாக்கின் வாழ்க்கை முழுதும் நல்ல விஷயங்களாலேயே நிறைந்திருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பிள்ளைகள் மீதே பாகுபாடு காட்டும் மனநிலை தான் அவரிடம் இருந்தது. அபிமலேக்கு மன்னனிடம் பொய் சொல்லும் மனநிலை தான் இருந்தது. ஆனால் பிற மனிதர்களிடம் சண்டையில்லாமல் செயல்பட வேண்டிய உயரிய குணம் அவரிடம் இருந்தது.

ஈசாக்கின் வாழ்க்கை நமக்கு மனிதர்களோடான சண்டைகளை தவிர்த்து விடவேண்டும் எனும் உயரிய குணத்தைச் சொல்லித் தருகிறது. அந்தக் குணத்தை மனதில் கொண்டாலே இன்றைக்கு நிகழ்கின்ற பல்லாயிரம் பிரச்சினைகள் நம்மை விட்டு மறைந்து விடும்.

பைபிள் மாந்தர்கள் 7 (தினத்தந்தி) : ரபேக்காள்

 rebakah

வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்: ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை – நீதி மொழிகள் 19 : 14

ஆபிரகாமுக்கு நூறு வயதாக இருந்தபோது இறைவன் அருளால் பிறந்தவர் ஈசாக். இப்போது அவருக்குத் திருமண வயது. ஆபிரகாம் தனது நம்பிக்கைக்குரிய வேலையாளை அழைத்தார். “ நீ போய் என் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார். இந்த கானான் நாட்டிலிருந்து அவனுக்குப் பெண் பார்க்க வேண்டாம். எனது சொந்த ஊருக்குப் போ. தந்தையின் பரம்பரையிலிருந்து ஒரு நல்ல பெண்ணை பார். கடவுளின் தூதர் உனக்கு முன் செல்வார். ” என்று சொன்னார்.

பெண் பார்த்தல் தொடர்பாக ஆபிரகாம் இட்ட நிபந்தனைகள் இவை தான். ஈசாக்கை அழைத்துக் கொண்டு போகவேண்டாம். கண்டுபிடிக்கும் அந்தப் பெண் ஒரு வேளை உன்னுடன் வர மறுத்தால் நீ திரும்பி விடலாம். அதன் பின் ஈசாக்குக்கு நீர் பெண்பார்க்க வேண்டாம்.

வேலையாள் சம்மதித்தார். பத்து ஒட்டகங்கள். விலைமதிப்பற்ற பல பரிசுப் பொருட்களோடு, ஆபிரகாமின் தேசமாகிய மெசபடோமியாவிலிருந்து நாகோருக்குப் போனார்.

சுமார் எண்ணூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஒரு மாலைப் பொழுதில் அந்த ஊரை அடைந்தார். ஊருக்கு அருகே இருந்த கிணற்றின் அருகில் இருந்தார். திடீரென மனதில் ஒரு எண்ணம். மண்டியிட்டு கடவுளிடம் வேண்டினார். “கடவுளே, பொதுவாக மாலை வேளைகளில் தண்ணீர் எடுக்க பெண்கள் இங்கே வருவார்கள். அப்படி வரும் பெண்களிடம், எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்பேன். எந்தப் பெண் தண்ணீரையும் கொடுத்து, உங்கள் ஒட்டகங்களுக்கும் நான் தண்ணீர் மொண்டு தருகிறேன் என சொல்கிறாளோ, அவளே நீர் ஈசாக்கிற்காய் தரப்போகும் பெண் என்பதைப் புரிந்து கொள்வேன். என்று மனதில் வேண்டினார்.

அப்போது ஒரு அழகான பெண் அந்த இடத்தில் தண்ணீர் கொள்ள வந்தாள். அவள் கிணற்றில் இறங்கி தண்ணீர் மொண்டு கொண்டு மேலே வருகையில், ஈசாக்கின் வேலையாள் மனதில் திட்டமிட்டிருந்தபடி குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவள் சற்றும் மறுக்காமல் தண்ணீரைக் கொடுத்தாள். அவர் குடித்து முடித்ததும், நான் உங்களுடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் என்று சொல்லி, பதிலைக் கூட எதிர்பாராமல் காரியத்தில் இறங்கினார்.

வேலையாள் ஸ்தம்பித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.    தண்ணீர் இறைத்து முடித்ததும் ஆறு கிராம் எடையுள்ள மூக்குத்தியும், நூற்று இருபது கிராம் எடையுள்ள இரண்டு காப்புகளையும் அவளுக்கு பரிசாகக் கொடுத்தார். கொடுத்து விட்டு அவள் யார் என விசாரித்தார். அவள் உறவினர் பெத்துவேலின் மகள், ஈசாக்கின் மனைவியாகக் கூடிய உறவு முறைதான் என்பதை அறிந்ததும் உடனே மண்டியிட்டு இறைவனை வணங்கினார்.

இரவில் ஒட்டகங்களும் நாங்களும் உங்கள் இல்லத்தில் தங்கலாமா என வேலையாள் கேட்டார். அவளோ சற்றும் தயங்காமல் உடனே ஒப்புக் கொண்டாள். அவளுடைய வீட்டுக்குச் சென்றனர்.. ரபேக்காவின் வீட்டார் நிகழ்ந்தவற்றையெல்லாம் கேட்டு வியந்து கடவுளை மகிமைப்படுத்தினர். ரபேக்கா, ஈசாக்கின் மனைவியாவதற்காக வேலையாளுடனும், தோழியர் மற்றும் தாதியுடனும் புறப்பட்டாள். ஈசாக் வேலையாள் தனக்காய்ப் பார்த்து வந்திருந்த ரபேக்காவைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பார்கள். இந்தத் திருமணம் கடவுளால் நேரடியாகவே நடத்தப்படுகிறது.

