லோஷான் ( Leshan ஐ லோஷான் என்று தான் சொல்ல வேண்டுமாம் ) நகரிலுள்ள வானுயர புத்தர் சிலை ஒன்று குறித்த படங்களைப் பார்க்க நேர்ந்தது. சீனாவிலுள்ள மின் நதியும், தாது நதியும் கலக்குமிடத்தில் அமைந்துள்ள இந்த சிலை குறித்த விவரங்கள் வியக்க வைக்கின்றன.
கிமு 713 ல் ஹெயிட்டாங் ( Haitong ) எனும் புத்தத் துறவியால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிலை செதுக்கும் பணி சுமார் தொன்னூறு ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய சீடர்களின் காலத்தில் தான் முடிவுக்கு வந்ததாம்.
உலகிலேயே மிக உயரமான “கற்சிலை” புத்தரான இவரின் உயரம் எழுபத்தோரு மீட்டர்களாகும் ( Ushiku Amida Buddha தான் உலகிலேயே உயரமான புத்தர் சிலையாம். உலகிலேயே உயரமான சிலையும் இது தான் என்கிறார்கள் ). முழங்காலில் கைகளை வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார் இந்த புத்தர். கலங்கரை விளக்கங்கள் இல்லாத அந்த காலத்தில் ஆபத்தான அந்த நதிக்கரைப் பயணிகளைப் பாதுகாக்கவும், நதியில் தத்தளிக்கும் மனிதர்களுக்கு திசை காட்டும் கருவியாகவும் பயன்படும் என்னும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டதாம் இந்த சிலை.
பயணிகளால் அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நதி இப்போது ஆபத்துகளற்றதாகக் காட்சியளிக்கிறது. உலக வங்கி சுமார் எட்டு மில்லியன் டாலர்களை இதன் பராமரிப்புச் செலவுகளுக்காக வட்டியற்ற கடனாய் வழங்க முன்வந்திருக்கிறது.
இந்த புத்தரின் தலை ஒரு வீட்டை விடப் பெரியதாக இருக்கிறது. புத்தரின் காதுகள் ஏழு மீட்டர் நீளமும், மூக்கு சுமார் ஆறு மீட்டர் நீளமும், புருவங்கள் 5.6 மீட்டர் நீளமும் என புத்தர் வியக்க வைக்கிறார். இவருடைய தோளுக்கும் தோளுக்கும் இடைப்பட்ட தூரம் மட்டுமே இருபத்து எட்டு மீட்டர்கள் !!! அடேங்கப்பா.
மலைதான் புத்தர், புத்தர் தான் மலை என்கிறார்களாம் அங்கே பழமொழியாக !
இந்தப் படங்களைக் கொஞ்சம் பாருங்க !!!