சேரனைப் பிரதிபலிக்காத மாயக்கண்ணாடி !

mk.jpg

தன்னோட படம் ஓடும்னு நினைக்கிறது தன்னம்பிக்கை
தன்னோட படம் மட்டும் தான் ஓடும்னு நினைக்கிறது தலைக்கனம்

சும்மா.. கஜினி பட டயலாக்கைச் சொல்லிப் பார்த்தேன். மாயக்கண்ணாடி படம் வெளியாகும் முன் சேரனுடைய பேட்டிகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது.

சிவாஜி படத்துக்கு சரியான போட்டியாக என்னுடைய மாயக்கண்ணாடி இருக்கும். மாயக்கண்ணாடி படம் வெளியான பின் தமிழக இளைஞர்கள் எங்கேயோ போய்விடுவார்கள் ( உண்மை தான் தியேட்டரை விட்டு எழுந்து வெளியே எங்கேயோ ஓடிட்டாங்க ) என்றெல்லாம் பேசித்திரிந்தார் சேரன்.

சிவாஜி படம் தாமதமானபோது மாயக்கண்ணாடியோடு போட்டி போட முடியாமல் சிவாஜி தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு மறைமுகப் பரபரப்பையும் கிளப்பிப் பார்த்தார்.

படமும் வெளியானது, உடனே உள் ஆனது !!!

படத்தின் மீதான மன்னிக்கவும் தன் மீதான நம்பிக்கையில் படத்தை யாருக்கும் கொடுக்காமல் தானே ஒரு கோடி ரூபாய் போட்டு வினியோக உரிமை வாங்கினார். இதுவரை அவருக்கு வந்திருப்பதோ வெறும் 10லட்சம் தானாம்.

படத்தை தயவு செய்து பாருங்கள் என்று பேட்டிகளிலும், பத்திரிகைகளிலும் கைகூப்பிக் கேட்டுக் கொண்டார். அப்படிப் போய் பார்த்தவர்களும் படம் திருப்தியாய் இல்லை என்றே சொன்னார்கள். போதாக்குறைக்கு மீண்டும் குலக் கல்வியை ஆதரிக்கும் ஒரு பிற்போக்குப் படம் என விமர்சனங்கள் எழ மாயக்கண்ணாடி உடைந்து போய்விட்டது.

மாயவரத்தில் மாயக்கண்ணாடி மூன்றே நாட்களில் தூக்கப்பட்டு சேரனுக்கு வேதனை தந்திருக்கிறது.

தவமாய் தவமிருந்து படத்தை அணு அணுவாய் ரசித்துப் பார்த்தேன். ( ஆட்டோகிராஃப் ஐ அல்ல ) அந்த சேரனை மீண்டும் பார்க்கும் ஆவலில் அடுத்த மாயங்கள் இல்லாத கண்ணாடிக்காகக் காத்திருக்கிறேன்.

தந்திரிக்குச் செக் வைத்த மந்திரி !!!

guruvayoor-temple1.jpg

கேரளாவில் அமைச்சர் வயலார் ரவியின் மகனுக்கு சோறூட்டு விழா. வயலார் ரவியின் மனைவி கிறிஸ்தவராக இருந்தாலும் வயலார் ரவிக்கு குழந்தைக்குச் சோறூட்டும் நிகழ்ச்சியை குருவாயூர் கோயிலில் வைத்து நடத்த வேண்டும் என்று ஆசை. அப்படியே நடந்தது.

விடுவார்களா தந்திரிகள் ? ஏற்கனவே உலகப் புகழ் பாடகர் இயேசுதாசையே எதிர்த்தவர்கள். அழகான மீரா ஜாஸ்மினைக் கூட அனுமதிக்காதவர்கள். பிரச்சனை கிளப்பினார்கள்.

உச்ச கட்ட அவமானமாக கோயில் வயலார் ரவியின் மனைவி நுழைந்ததால் புனிதத் தன்மை 🙂 கெட்டு விட்டதாகக் கூறி இரண்டு நாள் சுத்தி கிரியையை சுத்திச் சுத்திச் செய்தார்களாம்.

கேரள பத்திரிகைகளில் இந்த தகவல்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து இடப்பட அமைச்சர் கடுப்பாகியிருக்கிறார். இந்தியாவிலேயே படித்தவர்களால் நிரம்பி வழியும் கேரளாவில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததால் கேரளாவிலுள்ள எழுத்தாளர்கள் கொதித்து விட்டார்கள். சம்பந்தப்பட்டது மந்திரியாச்சே.

எல்லா நாளிதழ்களிலும் மந்திரியின் வரவால் தந்திரிமார் செய்த அலம்பலுக்குக் கண்டனங்கள் எழுதப்பட்டன.

அரசியல் வட்டாரத்தில் அமைச்சருக்கு இது ஒரு பெருத்த அவமானமாய்க் கருதப்பட்டது. இந்தத் தகவல் கேரள தேவசம்போட்டு அமைச்சர் சுதாகரனுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

கொதித்துப் போனார் சுகுமாரன். ஏற்கனவே கண்டரரு மோகனரு எனும் தந்திரியின் காம லீலைகளினால் காயம்பட்டுக் கிடக்கும் கேரளாவின் பெருமை இதன் மூலம் இன்னும் காயப்படும் என்பதை உணர்ந்த அவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

கோயில்களுக்கு யார் வரவேண்டு என்பது குறித்து தந்திரிகளோ, பிராமணர்களோ, நம்பூதிரிகளோ இனிமேல் முடிவு செய்ய வேண்டாம். அரசு அதை சட்டமாக்கும். கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும், எந்த மதத்தினர் வேண்டுமானாலும் செல்லலாம் எனும் சட்டத்தை விரைவில் கோண்டுவருவேன் என்பதே அந்த அறிவிப்பு.

இந்த அறிவிப்பால் பழைய சம்பிரதாய இருட்டறைக்குள் கிடக்கும் தந்திரி வட்டாரங்கள் கலங்கிப் போயிருக்கின்றன. கேரளாவிலுள்ள கோயில்களில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ( யானைகள் கொல்கின்றன, அல்லது ஆணைகள் கொல்கின்றன ) என அதிகாரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் தந்திரிகள் எரிச்சலில் இருக்கிறார்களாம்.

எப்படியோ மந்திரி வந்தாரு
தந்திரி எந்திரி
ன்னு சொன்னாரு கணக்கா கேரளாவில் அடுத்த நடவடிக்கை என்னன்னு பொறுத்திருந்து ரசிப்போம்.