ஒரு மணப்பெண் எப்படியிருக்க வேண்டுமோ அத்தனை குணாதிசயங்களும் ரபேக்காவுக்கு இருந்தன எனலாம்.

தினமும் தண்ணீர் எடுக்கும் நிகழ்வு ரபேக்காவின் உடல் உழைப்பைச் சொல்கிறது. அவர் கன்னியாய் இருந்தார் என்பது அவருடைய வாழ்வின் உடலியல் தூய்மையைச் சொல்கிறது. தண்ணீர் தருவாயா எனும் கேள்விக்கு மறுப்பேதும் இல்லாமல் தண்ணீர் கொடுப்பது அவளுடைய மனித நேயத்தைக் காட்டுகிறது. ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று என முன்வருவது பிறருக்கு உதவுவதில் ஆர்வமாய் இருப்பதைச் சொல்கிறது !

அது மட்டுமல்லாமல் இந்த பொருத்தம் இறைவனால் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதும், உடனடியாக தன்னை ஒப்புக் கொடுக்கிறார். அன்னை வீட்டை விட்டு, சொந்த நாட்டை விட்டுப் போகவேண்டும், காலமெல்லாம் தூரதேசத்தில் வாழவேண்டும், மீண்டும் பெற்றோரைப் பார்க்க முடியாமல் போகலாம் எனும் கவலைகளெல்லாம் அவளை அலைக்கழிக்கவில்லை !

திருமணங்கள் இறைவன் முன்னின்று நடத்தும் திருமணங்களாக அமையும் போது அவை இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றன. இறைவனை மறந்து விட்டு படிப்பு, பணம், அந்தஸ்து , அழகு போன்ற மற்ற விஷயங்களின் மீது அதிக கவனம் செலுத்தும் போது திருமணங்கள் பெரும்பாலும் தோல்விப் பயணத்தின் தவறான துவக்கமாகவே அமைந்து விடுகிறது.

பைபிள் மாந்தர்கள் 6 (தினத்தந்தி) : ஆபிரகாம்

Tiepolo-Abraham-and-Isaac-wga

நூறு வயது வரை குழந்தைக்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ? அந்தக் குழந்தையை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சுவார்கள். தரையிலேயே விட மாட்டார்கள். அதன்பின் அவர்களுடைய வாழ்க்கையே அந்தக் குழந்தையைச் சுற்றித் தான் அமையும் இல்லையா ? ஆபிரகாம் – சாரா வுக்கும் அப்படித் தான் இருந்தது. இருவருக்குமாய் பிறந்த முதல் குழந்தை ஈசாக். குழந்தை பிறந்த போது ஆபிரகாமுக்கு நூறு வயது, சாராவுக்கு தொன்னூறு வயது !

கடவுள் ஆபிரகாமை அழைத்தார். “ஆபிரகாம், உன் அன்பு மகனை மோரியா நிலப்பகுதியிலுள்ள மலையில் எனக்கு எரிபலியாகச் செலுத்து” என்றார். நூறு ஆண்டுகள் தவத்தின் பயனாக கடவுள் கொடுத்த வாரிசு, அவனையே எரி பலியாகச் செலுத்தச் சொல்கிறார் கடவுள். ஆபிரகாம் மறு பேச்சு பேசவில்லை. மறு நாள் அதிகாலையில் ஈசாக்கையும், பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல்கிறார். கடவுள் சொன்ன இடத்துக்குச் செல்ல மூன்று நாட்கள் பயணிக்க  வேண்டியிருந்தது.

அங்கிருந்து மலையில் ஏறிப் போக வேண்டும். விறகுக் கட்டை எடுத்து மகனின் தோளில் வைக்கிறார். கத்தியையும், தீயையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். அப்போது தான் ஈசாக் கேட்டான்.

“விறகு இருக்கிறது, கத்தி இருக்கிறது, நெருப்பு இருக்கிறது. பலியிட வேண்டிய ஆட்டுக்குட்டி எங்கே அப்பா ?”

“கடவுள் தருவார் மகனே” ஆபிரகாம் சொன்னார்.

மலைக்கு மேல் சென்று, ஈசாக்கைக் கட்டி விறகின் மேல் கிடத்தினார் ஆபிரகாம். அடுத்து கத்தியை எடுத்து மகனை வெட்ட வேண்டும். நெருப்பினால் சுடவேண்டும். எரிபலி நிறைவேறிவிடும். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட கத்தியை கையிலெடுத்தார். அப்போது கடவுளின் குரல் கேட்டது.

“ஆபிரகாம், நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்பதை அறிந்து கொண்டேன். பையன் மேல் கை வைக்காதே” என்றார். ஆபிரகாம் மகிழ்ந்தார். சுற்றிலும் பார்த்தார்.. ஒரு ஆட்டுக்குட்டி முட்செடியில் கொம்பு சிக்கிக் கொண்டு தத்தளிப்பதைக் கண்டார். அதைப் பிடித்து அதே பீடத்தில் எரிபலியாய் செலுத்தினார் !

மனதைப் பதை பதைக்க வைக்கும் ஆபிரகாமின் விசுவாசம் எட்டி விட முடியாத உயரத்தில் இருக்கிறது. முப்பிதாக்கள் எனும் வரிசையில் ஆபிரகாம் முதலில் நிற்பதற்குக் காரணமே அவரது அசைக்க முடியாத இறை விசுவாசம் தான்.

ஈசாக்கைப் பலியிட ஆபிரகாம் சென்றபோது அவருக்கு வயது 125. ஈசாக் 25 வயது நிரம்பிய வலிமையான இளைஞர். ஈசாக் தந்தையின் விண்ணப்பத்தைக் கேட்டு, தன்னையே பலியாகக் கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும் என்பதே இறையியலாளரின் கருத்து. விசுவாசத்தின் தந்தை, தனது மகனை அதே ஆழமான விசுவாசத்தில் வளர்த்திருக்கிறார் என்பதே வியப்பளிக்கும் செய்தி !

