வார இறுதிகளில் அதிகமாகக் குடித்துக் கும்மாளமிடும் வழக்கம் மேலை நாடுகளில் அதிகம். இப்படி அதிகமாக ஒரே நாளில் குடித்து உற்சாக வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உட்பட பல புற்று நோய்கள் வரும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
அதிகமாய்க் குடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே அதிகம் இருப்பதாகவும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமும் மிகவும் குறைந்த அளவு குடிப்பவர்களை விட ஒரே நாளில் அதிகமாய் குடிப்பவர்களுக்கு, அது பீர் ஆனாலும், வைன் ஆனாலும், அதிலுள்ள ஆல்கஹால் அளவை வைத்து புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அதுவும் வார இறுதியில் 22 கோப்பை பானத்தை உள்ளே தள்ளும் பெண்களுக்கு 130 விழுக்காடு புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் கால்வாசி இளம் பெண்கள் வார இறுதிகளில் 21 கோப்பைக்கு அதிகமான பானத்தை அருந்துகிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் இரண்டாயிரம் மார்பகப் புற்றுநோயாளிகள் ஆண்டுதோறும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அங்கே வாரம் 14 கோப்பை பானம் மட்டுமே அருந்துங்கள், அதுவும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மது அருந்துவது எந்தவிதத்திலும் உடலுக்கு நன்மை பயப்பதில்லை என்பதும், அதனால் விளையும் பின்விளைவுகள் நாள்தோறும் ஆய்வுகளில் பயமுறுத்தி வந்தாலும் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்தியாவில் சமீபத்திய கலாச்சார மாற்றங்களும், மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கங்களும் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது. மது அருந்துவோர் அதன் தீமைகளைக் கண்டு விலகி இருத்தலே நலம் பயக்கும்.