மலையடிவாரம் வரை பணியாளர்கள் கூடவே வருகிறார்கள். அவர்களிடம், “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்″ என்றார் ஆபிரகாம். ( ஆதி 22 : 5 ). திரும்பி வருவோம் – எனும் விசுவாசம் ஆபிரகாமுக்கு எப்படி வந்தது ?

“உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்” ஆதி : 17 : 19, எனும் கடவுள் ஆபிரகாமிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதை ஆபிரகாம் முழுமையாக நம்பினார். என்ன ஒரு வியப்பூட்டும் விசுவாசம் !

கடவுள் ஆபிரகாமிடம் தனிமையாக, இரவில் பேசுகிறார். வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆபிரகாம் அந்த கட்டளையை நிறைவேற்றாவிட்டாலும் யாரும் அறியப் போவதில்லை. ஆனால் ஆபிரகாமோ, மனிதனின் அங்கீகாரமல்ல, கடவுளின் அங்கீகாரத்தையே முக்கியமாகத் தேடினார்

ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தனாய் இருந்தார். சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது தான் “நாட்டை விட்டு வெளியேறு” என்கிறார் கடவுள். ஆபிரகாம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது அவருக்கு வயது 75 ! எழுபத்தைந்து வயதில் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடியாய் திரிய ஆபிரகாமின் விசுவாசம் அவரை இயக்கியது !

பயணத்தில் அவருடைய  லோத்தும் கூடவே செல்கிறார். காலங்கள் கடக்கின்றன.  ஆபிரகாமும் லோத்தும் ஒரே இடத்தில் வசிக்க வசதியில்லை எனும் நிலை எழுந்தபோது ஆபிரகாம் லோத்திடம், உனக்கு எந்த இடம் பிடித்திருக்கிறதோ அதை நீ முதலில் தேர்ந்தெடு. மற்ற இடத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்கிறார். பணிவும், சண்டையில்லாத சூழலையும், தனது உரிமையைக் கூட விட்டுக் கொடுக்கும் தாழ்மையும் ஆபிரகாமிடம் இருந்தது.

ஆபிரகாமின் விசுவாசமும், பொறுமையும், பணிவும், இறையச்சமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆன்மீகப் பாடம் !

 

பைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்

MightyNimrod

 நிம்ரோத் மன்னனைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் முதல் மன்னன் இவன் தான். அதுவரை உலகில் மன்னராக யாருமே இருக்கவில்லை. நோவாவின்  மகன்களில் ஒருவனான காமின் சந்ததியில் வந்தவன் தான் நிம்ரோத் மன்னன். காம் தன் தந்தையால் சபிக்கப்பட்டவன், அந்தக் கதை சுவாரஸ்யமானது !

வெள்ளப்பெருக்கிலிருந்து கடவுளால் தப்பிக்கப்பட்ட நோவாவின் குடும்பம் வாழ்க்கையை ஆரம்பித்தது. நோவா திராட்சை பயிரிட்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அளவுக்கு அதிகமாய் திராட்சை ரசத்தைக் குடித்து போதையில் ஆடை விலகிய நிலையில் கூடாரத்தில் படுத்துக் கிடந்தார் நோவா. காம் அதைக் கண்டான். வெளியே வந்து தனது சகோதரர்களான சேம் மற்றும் எப்பேத்துவிடம் அதைப் பற்றிச் சொன்னான். அவர்கள் இருவரும் உடனே ஒரு ஆடையை எடுத்துக் கொண்டு பின்னோக்கி நடந்து போய் தந்தையின் நிர்வாணத்தை மூடினர்..

காமின் செயல் தந்தையான நோவாவுக்கு கோபத்தைக் கொடுத்தது. அவனை சபித்து விட்டார்.  அவனுடைய சந்ததியில் உருவானவன் தான் நிம்ரோத் மன்னன். நோவாவின் கொள்ளுப் பேரன். எதிர் கிறிஸ்துவுக்கு அடையாளமாக சொல்லப் படுபவன் இவன் தான்.

எரேக்கு, அல்காது, கல்னே, இரகபோத்து, ஈர், காலாகு சோதோம், கொமோரா, நினிவே – போன்ற நகரங்களை நிர்மாணித்து தனது பெயரை நிலைநாட்டும் வேட்கை கொண்டவனாக நிம்ரோத் மன்னன் இருந்தான்.

கர்வத்தின் அடையாளமான பாபேல் கோபுரத்தைக் கட்டியவனும் இவன் தான். அது வரை உலகில் ஒரே மொழி தான் இருந்தது. மக்கள் நிம்ரோதின் கர்வத்தை உள்வாங்கியிருந்தார்கள். சினயார் சமவெளிப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாபெரும் கோபுரத்தைக் கட்ட முடிவெடுத்தார்கள்.

நாம் கட்டும் இந்தக் கோபுரம் சுவர்க்கத்தைத் தட்ட வேண்டும், நமது பெயரைச் சொல்ல வேண்டும் என கர்வத்துடன் பேசிக் கொண்டார்கள். கடவுள் கீழே இறங்கிவந்தார். மக்களுடைய கர்வத்தை அழிக்க முடிவெடுத்தார். மக்களிடையே மொழிக் குழப்பத்தை ஏற்படுத்தினார். மக்கள் குழுக்கள் குழுக்களாக வேறு வேறு மொழிகள் பேச ஆரம்பித்தனர். ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாததால் குழப்பத்தில் அந்த கட்டிடம் கட்டும் வேலை நின்று விட்டது.

நிம்ரோத் மன்னன் காலத்தில் தான் சிலை வழிபாடு முதன் முதலில் ஆரம்பித்தது .  மக்கள் நிம்ரோத்தை கடவுளாக வணங்கினார்கள். பாகால், நீனூஸ் , அதோனிஸ், ஓசிரிஸ் என பிற்காலத்தில் பல பெயர்களில் வணங்கப்பட்ட பிற தெய்வங்கள் நிம்ரோத்  தான் !

நிம்ரோத் மன்னனைப் போலவே  அவனுடைய மனைவியான செமிராமிஸ் என்பவளும் கர்வத்தால் நிரம்பியிருந்தாள்.  சிற்றின்பத்திலும், போதையிலும் தான் அவளுடைய வாழ்க்கையும் அவளைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் இருந்தது. பிற்காலத்தில் இவளையும் மக்கள் கடவுளாக வழிபட்டனர்.

கிறிஸ்தவத்தில் உண்மையான ஆன்மீகப் பாதை எருசலேம் என்றும், தீமையான பாதை பாபிலோன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படை என்ன என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எங்கெல்லாம் கர்வம் தலை தூக்குகிறதோ அங்கே கடவுளின் கோபம் எழுகிறது. காரணம், கடவுள் தாழ்மையையும், பணிவையும் போதிக்கிறார்..

பைபிளில் இன்னொரு கதை வருகிறது (லூக்கா 18 ). இரண்டு பேர் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கின்றனர். ஒருவர் பரிசேயர். ஒருவர்  வரிதண்டுபவர். பரிசேயர்கள் என்பவர்கள் மதவாதிகளின் அடையாளம். சட்டங்களை ஒழுங்காகக் கடைபிடிப்பவர்கள். சட்டங்களைக் கடைபிடிப்பதால் தாங்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் எனும் “கர்வத்தில்” இருப்பவர்கள். வரி வசூலிப்பவர்களோ பாவிகளென ஒதுக்கப்பட்டவர்கள்.

பரிசேயர் ஆலயத்தில் நிமிர்ந்து நின்று. “கடவுளே நான் இந்த பாவியைப் போல இல்லாததற்கு நன்றி. நான் காணிக்கை கொடுக்கிறேன், நோன்பு இருக்கிறேன். கொள்ளையர்க்கள், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற வாழ்க்கை நடத்தவில்லை” எனும் தொனியில் வேண்டிக் கொண்டிருந்தார். வரிதண்டுபவரோ நிமிர்ந்து பார்க்கவும் துணியாமல் மார்பில் அடித்துக் கொண்டு “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்று மட்டும் சொன்னார்.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த இயேசு சொன்னார். இந்த பாவியே கடவுளுக்கு ஏற்புடையவன். “ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்றார்.

நமது செயல்கள் நல்லனவாய் இருந்தால் போதாது. அந்த செயல்களுக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் நல்லதாகவே இருக்க வேண்டும்.

நான் ரொம்ப தாழ்மையானவர் என ஒருவர் நினைப்பதே கர்வத்தின் அடையாளம் தான். தான் தாழ்மையாய் இருப்பதைக் குறித்த பிரக்ஜையற்று இறையில் நிலைத்திருப்பவனே உண்மையான தாழ்மை மனிதர்.

பைபிளில் வருகின்ற விசுவாச மனிதர்கள் நமது விசுவாசத்தை ஆழப்படுத்துகிறார்கள். அவர்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நிம்ரோத் போன்ற மன்னர்களுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கைக்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எப்படி வாழக் கூடாது என்பதன் அடையாளமாய் நிம்ரோத் இருக்கிறான்.

 

பைபிள் மாந்தர்கள் 4 (தினத்தந்தி) : நோவா !

illustration-of-noahs_ark

சுமார் ஐநூறு வயதான ஒரு கிழவர் அமர்ந்து மரங்களை முறித்தும், சீராக்கியும் ஒரு படகு செய்கிறேன் என்று அமர்ந்தால் என்ன நினைப்பீர்கள் ? அதுவும் தண்ணீர் வரவே வாய்ப்பு இல்லாத ஒரு கட்டாந்தரையில் படகு உண்டாக்கத் துவங்கினால் ? அப்படித் தான் இருந்திருக்கும் நோவா படகு செய்ய ஆரம்பித்த போது !

அந்த காலகட்டத்தில் தான் அவருக்கு சேம், காம், எபேத்து எனும் மூன்று பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.  பூமியில் மக்கள் பலுகிப் பெருகத் துவங்கியிருந்தார்கள். பாவமும் மக்களிடையே பெருகத் துவங்கியிருந்தது. கோபமான கடவுள் பூமியை அழிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

நோவா மட்டும் ஒரு நல்ல மனிதராக இருந்தார். கடவுள் அவரிடம் “ நீ ஒரு பேழை செய்ய வேண்டும்” என்றார். பூமியை தண்ணீரால் அழிக்க வேண்டும், நோவாவின் குடும்பத்தினரையும், உயிரின வகைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்.

பேழை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கடவுளே சொல்கிறார். நீளம் 300 முழம், அகலம் 50 முழம், கோபர் மரத்தில் செய்ய வேண்டும், உள்பக்கம் என்ன பூசவேண்டும் என முழு கட்டுமான விவரங்களையும் கொடுக்கிறார்.

நோவா பேழை செய்ய ஆரம்பித்தார்.  சுமார் நூறு ஆண்டுகள் அவர் பேழை செய்தார். குறிப்பிட்ட நாள் வந்தது. நோவாவும் குடும்பமும் கடவுள் சொன்னதும் பேழைக்குள் செல்கின்றனர். விலங்கினங்களை கடவுளே பேழைக்குள் வரவைக்கிறார். பேழையின் கதவையும் கடவுளே மூடிவிடுகிறார். ஏழு நாட்களில், மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு தொடங்கியது. பெருமழை பொழிந்தது.

நாற்பது இரவும், நாற்பது பகலும் அடைமழை. மலைகளுக்கும் மேலே பல முழம் உயரத்தில் தண்ணீர். நூற்றைம்பது நாட்கள் தண்ணீர் பெருக்கு. பூமி ஒட்டு மொத்தமாகக் கழுவப்பட்டது. எல்லா உயிரினங்களும் மாண்டு போயின ! தண்ணீர் வற்றுவதற்கு மீண்டும் ஒரு நூற்றைம்பது நாட்கள். கடவுள் அவர்களை வெளியே வரச் சொன்ன போது அவர்கள் வெளியே வந்தார்கள்.

உலகில் அதுவரை வாழ்ந்த எல்லா உயிரினங்களும், மனிதர்களும் அழிக்கப்பட நோவானின் சந்ததி மட்டுமே மிஞ்சியது ! வெளியே வந்ததும் முதல் வேலையாக, நோவா கடவுளுக்குப் பலி செலுத்தி நன்றியை வெளிப்படுத்தினார்.

கிறிஸ்தவம் நோவாவை மிக முக்கியமான ஆன்மீகத் தலைவராகப் பார்க்கிறது.

“நீ ஒரு பேழையைச் செய்” என கடவுள் சொன்னபோது, எதற்காக பேழை செய்ய வேண்டும் ? ஏன் கோபர் மரம் ? ஏன்  இந்த குறிப்பிட்ட அளவு ? என எந்த  ஒரு கேள்வியையும் நோவா கேட்கவில்லை.

தனது வேலைக்கு என்ன கூலி கிடைக்கும் ? யார் தனக்கு மரங்கள் கொண்டு தருவார்கள் ? யார் கீல் பூசி உதவுவார்கள் என்றெல்லாம் நோவா கணக்குப் போடவில்லை.

பேழை செய்யச் சொன்னதும், கர்வம் கொண்டு தானே ஒரு கட்டுமானப் பணியாளன் ஆகிவிடவில்லை. கடவுள் சொன்ன அளவுகளை அப்படியே பின்பற்றுகிறார். அகலத்தைப் போல ஆறு மடங்கு அளவு நீளம் கொண்டது அந்தப் பேழை. இன்றைய கப்பல் தயாரிப்புகளின் அடிப்படை இந்த அளவு தான் என்கிறது “லைஃப் அப்ளிகேஷன் பைபிள் ஸ்டடி” நூல்.

‘லாஜிக்’ பார்த்தோ, சுய அறிவை வைத்தோ நோவா எதையும் செய்யவில்லை. கடவுளையே சார்ந்திருந்தார். மழை தொடங்குவதற்கும் 7 நாட்களுக்கு முன்னே பேழையில் சென்றவர், மழை நின்றபின்பும் கடவுள் சொல்லும் வரை பேழையை விட்டு வெளியே வரவில்லை !

நிகழாத ஒரு செயல் நிகழலாம் என்பதை நோவா நம்பினார்.. உலகில் அன்று வரை மழை பெய்ததில்லை. பூமியின் பனி மட்டுமே பூமியைச் செழிப்பாக்கிக் கொண்டிருந்தது.

வரலாற்று அறிஞர்கள் நோவா 480வது வயதில் பேழை செய்ய ஆரம்பித்ததாய் சொல்கிறார்கள். அப்படியெனில் 120 ஆண்டுகளின் உழைப்பு அதில் உண்டு. முதல் இருபது வருடங்கள் வேலை செய்கையில் அவருக்குக் குழந்தைகள் இல்லை.

வேலை சட்டென முடியவில்லையே எனும் எரிச்சலும், கோபமும் அவரிடம் இல்லை. கடவுள் பேழை செய்யச் சொன்னார். ஆனால் அதன் பின் சுமார் நூறு ஆண்டுகள் கடவுள் பேசியதாய் வரலாறு இல்லை. இருந்தாலும் நோவா தனது பணியிலிருந்து பின் வாங்கவில்லை.

நோவா பேழை செய்தபோது உயிரினங்கள் எப்படி உள்ளே வரப் போகின்றன என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அதை கடவுளிடமே விட்டு விட்டார். எல்லாம் கடவுளின் திட்டப்படி நடந்தன.

பேழையிலிருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக கடவுளுக்குப் பலி செலுத்துகிறார் நோவா.. கடவுளே எல்லாவற்றிலும் முதன்மையாய் இருக்க வேண்டும் என்பதிலிருந்து அவர் பின் வாங்கவில்லை.

நோவாவின் வாழ்விலிருந்து இந்தப் பாடங்களைக் கற்றுக் கொள்வோம் !

பைபிள் மாந்தர்கள் 3 (தினத்தந்தி) : காயீன் – ஆபேல்

Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain --- Image by © Geoffrey Clements/CORBIS  ORG XMIT: 12873731

(Italian Baroque Painting of the Killing of Abel and the Banishment of Cain — Image by © Geoffrey Clements)

காயீனும், ஆபேலும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வந்திருந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிறந்த பிள்ளைகள். காயீன் மூத்தவன். ஆபேல் இளையவன். பெற்றோருக்குப் பிறந்த முதல் மனிதன் காயீன் ! அவனுக்குத் தோட்டத்தில் பயிடும் வேலை ! உலகின் முதல் விவசாயி. ஆபேலுக்கோ ஆடுகளை மேய்க்கும் பணி.

காயீன் நிலத்தில் விளைந்தவற்றைக் கொண்டு வந்தான். ஆபேல் தனது மந்தையிலிருந்த கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். கடவுள் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக் கொண்டு, காயீனின் காணிக்கையைப் புறக்கணித்தார். காயீன் தனது சகோதரன் மீது கோபம் கொண்டான். மனிதனின் முதல் கோபம். கடவுள் அவனிடம் “ஏன் முக வாட்டமாய் இருக்கிறாய். நீ நல்லது செய்தாய் உயர்வடைவாய். பாவம் உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கியாளவேண்டும்” என்றார். இருந்தாலும்… காயீனின் சினம் குறையவில்லை.

“தம்பீ, வா.. வயல்வெளிக்குப் போகலாம்” காயீன் கூப்பிட்டான்.

அண்ணன் கூப்பிட்டதும் மறு பேச்சு பேசாமல் உற்சாகமாய் ஓடி வந்தான் தம்பி. வயல்வெளிக்குச் சென்றதும், தனது தம்பியின் மீது பாய்ந்து அவனைக் கொன்றான் காயீன். உலகின் முதல் கொலை ! கடவுள் காயீனை அழைத்து, “ஆபேல் எங்கே” எனக் கேட்டார். அவனோ “ எனக்குத் தெரியாது, நான் என்ன அவனுக்குக் காவலாளியா ?” என்று கேட்டான். கடவுளின் கோபம் அதிகரிக்க, அவனைச் சபித்து துரத்தி விட்டார்.

கடவுள் காணிக்கையின் அளவைப் பார்த்து காணிக்கையை அங்கீகரிப்பவரல்ல. அவர் மனதைப் பார்ப்பவர். “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை” என்கிறது பைபிள். ஆபேலைக் கனிவுடன் கண்ணோக்குகிறார், அதனால் அவனுடைய காணிக்கைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.. காயீனை அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை, அதனால் தான் அவனுடைய காணிக்கைகளும் கண்ணோக்கப்படவில்லை !

நம்பிக்கையினால்தான் ஆபேல் காயினுடைய பலியைவிட மேலான பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். அதனால் அவர் நேர்மையானவர் எனக் கடவுளிடமிருந்து நற்சான்று பெற்றார் – ( எபிரேயர் 7 : 4 ). என்கிறது பைபிள். ஆபேலுடைய பலிகள் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், நேர்மையாளனின் காணிக்கையாகவும் இருந்தன என்பதே இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும்.

“தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்  என்கிறார் இயேசு.

காயீன் ஆபேலின் வாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.

  1. இறைவனுக்கான காணிக்கைகளில் அளவு முக்கியமல்ல, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நாம் அங்கீகரிக்கப்படாவிட்டால், நமது காணிக்கை அங்கீகரிக்கப் படுவதில்லை. எனவே ஒரு நேர்மையான வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்.
  2. சகோதரன் மீது சினம் கொள்பவர்கள் மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். சகோதரனோடு பிணக்கு இருந்தால் அதை நாமாகவே முன் சென்று சரி செய்ய வேண்டும்.
  3. இறைவனின் கண்களை விட்டு நமது பாவத்தை மறைப்பது என்பது, தரைக்குள் தலையைப் புதைத்து வைத்து விட்டு தப்பித்து விட்டதாய் நினைக்கும் தீக்கோழியைப் போன்றது.
  4. முதன்மையானவற்றையே கடவுளுக்குப் படைக்க வேண்டும். ஆபேல் தனக்கு ரொம்பவும் பிடித்த உயர்வானவற்றைக் கடவுளுக்குக் கொடுத்தான். சிறந்தவற்றை ஆண்டவருக்கு விருப்பத்துடன் கொடுப்பது ஆன்மீகத்தின் அடையாளம்.
  5. காயீன் செலுத்திய பலிதலை சிறந்ததா என்பது குறிப்பிடப் படவில்லை. எனவே அவை முதல் தரமானதில்லை என்றும் கருதிக் கொள்ளலாம். வெறுமனே சடங்குக்காகக் காணிக்கை செலுத்துபவர்கள் மதவாதத்தின் அடையாளம்.
  6. பாவம் செய்யும் மனிதன் இறைவனில் ஆனந்தம் கொள்வதில்லை. காயீனின் முகம் வாடிப்போய் இருந்தது. பாவத்தை விலக்கும் போதே உண்மையான ஆனந்தம் வந்து சேரும்.
  7. அடுத்தவருடைய வெற்றியோ அங்கீகாரமோ நமக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக நம்மை விட இளையவர்கள் சிறந்து விளங்கினால் பகையுணர்வு கொள்ளாமல் இருக்க வேண்டும்
  8. பாவம் என்பது நமது வாசலில் படுத்திருக்கும். அதை அடக்கியாளாவிட்டால் எந்த வேளையிலும் அது வீட்டுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும்.
  9. ஆபேல் தனது சகோதரன் அழைத்தபோது எந்த சந்தேகமும் படாமல் அவனுடன் சென்றான். அத்தகைய தூய்மையான சந்தேகமற்ற மனதை இறைவன் விரும்புகிறார்.
  10. நேர்மையாளனுக்கு எதிராய் கையை உயர்த்துகையில், இறைவனின் சினம் நம் மீது திரும்புகிறது !

இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.

பைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் ! ஏவாள்.

adam

ஏதேன் தோட்டம் கண்ணுக்கு வசீகரமாய் பழமரங்களுடன் இருக்கிறது. தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர் ஆதாமும், அவனுடைய துணைவியும். அவளுக்கு ஆதாம் இட்ட பெயர் ஏவாள். ஏவாள் என்றால் அனைவருக்கும் அன்னை என்பது பொருள். அவள் தான் உலகின் முதல் பெண்.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு அழகிய மரங்கள். ஒன்று நன்மை தீமை அறியும் மரம். இன்னொன்று வாழ்வுக்கான மரம். நன்மை தீமை அறியும் மரத்தின் கனியே விலக்கப்பட்ட கனி. அதைத் தான் சாப்பிட வேண்டாம் என கடவுள் எச்சரிக்கை செய்திருந்தார்.

தோட்டத்தில் அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில் பாம்பு அவர்களை எதிர்கொண்டது. அப்போது பாம்பு இன்றைய பாம்பைப் போல தரையில் ஊர்ந்து திரியவில்லை. அது எப்படி இருந்தது என்பதும் நமது கற்பனைக்கே விடப்பட்டிருக்கிறது.

“நீங்கள் தோட்டத்திலிருக்கும் எல்லா மரங்களிலிருந்தும் பழங்களை உண்ணக் கூடாதென்று கடவுள் சொன்னாராமே ? உண்மையா ? “ சூழ்ச்சியின் வலையை விரித்தது பாம்பு !

“அப்படியெல்லாம் இல்லை, ஒரே ஒரு மரத்தின் கனி மட்டும் தான் விலக்கப்பட்டிருக்கிறது. அந்த கனியை உண்ணக் கூடாது. ஏன் ?  தொடவும் கூடாது. சாப்பிட்டால் செத்துவிடுவோம் என்பதே  கடவுளின் எச்சரிக்கை” ஏவாள் சொன்னாள்.

“அட.. அப்படியெல்லாம் இல்லை. அதைச் சாப்பிட்டால் நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்” சூழ்ச்சிக்கார பாம்பு அவளை ஏமாற்றியது !

ஏவாள் ஏமாந்தாள். தொடக் கூடாது என கடவுள் சொன்ன கனியைத் தொட்டாள். பறித்தாள். உண்டாள்.

முதல் பொய் – சாத்தான் பாம்பின் வடிவில் வந்து சொன்னான் ! முதல் மனித மீறுதலும், பாவமும் அங்கே நடந்தது.

அந்த நிகழ்ச்சி நடந்தபோது ஆதாம் அருகிலேயே இருந்தான். பாம்பு சொல்வதை அவனும் கேட்டிருப்பான். ஆனால் ஏவாள் தவறிழைக்கையில் அவன் தடுக்கவில்லை. கடவுள் கட்டளையை ஏவாளிடம் கொடுக்கவில்லை, ஆதாமிடம் மட்டுமே சொன்னார். அதை ஏவாளுக்குச் சொன்னதே ஆதாம் தான். ஆனாலும், அந்த கட்டளையை ஏவாள் மீறியபோது அவன் தடுக்கவில்லை.

அந்தப் பாவத்தில் பங்கு கொண்டான். பழத்தைத் தின்றான்.

அதுவரை ஆடையில்லாமல் இருந்தவர்கள் அதுவரை வெட்கப்படவில்லை. பாவம் அவர்களுடைய புனிதமான நிர்வாணத்தை அவமானத்தின் சின்னமாய் தோன்றச் செய்கிறது. அத்தி இலைகளைத் தைத்து ஆடைகளைச் செய்தார்கள்.

ஏவாள் பழத்தைத் தின்றதால் பாவம் செய்தாள். ஆனால், ஏவாளைத் தடுக்காத பாவத்தை ஆதாம் செய்தான். சாத்தான் தந்திரசாலி. உலகின் சிற்றின்பங்களை வசீகரமாய் நமக்கு முன்னால் விரிக்கிறது. அது இணையத்தின் ஆபாசமானாலும் சரி, செல்வத்தின் மீதான தேடுதல் ஆனாலும் சரி. கடவுளின் கட்டளையை மீறியேனும் அதை அடைய வேண்டும் எனும் தூண்டுதலைத் தருகிறான். சாத்தானில் தூண்டுதல் எனும் தூண்டிலில் சிக்குபவன் ஆதாமைப் போல, ஏவாளைப் போல மாட்டிவிடுகிறான்.

கடவுள் வருகிறார். நடந்ததை அறிகிறார். கோபம் கொள்கிறார். “ஏன் நீ அந்தக் கனியைத் தின்றாய்” என அவர் ஆதாமிடம் கேட்கிறார். ஆதாமிடம் தானே அவர் கட்டளையிட்டிருந்தார். ஆதாம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என பழியைத் தூக்கி ஏவாள் மீதும், ஏவாளை துணையாகத் தந்தக் கடவுளின் மீதும் போடுகிறான்.  ஏவாளும் மன்னிப்பு வேண்டவில்லை, பழியை பாம்பின் தலையில் போட்டாள் !

தனது தவறுகளுக்கான மன்னிப்பை வேண்டாமல், சாக்குப் போக்கு சொல்லி, பழியை இன்னொருவர் தலையில் போடும் இரண்டாவது பெரிய பாவத்தை இருவருமே செய்கிறார்கள். விளைவு ? அழகிய ஏதேனை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதை நமக்கு மூன்று முக்கியமான  பாடங்களைச் சொல்லித் தருகிறது.

ஒன்று, சாத்தான் நமக்கு முன்னால் சிற்றின்ப ஆசைகளைக் குறித்துப் பேசும்போது விலகி ஓட வேண்டும். அந்த இன்பங்களின் ஒரு துளியை சுவைக்கத் துவங்கினால், கடவுளின் அன்பிலிருந்தும், அவருடைய கட்டளைகளிலிருந்தும் விலகி விடுவோம் ! காரணம், சாத்தான் நம்மை விட தந்திரசாலி !

இரண்டு, கடவுளின் கட்டளையை மீறி நடப்பது நமது பிரியத்துக்குரிய மனைவியாய் இருந்தாலோ, கணவனாய் இருந்தாலோ எச்சரிக்கை செய்தாக வேண்டும். அன்பு என்பது சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. துணையை சரியான வழியில் அழைத்துச் செல்வது !

மூன்றாவது, தவறிழைக்கும் நிலை நேர்ந்து விட்டால், பழியை அடுத்தவர் மேல் போடாமல் இறைவனின் பாதத்தில் அமர்ந்து மன்னிப்பை வேண்டி மன்றாடுவது ! மீண்டும் இறைவனின் பாதையில் பயணிப்பது !

பைபிள் மாந்தர்கள் 1 (தினத்தந்தி) : ஆதி மனிதன் ஆதாம் !

logo-adam-eve-fastener

ண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.  – ஆதியாகமம் 2 : 7

“ஒளி தோன்றுக !” உலகத்தைப் படைக்கும் போது கடவுள் சொன்ன முதல் வார்த்தை இது தான். அடுத்த நாள் வானத்தைப் படைத்தார். மூன்றாம் நாள் கடலையும், நிலத்தையும் நிலத்தின் தாவர இனங்களையும் படைத்தார்.  நான்காம் நாள் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைக்கிறார். ஐந்தாம் நாள் வானத்துப் பறவைகள், நிலத்து விலங்குகள், தண்ணீரின் உயிரினங்கள் போன்றவை படைக்கப்படுகின்றன.

ஆறு நாட்கள் கட்டளைகளின் மூலமாக அனைத்தையும் படைத்த கடவுள் கடைசியில் மனிதனைப் படைக்க முடிவெடுக்கிறார். “மனிதன் தோன்றட்டும்” என அவர் ஒரு வார்த்தையில் அவனைப் படைக்கவில்லை.

கொஞ்சம் மண்ணை எடுத்து, அதை ஒரு மனித உருவமாய்ச் செய்து, தனது உயிர் மூச்சை ஊதி அவனுக்கு உயிர் கொடுக்கிறார். உலகின் முதல் மனிதன் உயிர்பெறுகிறான். கடவுளின் இயல்புடன், கடவுளின் சாயலில், கடவுளின் ஆவியுடன் ! அவன் தான் ஆதாம் ! ஆதாம் என்பதற்கு “மண்ணால் ஆனவன்” என்று பொருள்.

அவனுக்காய் ஏதேனில் ஒரு தோட்டம் உருவாக்கி அவனை குடியமர்த்தினார் கடவுள். அந்தத் தோட்டத்தில் கண்ணைக் கவரும் பழ மரங்கள் நிரம்பி வழிந்தன.

தோட்டத்தின் நடுவே இரண்டு மரங்கள். ஒன்று வாழ்வின் மரம். இன்னொன்று, நன்மை தீமை அறியும் மரம். “இந்தத் தோட்டத்தில் எதை வேண்டுமானாலும் சாப்பிடு, நன்மை தீமை அறியும் மரத்தின் கனி மட்டும் வேண்டாம். அதைச் சாப்பிட்டால் நீ சாகவே சாவாய் ! “ இதுதான் மனிதனுக்குக் கடவுள் தந்த முதல் கட்டளை.

விலங்குகளையும், பறவைகளையும்  படைத்தவர் கடவுள் தான். ஆனால் அவற்றுக்குப்  பெயர் சூட்டியவன் ஆதாம் ! தனக்குப் பிடித்த பெயர்களை அவற்றுக்கு இட்டான். மனிதனின் முதல் பணி பெயர் சூட்டு விழா தான் !

பின் கடவுள், ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கம்  வரச் செய்தார். அவனுடைய விலா எலும்பில் ஒன்றை எடுத்தார். அந்த எலும்பைப் பெண்ணாகச் செய்து ஆதாமுக்குத் துணையாகக் கொடுத்தார்.

துணையானவள், ஆதாமுக்கு இணையானவளாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதனால் தான் விலா எலும்பிலிருந்து அவளைப் படைக்கிறார். தலையிலிருந்து படைத்து ஏவாளைத் தலைவியாக்கவோ, காலிலிருந்து படைத்து அவளை அடிமையாக்கவோ இல்லை. விலாவிலிருந்து படைத்து இணையாக்குகிறார்.

ஆதாமுக்கு கடவுள் இட்ட கட்டளை, “படைப்புகள் அனைத்தையும் ஆண்டு நடத்த வேண்டும்” என்பதே. அதாவது, அனைத்துக்கும் தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் ஆதாமே நியமிக்கப் படுகிறான் !

படைப்பின் முழுமை ஆதாம் ஏவாளின் படைப்புடன் முழுமையடைகிறது. ஆறாவது நாளில் மனிதப் படைப்பு முடிவடைய, ஏழாவது நாள் கடவுள் ஓய்வு நாள் என அறிவிக்கிறார். அதாவது, கடவுளுக்கு கடைசி நாள் ஓய்வு நாள். மனிதனுக்கோ! ஓய்வுடன் தான் துவங்குகிறது முதல் நாள்.

பாவம் எனும் சாயல் எதுவுமே இல்லாமல் பிறந்த ஒரே மனிதன் ஆதாம் தான். மழலையாய் பிறக்காத ஒரே மனிதனும் ஆதாம் தான். பெற்றோர் இல்லாமல் பிறந்த ஒரே மனிதனும் ஆதாம் தான்.  அதனால் தான் முன்னோர் செய்த பாவத்தின் நிழலும் அவனிடம் இல்லை. அவனே ஆதித் தந்தை !

ஆதாமைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு முதல் அனுபவங்கள். அவனுக்கு புரட்டிப் பார்க்க முந்தைய வரலாறுகள் இல்லை. பாவம் என்றால் என்ன ? மீறுதல் என்றால் என்ன ? சாவு என்றால் என்ன ? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

எதையுமே தெரியாத நிலை மனிதனை இறைவனோடு நெருக்கமாய் உறவாட வைக்கிறது. தன்னால் எல்லாம் செய்ய இயலும் எனும் தன்னம்பிக்கை உருவாகும் போது அவன் கடவுளை விட்டு விலகிச் செல்கிறான்.

இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அது யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இனிமையானதும், மன நிம்மதி தரக்கூடியதுமான வாழ்க்கையாகும். ஆனால் மனிதன் இறைவனை விட்டு விலகி பாவத்தின் வழியில் செல்லும் போது தனக்கென வழியை அவனே உருவாக்கிக் கொள்கிறான். இறைவனின் விரலை விட்டு விடும் மனிதன், திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து விடும் சிறுவனைப் போல விழிக்கிறான். கிடைக்கும் சின்னச் சின்ன வாழ்க்கை அனுபவங்களை வெற்றியென்றோ, சாதனையென்றோ பேசித் திரிகிறான்.

உண்மையில், இறைவனை விட்டு விலகித் திரிகையில் நாம் இழப்பவையே அதிகம். நிலையான விண்ணக வாழ்வு உட்பட.